கிழவனின் உயிர்!

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..”

மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பின்னேரம் ஓர் இளவயதுபெண் தன் சின்ன மகளை உருட்டி மிரட்டி சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். பூதங்களும், பொக்கான்களும் ஆமிக்காரர்களுக்குப் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“அந்நாட்களில் இருளத்தொடங்க முன்னரே, ஊரடங்குச்சட்டம் தொடங்கிவிடும். காலை ஆறுமணியிலிருந்து பின்னேரம் ஆறுமணிவரைதான் சனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரமாயிருந்தது. பின்னர் வீடுகளுக்குள் முடங்கிவிடவேண்டும். ஒரு அவசரமென்றால் கூட அசைய முடியாது” கதையின் இரண்டாவது முடிச்சை இப்படிக் கோர்த்தவர் ஒரு மிடறு சாராயத்தை வார்த்து தண்ணீரைக் கலந்து குடித்தார். அப்பொழுது விசத்தைக் குடிப்பதுபோல, முகத்தைச் சுழித்து உதடுகளை அட்ட திக்குகளிலும் கோணினார்.

“இப்பொழுது நிற்பதைப்போலத்தான் அப்பொழுதும். வீதிக்கு வீதி ஆமிக்காரன் துப்பாக்கியோடு நிற்பான். ஆறுமணியாகிற நேரம், அவர்களைத்தாண்டி சைக்கிளில் போவதென்றால், குளிரில் பற்கள் சில்லிடுவதைப் போல முதுகு கூசும். எந்த நேரத்திலும் ஒரு துப்பாக்கிக் குண்டு, நெஞ்சைப் பிரித்துக்கொண்டு முன்னால் வரலாம். அப்படியொரு நாள் என் இரண்டு கண்ணாலும் பார்த்திருக்கிறேன். ஒரு மம்மல் கருக்கு நேரம், சந்தியிலே, சென்றிக்கூடு. உள்ளே துப்பாக்கியை நீட்டியபடி ஆமிக்காரன். நான் தலையைக்குனிந்து கொண்டு அவனைத்தாண்டி சைக்கிளை மிதிக்கின்றேன். கொஞ்ச நேரத்தில், உன்னொத்த வயதிருக்கும், இளம் பெடியன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் என்னைக் கடக்கிறான். டுப் என்றுதான் ஒரு சத்தம் கேட்டது. மோட்டர் சைக்கிள் உலாஞ்சிக்கொண்டுபோய் வேலிச் செத்தைக்குள்ளே செருகி விழுந்தது. அதற்கு முன்னமே பெடியன் விழுந்துவிட்டான். நிறைவெறியில் உடம்பு பஞ்சு மாதிரிப் போகுமே, அப்படித்தான் எனக்கு நெஞ்சுக்குள்ளே சொட்டுத் தண்ணீரும் இல்லை. ஆண்டவரே.. ” நடேசுக் கிழவரின் வார்த்தைகள் காட்சிகளாயிருந்தன. அவை என்னை தற தற என ஒரு மலை உச்சிக்கு இழுத்துச்சென்றன. அவர் சட்டென்று நிறுத்தியதும், ஆர்வ மிகுதி பீறிட்டது. “ஏன் அவனைச் சுட்டார்கள்” என்று கேட்டேன்.

நடேசுக் கிழவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் பார்த்திராத ஒரு வினோத ஐந்தைப் பார்ப்பதுபோல கண்களை குறுக்கி என்னைப்பார்த்தார். உண்மையாகவே உனக்குத் தெரியாதா என்பதைப்போலான பார்வை. “இது என்ன புதினமான கேள்வி. சுட்டவனிடம் துப்பாக்கியிருந்தது. செத்தவனிடம் அது இல்லை. அவ்வளவும்தான்” என்றார். நான் அமைதியானேன். நடேசுக் கிழவர் சாராயப்போத்தலை கையில் தூக்கி கண்களுக்கு அருகாக வைத்துப்பார்த்தார். அது இப்பொழுதுதான் வற்றத் தொடங்கியிருந்தது. முழுவதுமாக கலக்கி இறைப்பார் என்று நினைத்தேன். அமர்ந்த இடத்தில் விரல்களால் ஒரு மோட்டார் சைக்கிளை மண்ணில் வரையத்தொடங்கினேன். அதன் ஒரு சக்கரத்தில் இரண்டு கண்களையும் மூக்கையும் வாயையும் விரல் தன்னியல்பாக வரைந்தபோது நடேசுக் கிழவர் முதற்சொன்ன குழந்தையின் நினைவு எழுந்தது. “பிறகு, அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று.”

“அது செத்துப்போயிற்று”

மீண்டும் அமைதியானேன். எழுந்து போகலாமென்று நினைத்தேன். நடேசுக் கிழவரின் முகத்தில் படிந்திருந்த உணர்வுகளை அறியமுடியவில்லை. சமயங்களில் அது ஏதோ உறைப்பான உணவைச் சாப்பிடுவது போலிருந்தது. அடுத்த நொடியே புளியம்பழத்தைப் பற்களுக்கிடையில் சூப்புவது போலானது. வேலியில் ஓடிய ஓணான் ஒன்றை அவரது கண்கள் பின்தொடர்ந்தன. அது இரண்டு கதியால் இடுக்குகளினால் ஓடி மறைந்தபிறகும் முடிவிடத்தில் அப்படியே நிலைத்திருந்தன. அவர் பெருமூச்சு விடுத்தார். “பாவம், கல்யாணம் கட்டி ஆறு வருடத்திற்குப் பிறகு பிறந்த குழந்தை அது. ஆறு மாதத்தில் பொசுக்கென்று போயிற்று”

“என்ன ஆயிற்று” என்று கேட்டேன். இம்முறையும் அது செத்துப்போயிற்று என்றாராயின் எழுந்து போய்விடுவதெனத் தீர்மானித்திருந்தேன்.

“அது யாருமில்லை. என் தங்கையின் குழந்தைதான். அச்சு அசல் என் ஆச்சியைப் பார்ப்பதுபோல அதே வட்டமுகம். சந்தேகமேயில்லை, ஆச்சிதான் தங்கையின் வயிற்றில் வந்து பிறந்தாள். தங்கச்சி எனக்குப் பதினைந்து வருடங்கள் இளையவள். அண்ணன் என்று இல்லாமல் ஒரு அப்பா போலத்தான் மரியாதை. புருஷன் வெளிநாடு போக, நான் அவளோடேயே தங்கிவிட்டேன். தனிக்கட்டையல்லவா. அவளுக்குக் கல்யாணம் முடித்து ஆறு வருடமாக கோயில் குளமெல்லாம் அலைந்து பெற்ற குழந்தை அது. அன்றைக்கு இரவு ஒரு மணியிருக்கும். குழந்தைக்கு வலிப்பு வந்தது. வெள்ளை வெள்ளையாய் வாயால் நுரை தள்ளியது. குடித்த பால்தான் என்று முதலில் நினைத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்திலேயே காலை இழுத்து இழுத்து குழந்தை உதறத்தொடங்கிவிட்டது. பார்த்துக்கொண்டு நிற்காமல் உடனேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகலாம் என்று கார்க்கார மணியத்திடம் ஓடினேன். ஊரில் அவனிடம்தான் கார் இருந்தது. மணியம் வருகிறேன் என்றான். ஆனால்.. ” என்று நிறுத்திய நடேசுக் கிழவர் அடுத்த குவளையை நிரப்பினார். இம்முறை அதிகம் தண்ணீர் கலக்கவில்லை.

“உனக்குத் தெரியுமா.. அக்காலத்தில், ஆஸ்பத்திரிக்குப் போவதென்றால் மூன்று சோதனைச் சாவடியைக் கடக்க வேண்டும். ஒவ்வொன்றிலும், அரைப்பனை உயரத்தில் மண் அணை இருந்தது. மண் குவிந்து சுனாமி மாதிரி வந்தால் எப்பிடியிருக்கும்.. ஆண்டவரே அப்படியிருக்கும்..”

வளவின் ஒரு மூலையில் அடியில் ஒன்றித்து மேலே ஆங்கில வி எழுத்துப் போல நீண்டு வளர்ந்திருந்த இரண்டு பனைகள் நின்றன. அதிலொன்றின் அரைப்பனை அளவு உயரத்தைக் கண்களால் அளந்தேன். ‘சற்று மிகைதான்’

“பெரிய ராணுவ முகாமிற்குப்போய் அனுமதி வாங்கிக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிறேன் என்று மணியம் சொன்னான். சரி காரை எடு. காரிலேயே போய் அனுமதியை வாங்கிய பிறகு குழந்தையைக் கொண்டு போகலாம் என்றேன். மணியம் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான். அண்ணையாணை, குறைநினைக்க வேண்டாம். எனக்கு மூன்று பிள்ளைகள். ஏதும் நடந்தால் அவர்கள் தனித்துப் போய்விடுவார்கள். ஊரடங்கு நேரத்தில், திரியும் எவரையும் கேட்டுக் கேள்வி இன்றி சுட்டுத் தள்ளுகிறார்கள். என்னால் வரமுடியாது என்று குந்திவிட்டான். என்னுடைய மனது அப்படியொருநாளும் அல்லற்பட்டதில்லை. நான் தானே தங்கச்சிக்கு எல்லாமும். என்னை நம்பித்தானே விட்டுவிட்டுப் போனான். நடக்கிறது நடக்கட்டும் என்று யோசித்தேன். நடந்தே போவதுதான் சரியென்றுபட்டது. ஆமியைக் கண்டால் சடாரென்று கையை உயர்த்த அதுதான் வசதியாயிருக்கும்.

kizavanஆனால் ஓடித்தான் போனேன். ஐம்பது வயதில் அப்படி ஓட மூச்சு முட்டியது. கொஞ்சத் தூரம் போனதும்தான் மூளைக்குள் மின்னியது. அடையாள அட்டைகளை எடுத்துவரவில்லை. திரும்பவும் வீட்டுக்கு ஓடினேன். அப்பொழுது குழந்தைக்கு வலிப்பு அடங்கியிருந்தது. ஆனால் திடீர் திடீரென்று கால்களை உதறுகின்றதாம். குழந்தையைச் சுற்றி ஒப்பாரி வைப்பதுபோல இருந்தார்கள். ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாமென்று குழந்தையைப் பார்த்தேன். அமைதியாய்க் கிடந்தது. திடீரென்று மூச்சை இழுத்து கால்களை உதறியது. நெஞ்சிலே சளி கூடு கட்டினாற்போல முட்டியிருக்க மூச்சு விடும்போது ஒரு சத்தம் வருமே.. அப்படியொரு சத்தம். பிஞ்சுக் குழந்தையை அந்தக்கோலத்தில் காணச் சகிக்கவில்லை. தங்கச்சி என் காலைப் பிடித்தாள். அண்ணன் உன்னை எனது ஐயாவைப்போல நினைத்துக் கேட்கின்றேன். குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ என்று கதறுகிறாள். என் கண்ணெல்லாம் நீர். எனது அவசரத்திற்கு எனது ஊர்த்தெருவில் போக, எவரிடமெல்லாமோ அனுமதி கேட்கவேண்டியிருக்கிறது. மணியத்தோடு இப்பொழுது வருகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். எவரின் உயிருக்கும் மரியாதை இருக்கவில்லை. அடையாள அட்டைகளுக்குத்தான் மரியாதை.

நள்ளிரவு, இரண்டு மணியிருக்கும். மார்கழி மாதத்துப் பல்லு நடுங்குகிற குளிர் வீசிக்கொண்டிருந்தது. ஆள் அசுமாத்தம் கண்டு நாய்கள் குரைக்கத்தொடங்கியிருந்தன. எனக்குக் கெடிக்கலக்கம். வைரவரே உம்முடைய வாகனத்தின் வாயைக் கட்டி அருளும் என்று முணுமுணுத்துக்கொண்டே ஓடினேன்.

சனங்களின் வீடுகளுக்கு வெளிச்சமில்லை. ராணுவ முகாம் மட்டும் நான்கு பக்கத்தாலும் வெளிச்சம் பாய்ச்சி விளையாட்டு மைதானம் போலக்கிடந்தது. சோதனைக் கூண்டிலொருவன் தடுத்தான். துப்பாக்கியை என் நெஞ்சுக்கு நேரே நீட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என்று கேட்டான். பெரிய ஐயாவைப் பார்க்க வேண்டும் என்றேன். அதெல்லாம் முடியாது. நீ விடிந்ததும் வா என்றான். அவனுக்கென்ன ஒரு பதினெட்டு வயது இருக்குமா.. நான் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா தயவு காட்டுங்கள். தவ்வல் குழந்தை வலிப்பு வந்து வாயால் நுரை கக்குகிறது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அனுமதி எடுக்க வந்தேன் என்றேன். அவன் உள்ளே பேசினான். பிறகு உள்ளே போ என்றான். அவனை திரும்பவும் ஒரு தடவை கும்பிட்டுவிட்டு ஓடினேன்.

உள்ளே ஒரு சத்தம் சந்தடி இல்லை. நான் மூச்சுவிடுவது கொடிய மிருகமொன்றின் மூச்சுப்போல எனக்குக் கேட்டது. அந்தப்பெரிய முகாமில் நான் தனியே நின்றிருந்தேன். யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இறைச்சிக் கடை என்று அந்த முகாமைச் சொல்வார்கள். அந்தனை மோசமான சித்திரவதைகள் அங்கு நடந்திருந்தன.

சற்று நேரத்தில் பெரியவன் வந்தான். மூக்குமுட்டக் குடித்திருந்தான். இரண்டு கண்ணுக்குள்ளும் நெருப்பு எரிவதைப்போல சிவந்து கிடந்தன. நான் அழாத குறையாக ஒப்புவித்தேன். குழந்தைக்கு எத்தனை வயதென்று கேட்டான். ஆறு மாதம் தான் ஐயா என்று கெஞ்சுவதைப்போலச் சொன்னேன். மிகச்சாதாரணமாக, இன்னமும் நான்கு மணிநேரத்தில் விடிந்துவிடும். பிறகு கொண்டு செல்லுங்கள் என்றான். அவனின் காலில் விழுந்து கதறத்தொடங்கினேன். அவன் காலை உதறினான். நான் விடவில்லை. அவன் எழும்பு என்றான். அடையாள அட்டைகள் இரண்டையும் வாங்கி வைத்துக்கொண்டான். பிறகு ஒரு தாளில் சிங்களத்தில் எதையோ எழுதி கையெழுத்திட்டான். அடையாள அட்டைகள் இரண்டும் முகாமில் இருக்குமென்றும் காலையில் வந்து வாங்கும்படியும் சொன்னான். எனக்குத் தயக்கமாக இருந்தது. அடையாள அட்டை இல்லாமல் அத்தனை சோதனைச் சாவடியையும் எப்படித் தாண்டுவது.. பரவாயில்லை, கடிதம் இருக்கிறதுதானே. மெத்தப்பெரிய உபகாரம் ஐயா என்று சொல்லிவிட்டு திரும்பினேன். பெரியவன் என் வலது தோளை அழுத்தி நிறுத்தினான். இப்பொழுது மணி இரண்டே முக்கால், காலை ஆறுமணிக்குள் இந்தப் பகுதிகளில் புலிகள் ஏதாவது குண்டு எறிந்தாலோ, அல்லது சுட்டாலோ, நீயும் உனது குடும்பமும் கூட்டாகத் தற்கொலை செய்து கொள்ளுங்கள். எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்று அவன் சொன்னான். என் கால்கள் நடுங்கின.

மணியம் வீட்டுக்கு ஓடினேன். மணியத்தின் காரில் வீட்டிற்குப் போனோம். குழந்தை இப்பொழுதும் மூச்சுவிடச் சிரமப்பட்டது. தாயையும் குழந்தையையும் ஏற்றினோம். முக்கால் மணிநேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய்விடலாம் என்றான் மணியம். பத்தாவது நிமிடத்தில் முதலாவது சோதனைச்சாவடி குறுக்கிட்டது.

வீதிக்குக் குறுக்காக, ரெயில்வே கடவை போல துலாவை இறக்கியிருந்தார்கள். ஒரு சிப்பாய் அதிக தூரத்தில் நின்று டோர்ச் விளக்கைப் பாய்ச்சினான். ஒளியாலேயே இறங்கு என்பதுபோல சைகை காட்டினான். நானும் மணியமும் இறங்கிப்போனோம். ராணுவப்பெரியவன் தந்த அனுமதித் துண்டைக்காட்டினேன். அவன் அடையாள அட்டைகளை எடு என்றான். ஆண்டவரே, என் தொண்டையில் தண்ணீர் வற்றிப்போனது. குரல் வரவில்லை. ஆமிப்பெரியவர் அதை வாங்கி வைத்திருக்கிறார் என்றேன். சற்றும் யோசிக்கவில்லை அவன். அடையாள அட்டைகள் இல்லாமல் போக முடியாது. திரும்பிப் போய்விடுங்கள் என்றான். என் கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் வழியத்தொடங்கியது. அவனுக்கொரு இருபது வயது இருக்குமா… அவனையும் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா காருக்குள் ஒரு தடவை வந்து பாருங்கள். தவ்வல் குழந்தை மூச்சிழுக்க முடியாமல் கிடக்கிறது. தாய்க்காரி அழுது ஓய்ந்துபோனாள். ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனால்தான் எதையாவது செய்யலாம் என்று தளுதளுத்தேன்.

அவன் காருக்கு அருகாக வந்து நின்று உள்ளே வெளிச்சம் பாய்ச்சினான். அவள் அவசரத்திற்கு இரவு உடுப்போடு வந்தவள். குறுகிப்போய் இருந்தாள். அவன் கதவைத் திறந்து அவளிடமும் அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தான். துலாவைத் துாக்கிவிட்டான்.

மூன்றாவது சாவடியையும் தாண்டினோம். தங்கச்சி பின்னாலிருந்து கத்தினாள். குழந்தையில் துடிப்பில்லை. கண்மட்டும் விழித்திருந்தது. கையில் தூக்கி தோளில் சாய்க்க, அது தலையைத் தொங்கப்போட்டது. நான் ஆயிரத்தெட்டுத் தெய்வங்களையும் அழைத்தேன். ஒன்றுக்கும் யோசிக்காதே. அது நித்திரையாகி இருக்கும். இதோ ஆஸ்பத்திரி அருகிற்தான். இன்னொரு பத்து நிமிசம்.. என்றேன்.

மணியம் வாசலில் நிறுத்தினான். தெய்வங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவசரபிரிவிற்கு ஓடினேன். டொக்டர் குழந்தையின் நெஞ்சில் கை வைத்துப்பார்த்தார். கை நாடியைப் பிடித்துப்பார்த்தார். என்னிடம் எதுவும் சொல்லாமலேயே குழந்தையின் கண்களை மூடினார். என் தோள்களை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு பிள்ளை இறந்து நிறைய நேரமாகிவிட்டது என்றார். கண்ணுக்கு முன்னாலே பூமி பிளந்து போலிருந்தது. எத்தனை மணிக்கு வலிப்பு வந்தது என்றார். இரவு ஒரு மணியிருக்கும் என்றேன். நேரத்தைப்பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாலையில் தாயின் ஓலம் ஆஸ்பத்திரியை உலுக்கியது. இந்தப் பாழாய்ப்போன மண்ணில் நீ ஏன் வந்து பிறந்தாய் என்று அவள் கதறினாள். ஆஸ்பத்திரிக்கு உன்னைக் கொண்டுபோக முடியாத பாவி ஆனேனே. என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று நெஞ்சில் அடித்து அழுதாள். அழத்திராணியற்றவளாக மயங்கிச் சரிந்தாள்.

குழந்தையின் உடலை காரிலேயே கொண்டு வந்தோம். வரும்வழியில் பெரிய முகாமிற்குச் சென்று அடையாள அட்டைகளை வாங்கினேன். ஆமிப்பெரியவன் ஏதோ நினைப்பு வந்தவனாக குழந்தை எப்படியிருக்கிறது என்று கேட்டான். அது செத்துப்போய்விட்டது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பச்சை உடம்பு. நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியாது. அன்றைக்கே செத்தவீட்டைச் செய்து முடித்தோம். ஊரடங்கு தொடங்க முன்னரே கொண்டுசென்று புதைத்தோம். அடுத்தநாள் புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனேன்.

அமைதியான நடேசுக் கிழவர் மீதி வார்த்தைகளை வானத்தைப் பார்த்தபடி சொன்னார். “அப்பொழுதுதான் குழியைக் கிளறியிருந்ததைக் கண்டேன். நாயோ நரியோ கிளறியிருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆறமுடியாத கவலை. ஆனால், நாயும் நரியும் அத்தனை ஆழத்திற்கு குழியைக் கிளறியிருக்குமென்று நான் நினைக்கவில்லை. என்ன நடந்ததென்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவன் ஒருவன்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்..”

நடேசுக் கிழவர் முடித்தபோது, அவர் நிறை வெறிக்கு வந்திருந்தார். வார்த்தைகள் ஒன்றோடொன்று பிணைந்து புசத்தின. போத்தலைக் கவிழ்த்து அதன் கடைசித் துளியை நாவில் ஊற்றினார். எனக்கு அந்த முகம்தெரியாத குழந்தையின் நினைப்பாகவே இருந்தது. நான் இதுமாதிரி கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். செய்வினை சூனியம் முதலான மந்திர தந்திரங்களைச் செய்பவர்கள் குழந்தைகளின் உடல்களைத் தேடி அலைவார்களாம். அதனால் சிறு குழந்தைகளைப் புதைத்த சுடலைகளில் இரவுகளில் காவலுக்கு நிற்பார்களாம் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் 50 வருடங்களுக்கு முன்னர்.. அக்காலங்களில் பேய் சர்வசாதாரணமாக உலவுமென்பாள். அப்படியொரு பேய் தன் கழுத்தை வெட்டியது என்று ஒரு தழும்பைக் காட்டுவாள். தாடையின் கீழாக நீண்ட தழும்பு அது. இப்பொழுதும் உண்டு. ஒருவகையான ஹிஸ்டீரியா நோய் உங்களுக்கு இருந்திருக்கிறது. நீங்களே வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அவளுக்குப் புரிவதில்லை.

ஒரு பூனை சத்தமிடுவதைப்போல, நடேசுக் கிழவர் விசும்புகிற ஒலி கேட்டது. வெறி முற்றியவர்கள் இப்படி விசும்பி அழுவது வழமைதான். போதையில்தான் எந்தப் பாசாங்கும் புறப்பூச்சுக்களும் இல்லாமல் உணர்வுகள் பீறிடுகின்றன. “ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்” என்று மீண்டுமொருதடவை நடேசுக் கிழவர் சொன்னார். பிறகு மெதுவாக “அவன் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தான்” என்றார். ஒரு மின்னல் வெட்டியதைப்போல தலையைத் திருப்பி அவரைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தைத் தாழ்த்திக்கொண்டார். அவரது கண்களில், அவரிட்ட முடிச்சுக்களில் ஒன்று அவிழ்ந்ததைப் போலிருந்தது. சட்டென்று நடேசுக் கிழவர் என் கைகளை அழுத்திப் பற்றினார். “எனக்கு அறுபது வயதாகிவிட்டது. முன்னரைப் போலில்லை. பொசுக்கென்று போகவும் கூடும். சாகிற நாளில் ஒரு பாரமும் இல்லாமற் போய்ச்சேர வேண்டும். எனக்கொரு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருந்தால் அவனுக்கு உன்னுடைய வயதுதான் இருந்திருக்கும். நீயும் மகனைப்போலத்தான். இதைக் கேள். பத்துவருடங்களாக கிளறிய குழியிற்குள் புதைத்த உண்மையைக் கேள்..”

நான் ஓரளவிற்கு ஊகித்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரது குரலும் அது வெளிப்பட்ட தொனியும் அவரில் நெருக்கமான இரக்கத்தை ஏற்படுத்தின. அவரின் பிடிலியிருந்து கைகளை விடுவிக்காமல் அமைதியானேன். ஆனால் ஒரு குழந்தையைக் குழியிலிருந்து ஏன் தோண்டியெடுக்க வேண்டும்..

kbavantநடேசுக் கிழவரின் வார்த்தைகள் கோர்வையற்றிருந்தன. “அன்றைக்கு இரவு பதினொரு மணியிரக்கலாம். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வெளியே அவ்வளவு வெக்கை இல்லை. ஆனால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. டோர்ச் லைற்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். நிலவு என்னோடேயே கூட வந்தது. சுடலைக்கு நடந்து போவதென்றால் அரைமணி நேரமாகும். குடுகுடு என்று நடக்கத்தொடங்கினேன். நடுச்சாமாத்தில் சுடலைக்குப் போவதைப் பற்றி யோசிக்கவேயில்லை. பேய்களைச் சமாளித்துவிடலாம். ஆமிக்காரர்கள் வந்தாலும் என்றுதான் பதற்றமாயிருந்தது. காற்றில் ஏறிப் பறந்ததைப்போல போய்ச்சேர்ந்தேன். மூச்சு வாங்கியது. களைப்பாறத் தோன்றவில்லை. தடித்த மரக்கட்டை ஒன்றை எடுத்து சற சற என்று குழியைத் தோண்டத்தொடங்கினேன். கூரான கட்டை குழந்தையைக் குத்திவிடுமென்று நினைத்தபோது என் கண்களைக் குத்தியதைப் போலவே வலித்தது. அதனைத் தூர எறிந்தேன். முழந்தாளிட்டு கைகளால் மண்ணை வறுகத்தொடங்கினேன். கடற்கரை மணலைப்போல சொர சொரவென்று கிளறினேன். குழந்தையின் குளிர்ந்த முகத்தில் விரல்கள் வருடின. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. கைகளை உதறியெடுத்தேன். டோர்ச் லைற்றை வாயில் வைத்துக் கொண்டேன். வெளிச்சத்தில் முகம் தெரிந்தது. நிறையக் கறுத்திருந்தது. “செத்த பிறகும் நிம்மதியாய்த் தூங்கவிடாத பாவி நான்” என்று நினைத்தபோது கண்ணீர் பொங்கி வழிந்தது. நிறைய நேரம் தாமதிக்க முடியாது. குழந்தையின் கழுத்தில் மண்ணை விலக்கினேன். அது கிடந்தது. என்னுடைய பணப் பேர்ஸ்.
பின்னேரம், குழந்தையை குழியில் கிடத்தி, சொந்தக்காரர்கள் எல்லாரும் மண் தூவினார்கள். நான் நன்றாகக் குடித்துவிட்டுத்தான் சுடலைக்கே போயிருந்தேன். ஆற முடியாத துன்பத்தில் என்னால் குடிக்காமல் இருக்கமுடியாது. சேட்டுப் பொக்கற்றில் பேர்ஸ் இருந்தது. குனிந்து மண்ணைத் தூவியபோது விழுந்திருக்க வேண்டும். கவனிக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து தலைமுழுகியபோதுதான் பொறிதட்டியது. யாருக்கும் சொல்லவில்லை. இரவு எல்லோரும் தூங்கியபிறகு புறப்படுவதென்று தீர்மானித்திருந்தேன்.

நடுங்கும் விரல்களால் பேர்ஸை எடுத்தேன். படிந்திருந்த மண்ணை ஊதித் தட்டிவிட்டு பத்திரப்படுத்திக் கொண்டேன். சுடலை வீதியில் ட்ரக் ஒன்றின் வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. டோர்ச் லைற்றை அணைத்து குழியிற்குள்ளேயே உடலை மறைத்தேன். அப்பொழுது குழந்தை என் நெஞ்சோடு கிடந்தது. இராணுவ ட்ரக் தாண்டிப்போனது. அவரச அவசரமாக எழுந்து கால்களால் மண்ணைத் தள்ளி மூடினேன். வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன். குழியைச் சரியாக மூடவில்லை. இரவிரவாக நித்திரையில்லை. நரியோ, மரநாயோ குதறிவிடும் என்று பயமாயிருந்தது. விடிந்ததும் முதல் வேலையாக பூ போடுகிற சாட்டில் ஓடினேன். ஆண்டவரே, அப்படியொன்றும் நடக்கவில்லை. மண்ணை இறுக்கினேன். மண்டியிட்டு குழந்தையிடம் மனசார வேண்டினேன். “ஆச்சி.. என்னைப் பெற்ற ஆச்சி… என்னை மன்னித்துவிடு.. இந்தப் பாவியை மன்னித்துவிடு..”
சட்டென்று கையிலிருந்து வெற்றுப்போத்தலை நடேசுக் கிழவர் கல்லில் குத்தினார். அது சிதறி உடைந்தது. “நான் பாவி நான் பாவி” என்று பலமுறை முணுமுணுத்தார்.

நான் உணர்ச்சிகள் எதனையும் முகத்திற் காட்டாமல் இறுகியிருந்தேன். அவர் மீது படிந்திருந்த இரக்கத்தைத் துடைத்து அழித்தேன். வெறும் பணத்திற்காக இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்ற போது வெறுப்பாயிருந்தது. “பேர்சுக்குள்ளே எவ்வளவு காசு இருந்தது.. ஒரு ஐநூறு..? அல்லது ஆயிரம்..“ எள்ளலோடு கேட்டேன்.

“ஐந்து சதமும் இருக்கவில்லை மகன். ஆனால் அதற்குள்தான் என்னுடைய இரண்டு அடையாள அட்டைகளும் இருந்தன. ஒன்று அரசாங்கம் தந்தது. மற்றையது ஆமிக்காரர் தந்தது..”
முழுப்போதையில் நடேசுக் கிழவர் வார்த்தைகள் அற்றுப்போகமுன்னர் கடைசியாகச் சொன்னார். “ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் மந்திரவாதியொருவனின் உயிர் இருந்ததுபோல, என்னுடைய உயிர் உடலுக்கு வெளியே அந்த இரண்டு அட்டைகளிலும் இருந்தன.”

-அந்திமழை டிசம்பர் 2013 இதழில் வெளியானது
ஓவியம் மருது

By

Read More

அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்

நாற்பதாண்டுக்கால ஈழத்து வாழ்க்கைத் துயரங்களைத் தன் இரு நாவல்களில் உளவியல் நுண்ணுணர்வோடு பதிவு செய்து கவனம் ஈர்த்த சயந்தனின் மூன்றாவது நாவல் ‘அஷேரா.’ போர், தனிமனிதர்களின் வாழ்க்கையை எப்படிக் கூறுபோட்டு விளிம்புக்குத் துரத்துகிறது என்ற எதார்த்தத்தை அருள்குமரன், அற்புதம், அபர்ணா, நஜிபுல்லா போன்றவர்களின் வாழ்க்கையைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார் சயந்தன். புலிகள் இயக்கத்திலிருந்து மீண்டு சுவிட்சர்லாந்துக்குத் தஞ்சம் கோரி வருகிற அருள்குமரன், புளோட் அமைப்பிலிருந்து மீண்டு ஏற்கெனவே சுவிஸில் அகதியாக வசிக்கிற மூத்த தலைமுறையைச் சேர்ந்த அற்புதத்தைச் சந்திக்கிறான். இருவருக்குமான ஆத்மார்த்தமான நட்புக்கிடையில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான அச்சமும் ஊடாடுகிறது. ஓர் உச்ச போதையில், ‘ஏதேனும் ஒரு பொழுதில் என்னைக் கொன்றுவிட மாட்டாயல்லவா மகனே’ என்று இறைஞ்சுகிறார் அற்புதம். தந்தை வெளிநாடு சென்று உழைக்க, உள்ளூர் இளைஞன் ஒருவனிடம் வயப்பட்டு, இறுதியில் அந்த இளைஞனுக்கு மணமாகும் நாளில் தற்கொலை செய்துகொள்கிற தாயையும், தையல் வகுப்புக்குச் செல்வதற்காக வந்து தங்கி, தன்னுடலின் ‘பேர் அண்ட் லவ்லி’ வாசனையை முகரத்தந்த அமலி அக்காவையும் கண்டு காமத்தை வெறுக்கும் அருள்குமரனுக்கு, ஆராதனாவும் அபர்ணாவும் வேறு வேறு அனுபவங்களைத் தருகிறார்கள். அற்புதம் தொலைக்காட்சியில் அரை நிர்வாணக் காட்சிகளை மட்டுமே கண்டு காமம் நுகர்கிற மனிதர். போரும் புலம்பெயர்தலும் இருவரையும் ஒரு வீட்டில் இணைக்கின்றன.

காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி அருள்குமரன், அற்புதத்தின் ஈழத்துப் போர்ச்சூழல் வாழ்க்கையை நினைவோட்டமாகப் பின்னிச் செல்வது நாவல் தரும் நல்லதொரு அனுபவம். இத்தனை தூரம் பெயர்ந்துவந்தும் அவநம்பிக்கையும் அச்சமும் பதற்றமும் அவர்களைத் துரத்துகின்றன.

தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். சிங்கள ராணுவம் ஒருபுறம் துரத்த, குழுக்களை இயக்கிய தனிநபர்களின் அத்துமீறலும் கோபமும் வன்மமும் ஈழத்து மக்களின் இருப்பை எப்படியெல்லாம் துவம்சம் செய்தன என்பதையும் நாவல் காட்சியாக்குகிறது.

ஈழம் பற்றிச் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன. இறுக்கம் தளர்ந்து இளம் படைப்பாளிகள் அவற்றையெல்லாம் தேடியெடுத்து எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் சயந்தன் நம்பிக்கையளிக்கிற படைப்பாளி. ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!

-ஆனந்த விகடன்

By

Read More

அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி

திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து விடுகிறார்கள்.

எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உடைபடாத ஈழ ஜாடியை அருள்குமரன் நீல நிறக் குறிப்புகளால் இருட்டிலும் பின்னிரவுகளிலும் தாள்களில் யாருக்கும்தெரியாமல் எழுதியெழுதிப் பலியான ஈழ விக்ரகங்களுடன் மறைத்துவைத்திருக்கிறான். தேனில் ஊறிய பூச்சிகளின் தித்திக்காத மரணம் தன் சாவின் சுவைதான்மறைந்த காலங்களின் ஓடிய ஜனங்களின் பாதைகளில் காத்திருந்தன.

அத்தனை போராளிகளும் சாவின் சுவையை ஏற்கனவே அவர்கள் உணர்ந்து விட்டிருந்தார்கள். தகன பலியையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் படையலிட்டார்கள். ஓர்அநீதிக்குச் சாட்சியாய் இருக்க நேரிட்டதாக மன்னிப்புக் கோரினார்கள். வன ராக்கினியான மாதாவே இக்குழந்தைகளுக்கு உன் உதிரத்தை காணிக்கையாய் அருளும் என்றார்கள். குழந்தைகளை அஷேராவின் மடிக் குருதிக்குள் கிடத்தினார்கள். சர்ப்பங்கள் கேஸத்தின் நின்று இறங்கிச் சென்றன. குருதி பாலாயிற்று. அஷேரா முப்பத்தியெட்டுக் குழந்தைகளையும் தன் முலை முகங்கள் திறந்த பால்ப் பாதையில் மறைந்தும் மறையாத விண்மீனின் பாதையில் கூட்டிச் செல்கிறாள்.

முப்பத்திரெண்டு பிஞ்சுக் கைகளால் அத்தனை முலை முகம் நெருடா மழலைகளின் மென்னகையுடன் கீறிக் கொண்டிருக்கிறார்கள். அவளது கை வரைக்கும் தன்யங்கள் ஒளிர்கின்றன. அஷேரா நாவலை ஈழத் தாய்களின் பால் பாதையில் ஒன்றையொன்று கோடு போட்டு விண்மீன்கள் நீந்தி வருகின்றன. எழுதும் விரல்களோடு இங்கு இல்லாமல் போனவர்களின் விரல்களே வந்து எழுதி மறைகின்றன. அந்த ஊர்களில் சிதறிக்கிடக்கும் வீடுகளில் இருந்தவர்கள் பலரும் நடந்து கொண்டிருக்கிறார். அவர்களின்றி ஒருபோதும் எழுத முடியாது.

இந்த நாவலின் அமானுஷ்யங்களையும் இறந்தவர்களின் கையெழுத்து இரகசியங்களையும் இரவிரவாய் சுடப்பட்டவர் குருதி மைதொட்டுத் தோன்றும் காகிதங்கள் சோளகக் காற்றின் ரத்த வாடை வீசும் இந்த நாவலின் கச்சாங்காற்றின் நிழல்களாய்ப் புரண்டு கொண்டு இருக்கிறது.

அழித்து அழித்து எழுதும் எழுதியவுடன் மறைந்துவிடும் அத்தியாயங்கள். அருள்குமரன் கண்காணிப்பில் இருந்து தப்பிய சில காகிதங்கள் அஷேரா நாவலாகியுள்ளன. பல அத்தியாயங்களைக் காணவில்லை. சில அத்தியாயங்கள் அழிந்துள்ளன. மறையாத பல துண்டுக் காகிதங்கள்.

வடதுருவத்தில் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அருள் குமரனுடைய பலியான கதாபாத்திரங்களின் சருக்கக் குறிப்பு வரைபடங்கள் ஒட்டிய அட்டவணையிடப்பட்ட திரட்டுப்படுத்தப்படாத அங்காதி பாதங்கள் துண்டிக்கப்பட்ட பின் அவை தானே எழுதியவையும் என்ன வேண்டுமெ ன்று கேட்க ஆளற்றுப் போனவர்களின் குறிப்புகளில் இவர்கள் தனியே எழுதிவைத்தவையும் எங்கே மறைந்துள்ளன.

பெண்களின் எழுதாமைப் புத்தகங்களும் மையிட்டு எழுதியவைகளும் காணாமல் போய்விட்டன. எழுதப்பட்டுள்ள துண்டுக் காகிதங்களின் ஈழநாட்டின் மரித்தோர் சந்தில்தான் நாவலாசிரியர்களும் அடைக்கலமாகி உள்ளனர். அந்த மரித்தோர் டைரிகளும் கிடைக்கவில்லை. பனிமலையில் இருந்து பாபிரஸ் துண்டுகளாய் உயர்ந்த சாவு நடுங்கும் சிகரத்தில் படிந்த கால அமைதியில் அங்கே மறைந்த மிகப்பலரும் மௌனமுற்றிருக்கின்றனர்.

அழிந்த மண் விரல்களால் மீண்டு வந்து எழுதிக் கொண்டிருக்கின்றன.. பூமத்திய ரேகையில் யுகங்களுக்கிடையே குருதியின் மொழியைச் சுவரியபடி தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவத்திற்கும் மேற்கு தேசத்துக்கு யுத்தத்தில் அவலங்களோடு வெளியேறியவர்களும் அவர்களோடு ஊர்ந்து வரும் குருதியின் உரையாடல் முனகலாய்ப் பின்னணியில் மங்களாக் கரைந்து சாவின் குளிர் ஒலியிடுகிறது.

மோகார்த்தென் எல்லையில் ஏகெரி என்ற இந்த ஏரிக்கரை ஓரத்தில் அணிவகுத்து நின்ற நள்ளிரவில் கண்ணாடித் தகடு போல உறையக் காத்திருக்கும் ஏரி கடும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடக்கிறது. கரையோரச் சதுப்பு ஓநாயின் ஓடும் கால் புதர்களை மோப்பமிட்டு எழுதப்பட்டுள்ள நாவலாக நிலத்தில் இருந்து செங்குத்தாக மேலே ஏறி மலையுச்சியிலிருந்து மஞ்சள் ஓநாய்களின் ஊளை இறந்த வீர்களின் ஆவிகளையும் பனிப்புயலையும் எழுப்புவதைக் கண்டேன் என் வாசிப்பின் சதுப்பு நரியின் ஓட்டத்தில். உப்புக் கால்களால் ஓடும் நரிகளின் வாசிப்பு விசித்திரமானது. சதுப்பு ஓநாயின் கால் தடங்களைத் தொட்டு நகரும் சில பக்கங்களில் துருவநிலத் தோற்றங்களும் யாழ்ப்பாணச் சுண்ணாம்பு வளமும் வன்னி நிலத் தோற்றங்களில் கசியும் செம்மண் வளமும் மூன்றும் ஒன்று கடந்துவிடும் மாயத்தை அடைவதற்கு மூன்றும் இடைவெளி காண்கிற விபத்திலிருந்து சற்றே தப்பினாலும் அஷேரா நாவலில் மூன்று நிலவெளிகளும் மாயமும் யதார்த்தமும் தனித்தனியே இருந்தும் மரணத்தில் கலந்தும் இருள்வீசும் அதற்குரிய ஆழத்தைப் பெற்றுள்ளன என்பதில் சந்தேகமில்லை.

வெப்ப மண்டலத்தில் இருந்து போன ஒரு படைப்பாளி செயந்தன் ஒரு செம்மறி ஆட்டைத் தோளில் சுமந்தபடி தன் குற்ற மகஜரோடு தண்டனைக்குக் காத்திருந்த துயரப்பனி வீசிய நடுக்கத்துடன் “அற்புதம்” குற்றத்தை ஒப்புக் கொள்வதாகச் சொன்னான். “நீங்கள் வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா” என்று திருமதி கஸ்பார் கேட்ட போதும் அடுத்து நிற்கும் இவரையும் “அது உங்களுடைய விலங்குப் பண்ணை என்ற ரீதியில் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா” என்று திருமதி கஸ்பார் கேட்டார். தீர்ப்பை வழங்கும் முன்னர் ஏதாவது சொல்வதற்கு இருந்தால் அதனை இந்த நீதிமன்றம் கரிசனையோடு கேட்க விரும்புகிறது என்றார். இது என்ன புது பழக்கம் என்னுடைய வாழ்க்கையில் எல்லாத் தீர்ப்புகளும் என்னிடம் கேட்காமல் தான் வழங்கப்பட்டன இதுவரையும்.. அப்படியே செய்யச் சொல்லுங்கள்” என்று சொன்னான். ஆனாலும் அந்த தூந்திரப் பனிக் கிழவனின் மலைகளின் ஆன்மா மிக உயரமானது. இது நாவலில் சொல்ல படாமலேயே அந்தக் கிழவனின் மௌனத்தில் இருந்தே பனி உருகும் ஆன்மாவை நாம் பெற முடிகிறது. புஷ்க்கினது பெஸராப்பியா மேய்ச்சல் நில ஆவியானது காமத்தின் பனி வெருகின் சப்தமற்ற காலடிகளைத் தெளிவற்ற இருட்டில் மௌனமாகக் கேட்டிருந்த கிழவன் நாவலில் ஓரிரு பக்கங்களில் மட்டுமே தான் வருகிறான். ஆனால்அவன் இந்த நாவலில் கோட்டுருவமாகத் தான் வந்தடைகிறான் ஆட்டுப் பண்ணையில் இருந்து நீதிமன்ற வாசல் வரை மட்டுமே . எனவே தெளிவாகவும் நிதானமாகவும் பின்வருமாறு சொன்னான் பனிக்கிழவன் “அவன் குற்றவாளி என்று சொல்ல நான் விரும்பவில்லை. அவனை விடுதலை செய்து விடுங்கள்”

இந்தக் காட்சிகளோடு அருள்குமரன் பத்திரிகைகளையும் “அற்புதம்” பாத்திரத்தின் குற்றம் பூசிய மனுவையும் தாள் விவரங்களையும் அவற்றைக் கைகள் கொண்டு கச்சாவாகத்தானே அத்யயிக்கும். மனித மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதலை வாசிப்பில் உணர்ந்தேன். அருள்குமரன் கை மூலம் சயந்தன் தீட்டிய பனி இரவில் சித்திரங்களோடு காத்திருக்கும் குற்றவாளிக் கைகளில் பூட்டிய துருப்பிடித்த விலங்குகளுடன் அவர்களை நெருங்கித் தொட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்காத நீர் ஓவியங்களை ஸ்பரிசித்தேன். கண்களில் கசியும் உப்புடன்.

“அற்புதம்” கதாபாத்திரத்தின் விரல்களுக்கிடையில் நழுவும் கசக்கி எறிந்த காகிதங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் அசைவுகளையும் வாசித்தேன். ஆரம்பப்பீடிகை குதிரைகளின் குளம்படிகளையும் அவதானித்துக் கொண்டிருந்த சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சியின் அப்போதைய தளபதி வேர்னர் ஸ்ராபாஹர் உதடுகளின் முணுமுணுப்பையும் யுத்தம் வீழ்த்திய பனியுருகும் மலைகளின் சாக்காட்டில் இருந்து எழுதப்பட்டுள்ளதாக நாவல் உத்தியைக் கோடிட்டுத்து வங்குகிறது அஷேரா.

By

Read More

அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்

1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனியாக இருந்தது. அவரது நடை, உடை பாவனை, இலங்கை குறித்த பார்வை ( ஏளனமாக என்றுகூட கொள்ளலாம்) புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் எனும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது என்னவோ உண்மைதான்.

2010 க்குப்பிறகு சந்திக்க்கிடைத்த அந்த ‘வெளிநாட்டுக்காரர்களில்’ வேறு விதமானவர்களும் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படியானவர்கள் பலரைப் பார்த்து, பழகியபின் 90 களின் பார்வை மாறியதும் உண்மையே.

ஆனால் 2018 ல் சுவிஸ் – பேர்ன் நகரில் சந்திக்கக் கிடைத்த அல்லது பார்க்கக் கிடைத்த புலம் பெயர்ந்த ஒருவரைப் போல அதற்கு முன்னரோ அல்லது பின்னர் இலங்கையிலோ வெளிநாட்டிலோ காணக்கிடைக்கவில்லை. சயந்தனின் ‘அஷேரா’ வில் வரும் அற்புதம் எனக்கு அந்த ‘பேர்ன்’ ஈழத்தமிழர் போலவே தெரிந்தார்.

முதல் தடவையும் மூன்றாவது தடவையும் சுவிஸ் சென்றிருந்த பொழுதுகளில் சுவிஸ் மலைகளைத் தரிசிக்க என்னை அழைத்துப் போயிருந்தார் சயந்தன். அவர்தான் அஷேரா எனும் இந்த நாவலின் ஆசிரியர். அந்த மலைகள் பற்றி அல்லது ஏரிகள் பற்றி எனக்கு விளக்கிச் சொல்வார் சயந்தன். அந்த வரலாறுகள் பெரிதாக புரியாதபோதும் சாராம்சத்தைப் புரிந்து கொள்வேன்.அப்படித்தான் அஷேரா என்ற பாத்திரப் பெயர் பற்றிய புரிதல் எனக்குள் நிகழ்ந்திருக்கிறது எனலாம். ஆனால் அந்த பின்னணியில் தமிழீழ போராட்ட அரசியலை முன்வைத்து முன்னகரும் நாவலின் பிரதான பாத்திரமாக வரும் அருள்குமரன் சயந்தனைப் போல தோற்றம் கொண்ட ஒருவராகவே வாசிப்பின்போது என்னோடு உலாவந்தார்.

இரண்டாவது சுவிஸ்பயணத்தில் அந்த அற்புதம் போன்ற ஈழத்தமிழரைச் சந்தித்த காசு மாற்றும் கடையின, (Exchange ) கவுண்டரில் உட்காரந்திருந்த பெண் பெயர் அபர்ணாவாக இருக்குமோ என எண்ணினேன். நாவலில் வரும் அபர்ணா அப்படித்தான் கொழும்பில் இருந்து புலம்பெயர்ந்த யாழ்ப்பாண பெண். ஈழப்பிரச்சினையை கொழும்பில் இருந்து பத்தரிகையில் பார்த்தே பிரச்சினையாகி சுவிஸ் அகதியாகியிருந்தார். அருள்குமரனும், அபர்ணாவும் நடந்து திரியும் வீதிகள் நானும் சயந்தனும் நடந்து திரிந்த வீதிகளாக அந்நியமின்றி இருந்தன.

‘கந்தன் கருணைப் படுகொலை’ என்றால் என்னவெற தெரிந்தாலும், அது எப்படி நடந்தது என அண்மையில் ஒரு முகநூல் பதிவில் வாசிக்க கிடைத்தது. அந்தப் பதிவு அதில் இருந்து தப்பிய ஒரு தைரியமான ஒருவரால் வழங்கப்பட்ட வாக்குமூலமாக பதிவாகி இருந்தது. அது அற்புதமெனும் எனும் பின்னாளில் தைரியம் குன்றிப்போன ஒருவரின் வாக்குமூலமாக அஷேராவில் பதிவாக்கம்பெறுகிறது. கந்தன் கருணைப் படுகொலைக்கு அகப்பட்டவர்களில் 80 களில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்விகற்று சித்திபெற்ற மருத்துவ பீடத்துக்கு தெரிவான மலையக இளைஞர்கள் ஓரிருவரும் இருந்தனர் என மிக அண்மையில் உறுதியான தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகள் அவர்களைக் கொல்லும் காட்சிகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.

சுவிஸ் ரவி எழுதிய ‘குமிழி’ நாவலில் வரும் ‘புளோட்’ கதைகள் பல அஷேராவிலும் வருகின்றன. அந்த தமிழகப் பண்ணையார் வீட்டுக்குத் தப்பிப்போன நிலையில் வந்த காட்சிகளை குமிழியிலும் வாசித்த போதும் அஷேராவில் பண்ணையாரையும் சுட்டுக் கொன்ற போது, இந்த ஈழப்போர் இந்தியாவில் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்லவில்லை எனும் எண்ணத்தைத் தந்தது. தனது சொந்தங்களையே உப்புக்கண்டம் போடும் அளவுக்கு கொடூரமான பயிற்சி பாசறைகள் தமிழ் இயக்கங்களில் இருந்தன என்பதை எத்தனை பேர் நம்புவார்கள்.குமிழி, அஷேரா போன்ற நாவல்கள் இதனைப் பதிவு செய்கின்றன.

 அஜித் போயகொட வின் ‘நீண்ட காத்திருப்பு’ எனும் நினைவுப் பதிகையை அண்மையில்தான் வாசிக்க கிடைத்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட இராணுவத்தரப்பின் அட்டூழியங்களையே படிக்கும் தமிழர்தரப்பு வாசிக்க வேண்டிய நூல் அது.அந்த அஜித் எனும் கப்டன் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சூழலின் ஒரு பாத்திரமாக அஷேராவில் வந்து போகிறார். அந்தச் சூழலில் அவரது சிங்களத்தை தமிழுக்கு மொழிபெயர்க்கும் அவந்தி சிங்களத் தாய்க்கும் மலையகத்தமிழ் தந்தைக்கும் பிறந்தவள். அவள் பின்னாளில் வாழும் ஒருகொடவத்தை சேரி, தக்‌ஷிலா சுவர்ணமாலி எழுதியுள்ள ‘பொட்டு’ சிறுகதைச் சூழலில் வரும் சேரியை மனதுக்குள் கொண்டு வருகிறது. கொழும்பு 7 குண்டுவெடிப்புகளுக்கு அப்பாவிகளின் சேரிகளை அபகரித்துக் கொண்ட அரசியலை ‘பொட்டு’ போலவே அஷேராவும் பேசுகிறது. அதேபோல மருதானை பொலீஸ் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பும், அருகே சென்ற வாகனத்தில் பயணித்த பாலர் பள்ளி சிறுவர்களின் கதறல்களும் அப்போது கொழும்பில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

கொழும்பு நூலக ஆவணவாக்கல் சபை பகுதியில் ஏதோ ஆவணங்களைத் தேடச் சென்ற வேளை வாசிக்க கிடைத்த கட்டுரை, வி.டி.தர்மலிங்கம் எழுதிய ‘மலையகம் எழுகிறது’ எனும் நூலுக்காக இர.சிவலிங்கம் எழுதிய முன்னுரை. வெளிவராத அந்த நூலின் முன்னுரை நூலினை வெளியிடத் தூண்டியது. அந்தப் பணியை சயந்தன் உள்ளிட்ட ‘எழுநா’ நண்பர்கள் சில காலத்தில் செய்து இருந்தார்கள். அதன் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள தமிழகம் சென்ற போது பதிப்பக பொறுப்பாளர் வேடியப்பன் இதனையும் கொடுக்கச் சொன்னார் கொடுத்த ஒரு பிரதி ‘ஆறாவடு’.

ஆறாவடு சயந்தனின் முதல் நாவல். கொடைக்கானல் தொடங்கி ஊட்டி போகும் பஸ் பயணத்தில் வாசித்து முடித்த அதே வேகத்தில் என்னால் அஷேராவையும் வாசிக்க முடிந்தது. இடையில் வெளியான ‘ஆதிரை’ இந்த வேகத்தில் செல்லவில்லைதான். ஆனாலும் பல விமானப் பயணங்களில் வாசிக்க முடிந்தது. ஆதிரை வன்னி வாழ் மலையகத் தமிழர்களையும் இணைத்த புதினம். அஷேராவிலும்கூட ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களை’ நினைவுபடுத்திச் செல்கிறார் சயந்தன்; அருள்குமரன் ஊடாக.
ஆறாவடுவின் தொடர்ச்சியாக அஷேராவைப் பார்க்கவும் முடிகிறது. ஈழப்பிரச்சினையோடு

அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் கோரி நிற்கும் ஏனைய நாட்டினரையும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டவரையும் அஷேராவில் வாசிக்க முடிகிறது. ஆறாவடு இத்ரிஸ் கிழவனையும் நினைவுறுத்தியபடி.

நாவல் கூறும் நுட்பத்தில் புதுமை செய்யும் சயந்தனின் அஷேரா, நாடக காடசிகள் போல மாறி மாறி வருகிறது. வாசகன் நிதானித்து காட்சிகளை கட்டமைத்துக் கொள்ளவும் முன்பின் அத்தியாயங்களைத் தொகுத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை இருக்கிறது.ஆதிரையில் சயந்தனுக்கு வர மறுத்த தூஷண வார்த்தைகளை அஷேராவில் வலுக்கட்டாயமாக இழுத்து வரும் சயந்தனில் (அந்த விடயத்தில்) தடுமாற்றமே தெரிகிறது. ஆனால் காமத்தை பேச முனைவதில் அவருக்கு இருந்த தயக்கத்தை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கிறார். இது காலத்தால் வந்த மாற்றம் என்கிறார் சயந்தன்.

ஒவ்வொரு நாவலும் எழுதப்பட்ட கால இடைவெளிகளுக்குள்ளும் இலக்கியம், வாழ்க்கை, அரசியல் பற்றிய புரிதல்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. என்னால் (தன்னால்) உணரக்கூடிய பெரிய மாற்றம் என்பது, ஆதிரை நாவலை எழுதும் போது, இனத்தின் கதையை,சமூகத்தின் கதையை, நியாயத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதல் அதிகம் இருந்தது. இன்று தனிமனிதர்களின் கதையை, நியாயத்தைச் சொல்வதில் கரிசனை’ என்பது சயந்தனின் முன்வைப்ப அல்லது வாக்குமூலம்.

இந்த மாற்றத்துக்கு சயந்தனுக்குள் நடந்திருப்பது வாசிப்பு. அது தனிநபர் உளவியல், சமூவியல், சமூக உளவியல் என பலதரப்பட்ட தாக்கத்தை சயந்தனுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தனிமனிதக் கரிசனையில் காம உணர்வுகளின் பக்கம் கவனம் அதிகம் போனது அல்லது எல்லா பாத்திரத்திலும் அதனைப் பொருத்திப் பார்க்க முனைவது சில இடங்களில் அபத்தமாகவும் தெரிகிறது.

அற்புதத்தின் உளவியலைச் சொல்வதில் வரும் பரிவு அருள்குமரனில் மாறுபட்டு நிற்கிறது. பெண்களின் பாலியல் சார் உளவியலைச் சொல்லவரும்போதும் ஆண்மனது எட்டிப்பார்க்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஈழப்போராட்டம் எனப்புறப்பட்டவர்களினதும் அதனால் பாதிக்கப்பட்டவர்களினதும் தனிமனித உளவியல், சமூக உளவியல் தாக்கங்களின் ஊடே ஈழப்போராட்டத்தின் சமூகவியலைப் பதிவு செய்ய முனைகிறது அஷேரா. அருள்குமரன்தான் கதை முழுதும் வந்தாலும் அவருடன் கூடவே வரும் அற்புதம் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

அந்த அற்புதம் சுவிஸ் – பேர்ன் நகரில் காசு மாற்றும் கடையில் கண்ட ஒருவரின் உருவத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார். அவர் 90 களில் கண்ட வெளிநாட்டுத் தமிழரைப் போல ஆடம்பரமாக இல்லை. ஆங்கிலத்திலும் பேசவில்லை. தமிழில்தான் தானாக பேசிக் கொண்டு திரிந்தார் . ஆடைகளில் ஏதேதோ லேபல்களை ஒட்டியிருந்தார். அதில் ஈழ வரைபடமும் இருந்தது.தாடி வளர்த்து இருந்தார்.கையில் ஒரு கொடியை தோளில் சாய்த்தபடி வைத்து இருந்தார். முதிய தோற்றமும் வேறு. எப்போதோ ஒரு இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும். சுவிஸ் – பேர்ன் நகரில் இப்படி தலைவிரிகோலமாய் சுயநினைவிழந்து சுற்றித்திரிவதை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது.அவரை நான் பரிதாபமாக பார்ப்பதை நக்கலாகப் பார்த்த அபர்ணா போன்ற தோற்றத்துடன் கவுண்டரில் அமர்ந்திருந்த அந்த இளவயது ஈழ அகதியான சுவிஸ் ஈழப்பெண் அற்புத்த்தையும் கூட அப்படியே பார்த்தாள்.

அஷேரா – ஆறாவடுவின் தொடர்ச்சி என சொல்வது நாவலின் தொடர்ச்சி என்ற பொருளில் மட்டுமல்ல. வாசிக்க வேண்டிய நாவல் அஷேரா. 2021 சனவரியில் ஆதிரை பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘அஷேரா’ இலங்கையில் பரவலாக கிடைக்கிறது.

By

Read More

அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா

துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்..

காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த காயத்தை வருடி வருடி வலி மிகச்செய்து தான் காயமாற்ற விளையும்…சில வன்மங்களும் அப்படித்தான்… சில நூல்களை மட்டும் தான் ஆத்மார்த்தமாக ஒரே மூச்சில் வாசித்து அப்பாடா என்று எமக்கே ஒரு ஆன்ம திருப்தியைக் கொடுக்கவியலும். “இச்சா” விற்கு பிறகு அஷேரா”

எத்தனையோ மனவிறுக்கங்களை ஆன்ம வியர்வையை அருள்குமரனும் அற்புதமும். மனத் தவிப்புகள் ஒவ்வொருவனுடைய மனதிலே கிடந்து அரித்ததை இன்றும் நாங்கள் துரோகங்களால் தானே வீழ்ந்து கொண்டிருக்கிறோம்..

எப்படியாவது வாழ்ந்துவிடுவோமென துடிக்கும் சாபக்கேடு நிறைந்த இனம்… எதற்காக வடிகால்கள் தேடுகிறோம்? எதனிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறோம்?

ஆக நகர்வும் மொழிமையும் நீரோட்ட ஆழமென மனதில் இறுகும் பாத்திர வார்ப்புகளும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈழ இலக்கிய வரிசையில் தனித்து நிலைக்கும். “அஷேரா”

By

Read More

× Close