அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி

ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம்.

அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி, அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று வாழ முற்படுகிறார்கள்.

அவர்கள் இளமையில்,கண் முன்னே கண்ட கோரத் தாக்குதல்கள். இனப் படுகொலைகள். இயக்கங்கள், அவைகளின் முரணான செயல்பாடுகள், அதன் விளைவால் அவர்கள் பெற்ற வலிகள் இவற்றைப்பற்றியும் விரவாக இப்புதினம் பேசுகிறது.

மனிதன் தப்பி ஒடிப் புதியவாழ்கை வாழ முற்படலாம். மனதைப் புதுப்பிக்க முடியாது. அது ஒவ்வொரு நொடியும் பழைய வாழ்க்கையில் நின்று நெருஞ்சி முள்ளாய்க் குத்தும். அணுஅணுவாய் கொல்லும் என்பதைக் கதை நாயகர்களின் அகதி வாழ்வின் மூலம் சொல்கிறார் சயந்தன்.

அகதிகளாக அயல்நாடு வந்து இயல்பு வாழ்க்கை வாழ முற்படும் சூழலிலும் பழைய நினைவுகளால் துரத்தப்படும் மனம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமுடியாமல் அலக்கழிக்கும் அவலம். ஒவ்வொரு நிமிடமும் பழைய வாழ்வின் நினைவு இயல்பை வாழவிடாமல் செய்வதால் நிலைதடுமாறித் தவிக்கும் மனங்களைச் சித்திரிக்கிறது இந்நாவல்.

அபர்ணாவின் இணக்கமான அன்பு எதார்த்தத்தில் தன்னைப் புகுத்திக்கொண்டு வாழும் மனம் புதினத்திற்கான சுவையைக் கூட்டுகிறது . அவந்தி எனும் போராளியின் வாழ்வும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்பு மிக்கதாகவும் இருக்கிறது.

போரின் சுவடு அறியாத ஒரு முகத்தைக் காணத்துடிக்கும் அருள்குமரனின் மனம் பழைய நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைவதைக் காட்டுகிறது.

புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடும் போது குடித்துவிட்டு போதையில் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்று பேசுவதும். பின்னர் அவரவர் வேலையில் ஈடுபடுவதையும் பகடிசெய்கிறார்.

முதல் தலைமுறையைச் சேர்ந்த அற்புதம் , அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அருள்குமரன் புலியின் இயக்கத்தைச் சேர்ந்தவர் என அறியும்போது தன்னைக் கொல்வதற்காகப் புலிகளால் அனுப்பப்பட்ட ஆளோ எனச் சந்தேகிக்கிறார். புலம்பெயர்ந்து வாழும் போதும் உயிரச்சத்துடன் வாழும் அவலத்தை இது காட்டுகிறது.

சயந்தன் புதினத்தை நகர்த்தும் பாங்கு அழகு.

நனவோடை உத்தி மிகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எளிய, கவித்துவமான நடை அழகு. தொடக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பும் , எதிர்பார்ப்பும் சுவையும் குறையவில்லை. ஈழத்தின் இன்னொரு முகம் வெளிப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது.

சயந்தனுக்கு இதயம் நிறைந்த வாழ்த்து

By

Read More

அஷேரா! அற்புதம்மான் – நெற்கொழுதாசன்

“அஷோராவின் அற்புதம்” என்பது, வார்த்தைகளுக்குள் உறைந்துபோய் விடக்கூடிய ஒரு உணர்ச்சியல்ல. ஒவ்வொரு பகுதிகளாக வரைந்து வரைந்து சட்டென முழுமையான சித்திரமொன்றை காட்சிப்படுத்தி உணர்ச்சிப்பிழம்பான மனநிலையை உருவாக்கிவிடுகின்றது.

0

மறந்துவிட, விலகிப்போக, மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற தவிப்பை தினம்தோறும் கொண்டலைகின்ற , அவற்றிலிருந்து வெளியேறி, தனக்கானதொரு வாழ்வை கண்டடைய முனையும் எத்தனிப்புக்களை கொண்ட மனிதர்களின் கதையிது. ஒன்றை சொல்லிவிடுகிறேன். மனிதர்கள் இப்படித்தான் இருக்கமுடியும்.

மனிதர்கள் நிலங்களால் பிணைக்கப்பட்டவர்கள். வேட்கைகளால் நிரம்பியவர்கள். நிலம் நீங்கியவர்களிடம் மிஞ்சி இருப்பது நிலம் பூசிய நினைவுகள். அதிலும் போர் நிலத்து நினைவுகள், மெல்லக் கொல்லும் நஞ்சு. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதிலும், அதிஉத்தம இலட்சியம் என்று கருதிய ஒன்றுக்காக, தினம்தோறும் சாவை எதிர்கொண்டலைந்தவர்கள் அந்த உத்தம இலட்சியம் கண்முன்னாலேயே சிதைகின்றபோது தங்களுக்குள் இறந்துபோகிறார்கள். மீண்டும் உயிர்த்தெழுகின்றபோது சிதைவுகளையும் , குற்றவுணர்வுகளையும் இந்த சமூகம் அவர்கள் மீது ஏற்றிவிடுகிறது. அவர்களும் தங்களை மீறி சுமக்கத்தொடங்குகிறார்கள். பிரிக்கவும், நீங்கவும் முடியாத நிலையில், தாங்களாகவே சமூக விலக்கம் செய்துகொள்ள முற்படுகிறார்கள். அந்த மனிதர்களை இருள் புரிந்துகொள்கிறது. அரவணைத்துக்கொள்கிறது. இருளை தனிமை எனலாம். நண்பன் எனலாம். ஈவுகொண்ட இணை எனலாம். மொத்தத்தில் அவர்களின் இருள் நீராலானது.

காமம், உடலில் முக்கிய இடத்தில் புதைந்துகிடக்கும் சன்னம். தன் இருப்பை கணந்தோறும் நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். மனிதன் தன்னை மிருகமாக மாற்றிக்கொள்ளும் இடமும் அதுதான். இணைகொள்ளுதலில் தவறு என்றொன்றுமேயில்லை. ஒழுக்கம் விழுமியம் எல்லாம் மனிதன் மீது திணிக்கப்பட்டவை. திணிப்புக்கள் எப்போதுமே சுமைதான். சுமைகளை கொண்டலையும் மனிதன் அழுத்தம் தாங்கமுடியாது வெடித்து கிளர்கிறான். தீராத வேட்கைகளை கழித்துவிட எத்தனிக்கிறான். காமம் தீர்த்தல் உயிர்களுக்கு மருந்து எனலாம். விடுதலை எனலாம். சுதந்திரம் எனலாம்.

இவற்றையெல்லாம் சமூகம் அசாதாரணம் என ஒதுக்கி, ஒதுங்கி நின்றுகொள்கிறது. குற்றமாக்கிவிடுகிறது. இலக்கியம் அதனை கண்முன்னால் விரித்துப்போட்டு இதுதான் நீ என்று சுட்டுவிரலை நீட்டுகிறது. அஷேரா அதை செய்ய விளைகிறது.

காமமும் துரோகமும் அன்பும் கோபமும் பின்னிப்பிணைந்த மனிதர்களைப் பேசுகின்ற நாவல். இருளும் நின்மதியும் வேட்கைகளும் துரோகங்களும் இணைகின்றபோது நிகழ்கின்றவைகளை குறியிட முனைகின்றது. ஆண் பெண் உறவுகளை, நட்புக்களை, அதன் சிக்கல்களை ஏக்கங்களை தம்மளவில் தனித்துவமாக வெளிப்படுத்துகின்றன. காமம் மற்றும் போர் என்பவற்றின்முன், ஆண் பெண் என பிரித்துகொள்ளத்தேவையில்லை. போர் காமம் இரண்டும் மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றிப்போடும் வல்லமை கொண்டது. அதனை நாவலில் கண்டுகொள்ளலாம்.

நாவலின் முக்கிய பாத்திரங்கள் போர் நிலத்திலிருந்து வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அது துரோகத்தால், ஏமாற்றத்தால், இழப்பால், தனிமையால் உருக்கொண்டது. அது அவர்களுக்கு மட்டுமானதல்ல. ஒவ்வொருக்குமானது. ஆப்கான் மலைகளாகட்டும், காஸ்மீரின் பனி போர்த்த நிலங்களாகட்டும் எல்லோருக்கும் போர் காமம் இரண்டும் ஒரேமாதிரித்தான். இருள் அவர்களை புரிந்துகொள்கிறது நேசிக்கிறது. காமம் மருந்தாகிறது. விடுதலையழிக்கிறது. பொறாமையை எரிச்சலை உருவாக்குகிறது. இது எல்லாமனிதர்களிளுடமும் எதோ ஒருவிகிதத்தில் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

காமத்தை, வேட்கையை அதன் நுண்மையான இயல்புகளை, பெண் ஆண் உறவின் சிக்கல்களை இதற்குமுன்னும் நாவல்களில், கதைகளில் வாசித்திருந்தாலும் அவையெல்லாம் ஒன்றல்ல. காமத்திற்கு எது ஒப்பீடு. எப்படி மனிதர்கள் வேறுபடுகிறார்களோ அதேபோல வேட்கைகளும், உறவின் சிக்கல்களும் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. மனிதனின் வேட்கை தீர்வதில்லை. எழுதி தீர்க்கவா இயலும்.

இந்த புரிதலோடு, அஷேரா போருக்கு வெளியே வைத்து பேசப்பட வேண்டியது. ஆதிரை ஆறாவடு போன்ற முன்னைய நாவல்களிலிருந்து வேறுபடும் இடமும் இதுதான். வரலாற்று சம்பவங்களை பயன்டுத்தும்போது நாவலாசிரியர் என்ன நோக்கத்தில் பயன்படுத்துகிறார் என்று கண்டுகொண்டு அதனை பேசமுனையவேண்டும். எமது துர்ப்பார்க்கியம். எல்லாவற்றையும் ஆதரவு எதிர்ப்பு மனநிலையில் அணுகிவிடுவது.

மொழி சார்ந்தோ, பாத்திரங்களின் அமைப்பு குறித்தோ, நாவலின் கட்டமைப்பு உத்தி மீதான பார்வையாக எதனையும் பதிந்து கொள்ளவில்லை. வாசகனாக அது தேவைப்படவுமில்லை.

ஏற்கனவே நாவலாசிரியரின் சில சிறுகதைகளில், வாசித்த சம்பவங்களும் , பாத்திரங்களும் நாவலிலும் வரும்போது, சிறுகதைகளை வாசித்து சம்பவங்களூடாக, அவர்கள் மீது ஏற்றி நான் வைத்திருந்த விம்பம் இடையூறு செய்துகொண்டே இருந்தது. அது ஒருவித சலிப்பையும் உருவாக்கிவிட்டிருந்தது. இது எனது வாசிப்புக் குறைபாடாகவும் இருக்கலாம்.

அருள்குமரன் ஏதாவது ஒரு இடத்தில் “அற்புதம்மான்” என அழைத்துவிட மாட்டானா என்று மனம் அலைந்துகொண்டே இருந்தது. அப்படி நாவலில் அழைத்திருந்தால் அது நல்ல வாசிப்பை தந்திருக்காது. ஆனால் அப்படி அழைத்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்கி விட்டிருந்தது நல்ல நாவலுக்கான பண்பு . அம்மான் என்பது வெறுமே அழைப்பு மொழியல்ல. அது தருகின்ற பிணைப்பும் அன்னியோன்னியமும் கிளர்ச்சியானது. அற்புதம்மான் எனக்குள் நான் ஒருமுறை அழைத்துக் கொள்கிறேன்

By

Read More

அஷேரா! புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்

ஈழப்போராட்ட வரலாற்றையும் அதன் அதிர்வுகளையும் கண்ணீரும் இரத்தமுமாகப் பேசிய ஆதிரைக்குப்பின்னராக சயந்தன் அண்ணாவால் எழுதப்பட்டிருக்கின்ற அஷேரா நாவலானது , “போராட்டம் முடிவடைந்த பின்னர் தனி மனிதன், தன் அடுத்த கட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக நகரமுடியாது உழல்கின்ற தன்மையை தனிமனித போராட்டமாக உணர்வு கொந்தளிக்க பேசுகின்றது.

தமிழீழம் என்ற ஒற்றை இலக்கிற்காக ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த இயக்கங்கள் அத்தனையும் “தனிமனித தவிப்புக்களையும், தொடர்ச்சியான உளப்போராட்டங்களையுமே பரிசளித்துச் சென்றிருக்கின்றது. தனிநாடு கேட்டு போராடிய தமிழன் தன் இனத்திற்குள்ளேயே ஒருவனை ஒருவன் போட்டுக்கொடுத்து , சுட்டுத்தள்ளி ,உயிர்களையெல்லாம் விலைகொடுத்துவிட்டு , கடைசியில் “நாடற்றவன் ” ஆக புலம்பெயர் தேசங்களில் அடைக்கலம் தேடுவதையும் , நாடு / நிலம் என்று வன்முறையைக் கையாள்கின்ற இயக்கங்கள் / குழுவினர் ஈழநாட்டில் மட்டுமல்ல, எங்கே இருந்தாலும் அதன் நீட்சி தனிமனித விரக்தியையும் , கசப்பையுமே மீதமாக விட்டுச்செல்கின்றது என்பதையும் கண்முன் கொண்டுவருவதோடு , ஆங்காங்கே நல்லிணக்கம் பற்றிய புரிதலையும் சமாதானத்தையும் நாவல் இயல்பாகப் பேசுகின்றது.

இயக்கப் போராளியான அருள்குமரன் கொழும்பில் பேருந்தொன்றில் இருக்கின்றான். சிங்களப்பிச்சைக்காரன் ஒருவன் சிங்களப்பாடல்களைப் பாடிக்காட்டியவாறு , சிங்களத்தில் எழுதப்பட்ட அட்டைகளைப்பயணிகளுக்கு வழங்கி பிச்சை கேட்கின்றான். பொக்கற்றிலிருந்து நாணயக்குற்றிகளை எடுத்தவனுக்கு சி்ங்களவர்களின் இனவாதவெறி நினைவுக்கு வர, “அம்மா… தெற்கே சமுத்திரம் பொங்குகிறது. மகாகங்கைக்கு வடக்கிலே நிலங்களைத் தமிழர் விழுங்கியிருக்கின்றார்கள். என்னால் எப்படி காலை நீட்டித் தூங்க இயலும்… சொல்” இனவாதத்தைத் தூண்டும் பாடல்களைத் தான் இவர்களும் பாடுகின்றார்களோ என்று சந்தேகம் தொற்றினாலும் , ‘பிச்சைக்காரனின் கெஞ்சலான முகம் ,ஈரலித்த கண்கள் , பாளம் பாளமாக வெடித்திருந்த உதடுகள் ‘ அவனை மனிதனாக மாத்திரமே அந்த நேரத்தில் உணரவைக்கின்றது. ஆரம்பத்தில் கொடுக்க எடுத்த நாணயக்குற்றிகளுடன் மேலதிகமாக சிலவற்றையும் போட்டு உள்ளங்கையில் வைக்கின்றான். சிங்களப்பிச்சைக்காரன் “ஸ்துதி ” என நன்றி சொல்கின்றான். பஸ் கடந்து சில மணி நேரத்தில் , இராணுவத்தினர் பஸ்ஸை நிறுத்துகின்றார்கள்.

ஆக நாடு , நிலம் , ஆட்சி, அதிகாரம் என்பன தனிமனித விரோதத்தையும், குழு மோதலையும் தவிர்க்கமுடியாததாக ஆக்கிவிடுவதுடன் தனிமனிதனைப் பைத்தியம்பிடிக்கவும் வைக்கும் போல.

உள ரீதியான சிக்கல்களை அனுபவிப்பவர்கள், அநாதரவானவர்கள், சோசலிசத் தமிழீழத்தில் சமத்துவம் கிடைக்கும் , சீதனம் மறையும் என்ற பேச்சுக்களில் மயங்கியவர்கள் என ஒரு சாராரும் , வன்முறைகளை விரும்பி ஏற்று சக மனிதனைக் கொல்லும் வெறிபிடித்தவர்களும் இயக்கங்களுக்குச் செல்ல தாராளமாகவே இருந்தார்கள்.

“அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கின்றார்கள்” என்ற வார்த்தைகள் மனதோடு ஏனோ ஒட்டிக்கொண்டன.

சிங்களத்தாய்க்கும் தமிழ்த்தந்தைக்கும் பிறந்த அவந்தி என்கின்ற பெண் தாயின் மரணத்தின் பின் அநாதரவாகி இறுதியில் கிறிஸ்தவப்பாதிரியார் ஒருவரிடம் சரணடைகின்றாள். அவர் தனது திருச்சபைக்குச் சொந்தமான அநாதை இல்லத்தில் சேர்க்கின்றார். ஈழப் போராட்டப் பிரச்சாரங்களால் அவள் உந்தப்பட்டு போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்துகின்றமையும் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றமையும் மிக அற்புதமான மொழி அடர்த்தியுடன் மனதைநெகிழச்செய்கின்றது. அவந்தி , ” நான் இரவே இரண்டு மூன்று சட்டைகளை அணிந்திருப்பேன். அந்தச் சின்ன வயதில் தமிழர்களாயிருந்தால் கொல்லப்படுவார்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அந்தச் சின்ன வயதில் பெண்ணாயிருந்தால் உதைப்பார்கள் என்று தெரிந்திருந்தது. அந்தச் சின்ன வயதில் வேலைக்காரியாக இருந்தால் அடிப்பார்கள் என்றும் தெரிந்திருந்தது ” எனத் தன்கதையைக் கூறுகின்றாள்.

ஈழச்சமூகத்தில் கட்டவிழ்ந்து காணப்பட்ட ஒடுக்குமுறைகளை இவ்வாறாக நாவல் பேசியிருக்கின்றது.

சக மனிதனை அவநம்பிக்கையுடன் , பயத்துடனும் நடுங்கும் மனத்துடனும் ஏறிடும் அளவிற்கு , மனிதர்களை வன்முறையாளர்களாகவே உற்பத்தி செய்திருக்கின்ற போராட்ட இயக்கத்தின் கூண்டிலிருந்து தப்பித்து வெளியேறிய அற்புதம் ஆறுதலுக்கென , இளைப்பாறக்கூட ஒரு மனித நிழலைத் தேடவில்லை.

அவர் அம்மை நோயினால் தாக்கமுற்ற போது அருள்குமரன் ஆற்றிய பராமரிப்பு சேவை என்பது வியக்கவைக்கின்றது. இயக்கங்கள், வேண்டுமென்றால் அந்த மனநிலை ஒன்றை மனிதர்களுக்கு அருவருக்காமல் கற்றுக்கொடுத்திருக்கக்கூடும் , “நான் இல்லையென்றாலும் ஏதோவொரு இயக்கத்தில் நின்ற ஒரு பொடியன் உங்களை இப்படித்தான் கவனிப்பான் ” என்பதாக அருள்குமரன் சொல்கின்றான்.

அம்மை நோய்க்காலத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என சொல்லப்படுவதும் , அம்மாளாச்சியின் கோபம் ,பயபக்தியுடன் தான் இருக்கவேணும் என்பதை அருள்குமரன் நினைவுபடுத்திக்கொள்வதும், ஒரு இனக்குழுமம் எங்குவாழ்ந்தாலும் கலாசாரம் , பண்பாடு என்பன தொடர்ந்துகொண்டிருக்கும் வெகுவிரைவில் போட்டுடைக்க முடிவதில்லை என்பதைக் காட்டுகின்றது.

தனிமை உணர்வு தனக்குப் புதியதல்ல என்று கூறும் அற்புதம் இரவு நேரங்களில் காமத்தின் வேட்கையைத் தணிப்பதற்கென , தொலைக்காட்சிகளில் வருகின்ற பாலியல் இச்சைகளைத் தூண்டுகின்ற பெண்களின் தோற்றத்திற்காகக் காத்திருப்பதும் செம்மறியாட்டுடன் உறவு வைத்த குற்றத்திற்கென அந்நாட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு கேட்க நேரிடுவதும் ” இவர் கிட்டத்தட்ட இரவுக்கடல் , உக்கிரம் , அழுகை , ஏக்கம் எல்லாமுமாகச் சிதறுகின்ற மனுஷன் .ஐம்பது வயதான பிறகும் பெண் உடலைக் காண , அதுவும் ரீவியில் காண இரவு பன்னிரெண்டு மணி வரை காத்திருப்பது ஒரு சாபம் அல்லவா , அப்படியும் சொல்ல முடியாது அதைப்பதின் நான்கு வயதில் காண்பதும் பெரும்சாபம் தான் “. அருள்குமரன் கூறுவதும் நாவலில் இழையோடும் பெருந்துயரம்.

சிறு வயதிலே உணர்வு மோதல்களால் சிக்குண்ட அருள்குமரனைச் சுத்தியே கதை நகர்ந்தாலும் ,யன்னல் வழி ஊடாக விரிந்துசெல்லும் பார்வையைப்போல், சமூகத்தின் பல்பரிமாணங்களையும் நாவல் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றது. நாட்டை விட்டு வந்தாலும் சரி ,|நாடு துரத்தி வந்தாலும் சரி தமிழர்கள் குணத்தாலும், பண்பாலும் , கலாசாரத்தாலும் ஈழத்தையே பிரதிபலிக்கின்றனர் என்பதை பல இடங்களில் , அங்கதச் சுவையுடனும் , சில இடங்களில் பரிதாபத்துடனும் நாவல் தொட்டுச்செல்கின்றது.

ஈழத்தில் இருந்து திருமண உறவின் நிமித்தம் புலம்பெயர் நாட்டுக்கு வந்த அபர்ணா , அருள்குமரனுடன் ரகசியமான ஓர் உறவைப் பேணுகின்றாள். பல தருணங்களில் ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்கின்றாள். அருள்குமரனும் அபர்ணாவும் பஸ்ஸில் பேசுவதை தமிழர்கள் விடுப்பாக பார்க்கின்றனர். தன் கணவனின் சந்தேகங்கள் , குணங்களை ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டாலும் , வீட்டை விட்டு வெளியேறவும் முடியாமல் பொறுத்திருக்கவும் முடியாமல் தனக்குள்ளேயே தன்னை ஆசுவாசப்படுத்தி சிலவற்றை ஏற்றும் சிலவற்றை விலக்கியும் வாழ்கின்ற சராசரிப் பெண்ணாகவே அவளைப் பார்க்க முடிகின்றது.

“கல்யாணம் பேசியிருந்த காலத்தில் திடீரென ஒரு நாள் நீர் யாரையாவது காதலித்திருக்கின்றீரா என்று அரங்கன் [அபர்ணாவின் கணவன் ] கேட்டார். பகிடிக்கதையைக் கேட்பதைப் போலத் தான் இருந்தது. ‘இதென்ன சவக்கதை’ என்றேன். அப்படிச் சொன்னதால் பிற்காலத்தில் ஒரு நாளுக்கான அடியும் , உதையும் குறைந்திருந்தது. குறைந்த பட்சம் ஒரு பெண் தான் ஒருவனை மனதால் நினைத்தேன் என்று சொல்லியிருந்தால் கூட வீணாக அவள் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவளைத் துன்புறுத்த, கணவன் உரிமை கொள்கிறான் என்பது சீற்றத்தை ஏற்படுத்தினாலும் மிகக் கேவலமான யதார்த்தம் அவை.

இருட்டு வேளைகளில் எல்லாம் அருள்குமரனிடம் வந்து மறையும் அமலிஅக்காவின் பெயர் அன்ட் லவ்லி வாசம் நாவல் முடிவு வரை வெறுப்பையே கடத்திவருகின்றது. எந்தவொரு நாளில் கூட இருளைத் தவிர்த்துவிட இயலாது . அது ஒவ்வொரு நாளுமே மனிதனைத் துரத்தி வருவது. அந்த இருளைப்போலவே மனித வாழ்க்கையை காமம் துரத்துகின்றது. காம உணர்வு குறித்து பேசப்படாதும் , பேசுவதே பாரிய பிழை என்றும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதே அன்றி காம உணர்வைக்கடத்த ஏதோவொரு வடிகாலை மனிதமனமும் மனித உடலும் தேடி அலைந்துகொண்டே தான் இருக்கின்றது. அற்புதம், அருள்குமரன், ஆராதனா ,சரவணபவன், அருள்குமரனின் அம்மா, அமலி அக்கா, அபர்ணா, நஜிபுல்லா, என்ற பாத்திரங்கள் ஒவ்வொரு வகையான தேர்வை உபயோகித்துக்கொண்டே அந்த இருளைக்கடக்கின்றனர்.

அருள்குமரன் ஐந்து வயதாக இருக்கும் காலத்திலேயே குடும்பப் பொருளாதாரம் தந்தையை வெளிநாட்டுக்குத் துரத்துகின்றது. முப்பத்தொரு வயதான இளம் தாய், தன்னிலும் ஐந்து வயது குறைவான சரவணபவன் என்பவனுடன் உறவொன்றைப் பேணுகின்றாள் . அவர்கள் இருவருக்குமான அந்நியோன்னியமும் , ஒட்டுறவும் , சத்தம் கேட்காத நகைச்சுவைப்பேச்சுக்களும் பிஞ்சு வயதிலேயே அருள்குமரனை மோசமான மனப்பாதிப்பிற்கு இட்டுச்சென்று , அவனது கடைசிநாள்வரை துரத்துகின்றது . அவன் தாயிடமிருந்த போதே கோபம், சந்தோசம், நிம்மதி, குதூகலம், ஏமாற்றம், காமம், காதல், சஞ்சலம், குரோதம் என்ற உணர்வுகளை நுகரத்தொடங்கியவன்.

“அம்மாவைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அம்மாவை வெறுக்கக்கூடாது ” என, தன் இறுதி நாளில் மகனிடம் கூறிய அவளது வார்த்தைகள் லாவகமாகக் கடக்கக்கூடிய ஒன்றல்ல என்றாலும் பிற்படத் தொடரும் அருள்குமரனின் சிதைவுற்ற வாழ்வு அவனது தாய் மீது கழிவிரக்கத்தையும், சரணபவன் மீது பெரும் சினத்தையும் தவிர்க்கமுடியாது ஏற்படுத்தியே விடுகின்றது.

ஒரு மனித மனத்தின் குற்றவுணர்வுகள் , மனச்சாட்சி என்பன அவர்களை எங்ஙனமாக வாழ்வின் முடிவிற்கே கொண்டுசென்று சேர்க்கின்றது என்பதும், அருள்குமரன் தன் பிஞ்சு மனதில் வரைந்து கொண்ட பெண் தொடர்பான அருவருப்பான விம்பத்தை , பின்னர் கண்ட எந்தப்பெண்ணும் உடைத்துவிடவில்லை என்பதும் ஆராதனா போன்ற ஒரு பெண்ணை அவன் கற்பனை பண்ணி ஏமாற்றமடைவதும் கனதியானவை.

போராட்டத்தின் பின்னரான மன வெறுப்பும் , வாழ்க்கை குறித்த சலிப்பு அல்லது ஆண் மனத்தின் திமிரும் வக்கிரமுமோ என்னவோ தெரியவில்லை.இங்கு வருகின்ற முக்கிய கதை மாந்தர்களான அற்புதமும் சரி அருள்குமரனும் சரி, வாயிலிருந்து தூசண வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றனர். அவந்தி ஓர் இடத்தில் அருள்குமரனிடம் ” அந்த வார்த்தையை என்னுடைய ஏழாவது வயதில் அப்பா அம்மாவைப் பார்த்துச்சொன்னார். பத்தொன்பதாவது வயதில் இந்த அண்ணா இந்தியன் நேவியைப் பார்த்துச்சொன்னார்… ” என்கிறாள். காலம் காலமாக இந்த வசைச்சொற்கள் , பலரது தீராக்கோபத்தை மெதுவாகக் தணிக்கின்றது போலும். சமூகத்தில் வெறுப்பை வெளிப்படுத்தும் போது உயர்ந்தளவில் சரளமாக உச்சரிக்கப்படுகின்ற இந்த தூசண வார்த்தைகளை இலக்கியத்தின் வழிகொண்டு வருதல் தேவைதானா ??? என்கிற கேள்வியும் பல இடங்களில் வந்துபோனது.

கதைமாந்தர்களை மரணத்தின் வாசலில் கொண்டு சேர்க்கின்றதே, அப்படியெனில் நாவல் ஒழுக்கப்பெறுமானங்களை பேசுகின்றதோ என்று நினைத்துக்கொண்ட போது சில நியாயமான உரையாடல்கள்,அதைத் தடுத்துநிறுத்தியிருந்தன. “செத்துப்போன என்னுடைய அத்தம்மா சொல்லுவாள் , எல்லா ஆண்களுமே வாசல் கதவைத்தான் தட்டிப்பார்ப்பார்களாம் , வாசலில் வைத்தே கதைத்து அனுப்புவதா அல்லது அதற்கும் உள்ளேயா … என்பது எப்போதுமே பெண்ணுடைய தீர்மானம் தானாம் ” என்ற அவந்தியின் பேச்சில் பெண்கள் குறித்த பார்வை சரியாகக் கவர்ந்திருந்தது. ஆனாலும் ஆழ்மன தாக்கங்களும் , குற்றமற்ற மனத்தை குற்றவாளியாக்க முனைதலும் , ஆற்றிக்கொள்ள முடியாத குற்றவுணர்வும் மனித மனத்தைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்வதை வெகு சீக்கிரம் ஆற்றுப்படுத்த முடியாது என்பதும் போராட்டம் முடிந்த பின்னராவது ஏதோவொரு ஆற்றுப்படுத்தல் பொறிமுறையை உருவாக்க வேண்டிய கட்டாய தேவை ஈழச்சமூகத்தினருக்குத் தேவைப்படுகின்றது என்பதையும் நாவல் சொல்லவிழைகின்றது என நம்புகின்றேன்.

ஆக மொத்தத்தில் , தனிமனித உணர்வுகளை ஆண் – பெண் என்று பாரபட்சப்படுத்தாது அவரவர் மனநிலையில் வைத்து நடுநிலையாகப்பேசுவதும், பாத்திர வார்ப்புக்கள் , நகர்வுகள் , மொழிக்கட்டமைப்பு என்பன நேர்த்தியாக, உள்ளதை உள்ளவாறு வெளிக்கொணர்வதும் நாவலின் வெற்றி. எளிதாகக் கடந்துபோகக் கூடியதற்கான எந்த வித எத்தனங்களுமின்றி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அற்புதமான மொழியாள்கையினால் உருக்கொடுத்து அதன் ஆழ அகலங்களை வாசகர்களிடமே விட்டுச்செல்கின்றமையும், புனிதங்கள் எனக்கட்டமைக்கப்பட்டவற்றை மொழிக்கற்களால் அசைத்துப்பார்க்கும் முயற்சியும் , அட்டகாசம்.

By

Read More

அஷேரா! ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்

சயந்தன் அண்ணாவின் மற்றுமொரு நாவல். ஆதிரையே அவரது படைப்புகளில் உச்சம் என்பதே என் கருத்து. இந்த நாவலின் பின்னும் அது மாறாது காணப்படுகிறது. மீண்டும் Non-linear முறையிலான கதைசொல்லும் பாங்கினை கையில் எடுத்துள்ளார். அருள்குமரன், அற்புதம் ஆகியோரின் வாழ்வின் பின்னலாக கதை வளர்ந்து செல்கிறது. ஈழத்து யுத்தத்தின் தார்மீக நோக்கம், அதன் வலிகள், வடுக்கள், சகோதரப் படுகொலைகள் போன்றதனைத்தினையும் முன்னைய படைப்புகளிலேயே அதிகம் பேசிவிட்டதனால் அதைத் தவிர்த்து / குறைத்து மனிதர்களின் மனப்போராட்டங்களை பிரதான விடயமாக்கி நாவலை நகர்த்துகின்றார்.

அருள்குமரன் மற்றும் அற்புதத்தின் பார்வைகளுக்கூடாக சமூகத்தால் பெண்கள் நோக்கப்படும் நிலைகள் தொடர்பானதொரு விமர்சனத்தினை ஆசிரியர் முன்வைக்கின்றார். ஆனால், எந்தவொரு நோக்குக்கும் இது சரி அல்லது இது பிழை என்று எந்தவொரு விளக்கத்தினையும் கொடுக்காது அதனை வாசகர் கைகளிலேயே விட்டுவிடுகின்றார்.

முக்கிய பாத்திரங்களான அருள்குமரனும், அற்புதமும் ஒன்றுக்கொன்று எதிர்மாறான கதாபாத்திரங்கள். இருந்தபோதிலும் கூட இரண்டு கதாபாத்திரங்களோடும் ஒன்றாகிப் பயணிக்க முடிகிறது. இருவருக்குமான மன உளைச்சலின் ஊற்று பெண்களாக இருக்கும் போதிலும் அடிப்படைக்காரணம் முற்றிலும் வேறுபட்டது. பாத்திரங்களின் நடத்தைகள் கதைவார்ப்பில் எவ் முரண்பாடும் இன்றி நகர்வது முக்கியமானதொன்று.

ஆராதனா, அவந்திகா, அமந்தா, அபர்ணா, அமலி என பெண்பாத்திரங்களும் சயந்தனின் நாவல்களின் தலைப்புகள் போல் ‘அ’ (a) வரிசையிலேயே அமைகிறது. இதில் ஒவ்வொரு பாத்திரங்களும் வெவ்வேறு குணாம்சம் கொண்டவை. அவை அவற்றின் வழியில் தனித்துவமானவையும்கூட. இது சரியானது இது பிழையானது என்று கருத்துக்கூற நாம் யார்? நாவலின் எந்தப்பாத்திரமும் இலட்சிய (Ideal) பாத்திரமாக வடிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொன்றும் அவற்றுக்கான குறைகளின் வார்ப்புடனே படைக்கப்பட்டுள்ளன.

ஈழப்போராட்டம் தொடர்பாக மாத்திரம் உளவாங்காது உலகின் வேறுபட்ட போராட்டங்களையும் உள்வாங்கியிருப்பது முக்கிய அம்சமாகின்றது. ஆறாவடு நாவலின் போது கூறிய அதே கூற்றினை இதன்போதும் கூற வேண்டும். ஒரு திரைக்கதைக்குரிய பாணியுடனேயே நாவல் முழுவதுமாக எழுதப்பட்டுள்ளது.

குறைகள் நிச்சயமாக உண்டு. Non-linear முறையிலான கதை சொல்லலில் கதையோட்டத்தை ஆழப்பதியவைக்க வேண்டியது முக்கியமாகின்றது. ஆனால், பாத்திரங்களின் பெயர்களே ஒன்றுக்கொன்று ஒரேமாதிரியாய் காணப்படுதல் இம்முறைக்கு பின்னடைவாக இருக்கிறது என்றே கூறவேண்டும். (குறைந்தது இரு முறை முன் பக்கங்களை புரட்ட வேண்டிய தேவை உண்டானது )

அடுத்ததாக முக்கிய ஆண்பாத்திரங்கள் இரண்டினதும் மனப்போராட்டங்களுக்கான வார்த்தை விபரிப்புகளும் mirror image போன்று காணப்படுவது ஏற்கத்தக்கதா என்று குழப்பம் வருகின்றது (பாத்திரங்களே அப்போராட்டங்களை விபரிப்பது போன்றே கதை சொல்லப்பட்டுள்ளது). சொல்லிவைத்தாற்போல் பெரும்பாலான பாத்திரங்கள் வாக்குக்கண்ணுடனே வலம் வருவது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பாகிறது. புதிதாக பாத்திர வர்ணனை வரும்போது ‘என்ன பெருசா சொல்ல போறிங்க? ஒருகண் என்னப் பாக்கும் போது மற்ற கண் பக்கத்தில இருக்கிறவன பாக்குது எண்டு சொல்ல போறிங்க. அதுதானே!’ என்று கூறுமளவுக்கு சென்றுவிட்டது.

பி.கு:- நகைச்சுவையுடன் கதையினை நகர்த்துவது ஷோபா, ஜே.கே, சயந்தன் போன்றோருக்கு கைவந்த கலை. இதிலும் நகைச்சுவை ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளது.

பி.கு2:- ‘ஆறாவடு’ நாவலின் சம்பவங்கள் சிலவற்றை நகைச்சுவையாக உள்வாங்கியிருப்பது sayanthan touch.

இந்நாவல் எதனை கூற வருகிறது? என கேள்வி முன்வைக்கப்படலாம். இப்படியான நாவல்கள் வரலாற்றுக் கடத்திகள். புனைவுகளாயினும் தொடர் சந்ததிகளுக்கு வாழ்வியலை, வரலாற்றை கடத்தும் முக்கிய பங்கினை இவ்வாறான நாவல்களே அதிகம் செய்கின்றன. அந்தவகையிலே ‘அஷேரா’ ஈழத்து நாவல்கள் வரிசையில் மற்றுமொரு முக்கிய படைப்பாக தன்னை முன்நிறுத்துகின்றது.

By

Read More

அஷேரா! நினைவுகளில் தொடரும் போர் – சுரேஷ் பிரதீப்

சயந்தனின் முதல் இரண்டு நாவல்களும் ஈழத்தில் நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்த போரைச் சித்தரிப்பவை. ‘ஆறாவடு’ நாவலானது அய்யாத்துரை பரந்தாமனிடம் நிகழும் மாற்றத்தின் வழியாக மட்டும் போரைச் சொல்லியது. ‘ஆதிரை’ நாவலின் களம் விரிவானது. அது சில தமிழ்க் குடும்பங்களின் தேசத்துக்கு உள்ளேயான தொடர் புலப்பெயர்வுகள், வீழ்ச்சிகள் வழியாக மிக விரிவாகப் போர் நிகழ்த்தும் அழிவுகளை அணுகியது.

‘ஆறாவடு’ நேர்க்கோடற்ற பாணியிலான நாவல். ஆதிரை காலவரிசைப்படி சீராகச் சம்பவங்களைச் சொல்லும் ஆக்கம். ‘அஷேரா’ நாவலைக் கட்டமைப்பின் அடிப்படையில் ‘ஆறாவடு’ நாவலின் தொடர்ச்சியாக வாசிக்கலாம். ‘ஆறாவடு’, போர் உக்கிரம்கொள்ளும்போது அகதியாகப் படகில் தப்பிச்செல்லும் கூட்டத்தில் ஒருவனைப் பற்றிய கதை.

‘அஷேரா’, அகதியாக சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த அருள்குமரன், அற்புதம், அபர்ணா எனச் சிலரைச் சுற்றி நடக்கும் கதை. அருள்குமரன், அற்புதம் இருவரும் அகதி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களுடைய கடந்த கால வாழ்வுமாக நாவல் முன்னும் பின்னுமாக முடையப்பட்டுள்ளது.

பொதுவாக, ஈழம் சார்ந்து எழுதப்படும் படைப்புகளைப் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்று வகைப்படுத்திப் பார்க்கும் ஒரு வழமை உண்டு. அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தின் வாழ்க்கையைத் தீர்மானித்ததில் ஈழ அரசியல் இயக்கங்களுக்குத் தொடர்புண்டு என்பதால், ஒரு படைப்பின் அரசியல் சார்பு கேள்விக்கு உள்ளாக்கப்படுவது இயல்பானதும்கூட. ஈழத்தின் போர்ச்சூழலை எழுதத் தொடங்கிய முதல் வரிசைப் படைப்பாளிகள் பலரிடமும் வன்முறைக்கு எதிராக நிலைகொள்ளும் ஒரு எத்தனம் வெளிப்படுவதைக் காணலாம்.

படைப்பு வெளியாகும் காலத்தில், அது சார்ந்து வைக்கப்படும் ‘அரசியல் விமர்சனங்க’ளைத் தாண்டி, அன்றாடத்தின் அரசியல் கொதிப்புகள் அடங்கிய பின்பும் ஒரு படைப்பில் பெற்றுக்கொள்ள ஏதும் இருக்கும் என்றால்தான் அது கலைப் படைப்பாகிறது. ‘அஷேரா’ நாவலின் முதல் பக்கத்திலேயே ஈழ அரசியல் இயக்கங்கள் மீதான மெல்லிய எள்ளலும் விமர்சனமும் தொனிக்கும் ஒரு குறிப்பு உள்ளது. நாவலின் போக்கில் அது மறுக்க முடியாத விமர்சனமாக உருப்பெறுகிறது.

விமர்சனம் என்பதைத் தாண்டி தன்னுடைய கட்டமைப்பின் வழியாக ஒரு அடிப்படையான கேள்வியை நாவல் எழுப்புவதாலேயே ‘அஷேரா’ முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கமாகிறது. அற்புதத்தை ஒரு தலைமுறையாகவும், அருள்குமரனை அவருக்கு அடுத்த தலைமுறையாகவும் வாசிக்கலாம்.

தலைமுறை இடைவெளி என்பது மட்டுமல்லாமல், நாவல் முழுக்கவே அற்புதத்துக்கும் அருள்குமரனுக்குமான முரண் வெளிப்படுகிறது. அற்புதம் பெண்ணையே தீண்டியிருக்காதவர். அருள்குமரன் இளம் வயது முதலே காமத்தை வெறுப்புடனும் குற்றவுணர்வுடனும் பெற்றுக்கொண்டே இருப்பவன். அற்புதம் இயக்கத் தோழர்களாலேயே கொலைசெய்யப்படுவதற்காகத் தேடப்படுகிறார். அருள்குமரன் ஒவ்வொரு செயலிலும் தடயமில்லாமல் தப்பிக்கிறான்.

நாவலில் அனைத்துச் சம்பவங்களும் ஏற்கெனவே நிகழ்ந்து முடிந்துவிட்டன. நாவலுக்குள் நிகழ்வது நினைவுமீட்டல்கள் மட்டுமே. இந்தக் கட்டமைப்பு நாவலுக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது. சயந்தனின் முந்தைய நாவல்களுடன் ‘அஷேரா’வைப் பொருத்தி வாசிக்கச் செய்கிறது. சயந்தனின் நாவல்கள், சிறுகதைகள் எவற்றிலுமே தீர்மானமான அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுவது இல்லை. தொடர்ச்சியான அழுத்தமான தனித்தனிக் கதைகள் வழியாக உருவாகும் ஒரு முழுச் சித்திரத்தைக் கொண்டே நாவலின் தரிசனம் நோக்கிப் போக முடிகிறது.

போரால் பாதிக்கப்படாத ஒரு மனிதனையாவது சந்திக்க விழையும் அருள்குமரனின் விழைவு நாவலின் முக்கியமானதொரு இழை. போரால் தன்னுடைய நீண்ட வாழ்விலிருந்து எந்த அர்த்தத்தையும் திரட்டிக்கொள்ள இயலாத, வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பிறரின் கருணையை எதிர்பார்த்தே நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் அற்புதத்தின் வாழ்க்கைச் சூழல் மற்றொரு இழை.

இதற்கிடையில் இன்னும் பலரும் தங்களுடைய நினைவுகளை மீட்டிச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்த் என ஈழம் கடந்த போர் பற்றிய சித்தரிப்புகளும் நாவலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. அவ்வகையில், கடந்துபோன ஒரு போரை விசாரணை செய்யும் ஒரு பிரதியாக ‘அஷேரா’வை வாசிக்க முடிகிறது. நாவலுடைய உணர்வுநிலையை வகுத்துக்கொள்ளும்படியான ஒரு தருணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். அற்புதம், முதல் தலைமுறை ஈழப் போராளி. ப்ளோட், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைப் பகைத்துக்கொண்டவர்.

ஒவ்வொரு தருணமாகத் தப்பித் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்துசேர்கிறார். அங்கு பல வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அருள்குமரனைச் சந்திக்கிறார். தொடக்கத்தில் அது ஒரு நல்ல நட்பாக அமைந்தாலும் ஒரு தருணத்தில் அருள்குமரன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று அறிந்த பிறகு, அவனே தன்னைக் கொலை செய்ய அனுப்பப்பட்டவன் என்று எண்ணிவிடுகிறார். தன்னைக் கொன்றுவிட வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சுகிறார்.

அருள்குமரனும் இயக்கத்திலிருந்து விலகியே சுவிட்சர்லாந்துக்கு வருகிறான். ஆனால், அவனையும் அவன் செய்தே இருக்காத ஒரு தவறின் நினைவு துரத்துகிறது. அருள்குமரனிடம் அற்புதமும் அபர்ணாவிடம் அருள்குமரனும் அடைக்கலமாக முயல்கின்றனர். இறுதிப் போர் முடிந்த பிறகு அல்லது போர்ச் சூழலிலிருந்து அதில் ஈடுபட்டவர்கள் தப்பிய பிறகும்கூட நினைவுகளில் போர்ச் சூழல் உருவாக்கிய பதற்றமும் நிச்சயமின்மையும் தொடரவே செய்கிறது.

‘ஆதிரை’ நாவலின் இறுதி அத்தியாயங்களிலும் இறுதிப் போருக்குப் பிறகான தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள் உண்டென்றாலும் ‘அஷேரா’வில் அந்தச் சித்தரிப்புகள் மேலும் உக்கிரம் கொள்கின்றன.

‘ஆறாவடு’ நாவலின் பகடித் தொனியும், ‘ஆதிரை’யின் விரிவும் ‘அஷேரா’வில் குறைவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், நாவல் தேர்ந்துகொண்ட வடிவத்துக்கும் எடுத்துக்கொண்ட பேசுபொருளுக்கும் இறுக்கமான இவ்வடிவம் பொருந்திப்போகவே செய்கிறது. ‘அஷேரா’ சயந்தனின் மற்றொரு நல்ல நாவல். ஈழ நாவல்களில் குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு முக்கியமான ஆக்கம்.

– சுரேஷ் பிரதீப், ‘ஒளிர்நிழல்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: sureshpradheep@gmail.com

By

Read More

× Close