அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின் அசலான முகங்கள் என்று தோன்றுகிறது. விடுதலைக்காக போராடும் இயக்கங்கள் கூட துரோகமும், வக்கிரமும், வெறியுமாக திரிவதை பார்க்கும்போது மனிதம் மீதான நம்பக்கையே அற்று போகிறது. மனித மனத்தின் அடியில் பொங்கும் க்ரூரத்தின் வடிகால்தான் இந்த போராட்டங்களா? வாழ்க்கையை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களை பழிவாங்கி, எதை சாதித்தார்கள்.

ஈழம் மட்டுமல்ல கதையில் வரும் மற்ற நாட்டு அகதிகள் சொல்வதெல்லாம் படிக்கையில் எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் தொங்குவது போன்ற உணர்வு. சக மனிதனிடம் இவ்வளவு வக்கிரத்தை காட்ட எப்படி முடிகிறது? ஒவ்வொரு முறை ஈழப்போராட்டம் பற்றி படிக்கும்போதும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு துயரப்படவேண்டும் என்று முடிவில்லாத ‘ஏன்’கள் வந்துகொண்டே இருக்கிறது. தீராத கேள்விகள்.. பதிலே கிடைத்தாலும் புரியாதென்றே தோன்றுகிறது.

அடுத்த முறை ஈழத்தை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியர்களிடம் முதலில் தமிழகத்தில் எத்தனை அகதிகள் முகாம்கள் இருக்கிறதென்று கேளுங்கள். எந்த நம்பிக்கை அவர்களை வருடக்கணக்காக இங்கே வைத்திருக்கிறது? தூக்கி வளர்த்த பிள்ளை உயிரோடு இருந்தால் போதுமென்றா? என்றைக்காவது எல்லாம் ஓய்ந்து நம் மண்ணிற்கே திரும்பி செல்வோம் என்றா? இப்படி ஒரு விதியா? இப்படி ஒரு வாழ்க்கையா?

ஆறாவடுவில் இறந்துபோகும் பெடியனும், அஷேராவின் அற்புதமும் எப்போதுமே மனதைவிட்டு அகலமாட்டார்கள்..

https://www.facebook.com/uma.anand.395/posts/5752479054777768

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *