சித்திரை பத்தொன்பது! மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து 10 வருடங்களாகிறது.
1995 சித்திரை பத்தொன்பதாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலித் தாக்குதல் மூலம் ரணசுறு, சூரயா என்ற இரண்டு கப்பல்கள் தகர்க்கப்படுவதோடு மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிறது.
94 இன் இறுதியில் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இரண்டாம் கட்ட ஈழப்போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது.
ஆனால் பேச்சுவார்த்தையின் நகர்வினூடே அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய ஹெலிகளில் எந்த விதமான அதிகாரங்களுமற்ற பிரமுகர்கள் வந்து இறங்கினார்கள். பேச்சுவார்த்தைகளின் முடிவில் முடிவெதனையும் எடுக்க முடியாதவர்களாக, அனைத்தையும் அரச தலைமைக்கு அறிவிக்கிறோம் என ஏறிச் சென்றார்கள்.
மீண்டும் வந்தார்கள். மீண்டும் சென்றார்கள். பேச்சு வார்த்தை என்ற பெயரில் இந்தக் கூத்து தொடர்ந்தது.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அப்படியே தான் இருந்தன. யாழ்ப்பாணத்திற்கான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக நீக்கப்படாமல் அப்படியே தான் இருந்தது. இன்னமும் ஆபத்து நிறைந்த கிளாலி கடனீரேரியூடாகத் தான் மக்கள் பயணம் செய்தனர்.
இவ்வாறான மக்களின் அடிப்படை பிரச்சனைகளே முதலில் தீர்க்கப்பட வேண்டியவை என புலிகள் தரப்பு வற்புறுத்திய போதும் அரசு அதனை அசட்டை செய்தது.
பொருளாதார தடைகளை நீக்கி, மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பூநகரி இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரை சற்று பின்னகர்த்துமாறு புலிகள் கோரிக்கை முன்வைத்தனர்.(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)
அரசு அதனை நிராகரித்தது. பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக புலிகள் அறிவிக்க மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் தமிழர்கள் சந்தித்த இழப்புக்கள் அதிகமானவை. ஒரு இரவில் 5 லட்சம் மக்கள் தம் வேரிலிருந்து பிடுங்கியெறியப்பட்டது இக்காலத்தில்த் தான்.
இராணுவ படையெடுப்புகளுக்கும், குண்டு வீச்சுக்களுக்கும் அஞ்சி இருக்க இடம் இல்லாமல் வீதிகளிலும், மரநிழல்களிலும், கோயில்களிலும், காடுகளிலும் அவர்கள் தஞ்சம் புகுந்திருந்தமை இக்காலத்தில்த்தான்.
அதே வேளை யாழ்ப்பாண இழப்பு உட்பட ஆரம்ப பின்னடைவுகளிற்கு பின்னர் போரியல் உலகம் வியக்கும் தொடர் வெற்றிகளை புலிகள் பெற்றுக் கொண்டதும் இக்காலத்தில் தான்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தொடர் சண்டையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கும் யுத்தம் என்ற பெயரில் தமிழர் வாழ்விடங்களை அழித்து முன்னேறியிருந்த இராணுவத்தினரை (தெற்காசியாவில் அண்மைக்காலங்களில் அதிக நாள் நடந்த சண்டை அது) இரண்டு நாட்களில் விரட்டி அடித்து அவர்களது பழைய நிலைக்கு அனுப்பிய அதியுச்ச வியப்புச் சமர் இக்காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது.
ஆனையிறவென்கின்ற யாராலும் அசைக்க முடியாதென அமெரிக்க ராணுவ தளபதிகளே சொன்ன நிலத்தை வென்றெடுத்ததும் இதே ஈழப்போரில்த்தான்.
புலிகளைப் பொறுத்தவரை தமது இராணுவ கட்டமைப்பிலும் பல உயரங்களை இக்காலத்தில் தொட்டிருக்கிறார்கள்.
விமான எதிர்ப்பு பீரங்கி படையணி என்னும் கட்டமைப்பின் ஊடாக ஏவுகணைப் பயன்பாட்டினை புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அப்பாவி மக்களின் அழிவுக்கும் புலிகளின் இழப்புக்களுக்கும் காரணமாயிருந்த விமான குண்டு வீச்சுக்கள் ஓரளவுக்கு தடுக்கப்பட்டன. அதன் பின்னரே ஈழ வான் பரப்பில் சிங்கள அரச விமானங்களின் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
96 இல் முல்லைத் தீவு ராணுவ முகாம் தாக்குதலோடு நீண்ட தூர எறிகணைகளான ஆட்லறிகளை கைப்பற்றியதன் ஊடாக இன்னொரு படிநிலையில் கால் பதித்தார்கள்.
இன்றைக்கு அரச மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற விமானப்படை தோற்றமும் இதே காலத்தில் தான் நிகழ்ந்தது. (நேற்றும் கிளாலி கடற்பரப்புக்கு மேலாக விமானமொன்று வன்னிப்பகுதிக்கு சென்று மறைந்ததாக இராணுவ தரப்பு சொல்கிறது.)
மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்க முன்பு சந்திரிகா அரசு என்ன செய்ததோ அதனையே இப்பொழுதும் செய்கிறது. அதே இழுத்தடிப்பு.. அதே காலங்கடத்தல்..
ஆனால் புறச் சூழ்நிலை மாறியிருக்கிறது. இப்பொழுது உலக நாடுகளிடம் புலிகள் தொடர்பான நன்மதிப்பும், வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அதனை மிகச் சரியாக புலிகளும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
புலிகளைச் சீண்டி யுத்தத்திற்குள் இழுக்க திட்டமிட்டே அரச இராணுவம் முயல்கின்ற போதும் பொறுமை காக்கின்ற புலிகளின் இயல்பு ஆச்சரியமளிக்கிறது. தமது அரசியல் விவேகத்தினை மிகத் திறம்பட புலிகள் வெளியுணர்த்துகின்றனர்.
வெளிப்படையாகவே என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாது முழிக்கும் அரச கபடத்தை தோலுரித்து உலகெங்கும் புலிகள் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இனி….
யுத்தம் ஒன்றை யாருமே விரும்பவில்லை. யுத்தம் செய்பவர்கள், யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்தவர்கள் என எவருமே விரும்பவில்லை. ஒரு வேளை யுத்தமொன்றே யதார்த்த நிலையிலும் சரியான தீர்வாக இருக்குமென்ற நிலை வரின்…
அவ்வாறான யுத்தம் ஒன்றைத் தொடங்கச் சொல்வதற்கான முழு உரிமையும் யுத்தம் செய்பவர்களுக்கும், அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்ற மக்களுக்குமே உண்டு!
மாறாக தனிமனித வாழ்நிலை மேம்படுத்தலுக்காக தேசங்கள் தாண்டி வந்து, விருப்பப்பட்டும், விரும்பாமலும் மாசாமாசம் காசு கொடுத்து விட்டு அங்கே என்னவாம் நடக்குது என செய்திகளில் தேடி.. உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.