அரசியல்

பனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா?

சாதியத்தை வெறுமனே வர்க்கப் பார்வையற்று அணுகிவிட முடியாது. நிலத்தின் மீதான அதிகாரம் சாதியத்தை தக்கவைக்கும் இன்னொரு விடயமாகும்.
புலிகள் குடிமைத் தொழிலை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலத்திற்குச் சமாந்தரமாக சாதிய அசமத்துவத்தின் வேர் சொத்துடைமையுடன் தொடர்புடையது என்ற கோணத்தில் ஆதாரம் சஞ்சிகையில் 1992 ஜனவரி, மார்ச் இதழ்களில் தொடங்கப்படட உரையாடல் இது.

கோழி வளர்ப்பு தனியொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலல்ல. விவசாயமும் அப்படியே. எந்தச் சாதியும் விவசாயம் செய்யலாம். கால்நடை வளர்ப்பும் சாதிக்கென்று வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எந்தச் சாதியும் கால்நடை வளர்க்கலாம். ஆனால் அந்தோ பரிதாபம். பனையுடன் தொடர்புபட்ட பிரதான தொழில்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அத் தொழிலும் அச்சாதியும் குறைந்த சமூக அந்தஸ்த்து உள்ளதாக கருதவும் படுகிறது. இதுதான் இங்குள்ள பிரச்சனையாகும்.


புலிகளுடைய ஆதாரம் இதழில் 1992இல் வெளியான கட்டுரை

இச் சாதிக் காரணி எவ்விதம் தோற்றம் பெற்றது. இன்று எவ்விதம் செயல்படுகிறது. சாதியின் கோரப்பிடியில் இருந்து பனை என்ற இந்தக் கற்பகதருவை விடுவிக்க அவசியமான சமூக பொருளாதார நிலமைகள் என்ன என்பவற்றை தொடர்வோம். 

ஐரோப்பிய வருகையின் போதான யாழ்ப்பாண சாதி அமைப்பு 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை ஆண்டான்களையும் அடிமைகளையும் கொண்டாய் இருந்தது. ஆண்டான்களாக (அடிமைகளின் சொந்தக்காரர்களாக) இருந்த மேற்தட்டினர் உயர் சாதியினர் எனக் கருதப்பட்டவர்காளக இருந்தார்கள். 

அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது

முன்னைய அடிமை முறையினை ஆராய்ந்த சட்ட அறிஞர்கள் இது றோமானிய அடிமை முறையுடன் ஒப்பிடக் கூடியதாய் இருந்தது என்று கூறியுள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து அடிமைகள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட அடிமைகளாகவே கருதப்பட்டார்கள். அடிமைகளும் கால்நடைகளும் நிலத்துடன் தொடர்புபட்ட ஒரு சொத்தாகவே கருதப்பட்டனர். 

அடிமைகளிலும் விட ஒரு சிறு அளவு சுதந்திரமுடைய குடிமைகளும் இருந்தார்கள். இந்த அடிமை குடிமைகளின் வழித்தோன்றல்களே பின்னைய ஒடுக்கப்பட்ட சாதியினராகும். 

முன்னைய ஆண்டான்களின் வழித்தோன்றல்களே இன்று ‘உயர்சாதியினர்’ என்று கருதப்படும் வெள்ளாளராகும். 

இந்த ‘உயர்சாதியினர்’ ஆண்டான்களாகவும் (அடிமைச் சொந்தக்காரர்களாகவும்) அதே நேரத்தில் நில உடமையாளர்களாகவும் ‘நயினார்’ என்றும் ‘கமக்காரர்’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். 

யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலஉடமைமுறை றயத்வாரி முறையை ஒத்ததாகும். ஐந்தோ பத்தோ வீதமானவர்களுக்கு எண்பதோ தொன்னூறோ வீதமான நிலம் சொந்தமாய் இருப்பது ஜமின்தாரிய முறை எனப்படும். அவ்விதமான ஜமின்தார்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மாறாக நாற்பதோ ஐம்பதோ வீதமானவர்களுக்கு சுமார் தொன்னூறு வீதமான நிலம் சொந்தமாய் இருந்தது. மீதிப்பேர் நிலம் இல்லாதவர்களாகும். இந்த நிலம் இல்லாதவர்களில் ஒரு பகுதியினர் இந் நில உடமையாளர்களில் சார்ந்து வாழ்ந்தார்கள். இவ்வித நில உடமை முறையே றயத்வாரி முறையாகும். இவ்விதம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அடிமைகளாகவும் குடிமைகளாகவும் இருந்ததே யாழ்ப்பாணத்தின் விசேட குணாம்சமாகும். 

யாழ்ப்பாணத்தின் இந் நில உடமையாளர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான தனி ஒரு சாதியாகவும் ‘உயர்சாதியாகவும்’ ஆண்டான்களாகவும் இருந்தார்கள். இதனால் இச்சாதியே அனைத்து வழியிலும் சமூக ஆதிக்கம் பெற்ற சாதியாக இருந்தது. 

எமது கவனத்திற்குரிய அக்காலகட்டத்தில் ஏராளமான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருந்தன. பனங்காடுகளும் இவற்றில் உள்ளடங்கும். காணியில் தனி உடமையை நிலைநாட்டுவதற்கு இறுக்கமான சட்டங்கள் இருக்கவில்லை. சாதி அமைப்பும் ஆண்டான் அடிமைச் சமூக ஒழுங்குகளுமே மிகச் சக்திபெற்ற எழுதாச் சட்டமாக இருந்தது. இதன்படி அனைத்துக் காணிகளும் வெள்ளாளரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. 

பனையும் பனங்காணியும்கூட இந்த ‘உயர்சாதியின்’ கட்டுப்பாட்டிலேயே இருந்தன. தானே உதிர்ந்து விழும் பனம்பழங்களையும், பனை ஓலைகளையும், பனைகளையும் கூட இவர்களின் அனுமதியின்றி யாரும் எடுக்கமுடியாது. ஏராளமான பனை வளவுகள் அடிவளவுகள் என்றே அழைக்கப்பட்டன. இவ் அடி வளவுகளில் ‘அடிக்கு’ அல்லது ‘வெளிக்கு’ மலசலம் கழிக்கப் போவதாலும்கூட கமக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருந்தது. 

கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது.

அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது. 

கள்ளோ அல்லது கருப்பணியோ ஒரு விற்பனைப் பண்டமாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்வதானால் பனைக்கு ஒரு பணப்பெறுமானம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. பனை சீவல், ஓலை வெட்டுதலழ, பனைமரம் பிளத்தல், சிலாகை அறுத்தல், பெட்டி கடகம் பொத்துதல் போன்ற தொழில்கள் கூலி எதுவும் இன்றி அடிமைகளைக்கொண்டே செய்யப்பட்டன. ஆகையால் இவ்விதம் பெறப்பட்ட பொருட்கள் ‘உயர்சாதியினருக்கு’ சொந்தமானதாகவே இருந்தன. இவர்களே யாழ்ப்பாண எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள் என்றபடியாலும், அடிமை குடிமைகள் சுதந்திரமாக எதையும் கொள்வனவு செய்யும் உரிமை அற்றிருந்தபடியாலும் இப்பொருட்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறவில்லை. இதனால் பனம்படு தொழில்களில் ஒரு வளர்ச்சி ஏற்படவில்லை. 

உணவுப்பழக்கத்தைப் பொறுத்தவரையிலும்கூட நிலஉடமை சாதி ஒருவிதமான உணவையும் அடிமைகள் குடிமைகள் ஏனைய சாதியினரும் வேறோர் விதமான உணவையுமே பயன்படுத்தினார்கள். விளைவிக்கப்பட்ட அனைத்து நெல்லும் ‘உயர்சாதியினரின்’ சொந்தமாகவே இருந்தது. இதை அவர்கள் தமது உணவாக மாத்திரமே் பயன்படுத்தவில்லை. இதுவே வர்த்தக பண்டமாற்றுப் பொருளாகவும் பயன்பட்டது. நெல்லை விலையாகக் கொடுத்தே இந்தியாவிலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டுள்ளனர். ஐரோப்பியர்களுக்கு நெல்லு வரியாகவும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல்லை ‘உயர்சாதியினர்’ தமது கைகளில் இருந்து விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணத்தினால் அரிசிச் சோறு ஒரு ‘உயர்சாதி’ உணவாகியது. குரக்கன், சாமி, மரவள்ளிக்கிழங்கு, பனாட்டு போன்றவை சாதித் தரம் குறைந்த உணவாகின. 

19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானியர் கொண்டுவந்த சில சட்டங்களால் அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள். மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்கும் முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அடிமை குடிமை சாதி அமைப்பு தொடர்ந்தது. 

அதேபோல் அதே காலப்பகுதியில் நிலத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டக்கூடியதும் தனிநபர் உடமை முறையே ஒரே வகை உரிமை உடமை முறையாக இருக்கக் கூடியதுமான சட்டங்கள் ஆக்கப்பட்டன. இச்சட்டத்தின் பின் ஏராளமான தரிசு நிலங்களும் அடிவளவுகளும், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரின் குடியிருப்புக் காணிகளும் ‘உயர் சாதியினரின்’ தனி உடமை ஆகின. ‘உயர்சாதியினருள்ளே’ மிகச் சில மட்டும் பெரும் நில உடமையாளராக மாறும் புதிய நிலை தோன்றியது. ஆங்கிலம் தெரிந்தோரும் பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டோருமே அந்த மிகச்சிலராகும். 

இச்சட்டங்கள் உயர்சாதியினருக்கும் அடிமை குடிமை சாதியினருக்கும் இடையில் இருந்த தொடர்பில் சட்டரீதியான சில மாற்றங்களை ஏற்படுத்தியதே தவிர நடைமுறையில் பிரதானமாற்றங்கள் எதையும் கொண்டுவரவில்லை. 

ஆனால் சில மாற்றங்கள் ஏற்படவே செய்தன. பிரித்தானியாவின் புதிய சட்டங்களால் ‘உயர்சாதியினரிடையே’ பாரிய வர்க்கவேறுபாடுகள் தோன்றின. ஒரு புறத்தில் சிறு அளவான பெரும் நிலஉடமையாளர்களும், மறுபுறத்தில் சுமாரான அளவிலான ஏழை விவசாயிகளும் தோன்றினார்கள். இவ்விவசாயிகள் தமது பனைகளை ஓரளவு சுதந்திரமாக்கினார்கள். அதாவது சீவலுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடிமைத் தொழிலாளர் மத்தியில் இருந்து சுதந்திர தொழிலாளர் உருவாகும் நிலை தோன்றியது. இவ் ஏழை விவசாயிகள் தமது உழைப்பைக்கொண்டே தமது தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதனால் பனையுடன் தொடர்புபட்ட சிறு குடிசைக் கைத்தொழில்களை தாமே மேற்கொள்ளவும் அவற்றை தாமே விற்கவும் தலைப்பட்டார்கள். 

இக்காலப்பகுதிக்கு முன்வரை, கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது. இந்தக் கட்டத்தில் பனை சாதி அமைப்பின் நெம்புகோலாக மிகத்திறம்பட பயன்பட்டு வந்தது. 

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தமிழீழ தேசியவாதத்தின் எழுச்சிவரை (1980கள் வரை) பனை ஏக காலத்தில் சாதி அமைப்பின் நெம்புகோலாகவும், ஆப்பாகவும் செயற்பட்டு வந்தது. 

19ம் நூற்றாண்டின் கடைசி சகாப்தமும் 20ம் நூற்றாண்டின் முதற் பாதியும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய கட்டங்களாகும். காலனிக்குப் பிந்திய யாழ்ப்பாணப் பொருளாதாரத்திற்கான அடி அத்திவாரங்கள் இடப்பட்டது இக்கால கட்டத்திலேயாகும். பிரிட்டிஷ்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்போது அடிமை குடிமை முறை நிலவியது உண்மை. ஆனால் பெரும் நில உடமையாளர்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. பிரித்தானியர் கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக பல பத்தாயிரக்கணக்கான ஏக்கர் மலைநாட்டுக் காணிகளை மலிவான விலைக்கு “கொள்வனவு” செய்தார்கள். இக் “கொள்வனவை” சாத்தியப்படுத்துவதற்காக பல புதிய சட்டங்களை 1880களில் பிறப்பித்தார்கள். 

மிகக்குறுகியகால அவகாசத்துள் நிலம் தமது உரிமை என்பதை இலங்கைப் பிரஜைகள் ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கும்படி சட்டரீதியாக ஆணை பிறப்பித்தார்கள். இவ்விதம் நிரூபிக்கப்பட முடியாத காணிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அரசுடமை ஆக்கப்பட்ட காணிகள் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கும் ஏனைய பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்குமாக பிரித்தானிய பிரஜைகளுக்கும் பிரித்தானிய காலனித்துவவாதிகளுடன் ஒத்துழைத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் மலிவான விலையில் விற்கப்பட்டன. 

இலங்கைத் தீவு முழுவதற்கும் செல்லுபடியான இந்தச் சட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் செயற்படுத்தப்பட்டன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் புகையிலை மாத்திரமே யாழ்ப்பாணத்தின் பிரதான பணப்பயிராக இருந்தது. இதனால் நிலம் ஒரு வர்த்தக பண்டமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அடிமை குடிமைகள் நிலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் நில உடமை முறையில் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்ததே தவிர மற்றும்படி நிலமானது வர்த்தக மதிப்பு அற்றதொன்றாகவே இருந்தது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பனங்காடுகள் கூட தேடுவாரற்றுக் கிடந்தன. 

கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும்.

பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களால் இப்பனங்காடுகள் சிலதொகையான  ‘மேட்டுக்குடியினரின்’ கைகளுக்குள் சென்றடைந்தன. அவர்களின் தனிச் சொத்தாகின. ஆங்கில அறிவும், அதனுடன் அரசாங்க சட்டதிட்டங்களைப்பற்றிய புரிதலும் பெற்றிருந்த உடையார், மணியகாரர், முதலியார் குடும்பங்கள் காணிகள் தமது என்பதை நிரூபிப்பதற்கு அவசியமான சட்ட ஆவணங்களை குறுகிய கால இடைவெளிக்குள் தயாரிப்பதில் அபார வெற்றி பெற்றார்கள். படிப்பறிவில்லாத ஏனைய மக்களை ஏமாற்றி அவர்களின் பயன்பாட்டில் இருந்த காணிகளை தமதாக்கிக் கொண்டார்கள். பணத்தினை கடனாகக் கொடுப்பது, பஞ்சத்திற்கு உணவு கொடுப்பது, வெளிநாட்டுக் குடிவகை கொடுப்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளையும் பின்பற்றி அம்மக்களை ஏமாற்றினார்கள். 

இவ்விதமாக யாழ்ப்பாணத்தில் சட்டரீதியான ஒரு நிலக்கொள்ளை நடைபெற்றது. பெரும் நில உடமையாளர்கள் என்ற புதியதோர் வர்க்கம் தோற்றம் பெற்றது. யாழ்ப்பாணம் வர்க்க ரீதியாகபிரிபடும் போக்கில் ஒரு திடீர் பாய்ச்சல் ஏற்படுகின்றது. 

இந் நிலக்கொள்ளைக்கும் பனைக்கும் என்ன தொடர்பு..? நிறையத் தொடர்பு உண்டு. பிரித்தானியரால் விடுவிக்கப்பட்ட அடிமைச் சாதிப்பிரிவினரும், குடிமைச் சாதிப்பிரிவினரும், இடைநிலைச் சாதிப்பிரிவினரும், நிலவுடைமையாளர்களாக மாறியோர் தவிர நொந்துபோன நிலையில் இருந்த ‘வெள்ளாளரும்’ பனங்காணிகளையே தமது குடியிருப்புக் காணிகளாகவும் அடிவளவுக் காணிகளாகவும் பயன்படுத்தி வந்தார்கள். அதில் விழும் பனம் பழம், பனை ஓலை போன்றவற்றை தாம் அனுபவித்தும் வந்தார்கள். இதனால் பனம்படு பொருட்களின் பாவனை நொந்துபோன மக்கள் மத்தியில் ஒரு வழமையாக இருந்தது. 

நிலக்கொள்ளையைத் தொடர்ந்து நிலமும் அதில் உள்ள பனை மரங்களும் பெரும் நில உடமையாளர்களின் சொத்தாக மாறுகிறது. குடியிருக்கவும், அடிவளவாகப் பயன்படுத்தவும், பனம்பொருட்களை அனுபவிக்கவும் நில உடமையாளர்களின் அனுமதி பெறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பனையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பனை அடிமைப்படுத்தப்படுகிறது. பனை என்ற இயற்கைத் தாவரம் சமூக பொருளாதார அர்த்தத்தில் இயற்கைத்தாவரம் என்ற நிலையை இழக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரும், பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள ஏனைய சாதிப்பிரிவினரில் பெரும்பான்மையோடும் ஏதோ ஒரு வழியில் ‘உயர்சாதி மேட்டுக்குடி நில உடமையாளர்களில் தங்கி நிற்க வேண்டிய சமூக பொருளாதார நிலமை தோற்றுவிக்கப்படுகிறது. 

ஆம். இங்கு அடிமைப்படுத்தப்பட்ட பனை, சாதியின் நெம்புகோலாகச் செயற்படுகிறது. கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும். இல்லையேல் வேறு ஆட்களைப் பயன்படுத்தி பனம் பாளைகள் வெட்டி வீழ்த்தப்படும். 

தொடரும்..

By

Read More

பூம்புகார் – கிராம முன்னேற்றத்திட்டம்

தமிழீழத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எமது மக்களின் வாழ்விடங்கள் நகரம், கிராமம், குறிச்சி என வகைப்படுத்தப்படுகிறது. இவைகள் ஒன்றுக்கொன்று சமனான வளர்ச்சி அடைந்தவையும் அல்ல. சமுதாயத்தில் சமனாகக் கணிக்கப்படுபவையும் அல்ல. தமிழ் சமுதாயத்தின் சமூக வடிவம் பல முரண்பாடுகளைக் கொண்டது. சமூக வர்க்க வேறுபாடுகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய முரண்பாடுகளையும் கொண்டதாய் அமையப்பெற்றது. அப்படிப்பட்டதோர் நிலையிலேயே இன்றைய சமூக வாழ்வு இருக்கிறது.

தமிழீழத்தின் வளங்கள் பொதுவாக ஒன்றுதான். மனிதர்களும் ஒரே இனத்தோர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமூக ஒடுக்குமுறை – பொருளாதார ஒடுக்குமுறை காரணமாக ஒரு பகுதி மக்கள் முன்னேற முடியாதபடி – தஙகள் வாழ்வு நிலைகளை உறுதிப்படுத்த முடியாமல் ஒதுக்கப்பட்டார்கள்.

இத்தகையை மக்கள் கல்வி வாய்ப்பை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி சமூகத்தின் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

இப்படியாக ஒடுக்கப்பட்ட சமூக அந்தஸ்த்து குறைந்த மக்கள் வெளிப்படையாக சீரற்ற குடிசைகளையும், குடிநீர் போக்குவரத்து வசதியற்ற வாழ்விடத்தையும் கொண்டிருந்தனர். கந்தல் உடையுடனும் பரட்டைத் தலையுடனும் கல்வியறிவற்று இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் இவ்வாறாக அல்லது இதில் சிறுது வித்தியாசத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மக்கள்தான் இந்த மண்ணின் ஆணிவேராகப் பாய்ந்து நிற்கிறார்கள். இந்த மண்ணுடன் பிரிக்க முடியாமல் பிணைந்து நிற்கிறார்கள். எத்தகைய சூழலிலும் தங்கள் மண்ணை விட்டு ஓடாமல் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த மண்ணின் பசளையாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த மக்களின் பலத்தை, பலவீனத்தை, இவர்களின் நிலையை எமது இயக்கம் நீண்ட அரசியல் சமூக பொருளாதார ஆய்வுகளுக்கு ஊடாகவும் அனுபவங்களுக்கு ஊடாகவும் உணர்ந்துள்ளது.

இந்த மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடுதலை என்பதே எமது தேசத்தின் முழுமையான விடுதலை என்பதை ஏற்றுக்கொண்டு எமது இயக்கம் இதற்கான அரசியல் செயற்திட்டங்களை முன் வைக்கிறது. இப்படிப்பட்ட பல செயற்பாடுகளை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். முதலாவதாக யாழ் நகரத்தை அண்டியுள்ள அரியாலைப் பகுதியில் இருக்கின்ற பூம்புகார் கிராமத்தில் எமது அரசியற் செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.

பூம்புகார் கிராமம் ஒரு புதைமணல் வீதியில் ஆரம்பித்து அவ்வீதியின் முடிவுடன் முடிகிறது. ஒரு புறத்தே கடலை எல்லையாகக் கொண்டு நிற்கும் அந்தக் கிராமத்தின் வளமாக கடலும், தென்னைகளும், பனைகளும் இருக்கின்றன. மற்றும்படி மணல் நிறைந்த பூமி. பெருமளவிலான மூலதனமற்ற கூலித் தொழிலாளர்களையும் சிறியளவிலான கடல்தொழிலாளர்களையும் கொண்டு அக்கிராமம் இருக்கின்றது.

பூம்புகார் கிராமத்தில் உள்ள பிள்ளைகளில் பலர் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. பாடசாலைக்குச் செல்பவர்களிலும் பெரும்பாலானவர்கள் பள்ளிப்படிப்பை இடைநடுவில் விட்டுவிடுவார்கள். இதற்குக் காரணம் – பாடசாலை, கிராமத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்தது. போக்குவரத்து வசதி இவர்களுக்கு முற்றாக இருக்கவில்லை. வைத்தியசாலை 8 மைல் தொலைவில் இருந்தது. இதற்கெல்லாம் மேலாக கிராமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையுள்ள 1 கி மீற்றர் நீளமான வீதி புதைமணலாக இருந்தது. இந்தப் புதை மணல் வீதியில் நடப்பதற்கு இந்தக் கிராமத்தவர்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.

பூம்புகார் கிராமத்தவர்கள் பொதுவாக வறுமையில் வாடினார்கள். கடல் அருகில் இருந்தது. ஆனால் தொழில் செய்யக்கூடிய உபகரண வசதிகள் அவர்களிடம் இல்லை. அவற்றைப் பெறுவதற்குரிய பணவசதியும் இல்லை. வலை இன்றி மீன்பிடிக்க முடியாது. அதே மாதிரித்தான் மற்றத் தொழிலாளர்களும் நிரந்தரமற்ற கூலி வேலையையே செய்து வந்தனர்.

வேலையற்ற நாட்களெல்லாம் இவர்கள் எல்லோருமே பட்டினியால் வாழவேண்டி இருந்தது.

இந்தக் கிராமத்தைப் பார்த்ததுமே, இங்கு வாழும் அறியாமை இருளை நீக்க வேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது இயக்கம் முடிவெடுத்தது. இதற்காக செல்வி. மிதுலாவின் தலைமையில் விடுதலைப்புலிகள் மகளிர் அணியினரின் ஒரு குழு அங்கு முகாமிட்டது.

எமது மகளிர் அணியினர் அந்தக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை கவனித்து நிவர்த்தி செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் உடனடியாக கிராமத்தின் மணல் வீதியை செப்பனிடத் தொடங்கினார்கள். பெருமளவு அந்தக் கிராமத்தவரின் பங்களிப்போடு அந்த வீதி மிக விரைவாக செப்பனிடப்பட்டது. இன்று சகல வாகனங்களும் வந்துசெல்லக்கூடிய வீதி ஒன்று அந்தக் கிராமத்தவர்களுக்கு உண்டு. அதே நேரம் மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.

அந்த வகையில் இன்று 5ம் ஆண்டுவரையானதொரு பள்ளிக்கூடம் சிறந்த கட்டிட வசதிகளுடன் இங்கு எழுந்துள்ளது. இதனால் இக்கிராமத்து மாணவர்கள் தங்கள் கிராமத்திலேயே சிரமமின்றித் தொடர்ந்து கல்வியைக் கற்கும் வசதி ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தின் வாழ்க்கைத்தரம் உயருவதற்கு தொழில் வாய்ப்பு அவசியமானது. அந்த வகையில் அக்கிராமத்தின் மூல வளங்களை அடையாளங்கண்டு அதற்கேற்ற தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது அவசியமானது.

பூம்புகார் கிராமத்தைப் பொறுத்தவரை அருகில் கடல் இருக்கிறது. கடல் தொழிலுக்குரிய வசதிகளைச் செய்துகொடுத்தால் இக்கிராமத்தின் ஒரு பகுதியினர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆகவே இதற்குரிய முன்னேற்பாடுகளை எமது மகளிர் அணியினர் செய்து வருகின்றார்கள். இதே போன்று இங்கு தென்னைகள் நிறைய நிற்கின்றன. எனவே இங்கு ஓர் தும்புத் தொழிற்சாலையை எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். இத் தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர்வரை வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இவற்றுடன் பெண்களுக்கென முப்பது பேருக்கு பன்ன வேலைப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல கைத்தொழில்களை பயிற்றுவிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பூம்புகார் கிராமம் தன் விடிவை நோக்கிய பாதையில் இப்போது நடக்கத்தொடங்கி உள்ளது.

இவ்வேலைத் திட்டத்தை நிர்வகிக்கும் செல்வி மிதுலா குறிப்பிடுகையில் பூம்புகார் கிராமத்தில் நாம் பல வேலைத் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் இந்த வேலைத் திட்டங்களைச் செய்வதனால் அந்தக் கிராமத்தில் அவல நிலை மாறிவிட்டது என்றில்லை. உண்மையில் சொல்வதானால் இந்தக் கிராமம் முன்னேறுவதற்குரிய வேலைத் திட்டங்களை இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம். எங்கள் இலக்கு இன்னமும் தொலைவில்தான் இருக்கிறது. இனிமேல்தான் இந்தக் கிராம முன்னேற்றத் திட்டம் இடையூறுகளையும் சிரமங்களையும் சந்திக்கவேண்டிவரும். அதற்கு உள்ளாகவும் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இக்கிராம மக்களின் ஆர்வம், கடின உழைப்பு, முன்னேற வேண்டுமென்ற உறுதி அந்த நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது என்றார்.

By

Read More

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார்.

தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன்

Gaza, July 9, 2014
பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.

மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை.

குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியழிக்கத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த வாரத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஜெருசலேத்தில் கொலைசெய்யப்பட்டார். இவையனைத்தும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன.

இப்பிரதேசத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு இஸ்ரேலின் பொறுப்பான பதிலுக்காகக் காத்திருந்த மக்கள், முதல்நாள் தாக்குதலிலேயே தாம் இலக்குவைக்கப்பட்டதில் உறைந்துபோயினர். ஆம், 365 சதுரகிலோமீற்றர் பரப்பும், 1.7 மில்லியன் மக்கட்தொகையும் கொண்ட காஸா நிலத்துண்டில் இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கில் குண்டுகளை வீசத் தொடங்கினார்கள். ஆகாய வழி ரொக்கெற் வீச்சுக்களிலும் குண்டுகளின் பெருவெடிப்புக்களிலும் எங்களுடைய உடல்கள் குலுங்கி அதிர்ந்தன. இதயங்கள் நொருங்கித் துகள்களாயின.

இந்த யுத்தம் எத்தனை நாட்களைத் தின்னும்..? 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா..? அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. ? இவற்றைவிட அதிக நாட்களா.. அல்லது சிலநாட்களுக்கா.. எது எப்படியோ இன்று முதல்நாள்.

Mideast Palestinians-Living Under Blockadeநேற்றிரவு ஒரு மணிநேரம்கூட என்னால் உறங்கமுடியவில்லை. வேவு விமானங்களின் இரைச்சலுடனேயே இரவு கழிந்தது.தலைக்கு மேலாக விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. புனித ரம்ஜான் மாதமென்பதால் நோன்பை முடித்து இரவிலேயே உணவு உட்கொள்வது வழமை. இரவிலிருந்தே குண்டுவீச்சுக்களும் தீவிரமடையத் தொடங்கின. இராணுவ நிலைகளையும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலியப் படைகள் குறிவைப்பதாக செய்தியில் சொன்னார்கள். விடியற்பொழுதில் இறுதியாகக் கண் சொருகும் வரைக்கும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரைச்சல்களுக்கும் வெடியோசைகளுக்கிடையும் ஓரிரு மணிநேரம் தூங்கமுடிந்தது. ஓரிரு மணிநேரம்தான். திடீரென பூமி அதிர்வது போல, படுக்கையும் வீடும் அதிர்ந்தன. மார்புக் கூட்டிலிருந்து இதயம் துள்ளி விழுந்தாற்போல உணர்ந்தேன். மூச்செடுக்கவும் மறந்த கணம் அது.

காலை துயரச்செய்திகளோடேயே விடிந்தது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்தனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகின.

வடக்குக் காசாவில் ‘அபுகவெராவின்’ குடும்பத்தில் குழந்தைகளுட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். கூரையின்மீது கூடி நின்று தாம் அப்பாவிமக்கள் என்பதை அடையாளப்படுத்தினால் தாக்குதலிலிருந்து தப்பமுடியுமென்று அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எதிரிப்படைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியுமா.. அவர்களுடைய விமானங்கள் மிகச் சாதாரணமாக ஏவுகணைகளை வீசின. படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வீட்டோடு சமாதியான புகைப்படங்கள் நெஞ்சை உருக்கின.

பலஸ்தீன வானொலிச் சமிக்ஞைகளை இடைமறித்து அவற்றில் தம்முடைய செய்திகளை இஸ்ரேல் இராணுவம் ஒலிபரப்பியது. பலஸ்தீனர்கள் தம்முடைய வீடுகளைக் காலிசெய்து பாதுகாப்பாக வெளியேற வேண்டுமாம். எங்ஙனம் சாத்தியம்.. ? காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம்.?முற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமா? தரையிலிருந்து சீறும் எறிகணைகளையும் வானத்தை மங்கச் செய்யும் விமானங்களையும் கடந்து பாதுகாப்பான வெளியேற்றம் எங்ஙனம்..?

இரவு பரவி விட்டது.நோன்பை முடித்துக்கொள்வதற்காக வானொலிகளை நிறுத்தி அமைதித் தருணங்களை முயற்சித்தோம். சாத்தியமானதுதானா அது..? விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. ? நாம் தொழுகை அழைப்பிற்காகக் காத்திருந்தோம். சோர்ந்த இதயத்தோடும் நீர்வழிந்தோடும் கண்களோடும் கைகளை மேலுயர்த்தித் தொழுதோம். இந்நாளில் தம்முடைய பிரியமான உறவுகளை இழந்தவர்களுக்காகவும், தம் வீடுகளைக் கண்முன்னே பறிகொடுத்தவர்களுக்காகவும், இறைவனைத் தொழுதோம். இன்றைய வலி மிகுந்த காட்சிகளை நினைவிற் கொண்டோம். இன்றைய முழுநாளும், இது யுத்தத்தின் முதல்நாள் என்ற நினைவு பரவியிருந்தது. இன்னமும் எத்தனை நாட்களை இது தின்னும்.. ?

இன்றைக்குப்பகல், தெற்கு இஸ்ரேல் நகரத்திலுள்ள இஸ்ரேலிய கடற்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹமாஸின் இராணுவப்பிரிவான அல்கஸாம் (Al-Qassam)தெரிவித்தது. இஸ்ரேலினுள்ளே சில மைல்களை எட்டும் உள்ளுார்த் தயாரிப்பு ரொக்கெற்றுக்கள், அப்பகுதி இஸ்ரேலியரைத் திகிலடையச் செய்திருக்கும். இச்செய்தி சிறுநம்பிக்கையை அளித்தது. ஆம். மிகக் கொடுமையான மௌனத்தை சர்வதேசம் கைக்கொள்ளும் இவ்வேளையில் அநியாயங்களைச் சகித்துக்கொண்டு மௌனமாயிருக்கத் தயாராயில்லாத புரட்சியாளர்கள் நம்முடனுள்ளார்கள் என்ற நம்பிக்கை இது. இவ்வகை ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலிற்குப் பெரியளவான இழப்புக்களை ஏற்படுத்தாதென்று தெரிந்ததுதான். பதிலடியாக நூற்றுக்கணக்கான எறிகணைகளை அவர்கள் ஏவுவார்கள். ஆனால், நாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என்பதையும் அரபு உலகிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ யாருக்காகவும் என்பதையும் உலகிற்குச் சொல்ல வேண்டும். ஏனெனில் நீதி நம்பக்கமே இருக்கின்றது. இழந்த உரிமைகளையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்கு நாம் போராடியே தீரவேண்டும்.

யுத்தத்தின் முதல் நாள் இரவில் கரைந்து போகிறது. இதுவரை 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 பேருக்குக் காயங்கள். இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது. காஸாவின் வெளியிலிருந்கும் சிலருக்கு இவை வெறும் இலக்கங்களே. ஆனால் எங்களுக்கு – காஸாவின் மக்களுக்கு, இவை புள்ளிவிபரங்கள் அல்ல. இந்த இலக்கங்கள் எங்களுடைய வலிகள், அடுத்து எவர் கொல்லப்படுவார் என்கிற துயர்.. எவ்வகைக் குண்டு வீசப்படுமென்ற அச்சம்..

இந்தப்பொழுதில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் வலிமையையும் பொறுமையையும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.

By

Read More

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.

ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுக் கொள்ள மாபெரும் மனிதப்பேரவலம் அங்கு நிகழ்ந்தேறியது. அன்றைய சில மணிநேரங்களில் செத்தவர்கள் தொகை ஆயிரத்தைத் தாண்டியது.
Continue Reading

By

Read More

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

By

Read More

× Close