கதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல

“கதை எழுதுவது என்பது கணித சமன்பாடுகளில் எழுதுவது போன்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பும், பயிற்சியும் தான் சம்பவங்களை கதைகளாக்கும் ஆற்றலை எமக்கு அளிக்கவல்லன” என்ற தன் கருத்தோடு திரைப்படக்கதைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்ற விடயத்தை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக நேற்றைய தினம் (2020.06.07) எம் பட்டறைக்குழு மாணவர்களுடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட ஈழத்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

போர் கால அனுபவங்களையும், அவலங்களையும் தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வரும் இவர் நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் வழங்கியுள்ளார். ஆதிரை, ஆறாவடு போன்ற இவரின் நாவல்கள் பலரால் அறியப்பட்டவையே.

மாஸ் சினிமாக்களைத் தவிர்த்து ஈழத்து சினிமாவினை அடையாளப்படுத்தக் கூடிய படைப்புக்களை உருவாக்கி நாம் வழங்க வேண்டும். ஈழத்தில் சினிமாவாக மாற்றக்கூடிய பல நல்ல கதைகள் உள்ளன. அவற்றை சிறந்த படைப்புகளாக உருவாக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் கதைகளை திரைக்கதைகளாக்குவதற்கு எமக்கு பயிற்சி என்பது இன்றியமையாததாகும்.

ஓர் கதை எழுதுவது என்பது பிறவிக்குணம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் பயிற்சியின் மூலமுமே நாம் எம் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள இயலும். கதைகளாகட்டும் திரைக்கதைகளாகட்டும் அனைத்தும் எம்மை சூழ நிகழும் சம்பவங்களே. நாம் பார்த்த விடயங்கள், நாம் கேட்டறிந்த விடயங்கள், யாரோ ஒருவரின் அனுபவம் தான் கதைகளாகவும், திரைக்கதைகளாகவும் உருவாக்கம் பெருகின்றன.

ஆகவே, நாம் கேட்டறிந்த விடயத்தோடு அல்லது எம் அனுபவத்தோடு சம்பவங்களை சரியாக புனைய தெரிந்திருக்க வேண்டும். நாங்கள் கேட்டறிந்த சம்பவங்கள் அனைத்தும் கதைகள் ஆவதில்லை. கேட்டறிந்த விடயங்களை அவ்வாறே நாம் வழங்கிச் செல்வோமாக இருந்தால் அது வெறும் அறிக்கையிடலாகவே அமையும். ஆகவே, நாம் அங்கு ஓர் கதையை புனைய வேண்டும். அப்போதே சிறந்த திரைக்கதைகள் உருவாகின்றன.

இத்தகைய கதைகளை புனையும் ஆற்றல் என்பது வெறுமனே எமக்கு கிட்டிவிடுவதில்லை. கூர்மையாக அவதானிக்கும் ஆற்றல் மூலமும், அனுபவங்கள் மூலமுமே இது சாத்தியமாகும். நம்மை சுற்றி நிகழும் விடயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், ஏனைய படைப்புக்களை தொடர்ந்து உன்னிப்பாக பார்த்து பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதே எமக்கான ஆற்றல் விருத்தியடையும்.

எப்பொழுதுமே எம்முடைய ஆரம்ப படைப்பு என்பது எமக்கு நெருக்கமானதாக, தெரிந்த விடயமாக அமைய வேண்டும். அப்போது தான் அப்படைப்பு சார்ந்த புரிதல் தெளிவாக எம்மத்தியில் புலப்படும். நாம் எமது கதையை அல்லது திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் போது நாம் ஓர் கருத்துக்கு ஆதரவாகவோ அல்லது ஒரு நபருக்கு ஆதரவாகவோ எழுத ஆரம்பிக்கவோ அல்லது திட்டமிடவோ கூடாது. அவ்வாறு திட்டமிடும் போது சிறந்த படைப்புகளை உருவாக்குவதில் இருந்து நாம் தவறி விடுகின்றோம். திரைக்கதை ஒன்றை நாம் எழுதும் போது எல்லா பாத்திரங்களுக்கும் நியாயமாக எழுத வேண்டும். நாம் படைக்கும் படைப்புக்களில் நேர்மையாகவும் அறத்தோடும் செயற்படும் போதே எம் படைப்புக்கள் நேர்மையானதாக வெளிவரும்.

எப்போதும் திரைக்கதைகளை எழுதும் போது குறைந்தளவு வசனங்களையே பயன்படுத்த வேண்டும். காரணம் திரைப்படம் என்பது காட்சி ஊடகம் (Visual Media). அவற்றில் நாம் அதிகமான வசனங்களைப் பாவிக்கும் போது அவை வானொலி நாடகங்கள் போன்று அமைந்துவிடும். ஆகவே, தேவைக்கு மீறிய காட்சிகளையோ அல்லது தேவையில்லாத விடயங்கள் மற்றும் வசனங்களையோ நாம் திரைக்கதையில் தவிர்க்க வேண்டும்.

நல்ல திரைக்கதை உருவாக்கம் என்பது இலகுவில் கிட்டிவிடுவதில்லை. அதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். நாம் வாசித்த நாவல்களை சிறுகதைகளை தொடர்ச்சியாக திரைக்கதைகளாக எழுதப் பழக வேண்டும். அடிப்படையான அறிவும், தொடர்ச்சியான வாசிப்பும், நல்ல சினிமாக்களை பார்த்தல் மூலம் தொகுக்கப்பட்ட அறிவு எமக்கு கிட்டுகின்றது.

ஆகவே, “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதற்கமைய தொடர்ச்சியான பயிற்சியும் தேடலுமே எமக்கான தளத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

மு. துலாபரணி

By

Read More

ஆதிரை! ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்

சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து

“வரலாறு அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்” என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று,
உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது.

ஈழத்து மக்கள் மீது நிகழ்ந்த இனப்படுகொலைகளின் முப்பதாண்டு மூச்சு முனகலின் வரலாறு ஆதிரை.

சிங்கமலை தங்கம்மை,ஆச்சிமுத்து கிழவியின் மூத்த மகன் நடராசன் அவனது மனைவி கிளி,ஆச்சி முத்து கிழவியின் இளைய மகன் சங்கிலி அவனது மனைவி மீனாட்சி,மற்றும் அத்தார்,சந்திரா ஆகிய குடும்பங்களின் மூன்று தலைமுறைகளைப் பற்றிய முப்பதாண்டு வரலாறைப் பேசுகிறது நாவல்.

இதுவரை ஈழத் தமிழர்கள் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் வரலாறு என செய்தி துணுக்குகள் வழியாக நமக்குள் படிந்து போன அத்தனைக்கும் முற்றிலும் மாறான ஒரு கோணத்தை நமக்கு காட்டுகிறது ஆதிரை நாவல்.

போரின் படுகளத்தை அப்பாவி மக்களின் பார்வையில்,பெண்களின் அழுகுரலாக,கண்ணீராக காட்டும் ஒரு பேரிலக்கிய வடிவில் எழுதப்பட்ட போரிலக்கியம் ஆதிரை.

சயந்தன் எவ்வித மனச்சாய்வுமின்றி ஒரு இனத்தின் சரிவை,அப்பாவி மக்களின் கண்கள் வழியே அவர்களின் வலியை,உயிர் ஓலத்தை பதிவு செய்துள்ளார்.

1991ல் சிங்கமலை மகன் லட்சுமணன் சிங்கள சிறையில் கைதியாய் இருப்பதில் தொடங்கும் நாவல். பின்னோக்கி நகர்ந்து 1977ல் சிங்களர்கள் மலையகத் தமிழர்களின் குடியிருப்பை கொளுத்தி உடைமைகளை பறிப்பதால் அங்கிருந்து ஆரம்பிக்கும் மலையகத் தமிழர்களின் இடப்பெயர்வு நாவல் முழுதும் தொடர்கிறது.

சிங்கமலையின் மனைவி தங்கம்மை தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் சிங்களர்கள் கலவரம் செய்வதால் சிங்கமலை தன் பிள்ளைகள் லெட்சுமணன்,வல்லியாளுடன் வன்னிப் பகுதியில் உள்ள தனிக் கல்லடியில் தஞ்சம் அடைகிறான்.அங்கு தான் அத்தார்,சங்கலி ஆகியோரின் நட்பு கிடைக்கிறது.

காட்டிற்கு மரம் வெட்ட போகும் போது சிங்கமலை ஒரு நாள் இந்திய ஆர்மி ஆட்களால் நீ தான் LTTEக்கு துப்பு கொடுக்கறியா என விசாரிக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு கொல்லப்படுகிறான்.
கொல்லப்படுவதற்கு முன் சிங்கமலை அழுதவாறு கைகூப்பிச் சொல்லும் கடைசி சொற்கள் “அய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்பதே.

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்கள் கொடுத்தது துயரங்கள் என்றால் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது தொப்புள் கொடி உறவென நினைக்காத ஒரு மாபெரும் துரோகம்.

தந்தை கொல்லப்பட்டதின் வலியிலும் கோபத்திலும் சந்திரா வீட்டில் வேலை செய்யும் லட்சுமணன் அவர்களிடம் சொல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான்.

நாவலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இளைஞர்கள் பருவப் பெண்கள் எல்லோரும் வலுக்கட்டாயமாகவும்,தங்களுடைய விருப்பத்துடனும் சேர்கிறார்கள்.

நாவலில் மிகப்பெரும் துயரங்களை துய்ப்பவர்களாகவும் துணிச்சல் கொண்டவர்களாகவும் பெண்கள் காட்டப்படுகிறார்கள்.சிங்கள ராணுவத்தால் கூட்டு வல்லாங்கு செய்யப்படும் மலர் என்ற பெண் பின்னாளில் இயக்கத்தில் இணைந்து போர்ச் சண்டையில் ஒரு காலை இழந்து ஸ்கந்தராஜா என்ற புலிகள் இயக்க டாக்டர் ஸ்கந்தராஜாவை மணந்து கொள்கிறார்.

மலர் இயக்கத்தில் இணைவதற்கு முன் ஓர் இரவில் பாம்பு கடித்து விட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மருத்துவனைக்குச் செல்லும் அந்த ஓர் இடத்தில் மலரின் கருணையை, துணிச்சலை சயந்தன் காட்டுகிறார்.

கணபதி வல்லியாள் தம்பதியின் இளைய மகள் வினோதினி இயக்கத்தில் சேர்ந்து பின் சிங்கள ராணுவத்திடம் சரணடைகிறாள்.பின் அவள் கடைசி வரை என்ன ஆனாள் என்பதே தெரிவதில்லை.

நாவலில் சங்கிலியின் மகள் ராணிக்கும், சின்னராசுவுக்கும் இடையேயான காதல் கல்யாணத்தில் முடிகிறது.சிந்து பிறந்த உடன் சின்னராசு இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான்.கடைசி வரை சின்னராசு என்ன ஆனான் என்பதே தெரிவதில்லை. வயதின் வேகத்தில் உணர்ச்சியின் சூட்டில் சின்னராசுவை கல்யாணம் செய்யும் ராணி அவன் திரும்ப வருவானா இல்லையா என்ற ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்கிறாள்.

கணவன் இல்லாத ராணி மீது எட்டேக்கரை காவல் காக்கும் மணிவண்ணன் என்பவனுக்கு மெல்லிய ஈர்ப்பு கலந்த காமம் ஏற்படுகிறது.

கடைசியில் போரின் உச்சத்தில் ஒர் இடத்தில் மணிவண்ணன் இறந்து கிடக்கும் போது ராணி “மணிவண்ணனின் காலடியில் புழுதிக்குள் விழுந்து புரண்டு அலறி கதறி அழும்போது பக்கத்தில் கசிந்த கண்களோடு அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிந்துவிற்கு சட்டென எவருடையதோ அந்தரங்கத்தில் நுழைந்து நிற்பதாய்த் தோன்றி தலையை திருப்பிக் கொண்டாள்” என சயந்தன் பதிவு செய்யும் இடத்தில் ஒட்டு மொத்த மனித உணர்வுகளையும் தொடுகிறார்.

ராணிக்கு மணிவண்ணன் மீது உள்ளூர ஒரு அந்தரங்க ஆசை இருந்தாலும் தனக்காக அதை முடக்கி வாழ்ந்தவள் தன் தாய் என ராணிக்கு சிந்து கொடுக்கும் மரியாதை அது.ராணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையேயான உறவை புனிதப்படுத்தும் இடம் அது.

அத்தாரின் மனைவி டீச்சர் சந்திரா பதுங்குக் குழியில் இறந்த பிறகு உடல் சிதைந்து வலக் கண் மட்டும் திறந்து அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணத்தை ஒரு பையன் பார்த்து சார் இவரை எனக்குத் தெரியும்.இவர் பெயர் அத்தார் இவர் ஒரு அம்பட்டன்.இவர் சந்திரா என்ற வெள்ளாளப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டவர்.
இவர்களுக்கு குழந்தை கிடையாது என அந்த பையன் சொல்லும் இடத்தில் ஈழத்து தமிழர்களுக்கிடையே நிலவும் சாதிய அடுக்கை சயந்தன் குறிப்பிடுகிறார்.

நாவலில் எந்த இடத்திலும் அத்தார் என்ன சாதி,சந்திரா என்ன சாதி என சொல்லப்படுவதில்லை. ஆனால் கடைசியில் அவர்கள் இறக்கும் போது தான் அந்த பையன் வழியாகத் தெரிகிறது.

நாவலில் போரின் ஒலம்,கந்தக நெடி வாசத்திற்கு மத்தியில் வீசம் ரோஜா வாசம் சாரகன் நாமகள் இடையேயான காதல்.

நாவலில் சங்கிலி மகன் வெள்ளையன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஒன்பதாண்டுகள் அங்கிருந்து விட்டு உடலில் குண்டு பாய்ந்த வலியுடன் இயக்கத்துக்கு துண்டு கொடுத்து விட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து விடுகிறான்.

கணபதிக்கும்,வல்லியாளுக்கும் பிறக்கும் மூத்த மகள் முத்துவை வெள்ளையனுக்கு கட்டி வைக்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு கூட சாதி குறுக்காக நிற்கிறது.கணபதி சக்கிலிய சாதி என்பதால் வெள்ளையன் அம்மா மீனாட்சி தயங்குகிறாள்.பின் வெள்ளையன் அக்கா ராணி இந்த காலத்தில் போய் சாதி எல்லாம் பார்த்துக் கொண்டு என பேசுவதால் மீனாச்சி சமாதானம் அடைகிறாள்.

வெள்ளையனுக்கு ஒளி நிலா,இசை நிலா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

நாவலில் படுகளம் என்ற ஒரு பகுதி வருகிறது.இழை நம்பிக்கையுடன் எப்படியும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என ஓடி அலையும் உயிர்களின் ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.எவ்வளவு ரத்தம்,எவ்வளவு உடல்கள்,எவ்வளவு உயிர்கள் இந்த நிலம் தீராத பசியுடன் எல்லா உயிர்களையும் விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

ஒதியமலையில் ஆர்மிக்காரர்களால் சுட்டுக்கொள்ளப்படும் வெள்ளையனின் பெரியப்பா நடராசன்,புலி இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்படும் நடராசனின் மகன் பரந்தாமன், வெள்ளையனின் அம்மா மீனாட்சி என எல்லா உடல்களையும் போர் பிணமாக்கி விடுகிறது.போரின் இறுதியில் எஞ்சுபவர்கள் வெள்ளையன் அவனது மனைவி முத்து, அவர்களது குழந்தைகள்.முத்துவின் அப்பா கணபதி, அம்மா வல்லியாள், வெள்ளையனின் தங்கை நாமகள்,அக்கா ராணி,அவளது மகள் சிந்து மற்றும் மலர் ஆகியோர் மட்டுமே.

நாவலின் ஆரம்பத்தில் தனிக்கல்லடியில் ஓர் நாள் பெய்யும் பேய் மழையில் அங்கு ஆண்டாண்டு காலமாக காளியின் உருவமாக தங்களின் நேர்த்திக் கடன்களையும் படையல்களையும் செய்து பூஜித்து வந்த இத்தி மரம் சாய்ந்து விழுந்து விடுகிறது.இது ஒரு சகுனப் பிழையாக,அபசகுண நிகழ்வாக அவர்களால் பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தனிக்கல்லடியை ஆர்மிகாரர்கள் சுற்றி வளைக்கிறார்கள்.அந்த ஊரில் இருப்பவர்கள் தனிக் கல்லடியை விட்டு இடம் பெயர்கிறார்கள்.பிறகு மரம் விழுந்த பத்தடி தள்ளி ஒரு புதிய இத்தி செடியை நட்டு வைக்கிறார்கள்.

நாவலின் கடைசியில் முத்து அவளது பிள்ளைகள் ராணி அவளது மகள் சிந்து, நாமகள் மற்றும் மலர் ஆகியோர் மீண்டும் தனிக்கல்லடிக்கு குடியேறி அங்கு வாலை குமரியாய் வளர்ந்து நிற்கும் காளியின் உருவமான இத்தி மரத்திற்கு நீர் வார்த்து வணங்குகிறார்கள்.அப்போது மலர் சங்கை வாயில் வைத்து ஊதுகிறாள்.இத்தி மரம் அவர்கள் மீண்டு வந்து வாழ்வதற்கான நம்பிக்கையின் குறியீடு.அது அவர்கள் வணங்கும் காளியின் உருவம்.

புலிகள் இயக்கத்திற்கு உதவாமல் சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்தியா,பிரான்ஸ்,கனடா போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை புலிகள் இயக்கத்தில் உள்ளவர்கள் வாயிலாக சாடுவதை சயந்தன் பதிவு செய்கிறார்.

எப்படியும் போரை நிறுத்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையும் கலைஞர் கருணாநிதியும் வருவார்கள் என்று நம்பும் அப்பாவி மக்களின் இருண்ட நம்பிக்கையை மக்களின் பார்வையிலேயே பகடி செய்கிறார்.

போரை நிறுத்த,தொப்புள்கொடி உறவுகளின் உயிர்களை காப்பாற்ற வராத இந்தியா,போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி வல்லியாளிடம் பேட்டி எடுக்கும் போது என் மகள் வினோதினியை காப்பாற்றிக் கொடுங்கள் என அவள் திரும்ப திரும்ப கண்ணீர் வற்ற கத்தும் போது இந்திய தொலைக்காட்சி சேனல்காரர்களை இப்படி பகடி செய்கிறார் சயந்தன்
“அவர்கள் வேறு கண்ணீரை தேடிப் போனார்கள் என்று”.

“இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப் பிள்ளை மாதிரி எங்கடை கையைப் பிடித்துக்கொண்டு திரிய போகுது” என அத்தாரிடம் மயில்குஞ்சன் கூறுவது போல வாழ்க்கையின் மீது ஒவ்வொரு நொடியும் ஒரு நிச்சயமின்மையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் போரின் துயரையும், பதற்றத்தையும் நாவல் முழுக்க நமக்கு காண்பிக்கிறார் சயந்தன்.

ஒரு படைப்பாளியின் சுய விருப்பத்தையும்,நிலைப்பாட்டையும் புகுத்தாமல் போராட்டக்களத்தில் இருந்த மக்களின் பார்வையில் நின்று சொல்லப்பட்டது தான் இந்த நாவலின் பெரும்பலம் என நினைக்கிறேன்.

ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப் போல அனுபவம் பழுத்த பார்வை சயந்தனுடையது.சயந்தனின் மொழி அவ்வளவு புதியதாய் இருக்கிறது.

மிகச்சிறந்த ஒரு கிளாசிக்கல் பேரிலக்கியம் ஆதிரை

-Velu Malayan

By

Read More

போர் ஒரு பொழுதுபோக்கு அல்ல

சயந்தனின் ஆதிரை படித்தேன். தமிழீழப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியான 1977 கலவரம் துவங்கி 2009 இறுதிப் போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்கான குழு அமைதல் வரையிலான பரந்த வரலாற்றுப் புதினம். தமிழ் ஈழம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல். காஷ்மீர் பிரச்சினையோ ஈழப் பிரச்சினையோ தாம் நம்பும் சித்தாந்தத்தின் வாயிலாகவும் தாம் விரும்பும் தலைவர்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையிலாகவும் ஏதோ ஒரு பக்கம் நிலையெடுத்து கம்பும் சுற்றும் போக்குதான் நம்மிள் பெரும்பாலோருக்கு உண்டு. சம்மந்தப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் குறித்த எந்தக் கவலையும் நமக்கு இருந்ததில்லை.

ஈழப் பிரச்சினையைக் குறித்து தமிழகத்தில் இருக்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு என்ன அறியக் கிடைத்தது? கிடைக்கிறது? தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரைக்கைகளின் ஒருபக்கச் செய்திகள் மற்றும் தம் கட்சித் தலைவன் கூறும் கருத்துக்கள் அல்லது கதைகள். இவைதானே? ஈழத்திலேயே பிறந்து அங்கேயே படித்து அங்கேயே வளர்ந்து அத்தனைக்கும் சாட்சியாக இருந்தவர்கள் என்ன கூறுகிறார்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதுதானே உண்மையான வரலாறாக இருக்க முடியும். ஈழ மண்ணின் மைந்தர்கள் எழுதுவதைத் தான் நான் நம்புகிறேன். ஆம், நிச்சயம் எழுதுகிறவர்களிடம் சித்தாந்த சாய்மானம் இருக்கலாம். ஆனால் நம் தலைவர்கள் கூறும் கட்டுக் கதைகளைக் கணக்கில் கொள்ளும்போது அவை பெரிய பாதகமில்லை வரலாற்றுத் திரிபும் இல்லை. தவிர ‘ஆறாவடு’ வையும் ‘ஆதிரை’ யையும் படித்த வகையில் சயந்தன் சாய்மானங்களைக் கடந்து எழுத்திற்கு நேர்மையாக இருக்கிறார் என்பதே எனது புரிதல்.

இயக்கத்தின் பிரச்சார பிரதியாகவும் இல்லாமல் விமர்சன தொனியும் இல்லாமல் சூழலிலிருந்து முற்றிலும் விடுபட்டு மேலிருந்து காணும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையில் தமிழீழ போராட்டத்தின் முப்பது ஆண்டுகாலம் பதியப்பட்டிருக்கிறது.

சிங்கள ராணுவத்திற்கும் – புலிகளுக்கும் இடையேயான நேரடி போர் விவரணைகள் ஒன்றிரெண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் இல்லை. எழுபதுகளில் ஆரம்பித்து 2015 பிற்பகுதி வரையிலும் இலங்கையின் பல்வேறு அரசியல் சூழல்களுக்கிடையே வாழ்ந்த மூன்று குடும்பங்களின் பாத்திரங்கள் வாயிலாக இந்த அவல வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது.

* இயக்கத்தின் நோக்கம் அப்பழுக்கற்றது. 70 களில் சிங்கள இனவாதக் குழுக்கள் பெருகி தமிழர்களை துன்புறுத்துவம் மத்திய இலங்கையின் மலையகங்களில் வாழ்ந்த தமிழர்கள் வடக்கு இலங்கையை நோக்கி இடம்பெயரவும் வைக்கின்றன. பொதுவாக இருக்க வேண்டிய அரசு சிங்கள இனவாதிகளை கண்டும் காணாமலும் மறைமுகமாக அவர்களை வளர்த்தெடுக்கவும் செய்கிறது. இதற்கு எதிர்வினையாகவே தமிழர்களுக்கென்று சொந்த நாடும் அரசாங்கமும் வேண்டும் என்கிற ‘பொறி’ விழுகிறது. இந்தப் பின்னனியிலேயே இயக்க வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்கும் ஆதரவும் பெருகியது.

* இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்தோடும் சுய விருப்பத்தின் பேரிலும் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். இயக்கம் கையறு நிலைக்குப் போகும்போது ‘சுய விருப்பம்’ எல்லாம் காற்றில் விடப்பட்டு ‘வீட்டுக்கு ஒருவர்’ என்று பிடித்துக் கொண்டு போகும் நிலையும் உருவாகிறது. இதில் மீசை கூட முளைந்திராத பள்ளிப்பிள்ளைகளும் அடக்கம்.

* வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறவர்கள் இயக்கத்தில் பதிவு செய்துகொண்டு பெரும்பணத்தைக் கட்டணமாக கட்ட வேண்டியிருந்தது. ஒரு அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமது பணத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வது? ஆகவே இம்மாதிரியான கட்டணங்கள் சிறு சிறு சலசலப்பைத் தவிர பெரிய எதிர்ப்புகளை உருவாக்கவில்லை. நரகத்தில் இருந்து தப்பிச் சென்றால் போதும். விட்ட பணத்தைப் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் ஒரு காரணம். இது வேறொரு புதிய சமூக பாகுபாட்டில் நிறுத்தியது. பணம் படைத்தவர்களும் பணத்தைப் புரட்ட முடிந்தவர்களும் தமது சந்ததிகளை பத்திரமாக பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நாடு கடத்திவிட எஞ்சிய ‘ஒன்றுக்கும் வக்கில்லாதவர்கள்’ இயக்கத்தோடு இணைந்து வீரமரணம் அடைகிற நிலை உருவாகிறது.

* பதிமூன்று பதினான்கு வயதிலேயே இயக்கத்தில் இணைந்துவிட்டவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் போகிறது. போர் முடிந்து அவர்கள் மத்திய வயதில் இருக்கையில் எங்கும் வேலை கிடைப்பதில்லை. முதல் காரணம் போதுமான கல்வித் தேர்ச்சி இல்லை. மால்களில் செக்யூரிட்டி, கட்டுமான கூலித்தொழில் போன்ற விளிம்புநிலை வேலைகளே கிடைக்கின்றன. மற்றொன்று ஏற்கனவே ‘இயக்கத்தில்’ இருந்தவர் என்கிற காரணங்களால் அரசாங்கத்தின் ‘ஸ்கேனரிலேயே’ இருப்பார். விசாரனை, வேவு பார்த்தல் போன்ற தொல்லைகள் இருக்கும் என்று தமிழ் முதலாளிகளே கைவிரிக்கும் போக்கு.

* இயக்கத்தின் ‘மெடிக்ஸ்’ பிரிவின் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. எந்த நேரம் எந்த நிலையானாலும் தம் உயிரை துச்சமாக பாவித்து பொது மக்கள் மற்றும் புலிகளின் உயிரையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தும் தியாகம் அது ஒரு தீவிரவாத இயக்கத்தின் பிரிவு என்பதாலேயே எங்கேயும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதிரை அதைக் கவனமாக பதிந்து இருக்கிறது.

* இறுதிப் போரில் மத்தளன் துவங்கி முள்ளிவாய்க்கால் வரையிலான ஆறு கிலோமீட்டர் பரப்பை பாதுகாப்பு வளையமாக அரசாங்கம் அறிவிக்கிறது. உடமைகளைத் துரந்து கைப்பிள்ளைகளோடும் வயதானவர்களோடும் அவ்வளையத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தவர்களின் மீது குண்டு வீசி அழிக்கிறது ராணுவம். முப்பது ஆண்டுகால போராட்டத்தை ஓரேயடியாக முடித்துக் கொள்ள மகிந்தாவிற்கு கிடைத்த one time oppurtunity. கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்பவர்களைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது. இலங்கை அன்று இந்தியாவை மட்டும் நம்பியில்லை. கலைஞர் அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாம். எதிர்ப்பின் அடையாளமாக அது இருந்திருக்கும். மற்றபடி அது போரை நிறுத்தியிருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். கலைஞர் இடத்தில் அம்மையார், அண்ணா, எம்.ஜி. ஆர், யார் இருந்தாலும் அந்தப் போர் அப்படித்தான் முடிந்திருக்கும். ஜனவரியிலிருந்தே இன அழிப்பும் போர் வரைமுறைகளும் மீறப்பட்டு ஒரு உச்சத்தை நோக்கி நகரத் துவங்கி இருந்தது. உலகநாடுகள் பார்த்துக் கொண்டுதானிருந்தன. ஐநாவால் தலையிட முடியவில்லை. கலைஞர் நினைத்திருந்தால் முடிந்திருக்கும் என்பவர்களைக் கண்டால் ‘பலே கலைஞருக்கு அவ்ளோ பவர் இருந்துதா?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

எளிய தமிழ் பிள்ளைகள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். மேலே இருக்கும் விமர்சனங்களால் கலவரமடையக் கூடாது. அவ்வளவு பெரிய புத்தகத்தில் இவ்வளவுதான் இயக்கத்தின் மேலான விமர்சனங்கள். அதுவும் புகாராக இல்லாமல் கதையோடு வந்து போகிறது. இயக்கத்தின் நேர்மையும் தமது மக்களைக் காக்க வேண்டி அவர்கள் செய்த தியாகங்களும் முறையாக அங்கீகரிப்பட்டிருக்கிறது. இயக்க ஆதரவு என்கிற நிலையெடுத்து விட்டீர்கள். என்ன நடந்தது என்கிற வரலாற்றைத் தெரிந்துகொண்டாவது அங்கே நில்லுங்கள்.

வலதுசாரி போர் விரும்பிகளும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாகிஸ்தானோடு போர் புரிந்து அவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன கவலை இருக்கிறது? ஏஸி அரையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து அவர்கள் பக்கம் ஐநாறு தலை நமது பக்கம் நூறு தலைதான் என்று தினம்தினம் கணக்கிட்டு புளகாங்கிதம் கொள்ள போர் ஒரு பொழுதுபோக்கு. அவர்களில் ஒருவர் இதைப் படித்து போர் எப்போதுமே வேண்டாம் அமைதியும் பேச்சுவார்த்தையும் தான் உயரிய கொள்கை என்று நினைப்பார்களாயின் அதுவே ஆதிரையின் வெற்றி.

நாஸிக்களின் இன அழிப்பு கொடுமைகளைக் குறித்து ஆயிரம் திரைப்படங்கள் இதுவரை எடுக்கப்பட்டிருக்குமா? சலிக்காமல் இன்னமும் வெவ்வேறு கோணங்களில் அது ஆவணப் படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகள் கழிந்தும் தமிழீழ இன அழிப்பைக் குறித்த திரைப்படங்கள் வந்தது போலவே இல்லை. ஆதிரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தரமான இயக்குனரால் உலகப் படமாக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

By

Read More

ஆதிரை என்கின்ற இத்திமரத்துக்காரி

வைதேகி 

ஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன.

சயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல்.

மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன.

ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார்.
ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை. இதனாலேயே ஒரு திசையை நோக்கி வாசகர்களை ‘மேய்க்கும்’ வேலையை இந்நாவல் செய்யவில்லை.

“ஈழத்தமிழரில ஒரு இருபது லட்சமெண்டு பார்த்தாலும் இந்த இனத்தின்ர ஒரு அரசியல் போராட்டத்தின்ர அதுவும் ரத்தம் சிந்திற போராட்டத்தின்ர கடைசி விளைவை, அதின்ரை எரிவை, அதின்ரை வெக்கையை வெறும் மூன்று லட்சம் ஏழைச்சனங்கள் மட்டும் அனுபவிக்கிற மாதிரியும் மற்றவங்கள் அதுக்கு வெளியாலயும் போனது ஏதோ எதேச்சையா நடந்ததெண்டா நினைக்கிறீங்கள்..”

“சரி, நான் ஒண்டு கேக்கிறன். முள்ளிவாய்க்காலில் ஒதுங்கின இந்தச் சண்டை ஒரு வேளை யாழ்ப்பாண ரவுணுக்குள்ள ஒதுங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் எண்டு நினைக்கிறியள்….”

“அப்ப இயக்கத்துக்கு எதுவும் செய்யிறதா நினைப்பில்லையாமோ….. கருணாநிதியும் அமெரிக்காவும் இடையில வந்து தீர்க்குமெண்டா இவ்வளவு நாளும் சண்டையை நடத்தினவை…” போன்ற கூற்றுக்களும் வினாக்களும் வாசக பங்களிப்புக்காக ஆசிரியர் பயன்படுத்திய யுக்திகளாக நாவல் முழுவதும் விரவியிருக்கின்றன.

மனச்சாட்சிக்கு உருவம் கொடுத்ததை போலவே நாவலில் கூட வரும் “சந்திரா” முள்ளிவாய்க்காலில் தலை பிளந்து இறந்து கிடக்கும் தருணத்தில் கண்முன் விரிவது ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமல்ல, போரின் வெம்மையில் கருகிய பலநூறு, ஆயிரம் பெண்களின் வாழ்க்கைகளின் ஒரு கோட்டுச்சித்திரம். அத்தருணத்தில் “இந்தப் போராட்டம், தேவைதானா.. ” என்றொரு கேள்வி, புத்தியையும் மீறி மனதில் எழுகிறது. அப்பொழுது ஆசிரியருக்கு இணையாக, காலத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பும் உருவாகிறது.

ஆதிரை, 1977இல், தேயிலைத் தோட்டக் கூலிகளாக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களிடையே, மலையகத்தில் ஆரம்பிக்கின்றது. 2013இல், யாழ்ப்பாண நகரத்தின் நுழைவாயிலான, முகமாலை வெட்டையில் முடிகின்றது. ஏறத்தாழ முப்பது வருடங்கள், தங்கு தடையற்ற பிரவாகமாக ஓடும் காலத்தில் வாழும் உணர்வை வாசகர்கள் பெறுகின்றார்கள். மக்களின் வாழ்க்கையை ஒரு பௌதிக இயக்கமாக போர், இடப்பெயர்வு, சாதிய ஒடுக்குமுறை, காதல், திருமணம், பிறப்பு, இறப்பு எனப் பல நூறு இழைகள் கொண்டதாக அது பரப்பி வைக்கின்றது. இந்திய அமைதிப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்ட வெள்ளையக்கா என்ற சோதிமலர், கணவன் காணாமல் போக, கைக்குழந்தையுடன் தன் வயதுக்கேயுரிய ஏக்கங்களுடனும் இச்சைகளுடனும் சமூகத்தின் வார்த்தைகளுக்குப் பயந்து வாழும் ராணி, எதையுமே நேர்படப்பேசுகின்ற, அது விடுதலைப்போராட்டமாகவே இருந்தாலும் அதன் மனிதநேயமற்ற கூறுகளை சுட்டிக்காட்டுகின்ற சந்திரா என்று நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஓட்டங்கள், தனித்தனியான தரிசனங்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் இயக்கும் மன உணர்வுகள் பின்னிப்பிணைந்து முழுமையான உணர்ச்சித் திரளாகப் பிரவாகிக்கின்றது. அது போலவே சம்பவங்களும்..

77, 83 இனக்கலவரங்கள், ஒதியமலைப் படுகொலை, பிரமந்தனாற்றுப் படுகொலை, இந்திய ராணுவத்தின் மனிதநேயமற்ற கொடூரச் செயல்கள், யாழ்ப்பாண இடப்பெயர்வு, சுனாமி, செஞ்சோலை வளாகப் படுகொலை, முள்ளிவாய்க்கால் பேரவலம் என்று பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு, முப்பது வருடங்கள் என்ற அகண்ட காலத்தை நாவலின் ஒவ்வொரு கணத்திலும் பிரதிபலிக்கச்செய்து வாசகர்களுக்கு ஒரு மாபெரும் காலதரிசனத்தை அளிக்கின்றது.

ஆதிரையில் நிலங்கள் ஒரே திசையில் நகரவில்லை. மலையகம், திருகோணமலை, வவுனியா, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார் முதலான நிலங்களோடு தொடர்புபட்ட பல்வேறு மனிதர்களின் வாழ்வும், போரும் வலை போல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைந்திருக்கின்றது. இந்த விரிவுதான் நாவலின் தனிச்சிறப்பும் கூட. ஈழப்போரின் மானுட அனுபவத்தின் விரிவு இது.

வட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கதை நகர்ந்தாலும் பிராதான களங்களான தனிக்கல்லடி, பேச்சிதோட்டம் என்ற இரண்டு நிலங்களில் மட்டுமே கதையின் பிரதான மாந்தர்கள் இயங்குகின்றனர். இந் நிலங்களின் நீட்சியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வயல்வெளிகள், வரப்புக்கள், வெட்டைகள், மந்துக்காடுகளின் பூகோளக் குறிப்புகளும், தரைத்தோற்ற விவரணங்களும் நாவலில் செறிவாகப் பதியப்பட்டிருக்கின்றன. தனிக்கல்லடி என்ற கிராமம் பற்றிய விபரிப்பில், அங்கு வாழும் சமூகத்தின் இருண்டதும் ஒளிமிக்கதுமான வாழ்வின் எல்லா பக்கங்களும் கூர்மையான அழகியலோடு காட்டப்பட்டிருக்கின்றது. அக்கிராமத்தின் மத்தியில் விஸ்தீரணத்துடன் பரவிக்கிளைவிட்டிருக்கும் இத்திமரமும் அதன்கீழ் அமைந்திருந்த “இத்திமரத்தாளும்” பொருத்தமான களத்தை கற்பனையில் கொணரச்செய்து, வாசிப்பவருக்கு மிகப்பரிச்சயமான ஒரு வாழும் சூழலை தருகின்றன.

விளிம்பு நிலைப் பெண்களின் கருத்துக்களையும் அவர்களின் அகவயமான உணர்வுகளையும் எள்ளலோடும் துல்லியத்தோடும் யதார்த்தமான உரையாடல்களாக நாவல் முன்வைக்கின்றது. “தாய்க்காரியெண்டால் இரும்பு மாதிரி நிப்பாள். இவன் மகன் (ராஜீவ் காந்தி) பாவம். ஜெயவர்த்தனாட்டை ஏமாந்து போனான்” இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அரசியல் வெகு லாவகமாக இந்த உரையாடலில் உள்ளோடியிருக்கும்.

இலங்கைப் படையினரால் தம்பி சித்திரவதைக்குள்ளாக்கப்படும்போது அவனுடைய அக்கா, “காளியாத்தை எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாளடா.. உங்கள் ஒருத்தரையும் மிச்சம் வைக்க மாட்டாளடா.. ” என்று மண் அள்ளி வீசும்போதும், இந்திய அமைதிப்படையினரால் சிதைக்கப்பட்ட ஒருத்தி “பெத்த தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்.. இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா..” என்று அலறும்போதும், மகனை இழந்த தாயொருத்தி “எடியே காளியெண்ட வேசை.. உனக்கு ரத்த ருசி கேட்குதோடி” என்று கடவுளையே திட்டும்போதும், பெண் துயரின் கோபமும் சாபமும் உக்கிரத்தோடு வெளிப்படுகின்றன.
மக்களின் உரையாடல்கள் அவர்களுடை வட்டார மொழிகளுடனேயே நேரடியாகச் சேர்க்கப்பட்டிருப்பதானது பிரதிக்குள் வாழும் அனுபவத்தை, ஓர் உண்மைச்சூழலை ஏற்படுத்துகின்றது. ஆசிரியரின் தன்னிலைக் கூற்றுக்களைக் காட்டிலும், கதை மாந்தர்களின் குரல்களாலேயே நாவல் நகர்ந்து செல்கிறது. “அப்பிடிச்சட்டுன்னு சொல்லிட்டாலும் இந்தியான்னா உள்ளுக்க என்னமோ ஒரு நெனப்பு. எனக்குச் சரியா சொல்லத் தெரியல்ல. மழை பெய்யிற நாள்ள மூக்க நெறக்கிற புழுதி கெளம்புமே…. அப்ப ஒரு வாசம் வருமே.. அப்பிடி. சிலசமயம் கனவு முறியிறப்போ ஒரு துக்கம் முட்டிக்கிட்டுக் கிளம்புமே அப்பிடி…. என்னமோ ஒண்ணு. நல்லது நடந்திச்சின்னா சந்தோசம் தான்” இந்திய அமைதிப் படையின் வருகையை மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழும், ஓர் இந்திய வம்சாவளிக் கிழவனின் குரலினுாடாகக் கேட்கின்றபோது, அந்த மழை நாளின் புழுதியை எம்மாலும் நுகர முடிகின்றது.

போர் இலக்கியம் என்பது தனியே போரின் வெற்றியைப் பாடுவதல்ல. போரின் நியாயத்தை உணர்த்துவது மட்டுமல்ல. அந்தச் சமூகத்தின் வெகு சாதாரண பிரதிநிதி ஒருவரின் வெகு சாதாரண ஆசையை, எதிர்பார்ப்பை போர் எப்படி தனது விருப்பப்படி திசை திருப்புகிறது என்பதையும் நுண்மையாக அவதானித்துப் பதிவு செய்தலே அது. மூன்று தசாப்தகால ஈழ யுத்தம், அந்தச் சனங்களின் வாழ்க்கையை, எப்படித் தன் விருப்பப்படி மட்டுமே தன் வழியில் அலையச் செய்தது என்பதையும், அதில் அடிபட்டுப்போனவர்கள், லாவகமாக விலகி நின்றவர்கள், அதனோடு யுத்தம் செய்தவர்கள் என்று அனைத்துச் சனங்களதும் கதையை, முன்வைத்த கலைரீதியான நேர்த்தியான வெளிப்பாடு ஆதிரை.

இது, தனியே இன ஒடுக்குமுறையை மட்டும் பதிவுசெய்யவில்லை. ஈழத்துத் தமிழ் மக்களிடையில் நிலவுகின்ற சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள் – அவை ஒரு பொது யுத்தத்தை எதிர்கொள்வதில் ஏற்படுத்தும் சமநிலைக் குழப்பம் என்பனவற்றையும், சமாந்தரத்தில் பதிவுசெய்திருக்கின்றது. இறுதியில், நேர்மையான அரசியல் காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போரில் எவரெல்லாம் தப்பிப் போனார்கள், எவரெல்லாம் பலி வாங்கப்பட்டார்கள் என்ற பேருண்மையை பெரும் குற்ற உணர்ச்சியாக கவிகியச் செய்கிறது. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் கேலியான பார்வையை எதிர்கொள்ள முடியாத வெட்கத்தை ஏற்படுத்துகிறது.

கடைசிப் பக்கத்தின் கடைசி வரியில் மார்பின் குருதிச் சேற்றுக்குள் புதைந்திருந்த நஞ்சுக் குப்பியை வெகு சிரமத்தோடு ஆதிரை இழுத்த கணத்தில், இத்திமரம் ஒரு புயல்நாளில் சரிந்து விழுந்தபோது ஊருக்குள் உருவான பதற்றமும், எதிர்காலத்தின் நிச்சயமின்மையும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

By

Read More

ஒரு நிலப்பரப்பின் முப்பதாண்டுகால வரலாறு

இனியன்

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு மீண்டும் சென்னை வந்த பிறகு எவ்வளவு விரைவாக முடித்திட வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடித்திட வேண்டும் என்கிற முனைப்பில் துவங்கினால் சில பக்கங்களைக் கடந்திட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு அழுதும் அமைதியாய் இருந்தும் உணர்வுகளைக் கடந்து மெதுமெதுவாய் இருதினங்களுக்கு முந்தைய நள்ளிரவில் முழுவதுமாக முடித்தேன் அந்த 664 பக்க நாவலை.

ஏற்கனவே பலமுறை பலயிடங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “2௦ம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர்கள் சார்ந்த இலக்கியங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் விட மிஞ்சி நிற்கப் போவது 21ம் நூற்றாண்டில் படைக்கப்பட்டுக் கொடிருக்கக் கூடிய ஈழத்து இலக்கியங்கள் தான். அதுவும் முதல் 3௦ வருடங்கள் மட்டுமே. அதன் பிறகு வரிசையில் ஈராக், சிரியா, ரோஹிங்கியா என வரிசையில் காத்துக் கிடக்கின்றன.” அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து இலக்கிய வரிசையில் முக்கிய இடம் பிடித்திருப்பது சயந்தனின் ஆதிரை.

1977 நிகழ்த்தப்பட்ட இனகலவரத்தில் பாதிப்புகுள்ளானக் குடும்பம் ஒன்று ஈழத்தில் புலம் பெயர்வதில் துவங்குகிற கதைகளம். 2009 இன அழிப்பைக் கடந்து 2015 மக்களின் பன்பாட்டு அடையாள அழிப்பு என்கிற பெருந்துயர்மிகுப் பயணத்தில் வந்து முடிகிறது.

முப்பது ஆண்டுகால இப்பெரும் பயணத்தில் ஒரு நிலபரப்பின் பன்முகத்தன்மை, இயற்கை வளம், காடு, கடல், மக்களின் இனவேற்றுமை, சாதிய ஒடுக்குதல்கள், வர்க்க முரண்கள், இனக்கலவரங்கள், போராட்டம், போராட்ட வாழ்வியலின் உள்முரண்கள், சிதைவுகள், நம்பிக்கைகள் துரோகங்கள், வலிகள், விமர்சனங்கள், வதைமுகாம்கள், அடையாள அழிப்பு எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறது புத்தகம்.

சமகால ஈழத்துப் படைப்புகள் வாசிக்கிற போது புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாடு அல்லது எதிர் நிலைப்பாடு என்கிற அரசியல் புள்ளிகளில் இருந்து மட்டுமே எழுதப் படுகின்றன. ஆனால், ஆதிரை அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு மக்களின் மனத்திலிருந்து இவையிரண்டையும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார் சயந்தன்.

பெரும்பாலும் ஈழத்துப் படைப்புகளில் மறைக்கப்படுகிற விசையங்களாக நான் கருதுவது மக்களின் சாதிய மனோபாவம் மற்றும் மலையகத் தமிழர்களின் வாழ்வியல் என நினைக்கிறன். சிங்களவ இனவாதிகளுக்கோ அல்லது இனவாத அரசாங்கத்திற்கோ ஈழத்தமிழர் மற்றும் மலையகத் தமிழர் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை மொத்தமாகத் தமிழர் என்றால் தாக்குதல் தான் என்பதைச் சொல்கின்ற அதே வேளையில் ஈழம் மற்றும் மலையகத் தமிழர்களிடையிலான முரண்களையும் சாதிய வேற்றுமைகளையும் மிக நுணுக்கமாகக் கையாளப் பட்டுள்ளத்தாகவே தோன்றுகிறது. கதைகளமும் அதுதான் மலையகத்தில் இருந்து சிங்களத் தாக்குதலில் புலம்பெயர்ந்து ஈழம் நோக்கி வருகிற குடும்பம் ஒன்று எவ்வாறு அங்கு ஐக்கியமாகி இயக்கங்களில் இணைந்து இறுதிகட்டப் போர் மற்றும் போருக்குப் பிறகான வாழ்க்கை என்பது வரை எப்படியாக வளர்கிறது என்பதுதான்.

மலையகமும் ஈழமும் ஒன்றையொன்றுக் குறைச் சொல்லுகின்ற போக்கைதான் நண்பர்களுடனானப் பல உரையாடல்கள் மூலம் அறிமுகமாகியிருந்த எனக்கு இந்தக் கதைகளம் சற்றே வேறோருபார்வையை நோக்கித் திருப்புகிறது.

காலக்கோட்டு வரிசையில் சொல்லப்பட்டு நகர்கிறக் வரலாற்றுப் புனைவில் மக்களின் மனோநிலை மற்றும் போராட்ட வடிவங்களை 80களின் முற்பகுதியில் நடைபெற்ற கலவரங்களும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புலம்பெயர்வுகளும், 80களின் பிற்பகுதியில் 87 செப்டம்பர் திலீபனின் மரணத்திற்குப் பிறகான எழுச்சி, இந்திய ராணுவத்தினரின் உச்சபட்ச வரையறையில்லா வன்முறை மற்றும் போர் அதனைத் தொடர்ந்தப் புலம் பெயர்வு, 90களின் மத்திய காலத்தில் நிகழ்த்தப்பட்ட போர் நிறுத்தம், 2001 முதல் 2004 காலம் வரையிலும். 2004 டிசம்பர் 26 ஆழிப்பேரலைக்குப் பிறகு துவங்கி 2009 இன அழிப்பு வரையிலான காலங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கிற வகையில் மிகத் துல்லியமாக நிலவமைப்பு மற்றும் மக்களின் உரையாடல் மூலம் கையாளப் பட்டிருக்கிறது.

செப்டம்பர் 11. 2001 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் தீவிரவாதம் ஒழிப்பு என்ற பிரகடனுத்துடன் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் கரம் கோர்த்து ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அனைத்தையும் வேட்டையாடத் துவங்கிய நிலையில். பல நாடுகளில் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களையும் தீவிரவாதம் என்கிற பெயரில் அழித்தொழிப்புச் செய்து மறைமுக நில ஆக்கிரமிப்புக்கான வேலைகளைத் துவங்குகின்றன அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள். அதன் ஒரு பகுதிதான் புலிகள் இயக்க அழிப்பும் துவங்குகிறது. இருதரப்பிலும் சம அளவிலான வீரியம் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தபட்டபோது, மக்கள் கொல்லப்படுதல் என்பது எண்ணியளவில் குறைவாகத்தான் இருக்கிறது. போரும் இருபிரிவினரிடமும் மாற்றிமாற்றி இருபக்கமும் வெற்றி தோல்வி அடிப்படையில் மட்டுமே இருந்து வந்திருகிறது. ஆனால் தீவிரவாத அழிப்பு என்கிற பெயரில் அரசாங்கத்திடம் ஆயுத பலம் அதிகரிக்கப்பட்டு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தபடுகின்றனவோ அன்றுமுதல் திட்டமிடப்பட்ட இன அழிப்புத் துவங்கியிருகிறது. மேலும் தெற்காசிய நாடுகளின் கடற்பரப்புகள் சுனாமிக்குப் பிறகானக் காலகட்டங்களில் மிகப்பெரிய கவனம் பெறப்பட்டுச் சர்வதேசச் சந்தை ஆக்கிரமிப்புகள் அரங்கேறிடத் தேவையாக அமைகிறது ஈழ இன அழிப்பு. இது போன்ற நுண்ணரசியலை மிக லாவகமாகக் கையாளப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

உலகளவில் எந்தவொரு சித்தாந்தங்களும் இயக்கங்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவைதான். காலப்போக்கில் ஏற்றுகொண்டவர்களாலே விமர்சிக்கப்படுபவைதான் அதன் மூலம் திருத்தங்களும் ஏற்படக்கூடியவைதான். அதேபோல்தான் புலிகள் பற்றிய விமர்சனங்களை ஆங்காங்கே சில இடங்களில் உரையாடல்களின் மூலம் தெரியப் படுத்திகொண்டிருந்தாலும் இன அழிப்பு மற்றும் போரின் இறுதி நிமிடங்களில் மக்களின் மனோநிலையிலிருந்து நடத்தப்படுகின்ற உரையாடல்கள் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

அரசியல் பொதுவாழ்வில் ஈட்டுபட்டிருப்பவர்கள் செய்கின்ற சுயநலம் சார்ந்தோ அல்லது நிகழ்காலத்தில் எடுக்கப்படுகின்ற குழப்பமான முடிவுகளால் வரலாற்றில் நீங்காத பழிக்கு ஆளாகின்றார்கள். இன அழிப்பு விவகாரத்தில் கலைஞரின் நிலை அதுதான். சர்வதேச அளவிற்குச் சென்றுவிட்ட இனஅழிப்பினையும் இறுதிகட்டப் போரையும் நிறுத்தக்கூடிய அத்துனை அதிகாரமும் கலைஞரிடம் மட்டுமே இருப்பது போன்ற பிம்பம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதையும், போருக்கு பாசிச அரசாங்கத்துக்கு உதவிகள் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கம் மக்களைக் காக்கும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்ததைப் பதிவு செய்திருப்பது அறியாமைப் பொதுமக்களின் இறுதி எதிர்பார்ப்புக்கள் இவை தவிர வேறெதுவும் இல்லை என்பதாக இருந்திருகிறது என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். அந்த எதிர்பார்ப்பின் ஏமாற்றம் இன்றைய வரைக்கும் உணர்வாளர்களால் கட்டமைக்கபட்டுக் கொண்டிருகிறது.

இனஅழிப்புக்குப் பிறகானக் கொடூர வதைமுகாம் பற்றிய கதைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக் கொண்டேயிருப்பதைப் போல்தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளன. வதைமுகாம் வாழ்விற்குப் பிறகானக் குடியமர்த்தப் பணிகளில் உள்ள NGOகள், பன்னாட்டுக் கம்பெனி நிறுவனங்களின் வாயிலாக ஒரு நிலவமைப்பின் வாழ்வியல் முறைகள் எவ்வாரெல்லாம் தன்மையிழப்புச் செயப்படுகின்றன. அவற்றையெல்லாம் விட இயக்ககங்களில் இருந்தவர்களது வாழ்வும் குடும்பமும் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகின்றன என்பதையும். இலங்கை சிங்கள பாசிச அரசாங்கத்தால் கைதியாக்கப்பட்டுத் தொலைந்து போன மக்களின் உறவுகளின் சமகாலத் தொடர் போராட்டங்களை அரசாங்கமும் ஊடகங்களும் எவ்வாரெல்லாம் இருட்டடிப்புச் செய்கின்றன என்பது வரை இறுதிப் பக்கம் வரை ஒரு நிலப்பரப்பின் முப்பதாண்டுகால வரலாற்றினைச் சொல்லிச் சென்றிருக்கிறார் சயந்தன்.

புத்தகம் படித்து முடித்து எழுத்தாளர் சயந்தனிடம் பேசிய போது மூன்றாண்டுகள் தொடர் பயணங்கள் மேற்கொண்டு தகவல்கள் சேகரித்து எழுதியதாகக் குறிபிட்டார் எழுத்தாளர் சயந்தன். அவரது உழைப்புக்கான மிகப்பெரிய பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்து நிலபரப்பு மற்றும் வரலாறுகளை முற்றிலும் இல்லாவிடிலும் ஓரளவு அரசியல் புரிதலுடன் தெரிந்து கொள்ள நிச்சயம் “ஆதிரை” மிகப்பெரிய ஆவணமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

By

Read More

× Close