நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.

ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.

நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.

பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.

ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.

இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)

என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?

ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..

முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..

By

Read More

தமிழ்மணத் தடையினை உடைத்தவன் நான்

என்ன பாக்கிறீங்க.. ஆச்சரியமா இருக்கா.. இவனுக்கு மட்டும் எப்பிடி 34 வது பின்னூட்டத்தினையும் தமிழ்மணம் திரட்டுது என்று தானே ஆச்சரியப் படுறீங்க.? தடைகள் தாண்டப்பட வேண்டியவை அல்ல.. தகர்த்தெறியப்பட வேண்டியவை என்று என்ர ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார். அதனால என்ர அறிவைப் ? பாவிச்சு …. … இந்த இடத்தில நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க. இவன் சுத்துறான் எண்டு.

சத்தியமா எனக்கொண்ணும் தெரியாதுங்க. வெறும் 8 பின்னூட்டத்தை 34 பின்னூட்டம் எண்டு காட்டுறதில எனக்கொண்டும் பிரச்சனையில்லைத்தான். ஆனா என்ர கவலையெல்லாம் இனி வாற 9வது 10வது பின்னூட்டங்கள் காட்டப்படுமா இல்லாட்டி 35 வது பின்னூட்டம் வரைக்கும் காத்திருந்து பிறகு தான் திரட்டுமா என்பது தான். (அப்பிடிப் பாத்தால் கூட 35 என்ற எண் 30 க்கு பிறகு வாறதாலை தமிழ்மணத்தில வராதே..)

By

Read More

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.

பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.

ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.

உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்
பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்
நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.
இடை வேளையுடன் திரை விழுந்தது.
ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை
திருத்தியெழுதப்பட்டதை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை
குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.
கொட்டட்டும்.

95 ஒக்ரோபர் 30 யாழப்பாண இடப்பெயர்வின் பின்னர் துயர் சுமந்து இடிந்து போயிருந்த காலத்தில் அவரது படைப்புக்கள் சோகத்தைச் சுமக்கின்றன.

இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு
அவலம் அன்றாட வாழ்வாச்சு
கறிக்கு உப்பானது கண்ணீர்
நாசித்துவாரங்கள் காற்றையல்ல
கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.
அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..
யாரறிவார்..

அதே நேரம் பொதுமக்களை நோக்கிய நம்பிக்கை அறைகூவல்களாக இருந்திருக்கின்றன.

எரியுண்டு போகுமா எம்மண்
நடவாது
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..
மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது
அசையாதென்பதறிக
எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்
படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.
குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி
புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?
கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்
உள்ளே வந்துள்ளான்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கு காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.
குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய
காட்டாற்று வேகக் கதைக்காரன்
வீட்டுக்கு வந்தள்ளார்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்
பழைய பேப்பர் வழங்குக
அவர் பாடநூல் அச்சிடட்டும்..
பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே
உமக்கு என்ன நடந்தது
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

பொதுவாக இவரது இத்தகைய உரைச் சித்திரங்களில் பிரதேச பேச்சு வழக்குக் கதையாடல்களும், பழமொழிகளும் நிறைந்திருக்கும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றைச் சொல்லும் போது

காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்
கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை
தலையில் கட்டிய தலைப்பாகையை
முதுகில் தொட்டுப் போவதென
உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.
எம்மை நாமே எழுதினோம்.
வெடிமருந்துடன் வந்தவனை
வேலும் வாளும் வெல்ல முடியவில்லை
வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.
கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.
யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்
மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்
நாறிக் கிடந்தது நம் வாழ்வு
வெள்ளைக் காரன் வெளியெறிய போது
சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.

குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயம் புதுவை இரத்தினதுரை, தான் தேர்ந்தெடுத்த போராட்டப் பாதையினூடு தன்னோடு பயணித்த சக தோழர்களின் பிரிவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரித்த திலீபனை அவர் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளையெனப் பாடுகின்றார்.

சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
‘கந்தன் கருணை’ யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.

இவர் ஈழப் போரில் நிகழ்ந்தேறிய சகல சமாதானப் பேச்சுக்களையும் ஒரு வித எச்சரிக்கையுணர்வுடனே அணுகியிருக்கிறார். வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை முன்னிறுத்தியே அவை பற்றிப் பேசுகிறார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு மாவீரர் தினத்தில் அவரது உணர்வுகள் இவ்வாறு இருந்திருக்கின்றன..

இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும் போதே
என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்..?
சம்பூ கொணர்ந்தோம்
சவர்க்காரம் கொணர்ந்தோம்
சீமெந்தும் முறுக்குக் கம்பியும்
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்ல முடியுமா அவர்களுக்கு

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி
முதுகிற் பாரச் சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.
இயேசுவே
எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி
ஆலமுண்ட நீல கண்டனே
எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு
அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்தபெருமானே
வெள்ளம் வருகுதென்றாயினும்
சொல்ல வேண்டாமா..?
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்
நாம் தான் தனித்துப்போனோம்

நிகழ்காலத்திலான அவரது கவிதைகள் சமாதான மாயையில் சிக்கிப்போன நிலைபற்றிச் சொல்கின்றன. சலிப்பினையும் விரக்தியினையும் ஏமாற்றத்தினையும் அவை பேசுகின்றன.

இந்தத் தடவை வானப் பயணம் போனவர்
வந்து இறங்கியதிலிருந்து
ஆவியாய் வெளியேறிக் கரைகிறது
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..
மேசையிலமர்ந்து பேசுவதென்பது
பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே
உறிஞ்ச வேண்டும்
விழுங்கக் கூடாது
சிரிக்க வேண்டும்
சிக்குப்படக்கூடாது

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று – சீனியற்று – மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

ஒரு உண்மையான பிற்சேர்க்கை:
2002 இல் நானும் நண்பர்களும் ஆரம்பித்த எழுநா என்னும் இணையத்திற்காக புதுவை இரத்தினதுரை அவர்களிடம் பெற்ற வாழ்த்து இது தனிப்பட என் சேமிப்பில் இல்லையாயினும் மினிவெளியில் ஏதோ ஒரு மூலையில் இருந்தது.

இன்று புது உதயம் எழுகிறது.
இணையமதை
வென்று நிலைத்து விடும் விருப்பில்
எழுநா எனும்
கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது.

நன்றென்று வாழ்த்தி
நான் மிதந்து கொள்கின்றேன்.

நீளக்கிடக்கின்ற நிலமெல்லாம்
நெடிதுயர்ந்து
ஆளும் நிலை தமிழுக்காகுமெனும்
நம்பிக்கை சூழ்கிறது.

எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..
உங்கள் தொண்டு மிக நெடிது.
வாழ்வீர்.
புதிய தொரு வரலாறு உமக்காகும்.

எழுநாவால் எழும் உலகு.
இனித்தமிழ்
தொழுதுண்டு வாழாதெனச் சொல்லி
நீ துலங்கு..

இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. ஆரம்பத்தில் இணையத்திற்கு உயிர்ப்பு எனத்தான் பெயரிட்டோம். புதுவையின் கவிதை கூட உயிர்ப்பு என்ற பெயரை மையப்படுத்தியே இருந்தது. (உயிர்ப்பால் உயிர்க்கும் உலகு என்றவாறாக..) ஆனால் சடுதியாகச் சில காரணங்களால் அதனை எழுநா என மாற்ற வேண்டியேற்பட்டது. கவிதையையும் மாற்ற வேண்டும். அவரும் மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில சரியான பிசி.. வேறை வழியில்லாமல் ஆங்காங்கே நானே கை வைக்க வேண்டியதாய்ப் போனது. ஆயினும் அது அவருக்கு அறிவிக்கப் பட்டது.

ஒரு உண்மையற்ற பிற்சேர்க்கை:
தம்பி சயந்தா உன் சாதனை மிகப்பெரிது என்று கூட ஒரு வரியைச் சேர்க்கலாம் என்றிருந்தேன். ஆனா சோமிதரன் தன்ர பேரையும் போட வேணுமெண்டான். சோமி உன் ஆற்றலைக் காமி என்றோ சோமி நீ எங்க குல சாமி என்றோ போட்டிருக்கலாம் தான். எண்டாலும் போடேல்லை 😉

By

Read More

இப்போ வந்த பின்னூட்டங்கள் இவை..

இந்த வலைப்பதிவின் பக்கத்தில், இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் ஒரு பகுதி இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் எனது வலைப்பதிவுக்கு கடைசியாகப் பின்னூட்டம் இட்டவர்களினுடைய பெயர்களும், பின்னூட்டங்களில் இருந்து சில வரிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும்.பின்னூட்டங்களினூடு, பதிவொன்றின் தொடர்ச்சித் தன்மையைப் பேண, இது பெருமளவு வழி வகுக்கிறது. இதனை நிறுவுதல் தொடர்பான சில குறிப்புக்களை இப்போது பார்ப்போம்.

உங்களது கிளாசிக் வார்ப்புருவில் இணைக்க வேண்டிய முதலாவது நிரலினை இவ்விணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். txt கோப்பாக கிடைக்கும் இந் நிரல் துண்டைப் படியெடுத்து, அவதானமாக உங்களது வார்ப்புருவின் <head> பகுதிக்குள் செலுத்துங்கள். குறிப்பாக </head>என்னும் பகுதிக்கு மேலாக செருகுதல் உங்களுக்கு இலகுவானதாக இருக்கும்.

இனி உங்கள் வலைப்பதிவில் இறுதியாக இடப்பட்ட பின்னூட்டங்கள், காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடத்தைத் தீர்மானியுங்கள். பொதுவாக side bar எனப்படும் பகுதியில் இடுவதே பொருத்தமாயிருக்கும். உங்களது வார்ப்புருவில் அதற்கான பகுதியைத் தெரிந்து கொண்டு இவ்விணைப்பில் உள்ள நிரல்த் துண்டினை இணைத்து விடுங்கள்.

இங்கு yourName என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுப் பெயர் உள்ளிடப்பட வேண்டும் என்பதை, நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்மென்பதில்லை. அது போலவே numcomments என்னும் variable, காட்டப்பட வேண்டிய பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும், numchars என்பது ஒவ்வொரு பின்னூட்டத்திலும் காட்டப்படவேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தெரிவு செய்ய முடியுமாயினும் 10 பின்னூட்டங்களும் 100 சொற்களுமே போதுமானவை.

இனி layout வார்ப்புருவில் இறுதிப் பின்னூட்டங்கள் தொடர்பாகப் பேசுவோம். அதில் இவ்வாறான சுத்துமாத்து வேலைகள் தேவையில்லாத வகையில், புளொக்கர் நேரடியான சேவையை வழங்குகிறது.

உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.

இப்போது பின்னூட்டங்களுக்கான Feed url இனை நீங்கள் அதில் கொடுக்க வேண்டியிருக்கும். கீழுள்ள இறுதிப் பின்னூட்டங்களுக்கான Feed url இனை அங்கு இட்டு, Continue இனை அழுத்துங்கள்.

http://yourName.blogspot.com/feeds/comments/default?start-index=2

yourName பகுதியில் வலைப்பதிவின் பெயரெழுத மறக்க வேண்டாம்.

இப்போது திரட்டப்படும் பின்னூட்டங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும். அதில் தரப்பட்டுள்ள தெரிவுகளுக்கேற்ப சில மாறுதல்களை, அதாவது பின்னூட்டத்தினை இட்டவரின் பெயர் மற்றும் திகதி என்பவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம். Title பெயர் கொடுக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

முடித்தாயிற்றா..? இனியென்ன உங்கள் வலைப்பதிவில் இறுதிப் பின்னூட்டங்கள் இப்போது தயார்.

குறிப்பு: இதனை வெற்றிகரமாக நீங்கள் நிறுவினால் உங்களால் ஒரு விடயத்தை அவதானிக்க முடியும். அதாவது கடைசிப் பின்னூட்டத்திற்கு முந்தைய பின்னூட்டம் வரையான பின்னூட்டங்கள் திரட்டப்படுவதே அது. உண்மையில் இறுதி வரையான பின்னூட்டங்களைத் திரட்டுவதற்குரிய Feed

http://yourName.blogspot.com/feeds/comments/default

என்பதே. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர், சடுதியாக இது ஒரு வருடத்திற்கு முந்தைய பின்னூட்டங்களைத் திரட்டத் தொடங்கியது. அதனால் சில மாறுதல்களைச் செய்து இறுதிக்கு முந்தைய பின்னூட்டம் வரை திரட்ட வழி செய்யப்பட்டிருக்கிறது.

By

Read More

என்னத்த காதலும் கவிதயும்

இந்தக் கவிதையை எதற்காக இங்கிட்டேன் என்று சொல்வதற்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் சும்மா சடைதலுக்காகவேனும் காதலர் தினத்துக்காக இக்கவிதையை இங்கிடுகிறேன் என சொல்லிக் கொள்கின்றேன். மற்றும் படி காதலர் தினத்துக்கு கவிதையோ சிறப்பு நிகழ்ச்சிகளோ ஏற்பாடு செய்யும் நோக்கமெதுவும் எனக்கில்லை.

கவிதையின் ஒரு சில Samples பாருங்க..

வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் – என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.

ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.

காதல் ரசம் வழிந்து வாய்க்கால் வழியோடும் இந்த கவிதையின் முழுப் பதிவையும் கேளுங்கள்… கேளுங்கள்.. கேட்டுக் கெட்டே இருங்கள்..


By

Read More

× Close