யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க
ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாங்கள் யாழ் நூலகத் திறப்பு விழா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு புலிகளுக்கு செல்லன் கந்தையன் அவர்களின் சாதி ஒரு காரணம் இல்லையென்றும் அன்றைக்கு அவர்களோடு முரண்படத்தொடங்கியிருந்த ஆனந்தசங்கரிதான் பிரதான காரணம் என்றும் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கிறோம். ஏனெனில் திறப்பு விழா செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்தாலும் நூலகத்தை ஆனந்தசங்கரியே திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தோன்றிய முறுகல் ஒரு தனியான அரசியல் விவாதம். அவர் புலிகளை மிகத் தீவிரமாகச் சீண்டினார். எரிச்சல் படுத்தினார். அவர்களுடைய கட்டளைகளுக்கு வெளியில் துணிச்சலாக வந்துநின்றார். புலிகள் இயக்கத்தை விமர்சித்து அதன் தலைவர் பிரபாகரனுக்கு மாதமொருமுறை கடிதம் எழுதினார். புலிகள் அவருடைய கேள்விகள், குற்றச்சாட்டுகள் எதற்கும் பதிலோ மறுப்போ சொன்னதில்லை. அது புலிகளுடைய உளவியல். ஆயினும் ஆனந்தசங்கரியின் ஒரு சாதனையைப்போல நிகழ இருந்த நூலகத்திறப்பை அவர்கள் தடுத்து நிறுத்துவதென்று தீர்மானித்தார்கள்.மறுபுறத்தில் எரிக்கப்பட்ட நூலகத்தை திறப்பு விழா செய்வதன் மூலம் வேறு அரசியலை செய்ய முனைந்த ஜானாதிபதி சந்திரிக்காவின் அரசியலையும் புலிகள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கையில் அவர்கள் ஒரு அதிகாரபூர்வ குரலை வழங்க நினைக்கவில்லை. இதற்கு முன்னரும் பின்னரும் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அதிகாரபூர்வ அறிவிப்பு புலிகளிடமிருந்து வெளியானதில்லை. மாறாக அதை சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களுக்கு ஊடாகவே நிகழ்த்திக் காட்டினார்கள். ஒரு அமைப்பின் நடவடிக்கையாக இல்லாமல் மக்கள் போராட்டமாக மற்றுவது புலிகள் மட்டுமல்ல உலகின் பல போராட்ட அமைப்புகளும் கைக்கொள்ளும் வழிமுறைதான்.

நூலக விவகாரத்திலும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கங்கள், மற்றும் ஒன்றியங்கள் முதலான மக்கள் அமைப்புகளுக்கு ஊடாகவே தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினார்கள். வர்த்தக சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஏற்பாடு செய்தன. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ இருந்தன. திறப்பு விழா ரத்துச் செய்யப்பட்டது. விழா விளம்பரங்கள் ஆர்ப்பாட்ட அரசியல் எதுவும் இன்றி இரண்டொரு வாரங்களில் நூலகம் இயங்கத்தொடங்கியது.

இந்த இடத்தில் புலி விரோத அரசியலின் ‘ஓட்டுமாட்டு’ ஆரம்பிக்கிறது. மக்களுடைய பக்கத்தில் நின்று புலிகளை விமர்சிப்பதற்கான சில நூறு காரணங்களை புலிகளே உருவாக்கி அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் இப் புலி விரோத அரசியல்காரர்கள் வேறொரு வகைத் தினுசானவர்கள். அவர்களுடைய புலி விரோத நிலைப்பாடு பெருமளவுக்கு மக்கள் நலன் சார்ந்தது அல்ல. அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான பழைய பிணக்குச் சார்ந்தது. பழி தீர்த்தல் வகையானது. பாதிக்கப்பட்டவர் பழி தீர்க்க முடியாதா என்றால் நிச்சயமாகத் தீர்க்கலாம். ஆனால் அதற்கு மக்கள் நலன் என்று பள பளக்க மினுக்கக் கூடாது. 2009இற்கு முன்னர் புலம்பெயர் நாடுகளில் இயங்கிய புலி விரோத அரசியல் பழி தீர்க்கும் அரசியல்தான்.

அவர்கள் யாழ் நூலகத் திறப்புத் தடுக்கப்பட்டதை தலித் அரசியலாக்கினார்கள். அதைத் தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு “பாவிக்கத்தொடங்கினார்கள்” மேயர் செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரது தலைமையில் நடக்கவிருந்த நிகழ்வை புலிகள் தடுத்தார்கள் என்றும், அவருடைய பெயர் கல்வெட்டில் வந்துவிடக் கூடாதென்று பதறிய யாழ்ப்பாணத்தார் (அவர்கள் பதறக்கூடியவர்கள்தான்) புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து – புலிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து நூலகத் திறப்பினைத் தடுத்துவிட்டார்கள் என்றும் உண்மைக்கு மாறாக அவர்கள் நிறுவ ஆரம்பித்தார்கள். தங்களுடைய புலி விரோத அரசியலுக்கு முட்டுக்கொடுப்பதற்காக தலித் அரசியலை “பாவிக்கத்தொடங்கினார்கள்” தலித் அரசியல் இன்னொருவரால் தன்னுடைய தேவைக்குப் “பாவிக்கின்ற” அரசியல் இல்லை.
இந்த விவகாரத்தை முன்வைத்து புலிகளை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விரோதிகளாக முன்வைத்தவர்களில் ஈழச் சூழலில் ஷோபாசக்தி முதன்மையானவர். 2007இல் அவர் எழுதிய வசந்தத்தின் இடிமுழக்கம் தொகுப்பில் நூலகத் தடுப்புப் பற்றி அவர் “கேள்விப்பட்ட” பல்வேறு தகவல்களை நிரப்பி நிரப்பி அதைப் படிப்பவர்களுக்கு “தலித் விரோதப் புலிகள்” என்ற சித்திரத்தை “வலு கிளியராக” ஏற்படுத்துகிறார்.
ஈழப்போர் பின்னணியில் ஒரு திடுக்கிடும் த்ரில்லரைத்தொடங்குவதைப்போல – வன்னியிலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமனும், இன்னொரு விடுதலைப்புலி உறுப்பினரான சிறிலும் – கஜேந்திரனும் அலுவலகத்தில் நுழைந்து செல்லன் கந்தையனை மிரட்டுகிறார்கள் என்று காட்சியை விபரிக்கிறார். இங்கே , அதுநாள் வரை யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவராயிருந்த சொலமன் சிறில் என்ற ஒருவரை – ஷோபா சொலமன் என்றும் சிறில் என்றும் இரண்டு பேராக்கி அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று புலிகள் இயக்கத்தில் இணைத்தும் விடுகிறார். அப்பொழுதுதான் புலிகள் தலித் விரோதிகளாயிருந்தார்கள் என்ற சித்திரம் உருவாகும்.

தொடர்ந்தும் புலிகள் செல்லையனை மிரட்டினார்கள், இரத்தக்களறி ஏற்படும் என்று வெருட்டினார்கள், இதற்கு முன்னரே புலிகளால் மாமனிதராகப் போற்றப்பட்ட ரவிராஜ் செல்லன் கந்தையனை பூட்டிய அறைக்குள் வைத்து சாதி ரீதியாக அடித்தார்.. என்று ஷோபா எழுதுகிறார். கவனியுங்கள். செல்லன் கந்தையனைச் சாதி சொல்லி அடித்த ரவிராஜ்ஜை புலிகள் மாமனிதர் ஆக்கினார்கள் என்பதற்கு ஊடாக புலிகளைப்பற்றி உருவாக்க விரும்புகிற சித்திரத்தை நன்றாகக் கவனியுங்கள். ரவிராஜ், செல்லனை சாதியால் திட்டி அடித்தாரா?. சற்றுப் பொறுங்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக நூலகத் திறப்பு விழா தடுக்கப்பட்டதற்குரிய பிரதான காரணம் ஆனந்தசங்கரிதான் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டே வருகிறோம். அதாவது ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்று சொல்கிறோம். ஆனந்த சங்கரி திறக்கவிருந்த நிகழ்வினை அன்றைக்கு செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த ஓர் ஏலியனே தலைமை தாங்க இருந்தால்கூட புலிகள் அதை நிறுத்துவதற்கான சூழலே அங்கு நிலவியது. இதை அண்மையில் குறிப்பிட்டபோது “ஊகங்களின் அடிப்படையில் பேசாதீர்கள், இவ்வாறு செல்லன் எங்காவது சொல்லியிருக்கிறாரா” என்று ஷோபா சக்தி கேட்டார். ஆம். செல்லன்தான் சொன்னார்.

இன்னோரு இடத்தில் ஒருவேளை செல்லன் கந்தையாவிற்குப் பதிலாக இன்னொரு வெள்ளாள மேயர் இருந்திருந்தால் ஆனந்தசங்கரி நூல் நிலையத்தைத் திறக்க புலிகள் அனுமதித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா என்று ஷோபாவிடம் கேட்டபோது அவர் “நிச்சயமாக, ஜோராக திறப்பு விழா நடந்திருக்கும்” என்றார். அதாவது புலிகளுக்கு ஆனந்தசங்கரி பொருட்டில்லை. ஒரு வெள்ளாளர் தலைமை தாங்கினால் போதும் என்கிறார். அது அப்படியல்ல ஷோபா. உங்களை விடவும் செல்லன் கந்தையாவிற்கு ‘க்ரவுன்ட் சிற்றுவேசன்’ நன்றாகப் புரிந்திருந்தது. அவர் சொல்வதைக் கேளுங்கள்.

இறுதியாக,எரிக்கப்பட்ட நூலகம் ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளைப் புறம் தள்ளி, சந்திரிகாவின் ஒரு சாதனையாகப் போற்றப்பட்டு ஆனந்தசங்கரியால் கோலாகலமாகத் திறக்கப்பட இருந்த திறப்பு விழாவை புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்த ‘பிக்கல் பிடுங்கல்களினால்’ புலிகள் தடுத்து நிறுத்தியபோது – அதற்குத் தலைமை தாங்கவிருந்த செல்லன் கந்தையனின் பெயர் கல்வெட்டில் வரவில்லை என்பதனால் “அப்பாடி” என்று ஆறுதல்பட்டிருக்கக் கூடிய ஓர் உயர் சைவ வெள்ளாளக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமென்பதை நாம் அறிவோம். அவர்களைக் கருத்தியல் ரீதியாக மனமாற்றமடையச் செய்யும் தீவிரமான அறிவுச் செயற்பாடுகளை புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது முன்னெடுக்கவில்லை என்பதை நாமும் ஒரு கருத்தாகப் பதிவு செய்கிறோம்.

இதன் அர்த்தம் புலிகள் அவர்களுக்கு ஆதரவான ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள் என்பது அல்ல. அவர்கள் சட்டங்கள் மூலம் சாதிய அடக்குமுறையை ஒடுக்க முனைந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து அச் சமூக அமைப்பிற்கிடையில் போராடி அரசியலில் தன்னை இணைத்து சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒதுக்கல்களை எதிர்கொண்டு யாழ் மேயராகி சாதிய சனாதன சமூகத்தில் நிலைத்து நின்ற செல்லன் கந்தையனை புலிவிரோத அரசியலுக்கு பயன்படுத்துவதை சுட்டிக்காட்டுவதே எமது நோக்கம். புலிவிரோத அரசியலுக்கு தலித் அரசியலை பயன்படுத்துவதற்க்காக புனைவுகளை உருவாக்குவதை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
செல்லன் கந்தையன் குறித்த முழுமையான ஆவணப்படம் ஒன்று வெளிவருகிற போது யாழ்ப்பாணத்தில் ஒரு தலித்(பஞ்சமர்,அடக்கப்பட்டவர் ) மாநகரத்தின் தந்தையாக வந்த கதை முழுமையாகத் தெரிய வரும். யாழ் நூலகத் திறப்பு குறித்து அவரின் கருத்தும் கூட்டமைப்பு-புலிகள்- ஆனந்தசங்கரி என்ற மூன்று அரசியலும் கிழே உள்ள காணொலியில்

-சயந்தன் – சோமிதரன்
11.06.2020

By

Read More

ஆறாவடு! இது எங்கள் கதை…

சயந்தனின் ஆறாவடு

குளிரும் இரவொன்றில், வானம் நட்சத்திரங்களை மேகங்களுக்குள் ஒளித்து வைத்த இராத்திரியொன்றில்,
அரை வயிறு உணவும் இரப்பைக்குள் சுழன்று தொண்டைக்குள் தாவும் நிமிடங்களில், கால்கள் கொடுகிக் கொண்டிருக்க, தூக்கத்தின் பிடியிலிருக்கும் கண்களை இமைகள் மூடாமல் காவல் செய்திருக்க, ஒரு சாரத்தை இழுத்துப் போர்த்தியபடி, பெருங்கடல் வெளியொன்றில், திசைகளைத் தின்றபடி மேலும் கீழும் குதித்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும், படகு நிச்சயம் இத்தாலிக்கு தான் பயணமாகிறது எனும் சொச்ச நம்பிக்கையில் தாய் நிலத்தை விட்டு பரதேசிகளாக, அகதிகளாக, நிலமற்றவனாக வெளியேறிய பலரது பட்டியியலில் அமுதன் என்பவனை தேடிப் பிடித்து அவன் கதைகளை, அவன் துயரை, அவனுக்குள் இருக்கும் ஆறாத காயத்தை பதிவு செய்தால் அதுவே ஆறாவடு.

நிலத்தை இழந்தவனின் கதை தான். ஆயினும் அது மூன்று தசாப்த காலப் போரில் நம் மண் உணர்ந்த கதை.

போரிலக்கியம் என்றால் என்னவென்று ஒரு விவாதமே முகநூலில் கிளம்புகிறது.

ஈழத்தை பொறுத்தவரை புலி ஆதரவு எல்லாமே போரிலக்கியம், மாறி ஒரு வரி எழுதப்பட்டாலும் அது புருடா, புரட்டு, இலக்கியத்தின் தகுதியை இழக்கிறது, போரிலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாதவன் எழுதியது என்று கருத்தாகும்.

போரில் சின்னாபின்னமான எதிரியின் கதை கூட போரிலக்கியம் தான், பனங்கிழங்கு விற்று சீவியம் நடத்திய கிழவியின் கண்ணெதிரே சில பனை மரங்கள் எரிந்து போன கதையும் போரிலக்கியம் தான். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த பலரும் நமது உயிருக்கு ஆபத்து இல்லை என்கிற ஆயுள் உத்தரவாதத்தின் அடிப்படையில் போரிலக்கியம் போரிலக்கியமாக எழுதிக் குவிப்பது தான். ஈழத்தின் புலம்பெயர் எழுத்தாளர்களின் பத்து வருட, இல்லை இல்லை சரியாக பதினொரு வருட சாதனை.

இந்த சாதனைப் பட்டியலில் ஆறாவடு நாவலும் ஒன்று. அப்படித்தான் இலக்கிய உலகம்…. மன்னிக்கவும், போரிலக்கிய உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனது வீட்டில் வழமைக்கு மாறாக சில சம்பவங்கள் நடக்கும், அதிலொன்றுதான், என் புத்தக அலுமாரியில் எனது சின்னக்காவில் கைகள் எதையோ தேடுவது….

ஆறாவடு நாவலின் மூன்று பகுதிகளை வாசித்து விட்டு பாவம்டா… அந்தாள் (அமுதன்) இத்தாலி போய் சேர்ந்திட்டானா… புத்தகத்தை முடிச்சிட்டாதானே என்ன நடந்த சொல்லன் என்று அம்மாவிடம் சீரியல் கதை கேட்கும் பாணியிலே அவள் கேட்டது எனக்கு அதிக வியப்பை தரவில்லை…

காரணம் சயந்தனின் கதை சொல்லும் திறன் அவ்வளவு நன்றாக இருந்ததும், அது என்னை ஈர்த்திருந்ததுமே.

மிகுதி இரண்டு பாகம் வாசித்தாள்… என்ன இத்தாலி தானே போனவர் அதுக்குள்ளை வேற ஆக்கள்ட கதை வருகுது என்ற படி புத்தகத்தை மூடிக் கொண்டாள். நீயெல்லாம் ஈசாப் நரிக்கதை வாசிக்கத்தான் லாயக்கு என்று தோன்றியது. ஆனாலும் சொல்லவில்லை.

குண்டுப்பாப்பா நிலாமதியின் கதையின் தொடக்கத்தோடு மூடிவிட்டாள். நாவல் அதனோடே தனக்கான சிறுகதைகளை நாவலுக்குள் கட்டமைக்கத் தொடங்கிவிட்டது. அவை எல்லாமே வடுக்கள் ஆறாவடுக்கள்.

கள்ளத் தோணியில வந்த ஆக்களே… என்று விமானத்தில் சென்றவன் கேட்கும் நிலையில் தான் பல போராளிகளின், யுத்தத்தால் அவதியுற்ற மக்களின் கதை இருந்தது.

இத்தாலியப் பயணத்தில் ஏஜன்சி, சோமாலிய கடற் கொள்ளையர்கள், சுயஸ் கால்வாய் என நீளும் கதை எரித்திரியாவோடு முடிந்து போனது.

நான் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படித்தான் எழுதினேன்.

எரித்திரியாவின் தலையில் எழுதப்பட்ட விதி ஈழத்தின் பிட்டத்தில் கூட எழுதப்படவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு நாடுகளின் ஆயுதப்போராட்டக் காலமும் ஒன்று தான். அவர்களுக்கு எரித்திரியா நிச்சயிக்கப்பட்டது. எங்களுக்கு தமிழீழம் பல மாவீரர்கள், மறத்தமிழர்களின் பிணங்களோடே புதைக்கப்பட்டது.

இத்திரிஸ் போன்றவர்கள் அதிஸ்டசாலிகள் தாய்நிலத்தில், காலை இழந்தாலும் கனவை ஜெயித்து வாழுகின்றவர்கள். நாங்கள் காலையும் இழந்து தலையையும் இழந்து வாலையும் இழந்து நிற்கும் முண்டங்கள்.

இங்கு யுத்தத்தை கண்ட, யுத்தத்தில் மரித்த, கந்தகத்துக்குள்ளே பிறந்த அனேகரின் கதை கிடக்கிறது. அத்தனையும் போரிலக்கியமே அவைகளும் அவர்களால் எழுதப்படும். அவைகளும் போரிலக்கியமா… சே… என்று உமிழப்படும்.

ஆயினும் இது எங்கள் கதை…
இது எங்கள் வலி
இது எங்கள் வடு

அதில் ஒரு துளியை சயந்தன் நாவலாக்கியிருக்கிறார். சயந்தனின் எழுத்துக்களுக்குள் இன்னுமொரு கதை சொல்லி பிறக்க வேண்டும். பிறப்பான் என நம்புவோம்.

அன்புடன் இந்திரா.

-நீலாவணை இந்திரா

By

Read More

ஆதிரை ஒரு பெரும்படைப்பு

இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில் இந்த நாவல் மிக முக்கியமான படைப்பு. 1980 களின் தொடக்கத்திலிருந்து 2010இன் தொடக்ககாலம் வரையிலான அகன்ற பரப்பில் பயணமாகிறது. பொதுவாக ஈழப்படைப்புகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது என்பதான செயல்பாடுகளில் முன்னதாக நிற்கும் கேள்வி நீ எந்த தரப்பைச் சார்ந்தவன் என்பதுதான். சயந்தன் ஏறத்தாழ ஒரு பார்வையாளராக எல்லாக் குரல்களுக்கும் இடமளித்திருக்கிறார். எளிமையாக செவனேன்னு விவசாயம் பார்த்துக்கொண்டு, மலையில் தேயிலை கொழுந்து பறித்து எளிமையாக வாழ்ந்துகொண்டிருந்த இரண்டு குடும்பங்கள் ஈழப்போரின் 30 ஆண்டு காலத்தில் சிதைந்து உருக்குலைந்து போவதன் பின் புலத்தில் ஈழ மண்ணின் சமூக பண்பாட்டு அரசியல் வரலாற்றை நுட்பமாகப் பதிவுசெய்கிறார். கதைமாந்தர்களை வளர்த்து நாவலின் இறுதிக்கு வரும்போது மனம் பெரும் சஞ்சலத்திலும் வெறுமையிலும் ஆழ்ந்துவிடுகிறது. நாவலின் பிற்பகுதி மிகப் பெரும் குற்றவுணர்க்குள் நம்மைத் தள்ளிவிடுகிறது. அந்த வரலாற்றுத் துயரத்தை ஒரு பார்வையாளர்களைப் போல் கடந்துவிட்டவர்கள்தாமே நாம். ஒரு கிளாசிக் தன்மையுள்ள நாவலாக இருப்பதால் தடையற்ற வாசிப்பனுபவம் வாய்க்கிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும் படைப்புகள் இல்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பெரும் மனிதத் துயரங்களைத் தம் வாழ்பனுபவங்களின் ஊடாகக் கடந்த தமிழ்ப்படைப்பாளிகள் இல்லை என்பதே அதற்குக் காரணமாகவும் சொல்லப்பட்டது. இனியும் அப்படிப் புலம்பவேண்டியதில்லை. ஆதிரை ஒரு பெரும்படைப்புதான்.
-Prabahar Vedamanickam

By

Read More

ஆதிரை – உள்ளும் புறமும்

ஆதிரைக்கான எனது தேடல் மிக நெடிது. இந்த புத்தகம் குறித்தான சில குறிப்புக்களை முக நூலில் படித்த காலத்திலிருந்து கிடத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னரே இந்த புத்தத்தினை வாசிக்க கிடைத்தது தம்பி ஜெனோஜனின் புண்ணியத்தினால். ஒரு நூல் அல்லது நாவலுக்கான பீடிகை இன்றி அதாவது முன்னுரை, முடிவுரை, பதிப்புரை போன்ற இன்னோரன்ன உரைகளின்றி அமைந்திருப்பது அதனுடைய புறச்சிறப்பு. அதற்க்கு பீடிகைகள் எதுவும் தேவையில்லைதான். ஏனெனில் அங்கே வரும் பாத்திரங்களும், சம்பவங்களும் நாம் அறியாததோ அல்லது அனுபவப்படாதவையோ அன்று.

ஆதிரை பற்றிய எனது முன் பதிவு (pre- assuming) என்பது இவ்வாறே இருந்தது; நிட்சயமாக அது ஒரு பெண் போராளியின் வாழ்வு ஒன்றாக இருக்கும் மற்றும் அவளே அந்த நாவலின் மூல விசையாக (pivotal force) இருப்பாள். ஆனாலும் நூலில் நான் எதிர்கொண்ட யதார்த்தம் எனது எதிர்பார்ப்பு அல்லது முன்பதிவினை எதிர்நிலைக்கு தள்ளியது. ஆதிரையை தேடி தேடி நான் அலைந்து வன்னி மண்ணின் தெருக்களின் புழுதிகள் படிந்ததுதான் மிச்சம். கடைசியில் நாவலின் இருநூற்று பதினேழாம் பக்கத்தில் முதன்முதலில் ஆதிரை குறித்து இவ்வாறான ஒரு குறிப்பினை காண கிடைத்தது.

“நின்ற நிலையிலேயே அண்ணாந்து வானத்தினை பார்த்தாள். மேகங்கள் நிலவினை விட்டு வெகுதூரத்தில் திரிந்தன. மிளகாய் காணியில் இரவில் மலரும் பூக்களாய் வெள்ளிகள் பூத்திருந்தன. பெரிதாய் பிரகாசமாய் ஒன்று மினுங்கியது. ஆதிரை “

ஈழ தமிழர்களின் ஆதி மதம் சைவமாகவே இருந்தது என்பதுவும்; ஈழ சைவர்களில் பெரும்பாலானோர் சிவனை முழு முதற்கடவுளாய் வழிபடுவோர் என்பதும் நாமறிந்த சங்கதிகள். சிவனின் தோற்ற நட்சத்திரம் ஆதிரை என்பதும்; சிவன் முத்தொழில்களில் அழிவினை செய்பவன் என்பதுவும்; மயானத்து வெளிகளிலும் போர்களங்களிலும் அவனின் ருத்திர வடிவம் மிளிரும் என்பதும் பாமர மக்களுக்கு சற்றே அப்பாற்பட்ட சங்கதிகள். இந்த பெயர் தேர்வுக்கான மேலோட்ட காரணங்கள் இவையாக இருக்கலாம். இந்த தேர்வுக்கான அழகியல் மற்றும் அரசியல் நியமங்களை பின்னர் பார்க்கலாம்.

இதனை விடவும் மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை எனும் பாத்திரம் வருவதையும் அது தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு வழிபாடு செய்யப்படுதலையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தனிக்கல்லடி

நாவலின் மைய சம்பவங்கள்(strategic events) நிகழும் இடமாக இந்த ஊர் உள்ளது. வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைபுறத்திலிருந்து சற்றே உள்ளேயும்; காட்டினை அண்டிய ஒரு குக்கிராமமாக இருப்பதுவும் கதையின் தொடர்ச்சிக்கான அத்திவாரத்தினை மிகப்பலமாக இடுகின்றது. கதையின் பிந்தைய பகுதிகள் இருட்டு வளவில் நிகழ்வதாக இருப்பினும்; தனிக்கல்லடி என்பது நிலத்துக்கும் மாந்தருக்குமான பிணைப்பின் மூலமாக இங்கே எழுத்தாளரினால் கையாளப்படும் நிலம் சார்ந்த குறியீடாகும்.

“நிலக்கிளி” நாவல் வாசிப்பின் பின்னர் முற்று முழுதாக வன்னியின் காடுசார் கிராமம் ஒன்றில் சஞ்சரித்த அனுபவத்தினை “ஆதிரை” என்னுள் அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

அத்தார்- சந்திரா

கதையில் பல்வேறு பாத்திரங்கள் வந்திருந்தாலும் கதையின் மைய பாத்திரங்களாக அல்லது கதையினை நகர்த்தி செல்லும் பாத்திரங்களாக அத்தாரும் சந்திராவுமே இருக்கின்றனர். சமவுடமை எனும் பழமையான கோட்பாடு இந்த இரு பாத்திரங்களை இணைக்கும் ஒரு வலுவான கயிறாக இருந்தபோதிலும்; ஈழபோராட்டம் குறித்த சமவுடமையின் இரு நோக்குகளை இந்த இரு பாத்திரங்களின் ஊடாக நூலாசிரியர் வெளிக்கொணர்கிறார். இதில் வரும் ஆணின் நோக்கென்பது சமவுடமையின் மேலோட்ட நோக்கினை(superficial apporoach) வலியுறுத்துகிறது. அதாவது தேசிய விடுதலை போராட்டமென்பது தமிழரின் சமூகத்தில் புரையோடிப்போன சாதிய அடக்குமுறையினை முற்றாக துடைத்தெறிந்து விடும் என்ற ஒற்றை நம்பிக்கையே, அத்தாரின் தேசிய விடுதலை இயக்கத்திற்கான வரன்முறையற்ற ஆதரவுக்கான அடித்தளமாகிறது.

மறுபுறத்தே சந்திராவினூடு கதாசிரியர் வெளிக்கொணர்வது விடுதலை இயக்கம் மீதான விமர்சனங்களும் மற்றும் முற்று முழுதான மானிட விடுதலையினையுமே. பொதுவாக விடுதலை போராட்டமும் அது சார் இலக்கியங்களும் பெண்ணிய விடுதலையினை வலியுறுத்தி வந்த போதிலும் அது வரைமுறைக்குட்பட்டதே. ஏனெனில் இங்கு தீர்மானிப்பாளர்கள் யாவும் ஆண்களே. ஆனால் விடுதலைபுலிகளின் காலம் இவற்றிலிருந்து சற்றே மேம்பட்ட போக்கினை காண்பித்தது என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையாகும். இந்த பின்னணியில் கோட்பாட்டு ரீதியான சில உடைப்புகளினை சந்திராவினூடே கொணர்வது கதாசிரியரின் நுட்பமே. இதன் விரிவாக்கம் யாதெனில் நான் வாசித்த போர்க்கால மற்றும் அதற்கு பிந்தைய இலக்கியங்களிலே வரும் பெண் கதாபாத்திரங்கள் அனேகமாக விடுதலை இயக்கம் சார்ந்தே படைக்கப்பட்டிருக்கும். ஆனால் சந்திராவின் பாத்திரம் இங்கே மற்றொன்றாக படைக்கப்பட்டிருப்பது “ஆதிரைக்கு” இன்னொரு பரிணாமத்தினை ஈகின்றது.

ஆனால் சந்திராவினதும் அத்தாரினதும் முடிவுகள் அவர்கள் வரித்து கொண்டிருந்த கொண்டிருந்த கோட்பாடுகளின் முடிவு அல்லது இயங்காநிலையினை எடுத்தியம்புகின்றன. அங்கே அத்தார் யாரென அடையாளப்படுத்தபடுவது இவ்வாறே; “இந்த அம்பட்ட கிழவரை எனக்கு தெரியும். ஒரு வேளாள பெண்ணை முடித்திருந்தவர் “. இங்கே துப்பாக்கிகளின் மௌனத்தின் பின்னே , விடுதலை போர் காலத்தில் உறங்கு நிலையில்ருந்த சமூகத்தின் பிற்போக்குதனங்கள்(social supersitions) மேலெழுவதை காண்கிறோம். ஒரு வகையில் சந்திராவும் அத்தாரும் இறந்திருக்க வேண்டாம் என வாசக மனது விரும்பினாலும் அவர்களுக்கு இனி வேலையில்லை என்பதையும்; மறுபுறத்தே சந்திரா கொண்டிருந்த விடுதலை போர் மற்றும் இயக்கம் குறித்த விமர்சங்கள் யாவும் முள்ளிவாய்க்க்காலுடன் முடிவுக்கு வந்ததையும் சூசகமாக குறிப்பிட்டு ஒரே கல்லில் ரெட்டை மாங்காய் அடிக்கிறார் கதாசிரியர்.

இயற்கையின் பிள்ளைகள்

நிலம் சார்ந்து அதுவும் வன்னி சார்ந்து எழும் கதைகளிலே காட்டினை குறிப்பிடாது யாரும் கடக்க முடியாது. அந்த வகையிலே இந்த கதையில் இயற்கை அல்லது காட்டினை சார்ந்து வாழும் இரு மாந்தரினை நாம் காண்கிறோம். ஒருவர் சங்கிலி மற்றையவர் மயில்குஞ்சண்ணன்.

சங்கிலியின் கதாபாத்திரம் இயற்கையின் சமநிலையினை யாரும் குழப்ப கூடா து என்பதுடன் விடுதலை இயக்கத்தின் செயல்களை தர்க்கிக்கும் ஒன்றாக காட்டப்படுகிறது. தனது அண்ணனின் இறப்புக்கு மறைமுகமான காரணம் விடுதலை இயக்கமே என்பதாக கருதும் அவரின் எண்ணவெளிப்பாடுகள், அவருக்கும் விடுதலை இயக்க ஆதரவாளரான அத்தாருக்கும் இடையில் ஒரு சுவரினை கட்டியெழுப்புகிறதாயினும் கூட காலம் அதனை தகர்த்து விடுகிறது. இந்த இடத்தில் சந்திராவுக்கும் சங்கிலியனுக்கும் இடையில் ஒரு ஒப்பான மனங்கள் உள்ளபோதும், இந்த நாவலில் எங்காயினும் ஓரிடத்தில் கூட அவர்களிடையே இருக்கும் இந்த ஒப்பான எண்ணங்களின் கூடலை வெளிப்படுத்தாமல் இருப்பது ஆசிரியரின் மறைபொருள் அழகியல் அல்லது அரசியலாகும். அப்பால், இந்த இருவரும் விமர்சனங்களை வெளியிட்ட போதிலும் விடுதலை இயக்கங்கள் கருதும் “துரோகங்களை” புரியாதிருத்தலானது, இரு பதங்களிடையிலுமான தெளிவான வேறுபாட்டினை ஆசிரியர் அழகாக எடுதாள்வதனை காட்டுகிறது.

இங்கே வரும் மயில் குஞ்சண்ணை விடுதலை புலிகளில் இருந்து போராடி மறைந்த மாவீரர் ஒருவரின் உருவகப்படுத்தலாகும். மயில் குஞ்சண்ணன் பாத்திரம் என்பது வெறுமனே காட்டின் சூட்சுமம் தெரிந்த ஒருவர் மாத்திரமன்று; மாறாக வன்னியில் இருக்கும் மரபுகள் மற்றும் தொன்மங்கள் குறித்த ஒரு குறியீடுமாகும். தனது கண்ணால் கண்ட ஒரு பேரவலத்தின் காட்சியினூடே அவர் ஒரு போராளியாக தன்னை இணைத்து கொள்கிறார். இங்கே சங்கிலி மற்றும் மயில்குஞ்சர் இருவர் கண்ட தரிசனங்கள் ஏறத்தாழ ஒன்றாகவிருப்பினும் அதனை அவரவர் எடுத்துக்கொண்ட விதங்கள் வெவ்வேறு. ஏனெனில் சித்திர பாட வேளையில் மேசையின் மீதான ஒரு பூச்சாடியினை வரையும் மாணவர்களில் அதனை நேரெதிராக எதிர்கொள்ளும் மாணவனின் வெளிப்பாடு வேறாகவும், மூலையில் இருந்து அந்த காட்சியினை பார்த்து வரையும் மாணவனின் வெளிப்பாடு வேறு என்பதும் நாமறிந்ததே.

இத்திமரத்துகாரி

வன்னி மக்களின் தொன்மங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்தான ஒரு குறியீடாக இந்த இத்தி மரத்து தெய்வம் காட்டப்படுகிறது. போராட்டங்களின் வெவ்வேறான காலங்களில் அந்த இத்தி மரத்தின் நிலைகள் வேறுபடுவதனை ஆசிரியர் காட்டுவதானது கடவுள் என்ற கோட்பாடு குறித்தான மக்களின் எண்ணங்களின் பயணமாகும் .

போராட்டம் முகிழும் ஆரம்ப நாட்களில் அந்த இத்தி மரம் முறிவதும் அதனை வெள்ளையக்கா காண்பதாய் வெளிபடுத்துவதும் பெண்களே இந்த சமூகத்தின் தொன்மம் மற்றும் மரபுகளின் ஆதிமூலங்கள் என்பதை வெளிக்காடடுகிறது. இந்திய இராணுவ காலத்தில் அந்த மரம் காவலரணாக மாறுவதும் பின்னர் யுத்த முடிவில் புதிய இத்தி மரம் செழித்திருப்பதாய் காட்டுவதும் ஒரு யுகத்தின் முடிவினையும் இன்னொரு யுகத்தின் ஆரம்பதினையும் அழகியலால் வெளிப்படுத்தும் உத்திகளாகும்.

காதலும் களவொழுக்கமும்

ஒரு காப்பியமோ அல்லது நாவலோ காதலின்றி முற்றுபெறுவதில்லை. இங்கேயும் பிரதானமாக இரண்டு காதல் ஜோடிகள். ஒன்று அத்தாரும் சந்திராவும். கொள்கையளவில் இரண்டு துருவங்களாயினும் இல்லறத்தில் ஈருடலும் ஓருயிருமான இலட்சிய காதலர்கள். அது மரணம் வரைக்கும் நீண்டது. அப்பால் இளஞ்சோடிகளாக சாரகனும் நாமகளும்.

எனக்கு இதில் வியப்பினை ஏற்படுத்திய சோடி ராணி மற்றும் மணிகண்டன் சோடிதான். ஒழுக்கத்தினை உயிரினும் மேம்பட்டதாக கருதும் ஒரு மக்கள் கூட்டம். ஒழுக்க மீறல்கட்கு உயர்ந்த தண்டனையினை தரும் ஒரு விடுதலை இயக்கம். இதற்கிடையில் இராணி மற்றும் மணிகண்டனிடையே முகிழும் ஓர் உறவு. இந்த உறவு பாரம்பரியமாக தமிழரிடையே இருக்கும் ஒழுக்கம் குறித்த சிந்தனைகட்கு முரணாக இருப்பினும் கூட; கதையினை நகர்த்தி செல்லும் பாங்கினூடே இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நாவலாசிரியர் வாசகரிடையே பதித்து விடுகிறார். அதாவது பாலியலும் ஒரு அடிப்படையான தேவையே என்பதையும் அது சுற்றம் சூழல் எதையும் சட்டை செய்வதில்லை என்பதையும் இரண்டு இடங்களில் தொட்டு காட்டுகிறார்.

மணிகண்டன் இராணி இருவரிடையேயும் நிகழும் முதல் உறவில் அந்த மழைநாளில், சுரம் மீட்டப்பட்ட வீணையின் தந்தி உச்சத்தில் முறிந்து விடுவதனை போல குழந்தையின் அழுகை அவர்களை பிரித்து விடுகிறது. அப்போது அவள் குழந்தையினை சலிப்புடன் பார்ப்பதாக கூறப்படுகிறது. இங்கே தாய்மை உணர்வினையும் மீறி பாலியல் தேவை மேலெழுகிறது. இது ஏற்பதற்கு சற்றே கடினமாயினும் கூட இதுவே யதார்த்தம்.

இன்னொரு இடம் இயக்கத்தில் இருந்து வெளியேறி வந்த வெள்ளையன் வெளியே தூங்க முயற்சிக்கையில் இராணி சலித்து கொள்ளும் இடம். இங்கே சகோதர வாஞ்சையினையும் மீறி பாலியல் தேவை இடங்கொள்கிறது.

இந்த உறவில் காணக்கூடிய வியத்தகு பண்பு யாதெனில், பாலியலில் பெண்களின் தேர்வு சுதந்திரம்(freedom of choice in coupulation). பொதுவாகவே பாலியல் என்பது கீழைத்தேய நாடுகளில் ஆண்களின் தேர்வாக இருக்கையில் இங்கே தேர்வு செய்பவளாக பெண்ணே இருக்கிறாள். ஆரம்பத்தில் மணிகண்டனை வெறுத்து ஒதுக்கும் இராணி பின்னர் அவளாகவே ஏற்று கொள்கிறாள். ஆனால் இந்த உறவினை திருமணத்துக்கு அப்பாலான ஒரு உறவாக நீட்டித்து கொள்வதையும் கூட இராணியே தேர்வு செய்து கொள்கிறாள். ஏனெனில் ஒரு கட்டத்தில் மணிவண்ணன் இராணியிடம் “நான் உங்களை திருமணம் செய்யவா ?” என விளிக்கையில், இராணியின் பதில் “உனக்கு எத்தனை வயதடா?” என்பதாக அமைகிறது.

இந்த உறவில் உச்சம் தொடும் இடமென்பது,மணிகண்டனின் உயிரற்ற உடலினை இராணி காணும் இடம்தான். மனதில் அழவேண்டும் போலிருப்பினும் மகளாகிய சிந்து உடனிருக்கையில் என்ன செய்வது என்ற குழப்பத்திலுருக்கையில், மகளே அவளை அழுமாறு கூறுகிறாள். இது ஒரு தலைமுறையின் மாற்றமாகும். போர் என்பது தனிமனிதர்களின் சிந்தனை போக்குகளிலும் கூட மரபார்ந்த சிந்தனைகளை உடைத்து விடுகிறது.

மொத்தத்தில் இராணி – மணிகண்டன் உறவென்பது மரபுக்கு மீறிய உறவென்றபோதிலும்கூட, ஆழமான ஆண், பெண்ணின் உளவியலின் அடிப்படையில் புனையப்பட்ட ஒன்றாகும்.

சொல்லப்பட கதைகள்

கால ஒழுங்கின் பிரகாரம் நீளும் இந்த கதையில் ஈழப் போராடத்தின் அனைத்து நிகழ்வுகளுமே குறைந்தது இரு வரிகளிலேனும் பாத்திரங்களின் உரையாடல்களினூடே கூறப்படுகின்றன. இந்த நாவலிலே நான் இதுவரை வாசித்த நூல்களில் கூறப்படாத சில வரலாற்று நிகழ்வுகளும் கூறப்படுதனை அவதானிக்கலாம்.

விடுதலைப்போரிலே இடம்பெற்ற மாபெரும் உள்ளக இடம்பெயர்வுகளாக அனைவரினாலும் கூறப்படுவது யாழ்ப்பாண மக்களின் வன்னி நோக்கிய இடம்பெயர்வும், முஸ்லிம் மக்களின் வட மாகாணத்திலிருந்து புலிகளினால் வெளியேற்றப்படமையுமாகும். உண்மையிலேயே இவைகள் மாபெரும் மனித அவலங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. ஈழத்தில் போர்க்காலம் மற்றும் போருக்கு பின்னர் எழுதப்பெற்ற அனைத்து புதினங்களிலும் இவைகள் குறித்தான செய்திகள் நிறையவே இடம்பிடித்துள்ளதனை நாம் காணலாம்.

ஆனால் இதற்கும் அப்பால் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பலவும் உள்ளன. இந்திய இராணுவ காலத்தில் ஏற்பட்ட வன்னியின் உள்ளக இடம்பெயர்வுகள். உதாரணமாக தனிக்கல்லடி, கோப்பாபுலவு போன்ற கிராமத்து மக்கள் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தமை. இவற்றினை விட திருமலை மாவட்ட மக்களின் வடபகுதி நோக்கிய புலம்பெயர்வுகள். படுகொலைகளை பொறுத்தவரையில் ஒதியமலை மற்றும் மன்னார் படுகொலைகள். இவ்வாறாக ஏனைய நூல்களில் கூறப்படாத பல்வேறு சங்கதிகளையும் நாம் இந்த நாவலில் தரிசிக்கலாம்.

யாழ் சமூகமானது சாதிய கட்டமைப்பிலே ஊறிய சமூகம் என்பது நாமறியாத விடயமன்று. அங்கே வேளார்களுக்கும் ஏனைய சமூக மக்களுக்கும் இடையிலான தீராத போரினை எத்தனையோ நாவல்களிலும் புதினங்களிலும் வாசித்து அறிந்துளோம். ஆனால் வேளாளர் தவிர்த்து ஏனைய சாதிகளிடையே இருக்கும் அகச்சாதிய ஒடுக்குமுறைகள்( inter castal discrimination ) பேசப்படுவது குறைவே. உதாரணமாக கரையாரும் ஏனைய சமூகங்களும். ஆனால் இந்த நாவலில் வரும் சின்னாச்சி என்ற பாத்திரம் இவ்வாறான அகச்சாதிய ஒடுக்குமுறைகட்கான ஒரு குறியீடாகும்.

சொல்லப்படாத கதை ஒன்று

அனேகமாக எல்லா நிகழ்வுகளையும் மேலோட்டமாகவேனும் ஆவணம் செய்துள்ள இந்த நாவலானது தமிழர் தரப்புக்கு பேரிடியாக அமைந்த விடுதலை இயக்கத்தின் பிளவு குறித்து எந்த வித மூச்சினையும் விடவில்லை. இதற்காக எந்தவித காரணத்தினை நூலாசிரியர் வைத்துள்ளாரோ தெரியவில்லை. இந்த நூல் வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகையில், இந்த பிளவும் அதை தொடர்ந்து ஏற்பட்ட விடுதலை இயக்கத்தின் கட்டமைப்பு சிதைவினையும், பிறமொழி வாசகர்கள் அறியாது விடக்கூடும். இதை நான் ஏன் கூறுகிறேனெனில் ஈழபோரியல் குறித்த நாவல்களில் ஆவணபடுத்தவும் மொழிபெயர்ப்பு செய்யவும் கூடிய அத்தனை தகுதிகளும் இந்த நூலுக்கு உண்டு. ஏனெனில் இது வெறும் புனைகதையன்று. நாவலின் நீளம் கருதியும், நாவலாசிரியர் கொண்ட தேசியத்தின் மீதான ஒன்றிப்பினாலும் இது தவிர்க்கப்படிருக்கலாம் என்றே கருதுகிறேன்.

நாவலின் தேசிய நோக்கு

அனேகமாக ஈழபோராட்டத்தில் யாழ்ப்பாணத்தவரின் மேலாதிக்க சிந்தனையினை பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கண்டிக்கும் ஆசிரியர் ஈழவிடுதலை போரினை பிரதேசம் சாராத இலங்கையின் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரிய ஒன்றாக சித்தரிக்க முயல்கின்றார். இதனையே நாவலின் முதலாம் அத்தியாயத்தில் வரும் இலட்சுமணனின் பாத்திரம் மலையக மக்களின் பிரதிபலிப்பாகவும், இறுதி அத்தியாயத்தில் வரும் ஆதிரை பாத்திரம் கிழக்கு மக்களின் பிரதிபிம்பமாகவும் காட்டுவதனூடே நிரூபணம் செய்கிறார். அவர் தவறவிட்ட இரு பிரதேசங்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களாகும். இங்கே பரம்பரையாக வசிக்கும் தமிழர்கள் ஈழப்போர் சம்பந்தமாக கொண்டிருந்த அபிப்பிராயங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் பதிவு செய்தல் காலத்தின் தேவையாகும்.

பிரதேசவாதம்

இந்த நாவலில் பெரும்பாலான இடங்களில் யாழ்பானத்தவர் குறித்து கூறப்படும் “எள்ளல்கள் “ , ஒரு வகையான பிரதேசவாதம் மற்றும் ஒதுக்கல் போக்கினை இந்த நாவல் கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தினை தோற்றுவிக்கிறது. யாழ்ப்பான மக்களின் மேலாண்மை (superiority) விமர்சிக்கப்பட வேண்டியதாயினும் கூட, அவர்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை என்பதில் மாற்று கருத்துக்களில்லை.

போராட்டம் முடிந்த பின்பும் கூட இனிதன் என்ற யாழ்மாவட்ட போராளி வெளியே செல்ல முயற்சி செய்வதாய் கூறப்படுதல் வெளிப்படுத்தும் செய்தி யாதெனில், நூலாசிரியர் யாழ்ப்பாணத்தினை ஒரு பிடி பிடிக்கின்றார் என்பதே. மறுபுறத்தே யாழ்பாணத்தின் எல்லா பகுதிகளும் விருத்தியடைந்த பகுதிகளன்று. சாதிய வேறுபாடுகளுக்கும் அப்பால் பிரதேச ரீதியில் இன்றைக்கும் ஒதுக்கப்படும் பகுதிகளாக தீவுப்பகுதிகள் மற்றும் வடமராட்சி கிழக்கின் பகுதிகள் என்பவை இருகின்றன என்பது யதார்த்தமாகும்.

ஆதிரையும் பெண்ணியமும்

நூலின் பின்னடையில் உள்ள குறிப்பினை போல ஆதிரை நாவலென்பது தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலை போராட்ட களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின்வாழ்க்கைச்சித்திரமேயாகும். இங்கே நாவலில் ஆண்பாதிரங்களும் பெண்பாதிரங்களும் சரளமாக புழங்கினாலும் கூட, நாவலினை தாங்கி நிற்கும் தூண்களாக (pillars) பெண்களே உள்ளனர். இங்கே “பிள்ளைகள்” என்ற பதத்தினை நாம் இரண்டு விதமாக பொருட்கோடல்(interpretation) செய்ய முடியும். ஒன்று போராட்ட காலத்தில் பிள்ளைகள் என்பது பெண் போராளிகளை குறிக்கும் ஒரு பதமாக இருந்தது. மற்றையது, தாய்மார்களின் பிள்ளைகள். இது இருபாலரினையும் குறிக்குமாயினும் , பிள்ளைகளின் ஆதிமூலம் தாய்மாரே. எவ்வாறு பார்ப்பினும் இந்த நாவல் முற்று முழுதாக பெண்களினை பேசு பொருளாக கொண்டதாகவே கட்டமைக்கப்படுள்ளது.

போராட்ட காலத்திலும் அதன்பின்பும் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், பெண்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் நாவலெங்கும் விரவிக்கிடகின்றன. அதிலும் இங்கே வருகின்ற “வெள்ளையக்கா” என்ற பாத்திரம் குமரி முதல் நடுத்தர வயது வரைக்குமான எல்லா நிலைகளிலும் வாழ்க்கையின் படிநிலை மாற்றங்களை காட்டி நின்ற ஒரு அற்புதமான சித்தரிப்பு ஒன்றாகும். அது ஈழபோராட்டத்தில் களத்திலும் அப்பாலும் நின்ற பெண்களின் மாதிரி படிமம் (role model) என்றால் அது மிகையன்று.

நாவலின் இறுதியில் வரும் ஆதிரையின் கதை என்பது நாவலில் நிகழ்ந்த எல்லா சம்பவங்கள், சச்சரவுகள், உரையாடல்கள் அனைத்தையும் ஒரு குவியத்தினை நோக்கி நகர்த்தி ஒரு தியான நிலைக்கு வாசகர்களை இட்டு செல்கிறது. ஆம் தியான நிலையேதான். இப்பாலும் வெளி; அப்பாலும் வெளி. வெறுமை சூழ்ந்த வெளி. இதற்கும் அப்பால் ஒன்றுமேயில்லை என்றதோர் உணர்வு நிலை.

என்னுரை

“ஈழபோராட்டத்தின் பின்னணியில் எழுதப்படும் நாவல்கள் மற்றும் புதினங்கள் யாவுமே மிகையான உணர்ச்சிமிகு சொற்களினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்ற ஒற்றை வரியின் பின்னணியிலேயே இந்த நாவலினை நான் வாசித்தேன். நாவலின் முடிவில் நான் எடுத்துக்கொண்ட எடுகோளினை மீள்பரீசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே நூலினை நிறைவு செய்ய வேண்டிய தேவையினை ஆதிரை மீதான வாசிப்பு தந்தது.

உண்மையில் கூறின் சில புனைவுகளில் வார்த்தைகளின் அலங்காரம் மிகுந்து காணப்படலாம். ஆனால் ஈழபோரியல் வரலாற்றின் சம்பவங்கள் என்பவை புனைவுக்குரியவையன்று; மாறாக அவைகள் நிதர்சனத்தின் தரிசனங்களே. ஆதிரை நாவலானது அவ்வாறு உணர்வுபெருக்கு மிகுந்த சொற்களினால் புனையப்பட்ட புதினமும் அல்ல.

பிரதிக்கும் வாசகனுக்குமிடையிலான இடைவெளியினை சம்பவங்களினால் நிரப்பி வாசகனையும் பிரதினையும் ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவதில் ஆதிரை வெற்றி பெற்றுள்ளது என்றே கூறவியலும்.

ஆதிரை வாசிப்பின் பின்னர் ஜானகிராமன் அவர்களின் “மோகமுள்” இனை வாசிப்புக்கு தேர்வு செய்திருப்பினும் ஆதிரையின் தாக்கம் இன்னும் என்னுள் இருப்பதனால் பக்கங்கள் நகர்வதாயில்லை. ”மோகமுள்” வாசிப்புக்கு இன்னும் சில தினங்களாகலாம்.

-காய சண்டிகா-

By

Read More

அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயர்

தீபு ஹரி

ஆதிரையைப் படிக்கத் தொடங்கிய போதே, போர் பற்றிய லட்சியவாதக் கற்பனைகள் எல்லாம் உடைந்து விட்டன. தியாகம் ,லட்சியம், கனவு என்பதைத் தாண்டி போர் என்பது ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான வேட்கையே என்பது விளங்கியது.

போர் எவ்வாறு மனிதர்களுடைய சமநிலையை, வாழ்வாதாரத்தை, நம்பிக்கைகளை,தன்மானத்தை எல்லாம் குலைத்துப் போடுகிறது?எது மக்களை இயக்கத்தை நோக்கி நகர்த்துகிறது? பெண்களுடைய பார்வையில் போர் என்னவாக இருக்கிறது என்கிற கேள்விகளுக்கான பெரும் தேடலாகவே இந்தப் புதினம் விரிகிறது. 

ஒரு போரின் வெற்றி தோல்வியை வெளியில் இருந்து வெறும் பார்வையாளர்களாகப் பார்க்கிறவர்கள், அதனுடைய கொள்கை , நோக்கம் , அதை நோக்கிய போராட்டத்திற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை வைத்து அதை ஆதரிக்கவும், விமர்சிக்கவும் செய்கிறோம். போர் என்றால் இழப்புகளும் இருக்கதான் செய்யும் என்று சமாதானம் கொள்கிறோம். ஆனால் நேரடியாக போருக்குள் அகப்படும் மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது. போரினால் ஏற்படும் பொருள் இழப்புக்கள்,உயிர் இழப்புகள்,மற்றும் பாதுகாப்பின்மை போன்றவை பெரும்பான்மையான மக்களை அகிம்சை வழியிலான போராட்டத்தையே ஆதரிக்கச் செய்கிறது.

இந்த நாவலில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் போரை விரும்புவதில்லை. அது கொடுக்கும் அமைதியின்மையையும் , பதட்டத்தையும் வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். 

சங்கிலி,சந்திரா போன்றவர்கள் இவற்றால் நேர்கிற துன்பங்களை ஆய்ந்து பார்த்து போர் ஒரு சரியான ஆயுதமில்லை என்கிற முடிவுக்கு வருகிறபோது, சிங்கமலை,முத்து,கணபதி , போன்ற பலர் அதன் சாதக பாதகங்களைப் பற்றியோ, தங்களின் உரிமைகள் பற்றியோ பெரிய புரிதல்கள் இல்லாமல், தங்களுடைய அமைதியான வாழ்க்கைக்கு போர் என்பது ஒரு இடையூறாக இருக்கிறது என்கிற முடிவுக்கு நகர்கிறார்கள்.இந்த நாவல் வெறுமனே போர் சூழலையும் அதன் பாதிப்புகளையும் மட்டுமே விவரிப்பதோடு நின்று விடுவதில்லை. மாறாக அதன் காரணிகளைத் தேடிப் பயணிக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலி குறித்து நிறையப் பேசுகிறது. 

இதற்கு சிங்கமலை கதாபாத்திரம் மிகச் சிறந்த உதாரணம். மலையக மக்களின் குரலாக அவர் வெளிப்படுகிறார். இன்னும் மூதாதையரின் நாடான இந்தியாவைக் குறித்த ஏக்கமும், தொடர்ந்து “அங்கே மட்டும் நம்மை என்ன நல்லா நடத்தினாங்க?ஊருக்கு வெளியிலே சேரியில் தானே கிடந்தோம் ” என்கிற ஆதங்கமும் , கூலிகளாக இங்கிருந்து ஆடுமாடுகளைப் போல் மக்களை தேயிலைத் தோட்டங்களுக்கு கொண்டு சென்றதைப் பற்றிய விவரிப்பும், சாதிய அமைப்பையும் , அதை ஆதரிக்கும் மனங்களையும் விமர்சிக்கும்படியாக அமைந்திருக்கின்றன. 

வர்கத்துக்கும், சாதி அடுக்குகளுக்கும் சம்பந்தமில்லை என்பதை ஒரே பொருளாதாரச் சூழலில் உள்ள முத்து-வெள்ளையன் திருமணத்திற்கு முதலில் தன் மறுப்பைத் தெரிவிக்கும் மீனாட்சியின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதே போல ப்ராமினீய முகத்தின் பிரதிநிதிகளாக புண்ணியார் மற்றும் அவரது மனைவி ராசாமணி இருவரையும் படைத்திருக்கிறார். 
‘1000 முட்டைகளில் பலகாரம் செய்து கொடுத்து புலிகளின் விடுதலை இயக்கத்தில் ஒரு பதவியை சம்பாதித்தது போல ,1001 முட்டைகள் செய்து கொடுத்து ஆர்மிகாரர்களிடமிருந்து தப்பித்து விடுவார்” என்பது போன்ற வாக்கியங்களின் மூலமாக , சாதியம் எவ்வளவு சாமர்த்தியமாக சூழ்நிலைக்கேற்ப மாறுவதன் மூலமாக அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்கிறது என்பதைக் கூறியிருக்கிறார்.

அதே போல இந்த நாவலில் பெண் கதாபாத்திரங்கள் தீரா நம்பிக்கை உடையவர்களாகவும், குடும்ப அமைப்பின் மீது மிகுந்த பற்றுடயவர்களாகவும் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆச்சி முத்துக் கிழவி அந்த வயதிலும் தன்னுடைய மூத்தமகனின் குடும்பத்திற்கு ஒரு கோணிச்சாக்கு முழுக்க சுமக்க முடியாமல் உணவுப் பொருட்களை தலைச் சுமையாய்க் கட்டி எடுத்துக்கொண்டு செல்வது அதற்கு ஓர் அழகிய சான்று. 

துரிதத்தில் இடமாற்றங்களுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதிலும், இழப்புகளில் இருந்து தங்களை மீட்டுக் கொள்வதிலும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும், பற்றுதலையும் அணையாமல் காப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். 

தனக்கும் ,தன் தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிறகு போராளியாக மாறும் மலர் , ஒரு காலை இழந்து, அதன் பிறகு செவிலியாகப் பணி செய்து ,போரின் இறுதியில் தன் கணவனை இழந்து தன் மகளுடன் தனித்து விடப்படுகிறாள். அதன் பின்னும் அவள் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது.ராணி, மலர், மீனாட்சி, முத்து, சந்திரா , என அனைவருமே மிகுந்த உயிரோடமுள்ள கதாபாத்திரங்கள். திருமணமான ஓரிரு வருடத்தில் ,வியாபாரத்திற்கு பொருள் வாங்கச் சென்ற தன் கணவன் என்னவானான் என்கிற தகவலைக் கூட அறிய இயலாத ராணியின் பரிதவிப்பும், மணிவண்ணனுடனான அவள் உறவும், போர்ச் சூழல் எவ்வாறு தனி மனித வாழ்க்கையை நரகமாக்குகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம்.

இதில் மிக முக்கியமாக படிப்பவர்களை யோசிக்கச் செய்வது , இந்தச் சூழலில் வளரும் குழந்தைகளின் மனவியல். சந்திரா டீச்சர் துவக்கை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்கிற போதும், வினோதியை போன்று இன்னும் வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத பல குழந்தைகள் இயக்கத்தில் இணையும்போதும் அவர்களின் நிலை குறித்த பதட்டமும், கையறு நிலையும் நமக்கு உருவாகிறது. ஒரு பேணியில் துப்பாக்கி ரவைக் கோதுகளை உருட்டி விளையாடும் இசைநிலா முகமும் ஒளிநிலா முகமும், போரின் கடைசி தருணத்தில் ,உயிருக்கு அஞ்சி ஓடித் திரிகின்ற போது , கொத்துக் கொத்தாய் மடிந்து விழும் சனத்திற்கு நடுவில் , வெள்ளையன் வெறுத்துப் போய் ,எத்தனையை மறைக்கிறது குழந்தைகளுடய கண்களிலிருந்து என்று நினைக்கிற காட்சியும் நினைவுகளில் உழன்றபடியே இருக்கின்றன.

அத்தார் விடுதலை இயக்கத்தை ஆதரிக்கும் ஒருவனாக இருக்கிறான். சங்கிலி, கணபதி போன்றோருக்கு நேர் எதிராக, சிறுபான்மை இனமாகவும், ஒடுக்கப்படுகிற இனமாகவும் இருக்கின்ற வலியை அத்தாரின் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். போரினால் என்னென்ன எதிர்மறை விளைவுகள் உண்டாகி இருக்கின்றன என்ற போதும், இயக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையாக அத்தார் பார்க்கிறான். உண்ணாவிரதமிருந்தது இறந்து போகிற திலீபனோடே அகிம்சயையும், காந்தியையும் புதைத்து விட்டார்கள் என்பதை வழிமொழிகிற குரலாக அவனுடையது இருக்கிறது.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் எப்படி போரில் ஆதாயம் தேடுகின்றன என்பதும், மக்கள் உயிர் என்பது அதிகாரத்திற்கு எப்போதுமே லாப நஷ்டக் கணக்கு என்பதும் காட்சிகளின் விவரிப்பில் நன்கு புலனாகிறது. கருணாநிதியோ, அமெரிக்காவோ, அதிகாரத்தின் முகம் மக்களுக்கான கண்களற்றது 
என்பது புலனாகிறது.சமாதனத்திற்காக ராணுவத்தை அனுப்புகிற இந்திய ராணுவம் எவ்வெவ்வாறு தமிழ் மக்களை ஒடுக்கியது ,துன்புறுத்தியது அவர்களுடைய வாழ்க்கையை நரகமாக்கியது என்பதெல்லாம் அறிய நேர்கிற போது ஒரு சாதாரண குடிமகன் அமைப்புகளின் மீதான தன்னுடைய சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும உணரத் தொடங்குகிறான்.

ஆதிரையைப் படிக்கும் போது Gone with the wind நாவலின் நினைவு வந்து கொண்டே இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டு போர் ஒன்றைப் பற்றிய நாவல் அது. அதில் அந் நாவலாசிரியர் அமெரிக்காவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் அந்நாவலில் அவர்கள் மீதான கரிசனம் கொஞ்சம் அதிகம் தொனிக்கும்படி எழுதி இருப்பார். அதையும் தாண்டி fiction வகையறாவில் அது அப்போரைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என்று நான் எண்ணுகிறேன். சயந்தனுடைய ஆதிரை எந்த மனச்சாய்வும் இல்லாமல் பரந்துபட்ட பார்வையில் போர் சூழலில் வாழ நேரிட்ட மக்களைப் பற்றிப் பேசுகின்ற படைப்பு. தற்கால இலக்கியத்தில் மிக முக்கியமாக இடத்தில் வைக்கப்பட வேண்டிய ஒரு நாவல். போரினால் ஒடுக்கப்பட்ட, அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயரை, வலியை நேர்மையாக பதிவு செய்திருக்கும் படைப்பு ஆதிரை.

By

Read More

× Close