அஷேரா! சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா.

யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு மனைவி இருந்ததாகச் சொல்லப்படும் மனைவியின் பெயர் தான் அஷேராவாம். அஷேராவை வேதாகமத்தை எழுதிய பண்டைய யூதர்கள் வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

யாஹ்வேயின் மனைவியான பெண் கடவுளான அஷேராவின் பெயரில் ஏற்பட்ட மயக்கம் தான், ‘ஆ’ வண்ணா வரிசையில் தனது நாவல்களிற்கு பெயரிட்டு வந்த சயந்தனை ‘அ’ வரிசைக்கு வரவழைத்திருக்கிறது போலும்.

அஷேரா நாவல் இரண்டு பிரதான ஆண் கதாபாத்திரங்களையும் அவர்களது வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் பெண் கதாபாத்திரங்களையும வைத்து பின்னப்பட்ட ஒரு நாவலாக அமைகிறது.

கதையில் வரும் பலமான பெண் கதாபாத்திரங்களின் குறியீடாகத் தான், பலமான பெண் கடவுளான அஷேராவின் பெயரைத் தனது நாவலிற்கு இட்டதாக, தம்பி சயந்தன் கூறினார்.

கதையின் களங்கள் நடந்து முடிந்த எங்கள் ஆயுதப் போராட்டத்தின் அழுக்கான சில நிகழ்வுகளை மீண்டும் இரை மீட்டிப் போவது, பல இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது.

எதை மறந்து வாழ நினைக்கிறோமோ, எது நடந்தது என்று தெரிந்தும் அது நடக்கவில்லை என்று மறுக்க நினைக்கிறோமோ, அதையே கதையின் களங்கள் மீண்டும் கண் முன் கொண்டு வரும் போது, புத்தகத்தை தூக்கி எறியலாம் போலிருந்தது.

சயந்தனின் எழுத்துக்களில் காட்சியை விபரித்து எங்களை கதைக்குள் கொண்டு போக அவர் பயன்படுத்தும் படிமங்கள் தனித்துவமானவை. அஷேராவில் எங்களுக்கு சுவிஸ்லாந்தின் அழகை ரசிக்கவும் குளிரை உணர வைக்கவும் அவர் கையாளும் படிமங்கள் அழகானவை.

சயந்தனின் கதைகளில் வெளிப்படும் இன்னுமொரு அம்சம், அண்ணன் ஷோபா ஷக்தியின் எழுத்துக்கள் அவரில் ஏற்படுத்தியள்ள தாக்கம். கதையின் கருக்களாக இருக்கட்டும், எழுத்தில் துள்ளும் எள்ளலாக இருக்கட்டும், பல இடங்களில் ஷோபா ஷக்தி அண்ணனின் தாக்கம் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.

சயந்தனின் கதையில் இருக்கும் கனதி அதிகம். சயந்தன் சொல்லும் கதையில் சொல்லாமல் சொல்லும் புதிர்களை அவிழ்க்க சில வேளைகளில் மண்டையை போட்டு உடைக்கவும் வேண்டும்.

எங்கட மண்ணில் இருந்து, சயந்தனைப் போன்ற பல புதிய எழுத்தாளர்கள் தரமான படைப்புக்களை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பது மிகவும் உற்சாகமளிக்கிறது.

சயந்தன், கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பதையும் குறிப்பிட ஆக வேண்டும்.

ஆதிரை வெளியீடாக வெளிவந்திருக்கும் அஷேராவை தவறாமல் படியுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *