அரசியல்

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

By

Read More

இந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?

அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….

antonதமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி வீரர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப் பட்டனர்.

இந்திய தூதர் திரு டிக்சிட் அவ்வேளையில் புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப் பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு டிக்சிட்டுடன் தொலைபெசியில் கதைத்த போது அவர் என்னை பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப்படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதி படைகளிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அத்துடன் மாவட்ட தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய தமிழ் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டிருந்தது.

இந்த அமைதிச் சூழலில் எதுவித குற்றமும் புரியாத போர் நிறுத்த விதிகளையும் மீறாத கைது செய்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்த்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.

இந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட்சி ங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம் தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்து தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும் ஒரு சிறிய பிரச்சனையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது குற்றம் சாட்டினார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தை கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்ன போது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென்று இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவ தளபதி எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்திய தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.

000

மறுநாள் காலை ஆகஸ்ட் 4ம் நாள் நான் பலாலிக்கு வருகை தந்து திரு டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது குரல் தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கை கடைப்பிடிப்பதாகச் சொன்னார். புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதர் சொன்னார்.

எமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே ஜெயவர்த்தனா பிரகடனம் செய்துள்ளார். அதன் பிறகு நம் போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முயல்வது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும். என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்கு சுட்டிக் காட்டினேன்.

பலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன்.

இந்தியத் தூதர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாகவே நின்றனர். போராளிகளை கொழும்பு கொண்டு செல்வதற்கான சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டிற்கு தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப்படைத் தளபதி ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி பிரச்சனை தீர்க்கப் படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு இந்தியத் தூதர் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார்.

நான் ஏற்கனவே இந்திய அமைதிப்படைத் தளபதியுடன் உரையாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கும் மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்து விட்டார். தான் ஒரு இராணுவ கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப் பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் விவாதம்.

அன்று நான் அவரைச் சந்தித்த போது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர் (டிக்சிட்) இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். சிறிலங்கா இராணுவத்திற்கும் எனது படையினருக்கும் நிச்சயமாக மோதல் வெடிக்கும் என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் புலிகள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர் இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.

எதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில் எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மானத்தை எழுத்தில் வரைந்து அதில் எல்லோரும் கையொப்பமிட்டு அந்த கடிதத்தை பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி அவமானப்பட்டு உயிர் நீப்பதை விட இயக்கத்தின் போரியல் மரபுக்கு அமைவாக தமது உயிரைத் தாமே அழித்து கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ளத் தாம் உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ளார்கள். சயனைட் விசக் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு கடித முடிவில் உருக்கமாக கேட்டிருக்கிறார்கள்.

அன்றிரவு பிரபாகரனைச் சந்தித்த போது ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு அத்துலத் முதலியின் வஞ்சகம் டிக்சிட்டின் கையாலாகத்தனம் அமைதிப்படைத் தளபதியின் அகம்பாவம் எமது போராளிகளின் அவல நிலை ஆகியவற்றை விளக்கினேன். எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி இந்தியாவுக்கு நாம் ஒத்துழைத்த காரணத்தினால்த்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்றார் பிரபாகரன். போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நடந்தால் ஏற்படும் பாரதூரமான விளைவை இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.

மறுநாட் காலை அக்டோபர் 5 பலாலி விமானத் தளத்திற்கு சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரனின் செய்தியைத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். இறுதி தடவையாக முயன்று பார்க்கின்றேன் என்றார். சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அன்று மதியம் உணவுப் பொருட்களுடன் பலாலித் தளம் சென்று எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவு செய்தேன். புலிகளின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.

அன்று மாலை அளவில் சிறிலங்கா விமானத் தளத்தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா போராளிகளை வலுவந்தமாக விமானத்தில் ஏற்ற தனது படையணிகளுக்கு உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தினர் போராளிகளை நெருங்கிய போது அவர்கள் அனைவரும் சயனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரசாவை தழுவிக் கொள்ள மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள்.

இந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள். இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக்கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். புலிபோராளிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர் தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார்.

87 அக்டோபர் 7ம் நாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே சி பாண்ட் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜி ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்து ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார். இராணுவ பலத்தைப் பிரயோகித்து புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அறியத் தரப்பட்டது. ஜெயவர்த்தனாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை புலிகளுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுத்து அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பவான் நடவடிக்கையை அக்டோபர் 10ம் நாள் ஆரம்பிப்பதென முடிவாயிற்று.

1987 அக்டோபர் 10ம் நாள் இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. அன்றைய நாள் அதிகாலை ஈழமுரசு முரசொலி ஆகிய நாளிதழ்களின் செயலகங்களிற்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர் பத்திரிகை கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்துடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். புலிகளின் தொலைக் காட்சி நிறுவனமான நிதர்சனம் தீவை த்து கொழுத்தப்பட்டது.

இந்திய புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் நீடித்தது.

இணைப்புக்கள்

1. இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய இலங்கை ஒப்பந்தந்தின் கடப்பாடுகளுக்கு அமைய தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்திய தளபதிகளின் கருத்தாகும். 1992 இல் தான் எழுதி வெளியிட்ட The IPKF in Sri Lanka என்ற நூலில் இந்திய இராணுவ தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப் பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்.

புலிகளுக்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாம் கடும் போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சி சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாது தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தை கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். புலிளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங் கடும் முயற்சிகள் எடுத்தார். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அவ்வேளை அவர் கடும் சுகவீனமுற்று அமெரிகாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சென்னையில் பண்டுருட்டி இராமச் சந்திரனை சந்தித்த திபேந்தர் சிங் ரஜீவ் காந்தியுடன் பேசி போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் படி சொன்னார். ஆனால் அமைச்சர் பண்டுருட்டியாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தனது ஆலோசனைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மாறாக புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப் பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இதுவொரு அரசியல் முடிவென்றே கருதினார் அவர்.

2.
இந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.

By

Read More

ஒபரேசன் பூமாலை – அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.

1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.

இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

நாள்: யூன் 3 1987

இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.
நேரம்: காலை 5.30,

No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.
மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.

இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில் தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப் பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training School) தளத்தில் ஐந்து An – 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும் அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள் நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின. தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.

யூன் 4

ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An – 32 விமானம், பகல் வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ் மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதியம் தாண்டிய 3 மணி, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத் தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.

ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம் அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர் கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத் தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க முடியும்.

அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7 நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.

மாலை 3.55

முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup ) ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக் கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள் பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில் ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப் படவில்லை.

பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத் தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An – 32 விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.

இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில் கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.

நேரம் மாலை 4.50

விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின் உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.

நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப் படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.

மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.

இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது. அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.

விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை சொன்னது.

If it was against the interests of the ethnic Tamil minorities, then it would be against Indian interests as well as there would be corresponding repercussions in its own indigenous tamil population.

அண்மைய செய்தி – யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
Sources: www.
bharat-rakshak.com

By

Read More

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.

cda11953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.

தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகள், வெலிக்கடைச் சிறை நினைவுகள், தனது தமிழக அனுபவங்கள் என பலதினதும் கூட்டாக அது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே தீவிரமாக ஈழத்தையும், இஸ்ரேலையும் சாதகமாக ஒப்பிடுகிறார். 1962 இல் இரண்டு வார காலம் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையையும் Exodus என்னும் நூல் குறித்தும் சிலாகித்துச் சொல்கின்றார். I wanted to build Tamil Eelam like Israel. Now I hate the Israelis. They are slaves to America.

திரு டேவிட் ஐயா தனது நூலில் தனது தமிழக அகதி வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுதியதை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கின்றேன். 1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் தற்போதையை நிலை குறித்து இங்கு எழுதியிருக்கின்றார். இனி அவர்….

தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.

ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.

எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் – அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் – என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.

நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்

போ.. போய் எடுத்திட்டு வா

நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.

இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் – ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் – நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.

நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.

எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.

இதே நூலில் பிறிதொரு இடத்தில் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு அந்த நேரத்தில் தன்னிடம் பணம் இல்லாது தவித்ததையும் பின்னர் வேறொரு இளைஞன் உதவி புரிந்ததையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, யப்பான், தாய்லாந்து என உலகம் சுற்றிய ஒரு பொறியியலாளன், கென்யா நாட்டின் நகரொன்றை திட்டமிட்டு அமைத்த குழுவின் தலைவன், ஈழத்திற்கான திட்டமிடல் கனவுகளோடு திரிந்தவன் இன்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வயிற்றைக் கழுவுகிறான் என்பது எவ்வளவு சோகம்?

By

Read More

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..

ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.

By

Read More

× Close