சினிமா

ரஜினியைப் புறக்கணியுங்கள் – சில கேள்விகள்

வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

சிவாஜி திரைப்படம் குறித்து விமர்சனங்கள், பார்வைகள் என்ற பதிவுகளினூடே சிவாஜி திரைப்படத்தினை புறக்கணிப்பதற்கான அழைப்புக்களும் பதிவுகளாக வந்து கொண்டிருந்தன. இவ்வாறான ஒரு புறக்கணிப்பிற்கான அழைப்புக்களிற் சில, வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கியும் எழுப்பப் பட்டிருந்தன.

சகல புறக்கணிப்புக் கோருகைகளிலும் ரஜினியின் முன்னாள் தமிழர் விரோதப் போக்கு, அவர் தமிழகத்தில் உழைத்து கர்நாடகத்தில் முதலிடல் போன்ற, சகல தமிழருக்கும் பொதுவான விடயங்களைத் தாண்டி முழுமையாக ஈழத்தமிழர்களை நோக்கியதான சில காரணங்கள் மேலதிகமாகச் சொல்லப் பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மீதான எனது கேள்விகளை சொல்வதற்கு முன்னர் அவை யாவையென பார்க்கலாம்.

1. ரஜினி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லையென்பதாலும் அவர் ஈழத் தமிழருக்கு உதவிகள் செய்வதில்லையென்பதாலும் சிவாஜி புறக்கணிக்கப் பட வேண்டியது.

2. ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு கொடுக்கும் பணத்தினை ஈழ விடுதலைப் போருக்கு அளித்தால் அது இன்னும் பல புதிய உள்நுழைவுகளை களத்திற்கு கொண்டு வரும்.

முதலில் ரஜினி எமக்கு உதவவில்லையென்பதை ஒரு தெளிவான பார்வையாக என்னால் நோக்க முடியவில்லை. ரஜினி ஏன் எமக்கு உதவ வேண்டும்? ரஜினி போலவே இன்னும் நிறைய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒருவர் நிறைய பணம் சம்பாதித்தாரெனின் அவரிடம் இருந்து எமக்கும் தாவென எதிர்பார்ப்பது எந்த வகையான மனநிலையென எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ரசிகர்களான எங்களிமிருந்து தான் பணம் பெறுகிறார் எங்களில்த் தான் தங்கியுள்ளார் என்பது மறு வளத்துப் பதிலானால் நடிப்பு என்பது ஒரு தொழிலெனக் கருதுவதனூடாக எமது பணத்திற்கான தனது தொழிலை அவர் செய்கிறார் என்று தானே அர்த்தம்.

எவராவது ஒருவர் எமக்கு ஆதரவாகப் பேசுவாரா என ஏங்கி எதிர்பார்க்குமளவிற்கும் யாராவது ஒருவர் எமக்கு உதவி செய்வாரா என இரந்து கெஞ்சும் நிலைக்கும் ஈழத் தமிழர்கள் போய்விட்டார்களா என்ன..?

இரண்டாவது காரணம் அர்த்தம் பொதிந்தது தான். தற்போதைய நெருக்கடிச் சூழ் நிலையில் இவ்வாறு வெளிச் செல்லும் பணம் ஒன்றிணைக்கப் பட்டால் அது ஈழத்தில் வாழும் மக்கள் சார்ந்த தேவைகளுக்கும், அல்லது போராட்டத் தேவைகளுக்கும் குறிப்பிடத் தக்கவொரு பெறுமதியாகவே இருக்கும்.

ஆனால் இந்த நோக்கத்திற்காக அமைந்த கோரிக்கையெனில் அது ஒட்டு மொத்த தமிழக சினிமாவையும் புறக்கணிக்கச் சொல்லுவதாகவே அமைந்திருக்க வேண்டும். விஜய் படங்களுக்கும், சீமான் படங்களுக்கும், திரிசா படங்களுக்கும் சனம் அள்ளிக் கொடுத்த போது எங்கள் பணம் வெளிச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டிய இத்தகைய கோரிக்கைகள், இப்போது ரஜினிக்கு மட்டும் வெளிவருவதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை விஜய் நம்ம ஊரு மருமகன் என்பதனாலும், சீமான் நமக்கு ஆதரவானவர் என்பதாலும் அவற்றைப் புறக்கணியாது பார்ப்பதற்கான நியாயப் பாடுகள் இருக்கக் கூடும் :)) சீமானின் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம், தம்பி பிரபாகரனின் வாழ்க்கைத் திரைப்படம் என்ற மாயை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு பரவலாக வெளிநாடுகளில் ஓடியது என்பது இதன் காரணமாயும் இருக்கலாம். (நமக்கு ஆதரவானவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லும் போது எனக்கு மடித்துக் கட்டிய வேட்டியுடன் வீராசாமி தான் வந்து பயமுறுத்துகிறார். என்ன கொடுமை சாமி இது.. )

இவையெல்லாம் தவிர தமிழகத் திரைப் படங்கள் ஈழத் தமிழர்களினால்த்தான் இலாபம் சம்பாதிக்கின்றது என்ற பெரும் பனிக் கட்டியொன்றையும் நம்மில் சிலர் சுமக்கின்றார்கள். இது குறித்தும் நான் மேற்சொன்ன எனது கேள்விகள் தொடர்பாகவும் பதிவர் ரவிசங்கருடனான உரையாடல் ஒன்றை இங்கே கேளுங்கள்.

இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். 🙁



By

Read More

நட்சத்திர வார அழைப்பு

அன்புடையீர்

நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப காலப் பகுதியான ஒரு வாரத்திற்கு சயந்தனாகிய என்னை இறைவன் திருவருள் துணை கொண்டு நட்சத்திர பதிவராய் நியமிக்க பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் சாரல் பக்கத்திற்கு வருகை தந்து படித்து கேட்டு பார்த்து வாரத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
சயந்தன்

விழா நடைபெறும் இடம்
www.sayanthan.blogspot.com

பிற்குறிப்பு: மொய் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்கனவே வாங்கிய மொய்களைத் திருப்பித் தருபவர்கள் தவிர புதிதாகத் தர விரும்புகிறவர்களும் தரலாம். அவை பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்தப் படும்.

By

Read More

Cherry பழம் போல் சிவந்த..

சிறு வயதுகளில் கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதன் மேலே தனித்த இனிப்புடைய சிவந்த பழமொன்றை வைத்திருப்பார்கள். சில கேக் வகைகளிலும் அந்தப் பழம் இருப்பதுண்டு. அவை cherry பழங்கள் என தெரியும். இங்கே கீழ்வரும் பழங்களும் cherry (ஜெர்மன் மொழியில் Kirshe)எனப்படுகின்றன. சிவப்பாகிப் பின்னர் சாப்பிடக் கூடிய நிலையில் ஒரு வித கருஞ் சிவப்பு நிறத்திற்கு வருகின்றன. சுவையில் கூட ஊரின் நாவற் பழத்தை நினைவு படுத்தும் விதத்தில் கொஞ்சம் புளிப்பாக இருக்கின்றன.

உறுதிப் படுத்தப் படாத தகவல்களின் படி.. (களத்தில நின்றால் உறுதிப் படுத்திச் சொல்லலாம் :))இரண்டும் ஒரே வகைதான் எனவும் இப் பழங்கள் உள் விதையெடுக்கப்பட்டு இனிப்பில் பதப்படுத்தப் பட்ட பின்னர் மேற் சொன்ன வகைப் பழமாகிறது எனவும் சொன்னார்கள். இது பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்களேன்..

இவை வீட்டு சூழலில் விளைந்தவை.



By

Read More

மே 31 – எரியும் நினைவுகள்!

1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.



By

Read More

என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்

மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன்.

மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர்.

´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட்.

´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ… அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர்.

´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.

´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை.

´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார்.

வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.

வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´
´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´
´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´
´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´
´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´
சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.

By

Read More

× Close