மலைநாடான்

அதிகாலை 3.45.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து, சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன். காணவில்லை…

கதவு திறந்து பலகணிக்கு வந்தேன். உனது நிலமல்ல… குளிர் முகத்திலறைந்து சொன்னது. இருக்கலாம், ஆனால் ஆகாயம்.. ? அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை…அல்லது கண்டுகொள்ளத் தெரியவில்லை. நீலத்தின் நிர்மலத்தில் கரைந்து போனோளோ..? கலந்து போனாளோ..?

தவிப்போடு திரும்பினேன்.

” மன்னிச்சுக்கொள்ளு ஆத்தை..” சிவராசன் குளறியது என்னுள்ளும் எதிரொலிப்பதாக உணர்வு. ஆற்றாமையை அழுது தீர்க்கவேண்டுமான உணர்வு.

சற்றுமுன்னதாக சயந்தனின் ஆதிரையை வாசித்து முடித்தேன். ” ஆறாவடு ” வினால் ஏற்பட்ட சினம் நீங்கியிருந்தது.

” அர்த்தம் ” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தபோது அறியமுடிந்த சயந்தனின் ஆற்றல் “ஆறாவடு” வும், அது கொடுத்த அறிமுகமும், திசை திரும்பிவிடக்கூடுமென எண்ணியதுண்டு. ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றியிருக்கிறாள் ஆதிரை.

600 பக்கங்கள் தாண்டி, வன்னி நில மாந்தர்களோடு வாழ்ந்து பயணிக்க, ஈற்றில் ஆதிரை.. நாவலின் முன்னெங்கும் காணாத ஆதிரை எவ்வாறு நாயகியானாள்? , சிவராசனின் கதறியதுபோல் ” காவல் தெய்வம்” என்றதனாலா..? .

அதிகம் பேசாதவர்களின், பேசப்படாதவர்களின், அடையாளம் ஆதிரை. தொலைந்து போனவர்களின் தொலைக்கப்படக் கூடாத அடையாளமாக என்னுள் ஆதிரை.

“நிலக்கிளி” யிலும், “குமாரபுர(ம்)” த்திலும், வன்னிப் பெருநிலப்பரப்பில் அலைந்து திரிந்த அனுபவத்தை, தந்து மகிழ்வித்த அ.பாலமனோகரனது எழுத்துக்களின் நினைவோடே ஆதிரையை வாசிக்கத் தொடங்கினேன். ஒருவகையில் அது தவறாயினும், வன்னி நிலம் சார்ந்த வாசிப்பனுவத்தை பாலமனோகரனைத் தாண்டி எவரது எழுத்துக்களும் எனக்குத் தந்திருக்கவில்லை.

முதல் 250 பக்கங்களிலும் வன்னி நிலம் வருகிறது, அங்கு வாழும் மாந்தர்கள் வருகிறார்கள், தனியன் யானையும், இத்திமரத்தாளும், கூடவே வந்த போதும், ஒன்றிக்க முடியதவாறே கடந்து சென்றேன். கதையாடல் சரியாயினும், சொல்லாடலில் அந்நியமானது போலும். ஆனால் அதற்குப் பின் வந்த 400 பக்கங்களையும் ஒரே அமர்வில் நின்று நிதானித்து வாசிக்க வைத்த கதையோட்டமும், அதை இடர்ப்பாடு செய்யாத மொழிநடையும், பாலமனோகரனை மெல்ல மறக்கச் செய்தது.

நின்று நினைக்க, நினைந்துருகிக் கலங்க, மகிழ்வுகளில் மனம் திளைக்கவென ஒன்றன்பின் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வரும் காட்சிகள்.கேள்விகள், பதில்கள், பதிலற்ற கேள்விகள் எனத் தொடரும் உரையாடல்கள். சாதிபார்த்தவன், சமராடியவன், விட்டோடியவன், வேடிக்கை பார்த்தவன், என எல்லோரையும் இழுத்து வைத்துக் கதைநகர்கிறது. எல்லோரும் இருக்கிறார்கள்…

இல்லாது போனவர்களின் கதை , இருப்பவர்களின் கதையுமெனச் சொன்னதும், சொல்லாததும் நிறையவே உண்டு. ஆனாலும், போராட்டத்தின் இறுதிக் கணங்களில், குழந்தையின் கன்னம் தொட்டு மன்னிப்புக் கோரும் போராளியும், ஆதிரையிடம் மன்னிப்புக் கோரும் சிவராசனும், போராட்டத்தில் தவறுகளுன்டு, ஆனால் போராட்டம் தவறல்ல என்பதையும் நிறுவத் தவறவில்லை. துயர் கடந்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் ஆதிரையைக் காணமுடியும்.

ஆதிரையைக் கொண்டாடலாம்.

நன்றி – 4தமிழ்மீடியா

By

Read More

ஜே கே

ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம்.

24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால்

சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான்.

“அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான்.

“என்னை விடு. நீ போ”

“ஷெல்லடி கூடுதண்ண… வாங்க போவம்”

“டேய்… நாயே… ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே…. நீ போ… நான் வரேல்ல” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா… என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே…”

அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே…” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின.

மறுநாள் காலை, இயக்கத்தின் தமிழர் ‘புனர்வாழ்வு’ கழகத்தைச் சேர்ந்தவர்கள் உருக்குலைந்த கூடாரத்தின் சிதைவுகளை அப்புறப்படுத்திவிட்டு மனிதத் துண்டங்களைக் கூட்டி அள்ளினார்கள். அவர்கள்தான் இப்போது சவங்களைப் புதைக்கின்ற கடமையை மேற்கொண்டார்கள்.

உடல் சிதைந்து வலதுகண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையை நீண்ட நேரமாக யாராலும் அடையாளம் காண முடியவில்லை. புதைப்பதற்குச் சற்று முன்பாகவே ஒரு நடுத்தர வயதுக்காரன் அடையாளம் காட்டினான்.

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்குப் பிள்ளையள் இல்லை…”

நாமெல்லாம் ஒரு வண்ணாத்திப்பூச்சியின் கனவு என்கிறது சீனத்துப் பழமொழி. ஒருநாள் நான் வண்ணாத்திப்பூச்சியாகத் தோட்டத்தில் இறக்கை அடித்துப் பறக்கிறேன். ஒவ்வொரு பூக்களாக, இலைகளாக, கிளைகளாகத் தொட்டுத்தரித்துப் பறந்து திரிகிறேன். வண்ணமயமான என்னிரு இறக்கைகளும் படக்படக்கென்று விசிறித் தள்ளுகின்ற காற்றிலே சிறு பூக்களின் இதழ்கள் அசைவது இதமாகவிருக்கிறது. அப்படி ஒரு பூவிலே தரித்து நிற்கும் தருணத்தில் என்னைப்போலவே இன்னொரு வண்ணாத்தியைக் காண்கிறேன். திடீரென்று கனவு கலைகிறது. நான் அந்த வண்ணாத்தி இல்லை, வெறுமனே மனுசன், இதுவரையும் கனவுதான் கண்டிருக்கிறேன் என்று உணர்கிறேன். கூடவே குழப்பமும் சேர்கிறது. இந்த மனித உருவம் கண்ட கனவுதான் அந்த வண்ணாத்திப்பூச்சியின் பறப்பா? அல்லது அந்த வண்ணாத்திப்பூச்சி காண்கின்ற கனவுதான் இந்த மனித வாழ்க்கையா? “போனதெலாம் கனவினைப்போல் புதைந்தொழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?” என்கிறது பாரதி கவிதை.

சயந்தனின் ஆதிரை நாவலும் ஒரு கனவுதான். துர்கனவு. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகால வன்முறையும் யுத்தமும் அதன் நீட்சியும் சேர்ந்த ஈழத்துப் போரியல் வாழ்க்கையின் அவலங்களின் ஒரு பகுதியைச் சொல்லும் நாவல் ஆதிரை. இயல்பான இரத்தமும் சதையுமுள்ள சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாளாந்த வாழ்க்கை கொடுக்கின்ற சுகங்களோடும் துக்கங்களோடும் வாழ்ந்து கழிக்கின்ற எளிமை மனிதர்களின் கதை. ஆனால் வன்முறையும் யுத்தமும் அவர்களை ஒரு துர்நாற்றம்போலத் துரத்துகிறது. அந்தத் துர்நாற்றம் ஊர் ஊராகப் பரவுகிறது. அந்த மனிதர்கள் முதலில் மூக்கைப்பொத்துகிறார்கள். பரவுகின்ற துர்நாற்றத்தை கைகளால் விசிறிக் கலைத்துப் பார்க்கிறார்கள். அது முடியாமல் பின்னர் ஓடித்தப்புகிறார்கள். நாற்றம் தொடர்ந்து துரத்துகிறது. ஓட ஓட அது மேலும் பரவுகிறது. ஈற்றில் அவர்கள் அந்த துர்நாற்றத்தினுள்ளேயே வாழத் தலைப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அதற்கு இசைவாக்கப்படுகிறார்கள். அவர்களைப் பகடைக்காய்களாக்கி அரசியல் விளையாடப்படுகிறது. பகடைகள் உருட்டப்படுவதுபோலவே அவர்களின் வாழ்க்கையும் உருட்டப்படுகிறது. ஈற்றில் அந்த மக்கள் இரத்தமும் சதைப்பிண்டங்களுமாகப் பிய்த்து எறியப்படுகிறார்கள். துர்நாற்றம் மேலும் பரவுகிறது. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல சென்றாலும் அந்த துர்நாற்றம் இன்னமும் எஞ்சிய மனிதர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது.

ஆதிரையை வாசித்துமுடித்தபின்னர் நமக்கும் அந்த நாற்றம் பரவிக்கொள்கிறது. ஒரு துர்கனவைக்கண்டு பதட்டத்தில் விழித்தவனுக்கு வியர்வை கசகசக்கிறது. இது வெறுங்கனவேயன்றி நிஜமில்லை என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அடுத்த கணமே உடல் நடுங்கத் தொடங்குகிறது. கடவுளே, நான்தான் அத்தாரோ? அவன் கனவினுள் விழித்திருப்பவனோ? இது கலைந்தால் அத்தாராய் மாறி நானும் அரற்றுவேனா? என் மடியில் இறந்துபோன சந்திரா கிடப்பாளா? சந்திரா இறந்துவிட்டாளா? என்னோடு அத்தனை சுக துக்கங்களிலும் பங்கெடுத்து, கூடவே வந்து, கூடி, உறவாடி, சிரித்து, அழுத சந்திரா என் மடியிலேயே இறந்து கிடக்கிறாளா? துர்நாற்றம் பெரும் பயமாக உருமாறி உடலெங்கும் பரவத்தொடங்குகிறது.

ஆதிரை வன்னிப்பெருநிலத்து மாந்தர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை. வன்னியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்கள். மலையகத்திலிருந்து வன்முறை காரணமாக இடம்பெயர்ந்து வன்னியில் தம் வாழ்க்கையைக் கட்டியமைக்கும் மக்கள். யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடையும் மக்கள். இப்படி பல்வேறு பின்புலங்களையுடைய மக்களைக்கொண்ட பகைப்புலத்தை மையமாக வைத்து அந்த மாந்தரின் நாளாந்த வாழ்க்கையை சிறிது சிறிதாக விவரிகிறது நாவல். அவர்களுடைய தொழில், குடும்பம், உறவு, சின்னச்சின்ன சலனங்கள், சம்பவங்கள், எண்ணங்கள் என்று விரிவுபடுத்தி வன்னியினுடைய மூன்று தசாப்த வாழ்க்கைமுறையை நாவல் கட்டமைக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்தே தேர்ந்தெடுத்த படிமங்களினூடாக அந்தப் புழுதி மண்ணோடும் மனிதர்களோடும் நாம் உறவாட நாவல் வழி சமைக்கிறது. காடும் வானும் மண்ணும் முகிலும் சந்திரா வீட்டுப் பரணில் கிடந்த பழைய புத்தகங்களும்கூட படிமங்களாக விரிகின்றன. நம் கனவும் விரிந்து வண்ணாத்திப்பூச்சியாக சிறகடித்துப் பறக்கிறது. இந்த வாழ்க்கை இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கின்ற பரவசப் பறப்பு அது. அந்த மாந்தர்களோடு சேர்ந்து நாமும் இத்திமரக்காரியை வணங்குகிறோம்.

ஆனால் சீக்கிரமாகவே வண்ணாத்தியின் நிறங்கள் ஒவ்வொன்றாக அகன்று போகத்தொடங்குகிறது. இறக்கைகள் தூர்ந்துபோகின்றன. வன்னிப்பெருநிலத்தின் வாழ்க்கை சீட்டுக்கட்டுப்போல குலையத்தொடங்குகிறது. கனவு துர்கனவாகிறது. படிமங்களின் நிறங்களும் மாற்றமடைகின்றன. முகில்களுக்குள் அலைந்த படிமம் குண்டித்தசைக்குள் புரையேறிப்போன குண்டுச் சிதறலாக உருமாறி உறுத்துகிறது. அடர்த்தியாக நுழைந்துகொண்டிருந்த இருளிடம் விளக்கின் சுடர் தோற்றுப்போகிறது. தென்னை மரங்களுக்கு தண்ணீருக்குப் பதில் இரத்தம் பாய்கிறது. மூத்திரவாடையில் ஆரம்பித்த துர்நாற்றம் இரத்தவாடையில் முடிவடைகிறது.

நாவல் முழுதுமே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டேயிருக்கிறது. தோற்றுப்போன வாழ்க்கையின் காலக்கோட்டைப் திரும்பிப்பார்க்கையில் வருகின்ற குற்ற உணர்ச்சி. அவசரப்பட்டுவிட்டோமோ? அதை ஏன் செய்தோம்? நாமும் காரணமோ? இப்படிச் செய்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்குமோ? என்கின்ற தோற்றுப்போனவரின் அங்கலாய்ப்பு நாவல் முழுதும் பாத்திரங்களோடு ஊடு கடத்தப்படுகிறது. சம்பவங்கள் அத்தனையுமே அந்தரிப்பையே உருவாக்குகின்றன. கனவிலே எமக்கேற்படும் இயலாமை அது. நாவலின் ஆரம்பத்தில் யுத்த மேகங்கள் சூழ்கொள்ளுகின்ற தருணத்தில் சங்கிலி இப்படி இறைஞ்சுவான்.

“அங்கொண்டும் இங்கொண்டுமான உரசலை மூட்டி மூட்டி யாரும் நெருப்பு வைச்சுவிடக் கூடாது. பிறகு காடே எரிஞ்சு சாம்பராயிடும். அவ்வளவுதான். வெளிக்கிடு. சுணங்குது. இன்னும் நடக்கவேணும்”

அடி வாங்குகின்றவரிடம் திருப்பி அடிக்காதே, அமைதியாக இரு, இல்லாவிட்டால் மேலும் அழியவேண்டிவரும் என்று சொல்கின்ற இயலாமை. செவ்விந்தியத் தலைவர் அமெரிக்கர்களிடம் மண்டியிட்டபோது கூறியதும் இதுவே. “நாங்கள் ஒன்றுமே செய்யப்போவதில்லை. ஆனால் இந்த மண்ணில் நம் மூதாதையர் வாழ்ந்திருக்கிறார்கள். என் அப்பனும் பாட்டனும் உண்டு உறவாடிய நிலம் இது. இதன் ஒவ்வொரு மரம் செடி கொடியோடும் நமக்கு உறவு இருக்கிறது. இதனை தயவுசெய்து சிதைக்காமல் காக்கவேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனுக்கு செவ்விந்தியத்தலைவர் சீயாட்டில் இறைஞ்சி ஒரு கடிதம் எழுதியிருப்பார். காட்டில் வேட்டையாடும் சங்கிலியின் வார்த்தைகள் அந்தச் செவ்விந்தியத் தலைவனுடைய வார்த்தைகளாகவே ஒலிக்கின்றன. வேட்டைக்காரனுக்கு ஆபத்தைக் கணிக்கும் புத்தி இருந்திருக்கிறது. ஆனால் அதைக்கேட்கிற நிலையில் அப்போது அத்தார் இருக்கவில்லை. லெட்சுமணன் இருக்கவில்லை. எவருமே இருக்கவில்லை. அதை உணர்கின்ற நிலை வரும்சமயத்தில் எவருமே உயிரோடு இருக்கவில்லை. அனுபவம் சொல்லிக்கொடுக்கும் தத்துவம்போல வேறு எதுவுமில்லை. “வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”, “வரலாறு என் வழிகாட்டி” போன்ற பிரபாகரனுடைய வாக்கியங்கள் நாவலின் அத்தியாயங்களாகவே வருகின்றன. ஓரிடத்தில் மயில்குஞ்சன் புழுத்துப்போன உடலைப்பார்த்துக்கொண்டே சொல்வார்.

“எனக்கு எல்லாமே விட்டுப்போச்சு. இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப்பிள்ளை மாதிரி எங்கட கையைப் பிடிச்சுக்கொண்டு திரியப்போகுது அத்தார்”

முப்பதே வருடத்தில் அந்தச்சாவு இளைஞராகி பெரியவராகி ஒரு தந்தையைப்போல எல்லா மக்களையும் தோளில் தூக்கிக்கொண்டு முள்ளிவாய்க்கால்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோய் ஊழிக்கூத்தாடியது.

ஆதிரையை வாசிக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை பின்னாலிருந்து யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்த உணர்வு அவ்வப்போது வந்துபோகும். அதுவும் சாரகனோடு நம் ‘மூஞ்சி’ நன்றாகவே பொருந்துகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று தங்கியிருந்தநேரம். யாழ்ப்பாணத்தை இழந்ததோடு புலிகளின் கதை இனி முடிந்தது என்ற நிலையில் கொழும்புத்துறைமுகத்தில் ஒரு தாக்குதல் நடக்கிறது. தாக்குதல் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அடுத்தநாளே “குனியாது கடல் வேங்கை ஒருநாளும்” என்ற சிட்டு குழுவினர் பாடிய பாடல் ஒன்று வெளியாகிறது. “கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும் குகையில் விழுந்த ஒரு அடி” என்று அந்தப்பாடலை முணுமுணுத்துக்கொண்டே வட்டக்கச்சி மண் முழுதும் சைக்கிள் ஓடிய நாள்கள் ஞாபகம் வருகிறது. மாவீரர் படிப்பகத்தில் வெளிச்சம் சஞ்சிகையும் கறுப்பு மையினால் தணிக்கை செய்யப்பட்ட ஆனந்த விகடன் பக்கங்களையும் புரட்டிய காட்சிகள் ஞாபகம் வருகிறது. ஹட்சன் ரோட்டில் தங்கியிருந்த ‘நாமகள்’கூட ஞாபகம் வருகிறாள். ஓயாத அலைகள் தாக்குதலின்போது டிராக்டர் டிராக்டராக இராணுவத்தின் உடல்கள் சென்றுகொண்டிருந்ததை வேடிக்கை பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இயக்கத்துக்குப் போகாமலேயே இவ்வளவும் செய்துகொண்டிருந்த சாரகனை வாசிக்கையில் நாவலின் பக்கங்கள் நிலைக் கண்ணாடிகளாக உருமாறி நம் முகத்தில் காறி உமிழ்கின்றன. நாவல் முழுதும் சயந்தனிடம் இருக்கும் குற்ற உணர்ச்சி நம்மிலும் தொற்றிக்கொள்கிறது. குறிப்பாக இந்தப் பகுதி.

“அன்று முழுவதும் வகுப்புகள் ஏனோதானோவென்றுதான் நடந்தன. எல்லோரும் முல்லைத்தீவுப் போரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். சாரகன் ஒரு கவிதை எழுதலாமா என்று யோசித்தான்.”

ஆதிரை சொல்கின்ற சமூகப்பிரிவினைகள் முக்கியமானவை. மலையக மக்களிடையே இருக்கின்ற சாதியப்பிரிவுகள். வடக்கு சமூகத்தரிடையே இருக்கின்ற சாதியம். பிரதேசப் பிரிவினைகள். வர்க்கப் பிரிவினைகள். இப்படிப் பிரிவினைகள் நாவலின் கடைக்கூறு வரைக்கும் தொடர்கின்றன. பல்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. போராட்டத்துக்கு ஆள் சேர்ப்பதிலும் ஆட்சேர்ப்பதை எதிர்ப்பதிலும் உள்ள நைச்சியமான அரசியல் சொல்லப்படுகிறது. போர் முடிந்தபின்னும் அந்த மக்கள் படுகின்ற வேதனைகளைக்கூட ஒரு பிரிவினைக்குள்ளே அடக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த மக்கள் திரும்பத் திரும்ப அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். நம் சமூகத்தையும் பிரிவினைகளையும் எப்போதுமே பிரிக்கமுடியாதோ என்ற எண்ணம் வருகிறது. எப்போதுமே ஏதோ ஒரு குழுவினர் தம் பிழைப்புக்காக ஏதோ ஒரு பிரிவினைவாதத்தை முன் எடுக்கவே செய்கின்றனர். பின்னர் அதுவே அக்குழு சார்ந்தவர்களின் இயல்பாகிவிடுகிறது. மாதுளம்பழத்தின் விதைகளைச் சுற்றியிருக்கும் தோலைப்போல நம்மனைவரையும் பிரிவினைவாதம் சூழ்ந்தே கிடக்கிறது. அத்தாரும் சந்திராவும் விதிவிலக்குகள். வெள்ளையனும் முத்துவும் காலத்தின் கட்டாயங்கள். ஆனால் சாதாரண நிலையில் அனைத்தும் சாரங்கன் நாமகளாகப்போகவே சாத்தியம் அதிகம் என்பதே யதார்த்தம். இந்தப்பிரிவினைவாதங்களின் நீட்சியாகவே புலம்பெயர் உள்நாட்டு கொழும்பு பிரதேசவாதங்களையும் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. எல்லாத்தரப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் ஆதிரை புலம்பெயர் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் தனியனாக விட்டுவிடுவதோடு மாத்திரமன்றி கிடைக்குமிடங்களிலெல்லாம் அவர்களின் குதத்தில் அமிலம் பாய்ச்சவும் தவறவில்லை. யுத்தத்தின்பின்னர் கோழிகளை வாங்கிக்கொடுத்து ‘நடப்புக்காட்டும்’ புலம்பெயர் தமிழரை ஏளனம் செய்வதிலிருக்கும் முனைப்பு சத்தமே போடாமல் தம் மக்களுக்குத் தோள் கொடுக்கும் எத்தனையோயாயிரம் பேரை இனங்காட்டுவதில் இருக்கவில்லை. சயந்தனும் புலம்பெயர் தமிழராக இருப்பதன் குற்ற உணர்ச்சி அதற்குக் காரணாமாகவும் இருக்கலாம். அல்லது கைக்கு வசமாகக் கிடைப்பதால் எறிந்த கல்லாகவும் இருக்கலாம். பிரிவினைவாதம் ரப்பர் பந்தைப்போன்றது. ஒருபக்கம் அழுத்தினால் மறுபக்கம் விரிகிறது, மறுபக்கம் அழுத்தினால் இன்னொரு பக்கத்தால் நீள்கிறது. இப்படி ரப்பர் பந்து உருமாறுகிறதே ஒழிய உள்ளிருக்கும் ரப்பர் என்கின்ற பிரிவினை வலுக்குறையாமல் அப்படியே இருக்கிறது.

நாவலில் சயந்தன் செய்கின்ற அரசியல் மிக எளிமையானது. நாற்பது வருட போராட்டத்தில் எல்லாத்தரப்பு வாதங்களையும் நேர்மையாகச் சொல்ல விழைகிறார். சாதாரண மக்களின் எண்ணங்களூடு சொல்கிறார். ஒவ்வொரு தரப்புக்கும் பாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மலையக மக்களின் ஏதிலி நிலைமையைப் பேசுவதற்குச் சில பாத்திரங்கள். சாதாரண சிங்கள மக்களின் சிந்தனைகளை வெளிப்படுத்த சிலர். புலிகளுக்கு ஆதரவாகச் சில பாத்திரங்கள். எதிர்த்துப்பேச சில பாத்திரங்கள். நடுவுநிலைமைக்குச் சில. இந்தியாவைத் திட்ட சில. வல்லரசுகளைத் திட்ட சில. இப்படியான கதை சொல்லல்களின் நிகர அரசியல் என்பது பூச்சியம்தான். இத்தனை வருட அரசியலின் பின்னர் ஒன்றுமே வேண்டாம், மக்களை நிம்மதியாக வாழவிட்டாலே போதும் என்கின்ற அந்த முடிபுதான் ஆதிரையின் ஆதார அரசியல். அதுவே போராட்டங்களின் ஆரம்பப்புள்ளி என்பது அதிலுள்ள முரண்நகை. நாவல் முழுதும் அரசியல் பேசப்பட்டாலும் ஆதிரையின் உச்சப்புள்ளி அரசியல் அல்ல. இது அரசியல் நாவலும் அல்ல. அரசியல் இந்த நாவலில் ஒரு பதிவு. அவ்வளவே.

நாவலின் அழகியல் அதன் பகைப்புலத்திலும் படிமங்களிலும் உயர்ந்து நிற்கிறது. வன்னி மண்ணும் அதன் புழுதியும் காடுகளும் வயல் நிலங்களும் தென்னந்தோப்புகளும் கடற்கரைகளும் தனித்துவமான போரியல் வாழ்க்கைமுறையும் நாவல் முழுதும் மூன்று தசாப்தங்களுக்கு அவற்றினுடைய பரிணாமங்களுடனேயே விரிந்து கிடக்கிறது. படிமங்களைப் பாத்திரமாக்கி அவற்றினூடு கதை சொல்லும் தமிழ் நாவல்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி உச்சங்கண்ட ஒன்று. அதில் சிறுவர்கள் தவளைகளோடு பேசுவார்கள். நாவல் முழுதும் வாசிக்கும்போது நமக்கும் முகத்தில் வெயிலடிக்கும். எறும்புகளும் பரதேசிகளும் நாவலை நகர்த்திச் செல்லுவர். நெடுங்குருதியில் மிக இயல்பாகத் திரியும் அந்தப் படிமங்கள் எஸ்.ராவின் பின்னைய நாவலான யாமத்தில் சற்றே வலிந்து திணிக்கப்பட்டதுபோலத் தோன்றும். படிமத்தை எப்படி எங்கே புகுத்தவேண்டும் என்கின்ற உத்தி தெரிந்து எழுதப்பட்ட நாவல் யாமம். வாசிக்கையில் அது வெளிப்படையாகவே தெரியும். ஆதிரையில் படிமங்களின் இயல்பும் திணிப்பும் ஒன்றாகவே வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் வருகின்ற மூத்திரமாகட்டும். ஈரம் உறிஞ்சிய காடாகட்டும். அறுகோண வெடிப்பில் மென்சவ்வுகளோடு மேற்கிளர்ந்த முட்டையாகட்டும். எல்லாமே சயந்தன் தெரிந்து செய்த அழகியல்கள். சில இடங்களில் பொருந்துகிறது. சில இடங்களில் உறுத்துகிறது. இப்படி அழகியலோடு எழுதினாலேயே அது இலக்கியம் என்ற புத்தியின்பாற்பட்ட எழுத்து அது. ஆனால் நாவலுக்குள் நுழைய நுழைய படிமங்கள் கதை சொல்லிகளாகவே மாற்றம் பெறுகின்றன. அதுநாள் வரைக்கும் புலிகளை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த அத்தார் கடைசிக்கட்டத்தில் அந்தப்புலிகளே மக்களின்மீது வன்முறையை ஏவி விட்டார்கள் என்று அறிகின்ற கணத்தில் அத்தாருடைய காதுகளைத் தடித்த தோல் ஒன்று வளர்ந்து மூடிக்கொள்கிறது. படிமம் நம் இதயத்தைக் கூறுபோடும் இடம் அது. அங்கே படிமம் தானாகவே எழுத்தில் வந்தமர்ந்துகொள்கிறது. நாவலின் இறுதியில் வெள்ளையன் மிதிவெடிகளைப் புதைப்பதாக ஒரு துர்கனவு கண்டு விழித்தெழுவான். கனவைப்போலவே வெளியே துளிக் காற்றும் இல்லை என்று ஒரு வசனம் வரும். வாசிக்கும் நமக்கும் அப்போது மூச்சு முட்டும்.

ஆதிரை அரசியலைச் சொல்லலாம். படிமங்களிலும் அழகியலிலும் ஒரு எட்டுப் பாய்ந்திருக்கலாம். ஈழத்து வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கலாம். பல தலைமுறை மாந்தர்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். கதை சொல்லலில் புதுமை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் ஈற்றில் அற்புதமான நாவல்களுக்கான அடையாளம் நம் ஆழ்மனத்தில் அவை ஏற்படுத்தும் சிறு சலனங்களே. ஜெயமோகன் சொல்கின்ற அகவுணர்ச்சியும் அதுவே. அந்தத் தருணம் முள்ளிவாய்க்காலில் அத்தார் தன் மனைவி சந்திராவின் உடலை மடியில் கிடத்தி அழுகின்ற கணத்திலே நிகழ்கின்றது. ஒரு கணம், ஒரே கணம் அத்தாரின் இடத்தில் நம்மை வைத்துப்பார்க்கையில் உடல் குலுங்கி நடுக்கம் எடுக்கிறது. பயத்தில் உள்ளங்கை வியர்க்கிறது. “குடும்பத்தில் யாரும் வேண்டாமென்று என்னை மட்டும் நம்பி வந்தவளடா” என்று அத்தார் அரற்றும்போது இதற்காகவே காத்திருந்ததுபோல அழுகை உடைப்பெடுக்கிறது. இப்படித்தானே ஒவ்வொரு இழப்புக்குப்பின்னாலும் ஒரு சரித்திரம் இருக்கும். அத்தாரையும் சந்திராவையும் அநியாயமாகக் கொன்றுவிட்டோமோ என்று தோன்றுகிறது. மயில்குஞ்சரும் நடராசனும் ஆதிரையும் சாவதற்கு நாமே காரணமாகிவிட்டோமோ? இப்போது உயிரோடு வாழுகின்ற வெள்ளையனையும் ரூபியையுங்கூட நாங்கள் வாழவிடவில்லையோ? துர்நாற்றம் மேலும் கடுமையாகிறது. அது வேறு எங்கிருந்துமில்லை, நம்மிலிருந்தே உருவாகிறதோ என்கின்ற நினைப்பும் கூடவே வந்து சேர்க்கிறது.

இரவுவானின் வடகீழ்த்திசையில் மினுக் மினுக்கென்று ஒளிரும் வேட்டைக்கார நட்சத்திரக்கூட்டத்திலேயே பிரகாசமானது ஆதிரை. அதைப் பார்க்கையிலேயே ஒரு பரவசம் வரும். அதன் ஒளிக்குப்பின்னாலே ஒரு உலகம் இருக்குமோ? அங்கும் நம்மைப்போல மனிதர்கள் இருப்பார்களோ? சின்னதாக நம்பிக்கையும் உருவாவதுண்டு. இனிமேல் அதனைப்பார்க்கும்போது அம்பாறையில் யோன் தமிழரசியாகப் பிறந்து முகமாலை முன்னரணில் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட ஆதிரையே கண்ணுக்குள் தெரிவாள்.

ஆதிரை. நாம் தொலைத்த வாழ்வின் பட்டயம.

http://www.padalay.com

By

Read More

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

amruthaஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம்.

“யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர்.

சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது.

– கருணாகரன்

ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்?

ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும்.

ஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? மனதில் உருவாகிய வெளிப்பாடா?

2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டும்.

 

அப்படியென்றால் உள்ளுணர்வில் எழுந்த கேள்விகளின் அலைக்கழிப்பிலிருந்து ஆதிரை உருக்கொண்டுள்ளது எனலாம்?

ஓம். அதிலிருந்து தொடங்கி பின்னர் நேரிற் கண்ட மனிதர்களும், காதில் விழுந்த செய்திகளும் உருவாக்கிய கொதிநிலையின் அலைகழிப்புத்தான் ஆதிரை.

தேவகாந்தன், ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல் எனப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தாய்நிலத்தின் அரசியலையே – வாழ்க்கையையே எழுதுகிறார்கள். நீங்களும் அப்படித்தான். இது ஏன்?

எனது புலம்பெயர் வாழ்வு ஒப்பீட்டளவில் குறுகலானது. எப்படியென்றால் 2006 இல் புலிகள் மாவிலாறு அணையைப் பூட்டியபோது நான் இலங்கையிற்தான் இருந்தேன். ஆக இன்னமும் நிலத்தின் கதைகளே மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற நாட்டுடனான சமூக இணைவு இன்னமும் எனக்குச் சாத்தியமாகவில்லை. இந்த ஜென்மத்தில் அப்படியொரு அதிசயம் நடக்குமென்றும் தோன்றவில்லை. எனக்கு மட்டுமென்றல்ல. நம்மிற் பலரும் மனதால் ஈழத்திற்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியானால் ஈழத்திற்கு வரலாமே என்ற உங்களுடைய ‘மைன்ட் வொய்ஸ்’ இங்கேவரையும் கேட்கிறது. நீங்கள் அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

ஆதிரை புனைவு நாவலாகக் கட்டமைக்கப்பட்டதா? வரலாற்று  நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாக்கப்பட்டதா? 

சில உண்மை நிகழ்வுகளைப் பின்னிறக்கி முன்னால், முழுக்கப் புனைவால் வரைந்த சித்திரம் ஆதிரை. புனைவினைத் தேர்வு செய்யும் அரசியலில் நேர்மையாயிருந்தேன். அதற்குப் பொறுப்புக் கூறுபவனாயும் இருக்கின்றேன்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்லது ஈழப்போராட்டத்தின் போர் ஓய்ந்த பிறகு வந்த பெரும்பாலான நாவல்கள் வன்னிக்களத்தையும் அந்த நிகழ்ச்சிகளையும் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது நீங்கள் சொல்வதைப்போல சில உண்மைச் சம்பவங்களை பின்னணியில் கொண்டிருக்கின்றன. இது புலிகளைப் பேசுவதன் மூலமாக அல்லது அந்த இறுதி யுத்தத்தைப் பேசுவதன் மூலமாக வாசகக் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடா? அல்லது துயரிலுறைந்த சனங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவா? உதாரணம், தமிழ்க்கவியின் ஊழிக்காலம், ஷோபாசக்தியின் Box, குணா கவியழகனின் விடமேறிய கனவு… 

குழந்தைப் போராளிகள் புத்தகத்தை எழுதிய சைனா கிறைற்சி, அவருடைய டொக்டரின் ஆலோசனையின் பேரில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எழுதிய பதிவுகளே அந்தப் புத்தகம் என்கிறார். இந்த யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன். மற்றும்படி பெருமளவான வாசகர் பாராட்டைப் பெறுவதே நோக்கமாயிருந்திருக்குமெனில் ஆதிரை ஒரு “போர்ப் பரணி”யாகவல்லவா இருந்திருக்க வேண்டும்.

இருந்தாலும் இதே காலத்தில் வெளியான ஏனைய லெனின் சின்னத்தம்பி, அனந்தியின் டயறி, அசோகனின் வைத்தியசாலை, கசகறணம், அத்தாங்கு போன்ற நாவல்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் கவனத்தையும் விட இந்த மாதிரி சமகால அரசியலைப் பேசும் Box, நஞ்சுண்டகாடு, ஆயுத எழுத்து, ஊழிக்காலம், , விடமேறிய கனவு, ஆதிரை போன்ற  நவல்களுக்குக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் கவனமும் அப்படித்தானே உணரவைக்கின்றன? இது ஒருவகையான உளவியல் ஈடுபாடு எனலாமா?

பிரதிகளில் தங்களைக் காண விரும்புகிற, அவற்றோடு தாம் வாழ்ந்த காலத்தை நனவிடை தோய முற்படுகின்ற அதில் சுகித்திருக்கின்ற வாசக மனதின் உளவியலா என்று யோசிக்கின்றேன். அப்படியானால் தமிழ்நாட்டில் உருவாகும் வரவேற்பினை எவ்வாறு இந்த உளவியலில் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை என் நண்பர் ஒருவர் கேட்டதுபோல தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுடைய யுத்தகால எழுத்துக்கள் த்ரில்லான, திகிலான ஒருவகைச் சாகச எழுத்துக்களாகக் கருதி விரும்பிப் படிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.. இவை பற்றி மேலும் உரையாடவேண்டும்.

நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள்? ஆரம்பத்தில் யாரைப் பிடிக்கும்? இப்பொழுது தமிழில் யார் உங்களுடைய ஆதர்சம்?

இது சற்று ஆச்சரியம்தான். வீட்டில் பெரியளவிலான வாசிப்பாளர்கள் இல்லை. நான் எழுதியிருந்த புத்தகங்களைக் கூட வீட்டில் யாரும் படித்ததில்லை. அவை புத்தகமாகின்றபோது இவன் ஏதோ எழுதியிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் போல.  பெரியப்பாவிற்கு சற்று வாசிப்பிருந்தது. என்னுடைய அப்பாவின் அக்கா என் சிறுபராயக் காலத்தில் உள்ளூர் நுாலகத்தில் ஒரு நுாலகராகப் பணியாற்றினார். பெரும்பாலும் எனது மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன. புத்தகங்கள் மீதான நெருக்கம் அப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். ஏனென்று தெரியவில்லை இயல்பிலேயே இலங்கை எழுத்தாளர்களுடைய எழுத்து மீது பெரிய ஈடுபாடிருந்தது. அந்த நுாலகத்தில் யாரும் சீண்டாதிருந்த இறாக்கையிலிருந்த இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை  எடுத்துச் சென்று வாசிக்கத் தொடங்கினேன். வீரகேசரிப் பிரசுரம், மீரா பிரசுரம், தமிழ்த்தாய் வெளியீடு, கமலம் பதிப்பகம் என்று பதினான்கு வயதிற்குள்ளாகவே பலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர சரித்திரைப் புனைவுகளிலும் ஆர்வம் இருந்தது. குறிப்பாக சாண்டில்யனின் புத்தகங்கள் பலவற்றையும் அக்காலத்தில் படித்து முடித்திருக்கிறேன். யவன ராணி என்ற மூன்றோ நான்கு தொகுதிகள் அடங்கிய புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் ஊடாக வன்னியில் தேவிபுரத்தில் சென்று முடித்த நினைவிருக்கிறது.

அக்காலத்தையை என் ஆதர்சமென்றால் செங்கை ஆழியானைத்தான் சொல்ல முடியும். அவரைப்போல எழுதவேண்டுமென்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இப்போது ஆதர்சமென்று சொல்வதற்கு யாருமில்லையென்றாலும் காத்திருந்து படிக்கின்ற எழுத்தாளர் என ஷோபா சக்தியைச் சொல்லலாம்.

எழுத்து ஒரு தொழில்நுட்பத்தின் பாற்பட்டதா? இலக்கியச் செயல் என்று அதைச் சொல்லலாமா?

எழுத்திற்கு உத்திநுட்பமேயிருக்கும். தொழில்நுட்பம் இருக்காது. அது தொழில்நுட்பமெனில் அதில் அகவயமான கரிசனைகள் இருக்காத வெறும் இயந்திரத்தனமானதாயிருக்கும். அதுபோலத்தான், இலக்கியம் ஒரு செயல் அல்ல. அது ஆக்கம். செயல் என்ற சொல்லாட்சி ‘போலச் செய்தல்’ என்பதை அர்த்தப்படுத்தி அதற்குப் போலித்தனத்தை வழங்கிவிடுகிறது. எனக்குத் தெரிந்தவகையில் எழுத்தென்பது சொற்களுக்கு அனுபவத்தைக் கொடுத்து சொற்களின் அழகியலைக் கட்டுவது. இது இந்தப் பதிலை எழுதிக்கொண்டிருக்கிற தருணத்தில் என் நிலைப்பாடாகவிருக்கிறது.

பெரும்பாலானவர்களி்ன் எழுத்துகள் அவர்களுடைய இளமைக்காலத்தின் பிரதிமைகளாகவே வெவ்வேறு விதங்களி்ல தொடர்ந்திருக்கும். முதல்கால் வாழ்க்கையின் ஆதிக்கத்தையே பலரு்ம திரும்பத்திரும்ப எழுதுகிறார்கள் என்று கானாவைச் சேர்ந்த மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu  Ali)) சொல்கிறார். உங்களுடைய அனுபவம் எப்படி?

ஆறாவடுவும் சரி, ஆதிரையும் சரி அக்கதைகளின் பிரதான இழைகளின் கதைகளை  நான் ஒருபோதும் அனுவித்திருக்கவில்லை. ஆக, அவற்றில் முழுமையாக என்னைக் கொண்டுபோய் இருத்தவும் முடிவதில்லை. இருப்பினும் குணாம்சங்களாக, சிறு சம்பவங்களாக, ஓர்  உதிரியாக ஆங்காங்கே நான் வந்துபோவதைத் தவிர்க்கவும் இயலவில்லை.

மலையக மக்களின் துயரம் தொடக்கம் அடிநிலை மக்களின் பிரச்சினைகளையும் வாழ்வையு்ம் ஆதிரை பேசுகிறது. மறுவளத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் மீது விமர்சனத்தை வைக்கிறது. இது ஒருவகையான சமனிலைக்குலைவை  உண்டாக்கும் என்றும் அரசியல் சாய்வைக் கொண்டிருக்கிறது எனவும் படுகிறது என்ற அபிப்பிராயங்கள் வாசக மட்டத்தில் காணப்படுகிறது. உங்களுடைய கரிசனையின் மையம் எதனால் உண்டானது?

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள  ஒரு நண்பர், ஈழத்தமிழர்கள்,  மலையகத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கிறீர்களே.. மலையகத் தமிழர்கள் எங்களுடைய விடுதலைப் போருக்கு ஏதேனும் செய்தார்களா என்று ஒரு கேள்வியை முகநுாலில் துாக்கிப்போட எனக்குத் துாக்கிவாரிப்போட்டுவிட்டது. ஈழத் தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு பற்றி விரிவாகப் பேசினால், அவர்களும் வன்னிக்குவந்து நீண்டகாலமாக இருந்தவர்கள்தானே எனச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிமட்டுமல்ல அம்பாறையின் ஓர் எல்லையாகவிருந்த பதுளைப் பக்கங்களிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு பல இளையவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீழ்ந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணம் என்ற பிரதேசத்திலிருந்து போராளிகள் எவரும் உருவாகவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கக் குடும்பங்களும் பல பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தேயிருக்கின்றன.

நான் சமநிலை குலைந்த இடமாகப் பார்ப்பது, இந்த யுத்தத்தை தம்முடைய வாழ்வுக்கான ஒரு வாய்ப்பாக மடை மாற்றிப் பயன்படுத்தியவர்கள் ஒரு குறித்த ஒரு பிரதேசத்தைச் சார்ந்தவர்களாயே இருந்தார்கள் என்பதைத்தான். அந்த விச்சுழித்தனம் அவர்களுக்கு அதிகமாக வாய்த்தது எப்படி..? அத் தந்திரத்தின் மூலம் என்ன.. ? அந்த விவேகம் எந்தச் சமூகப் பின்னணியில் உருவாகிறது.. ? இம்மாதிரியான தீராக் கேள்விகள் ஆதிரை முழுவதும் உள்ளூரப் பரவியிருக்கிறது..

மலையக மக்களுக்கு இடமளித்திருப்பதைப்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை – அவர்கள் மீதான கரிசனையை ஆதிரையில் உணர முடிகிறது. இந்த நாவல் ஒரு பரந்த தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்  என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? அல்லது இயல்பான ஓட்டத்தில் இத்தகைய ஒரு பரப்பு விரிந்ததா?

தொடக்கம், முடிவு என்ற புள்ளிகள் மனதில் இருந்தன. ஒரு பொதுவான பரப்பாக போர் நிலத்தில் ஏழ்மையும் அதன் இயல்பும் பற்றியே பேச விளைந்தேன். நாவல் நீள நீள அது இயல்பாகவே நீங்கள் குறிப்பட்டதுபோல ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கரிசனையைத் தனக்குள் எடுத்துக்கொண்டுவிட்டது என எண்ணுகிறேன்.

இனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியிருக்கும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியல் தன்னுடைய சொந்தப் பரப்பிற்குள் நிகழும், பால், சமூகம், வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைகளின்போது அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே செயற்படவேண்டும் என்று நான் அக்கறைப்படுகிறேன். தமிழ்த்தேசியத்தின் கட்டமைவு உண்மையில் அவ்வாறே இருந்திருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி, தனக்குள் நிகழும் ஒடுக்குமுறைகளின் போது அது கள்ள மௌனம் சாதிக்கின்றது. முடிந்தவரை அதை ஒளித்துவைக்க முற்படுகிறது. இது மிகவும் கசப்பானது. அதன்மீது நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியது.

இன்னொரு புறத்தில், – தமிழகத்தில் எப்படியென்று தெரியவில்லை – ஆனால் ஈழத்தில் சமூக, பால், வர்க்க ரீதிகளாக ஒடுக்கப்பட்டவர்களுடைய வியர்வையும் அவர்களுடைய இரத்தமும் தமிழ்த்தேசியத்தில் நிறையவே இறைக்கப்பட்டிருக்கிறது. என்றேனும் தமிழ்த்தேசியம் சுகிக்கவிருக்கிற உரிமைகளில் அவர்களும் உரித்துடையவர்கள். நேரடியான உரிமையுடையவர்கள். இந்நிலையில் அவர்களைத் தமிழ்த்தேசியத்திலிருந்து வெளியேற்றுவது, தமிழ்த்தேசியத்திலிருக்கிற ஆதிக்கத்தரப்பினருக்கு உவப்பானதாயே அமைந்துமுடிந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

ஆறாவடுவிலும் ஆதிரையிலும் மனிதத் துயரமே மையம். துயரத்தை அனுபவிக்கும் சமூகத்துக்கு மீண்டும் துயரத்தைப் பரிசளிப்பதா? அல்லது அதனைக் கொண்டாட்டமான நிலைக்குக் கொண்டு செல்வதா நல்லது?

ஈழத் தமிழர்களுடைய போராட்டத்தின் துயர முடிவின் காரணமாக அவர்களுடைய வாழ்வில் இனி உய்வு ஏதுமில்லை என ஆதிரை நிறுவ முற்படவில்லை.  போராட்டம் அழிந்துவிட்டது. ஆகையால் இனி உங்கள் எல்லோருக்கும் சவக்குழிதான் மிச்சம் என்ற இருண்மையை அவர்களுக்கு வழங்க நான் முற்படவில்லை. மனித வாழ்வு எந்தப் பாதாளத்திலிருந்தும் மேலெழும் வேட்கையை பிறப்பிலிருந்தே கொண்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். ஆதிரையின் மாந்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைகளைச் சேகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவை அழிய அழிய சற்றும் மனம் தளராது மீளக் கட்டுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரும் கூட, முகத்தில் அறையும் காலத்தின் யதார்த்தத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் வாழ்வை நகர்த்தவே முற்படுகிறார்கள். அவர்கள் தமக்கான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்கள் தம் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவார்கள், கிலுகிலுப்பைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆம், அவர்கள் வாழ்வார்கள்.

கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டு எழுதும்போது ஏற்படுகின்ற வாசக அதிர்ச்சி அண்மைய ஈழம் சார்ந்த படைப்புகளில் முதன்மையடைந்திருக்கிறது. இந்த மாதிரியான வாசகக்கவர்ச்சி என்பது ஒரு காலகட்டத்துடன் திசைமாறிச் செல்லும் அபாயத்தையும் தணிந்து விடும் நிலையையும் கொண்டது. பத்திரிகை வாசிப்பதைப்போல, சமகால நிலைமைகள் மாறிச் செல்ல இந்த வாசக நிலையும் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைக்கடந்து நிலைப்படக்கூடிய படைப்புத்தளத்தை நிர்மாணிப்பதைப்பற்றி ஏன் பலரும் சிந்திப்பதாகவில்லை?- 

ஆறாவடு பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பாயிருந்ததென்று ஒரு விமர்சனம் இருந்தது. ஆதிரையைப் பொறுத்தவரை இவ் வரலாற்றுச் சம்பவங்களுக்குப் புறம்பாக அதிலொரு வாழ்வை நான் கட்டியமைக்க முயன்றிருக்கிறேன். மனித வாழ்வின் உறவுகள், உறவுகளின் சிக்கல்கள், மனதின் அலைச்சல்கள், அந்த மனத்தின் முன்னுக்குப் பின்னான முரண்கள், தாய்மையின் விழுமியங்கள் இவ்வாறாக.. முட்டி மோதுகின்ற மாந்தர்களை உருவாக்கி அதுநீளத்திற்கும் அலையவிட்டேன். ஆதிரை என்ற இந்த நாவலிலிருந்து யுத்தத்தையும் அது ஏற்படுத்திய அழிவையும் நீக்கிவிட்டாலும் கூட ஒரு வாழ்வுச் சுழி அதற்குள் எஞ்சியிருக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கிறேன். இனி நீங்களே சொல்லவேண்டும்.

ஆதிரையின் பாத்திரங்கள் தொடர்பாக.. உங்களுக்கு மிக ஈர்ப்பான  – நெருக்கமான பாத்திரம்?

நாமகள் !

இந்த நாமகள் நிஜயத்திலும் புனைவிலும் கலந்திருப்பதாகக் கொள்ளமுடியும் என்று படுகிறது. பெயர் மாறிய நிஜம் என்கிறார் ஒரு வாசகர்?

அந்த வாசகர் சந்தேகத்தின் பலனை அனுபவிக்கட்டும். சில நேரங்களில் நாம் முழுக்கப் புனைந்த பாத்திரங்கள் நிஜத்தில் உருவாகி வந்துவிடுகிற அதிசயங்களும் நடந்துவிடுகின்றன. ஆறாவடுவில் நேரு அய்யா என்றொரு வயதான பாத்திரத்தை புனைவாக உருவாக்கியிருந்தேன். அவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அப்பாத்திரம் புலிகள் மீது தொடர்ச்சியாகச் சில விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கும். இது பற்றிப் பேசிய ஒரு வாசகர், நேரு அய்யாவைப் பற்றியும் அவர் புலிகளை விமர்சிப்பது பற்றியும் எழுதிய நீங்கள் அவருடைய இரண்டு பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருந்ததை இருட்டடிப்புச் செய்து விட்டீர்களே என்று விசனப்பட்டிருந்தார்.

முழுமையான வாழ்கள அனுபவங்கள் இல்லாதபோதும் வரலாற்று நிகழ்ச்சிகளும் களச்சூழலும் மெய்யென நிகழும் வகையில் ஆதிரை படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகியிருக்கும் ஷோபாசக்தியின் Box இலும் இந்தத் தன்மை உண்டு.. தகவல் மூலங்களைப் படைப்பாக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவை எப்படியிருந்தன? இந்தத் தகவல் மூலங்களை எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? 

தகவல்களை எப்படிப் பெற்றேனென்று ஆதிரையிலேயே சொல்லிவிட்டிருந்தேன். அப்படிக்குறிப்பிட்டதுபோல மனிதர்களைச் சந்தித்த போதெல்லாம் பெருமளவுக்கு முதியவர்களைத்தான் சந்தித்தேன். குறிப்பான கேள்விகள் என்று இல்லாமல் இயல்பான ஓர் உரையாடலைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மடை திறந்த வெள்ளம்போல அவர்கள் பேசிக்கொண்டேயிருந்ததை ஒலிப்பதிவுகள் செய்திருந்தேன். பின்னர் நாவல் அவ் ஒலித்துண்டுகளிலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டது. நேரடி அனுபவும் இன்றி, மேற்சொன்ன தகவல் மூலங்களுமின்றிய இடங்களைப் புனைவாலேயே கடந்தேன். அவ்வாறு தொன்னுாறுக்கு முன்பான காலத்தைப் படைப்பாக்கும் போது சவாலாகவிருந்தது. தமிழ்க்கவி அம்மா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்புசந்தி திலகர், மறைந்த தமிழினி அக்கா முதலானோர் தகவல் மூலங்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.

தொடக்கத்தில் சிறுகதைகளை எழுதிய நீங்கள் வந்தடைந்திருக்கிற வடிவம் நாவல். உங்களுடைய அடையாளமும் நாவல் எழுத்தாளர் என்றே ஆகியுள்ளது. அடுத்த நாவல் என்ன? புலம்பெயர் வாழ்க்கையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா?

நான் குறைவாகவே எழுதுகிறேன். இன்று எப்படியாவது ஒரு கதை எழுதிவிடவேண்டுமென்று நான் உட்காருவதில்லை. ஏதாவது செய்தியில் அல்லது யோசனையில் அதுவொரு புள்ளியாகத் தோன்றுகிறது. தோன்றினால் எழுதமுடிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை பற்றி, இரட்டைக் கலாச்சார சுழலுக்குள் அங்கும் இங்குமாகத் தம்மைப் பொருத்தி உழலும் அவர்களுடைய வாழ்வுபற்றி ஒரு நாவல் எழுதவேண்டுமென்று ஆசையிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் இளைஞன் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் தன்னோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவதில்லை என்பது தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாகச் சொன்னபோது அவர்களுடைய மனதின் இன்னொரு பரிமாணத்தை என்னால் உணரக்கூடியதாகவிருந்தது. இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு ஒரு பெறுமதி இருக்குமென்று நாம் யோசித்திருக்கவே இல்லையல்லவா..?

ஒரு எழுத்தாளர் சொந்த அனுபவங்களை எழுதும்போதும் அனுபவங்களுக்கு அப்பால் உள்ளதை எழுதும்போதும் கிடைக்கின்ற வசதிகள், சிரமங்கள் என்ன? 

அனுபவங்களுக்கு அப்பால் எழுதுவதில் உள்ள சிரமமென்பது தகவல்கள்தான். மற்றும்படி அனுபவமல்லாதவற்றை எழுதுவதே மிகச் சிறப்பாக உருவாகும் என்பது எனது கணிப்பு. எனது அனுபவத்தையோ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு நபரையோ எழுத்தில் முன் வைக்கும்போது அங்கே ஒருவித அலட்சியம் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனுபவத்தில் இல்லாத ஒன்றை எழுதும்போது அதை முதலில் எனக்கு நானே காட்சியாகக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அப்பொழுது நுணுக்கமான பதிவுகளை அது கொண்டிருக்கும். முழுமையான ஒரு சித்திரத்தை உள்ளடக்கியிருக்கும். என்னுடைய கிராமத்தைவிட நான் வாழ்ந்தேயிருக்காத தனிக்கல்லடி என்ற கிராமத்தைச் செதுக்கியது எனக்கு இலகுவாயிருந்தது. இவ்வேளையில் அனுபவங்களை எழுதுவதே அறம் என்றொரு பேச்சும் ஓடித்திரிவதை நினைவூட்டுகிறேன்.

தகவல்களைச் சேகரிக்கும்போதும் கதை உருக்கொள்ளும்போதும் குறித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏதாவது உண்டா? அல்லது கதையின் போக்கிலேயே எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு போவீர்களா?

ஆறாவடு தொடக்கத்தை மட்டும் முடிவு செய்துகொண்டு எழுதத்தொடங்கிய நாவல். ஆதிரை பெரிய பரப்பென்பதால் அது நிகழும் நிலங்களையும் காலங்களையும் முன்னரே வகைப்படுத்திவிட்டுத் தொடங்கியிருந்தேன். பல கதைப்போக்குகள் தமக்கான முடிவை நோக்கித் தம்பாட்டிலேயே சென்றன. ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் சாரகனுக்கும், நாமகளுக்கும் ஒரு கல்யாணத்தைக் கட்டிப் பார்க்கவேண்டுமென்று ஆரம்பத்தில் ஆசையிருந்தது. ஆனால் நாவலில் அது வேறு திசையில் சென்று முடிந்துவிட்டது.

ஆறாவடு தந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? சரியான – முறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக உணர்கிறீர்களா?

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையின் நேரடி அர்த்தத்தின் அடிப்படையே குழப்பமானது. அப்படி விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் “அதுவும் சரி.. இதுவும் சரி” என்று ஆமாம் சாமிதான் போடவேண்டியிருக்கும். ஒரு விமர்சனம் என்பது அதைச் செய்கிற ஒரு தனி நபரின் அழகியல் தொடர்பான பார்வை, இலக்கிய ரசனை, அரசியல் சார்பு என்பவற்றின் அளவுகோல்களில் அவர் தனக்குள் நிகழ்த்துவது. அந்த அளவுகோல்களின்படி நான் கருதியதற்கு முற்றிலும் மாற்றான இன்னொரு பார்வையை அவரால் முன்வைக்க முடியும் என்பதையும் அதற்கான உரிமையை அவர் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் நான் ஏற்றுக்கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதற்குமப்பால் எனது கருத்தமைவிற்கு மாற்றான கூறுகளைக் கொண்ட சில விமர்சனங்கள் புதிய ஜன்னல்களைத் திறந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த ஜன்னல்களினால் விழுந்த ஒளியை ஆதிரை ஏந்திக்கொண்டது.

நீங்கள் புலிகளின் ஆதரவாளரா? எதிராளியா? இந்தக் கேள்வி எதற்காக எழுகிறது என்றால் உங்களுடைய எழுத்துகளில் இரண்டும் கலநத நிலை உண்டு. ஆதரவு எதிர் என்பதற்கு அப்பால் இன்னொரு நியாயப் புள்ளியில் நிற்கிறீர்களா?

நான் புலிகள் மீது சாய்வும் சார்புமுள்ள ஓர் உயிரியே. ஆதிரையில் மீனாட்சி என்ற தாய்க்கும் அவருடைய மகனான வெள்ளையன் என்ற புலி உறுப்பினருக்கும் இடையிலான உறவு எத்தகையதோ, அதே மாதிரியான நெருக்கமும் உறவும்தான் ஈழத்தில் தொண்ணூறுகளில் நினைவு தெரியத் தொடங்கிய தலைமுறைக்கும் புலிகளுக்குமிருக்கிறது. இதனை மூளையைக் கழட்டி வைத்துவிட்டு இதயத்தால் சிந்திக்கிற நடைமுறையென்றும் நீங்கள் பரிகாசம் செய்யலாம்.

இதேவேளை புலிகள் சரிகளை மட்டுமே செய்தார்கள், அவர்களுடைய தவறுகளுக்கும் ஒரு வரலாற்றுச் சரி இருக்கிறது என வாதிடுகிற ‘ஜனவசியப்பட்ட’ குரலும் என்னிடம் இல்லை.

புலிகள் என்ற இயக்கத்தை அதன் தலைமைக்கு ஊடாக அணுகுகிற ஒரு பார்வை நிலத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கும் (தமிழ்நாட்டுக்காரர்கள் உட்பட) அல்லது நீண்டகாலத்தின் முன் நிலத்தை விலகிச் சென்றவர்களுக்கும் இருக்கிறது. அதாவது மேலிருந்து கீழாக அணுகுதல். என்றேனும் ஒருநாள் அவர்களுக்குத் தலைமை மீதான பிம்பம் அழியுமாயின் புலிகள் மீதான பிம்பமும் நொருங்கிச் சரிந்துவிடும்.

ஆனால் நாம், கீழிருந்து மேலாக அந்த இயக்கத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள். ஊரின் தெருக்களில் நம் கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழி இறப்பருக்காக அடிபட்டவர்கள்… இவர்கள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஊடாகவே இயக்கமும் நம் எண்ணங்களில் உள் நுழைகிறது. அதாவது கீழிருந்து மேலாக. உண்மையில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாமலிருப்பது இந்த மனிதர்களைத்தான். (இந்த நிலைப்பாட்டை 80களில் வெளியேறி ஐரோப்பாவிற்கு வந்த ஒருவரிடம் சொன்னேன். அவர் சொன்னார்.. இப்படி கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழிறப்பருக்காக அடிபட்ட நண்பர்களின் ஊடாகவே தாங்களும் புலிகள் இயக்கத்தைப் பார்ப்பதாக.. அப்படி அவர் குறிப்பிட்ட அவருடைய நண்பர்கள் சென்று சேர்ந்த இடம் புலிகள் அல்லாத வேறு இயக்கங்களாயிருந்தன)

ஆதிரைக்கு வருவோம். அது எனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரச்சாரப்படுத்தும், ஒரு நோட்டீஸ் அல்ல. புனைவுக்கூடாக எனது அரசியல் நிலைப்பாட்டிற்கு ‘ஆட்பிடிக்க’ என்னால் ஒருபோதும் இயலாது. நான் வாசகர்களுக்கு வழங்க முற்படுவது ஓர் அனுபவமே. எனக்கு ஒவ்வாத கருத்தென்றாலும், ஒரு பொதுத்தளத்தில் அது நிலவுகிறதெனில், அது பிரதிக்குள் நுழையும்போது நான் இடையில் நின்று கத்தரிப்பதில்லை. ஒரு மூன்றாம் மனிதனாக மௌனமாக ஒதுங்கி நிற்கிறேன். அல்ல, நிற்கப் பழகுகிறேன் என்பதே சரி.

இலங்கை இனப்பிரச்சினையைப் பற்றி, தமிழகத்தின் புரிதல் எப்படி உள்ளது? தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழஆதரவு எந்த அளவுக்கு நன்மைகளைத் தந்துள்ளது? இந்த ஆதரவினால் எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிட்டுமா? ஏனென்றால், சென்னை கொடுக்கின்ற அழுத்தத்தினால் டில்லியின் கதவுகள் திறக்கப்படும் என்ற வகையில் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்குச் சாத்தியமானது? 

தமிழகத்தை நம்பியிருந்த ஒரு காலம் உண்டு. முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் அந்த நம்பிக்கையிருந்தது. ஆனால் காலம் வெகு சீக்கிரத்திலேயே உண்மையை முகத்தில் அறைந்துவிட்டது. ஈழத்தை விடுங்கள், இன்று தமிழகத்திற்கான ஒரு ஜன்னலைக்கூட டெல்லியில் அழுத்தம் கொடுத்து திறக்க முடியாத யதார்த்தத்தை நாம் அறிவோம். அதனால் எனக்கு எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இல்லை.

ஈழத்தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமென்பதனாலேயோ என்னவோ, அவர்களில் பலர் தாம் பிரமிப்பாக நோக்குகிற வெள்ளைக்காரர்களோ அல்லது இந்தியர்களோ தமக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் புளகாங்கிதமடைகிறார்கள். (நம் இலக்கியவாதிகளுக்குக் கூட தம்மை யாரேனும் ஒரு தமிழக எழுத்தாளர் பாராட்டினால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்ற ஒரு பழக்கமிருக்கிறது. “நான் என்னைச் சொன்னேன்’ என்பதை வடிவேலுவைப்போல படிக்கவும்) தம்மை அனாதைகளாக யாருமற்றவர்களாக உணர்கிற ஒருவித மனநிலையின் வெளிப்பாடு இது. இன்னொரு புறத்தில் தமிழக ஓட்டுக் கட்சிகளைப் புறம்தள்ளிவிட்டு மாணவர்கள், இயக்கங்கள் தனி நபர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு மானுடத் துயரம் தமக்கருகில் நடந்துமுடிந்தபோது தம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். சமயங்களில் அந்தக் குற்ற உணர்ச்சியே இலக்கில்லாமல் வெடித்து வடிகாலைத் தேடிக்கொள்கிறது.

அன்றைய நாட்களில் ஒரு வளரிளம்பருவ இளைஞனாக இருந்த நீங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் புலிகள் அமைப்பிலும் இணைந்து செயற்பட வேண்டும் என எண்ணவில்லையா? 

என்னுடைய மூன்றாவது வயதிலேயே புலிகளுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும், பாசிச நடவடிக்கைகளையும், வலதுசாரி அரசியலையும் நான் புரிந்து கொண்டதனால்… என்றெழுதிப்போக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்கள் என்பதனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

புலிகளுடைய நிழல் அரசின் கீழ், இயக்கப்பாடல்களை முணுமுணுத்துகொண்டும், புலிகள் வெல்லவேண்டும் என விரும்பிக்கொண்டும், அதேவேளை அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பதைப்பற்றிய எண்ணம், சிந்தனை எதுவுமில்லாமலும் அப்பா வெளிநாட்டில் இருக்கும், மத்தியதரவர்க்க குடும்பப் பிள்ளைகளின் பிரதிநிதியாக ஒரு லௌவீக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எதுவித ’கூச்ச நாச்சமும் இல்லை.

By

Read More

லவநீதன் ஜெயராஜ்

ஒரு நாவல்/நூலினை வாசகரொருவர் வாசித்து முடித்துவிடும் போது ஏற்படும் மன எண்ணங்களில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். அதற்காக நூலினை விளங்கமுடியாமல் போவது ஆசிரியரின் பிழை அல்ல, அது நிற்க

ஆதிரை நாவலை வாசித்துமுடிந்தவுடன் அதனை மூடி வைக்கலாமா அல்லது இன்னுமொரு தரம் வாசிக்கலாமா என்று ஒரு தாகத்தை ஆனால் மனதில் ஒருமிகப் பெரும் வெறுமையை ஏற்படுத்தி நிறைவிற்றது.

இப்படியான எழுத்துக்களை நான் ஒருசில எழுத்தாளர்களிடம் மட்டுமே காண்கிறேன். வாசிப்பு பழக்கம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லாவிட்டாலும் கூட கல்கியின் ” பொன்னியின் செல்வனும் ” , வைரமுத்துவின் ” கள்ளிக்காட்டு இதிகாசம் ” , “கருவாச்சி காவியம் ” , “மூன்றாம் உலகப்போர்”, “தண்ணீர் தேசம் ” போன்ற நாவல்கள் ஏற்படுத்திய அதே பாதிப்பு (உள்ளடக்கம் வேறிருந்தாலும் ) வாசிக்கும் போது அவை எதோ நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பன போன்றதொரு பார்வையினைத தருவன.அதே போன்றதொரு உணர்வினை “ஆதிரை” தந்தாள் என்பது வலிசுமந்த உண்மை.இதைவிடவா மற்றவரகளின் “ஈழகாவியங்கள்” இருக்கப்போகின்றன ?

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தினை உள்ளவாறு ( சற்று கசப்பான அனபவங்களுடன்) அதன் அரசியல் , சமூக தாக்கங்கள் என்பவற்றை அவற்றை நேரடியாக அனுபவித்த மக்களினூடு தந்துள்ளார் சயந்தன்.பிரதேச/வட்டார தமிழ்ப் பேச்சு வழக்குகளை அநாயசமாக அருமையாக (பொருத்தமான இடங்கள் எனக்கூற முடயாது, ஏனெனில் அவை இல்லாது விடின் நாவல் நிச்சயம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது)கையண்டுள்ளார்.கால ஓட்டத்தின் பதிவுகளை தான் கூறாது கதைமாந்தரூடு சொல்லியிருப்பது சிறப்பு.

664 பக்க நாவலை தினம் 30 பக்கங்களைக் கூட வாசிக்கமுடியாமற் செய்து வாசகர்களைக் கட்டிப்போடுகிறார் ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் கைகள் தீயைத் தீண்டுவன போலிருக்கின்றன.லெட்சுமணனின் சித்திரவதை, இத்திமரத்தின் சரிவு,நடராசனின் சாவு(ஓதிய மலைப் படுகொலைகள்),இறுதிக கட்டப்போர் , அத்தார், சங்கிலி,ராணி, வல்லியாள் இப்படி சம்பவங்கள், இடங்கள், மாந்தரகள் என வரிக்குவரி தமிழர் வடுதலைப் போராட்டத்தை அவரவர் பார்வையில் உள்ளபடி சில விமர்சனங்களோடு ( இனிப் பேசவேண்டிய கருத்துக்களோடு) மக்களின் வாழ்வியலை குறிப்பாக பாதிக்கப்ட்ட அடித்தட்டு மக்கள் அல்லது அப்படி போரினால் மாறியவர்கள் பார்வையில் மிகவும் அழுத்தத்துடன் நகர்ந்து செல்கிறது கதை. சிற்சில இடங்களில் மீள்வாசிப்பு அல்லது மீளாராய்வு செய்யப்படவேண்டிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கூட கூறிச் செல்கிறார் ஆசிரியர்

நாவாலின் தலைப்பில் சொல்லப்படும் “ஆதிரை” யை காட்டியவிதம் அவளின் முழுக்கதையை எதிர்பார்கக வைக்கிறது.

கதைமாந்தர்களை அப்படியே அவர்கள் காலத்திலேயே விட்டிருப்பது அநாவசிய கதைநீட்சியைத் தவிர்க்கின்றது.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருப்பினும்

“ஆதிரை” ஈழ்த்திலிருந்து ஈழத்திற்கான ஈழகாவியத்தின் ஒரு ஆரம்பப்புள்ளி.

இந்த விமர்சனம் “அத்தாருக்கு” சமர்ப்பணம்

By

Read More

ரேவதி யோகலிங்கம்

நம்மவர்களின் படைப்புகளில் பிழியப் பிழிய வலியும் வேதனையும் மட்டுமே வெளிப்படுகிறதென்றும் இலக்கிய நளினம் இருப்பதில்லை என்றும் விமர்சிப்பவர்கள் உண்டு.தாயகத்தில் நிகழ்ந்த போர்கள்,இடப்பெயர்வுகளை மையப்படுத்தி ஏராளமான படைப்புகள் வெளிவந்துவிட்டன.

சிறையின் மூத்திர நெடியையும் சித்திரவதையின் உச்சத்தில் எதிராளியின் முகத்தில் வழியும் வலியை காமத்தில் உச்சத்தைத் தொட்டது போல் அனுபவிக்கும் விசாரணையாளனின் கொடூரத்தையும் விட வலிக்கிறது “திருப்பியெல்லாம் அடிக்க மாட்டாயா புலியே…” எனும் வார்த்தை. வலிமையற்றதிடம் காட்டவென்று எல்லா உயிரினத்திடமும் கொஞ்சம் வன்முறை இருக்கத் தான் செய்கிறது.

ஆதிரை நாவல் 1977 ல் மலையகத்தில் நிகழ்ந்த இனக்கலவரம் அதன் பின் தனிக்கல்லடி அங்கிருந்து பேச்சி தோட்டம் அடுத்து முள்ளிவாய்க்கால் என மூன்று பயணங்களையும் அதற்குள் நிகழ்ந்த மூன்று காதல்களையும் யுத்தத்தின் பின் மீண்டெழ எத்தனிப்பதையும் உயிர்ப்புடன் தாய்மை வழியாக வெளிப்படுத்தி இருக்கிறது.
போராட்டத்தையும் அரசியலையும் பின்னிறுத்தி இழப்புகளுக்குள்ளும் வாழும் ஆசையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கையைச் செலுத்தும் சமூகத்தை விபரிக்கும் ஒரு காவியம் ஆதிரை.

நாவலில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் நம்மோடு (வன்னியிலிருப்பவர்கள்) தொடர்புபட்டவையாதலால் மறுபடியும் வாழ்ந்து பார்த்த அனுபவம் வாசிக்கும் போது கிடைக்கிறது. மூளையைத் தவிர்த்து விட்டு இதயத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறது ஆதிரை.

“முகத்த போகஸ் பண்ணி அப்பிடியே கண்ணீரோட ரெண்டு கண்ணயும் ஜும் பண்ணு” காணமல் போன தன் மகளைத் தேடும் தாயின் கண்ணீரை குதூகலத்துடன் காட்டும் அயல் நாட்டு தொலைக்காட்சி.
ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் ஆதிரை.

ஆசிரியருக்கு நன்றிகள்.

“கிட்ட வரட்டும் திட்டமிருக்கு” என அத்தார் எங்கேயாவது சொல்லுவார் என எதிர் பார்த்தேன். அந்தக் காலத்தில் அதுவொரு பிரபலமான வார்த்தையாக எல்லோராலும் பேசப்பட்டது,

 

By

Read More

× Close