கெளதமி

ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”)

இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கவும் வரலாற்றில் நம் நிலை என்ன இனி வருங்காலத்தில் நாம் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கும் இந்தப் பிரதிகள் ஒரு சிறு ஒளியையோ அல்லது பெரும் சூரியக் கதிரையோ வாசகன் மீது குவிக்கலாம் . அந்தவகையில் சயந்தனின் ஆதிரை நாவல் சில பல வாரங்களுக்கு முன்பு படிக்கக் கிடைத்தது. அண்மையில் படித்த தரமான படைப்பு என்று தைரியமாகச் சொல்வேன்.
அவசரமாக விமர்சிப்பதற்கான படைப்பு அல்ல என்பதால் காலம் எடுத்து நூல் பற்றிய வாசிப்பு அனுபவங்களை எழுதலாம் என்று யோசித்தேன். நான் இந்தப் பகுதியை எழுதும்போது பலரும் ஆதிரையை ஒரு அழகியல் நுட்பங்கள் கொண்ட செவ்வியல் படைப்பாகக் கொண்டாடிக் கொண்டிருப்பதை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு தொடர்கின்றேன்..

ஆதிரை நாவல் மலையகத் தமிழரின் இடபெயர்வில் தொடக்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்டு அதன் பின்பு புனர்வாழ்வின் இடர்பாடு வரை நம்மைக் கூட்டிச் செல்கின்றது. படைப்பியலை நோக்கினால் ஆதிரை கட்டமைப்பில் தன்னுடைய தனித் தன்மையை (Individuality) காத்திருக்கின்றது. பாத்திரங்கள் வாயிலாகக் காலத்தின் குரலை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பன்முகப் பரிமாணங்களைக் கொண்டு யதார்த்தமாக அந்த காலப்பகுதியில் உலவிய கதாபாத்திரங்களை அதன் தனித்தன்மை சிதையாமல் படைத்திருக்கின்றார்.

அடுத்து கதைப்போக்கினூடாக அரசியல் நகர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார் (Organic Plot Construction) படைப்பினுடைய சமூக முரண்பாடுகளும் மோதல்களும் வெளிக்காட்டுகின்ற வரலாற்றை முன் வைப்பது மட்டுமே படைப்பாளின் கடமை. தீர்வை முன் வைக்கும் கடமை படைப்பாளிக்கு இல்லை என்பதையும் இந்த நகர்வு உணர்த்துகின்றது.

“History is Bunk” என்னும் கூற்று அல்லது கருத்து மேலை நாடுகளில் உண்டு . அனால் எம்மைப் பொருத்தவரை வரலாறு என்பது நமக்கான அடையாளம். இருண்ட காலங்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விளக்கும் படைப்பியல்.

அடுத்து பிரதி விம்பம் பற்றி நோக்கினால் ஆதிரையில் சம்பவச் சித்தரிப்புக்கள் சம்பவத்தை வாசகனுக்கு கண்முன்னே விரிந்த காட்சியாக்கிக் காடவும் தவறவில்லை (எனக்கு காட்சிகள் தோன்றின என்பதன் அடிப்படையில்) காடும் காடு சார்ந்த பிரதேச விபரிப்பு ,வாழ்வியல் கோலங்களின் சித்தரிப்பு, இறப்பு அல்லது இழக்கப்படுதலின் பெரு வலி , சொந்தத் தேசத்தில் அகதியாய் நிர்க்கதியடைந்த மக்களின் துயர்கள், ஆற்றாமைகள் அத்தனையையும் கண்முனே காட்சிப்படுத்துகின்றது ஆதிரை.

கதையாடல் கருவிகளில் (Narrative devices) பெரும்பாலும் ஆசிரியரின் ஆதிக்கத்தை ஆதிரையில் காணக் கூடியதாக இருந்தது. பின் திரில் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் வரலாற்றையும் சம்பவங்களோடு கோர்த்து சரியான பாதையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இலக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆதிரையை பிரதிக்குள்ளிருந்து படிக்க வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.

அது மட்டுமன்றி அந்த அந்த பிரதேசங்களுக்குரிய மொழிநடைகளையும் லாவகமாகவே கையாண்டுள்ளார் ஆசிரியர். மண்ணிற்காக மடிந்து போகும் மைந்தர்களை ஈன்றவர்களின் கதறல்கள் கதை முழுதும் உண்டு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற மானுடக் குரல் ஆதிரை.
“சண்டை முடிஞ்ச பிறகு” “சண்டை முடிஞ்ச பிறகு” என்னும் கனவுகளோடு எத்தனையோ ஆதிரைகள் விசக் குப்பிகளை அணைத்துக் கொண்டு மடிந்த மண் இது. தவிர்க்கமுடியாமல் சந்தர்ப்பவாதிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் நமக்கான வரலாற்றை நாமே எழுதி வைத்துவிட்டாவது செல்வோம். இலையேல் எம் வரலாறு திரிபு பெறலாம். பொய்யர்கள் திரித்துக் கூறலாம். வரலாற்றின் முதற்பணியை ஏலவே ஈழத்து இலக்கிய உலகில் இலக்கிய கர்த்தாக்கள் தொடங்கியுள்ள நிலையில் ஆதிரை ஆசிரியரும் செவ்வனவே தொடக்கி வைத்துள்ளார். எழுதிய கரங்களுக்கு நன்றிகள்.

http://thanimambolg.blogspot.ch/2016/01/blog-post_5.html

By

Read More

சுரேகா பரம்

“பல காலத்தைச் சேர்ந்த பலவிதமான நீரோட்டங்களில் சங்கமமான வாழ்க்கைக்கடல்”
ஆம் அப்படித்தான் சயந்தன் அண்ணாவின் ஆதிரையும்.

எம் கண்ணீர்த்தேசத்தின் கண்ணாடி இது.

போராட்டக்களப்பாத்திரச்சித்திரிப்புக்களின் வாயிலாக அதன் அதிர்வுகளும், முனகல்களும் ,சிதைவுகளும், சித்ரவதைகளும் , பேரவலங்களும்
ஐதார்த்தம் பிசகாமல் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் பணிந்து போகாமல் இயல்பான மென்னுணர்வுகளுடன் இரத்தமும் சதையுமாகப் பேசப்பட்டுள்ளது.

நாவல் ஒன்றின் நகர்விற்குப் பங்கம் விளைவிக்காமல் பயணிக்கச்செய்த ஆசிரியரின் மொழி விளையாட்டு வியக்காமல் இருக்கத்தக்கதல்ல. …

மொழியின் வீச்சு வாசகர்களை நாவலுக்குள் மட்டும் விழுத்திவிடாமல் ஈழத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் ஊடுருவி அலைந்துலையச் செய்யும் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளது.

நாவலில் வரும் மாந்தர்களின் ஏக்கங்கள் தவிப்புக்கள்,ஆற்றாமைகள் ,நிராசைகள், இழப்புக்கள் , தத்தளிப்புக்கள் என்பன எம்மைக்கடந்த கால வாழ்க்கைக்குள் இலகுவாக நுழைத்துச்செல்லும் பெருவெளிகள் என்றே நான் கருதுகிறேன்.

ஏனென்றால் ஆதிரை என்ற பாத்திரம் வரவேணுமே எங்கே? எங்கே? என்று மனம் அவாவும் ஓர் வெறியுடன் நாவலை வாசித்துக்கொண்டு சென்ற போதும்
பல இடங்களில் என்னால் நாவலை நகர்த்திச் செல்லமுடியாமல் ஏதேதோ இனம்புரியாத உணர்வுகள்,சொந்த வாழ்க்கை தந்த கடந்த கால அனுபவங்கள் எனக்குள்……………………………

அது தான் இந்த நாவலின் தனித்துவமே….

நாவலில் வரும் “சொந்த அண்ணனையே நம்ப முடியாமல் ஆக்கிப் போட்டு இந்த நாசமாப் போன சண்டை ”
என்பது போன்ற பல சிணுங்கல்களுடனும், கொதிப்புக்களுடனும், இனமத வேறுபாடு இன்றிய மனித உடல்களின் சிதறல்களுடனும், வலிமை மிகு சாம்ராஜ்யங்களின் சிதைவுகளுடனும் , ஆசைக் கனவுகளின் கலைவுகளுடனும் மலர்ந்திருக்கும் இன்றைய தேசத்தில் இது போன்ற படைப்புகள் வரவேற்புக்குரியனவே…

எம் எதிர்கால சந்ததியினர் நாம் கடந்திருக்கும் கரடுமுரடான பாதையை ஒரு கணமேனும் சிந்திக்க ஆதிரை சிறந்த வரலாற்று ஆவணமாக அமையும் என நம்புகிறேன். …..

அனைத்துத் தமிழ் பேசும் மக்களினதும் ஒட்டு மொத்த வாழ்க்கைச்சித்திரம்.

By

Read More

இளங்கோ கல்லணை

When we use the term classic, postmodern critics deconstruct by selecting class and use it in a nagative fashion. It is seldomn seen as a virtue for a good reader. Sayanthan Kathir’s novel Aathirai has been released from Tamizhini publishing house with the tag line classic. A less art minded postmodern reader tends to look for a political line than a sublime form of art. Aathirai framing three generations of war infected eezham has done justice to the artistic side or the tragic grandeur.

A self critical spectrum with deeper nuances pointed painting makes a classic out of the novel in the real classical sense. Aathirai is a by product of matriarchy Tamil mind where motherhood is the land, forest, war and society. Aathirai is also a mystical star of hope. This novel describes a systematic evolution of a genocide by a majoritiarian government of a forty year old despair where more than 190000 people had been killed. Is this tragedy bringing the cathartic effect? Well. the effect of tragedy has moved the pillars and posts. People are people. NO. That’s the difference between an art and a documentary.
As the mother goddess in a tree, star, carrying children she is also in the middle of a artillery waiting to explode herself for her children .

The illusory spine of otherwise manly image is here the war bitten mother. I hope I made my point why Aathirai is a classic. Read and verify yourself.

0 0 0

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழின் முக்கியமான படைப்பொன்றை வாசித்தேன். இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் ஆதிரை தமிழின் முக்கியப் படைப்பாளியான சயந்தனின் Sayanthan Kathir மேக்னம் ஓபஸ் என்று தான் சொல்ல வேண்டும். ஈழத்தின் முக்கியமான படைப்பாளியான சயந்தன் உலக தமிழ் இலக்கியத்தின் ஒரு உன்னதமான படைப்பு ஆதிரை.

ஈழத்துப் படைப்புகள் அரசியல் சிக்கல்களை சொல்வதாகவே இங்கு பரப்பப்பட்டு அவற்றின் தரத்தை குறைக்கும் ஒரு போக்கு எப்போதும் இங்குள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் வெறும் பிரச்சாரம் செய்வார்கள், கலை நுணுக்கத்தோடு எழுத மாட்டார்கள் என்று அடித்துவிடும் ஆட்கள் உண்டு. ஈழத்தில் நடந்த இழப்பைப் பற்றிய அரசியல் படைப்புகள் நிறைய வந்துவிட்டன. அ. முத்துலிங்கம் மாதிரி முழுவதும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் வந்துள்ளன. சயந்தனின் ஆதிரை நாவலில் மலையகத் தமிழகம் துவங்கி வன்னிக் காட்டில் தனிக்கல்லடியில் இருந்து பேச்சித் தோட்டம் வந்தடையும் (அகதிகளாகத் தான்) கதை மாந்தர்களின் வாழ்க்கையை உயிர்ப்பாக சித்தரித்துள்ளார். இயக்கங்கள் அரசியல் எல்லாம் திரைக்குப் பின்னால் இருத்தி மனிதனின் வாழும் விளைவை இச்சையை காட்டும் பெரும் காப்பிய இலக்கணக் கட்டமைப்பு.

தமிழ் மரபில் தாய்மை வழியாக கதை சொல்லப்படுவது என்பது தான் அதன் தனித்துவம். தாய்மையைக் கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை விளக்க பெரிய திரைச்சீலை ஒன்றில் வண்ணம் தீட்டியுள்ளார். துயர் படும் மக்களின் வாழ்க்கையில் காளியே என்று தான் ஏதிலிகள் கூப்பிட முடியும். வாங்க காந்தியே என்று கூப்பிட்டிருக்க வேண்டும் என்று சொல்கிற அறிவிலித் தனத்தை அவ்வப்போது காண்கிற போது வேதனையாக இருக்கும். நெருப்பில் தன் கண்ணுக்கு குழந்தையை முன்னால் பலி கொடுத்த ஒரு தாய் மனப் பிறழ்வை அடைகிறாள். வேறு குழந்தைகளை காணும் போது “ஒடி வாங்க, தீ கடலைப் போல கலைச்சுக் கொண்டு வருது ” என்று அணைக்க ஓடுகிறாள். கொடுங் கனவையும் பெரும் துயரையும் நம்பிக்கை கொண்டு மீண்டு வர நினைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றிய நீண்டதொரு பயணம். மூன்று காதல்கள் மூன்று பயணங்கள் என்று சொல்லலாம். மீண்டும் மீண்டும் தர்க்கத்தால் வாழ்க்கையை அளக்க நினைக்கும் அறிவு வேட்கையில் இருந்து விலகி இதயத்தின் வேட்கையான வாழ்க்கையைத் தேடும் ஒரு நாவல். எத்தனை இழப்புகளுக்குள்ளும் உயிர்கள் ஒண்டிக் கொண்டு இச்சைகளை வளர்த்துக் கொண்டு கைகளைப் பற்றிக் கொண்டு செல்லும் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. ஒவ்வொரு தமிழரும் வாசிக்கத் தவற விடக் கூடாத புதினம். காரணம் நாம் நம்மை சோதித்துக் கொள்ள நிறைய இருக்கிறது.

0 0 0

ஈழத் தமிழ் நாவலில் ஒரு மைல்கல் என்று இந்த நாவலைச் சொல்லலாம். இதற்கு முன் ஆறாவடு எழுதிய சயந்தனின் முக்கியமான படைப்பு. தமிழ் படைப்புச் சூழலில் கதாபாத்திரங்களை சரியாக கட்டமைக்கும் நாவல்கள் மிகச் சிலவே. வெறும் சம்பவங்களைச் சொல்வதோ, தொன்மங்களை எழுதுவதோ, வரலாற்றை எழுதுவதோ நாவலாக இருக்க முடியாது. கதாபாத்திரங்கள் அந்த வரலாற்று சம்பவத்திலோ அல்லது தொன்மைத்திலோ பொருந்தி நின்று நம்மை உள்ளிழுக்க வேண்டும். ஆதிரையின் பலமே அது தான். 1983 இல் பிறக்கும் குழந்தைகளும் அதற்கு முந்தய பதின்ம வயதினரும் போரின் சூழல் வழியாக வாழ்ந்து முடிந்த கதை. அரசியல் இயக்கம், வரலாறு ஆகியவை பின் திரையில் வெறும் துணைக் கதாப்பாத்திரங்களாக மட்டுமே வருகின்றன. மனிதனின் உயிர் வாழும் இச்சையின் முன்னால் இலட்சியங்களின் பொருள் என்ன? முள்ளிவாய்க்காலும் அதன் பின்னரும் மக்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?
பெருங்கனவுகளின் வீழ்ச்சியையும் மனிதன் தாங்கிக் கொண்டு மேலும் ஒரு நாள் வாழக் கிடைக்காதா என்று ஏங்கும் ஒரு தளம் இருக்கிறது. அது தான் அடிப்படையான இச்சை.

இரண்டு விசைகளே இந்த நாவலில் மோதிக் கொள்கின்றன. தாய்மையும் அரசியலும். தாய்மை தொடர்ந்து உயிர்களை ஓடி ஓடி அனைத்து காத்துக் கொள்ளும். அரசியல் லட்சிய தியாகங்களைக் கோரும். இரண்டின் நியாயங்களையும் ஈழத்தைப் போல சந்தித்த பிற தேசம் ஒன்று இல்லை. நாம் இலட்சியங்களையும் தாய்மையையும் தரிசிக்கும் ஒரு தருணமாக வானில் இருக்கும் ஆதிரை நட்சத்திரம் நமக்குக் காட்டுகிறது.

By

Read More

கோகுல் பிரசாத்

A depressing book about three generations living amidst bomb shells. The writing was crisp, vivid and chilling. The mental ravages of ‘insanity killing’ echoes throughout the book. Female protagonists’ characterisation was unique and complete. ‘Aachimuthu’ will remind us Ma Joad from the famous Grapes of wrath. The human spirit’s basic survival desire under duress and what depravity and horrific events can do to the human mental functions under extreme conditions are portrayed with more scholarly skills than any other in this kinda genre.

From the beginning, Sayanthan creates an atmosphere of foreboding, of impending horror that will haunt the reader for ages. The mature content could have slipped through the auteur’s fingers easily and become a pitiful melodrama. Though everything happens as expected, there are disturbing, heartfelt moments with melancholic shades. The language is simple yet poetic at times.

Rich in detail and wildly hopeful. The book doesn’t take a stand on either Side. Each perspective is taken into account and the conflict between them is portrayed with care and consciousness. The victims of the war dream, the only thing they could do. But whenever they dream, it is full of failures and tragedy. The reality comes through with full force and takes a rough ride. These dream sequences were quite boring at the latter part of the novel.

Aathirai is strong and poignant about the things we do to ourselves for the sake of ideals,love,whatever. The writer’s human insight got sluggish at places when there are lots to describe the ambience/outside world. This insight would have been valuable as I was reading. The jeopardy overtook them.

This book deserves to be read. It has easily surpassed every other recent works on Eelam and perhaps war-refugee genre. The sheer determination and courage bring ‘them’ back alive. The little hope and happiness wavering throughout the novel makes us feel guilty and unbearable. This is one that will sell for itself. An another masterpiece to be proud of Tamil literature

Tamizhini Publications 2015

வரலாற்றின் ஓலம்

டிம் ஓ ப்ரயனின் நாவல்கள் வியட்நாம் போரை மையமாகக் கொண்டவை. போரின் இருதரப்பும் பேசப்படும். அமெரிக்க வீரர்களின் பார்வையில் மட்டுமே அமைந்த படைப்புகளும் உண்டு. அவை பெரும்பாலும் போர்ச்சூழலில் அந்நிலத்து மனிதர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் பேரிடர்களை சொல்லி, அரசியல் சரிநிலைகளில் கால் நனைத்து தீர்க்கமான முடிவுகளை அல்லது முன்முடிவுகளை நோக்கி நகர்பவை. வாட் இஸ் த வாட் போன்ற ஆப்பிரிக்க அகதி நாவல்களும் இவ்வரையரைகளுக்கு உட்பட்டவையே. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், இருவேறு தரப்புகளின் மோதலால் ஏற்படும் முரண்களும் விளைவுகளும் பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சில படைப்புகள் இவ்வாறான சராசரி நிலைகளை கடந்து, முக்கியக் கதாபாத்திரங்களின் அகப்போராட்டங்களையும் உள எதிர்வினைகளையும் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கையடக்க நாவலாசிரியர்களே மானுட இயக்கத்தின் பேராற்றலின் துளியை ருசித்தவர்கள். எத்தகைய கீழ்மைகளை கடந்து சரிந்த போதும் வாழ்வின் வேர் அவர்தம் படைப்புகளில் துளிர்த்துக் கொண்டே இருக்கிறது.

அதிகார வல்லமை கொண்ட கைகளுக்கு கொல்வதென்பது இரண்டாம் கட்டம்தான். நிலம் கையகப்படுத்துதலே தலையாய நோக்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. வாழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து துரத்தப்படும் மனிதன், அதன்பின் எந்நாளும் நிலமற்றவனே. கையூன்றி எழுந்து நிற்க அவன் முற்படும் போதெல்லாம் சதிகாரர்களின் குரூரக் கைகளால் நிலக்கம்பளம் உருவப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடற்று போவதே பலவீனங்களின் உச்சம். அவன் எதிர்கொள்ளப் போகும் தொடர் துயரங்களின் முதற்கண்ணி. உயிராற்றலின் பெரும்பகுதி ஒரு காணி நிலத்திற்காக ஏங்கிக் கொண்டே இருந்தால் எங்ஙனம் வாழ்வது? ஜான் ஸ்டைன்பெக்கின் ‘த கிரேப்ஸ் ஆப் ராத்’ முதல் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ வரை பெருஞ்சுமைகளுடன் கூட்டங்கூட்டமாக நிலம் தேடி மக்கள் அலையும் சித்திரம், இலக்கியத்தின் கொடுங்கனவுகள்.

தனது முந்தைய படைப்பின் சாதனைகளையும் குறைபாடுகளையும் தாண்டிச் செல்வதே ஓர் எழுத்தாளன் முன் நிற்கும் சவால். ஓர் ஈழப்படைப்பில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்? பதுங்குக் குழிகள், கண்ணீர், சித்ரவதை, ஓயாத அவலம், குண்டுவீச்சு,….. இன்னும்,இன்னும்… இவை அனைத்தும் உண்டு. அவ்வாறெனில் தமிழ் இலக்கியத்தில் இந்நாவலின் இடம் என்ன? இவ்வகைமையில் ஏற்கனவே வெளியாகியிருக்கும் படைப்புகளை விட இந்நாவல் எங்ஙனம் சிறந்தது? சயந்தனின் இரண்டாவது நாவலான ‘ஆதிரை’, சிங்கள வதை முகாமில் அடைபட்டுக் கிடக்கும் லெட்சுமணனில் தொடங்கி அவனது குலக்கதையாக விரிகிறது.

நாவலாசிரியனின் மனப்பக்குவமே இக்கதையை வழிநடத்திச் செல்கிறது. இந்நாவல் சரி தவறுகளுக்குள் நின்று தராசை தூக்கிப் பிடிப்பதில்லை. அதே சமயம், அவரவர்க்கு அவரவர் நியாயம் என்பதாக கூர் மழுங்கி தேங்கி விடவுமில்லை. துயர்மிகு உச்சகட்ட கணங்களிலும் பேணப்படும் சமநிலை வாசகனை திடுக்கிடச் செய்கிறது. அந்நிலத்து மக்கள் எத்தகைய கையறு நிலையிலும் பற்றிக் கொள்ளத் துடிக்கும் நூலிழை நம்பிக்கை நம்மை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

சிங்கள இராணுவத்தால் நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் நடராசன், ‘தான் சாவதற்கு முன் எல்லா சாவையும் கண்கொண்டு பாத்துடணும்’ என நினைக்கிறார். முதல் முறை மரணத்தை ஒரு விளையாட்டாக எதிர்நோக்கத் துணியும் ‘காட்டின்ற மகன்’ மயில்குஞ்சன், தனது அந்திமக் காலத்தில் ‘இந்தப் பயலுகளோட காலத்த ஒரு தடவ கண்குளிர பாத்துடணும்’ என்கிற தனது விருப்பம் நிறைவேறாமலேயே சாக அஞ்சுகிறார். ‘அய்யா நானும் இந்தியாவுல இருந்து வந்தவன் தான்’ என தன்னை துன்புறுத்தும் இந்திய இராணுவத்திடம் தனது கடைசி சொற்களை உதிர்க்கும் சிங்கமலை, லெட்சுமணனில் ஆறாத வடுவாகிறார். இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக பள்ளிக்கூடங்களில் பெண் புலிகள் பிரச்சாரம் செய்கையில், பிள்ளைகள் எந்தச் சலனமுமின்றி இணைந்து கொள்கிறார்கள். ஓரிரு வரிகளில் கடந்து போகும் கதாபாத்திரங்கள் கூட அழுத்தமாக வேரூன்றி நிற்கிறார்கள். அவற்றின் சரடுகளை இணைத்து வளர்த்தெடுக்க வேண்டியது வாசகனின் பொறுப்பு.

மரணத்தை எதிர்கொள்ளும் கணமே மனித மனம் அதன் முழு உத்வேகத்துடன் இயங்கும் தருணமாக இருக்க முடியும். அம்மரணத்தை சாகசமாக பழக்கிக் கொள்ளும் போராளிகள், ‘பாத்து பத்திரமா போங்க’ என்றதற்கு வெடித்துச் சிரிக்கிறார்கள். ‘உலக வரலாற்றுல இவ்வளவு கட்டுக்கோப்பா ஒரு இயக்கம் இருந்ததில்ல’ என்பதை எழுதிய அதே கைகள் தான், சிவராசன் வழியாக ‘போராட்டத்த தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத போராளிகள்ல நானும் ஒருத்தன்’ என கத்தியை சொருகுகிறது. கடைசிச் சண்டையும் முடிந்த பின் மக்களுக்கு ‘உதவ’ வரும் புலம் பெயர் தமிழர் ஒருவர் ‘புலிகள் இருந்திருந்தா இந்த மாதிரி உதவியெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருக்குமா?’ என நக்கலாக கேட்கிறார். பத்து கோழிகளுக்காக வாயை அடக்கிக் கொண்டு இருக்கும் ஜெயந்தியால் ‘அவங்க இருந்தப்ப எங்கள பிச்சை எடுக்க விடல’ என நினைக்க மட்டுந்தான் முடிகிறது. ‘சனங்க செத்துட்டு இருந்தப்ப கள்ளத்தோணி ஏறிப் போனவன்லாம் இப்ப வந்து கேள்வி கேக்கறான்’ என்று ஆசிரியரே பகடிக்குள்ளாகிறார்.

முப்பது வருட வரலாற்றின் அத்தனை தரப்புகளும் இத்தனை கவனத்துடனும் துல்லியத்துடனும் பதிவு செய்யப்பட்ட ஈழப்படைப்பு பிறிதில்லை. புறச்சூழலை சித்தரித்து அதற்கான எதிர்வினையாக மக்கள் திரள் செயலாற்றும் விதங்களில் மட்டுமே அதீத கவனம் குவிக்கும் படைப்புகளுக்கு மத்தியில், கதாபத்திரங்களின் உளவியலை இப்படைப்பு நுண்மையாக அணுகுகிறது. எத்தகைய கீழ்மைகளும் மனிதனின் இயல்பாகக் கருதப்படுகிறது. ‘மனுசப்பய இப்படித்தான்’ என்பதை வரலாற்றில் பொருத்திப் பார்க்கிறது. அகத்தின் விசை இழுத்துச் செல்லும் திசையெங்கும் கட்டுப்பாடின்றி பயணிக்கும் மேதைமையே ‘ஆதிரை’யை மற்ற நாவல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முதன்மை அம்சம்.

ட்ரக்கில் இருந்து இறங்கி நாமகள் வீட்டுக்குச் செல்வதை ஏக்கத்தோடு பார்க்கும் பெண் போராளிகளின் துயரம், நிச்சயமாகிவிட்ட தோல்வியினால் மட்டும் ஏற்பட்டதா என்ன? மரணத்தின் அத்தனை கோர முகங்களையும் கண்டுவிட்டு வீடு திரும்பிய நாமகளிடம், அவளது தாயின் மரணம் குறித்து தெரிவிக்கப்படுகையில், அச்செய்தி அவளிடம் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘கஞ்சி இருக்கா?’ எனக் கேட்பதன் வழியாக அக்கணத்தை கடந்து செல்லத் தூண்டுவது, ஷெல்லடிகளின் ஊடாகவும் வாழ்ந்துவிடத் துடிக்கும் மனதின் அடிப்படை விழைவு அன்றி வேறென்ன? வாழ்வதையும் துன்புறுவதையும் வேறு வேறாக பிரித்தறியும் மாய வித்தையை போர் நிகழ்த்திக் காட்டுகிறது. விமான குண்டுவீச்சுகளுக்கிடையே ஜோடி ஒன்று பதுங்குக்குழியினுள் பிரக்ஞையின்றி முயங்கிக் கிடந்து காமத்தின்பாற் இளைப்பாறும் காட்சி, மானுட இச்சைகளின் பேராற்றலை சட்டென்று உணர்த்திவிட்டுக் கடக்கிறது. (இதே போன்றதொரு காட்சி மற்றொரு ஈழப்படைப்பான தமிழ்க்கவியின் ‘ஊழிக்கால’த்திலும் உண்டு)

அகத்திலிருந்து கிளைக்கும் உண்மை முகங்களை நெருக்கமாக உணரச் செய்த ஈழப்புதினம் இதுவே. மேன்மைகளும் கசப்புகளும் கீழ்மைகளும் தொட்டு வெட்டி உறவாடி களைத்து விழுகின்றன. மனம் புரண்டு அழுது ஓய்ந்து பின்னர் உள்ளுணர்வின் நம்பவே முடியாத தடத்தில் பாய்ச்சலை நிகழ்த்தி, நாம் நமது மனது குறித்து அதுவரை கொண்டிருந்த பிம்பங்களை எல்லாம் பழித்துக்காட்டுகிறது.

தமிழீழ சமூகத்தின் வேரடிச் சிக்கல்கள் தீவிரமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை வலிந்து திணிக்கப்பட்டதாக அல்லாமல், கதாபாத்திரங்களின் இயல்புடன் பிரதிபலிக்கின்றன. செத்த பிறகும் ‘வெள்ளாளப் பெட்டை’ சந்திராவை மணம் முடித்தவராகவே அடையாளம் காட்டப்படும் அத்தார், எப்போதும் புலிகளின் தவறுகளையே பூதாகரமாக்கும் (அவை உண்மையாக இருப்பினும்) சந்திரா என ஏராளமான உதாரணங்கள் இப்பிரதியில் உண்டு.

பிரேத துண்டங்கள் சிதறி விழும் ஒவ்வொரு முறையும் தப்பித்தலுக்கான வேட்கை மட்டும் குறைவதேயில்லை. அழுகையும் ஓலமுமாக கடக்கும் பக்கங்கள் அநேகம் இருப்பினும், விருப்பங்களின் பேயாட்டம் தசையை உந்தித் தள்ளுகிறது. மெலோட்ராமாவாகி விடக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இப்படைப்பில் உண்டு. ஆனால், கூரானதும் எளிமையானதுமான கதை கூறல் மொழி இதனை ஒரு செவ்வியல் ஆக்கமாக மாற்றுகிறது.

மனதின் மகத்தான பக்கங்களையும் அதன் மறுபாதியான சரிவுகளையும் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனை போல, சயந்தன் பதிவு செய்தபடியே நகர்கிறார். தனது ரகசிய காதலனான மணிகண்டன் இறந்து கிடப்பதை கண்டு திகைத்து நிற்கும் ராணியிடம் அவளது மகள் ‘அழுது தீர்த்துடுமா’ என முதுகை வருடிக்கொடுக்கும் இடம் ஓர் உதாரணம். மலருக்கும் ராணிக்கும் இடையேயான நட்பும் உறவும் அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. இறுதி யுத்தத்தின் போது உண்டாகும் பிறழ்வுகளும் அகதி முகாம்களில் வாழ நேரிடும் அவலமும் மனிதம் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்முடைய நம்பிக்கைகளை கருணையுன்றி சிதைக்கின்றன.

இந்நாவலின் பலவீனங்கள் என்ன?

ஓயாத சண்டைகளுக்கிடையே வாழ நேரிடும் சாமான்யர்களின் வாழ்க்கையை அவர்தம் எண்ணவோட்டங்களை துல்லியமாக பின்தொடர முடிந்த ஆசிரியரால், போராளிகளுக்கிடையேயான அதிகார மட்டங்களையும் உறவுச்சூழலையும் அதே நேர்த்தியுடன் கட்டமைக்க முடியவில்லை. கனவுக்காட்சிகளுடன் தொடங்கும் பிற்பகுதி அத்தியாயங்கள் சலிப்படையச் செய்கின்றன. புலிகளுக்காக ஒரு முஸ்லிம் குடும்பத்திடம் உணவுப் டொட்டலங்கள் வாங்கிக் கொண்டு வருகையில், எதிர்ப்பட்ட ஆமிக்கும் வழி சொல்லிவிட்டு தப்பிக்கும் மயில்குஞ்சனில் வெளிப்படும் சுவாரஸ்யமும் பன்முக ஆளுமையும் ஏனைய ஆண் கதாபாத்திரங்களில் இல்லை. அவர்களின் பாத்திர அமைப்பு பெரும்பாலும் தட்டையாக அமைந்திருக்கிறது.

ஆதிரை நம்மால் கைவிடப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி. அவளது தியாகமும் மேன்மையும் உயிர்பெற்று தழைத்தோங்கட்டும். எத்தனை முறைகள் வீழ்ந்தாலும் மனித குலம் மீண்டெழும். ஏனெனில் இவர்கள் மக்கள் எனும் நம்பிக்கையை அத்தனை அவலங்களை கண்ட பிறகும் அழுத்தமாக விதைக்கும் இச்செவ்வியல் ஆக்கம், இருண்மையிடையே ஒளியை பாய்ச்சுகிறது. தமிழ் இலக்கியம் குறித்து பெருமிதம் கொள்ள மற்றுமொரு தருணம்.

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

By

Read More

சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

-மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை)
மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம்

விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது.

எனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, முரண்டு பிடிக்கும் வண்டிக் குதிரை மாதிரி மனசு திமிறித் துடிக்கிறது, தலையை தொங்கப் போட்டபடி செம்மறியாட்டுத் தோரணையில் வரிசைக்கு போயே ஆகவேண்டும். ஒவ்வொருவரையும் தோளிலே தட்டித் தட்டி எண்ணி கவனமாக கணக்கு வைத்துக்கொள்ளுவார்கள். காலம்கூட மனுஷ ஆயுளை இப்படித்தான் கெட்டியாக கணக்கு பண்ணிக் கொள்கிறது போல. என் இதயத்தில் மெலிதாக வெடித்துக்கிளம்பிய விரக்திப் புன்னகை அலட்சியமாக இதழ்களில் நெளிந்தது. இந்த சிறைச்சாலைக்குள் இப்படியே இன்னும் கொஞ்ச காலம் அடைபட்டுக்கிடந்தால், பெரிய கேடியாகவோ மகாஞானியாகவோ மாறிவிடலாம் என எண்ணிக்கொண்டேன். எந்தப் பாவனைகளும் இல்லாமல்,மனித உணர்வுகளை அப்படியே துகிலுரித்து காட்டும் இடமாகவே சிறைச்சாலை அமைந்திருந்தது. பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டே கண்களை அலைய விடுகிறேன். இரவுக்காவல் தலைமை அதிகாரி, திறப்புக் கோர்வைகள் சப்தமெழ பிரதான வாசலருகில் இருக்கும் அலுவலகத்தின் சாய்வான பகுதியை கடந்து இறங்குகிறாளா என என்னைப் போலவே பலரும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவள் வரும்போதே, ஏய். ஏய். ஒக்கமலா போலிமட்ட யன்ட (எல்லாரும் வரிசைக்கு போங்க) என உரத்துக் கத்திக்கொண்டேதான் வருவாள். குறித்த நேரத்தில் வரிசைக்கு வராமல் தாமதமாக எவராவது வந்துவிட்டால், தனது காக்கி சீருடை கவுணின் இடுப்பு பெல்டை சரக்கென உருவி அடித்து விளாசத் தொடங்கிவிடுவாள். அவள் வருவதற்கு முன்பதாகவே வரிசைக்கு போய்விட வேண்டுமென்ற தவிப்பு எல்லோரைப் போலவே எனக்கும் இருக்கிறது.

அன்றும் வழக்கம்போலவே நாளாந்தம் வழக்குகளுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டவர்கள் திருப்பிக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பதிவு செய்து பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப இன்னும் ஒரு மணி நேரமேனுமாகலாம். நீதிமன்றத்திற்கு போனவர்களில் எவராவது விடுதலையாகி சென்றுவிட்டார்களா, புதிதாக எவராவது சிறைக்கு வந்திருக்கிறார்களா என ஆராய்வது அங்கு கைதிகளாக இருப்பவர்களின் ஆர்வமான பொழுதுபோக்குகளில் ஒன்று. தமது கவலைகளை ஒத்திவைத்து விட்டு, அடுத்தவரின் வம்பு தும்புகளை தேடி விசாரிப்பதில் கிடைக்கும் தற்காலிக திருப்திக்காக அலையும் மனது.

திடீரென நாலைந்து பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டு வாசலைப் பார்க்கிறார்கள். அங்கே “வரேங்பாங். வரேங். வரேங்” (வாடி. வா. வா.) என்ற அட்டகாசமான வரவேற்பு அளிக்கப்படும் சத்தம் பலமாகக் கேட்கிறது. “ம். இங்கிருந்து விடுதலையாகிப் போன ஒண்டு திரும்பவும் வருகுது போல, இங்க சில பேருக்கு போறதும் வாறதும்தானே வேலை..  வெறுப்புடன் அலுத்துக் கொண்டாள். என்னருகில் உட்கார்ந்திருந்த வசந்தி, என்னைப்போலவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வருடக்கணக்காக விசாரனைக் கைதியாக இருப்பவள். எனக்கென்னவோ எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அந்தளவுக்கு சிறை வாழ்வு அலுத்து, வெறுத்துப் போயிருந்தது. சும்மாவா இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடத்தின் முக்கால் பங்கும் முடித்துவிட்டதே. “அன்ன சுதர்சினி எவில்லா (அதோ சுதர்சினி வந்திட்டாள்..) அனைவருக்கும் ஒரு சுவாரசியமான தகவலாக அது பரவியது. தமது உரையாடல்களிலும் யோசனைகளிலும் மூழ்கியிருந்தவர்கள் ஒருதடவை திடீரென திரும்பிப் பார்த்தார்கள். நான்கு அடிக்கு மேற்படாத உயரம், கறுத்து மெலிந்த தேகம். போதை தேடி உடல் நடுங்கும் பதைபதைப்பான தருணங்களில் கையில் அகப்படும் ஏதாவது கூர் ஆயுதத்தால் தனக்குத்தானே கீறிக் கொண்டதால் ஏற்பட்ட காயங்கள். கைகளிலும் கன்னங்களிலும் தளும்புகளாக பட்டையெழும்பிக் கிடக்கும். எண்ணெய், தண்ணிர் கண்டிராத கழுத்துவரைக்குமான செம்பட்டை கூந்தல், வெற்றிலை குதப்பிக் குதப்பி அவிந்து போன உதடுகள். முன்னிரண்டு மேற்பற்களும் உடைந்துபோன இடைவெளி எப்போதும் முகத்தை மூடிப்படர்ந்து கிடக்கும் சிடுசிடுப்பு, மூச்சுப் பொருக்க உரத்த குரலில் கத்திப்பேசும் இயல்பு. ப்ரா அணியத் தேவையில்லாத தட்டையான உடல்வாகு. எப்போதும் அலைந்து கொண்டேயிருக்கும் பார்வையும் அரக்கப்பரக்கப் பாயும் நடையும்தான் சுதர்சினி.

காலையிலிருந்து மாலைவரை சிறைச்சாலைக்குள் ஒடிக்கொண்டே இருக்கும் அவளுக்கு எப்போதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். கைதிகள் குளிக்குமிடத்தில் சிறிய பிளாஸ்ரிக் குடுவையில் தண்ணிர் பிடிப்பதற்கே உயிர் போய் வரும். இழுபறிகள், ஏச்சுப்பேச்சுக்கள் எல்லாவற்றையும் அடக்கி அங்கே ஒலிக்கும் சுதர்சினியின் குரல். “ஏய். அங்வென்ன அங்வென்ன. அங். அங்.” (ஏய். விலகு. விலகு.) ஒரேயொரு குழாயிலிருந்து மட்டுமே தண்ணிர் வடிந்து கொண்டிருக்கும் பெரிய தொட்டியின், உயரமான விளிம்புக் கட்டின் மீது ஒரே தாவிலில் ஏறி நிற்பாள். அதுவரையில் நெருக்குவாரப்பட்டு இரைந்து கொண்டிருந்த கூட்டத்தினர். மூச்சுவிடுவதற்கே பயந்து பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களின் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, தான் கொண்டு வந்த பெரிய வாளியை வைத்து தண்ணிர் பிடிக்கத் தொடங்கி விடுவாள். எல்லாருடைய கோபங்களும் புறுபுறுப்புகளும் வெளியே வர முடியாமல் ஆற்றாமையோடு தொண்டைக்குள்ளே சிக்கி பொங்கிப் பொருமி, நெஞ்சு வெடிக்க விலகி நிற்பார்கள். முதலில் வைத்த ஒரு பெரிய வாளி நிறைந்ததும் அடுத்த பெரிய வாளியை தூக்கி வைப்பாள்.தன்னைச்சுற்றி ஒரு கூட்டம் நிற்பது பற்றியே கவலைப்படாமல், அலட்சியத்துடன் சாவகாசமாக வெற்றிலையை மென்று புளிச்சென துப்பிக்கொண்டு தனது காரியத்தில் கண்ணாயிருப்பாள். இந்த வேலையை விரைவாக முடித்து விட்டு அவள் அடுத்த வேலைக்கு ஒட வேண்டும்.

உடல் பெருத்த தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள். சுதர்சினி நிறைத்து வைத்த பெரிய வாளிகளில், தன் வீட்டு குளியலறையில் குளிப்பது போல மிடுக்காக, நீராடத் தொடங்கிவிடுவாள். அவளுக்கு கை கால் முதுகு என சாவாங்கமும் சுதர்சினி தேய்த்துவிட, தண்ணிர் நிறுத்தப்படும் நேரம் வரை அவளின் குளிப்பு முடியாது. காத்து நிற்கும் மற்றவர்களுக்கு உடம்பில் தேய்த்துக் கொண்ட சோப்பு துரை காய்ந்து பொருக்கு வெடிக்கத் தொடங்கிவிடும். சுதர்சினி மனம் வைத்து அரைக் கோப்பை ஒரு கோப்பை தண்ணிர் எடுக்க விட்டால் ஏதோ கொஞ்சம் கழுவித் துடைத்துக்கொண்டு வரலாம். இல்லாவிட்டால் சுடலைப் பொடி பூசியோன் கோலத்தில் திரும்ப வேண்டியதுதான். அவர்களை எதிர்த்து எதுவுமே முடியாது, அதிகாரிகளிடம் புகார் செய்யவும் முடியாது.

உணர்ச்சி வசப்பட்டு யாராவது ஒருவர் இம்மாதிரியான அத்துமீறல்களை தட்டிக்கேட்க முற்பட்டால் அல்லது சிறை காவலர்களிடம் புகார் செய்ய முற்பட்டால், பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சேர்ந்து வர மாட்டார்கள். அப்படிச் செய்வதன் பிரதிபலனாக ஏற்படக்கூடிய விளைவுகளின் பயங்கரத்தை எண்ணி மெளனமாக வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிப் போய் விடவே விரும்புவார்கள். சுதர்சினியின் இந்த குளிப்பாட்டும் வேலைக்கு கூலியாக ஒன்றிரண்டு சோப்புகட்டிகள் அவளுக்கு கிடைக்கும். தமது நாளாந்த சம்பாத்தியத்திற்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்வதில் அவளும் அவளது கூட்டாளிகளும் மிக அவதானமாக செயற்படுவார்கள்.

பெற்றா என்பது ஒரு தாதா பெண்ணின் பெயர். நடுத்தர வயதைத் தாண்டிய, உயர்ந்த கறுத்த இறுகிய தேகம், புன்னகையின் சுவடறியாத முகம், வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல், கண்களில் இடையறாத போதை மயக்கம், அணிவகுப்பில் செல்லும் இராணுவம் போன்ற வேகநடை. போகிற வழியில் நிறைந்த வயிற்றுடன் கர்ப்பிணிப் பெண் நின்றாலும் தள்ளி விழுத்திக்கொண்டுதான் போவாள். இவளுக்கு சிறைக்காவலர்களே பயப்படுவார்கள். அதிகம் வாய் திறக்காத பெற்றா “ஏய்” என ஒரு குரல் எழுப்பினாள் என்றால் சிறைச்சாலையில் ஊசலாடும் காற்றுக்கூட அசைவதை நிறுத்திவிடும்.

எதனையுமே கணக்கெடுக்காத தோரணையில் எப்பவுமே போதை மயக்கத்திலிருக்கும் பெற்றாவின் உத்தரவுக்காக ஒரு அடியாள் பட்டாளமே கைகட்டி காத்திருக்கும். எங்கேயோ விடுமுறைக்கு போய் வருவது மாதிரி வெளியில் போவதும் போன வேகத்தில் வருவதுமாக இவளின் ஆயுள்காலம் சிறையிலேயே கழிந்து கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை சிறைக்கதவுகள் மூடப்பட்டு சற்று நேரத்தில், கோழியை அமுக்குவது போல ஒரு பெண்ணை சுவரோடு அமுக்கிவைத்துக் கொண்டு, அடிக்கத் தொடங்கினார்கள் பெற்றாவின் அடியாட்கள். அடிவாங்கும் பெண் உரத்த குரலில் கதறினாள். மற்றவர்கள் தமது கண்விழி பிதுங்கப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே பரபரப்பு சத்தம், இரைச்சல். பெற்றா அந்த மண்டபத்தின் நடுவில் கால்களை பரப்பி நின்றபடி, தனது இடுப்பிலிருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள், வலதுகை கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் சேர்த்து மூக்குத்தூளை ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து நிதானமாக மூக்குக்குள் அடைந்து முகத்தை அப்புறம் இப்புறம் என சுழித்து, கண்களை மூடி அதன் காரத்தை ரசித்து உள்ளெடுத்தவாறு தலையை சரித்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் பெண்னை பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினாள்.

சத்தங்கள் வெளியேயும் கேட்டிருக்க வேண்டும். இரவுக்காவல் அதிகாரி வெளியிலிருந்தபடியே, “ஏய். அத்துல மொகதே சத்தே” (ஏய். உள்ளுக்கு என்ன சத்தம்) எனக் கேட்டார். உடனடியாக அடி நிறுத்தப்பட்டது. அடிவாங்கிய பெண்ணின் மெலிதான விசும்பலைத்தவிர அனைவரும் நிசப்தமானார்கள். பெற்றா வாசலருகே போய் இதமான குரலில் பணிவான தோரணையுடன் அதிகாரியிடம் பேசினாள்.

“ஒன்றுமில்லை நோனா புதுசா வந்த பைத்தியம் ஒண்னு சத்தம் போடுது.”

“அப்பிடியா கொஞ்சம் பாத்துக் கொள்ளு பெற்றா”

“ஆமாம் நான் பாத்துக் கொள்ளுறேன் நோனா நீங்க கவலைப்படாமல் போங்க” அதிகாரி பொறுப்பை பெற்றாவிடம் கொடுத்துவிட்டு அலுப்புடன் நகர்ந்து செல்லத் தொடங்கினார். பெற்றாவின் குரல் அதிகாரமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

“ஏய் உங்கட உங்கட வழக்குகளுக்கு வந்தமா போனமா என்றிருக்க வேணும் தேவையில்லாம சிறைச் சாலையை திருத்துற வேலைக்கு வெளிக்கிட வேணாம். இங்க வாலாட்டினா இதுமாதிரிதான் நடக்கும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றா எனக்கு சொல்லுங்க, அங்க இங்க சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கவேணாம். உங்களுக்கு சிறை புதுசா இருக்கலாம். நான் இங்க பழம் திண்டு கொட்டையும் போட்டுட்டன். புதுசா வாற ஆக்களுக்கு இங்க எப்பிடி நடந்துகொள்ள வேணுமென்னு பழைய ஆக்கள் சொல்லி வையுங்க” என தொடர்ந்த அவளின் கெட்ட வார்த்தைகள், எல்லோரையும் அச்சத்தில் உறையச் செய்தது.

அடிவாங்கிய பெண் புதிதாகவந்தவள்,பெற்றாவின் ஆக்களுடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு எதிர்த்து பேசியது மட்டுமல்லாமல், அலுவலகத்திலும் போய் முறையீடு செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். இப்படியான தாதா பெண்களுக்கு பணிவுள்ள ஒரு அடியாளாக ஒடியோடி வேலை செய்யும் சுதர்சினி ஒரு சிறிய முடிச்சு தூளுக்காக உயிரையே கொடுக்கக்கூடியவள். எனது அவதானிப்பில் இவள் மற்றவர்களைவிட அதிகம் ஆபத்தில்லாதவள். கொஞ்சமென்றாலும் இதயத்தில் ஈரமுள்ளவள். சிறைச்சாலையில் தூள் குடிப்பவர்கள் எல்லாரும் ஒரு கூட்டமாகவே சேர்ந்திருந்து கொள்ளுவார்கள். அது மழை ஒழுக்கும், மல சல கூடத்தின் அழுக்குத் தண்ணிரும் தெறிக்கும் ஒதுக்குப்புறமான பகுதி. அங்கேதான் மனநிலை சரியில்லாத பெண்களையும்கூட ஒதுக்கிவிடுவார்கள். எவருமே கண் கொண்டு பார்க்கக்கூட விருப்பப்படாத அந்த சீவன்களுக்கு, சுதர்சினி உணவு கொடுத்துக் கொண்டிருப்பதையும், உருட்டி மிரட்டி குளிக்க வைப்பதையும் கண்டிருக்கிறேன். உரத்த குரலில் கத்தி ஏசிக் கொண்டேதான் இவைகளை செய்வாள். எப்போதாவது ஒரு குணம் வரும் தருணத்தில் தனது மனத்திருப்திக்காக இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுவாள். மற்றபடி அவள் தனது நாளாந்த சம்பாத்தியத்திலேயே குறியாயிருப்பாள்.

முதலாளி அக்காமாருக்கு உடுப்புகள் தோய்த்துக் கொடுப்பாள். அவர்களுக்கு தினசரி வீட்டு வேலைக்காரர்கள் கொண்டுவரும் பொருட்களை, உணவுகளை வாசலிலிருந்து காவிச் சென்று கொடுப்பாள். அவர்கள் பாவிப்பதற்கு முன்பாக மலசல கூடத்தை கழுவி சுத்தம் பண்ணி அவர்கள் வெளியில் வரும் வரை வாசலில் காவலிருப்பாள். அக்காமாருக்கு கைகால் அமுக்கி, தலைக்கு எண்ணெய் மசாஜ் பண்ணி விடுவாள். சோறு எடுக்கும் வரிசைக்கு போக வெட்கப்படும் மரியாதைக்குரிய அக்காமாருக்கு அடிபட்டு, நெரிபட்டு சாப்பாடு எடுத்துக் கொடுப்பாள். எல்லா வேலைகளுக்கும் ஒன்றோ இரண்டோ சோப்புக் கட்டிகள்தான் அவள் எதிர்பார்க்கும் கூலி. சில பேர் தாங்கள் உண்டு மிச்சமான வீட்டு உணவுகளையும் கொடுப்பார்கள்.

சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான தூள், கைத்தொலைபேசி, அதன் உதிரிப்பாகங்கள் எல்லாமே வெளியிலிருந்து உயர்ந்த மதிலுக்கும் மேலாக வீசப்பட்டு உள்ளுக்கு வந்து விழும். இது ஒரு இராணுவ நடவடிக்கை போல தூள் முதலாளி அக்காமாரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பெற்றாவின் ஆட்கள்தான் வந்துவிழும் பொதிகளை அதிகாரிகளின் கண்களில் பட்டுவிடாமல் குருவிபோல கொத்திக்கொண்டு ஓடிவந்து விடுவார்கள். இப்படியான தருணங்களில் கடமையில் இருக்கும் காவலாளி அதிகாரிகளின் கவனத்தை திருப்புவதில் சுதர்சினி திறமைசாலி. கதிரையில் சோர்வோடு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டிருக்கும் அவர்களை அணுகி நைசாக கதை கொடுத்து, கைகால் அமுக்கி தலையில் பேன் பார்த்து, சிரிக்க சிரிக்க ஏதாவது கதை சொல்லி, ஒருமாதிரி தமது வேலை முடியும் வரை அந்த அதிகாரியின் கவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவாள்.

பெற்றாவுக்கு விசுவாசமான அடியாளாக சுதர்சினியும் இப்படியான வேலைகளில் ஒடித் திரிவாள். அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டால் அடி உதை, இருட்டு தனியறைக்குள் அடைப்பு. இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் அவளுக்கு பழகிப்போன விடயங்கள்.

மழைக் காலங்களில் சிறைச்சாலையின் மலக்குழிகள் நிரம்பி மலஅழுக்கு கழிவுவாய்க்கால்களில் சிதறிக் காணப்படும். அப்படியான நாட்களில் என்னைப் போன்ற பலர் வாயையும் மூக்கையும் மூடி கைக்குட்டையால் கட்டிக்கொண்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் கிடப்போம். சுவாசிக்கக்கூட முடியாமல் தலையிடியுடன் படும்பாடு வாழ்க்கையே வெறுக்கச்செய்யும்.

அந்த மலக் குழியை சுத்தப்படுத்தும் வேலைக்கு கைதிகளைத்தான் கூப்பிடுவார்கள். போக விரும்பாதவர்கள் தமது பங்களிப்பாக ஒரு சோப்பு கொடுக்க வேண்டும். இந்த வேலைக்கு முதல் ஆளாக போய் நிற்பாள் சுதர்சினி. எந்த அருவருப்பும் இல்லாமல் ஏதோ மண் கிணறு இறைப்பது போல வேலைசெய்து முடிப்பாள். இதனால் அதிகமான சோப்புக் கட்டிகளை அவளால் சம்பாதித்துக் கொள்ளமுடியம். இதற்காக இவளைப் போன்றவர்களே கற்களை போட்டு மலக்கூடக்குழிகளை அடைக்கச்செய்வதும் உண்டு என பலர் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன்.

போதையில் கண் செருகிக் கிடக்கும் சுகத்தைவிட வெறெந்த சுரனையும் இல்லாத சுதர்சினியின் வாழ்க்கையில் எந்த அழகையும் நான் காணவில்லை. ஆனால், பசுமையற்றுப் போயிருந்த அவளின் விழிகளில் ஒரு ஆத்மாவின் ஏக்கமும் விசும்பலும் தேங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது.

கண் விழித்த நேரத்திலிருந்து மாலையாகும் வரை ஒட்டமும் நடையுமாக திரிந்து சம்பாதிக்கும் சுதர்சினி, கதவு மூடப்பட்டதும் சோப்புக்கட்டிகள் ஐந்தை அடுக்கிக் கொண்டு, சபாங் சியாய் சபாங் சியாய் (சவர்க்காரம் நூறு ரூபா) என கூவிக்கூவி காசாக்கி விட முயற்சிப்பாள்.

ஒரு நூறு ரூபா தாள் அவளது கைகளுக்கு வந்ததும் கண்களில் தென்படும் மலர்ச்சி, பரபரப்பு, துள்ளல் நடை, அப்பப்பா அதற்குப்பிறகு சுதர்சினியை எவரும் எந்த உயிர்போகிற வேலைக்கும் கூப்பிட முடியாது. இனி அவளுக்கான நேரம். தூள் விற்கும் பெண்ணிடம் கைப் பொத்தலாக காசைக்கொடுத்துவிட்டு, தனக்கான தூள் முடிச்சு கிடைக்கும் வரை வாசற்படியில் நாக்குத் தொங்க நிற்கும் நாய்போல காத்துக் கிடப்பாள். பொலித்தினில் முடியப்பட்ட ஒரு சிட்டிகை அல்லது அதற்கும் குறைவான தூள் பொட்டலம் அவள் கைக்கு வந்ததும் தனது இடத்திற்கு பாய்ந்தோடுவாள்.

அங்கே அவளின் கூட்டாளிகள் ஏற்கனவே ஒரு சுட்டி விளக்கை கொழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றி ஏதோ பிரார்த்தனையில் கூடியிருப்பவர்களைப் போல குத்தங்காலிட்டுக் குந்திக் கொண்டிருப்பார்கள். சுற்றுக் காவல் அதிகாரிகளின் கண்களுக்கு மாட்டுப்படாமல் தூளடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பகல் முழுவதும் அட்டகாசமெழுப்பிக்கொண்டு திரியும் இவர்கள் இப்போது சாந்த பதுமைகளாக தமது முறைவரும்வரை துள் சரைகளை கைகளுக்குள் பொத்திக் கொண்டு பதவிசாக காத்திருப்பார்கள்.

ஒரு வெள்ளிப் பேப்பரில் தங்கத்தை விட கவனமாக துளை கொட்டி, எரிந்து கொண்டிருக்கும் சுட்டி நெருப்புக்கு மேலே பிடித்து, ஒரு குழல் மூலமாக அதன் புகையை இழுத்து விழுங்குவார்கள்.

விடிய விடிய நோய் பிடித்த கோழிமாதிரி கழுத்து மடிந்த நிலையில் கடைவாய் வழிய அலங்கோலமாக மயக்கிக் கிடப்பார்கள். இப்படி மயங்கிக் கிடக்கும் தாயொருத்தியின் முலையை அவளது குழந்தை பசியுடன் சப்பிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாக கண்ட மாத்திரத்தில், குருடாய்ப் போகாதிருந்த என் கண்களை நானே சபித்துக்கொண்டேன்.

“இப்படி பாலூட்டுவது குழந்தைக்கு கூடாது.” போதை தெளிந்திருந்த ஒருநேரத்தில் அந்த தாய்க்கு புத்தி சொல்ல முயற்சித்தேன்.

“நான் தூள் குடிக்காட்டில் இவன் என்னில பாலே குடிக்கமாட்டான்.”

ஒரு வார்த்தை விளக்கத்தில் என்னை வீழ்த்திவிட்டு, இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் அவள் விசுக் விசுக் என நடந்து போய்விட்டாள். எனது இதயத்திற்கான இரத்த ஒட்டம் நின்று போனது போல ஒரு விறைப்பு உடலெங்கும் பரவிச்சென்றது.

கண்ணுக்கு முன்னால் சாவு தினந்தோறும் சப்பித் தின்னும் இந்த மனிதர்களின் வாழ்வை எண்ணியெண்ணி எத்தனையோ இரவுகள் எனது நித்திரை பொய்த்துப்போனது. அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள், கிடைப்பதை உண்டார்கள், பெண்களோடு பெண்களே உடற் பசியுமாறினார்கள். தமக்குள்ளே ஒரு உலகத்தை ஸ்தாபித்துக் கொண்டு தூள் குடிப்பதற்காகவே உயிர் வாழ்ந்தார்கள்.

சுதர்சினியின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த தூள் வழக்குக்காக நீதிமன்றத்தில் மூவாயிரம் ருபா தண்டப்பணம் செலுத்தவேண்டுமென தீர்ப்பாகியிருந்தது. அவளுக்காக எவரும் அப்படியொரு தொகையை செலுத்துவது நடவாத காரியம் என்பது அவளுக்கும் தெரியும். அதைப்பற்றி அவளுக்கும் கவலை இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவள் கவலைப்பட்டு அலட்டிக்கொண்டதாக நான் அறியவில்லை. அவளிடம் எடுபிடி வேலைவாங்கிய பல முதலாளி அக்காமார், “நான் போனதும் உன்னை வெளியில எடுக்கிறன்” என நம்பிக்கை ஊட்டி செமத்தியாக அவளை தம் வேலைகளுக்கு பயன்படுத்திவிட்டு வெளியில் போனதும் அவளை மறந்தே போயிருந்தார்கள். எப்போதாவது, “இப்படியான கதைகள் உண்மையா சுதர்சினி” என எவராவது கேட்டால், “மனுசர் என்றால் அப்பிடித்தானே” என அலட்சியமாக தலையாட்டி விட்டு போய்விடுவாள்.

திடீரென ஒருநாள் சுதர்சினி அழகாக தலைவாரி, நேர்த்தியான வெள்ளை பாவாடை சட்டை உடுத்து, சிரித்த முகமாக எல்லாரிடத்தலும் விடைபெற்றுக் கொண்டு திரிவதை கண்டேன். ஒரு ஏஜன்சி வழக்கில் இருந்த வயதான அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே ஒடியோடி வேலை செய்துகொண்டு திரிந்தாள். அவர்தான் இவளின் தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் போக உதவிசெய்ததாக கதைத்துக் கொண்டார்கள்.

எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இந்த உலகத்தில் இன்னும் சில மனிதர்களின் இதயங்களிலும் ஈரம் இருக்கிறதே என எண்ணிக்கொண்டேன். அன்று மிகவும் அழகாக இருந்தாள் சுதர்சினி. என்னையும் தேடி வந்து இதமான குரலில், நான் போகிறேன் அக்கா” என்று கூறிச் சென்றாள்.

இப்படி தினசரி யாராவது கூறிச் செல்லுவது வழக்கம்தான். இருந்தாலும் நான் சிறைக்கு வந்த நாளிலிருந்து தினசரி பார்த்துக்கொண்ட முகமாயிருந்தபடியால் மனதுக்கு கொஞ்சம் நெருக்கமாக மாறியிருந்தாள். இதன்பின் சில நாட்களில் நானும் அவளை மறந்தே போனேன்.

இன்றைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டாள். முன்னர் இருந்ததைவிட கறுத்து மெலிந்து, புதிதாக கிழித்துக்கொண்ட காயங்களுடன் பார்க்கவே ஒரு மாதிரி பயங்கர தோற்றமாயிருந்தாள். யாருமே இப்படியானவர்களை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஏதோ ஐந்துக்களை கண்ட மாதிரி விலகிச் செல்லுவார்கள். ஏன் நானும்கூட அப்படித்தான்.

மாலை கணகெடுப்பு முடிந்து கைதிகளை உள்ளே அடைத்து கதவு மூடப்பட்டாயிற்று. தூள் குடிக்கும் பகுதியில் சுட்டி விளக்கு மினுங்கத் தொடங்கியது. வழக்கம் போல எல்லோரும் சுற்றிவர குந்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வந்த முதல் நாளாகையால் அவளின் கூட்டாளிகள் இலவசமாக அவளுக்கும் தூளை பகிர்ந்துகொள்வார்கள் போல, சுதர்சினியும் அந்த வட்டத்தில் குந்திக் கொண்டிருக்கிறாள். பசி கிடந்தவன் சோற்றைப் பார்ப்பது போல அவளது முகத்தில் அப்படியொரு ஆவல். காய்ந்த உதடுகளை நாக்கினால் தடவிக்கொண்டு தனது முறைக்காக காத்திருக்கிறாள்.

நான் எனது இடத்தில் படுத்துக்கிடந்தபடி வாசிப்பதற்கு கையிலெடுத்த புத்தகத்தை வெறுமனே புரட்டிக்கொண்டு தூரத்தில் குவிந்திருந்த அவர்களின் மீதே நோட்டமாயிந்தேன். ஏனோ மனது சுதர்சினியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்று அவள் விடைபெற்றுச் சென்ற சிரித்த கோலம் மனதை அலைக்கழித்தது.

சற்று முன் மாலை வரிசையில் நின்றபோது, தனக்குத் தெரிந்த பழைய முகங்களை தேடிக்கொண்டே வந்தவள் என்னருகில் வந்து நின்றாள்.

“ஐயோ அக்கா நீ இன்னும் போகவில்லையா?”

இரக்கப் பார்வையுடன் கேட்டாள். அவள் திரும்பி வந்ததில் எனக்கு உள்ளுக்கு கோபமிருந்தாலும் காட்டிக்கொள்ளாம்ல், “சரி நான் போவது இருக்கட்டும் நீ ஏன் திருப்பி வந்தாய்?” என இயல்பாகவே கேட்டேன். உடனே கண்களை உருட்டி அக்கம் பார்த்தவள் என்னருகே தலையை சாய்த்து மெல்லிய குரலில் குசுகுசுத்தாள்.

“வெளியால வாழுறது சரியான கஸ்டம் அக்கா, சாப்பாடு இல்லை, குடியிருக்க இடமில்லை. தூளும் குடிக்க முடியாது. எனக்கு வெளியால இருக்கிறதவிட உள்ளுக்கு இருக்கிறதுதானக்கா நல்லது.”

எனது பதிலுக்கு காத்திருக்காமல் தனது கூட்டாளிகளை நோக்கி சென்று விட்டாள். அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளின் உண்மை கூர்மையான கத்தியைப்போல என் இதயத்தை ஊடுருவிக் கிழித்தது. இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளுக்குப்பின்னே, சாவின் மயக்கத்தில் வாழ்வைச் சுகிக்கும் எத்தனை சுதர்சினிகளின் வாழ்க்கை மீதான நம்பிக்கையின் கதவுகளும்மூடப்பட்டுக் கிடக்கிறது.

என்னைத் தொடரும் பயங்கர சூனியக்காரியின் முகம் இப்போது மிகவும் அருவருக்கத்தக்கதாக ஏளனமான சிரிப்புடன் என்னையே உறுத்துப் பார்ப்பது போல இருக்கிறது. கண்களை இறுக்கி முடிக் கொள்கிறேன். ச்சீ. இப்போதும் அந்த முகம் என் கண்களுக்கு நேராகவே வருகிறது. சட்டென எழும்பிக் குந்திக்கொள்கிறேன். தலையை அசைத்து நினைவுகளை உதற முனைகிறேன்.

“என்னக்கா நாளைக்கு உங்கட வழக்கெல்லே, அதைப்பற்றி யோசிக்கிறிங்கள் போல” என்கிறாள் வசந்தி, பக்கத்திலிருப்பவள் என்னை அவதானித்துக் கொண்டேயிருந்திருக்கிறாள்.

“ம்..ம்ம்” என்று அவசரமாக தலையசைத்து இயல்புக்கு வர முயற்சிக்கிறேன்.

தூள் குடிக்கும் இடத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடைவாய் வழிய சுதர்சினி மயக்கத்தில் சிரிக்கிறாள். அச்சிரிப்பு ஒலியினூடே கதறியழும் அவளின் ஆத்மாவின் ஒலம் ஒரு பிரளயம் போல எழுகிறது.

By

Read More

× Close