கவித எழுத போறன்!

ஆர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் முடிவெடுத்திட்டன்.
எல்லாரும் கவித எழுதுகினம். அதுவும் நாப்பது ஐம்பது பின்னூட்டங்கள் வேறை.

நல்லாருக்கு, எழும்பியாச்சோ, நித்திர கொள்ளேலையோ எண்டுதான் பின்னூட்டங்கள் வந்தாலும், எனக்கென்ன.. எண்ணிக்கை தானே முக்கியம்.

அதனாலை தான் சொல்லுறன் நான் கவித எழுதியே தீரப் போறன்.

உந்த வசந்தன் சும்மா Anti Poet Org எண்டொரு இயக்கமாம். அது கவித எழுதக்கூடாது எண்டுதாம் எண்டு பினாத்துறார். ஒரு பொதுத்தளத்தில மாற்றுக்கருத்துக்களை வைச்சு விவாதிக்காமல், அதைப்பத்தி கேள்வி கேட்க எனக்கிருக்கிற உரிமையை மறுத்துப் போட்டு உவர் எப்பிடி உப்பிடி சொல்ல முடியும்?

விசயத்துக்கு வாறன்..

இப்ப கொஞ்ச நாளா இரவில எனக்கு நித்திரை வருகுதில்லை. இரவில நேரமும் போகுதில்லை. மெதுவா ஊருது. பேந்த பேந்த முழிச்சுக்கொண்டு இருக்கிறன். பிறகு பகலில நல்லா நித்திர கொள்ளுறன். மத்தியானத்துக்கு பிறகு தான் விடியுது.

சரி இப்ப நான் மேலை சொன்னதை கவிதையாச் சொல்லப் போறன். கவனமாக் கேளுங்கோ

என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன.

அச்சாக் கவித.. எல்லாரும் ஒருக்கா கை தட்டுங்கோ.. மிச்சக்கவித பிறகு சொல்லுறன்

உந்த படிமம் குறியீடுகளைப் பத்தி பெரிசா எனக்கு அறிவில்லை. ஆரும் சொல்லித்தருவியளே..

எட மடையா உது கவிதையே இல்லை எண்டு நினைக்கிறாக்களும் சொல்லுங்கோ..

By

Read More

வெட்கம் – (கெட்ட) கதை

இது ஒரு சிறுகதை (அப்பிடியா!) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி தினக்குரலில் வெளியானது. சிறுகதையென்றால் திடுக்கிடும் எதிர்பாராத முடிவுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி அது தன் பாட்டில் இயல்பாய்ச் சென்று முடியலாம் என ஒரு திடுக்கிடும் முடிவை நான் எடுத்து எழுதிய கதை.
இரண்டு வருடங்களுக்கு முன் நிறைவைத் தந்த கதை இப்பொழுது நின்று திரும்பிப் பார்த்தால் திருந்துவதற்கும் முன்னேறுவதற்கும் இடம் உண்டு என்கிறது.
இருப்பினும்.. இங்கே இட்டு வைக்கிறேன்.. ஆகக் குறைந்தது ஒரு ஆவணப்படுத்தலுக்காகவேனும்.. சற்றே நீண்டிருக்கிறது. நேரமிருந்தால் படியுங்கள்..

கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.

‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்தன. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருப்பார்கள்.

”எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..” அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

‘ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..’ போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

“கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே..” தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

“அதுக்கென்னடா வாவன்…”

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

‘அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?’

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. ‘முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..’

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. ‘ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..’

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

‘அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..’

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

அக்கா அக்கா..” வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மன் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

“அம்மா ஆரோ வந்திருக்கினம்…” அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

“கெனடியே.. வா வா என்ன திடீரென்று..” அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

“கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்..”

“இல்லையக்கா வேண்டாம்..” கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

“இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்..” அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

“நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு..” அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

“அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?” கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

“வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்..”

“ஓம் அக்கா..” கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

‘ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..’ அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

‘கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..’ என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் ‘நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்’ என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து … அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

“அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா..” அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு ‘முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..’ என்று தான் முதலில் நினைத்தான்.

“வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு..”

“குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்”

“சத்தம் வையுங்கொ அது போயிடும்.”

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

“அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்.” என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

“அக்கா இப்பவும் யானையள் வாறதோ?”

“அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்..” சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். “எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. “வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

‘மனிசன் மாறேல்ல’

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

“தம்பி என்ன படிக்கிறியள்”

“நேசறி”

“படிச்சு என்னவா வர போறியள்”

“டொக்டரா வருவன்..”

“டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ”

“இல்லை”

“அப்ப..?”

“பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்..”

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். “இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை.” கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

“பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்..” சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

“என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ..” என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

“அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்..” அக்கா அமைதியானாள்.

“அவன் இப்ப இல்லை” கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

“வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்”

இப்பொழுது கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். “ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது.” படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

“கிழடுகள் மாதிரி கதையாதையடா” என்று கூட கெனடி சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

“ஏதேனும் அலுவலா வந்தனியோ..?”

“இல்லை சும்மா உங்களையும்..” என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

‘மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..’ கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

மாலிக்கா நில்லும் இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

“நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ”

“ம்..”

“போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ” மாலிக்கா பேசாமல் நின்றாள்.

“போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ..” என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. ‘இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..’

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. ‘மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..’

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

“ஆரப்பன் உள்ளை வாரும்”

“ஐயா மாலிக்கா நிக்கிறாவோ..”

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

“இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா..” கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

“வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்” கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

“எப்பிடி சுகமாயிருக்கிறியளோ..”

“ம்” கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

“என்னோடை படிச்சவை”

மாலிக்கா நிறைய பேசினாள். “என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை..” தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

“அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு.” கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

“சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்.” மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். “கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ..”

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

“ம்..” கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.
20.04.2003 தினக்குரல்

By

Read More

ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.

இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.

எனக்கு கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்ச, அறிஞ்ச சாப்பாடு ஏதும் வேணுமெண்டா இப்பிடியான இந்திய சாப்பாட்டு கடையளுக்குத் தான் போறனான். (எனக்கு சப்பாத்தி, பூரி எண்டால் நல்லா பிடிக்கும்.) அதுவும் நல்ல உறைப்புச் சாப்பாட்டுக்கு இந்திய கடைகளுக்குத் தான் போகவேணும். (எங்களுக்கு உறைப்பு இல்லாட்டி நாக்கு செத்துப் போயிடுமே!)

அப்ப, இப்பிடி Tram இற்கு நிக்கிற நேரம் பக்கத்திலை இருக்கிற அந்த இந்தியக் கடைக்கு போய் ஏதாவது இனிப்பு வகைகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நிப்பன். (கள்ளத்தீனி, நொறுக்குத் தீனி) மைசூர் பாகில இருந்து பெயர் தெரியாத எல்லா இனிப்பையும் நாளுக்கு ஒன்றாய் வாங்குவன்.

எந்த இனிப்பெண்டாலும் ஒரு துண்டு, ஒரு டொலர் அங்கை.

முதல் நாள் ஒரு டொலரைக் குடுத்து ஒரு இனிப்பைக் கேட்டன். அங்கை நிண்ட கடைக்காரர் 3 இனிப்பைத் தூக்கி தந்தார். நான் நினைச்சன் மனிசன் மாறித் தருகுதாக்கும் எண்டு நினைச்சக்கொண்டு நான் ஒரு டொலர் தான் தந்தன் எண்டு சொன்னன். அதுக்கு அவர் பரவாயில்லை.. இருக்கட்டும் எண்டு சொன்னார்.

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மீள் பதிவு

சரியெண்டு வாங்கி கொண்டு வந்திட்டன். (ஒரு வேளை பழுதாப்போயிருக்குமோ எண்டும் நினைச்சன். ஆனால் நல்லாத்தான் இருந்தது.)

உப்பிடி நிறைய நாள் நடந்திட்டுது. நேற்று ஜிலேபி வாங்க ஒரு டொலர் குடுத்தன்.( ஜலேபியை இலங்கையில தேன் குழல் எண்டுறவை.) அவர் ரண்டைத் தூக்கி தந்தார்.

நானும் சிரிச்சுக் கொண்டே நன்றியைச் சொல்லிப்போட்டு தொடர்ந்து இப்படித்தான் ஒண்டு கேட்டால் ரண்டு மூண்டு தாறியள் எண்டு சொன்னன்.
அவரும் சிரிச்சுக் கொண்டு நீங்களும் எங்கடை நாடு தானே.. அது தான், எண்டார்.

ஓஹோ இது தான் விசயமா எண்டு நினைச்சக்கொண்டு வந்து ட்ராமில் ஏறி வாற வழியெல்லாம் யோசிச்சுக் கொண்டு வந்தன்.

சும்மாவே எனக்கு முதலில அறிமுகமாகிற சிங்களப் பெடியள் எந்த இடம் எண்டு கேட்டால் யாப்பாணே என்றோ Jaffna என்றோ சொல்லாமால் வீம்புக்கு யாழ்ப்பாணம் எண்டு அறுத்துறுத்து சொல்லுறனான்.

இப்பிடியிருக்க நேற்று அந்தக் கடைக்காரர் நீங்களும் இந்தியர் தானே என்ற கருத்துப்பட சொன்ன போது, இல்லை நான் சிறீலங்கன் என ஏன் நான் சொல்ல வில்லை? ஏன் நான் சிறீலங்கன் எண்ட தேசியம் எனக்குள் விழித்துக் கொள்ளவில்லை?

இதிலென்ன சந்தேகம்… எல்லாம் அந்த ஒரு டொலர் ஜிலேபிக்காகத் தான் என்று இலகுவாக சொல்லிவிட்டு போனாலும் வேறும் ஏதாவது இருக்கக்கூடும்!

By

Read More

கிட்டண்ணை பூங்காவும் நானும்

என்னை உங்கள் எல்லாருக்கும் காட்டுறதுக்காக ஒரு படம் ஒண்டு போட்டன் தானே! அதிலை ஈழநாதன் நல்லூர் கிட்டு பூங்காவில பாத்த மாதிரி கிடக்கு எண்டு ஒரு பின்னூட்டம் விட அதை வாசிக்க எனக்கு மனசெல்லாம் பின்னுக்குப் போட்டுது.

95 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில வலிகாமம் மேற்கு பக்கமா இலங்கைத் தேசிய ராணுவம் சண்டை பிடிச்சுக்கொண்டு முன்னேறி வந்தது. அதுக்கு முன்னேறிப் பாய்ச்சல் எண்டு அதுக்கு பேர் வைச்சிருந்தவை. (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா எண்ட பாட்டு எனக்கு நினைவுக்கு வருது.. முழுக்க எழுதோணும் போல கிடக்கு.. பிறகு ஆரும் குழந்தையள் இதைப் படிச்சு வன்முறையாளர்களானால் எனக்கு ஏன் சோலி)

அந்த நேரம் நிறைய சனமும் செத்துப் போட்டுதுகள். அதுவும் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலை புக்காரா எண்டொரு பிளேன்.. ஒரே நேரத்திலை எட்டு ரொக்கட்டுக்களை அடிக்க அங்கை இடம் பெயர்ந்து வந்து கொஞ்சம் களைப்பாறிக்கொண்டிருந்த சனத்திலை 200 பேருக்குக் கிட்ட செத்தவை.

உப்பிடி எல்லா இடத்திலையும் அடி! ஒரு மாதிரி ஆமி முன்னுக்கு வந்து இடங்களையெல்லாம் பிடிச்சிட்டுது. நாங்களும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ளை வந்து ஒரு சொந்தக்காரர் வீட்டிலை இருந்தம். பிறகு ஒரு ஐஞ்சு நாளிலை ஆமி திரும்பி போட்டுது. புலிகள் தான் அடிச்சு கலைச்சவை.

நாங்களும் ஒரு பத்து நாளில வட்டுக்கோட்டைக்கு போனம். (போற வழியிலை கொஞ்சம் கிட்டப் பாதை நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தைக் கடந்து தான் போகும். நாங்களும் அதாலை தான் போனம். அங்கை கட்டட குவியலுக்குள்ளையிருந்து மீட்க முடியாத உடல்த்துண்டுகளை அப்பிடியே எரிச்சுக் கொண்டிருந்தவை. அந்த நேரம் என்ரை சைக்கிள் காத்துப் போக இறங்கி அடுத்த சைக்கிள் கடை வரையும் உருட்டிக் கொண்டு போனன். அதே மாதிரி இன்னும் கொஞ்சம் பேருக்கு அந்த அந்த இடத்திலை காத்துப் போக அது ஒரு கதையாக கொஞ்சக் காலம் உலாவிச்சு. )

ஊரிலை இருந்தாலும் ஒரு பயமாத்தான் கிடந்தது. அதுவும் நான் சரியான பயந்தாங்கொள்ளி. எங்கையும் பிளேன் அடிச்சா ஒருத்தரும் என்னோடை வர வேண்டாம் எண்டிட்டு தனிய எங்கையாவது வயல்வெளியளுக்குள்ளை ஓடிப் போய் படுத்திருந்து கத்துவன். (ஆக்களோடு எண்டால் கூட்டத்தை கண்டு விட்டு குண்டு போடுவான் எண்டு பயம்.)

சரியெண்டு ஒரு கொஞ்ச நாளுக்குப் பிறகு நாங்கள் ரவுணுக்குள்ளை ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தம்.
அது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு கிட்ட, கிட்டு பூங்காவிற்கு பின்னாலை இருக்கிற சேர்ச்சுக்கு பக்கத்திலை ஒரு ஒழுங்கைக்குள்ளை இருந்தது.

அதே மாதிரி யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் அரண்மனை வாயில், யமுனா ஏரி இதெல்லாம் எங்கடை வீட்டுக்கு கிட்டத்தான் இருந்தது. (இவ்வாறாக எனது வாழ்வின் பெரும் பகுதியை (4 மாசம்) ஆண்ட தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களுடனேயே கழித்திருக்கிறேன் என்பதனை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.)

நாங்கள் வரேக்கை கிட்டு பூங்கா கட்டி ஒரு வருசம் இருக்கும். எனக்கெண்டால் சந்தோசம் தாங்க முடியேல்லை. ராட்டிணத்தை அவ்வளவு நாளும் படங்களிலை தான் பாத்திருக்கிறன். அங்கை தான் நேரை பாத்தன். மனித வலுக் கொண்டு தான் இயங்கினது எண்டாலும் சுப்பர். அது போலத் தான் தொங்குபாலம் ஒண்டு இருந்தது.

அதுவரைக்கும் கலியாண, சாமத்திய வீட்டுச் சடங்கு வீடியோ கசெற்றுக்களிலை சிங்கப்பூரை காட்டேக்கை இப்படியான தொங்கு பாலங்களை சின்னச் சின்ன அருவியளை பாத்திருப்பம். நேரை பாக்கிறம் எண்டால் சந்தோசம் தானே.

அதுவும் அந்த நேரம் நல்லூர்த் திருவிழா நடந்தது. நல்லூர்த் திருவிழா பற்றி யாழ்ப்பாணத்திலை இருந்தவைக்கு சொல்லத் தேவையில்லை. ஐஸ்கிரீம் கடையள், விளையாட்டுச் சாமான் கடைகள் எண்டு சும்மா களைகட்டும். அதோடை விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (எல்லாருக்கும் இந்தச் சொல்லு விளங்குது தானே) கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்துறது.

உண்மையா உள்ளை போனா ஆசையாத் தான் இருக்கும். ஒரு தனி நாடு எப்பிடிக் கட்டமைக்கப் பட வேணும்.. எப்பிடி வளங்கள் பகிரப் பட வேணும்.. அதின்ரை நிர்வாக அலகுகள் எப்பிடியிருக்கும்.. அதின் பொருளாதார கட்டமைப்பு எப்பிடியிருக்கும்.. எண்டெல்லாம் அங்கை காட்சிகளோடும் தரவுகளோடும் விளங்கப் படுத்துவினம்.

அதே போல புலிகளும் ஆயுதக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கினம் பிறிம்பாக! ஒரு மாசத்துக்கு முதல் நவாலியில குண்டு போட்டு 200 பேரைச் சாகடிச்ச புக்காரா ரக விமானம் ஒன்றை அதே கிழமை புலிகள் சுட்டுவிழுத்தினவை. அந்தப் பிளேனையும் அங்கை காட்சிக்கு வைச்சிருந்தவை. அதை நான் பார்த்தன். (நான் நினைக்கிறன் புலிகளை காரசாரமா விமர்சிக்கிறதுக்கு தகவல்கள் தேடுற ஆட்களுக்கு – அதாவது எப்பிடியாவது கடுமையாத் தாக்கிறது எண்டு முடிவெடுத்த பிறகு அதுக்கு தரவுகள் தேடுறாக்களுக்கு – நான் ஒரு தகவல் வழங்கியிருக்கிறன் எண்டு. அதெப்படி ஆலயங்களிலை ஆயுதக் கண்காட்டி வைக்க முடியும் எண்டு.)

சனமெல்லாம் திருவிழா முடிய அப்பிடியெ திரண்டு கிட்டு பூங்காக்கு வரும். பிறகென்ன நல்லுர்த் திருவிழாக்குப் போனால் கிட்டு பூங்காவிற்குப் போறது எண்டிறதும் ஒரு சம்பிரதாயமாப் போச்சு.

திருவிழா இல்லாத நாட்களிலையும் நான் அங்கை போறனான். அங்கை ஐஸ்கிறீம் வாங்கலாம். அதுக்குத் தான் பின்னேரங்களிலை அங்கை போறனான். (யாழ்ப்பாணத்திலை ஜஸ்கிரீம் சுவை கொஞ்சம் வித்தியாசமாத் தான் உணருகிறன். வேறு யாருக்கும் உந்த எண்ணம் இருக்கோ?)

கிட்டு பூங்கா வாசலில சங்கிலிய மன்னனின் சிலை ஒண்டு இருக்கு. அவர் தான் யாழ்ப்பாணத்தின்ரை கடைசி மன்னன். அதே மாதிரி உள்ளை கேணல் கிட்டுவின் சிலை ஒண்டு இருக்கு. நிறைய பூச்செடிகள், நீரேந்துப் பகுதிகள் எண்டு கனக்க உள்ளை இருக்கும்.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்கிறதுக்கு ஆமி ஒப்பரேசன் யாழ்தேவி எண்டொரு சண்டையைத் தொடங்கி பிடிக்க முடியாமல் தோத்தது. அந்த சண்டையிலை புலிகள் ஒரு ராணுவ ராங்கியை கைப்பற்றியிருந்தவை. அந்த ராங்கியும் கிட்டு பூங்காவிலை நிண்டது. நான் நினைக்கிறன் அது பழுதாப் போயிருக்க வேணும். (குழந்தையள் விளையாடுற இடத்திலை ராங்கிக்கு என்ன வேலை எண்டு ஆரும் கேட்கப்போகினமோ?)நான் அங்கை தான் ராங்கியை முதலில பார்த்தன்.

மற்றது.. யாழ்ப்பாணத்தாக்கள் கூடுதலா தங்கடை வீட்டில நடக்கிற கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள் இப்பிடியானதுகளை வீடியோ எடுக்கிற பழக்கம் உள்ளவை. கிட்டத்தட்ட அவையின்ரை கலாச்சாரம் மாதிரி இது. நான் நினைக்கிறன் இது ஏன் வந்ததெண்டால் அவையளில குடும்பத்திலை ஆகக்குறைஞ்சது ஒராளாவது வெளிநாட்டிலை இருக்கிற படியாலை (பெரும்பாலான குடும்பங்களில்) அவையளுக்கு அனுப்பத் தான் எடுக்கினம் எண்டு.

அப்பிடி வீடியோ எடுக்கேக்கை இடைக்கிடை சிங்கப்பூர் மாதிரியான நாடுகளிலை எடுத்த சில வீடியோ காட்சிகளை செருகிறவை. கிட்டு பூங்கா வந்த பிறகு நேரை அங்கேயே போய் எடுக்க தொடங்கி விட்டினம். அதுவும் வீடியோக்கு நல்லாத்தான் இருந்தது.

பேந்தென்ன.. 95 ஒக்ரோபர் இடப்பெயர்வு வந்திட்டுது. அதோடை யாழ்ப்பாணத்திற்கு ஆமியும் வந்திட்டுது. கிட்டு பூங்காவின் ஆயுட்காலம் ஒரு ரண்டு வருசம் தான் இருக்கும். ஆனா அந்தக்கால சிறுவர்களின் மனசுக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்.

யாழ்ப்பாணம் ஆமி பிடிச்சாப்பிறகு அந்தப் பூங்காவை ஆமி சிதைத்து விட்டது. காரணம் அது கிட்டுவின் பேரில இருந்த படியாத்தான் எண்டு நினைக்கிறன். கிட்டுவின் சிலையையும் உடைச்சிட்டினம். அதே மாதிரி முன்னாலிருந்த சங்கிலியனின் சிலையையும் உடைச்சுப் போட்டினம்.

கிட்டுவின் சிலையை உடைச்சதை விடுவம். தங்கடை எதிரியின்ரை ஒரு தளபதி எண்ட சினத்திலை அதை உடைச்சிருக்கலாம். சங்கிலியனின் சிலையை ஏன் உடைச்சவை? அது தமிழரின் மன்னன் எண்ட படியாலை தானே!

இல்லாட்டி சங்கிலியனையும் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி எண்டு நினைச்சினமோ தெரியாது.

By

Read More

ஒஸ்ரேலியாவில் வலைப்பதிவர் சந்திப்பு

ஒரு மூன்றாவது கண் பார்வை!

‘குறு’ குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாலும் நேரத்திட்டமிடலில் ரொம்பவே சொதப்புகின்ற சயந்தனாலும் இன்று ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சரியாகவோ, முறையாகவோ அறிவிக்க இயலவில்லை.

இன்று வெள்ளிக்கிழமையான விடுமுறை நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பினும் ஒஸ்ரேலியாவில் இருந்து வலைப்பதிகிற இரண்டு மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

சந்திப்பு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக இடத்தில் நடைபெற்றது. மதியத்திற்கு நிறையப் பின்பாக முதலாவதாக வந்து சேர்ந்தார் வசந்தன். வசந்தனின் பக்கம் என்னும் வலைப்பதிவில் தெரியாத, அறியாத பழஞ்சொல்லுகளைப் பற்றி பதிந்து வருபவர் அவர்.

முதலாவதாக வந்து சேர்ந்த வசந்தனின் பின்னர் வருவதற்கு எவருமில்லாததால் சந்திப்பு ஆரம்பமானது.

கொஞ்ச நேரம் பலதும் பத்துமாக பேசிக்கொண்டிருந்த சந்திப்பு ‘எழுதுவது என்றால் என்ன’ என்ற சயந்தனின் கேள்வியின் பின்னர் சூடு பிடித்தது. அதற்கு வசந்தனின் பதில் திருப்தியாக அமையா விட்டாலும் வசந்தனுக்கு தெரிந்தது அவ்வளவும் தான் என நினைத்த சயந்தன் அடங்கிக் கொண்டார். அதே போல இணையத்தில் இலக்கியம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அவை பெரும்பாலும் அண்மைக்கால பின்னூட்டங்களில் இருக்கிறது என வசந்தன் சொன்னார்.

இடையில் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் பற்றி பேசப் போவதாக சயந்தன் சொல்லி எழுந்தார். கூடவே அவர் சில புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார். அவை ஒஸ்ரேலிய இந்துக் கோவில்களில் பயன் படுத்தப் படுகின்ற தேவார திருவாசக புத்தகங்கள். தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

அப்பமுப்பளம் என்பது Appamuppalam என எழுதப்பட்டிருந்த அந்த புத்தகங்களை காட்டி மொழி பெயர்ப்புக்களின் அவசியம் பற்றி சயந்தன் பேசினார். தமிழ் தெரியாத குழந்தைகள் எப்படியாவது தேவாரங்களைப் பாடி அருள் பெற வேண்டும் நோக்கில் இவ்வாறான நிறைய மொழி பெயர்ப்புக்கள் பிரெஞ்சில் ஜேர்மனில் எல்லாம் வர வேண்டும் என சயந்தன் சொன்னார்.

ஆனால் இடையில் குறுக்கிட்ட வசந்தன் இவை மொழி பெயர்ப்புகள் இல்லை என்றும் இவை ஒலி பெயர்ப்புக்கள் எனவும் சொன்னார். ஒரு மாதிரியாகப் போய்விட்ட சயந்தன் இவை மொழி பெயர்ப்புக்கான நல்ல ஆரம்பம் என சமாளித்தார்.

வரும் போது வசந்தன் பினாட்டு கொண்டு வந்திருந்தார். வசந்தன் மறந்து போன விடயங்களை, பழக்க வழக்கங்களை, உணவு முறைகளை எழுதுவது மட்டுமல்லாது செயலிலும் காட்டுவார் என்பதற்கு அவர் பினாட்டு கொண்டு வந்தது ஒரு உதாரணம்.

நெடுநாள் திட்டமிடலுடன் தொடங்கியிருந்தால் பினாட்டுப் போலவே குரக்கன் பிட்டு, பருத்தித்துறை வடை, ஆலங்காய் இவற்றை ஏற்பாடு செய்திருக்கலாம் என வசந்தன் கூறினார். (இவை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் தொடர்ச்சியாக வசந்தன் பக்கம் பார்க்கவும். அங்கு தான் வழக்கொழிந்த சொற்கள் எல்லாம் ஆராயப்படுகிறது)

மீண்டும் சந்திப்பு தொடர்ந்தது. சிறுவர் பாடல்கள் பற்றிப் பேசிய வசந்தன் ‘கத்தரித்தோட்டத்து மத்தியிலே’ என்னும் பாடலை ஒஸ்ரேலியாவில் வாழும் ஒரு சிறுவனைக் கொண்டு பாடி ஒலிப்பதிவு செய்ய எடுத்த முயற்சி பற்றி சொன்னார்.

அப்பாடலை முழுதுமாக ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து ‘கத்தரி’ என்றால் என்ன ‘வெருளி’ என்றால் என்ன என அச் சிறுவனுக்கு விளங்கப்படுத்தி ஒலிப் பதிவை முடித்த போது அது வெள்ளைக் கார குழந்தை பாடியதை விட மோசமாக இருந்தபடியால் அத் திட்டத்தை கைவிட்டு விட்டதாக கவலையுடன் சொன்னார்.

கத்தரித்தோட்டத்து மத்தியில் என்ற பாடலில் ‘வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடுது வெள்ளைப்பசு’ என்ற வரி வருவதாகவும் அப்பாவி வெள்ளைப் பசுவிற்கு பய உணர்வைத் தருவதும், அச்சத்தை ஊட்டுவதும், அப்பாவி வெள்ளைப் பசுவின் புல்லுத் தின்னும் உரிமையை மறுக்கின்றதுமான இவ்வரிகள் ஒரு விதத்தில் வன்முறையை ஊட்டுகின்றன. ஆகவே இப்பாடல் தடை செய்யப் பட வேண்டும் என சயந்தன் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வசந்தன் ‘ஜாவா’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய பக்கங்களில் இணைக்கக் கூடியதான ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இச் செயலியை வலைப் பதிவுகளில் இணைப்பதனால் வலைப் பதிவிற்கு வரும் ஒருவர் கண்டிப்பாக பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் அனைவரும் கட்டாயம் பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என வசந்தன் மேலும் சொன்னார்.

ஆனால் பின்னூட்டம் இட்ட பின்னரே பதிவினை படிக்க முடியுமென்றால் பதிவினைப் படிக்க முடியாமல் எப்படி பின்னூட்டம் இடுவது என சயந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு வசந்தன் இப்போதெல்லாம் பதிவுகளிற்கும் பின்னூட்டங்களிற்கும் பெரிதும் சம்பந்தமில்லையாதலால் அது ஒரு பிரச்சனையே இல்லை என்றார்.

சந்திப்பு தமிழ்மணம் குறித்து திரும்பியது. வலைப் பதிவுகளின் எண்ணிக்கை மகிழ்வடையக் கூடிய அளவிற்கு அதிகரித்திருப்பதனால் ஒரு பதிவினை அனுப்பி விட்டு தமிழ் மணத்திற்கு வந்து பார்த்தால்… அதற்கிடையில் பத்து பதிவுகள் வந்து எழுதிய பதிவினை பின்னுக்கு தள்ளி விடுகிறது.

ஆகக் குறைந்தது இரு மணி நேரத்திற்காவது பதிவு, தமிழ் மண முதற் பக்கத்தில் இருந்தால் போதும் என அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னார்கள். ஆனால் 5 நிமிடமாவது இருப்பதே அதிசயம் என வசந்தன் சொன்னார்.

ஒரு ஆறுதலாக பின்னூட்டம் இடப்பட்ட பதிவுகளின் பட்டியலில், பதிவுகள் வருவது சந்தோசமாக இருக்கிறது என சயந்தன் சொன்னார். இருப்பினும் பின்னூட்டம் எதுவும் இடப்படாதவிடத்து அந்தப் பட்டியலிலிருந்தும் பதிவுகள் ஓடுவதால் வேறு பெயர்களில் வந்து பின்னூட்டங்கள் இட வேண்டிருக்கும் என சந்திப்பில் கலந்து கொண்ட சிலர் தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு நல்ல மாற்றாக, பின்னூட்டங்கள் இடப்பட்ட பட்டியலிலிருந்து பதிவுகள் ஓடினால், பின்னூட்டங்கள் இட்டவர்களுக்கு நன்றி என ஒரு பின்னூட்டம் இடுவது நல்லது என வசந்தன் சொன்னார்.

இருப்பினும் இது குறித்து ஆகக்குறைந்தது பதியப்பட்ட 25 பதிவுகளையாவது காட்டுவது நல்லது என்ற சந்திப்பில் கலந்த கொண்டவர்களின் கருத்தினை தமிழ்மணம் காசியின் கவனத்திற்கு கொண்டு செல்வது தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக அடுத்த ஒஸ்ரேலிய வலைப்பதிவர் சந்திப்பை சிட்னியில் நடாத்துவது எனவும் அதற்கான ஏற்பாடுகளை (மெல்பேணிலிருந்து சிட்னிக்கான விமான பயண சீட்டு உட்பட) சிட்னியிலிருந்து வலைப்பதியும் வலைபதிவாளர்கள் செய்வார்கள் எனவும் ‘இரு’ மனதாக முடிவு செய்யப்பட்டது.

சந்திப்புக் குறித்த இன்னுமொரு பதிவு வசந்தனின் பக்கத்தில் வர இருக்கிறது. இரண்டையும் அடுத்தடுத்ததாக படிக்கவும். விருமாண்டி படம் பார்த்தது போல இருக்கும்

By

Read More

× Close