ராஜ சுந்தர ராஜன்

“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்.

இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும், ‘புலி’ ஆதிரை பற்றிக் கூறும் இறுதி அத்தியாயமும் துண்ண்டாக நின்று, வியக்கத்தக்க வகையில், நாவலுக்கு ஒரு முழுமையைக் கொண்டுதருகின்றன.

பாம்புக்கடி பட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோய், பாதிவழியில், இருட்டுக்குள், பிணமாகச் சுமந்துவரும் தேவமலர் பாத்திரப் படைப்பு போதும், ‘நூலாசிரியர்’ சயந்தனின் திறமையைப் பறைசாற்ற.

தமிழினத்தை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட போரில் போராடிச் செத்தவர்கள் எல்லாரும் ஏழைகள், கீழ்ச்சாதியினர் எனவும்; பணமும் யாழ்ப்பாணமும் தப்பித்துக்கொண்டன என்றும் கோடிகாட்டுகிறது “ஆதிரை”யின் கருத்தாக்கம். புலிகளின் தோல்வியோடு நாவல் முடிந்தாலும் புலிகள் சாகும்வரை போராடியதைச் சுட்டி ஒரு நேர்முறைக் குறிப்போடு முடிகிறது.

By

Read More

கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின் மியூசியம் கதையின் குறியீடைப் பெற்று விடுகிறது. எல்லாச் சம்பவங்களையும் தொகுத்து குட்டிமணி முதல் முள்ளிவாய்க்கால் வரை உதிரம் தோய்ந்த காகிதமடிப்புகளை வரைபடங்களாக வெட்டி ஒட்டும் குலாஜி ஓவியகங்களாக சில நூறு பக்கங்கள் இந்த நாவலை தகவல் நாடாக மாற்றியிருக்கிறது. இந்த தகவல் நாட்டிலிருந்தே கத்தரிக்கப்பட்ட செய்திகளை மற்ற எழுத்தாளர்களின் கண்களுக்குத் தப்பிவிடும் விடுபடல்களையும் சேகரித்திருக்கிறது. நிலப்பரப்பின் தனி மொழியாக மலையக இருப்பின் புராதான இருட்டில் தங்கம்மை, சிங்கமலை, வள்ளியாள், அலைக்கழிந்த வெள்ளையன், லட்சுமணன், விநோதினி இயக்க உறுப்பினர்களாக நாவலின் ஊடே அலைந்து மறைந்து திரிகிறார்கள். ஆனால் பேச்சி தோட்டத்திற்கு அப்பால் எட்டு ஏக்கர் மேட்டு நிலத்திற்கு அப்பாலிருந்து நாவலின் ஊடாக நெளிந்து வரும் விஷம் சுமந்த சர்ப்பம் வாலில் விசும்பி நின்று படம் விரி கோலத்தில் ரசவாதியாகிவிடும் படைப்பாளியைப் பார்க்கிறது. அவன் சாட்சியமாகவே ஆதிரையை விழுங்குகிறது. அவன் சைக்கிள் மீது சாய்கிறாள். பொழுது இருண்டு போகிறது. நாவலின் துக்கம் கனவுப் பாம்பிலிருந்து ஆதிரையை உமிழ்கிறது. வெளிச்சம் வருகிறது. சிறிது சிறிதாக வருகிறது. பின்னே வரும் பக்கங்களையும் ஆதிரையின் சிறிய வெளிச்சத்தில் யாரோ வாசிக்கிறார்கள். மொழி நிழல்கள் காட்டின் உயிர்சுடரில் ஆடி புனைவுப் பாம்பு சயந்தனின் எழுதும் விரலை வலுவாகக் கவ்விக் கொள்கிறது. படைப்பில் விஷத்தை படைப்பாளி கையாள வேண்டிய தருணம் வருகிறது. கணம் தவறினாலும் அவனைக் கொன்று விடும் என்கிறார் காருகி முராகாமி. புனைவாளன் விஷத்தை பளிங்காக மாற்றுகிறான். நீலம் பாதித்த அத்தியாயங்களை வாசிக்கும் போது வாசகனும் சில பக்கங்களில் நீல சரீரமாகிவிடுகிறான். இந்தப் புனைவுப் பாம்பு தீண்டியது மிகச் சிலவே ஆயினும் குறிஞ்சி நிலத்தின் நரம்பறிந்த விரல்களாய் எழுதும் விரல்கள் இருப்பதில் யார் கை மூலம் என்பதை விட சயந்தன் விரல்களால் எழுதப்பட்ட ஆதிரை கழிவிரக்கத்தையும் கையறு நிலையையும் சம்பவங்களூடே கடந்து செல்வதற்குரிய உத்தியாக நான் நினைக்கவில்லை. மலையக இரவுகளும் வன்னிப் பெருநில ஊர்களும் சுன்ணாம்பு வளையத்தில் உள்ள சிறு சிறு தீவுகளும் ஒரே நிலமாக இருப்பதில்லை. எட்டு எக்கர்களாக மணற்பாம்புகளோடு ஊழி நடனத்தில் மண்மாரி வீசியது. ஆறாவடுவில் சயந்தினின் புனவுகள் நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் மூழ்கி நகர்வதாகும்.

கடலும் கடல் சார்ந்த உலகமும் கடலுக்கு அப்பால் இருக்கும் உலகமும் எக்கர்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் எட்டு ஏக்கரில் எதார்த்தவாத வாழ்வியல் பரப்பும் விவசாயமும் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்கு இடம் பெயர்வதும் கடலைத் தாண்டாத சமூக அக்கரை சார்ந்த நாவலாக உருமாற்றிக் கொள்கிறது. எட்டேக்கர் x எட்டு எக்கர் புனைவில் பிளக்கும் இடைவெளிகளை எழுதிச் செல்வதற்கான பக்கங்கள் முன் கூட்டியே அறியப் பட்ட பக்கங்களை கோரி நிற்பதில்லை. புனைவின் நிகழ்கணம் தான் நவீன நாவலின் உயிர்நாடி. ஆனால் அதே வேளை குடும்பங்களின் எளிய வாழ்விலிருந்து ஆயிரம் துகள் துகல்ளான கீற்றுகள் இந்த நாவலின் வசீகரமான பக்கங்கள். அமிலப் பசியே உன்னை கவனிக்கப் போவதில்லை என்று தாயார் மகளைப் பார்க்க மலை மலையாக இறங்கிப் போகிறாள். அது ஒருபக்கம் இருக்க, குடும்பக் கதைகளுக்கு மேல் ஊழிக்காலத்துடன் தன்னை சயந்தன் கை மூலம் எழுதிக் கொள்கிறது எக்கர் ஞாழல். தனுஷ்கோடியிலிருந்து ஆதிரையில் வரும் ஒரு சில பக்கங்கள் இராமேஸ்வரம் தனுஷ்கோடி என்று குறிப்பிடுவதில் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்லவே.

By

Read More

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்…

நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு துரத்தப்படுறாங்க. இது எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் மனதை கொல்லுகிற விஷயம்தானே. சக போராளிகளா இருந்த வெள்ளையன் கண்ணிவெடிகளை அகற்றி வாழ்க்கையை தொடர, இனிதனை புலம்பெயர வைக்க 40 லட்சங்களை தயார் செய்ய ஒரு குடும்பமே இருக்கிறது. Traumatizing

இப்போது வந்த வெள்ளத்தப்போ டிவியில யாரோ ஒரு மிடில் க்லாஸ் புண்ணியவதி ‘நாளு நாளா யாருமே இந்த பக்கம் வரல. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறோம்’ அப்படின்னு சொன்னுச்சு. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமான்னே தெரியல. சினிமாவுல எல்லாம் தமிழீழ ஆதரவுன்னு ஒரிரு காட்சிகள் வைத்து எவ்வளவு அசிங்கப்படுத்திட்டோம். எல்லாத்தையும் செய்தியா, புள்ளிவிவரமா பாக்குற இரக்கமற்றதனம் தான் மிஞ்சியிருக்கு. Cleansing and counter cleansing –என்னால எந்த பக்கத்து வன்முறையையுமே புரிஞ்சுக்க முடியல. கிட்டதட்ட அதுல வர சந்திரா மாதிரிதான் என் மனநிலையிருக்கு.

By

Read More

ஹரி ராசலெட்சுமி

சந்திரா நிலவுடமையையும், அதன் வெளியாக்கங்களையும் காட்டி `யார்தான் தமிழர்` எண்டு கேட்டால்,

“சிங்கள ஆமி சாதி பார்த்தே அடிக்குது? ஒருவேளை அவன்ர கையில நான் அகப்பட்டிருந்தால் நானும் தமிழன் தானே? அடக்குமுறையின்ர வலி தெரிஞ்சவனுக்கு எல்லா அடக்குமுறையும் ஒண்டுதான். உன்னைவிட எனக்கு அடக்குமுறையின்ர வலி தெரியும்.“ என்கிறான்.

பிறகும் சந்திரா சொற்களை `மலைபோல குவிக்கிற` போது, அவன் அதற்குள் `நசுங்குகிறானே` தவிர – தனது சாய்வுகளை பரிசீலிப்பதோ, அல்லது அவளை எதிர்ப்பதோ கிடையாது. ஆண்மை, பெண்மை, சாதிப்புத்தி என்று பழகிப்போன குணச்சித்திரங்களில் வார்க்கப்பட்ட பாத்திரங்கள்.

தன்னுடைய சாதி நிலையை சாக்குக்கு இழுப்பது அத்தாருக்கு வாய்ப்பாடமாகிவிடுகிறது. கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம், தன்னுடைய சாதியை இழுத்துக்கொண்டுபோய் தமிழ்த்தேசியப்போராட்டத்தின் பின்னால் கொண்டு சென்று நிறுத்துவதுதான் அத்தார் கதாபாத்திரத்தின் ஒரே நோக்கமோ என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கம் இலவச பாடநூல்களும், சீருடையும் வழங்குவதைப் பற்றி அத்தாருடைய அபிப்பிராயம் இப்படியாயிருக்கிறது:

“அரசாங்கம் படிப்பைத்தருகுது, அரசாங்கம் நிவாரணம் தருகுது, அரசாங்கம் தானே றோட்டுப்போடுது அதனால அரசாங்கத்தோட சண்டைபிடிக்கலாமோ எண்டு சில மொக்குக் கூட்டம் கேக்குது. கூலிக்கு வேலை செய்ய வந்தவன் சம்பளத்தைக் கேட்டால் உனக்கு ரண்டுவேளைச் சோறும் போட்ட பிறகு நீ கூலியும் கேக்கிறியோ எண்டு திட்டுகிற சாதித் திமிர் பிடிச்ச ஆக்கள்தான் அப்பிடிச் சொல்லுவினம்…“ (299)

வெள்ளாள மேலாதிக்கத்தின் மீதான அத்தாரின் கோபம் அடிக்கடி சந்திராவின் அப்பாவைக் கோபப்படுவதற்கும், அதன்வழியாக சந்திராவின் புலியெதிர்ப்பைக் காலிசெய்வதற்குமே பயன்படுகிறது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இழப்பை அரசியலாக்க முனையும் அத்தார், சாதி தொடர்பான இழப்புகளை மாத்திரம் `தனிப்பட்டது` என்ற எல்லையைத் தாண்ட அனுமதிப்பதில்லை. சாதியம் தொடர்பாக வரும் உரையாடல்கள் எல்லாமே ஏதோ கத்தியின் மேலே நடக்கும் கவனத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன. அத்தாருடைய சாதி-சார்ந்த தன்னிலை அடிக்கடி பின்வாங்குகிறது. “சனங்கள் தாங்களாகவே உணரவேணும்“ என்று ஓரிடத்தில் சொல்கிறான். `வெள்ளாளக் குணம்தான் இப்படி யோசிக்கும்` என்று சட்டென்று சொல்லிவிட்டு, அப்படிச் சொல்லியிருக்கவேண்டாமோ யோசிக்கிறான். `ஆழ்ந்த உரையாடலுக்கு [சனம்] தயாரில்லை என்று முடிவெடுக்கிறான்.

அத்தாருடைய இயக்கச்சார்புக் கன்னையை, சந்திராவினுடைய ஐயப்பாடுகளுக்கு எதிராக எடுத்துநிறுத்த ஒருதொகைக் கதாபாத்திரங்கள் வந்துபோகின்றன. சந்திராவை நோக்கி மலர் சொல்கிறாள்: `அக்கா, உனக்கு அவங்களில் பிழை சொல்வதே வேலையாகிப் போய்விட்டது` பிழைவிடாதவள் யாரக்கா? நானும்தான் பிழைவிட்டேன்!` தனிப்பட்ட கதை தேசிய அறத்துக்கான கருத்துருவமாக மாற முனைகிறது. சந்திரா சளைத்தவள் அல்ல. `தனிமனிதப் பிழைகள் தனிமனிதரோடேயே போய்விடும், ஆனால் இயக்கம் விடுகிற பிழை பாரதூரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தும்` என்கிறாள். ஆனால், இந்த நியாயத்தைச் சட்டை செய்யாமல் மலர், தன் `பாதிக்கப்பட்ட` கதையை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறாள். `நான் இந்தளவுக்குப் பிழை விட்டிருக்கிறேன். நீயும் பிழைவிடக் கூடியவள். எங்களுக்குப் பிழை சொல்லும் அருகதை இல்லை` என்கிறாள். ஒருபக்கம் அத்தாரின் இறுக்கம், மறுபக்கம் இதர பெண்களின் கண்ணீர் மிகுதி என்று இரண்டிலுமே சந்திராவின் தரப்பு மேலோங்க வழியில்லை. புலிகளை விமர்சிக்கும் அருகதை தனிமனிதர்களுக்கில்லை என்றாகிவிடுகிறது.

புலிகளுக்கு எதிரான பேச்சின் மூலம் வெளியேற்றப்பட்ட சங்கிலியின் தமிழ்த்தன்மையைச் சீர் செய்யும் விதமாக அவனது மகன் வெள்ளையனை நாம் சந்திக்கிறோம். பதின்மூன்று வயதை மீறிய வளர்ச்சி. சங்கிலியை உரித்துப் படைத்தமாதிரியே நடை பாவனைகள் (291, 300). ஆனால், சாய்வோ புலிகளின் பக்கம். லட்சுமணனைப் போலவே, வெள்ளையனுக்கும் காடுகள், மிருகங்கள் பற்றித்தான் ஆர்வமும் விசாரணையும். `மதம்பிடித்த யானை கூட்டத்திலிருந்து ஏன் விலகிற்று` என்று நாள் பூராக யோசிக்கிறான் (309). வெள்ளையன் இயக்கத்தின் தன்னை இணைத்துக் கொண்டுவிடுகிறான். தகப்பன் சிங்கமலையின் தலை துண்டிக்கப்பட்ட முண்டத்தை லெட்சுமணன் காண நேர்கிறது. அத்தார் ஆறுதல் சொல்கிறான், ஆனால் அது போதுமாயில்லை. இதையடுத்து லெட்சுமணனும் இயக்கத்தில் இணைந்து கொண்டு விடுகிறான். துன்பியல் வர்ணனையை மீறி தகப்பன்/தலை, வெளியேற்றம்/துண்டிப்பு போன்றவற்றின் உளவியல் குறியீட்டு மிகுதியைக் கவனிக்க முடிகிறது.

நாவலில் வருகிற எல்லா ஆண்களுமே மிருகங்களை அடிக்கடி நினைத்துக்கொள்வது சர்வ சாதாரணம். அதுவும் பெண்கள் என்று வருகிற போது, இயற்கை/காடு/நீர்/மிருகம் சார்ந்த உவமைகள் தாராளமாக வந்துபோகின்றன. பெண்ணுடலை இரசிக்க வல்ல குரங்காக இருந்திருக்கலாம் என்று ஒரு கதாபாத்திரம் அங்கலாய்க்கிறது (பக்.254). நாவலின் ஆண்கள் காடு-நாடு, மனம்-உடல், மிருகம்-மனிதன் என்று பல்வேறு நிலைகளுக்கும் பெறுவழி கொண்டவர்களாயிருக்கிறார்கள். பெண்கள், அன்றாடத்தின் மிகுதிக்குள்ளும், உணர்வின் மிகுதிக்குள்ளும் அமிழ்ந்துபோய்விடுகிறார்கள். சங்கிலி `ஒரு இலக்கை வைத்து` நகர்பவன் என்பதை மகன் வெள்ளையன் பின்னாளில் நினைவுகூர்கிறான். அன்றாட விடியற்காலையின் பரபரப்பு சங்கிலியை ஒன்றும் செய்வதில்லை:

“அம்மா குசினிக்குள்ளை விறகுகளை இழுத்து விழுத்தாமல் அடுப்பு மூட்டுறதில்லை. ராணி அக்கா காரணமேயில்லாமல் கத்துவாள். தங்கச்சி திண்ணையில குந்தியிருந்து கறகறவெண்டு குப்பையை வறுகிறது போல தலையை வறுகுவாள். ஆனால், அய்யா இன்னுமொரு உலகத்துக்குள்ள எப்படியோ போயிருப்பார்“ (457).

லெட்சுமணனின் பதின்மம் தொலைந்ததை ஈடுகட்ட சாரகன் என்றொரு புதிய பாத்திரமும், அதற்கு பக்கவாத்தியமாக நாமகள் என்று இன்னொரு கதாபாத்திரமும் வருகிறார்கள். அத்தார்-சங்கிலியின் காடு-நாடு பிளவு இங்கே கிராமம்-நகரமாகக் கூர்ப்படைகிறது. லெட்சுமணனைப் போலவே சாரகனுக்கும் இயற்கைதான் கிளர்ச்சிக்கான கச்சாப்பொருள். சாரகன் கவிதை எழுதுகிறான். நாமகள் `தூர இடத்திலிருந்து வந்த என் ராஜகுமாரனுக்கு` என்று கடிதமெழுதுகிறாள். தேசியத்தைக் கற்றுத்தர அத்தார் தேவையில்லை. இப்போது தமிழ்த்தேசியம் ஒரு discernible apparatusஆகப் பரவலாகியிருக்கிறது. `இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி` என்ற பிரபாகரனின் வாசகத்தின் முன் சாரகனும் நாமகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய காதல் ஒருமிப்புக் கூட போராட்டம் பற்றிய செய்திக் குறிப்பில் தான் நிகழ்கிறது:

[சாரகன்] எதேச்சையாகக் கொப்பியை மூடினான். ஈழநாதம் பேப்பரில் உறைபோட்டிருந்தாள். கிளிநொச்சிச் சண்டையைப் பற்றிய பழைய செய்தி. … அச்செய்தியில் நாமகள் ஆங்காங்கே தனி எழுத்துக்களைச் சுற்றி வட்டங்கள் இட்டிருந்தாள். ஒரு குறுகுறுப்புச் சூழ கூர்ந்து பார்த்தான். … திரும்பத் திரும்ப எல்லா எழுத்துக்களையும் சேர்த்தான்… சாரகன்..நாமகள். (399-400)

By

Read More

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி.

வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை சுடுமணல் பரப்பையும் தாண்டிக் குதித்தோட முடியாது. அங்கு நின்று நிதானித்துப் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அனுபவமும், படிப்பினையும், எதிர்காலத்துக்கான ஓர்மமும், ஏன், நீதியும் கூட அங்குண்டு. ஆயுதப் போராட்டத்தின் பெரும் வெற்றிகளும், (இறுதித்) தோல்வியும் கூட வன்னிப் பெருநிலத்துள்ளேயே நிகழ்ந்து முடிந்தது.

வன்னிப் பெருநிலத்தோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் வாழ்வோடும், புதிய பிறப்புக்களோடும், ஜீரணிக்க முடியாத இறப்புக்களோடும்…. ஒருசில பிழைத்திருத்தல்களோடும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அதன் தொடர் விளைவுகளையும் பேசியிருக்கின்றது சயந்தனின் ‘ஆதிரை’.

வன்னிப் காடுகளுக்குள் உறங்கும் ஆயிரமாயிரம் உண்மைகள் போலயே ஆயுதப் போராட்டத்தின் பக்கங்களை யாராலும் முழுமையாக பேசிவிட முடியாது. ஆனாலும், அங்கு வாழ்ந்தவர்களின் ஒவ்வொரு நாளும், அனுபவமும் புதிய உண்மைகளை இந்த உலகத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவை. அவை, பெரும்படிப்பினைகள். அப்படியானதொரு, முயற்சியின் பக்கத்திலிருந்து புனைவொன்றை எழுதுவதற்கான பொறுப்பினையும், உழைப்பினையும் சயந்தன் ‘ஆதிரை’யை எழுதி முடிப்பதற்கு செலவிட்டிருக்கின்றார். அது, பெரும் உழைப்பினை சலிக்காமல் கோரும் ஒன்றாகவும் இருந்திருக்கும். அதனை வாசித்து முடிக்கின்ற போது அதனை உணர முடிகின்றது.

வன்னிக் காடுகளின் வெம்மையையும், குளிரையும் மாத்திரமின்றி அத்தார், சந்திரா ரீச்சர், மலர் அக்கா, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், விநோதினி, சாரகன், ஒளிநிலா, இசைநிலா…. இன்னும் இன்னும் பலரின் வாழ்வோட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களினூடும் ஆயுதப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் ‘ஆதிரை’ கடக்க முயன்றிருக்கின்றது. நாம் எல்லோருமே அறிந்த பல கதைகளை அல்லது உண்மைகளை ஒரு சில காட்சிகளோடு அல்லது தகவல்களோடு கடந்திருக்கின்ற சயந்தன், இறுதி மோதல்களினை நோக்கிய பயணத்தின் தடத்தினை அழுத்தமான பதிவு செய்ய முனைந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டமொன்று ஏன் ஆரம்பித்தது, பெருவெற்றிக்கணக்கங்களை மக்களிடம் உணரச் செய்தது… ஒரு சில காலத்துக்குப் பிறகு கடுமையான தோல்வியை வழங்கி முடிந்து போனது. இதனையே, ஆதிரையில் வரும் நபர்கள் பிரதிபலிக்கின்றார்கள், பேசுகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மௌனித்து ஆமோதிக்கின்றார்கள். சரி பிழைகள், நியாயங்கள் அநியாயங்கள் என்று எல்லாவற்றையும் பேசுவதற்கு முயன்றிருக்கின்றார்கள். குறிப்பாக, அத்தார், சந்திரா ரீச்சர் பாத்திரங்களினூடு ஆரம்பத்திலிருந்தே அதனைக் கட்டமைத்து எடுத்துச் செல்வதில் சயந்தன் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றார். அதுபோல, ஆயுதப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள் கொடுத்த வலிக்கு அப்பாலும், அந்தப் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் தன்னுடைய கருத்தினை கவனமாக உட்செலுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களை யாழ்ப்பாணம் எடுத்துக் கொண்டாலும், அதன் பெருவெற்றிகளின் பங்களிப்பு என்பது வடக்கு- கிழக்கு மற்றும் வடக்கு- கிழக்கின் கலந்துவிட்ட மலையக மக்களின் பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட்டவை. அதற்கான ஒட்டுமொத்த உரிமையையும் ஒருதரப்பு கோர முடியாது என்பதையும் ஆதிரை பதிவு செய்திருக்கின்றது. அது, ஆயுதப் போராட்டத்தினை வெற்றிக்காரணிகள் சார்ந்து மாத்திரமே உணர்ந்து வைத்திருக்கின்ற பெருமளவான தமிழ் மக்களுக்கு படிப்பினை.

ஆயுதப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் மாத்திரம் சார்ந்தவை அல்ல. அதன் உள்விளைவுகளும், தொடர் விளைவுகளும் ஜீரணிக்க முடியாதவை. அதனை எதிர்கொள்வதற்கான திராணி தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு இல்லை என்பதையும் ‘ஆதிரை’ தன்னுடைய இறுதிப் பாகங்களில் பதிவு செய்திருக்கின்றது. ஒரு இலக்கியப் பிரதியாக ‘ஆதிரை’ வெற்றிகரமாக பக்கத்தில் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ, அதேயளவுக்கு அரசியல் உரையாடல் பதிவுகளாகவும் முக்கிய பங்காற்றியிருக்கின்றது என்று கொள்ள முடியும்.

‘ஆதிரை’யை எழுதிய சயந்தனின் ‘ஆறாவடு’ (2012இல் வெளியான நாவல்) வாசித்த கணத்தில் பெரும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. அந்த உணர்நிலை தொடர்பில் எனக்கு இன்றைக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில், ஆறாவடு மிகமிக அவசரமாக பொறுப்பற்ற தனங்களோடு எழுதப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஆயுதப் போராட்டமொன்று முடிந்து போன கணத்தில் பலருக்கு அது சார்ந்த கதைகளைக் கேட்பதற்கு பாரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தினை சந்தையாக்கும் முயற்சியில் சிலர் இலக்கியங்கள் என்கிற பெயரில் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் ‘ஆறாவடு’வினையும் பார்த்தேன். அது, இலக்கிய அடையாளத்தை நோக்கிப் பறக்கும் குஞ்சொன்றின் பிரதியாகவே இருந்தது.

ஆனால், ‘ஆதிரை’ அப்படியான எந்தவொரு எண்ணத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆறாவடு மூலம் சயந்தன் மீது ஏற்பட்டிருந்த கோபத்தினையும், எரிச்சலையும் ‘ஆதிரை’ துடைத்தெறிந்திருக்கின்றது. ‘ஆதிரை’ தமிழ் மக்களின் குற்றவுணர்சிகளிலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் போதும் அப்படியான மனநிலை தொற்றிக்கொள்கின்றது. சயந்தனும் அந்தக் குற்றவுணர்ச்சி மனநிலைக்குள்ளிலிருந்து தான் எழுதியிருக்கின்றார்.

எல்லாவற்றையும் விட ‘ஆதிரை’, லெட்சுமணனோடு ஆரம்பித்து, காவற்தெய்வம் ஆதிரையோடு முடிந்து போவதுதான் அதன் அழகியலையும், அர்ப்பணிப்பையும், ஏன் நியாயத்தையும் கூட உணர்த்தி நிற்கின்றது.

By

Read More

× Close