ராஜ சுந்தர ராஜன்

“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்.

இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும், ‘புலி’ ஆதிரை பற்றிக் கூறும் இறுதி அத்தியாயமும் துண்ண்டாக நின்று, வியக்கத்தக்க வகையில், நாவலுக்கு ஒரு முழுமையைக் கொண்டுதருகின்றன.

பாம்புக்கடி பட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோய், பாதிவழியில், இருட்டுக்குள், பிணமாகச் சுமந்துவரும் தேவமலர் பாத்திரப் படைப்பு போதும், ‘நூலாசிரியர்’ சயந்தனின் திறமையைப் பறைசாற்ற.

தமிழினத்தை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட போரில் போராடிச் செத்தவர்கள் எல்லாரும் ஏழைகள், கீழ்ச்சாதியினர் எனவும்; பணமும் யாழ்ப்பாணமும் தப்பித்துக்கொண்டன என்றும் கோடிகாட்டுகிறது “ஆதிரை”யின் கருத்தாக்கம். புலிகளின் தோல்வியோடு நாவல் முடிந்தாலும் புலிகள் சாகும்வரை போராடியதைச் சுட்டி ஒரு நேர்முறைக் குறிப்போடு முடிகிறது.

By

Read More

கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின் மியூசியம் கதையின் குறியீடைப் பெற்று விடுகிறது. எல்லாச் சம்பவங்களையும் தொகுத்து குட்டிமணி முதல் முள்ளிவாய்க்கால் வரை உதிரம் தோய்ந்த காகிதமடிப்புகளை வரைபடங்களாக வெட்டி ஒட்டும் குலாஜி ஓவியகங்களாக சில நூறு பக்கங்கள் இந்த நாவலை தகவல் நாடாக மாற்றியிருக்கிறது. இந்த தகவல் நாட்டிலிருந்தே கத்தரிக்கப்பட்ட செய்திகளை மற்ற எழுத்தாளர்களின் கண்களுக்குத் தப்பிவிடும் விடுபடல்களையும் சேகரித்திருக்கிறது. நிலப்பரப்பின் தனி மொழியாக மலையக இருப்பின் புராதான இருட்டில் தங்கம்மை, சிங்கமலை, வள்ளியாள், அலைக்கழிந்த வெள்ளையன், லட்சுமணன், விநோதினி இயக்க உறுப்பினர்களாக நாவலின் ஊடே அலைந்து மறைந்து திரிகிறார்கள். ஆனால் பேச்சி தோட்டத்திற்கு அப்பால் எட்டு ஏக்கர் மேட்டு நிலத்திற்கு அப்பாலிருந்து நாவலின் ஊடாக நெளிந்து வரும் விஷம் சுமந்த சர்ப்பம் வாலில் விசும்பி நின்று படம் விரி கோலத்தில் ரசவாதியாகிவிடும் படைப்பாளியைப் பார்க்கிறது. அவன் சாட்சியமாகவே ஆதிரையை விழுங்குகிறது. அவன் சைக்கிள் மீது சாய்கிறாள். பொழுது இருண்டு போகிறது. நாவலின் துக்கம் கனவுப் பாம்பிலிருந்து ஆதிரையை உமிழ்கிறது. வெளிச்சம் வருகிறது. சிறிது சிறிதாக வருகிறது. பின்னே வரும் பக்கங்களையும் ஆதிரையின் சிறிய வெளிச்சத்தில் யாரோ வாசிக்கிறார்கள். மொழி நிழல்கள் காட்டின் உயிர்சுடரில் ஆடி புனைவுப் பாம்பு சயந்தனின் எழுதும் விரலை வலுவாகக் கவ்விக் கொள்கிறது. படைப்பில் விஷத்தை படைப்பாளி கையாள வேண்டிய தருணம் வருகிறது. கணம் தவறினாலும் அவனைக் கொன்று விடும் என்கிறார் காருகி முராகாமி. புனைவாளன் விஷத்தை பளிங்காக மாற்றுகிறான். நீலம் பாதித்த அத்தியாயங்களை வாசிக்கும் போது வாசகனும் சில பக்கங்களில் நீல சரீரமாகிவிடுகிறான். இந்தப் புனைவுப் பாம்பு தீண்டியது மிகச் சிலவே ஆயினும் குறிஞ்சி நிலத்தின் நரம்பறிந்த விரல்களாய் எழுதும் விரல்கள் இருப்பதில் யார் கை மூலம் என்பதை விட சயந்தன் விரல்களால் எழுதப்பட்ட ஆதிரை கழிவிரக்கத்தையும் கையறு நிலையையும் சம்பவங்களூடே கடந்து செல்வதற்குரிய உத்தியாக நான் நினைக்கவில்லை. மலையக இரவுகளும் வன்னிப் பெருநில ஊர்களும் சுன்ணாம்பு வளையத்தில் உள்ள சிறு சிறு தீவுகளும் ஒரே நிலமாக இருப்பதில்லை. எட்டு எக்கர்களாக மணற்பாம்புகளோடு ஊழி நடனத்தில் மண்மாரி வீசியது. ஆறாவடுவில் சயந்தினின் புனவுகள் நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் மூழ்கி நகர்வதாகும்.

கடலும் கடல் சார்ந்த உலகமும் கடலுக்கு அப்பால் இருக்கும் உலகமும் எக்கர்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் எட்டு ஏக்கரில் எதார்த்தவாத வாழ்வியல் பரப்பும் விவசாயமும் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்கு இடம் பெயர்வதும் கடலைத் தாண்டாத சமூக அக்கரை சார்ந்த நாவலாக உருமாற்றிக் கொள்கிறது. எட்டேக்கர் x எட்டு எக்கர் புனைவில் பிளக்கும் இடைவெளிகளை எழுதிச் செல்வதற்கான பக்கங்கள் முன் கூட்டியே அறியப் பட்ட பக்கங்களை கோரி நிற்பதில்லை. புனைவின் நிகழ்கணம் தான் நவீன நாவலின் உயிர்நாடி. ஆனால் அதே வேளை குடும்பங்களின் எளிய வாழ்விலிருந்து ஆயிரம் துகள் துகல்ளான கீற்றுகள் இந்த நாவலின் வசீகரமான பக்கங்கள். அமிலப் பசியே உன்னை கவனிக்கப் போவதில்லை என்று தாயார் மகளைப் பார்க்க மலை மலையாக இறங்கிப் போகிறாள். அது ஒருபக்கம் இருக்க, குடும்பக் கதைகளுக்கு மேல் ஊழிக்காலத்துடன் தன்னை சயந்தன் கை மூலம் எழுதிக் கொள்கிறது எக்கர் ஞாழல். தனுஷ்கோடியிலிருந்து ஆதிரையில் வரும் ஒரு சில பக்கங்கள் இராமேஸ்வரம் தனுஷ்கோடி என்று குறிப்பிடுவதில் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்லவே.

By

Read More

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்…

நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு துரத்தப்படுறாங்க. இது எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் மனதை கொல்லுகிற விஷயம்தானே. சக போராளிகளா இருந்த வெள்ளையன் கண்ணிவெடிகளை அகற்றி வாழ்க்கையை தொடர, இனிதனை புலம்பெயர வைக்க 40 லட்சங்களை தயார் செய்ய ஒரு குடும்பமே இருக்கிறது. Traumatizing

இப்போது வந்த வெள்ளத்தப்போ டிவியில யாரோ ஒரு மிடில் க்லாஸ் புண்ணியவதி ‘நாளு நாளா யாருமே இந்த பக்கம் வரல. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறோம்’ அப்படின்னு சொன்னுச்சு. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமான்னே தெரியல. சினிமாவுல எல்லாம் தமிழீழ ஆதரவுன்னு ஒரிரு காட்சிகள் வைத்து எவ்வளவு அசிங்கப்படுத்திட்டோம். எல்லாத்தையும் செய்தியா, புள்ளிவிவரமா பாக்குற இரக்கமற்றதனம் தான் மிஞ்சியிருக்கு. Cleansing and counter cleansing –என்னால எந்த பக்கத்து வன்முறையையுமே புரிஞ்சுக்க முடியல. கிட்டதட்ட அதுல வர சந்திரா மாதிரிதான் என் மனநிலையிருக்கு.

By

Read More

ஹரி ராசலெட்சுமி

சங்கிலி அசல் காட்டுக்காரன். முப்பாட்டனுக்கு முப்பாட்டன் வாழ்ந்த காட்டிலேயே பிறந்திருந்தும் கூட, தன் பிறப்பைத் தற்செயலாக உணர்ந்துகொள்கிறான். நிலவுடமை சார்ந்த காணிப்பிரிப்பில் சங்கிலிக்கு நம்பிக்கையில்லை. அவனைப் பொறுத்தவரை காடு எல்லாரையும் வரவேற்று வாழவைக்கிறது. ‘துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் யாரும் வரவேண்டாம்’ என்கிறான். இதற்கு மாறாக அத்தார், ’இயக்கர் நாகரென்று தமிழ் மூதாதைகள் வாழ்ந்த நிலம் இது, அந்த வாழ்வின் எச்சங்களை இந்தக்காடு மூடிப்பாதுகாத்து வைத்திருக்கிறது’ என்று சொல்கிறான். நிலத்துக்கெண்டு அடையாளம், மொழி, பண்பாடெல்லாம் இருக்கு. அதை மாத்த விடேலாது என்று உறுதியாகச் சொல்கிறான். இதைச் சவால்விடும் நோக்கில் சங்கிலி, அத்தாரின் சொந்த வாழ்சரிதத்தைச் சுட்டுகிறான்: ‘நீ யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து, தோட்டம் செய்கிறேன் என்று காடழித்தாயே, அது எப்படி? இதோ இந்த லட்சுமணன், மலையகத்திலிருந்து வந்து இங்கு வாழ்கிறானே அது எப்படி?` என்று கேட்கிறான். அத்தார் கொள்கையளவில் நிலம் எல்லோருக்குமானது (முன்னாள் கம்யூனிஸ்ட்!) என்பதை ஒத்துக் கொண்டாலும் ‘இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒருத்தனைத் துரத்தி, இன்னொருத்தன் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது’ என்று ’இறுதிச் சொற்களை அழுத்தமாக முடிக்கிறான்”.

இந்த `இறுதி அழுத்தத்துக்குப்` பிறகு, நாவல் உரையாடலை வளர அனுமதிப்பதில்லை. அதற்கு வேறு சோலிகள் (வாசிக்க – தேசிய உணர்ச்சியை கட்டி எழுப்புவதை நிர்வகித்தாக வேண்டும்). ‘அவ்வளவு யோசிக்கிற பக்குவம் எனக்கு இல்லை என்றே வைச்சுக்கொள்’ என்று சங்கிலி கதாபாத்திரம் பின்வாங்குகிறது. `நேரம் சுணங்குகிறது புறப்படலாம்` என்று சொல்கிறது. இதையெல்லாம் அமைதியாய் செவிமடுத்துக்கொண்டிருக்கிற லெட்சுமணன், புறப்படுகிற போது வேட்டைத்துப்பாக்கியை கேட்டு வாங்கித் தோள்களில் கொழுவிக் கொள்கிறான். கருத்துருவங்களின் மோதலை அத்தார் அடிக்கடி ஒத்திப்போடுகிறான். இக்கருத்துருவங்களின் அறம் அத்தாரை மீறும் போது, ஏதாவது வன்முறை நடந்து, அத்தாரின் தணிக்கையின் நியாயப்பாட்டை, அதற்கான அவசரத்தேவையை உறுதி செய்துவிடுகிறது.

லட்சுமணனைச் சாட்சியாக வைத்துக் கொண்டு மிருகம், இயற்கை பற்றிய ஊடான மறைபேச்சுகள் அவிழ்கின்றன. `வேட்டையில் தர்மம்/ஒழுக்கம் எல்லாம் இருக்கிறது; அழகாகக் காதல் செய்யும் மான்களைக் கொல்ல மனம் வருவதில்லை, ஆனால் பன்றிகள் செய்யும் நாசம் தாங்கமுடிவதில்லை. அதனால் கொல்வதில் நியாயம் இருக்கிறது` என்றொரு தர்க்கத்தை முன்வைக்கிறான் சங்கிலி. அத்தார் பிரேரிக்கும் சக-மனித வன்முறையை நிராகரிக்கும் சங்கிலி, இயற்கையின் உள்ளார்ந்த வன்முறையை, அழகு, தேவை, நீதி போன்றவற்றுடன் தொடர்புறுத்துவதைக் காண்கிறோம். பன்றியை வெட்டி, பிளந்து, படையல் செய்கிறான் சங்கிலி. இந்த வகையான பலியிலும் படையலிலும் அத்தாருக்கு ஈடுபாடில்லை (அலட்சியமாக நிற்கிறான், சலிக்கிறது, கொட்டாவி வருகிறது). சமைத்த இறைச்சியைச் சாப்பிடும்போது:

“புலவுக்காரனுக்கு எத்தனை அழிவைச் செய்திருக்கும் இந்தப் பண்டி… அதின்ர ஈரலைச் சுட்டுத் திண்டால்தான் மனம் ஆறும்” சங்கிலி சிரித்துக்கொண்டு சொல்கிறான். அத்தார் அதற்காகவே காத்திருந்தவன் போல “ஓம், அழிவைக் கண்டது, காலம் பாத்து ஆறித்தானே தீரும்” என்கிறான்.

காட்டின் உள்ளார்ந்த நீதியை (சங்கிலி), நாட்டின் நீதி (அத்தார்) தன்னுடைய script-க்குள் கொண்டு வந்துவிடுகிறது. சயந்தனின் இலக்கிய டார்வினிஸம் அரசியல் பகுத்தறிவாக இதை மொழிபெயர்க்கிறது: விவரிப்பின் முடிவில் பன்றியின் குருதியை அள்ளி உடலெல்லாம் பூசுகிறான் லட்சுமணன். அவனுக்கு, கைகள் நடுங்குகிறது. சில பக்கங்கள் கழித்து இதே லெட்சுமணன் பொலீசார் ரத்தம் வழியச் சரிந்து கிடப்பதைப் போன்ற காட்சிகளை கற்பனை செய்கிறான். உற்சாகம் கொள்கிறான்.

சங்கிலியின் இயக்க எதிர்ப்பும், அத்தாருடனான அவனது முரணும் கதையின் போக்கில் இற்றுப் போய்விடுகின்றன. மயில்குஞ்சன் கிழவன் என்ற வேட்டைக்காரனின் அறிமுகம் இந்த இற்றுப்போதலை ஈடுசெய்கிறது. மயில்குஞ்சன் சங்கிலியைப் போலவே காட்டின் இன்னொரு பிரதிநிதி, ஆனால் இயக்கத்துடன் அவருக்கு எந்த முரணுமில்லை. தமிழருக்கு எதிரான கொடுமைகள் பலதின் சாட்சியாகவும் அவர் இருக்கிறார். புலிகளுடனேயே அல்லும் பகலும் கிடக்கிறார். அவர் புலியேதான்! `சிங்கமும் காட்டின் குழந்தைதானென்று` நினைவூட்டுகிற சங்கிலியின் தொல்லை ஒருவாறு ஒழிந்து விடுகிறது. `பொடியங்கள்` சங்கிலியை காட்டிலிருந்து வெளியேற்றிய அடுத்தநாளே, அத்தார் மயில்குஞ்சண்ணரைத் தேடிப்போய்விடுகிறான். இயற்கை = பெண்மை, தாய்மை அது இதென்று சொல்லித்தரும் சங்கிலியின் பாலபாடத்தை, மயில்குஞ்சண்ணர் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடுகிறார்: “ஆண்கள் தான் கூடுகட்டுவினம். ஆண்களுக்குள்ள போட்டிதான். எந்தக் கூடு பிடிச்சிருக்கோ அங்கதான் பெம்பிளைக்குருவி வாழப்போகும்“ லெட்சுமணன் ஆர்வத்தோடு செவிமடுக்கிறான்.

சங்கிலி-அத்தார் பண்புடலங்களுக்கிடையான மோதல், ஒதியமலை அபிவிருத்திச் சங்கக் கட்டிடப் படுகொலையின் பின்னான சித்தரிப்பில் ஒரு தீர்க்கமான புள்ளியை எய்துகிறது. சங்கிலியின் மூத்த அண்ணா கொலைசெய்யப்பட்டிருக்கிறார். வாய், கண், மூக்கென்று சன்னம் துளைத்துப் பிடரியால் வெளியேறி சிதைந்துபோயிருக்கிற அவரது உடலத்தை, அத்தார் முதலில் இனம்கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த உடலம், “தமிழனைத் துரத்தி வருகிற அழிவையும், பேயாட்டத்தையும்” காட்டுகிறது. சங்கிலியின் கோபமோ இராணுவத்தை நோக்கியன்றி அத்தாரையும், அவன் ஆதரவு தரும் இயக்கத்தையும் நோக்கித் திரும்புகிறது:

’`இந்தா பாருங்கோடா… எத்தினை உசிரைப் பொசுக்கிட்டுது. உன்ர நிலம் என்ர நிலமென்று இந்தக் காட்டை எரிக்க வேண்டாமென்று கதறினதை யாரும் கேட்கலயே”

அத்தார் சங்கிலியின் உலுப்பலில்’வெறும் காற்றுக்கூடு’ போல அசைகிறான். முன்னைய எடுத்துக் காட்டல்களில் வருவதைப் போலவே, லெட்சுமணன் “செய்வதறியாது பார்த்துக் கொண்டு“ நிற்கிறான். இதற்குப் பின்னால் சங்கிலி இன்னொரு வல்லியாள். விபரிப்பில் அதிகம் தென்படுவதில்லை. அத்தார்-சங்கிலி தொடர்பு அறுந்துவிடுகிறது. `இரண்டு சிநேகிதங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை – சந்திச்சுக் கதைச்சால் சரியாய்ப் போய்விடும்’ என்று அத்தாரின் மனைவி சந்திரா சொல்கிறாள். ஆனால் சங்கிலியின் மனைவிக்கோ அந்த நம்பிக்கையில்லை; “சங்கிலி ஒரு பாறாங்கல்லைத் தனக்குள்ளே வளர்த்துக்கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறது கதை. அத்தாரிடம் என்ன வளர்கிறதென்று நாம்தான் ஊகித்துக் கொள்ள வேண்டும்.

`நூறுக்கு மேல ரெலோ பெடியங்களை புலிப் பெடியங்கள் சுட்டுட்டாங்களாம்` என்று அத்தார் கேள்விப்படுகிற பந்திக்கு அடுத்த பந்தியில் `லெட்சுமணனுக்கு இப்போது வேட்டையின் நுணுக்கங்கள் கைவரப்பெற்றிருந்தன` என்று எழுதுகிறார் சயந்தன். இலக்கிய டார்வினிஸம் அரசியல் பகுத்தறிவாய் மென்மேலும் உரப்படுகிறது. `இதைச் சந்திராவிடம் போய்ச்சொல்லி வைக்காதே` என்று தணிக்கையின் நாசூக்குகளையும் அத்தார் சொல்லிக்கொடுக்கிறான். சந்திராவோடு அத்தார் வாக்குவாதப்படுவதில்லை. பெண். அதுவும் யாழ்ப்பாண வெள்ளாள நாசூக்குள்ள பெண். சந்திரா வாயைத்திறந்தால் பெண்ணென்ற பொறுமையும், இனம்/குலம் கடந்த மனிதாபிமானமும் வசனம்வசனமாக வந்து விழுகிறது. ஆனால் அத்தாரோ, தவிர்க்க இயலாமல் ஆண். அதுவும் தலித் ஆண்! அவனுக்கு இந்த வித்தியாசமெல்லாம் அறிந்து முடிவெடுக்கிற அளவுக்கு அவகாசமோ, புத்தியோ இல்லை. அவனுக்கு புத்திசாலிகளின் புத்தியை மீறிய அனுபவப் புத்தி பொத்துக்கொண்டு வந்து விடுகிறது.

சந்திரா இரண்டு தரப்பிலும் மனித இழப்பைச் சுட்டிக்காட்டினால்,

“முதலடியை எடுத்து வைக்கிற துணிச்சலில்லாதவங்கள் எப்பவும் மற்றவங்களை குறை சொல்லிக்கொண்டிருப்பாங்கள்` என்று முணுமுணுக்கிறான். பாதிக்கப்பட்டவன் அவன். போராடத்தொடங்கும் போது பள்ளிக்கூடத்தில் பாட்த்திட்டத்தோடு தொடங்க மாட்டான். அனுபவத்தில சரியான வழியை அவன் தேர்ந்து கொள்ளிவான்.“ என்று பதில் சொல்கிறான்.

By

Read More

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி.

வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை சுடுமணல் பரப்பையும் தாண்டிக் குதித்தோட முடியாது. அங்கு நின்று நிதானித்துப் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அனுபவமும், படிப்பினையும், எதிர்காலத்துக்கான ஓர்மமும், ஏன், நீதியும் கூட அங்குண்டு. ஆயுதப் போராட்டத்தின் பெரும் வெற்றிகளும், (இறுதித்) தோல்வியும் கூட வன்னிப் பெருநிலத்துள்ளேயே நிகழ்ந்து முடிந்தது.

வன்னிப் பெருநிலத்தோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் வாழ்வோடும், புதிய பிறப்புக்களோடும், ஜீரணிக்க முடியாத இறப்புக்களோடும்…. ஒருசில பிழைத்திருத்தல்களோடும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அதன் தொடர் விளைவுகளையும் பேசியிருக்கின்றது சயந்தனின் ‘ஆதிரை’.

வன்னிப் காடுகளுக்குள் உறங்கும் ஆயிரமாயிரம் உண்மைகள் போலயே ஆயுதப் போராட்டத்தின் பக்கங்களை யாராலும் முழுமையாக பேசிவிட முடியாது. ஆனாலும், அங்கு வாழ்ந்தவர்களின் ஒவ்வொரு நாளும், அனுபவமும் புதிய உண்மைகளை இந்த உலகத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவை. அவை, பெரும்படிப்பினைகள். அப்படியானதொரு, முயற்சியின் பக்கத்திலிருந்து புனைவொன்றை எழுதுவதற்கான பொறுப்பினையும், உழைப்பினையும் சயந்தன் ‘ஆதிரை’யை எழுதி முடிப்பதற்கு செலவிட்டிருக்கின்றார். அது, பெரும் உழைப்பினை சலிக்காமல் கோரும் ஒன்றாகவும் இருந்திருக்கும். அதனை வாசித்து முடிக்கின்ற போது அதனை உணர முடிகின்றது.

வன்னிக் காடுகளின் வெம்மையையும், குளிரையும் மாத்திரமின்றி அத்தார், சந்திரா ரீச்சர், மலர் அக்கா, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், விநோதினி, சாரகன், ஒளிநிலா, இசைநிலா…. இன்னும் இன்னும் பலரின் வாழ்வோட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களினூடும் ஆயுதப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் ‘ஆதிரை’ கடக்க முயன்றிருக்கின்றது. நாம் எல்லோருமே அறிந்த பல கதைகளை அல்லது உண்மைகளை ஒரு சில காட்சிகளோடு அல்லது தகவல்களோடு கடந்திருக்கின்ற சயந்தன், இறுதி மோதல்களினை நோக்கிய பயணத்தின் தடத்தினை அழுத்தமான பதிவு செய்ய முனைந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டமொன்று ஏன் ஆரம்பித்தது, பெருவெற்றிக்கணக்கங்களை மக்களிடம் உணரச் செய்தது… ஒரு சில காலத்துக்குப் பிறகு கடுமையான தோல்வியை வழங்கி முடிந்து போனது. இதனையே, ஆதிரையில் வரும் நபர்கள் பிரதிபலிக்கின்றார்கள், பேசுகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மௌனித்து ஆமோதிக்கின்றார்கள். சரி பிழைகள், நியாயங்கள் அநியாயங்கள் என்று எல்லாவற்றையும் பேசுவதற்கு முயன்றிருக்கின்றார்கள். குறிப்பாக, அத்தார், சந்திரா ரீச்சர் பாத்திரங்களினூடு ஆரம்பத்திலிருந்தே அதனைக் கட்டமைத்து எடுத்துச் செல்வதில் சயந்தன் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றார். அதுபோல, ஆயுதப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள் கொடுத்த வலிக்கு அப்பாலும், அந்தப் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் தன்னுடைய கருத்தினை கவனமாக உட்செலுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களை யாழ்ப்பாணம் எடுத்துக் கொண்டாலும், அதன் பெருவெற்றிகளின் பங்களிப்பு என்பது வடக்கு- கிழக்கு மற்றும் வடக்கு- கிழக்கின் கலந்துவிட்ட மலையக மக்களின் பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட்டவை. அதற்கான ஒட்டுமொத்த உரிமையையும் ஒருதரப்பு கோர முடியாது என்பதையும் ஆதிரை பதிவு செய்திருக்கின்றது. அது, ஆயுதப் போராட்டத்தினை வெற்றிக்காரணிகள் சார்ந்து மாத்திரமே உணர்ந்து வைத்திருக்கின்ற பெருமளவான தமிழ் மக்களுக்கு படிப்பினை.

ஆயுதப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் மாத்திரம் சார்ந்தவை அல்ல. அதன் உள்விளைவுகளும், தொடர் விளைவுகளும் ஜீரணிக்க முடியாதவை. அதனை எதிர்கொள்வதற்கான திராணி தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு இல்லை என்பதையும் ‘ஆதிரை’ தன்னுடைய இறுதிப் பாகங்களில் பதிவு செய்திருக்கின்றது. ஒரு இலக்கியப் பிரதியாக ‘ஆதிரை’ வெற்றிகரமாக பக்கத்தில் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ, அதேயளவுக்கு அரசியல் உரையாடல் பதிவுகளாகவும் முக்கிய பங்காற்றியிருக்கின்றது என்று கொள்ள முடியும்.

‘ஆதிரை’யை எழுதிய சயந்தனின் ‘ஆறாவடு’ (2012இல் வெளியான நாவல்) வாசித்த கணத்தில் பெரும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. அந்த உணர்நிலை தொடர்பில் எனக்கு இன்றைக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில், ஆறாவடு மிகமிக அவசரமாக பொறுப்பற்ற தனங்களோடு எழுதப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஆயுதப் போராட்டமொன்று முடிந்து போன கணத்தில் பலருக்கு அது சார்ந்த கதைகளைக் கேட்பதற்கு பாரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தினை சந்தையாக்கும் முயற்சியில் சிலர் இலக்கியங்கள் என்கிற பெயரில் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் ‘ஆறாவடு’வினையும் பார்த்தேன். அது, இலக்கிய அடையாளத்தை நோக்கிப் பறக்கும் குஞ்சொன்றின் பிரதியாகவே இருந்தது.

ஆனால், ‘ஆதிரை’ அப்படியான எந்தவொரு எண்ணத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆறாவடு மூலம் சயந்தன் மீது ஏற்பட்டிருந்த கோபத்தினையும், எரிச்சலையும் ‘ஆதிரை’ துடைத்தெறிந்திருக்கின்றது. ‘ஆதிரை’ தமிழ் மக்களின் குற்றவுணர்சிகளிலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் போதும் அப்படியான மனநிலை தொற்றிக்கொள்கின்றது. சயந்தனும் அந்தக் குற்றவுணர்ச்சி மனநிலைக்குள்ளிலிருந்து தான் எழுதியிருக்கின்றார்.

எல்லாவற்றையும் விட ‘ஆதிரை’, லெட்சுமணனோடு ஆரம்பித்து, காவற்தெய்வம் ஆதிரையோடு முடிந்து போவதுதான் அதன் அழகியலையும், அர்ப்பணிப்பையும், ஏன் நியாயத்தையும் கூட உணர்த்தி நிற்கின்றது.

By

Read More

× Close