ராஜ சுந்தர ராஜன்

“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்.

இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும், ‘புலி’ ஆதிரை பற்றிக் கூறும் இறுதி அத்தியாயமும் துண்ண்டாக நின்று, வியக்கத்தக்க வகையில், நாவலுக்கு ஒரு முழுமையைக் கொண்டுதருகின்றன.

பாம்புக்கடி பட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோய், பாதிவழியில், இருட்டுக்குள், பிணமாகச் சுமந்துவரும் தேவமலர் பாத்திரப் படைப்பு போதும், ‘நூலாசிரியர்’ சயந்தனின் திறமையைப் பறைசாற்ற.

தமிழினத்தை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட போரில் போராடிச் செத்தவர்கள் எல்லாரும் ஏழைகள், கீழ்ச்சாதியினர் எனவும்; பணமும் யாழ்ப்பாணமும் தப்பித்துக்கொண்டன என்றும் கோடிகாட்டுகிறது “ஆதிரை”யின் கருத்தாக்கம். புலிகளின் தோல்வியோடு நாவல் முடிந்தாலும் புலிகள் சாகும்வரை போராடியதைச் சுட்டி ஒரு நேர்முறைக் குறிப்போடு முடிகிறது.

By

Read More

கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின் மியூசியம் கதையின் குறியீடைப் பெற்று விடுகிறது. எல்லாச் சம்பவங்களையும் தொகுத்து குட்டிமணி முதல் முள்ளிவாய்க்கால் வரை உதிரம் தோய்ந்த காகிதமடிப்புகளை வரைபடங்களாக வெட்டி ஒட்டும் குலாஜி ஓவியகங்களாக சில நூறு பக்கங்கள் இந்த நாவலை தகவல் நாடாக மாற்றியிருக்கிறது. இந்த தகவல் நாட்டிலிருந்தே கத்தரிக்கப்பட்ட செய்திகளை மற்ற எழுத்தாளர்களின் கண்களுக்குத் தப்பிவிடும் விடுபடல்களையும் சேகரித்திருக்கிறது. நிலப்பரப்பின் தனி மொழியாக மலையக இருப்பின் புராதான இருட்டில் தங்கம்மை, சிங்கமலை, வள்ளியாள், அலைக்கழிந்த வெள்ளையன், லட்சுமணன், விநோதினி இயக்க உறுப்பினர்களாக நாவலின் ஊடே அலைந்து மறைந்து திரிகிறார்கள். ஆனால் பேச்சி தோட்டத்திற்கு அப்பால் எட்டு ஏக்கர் மேட்டு நிலத்திற்கு அப்பாலிருந்து நாவலின் ஊடாக நெளிந்து வரும் விஷம் சுமந்த சர்ப்பம் வாலில் விசும்பி நின்று படம் விரி கோலத்தில் ரசவாதியாகிவிடும் படைப்பாளியைப் பார்க்கிறது. அவன் சாட்சியமாகவே ஆதிரையை விழுங்குகிறது. அவன் சைக்கிள் மீது சாய்கிறாள். பொழுது இருண்டு போகிறது. நாவலின் துக்கம் கனவுப் பாம்பிலிருந்து ஆதிரையை உமிழ்கிறது. வெளிச்சம் வருகிறது. சிறிது சிறிதாக வருகிறது. பின்னே வரும் பக்கங்களையும் ஆதிரையின் சிறிய வெளிச்சத்தில் யாரோ வாசிக்கிறார்கள். மொழி நிழல்கள் காட்டின் உயிர்சுடரில் ஆடி புனைவுப் பாம்பு சயந்தனின் எழுதும் விரலை வலுவாகக் கவ்விக் கொள்கிறது. படைப்பில் விஷத்தை படைப்பாளி கையாள வேண்டிய தருணம் வருகிறது. கணம் தவறினாலும் அவனைக் கொன்று விடும் என்கிறார் காருகி முராகாமி. புனைவாளன் விஷத்தை பளிங்காக மாற்றுகிறான். நீலம் பாதித்த அத்தியாயங்களை வாசிக்கும் போது வாசகனும் சில பக்கங்களில் நீல சரீரமாகிவிடுகிறான். இந்தப் புனைவுப் பாம்பு தீண்டியது மிகச் சிலவே ஆயினும் குறிஞ்சி நிலத்தின் நரம்பறிந்த விரல்களாய் எழுதும் விரல்கள் இருப்பதில் யார் கை மூலம் என்பதை விட சயந்தன் விரல்களால் எழுதப்பட்ட ஆதிரை கழிவிரக்கத்தையும் கையறு நிலையையும் சம்பவங்களூடே கடந்து செல்வதற்குரிய உத்தியாக நான் நினைக்கவில்லை. மலையக இரவுகளும் வன்னிப் பெருநில ஊர்களும் சுன்ணாம்பு வளையத்தில் உள்ள சிறு சிறு தீவுகளும் ஒரே நிலமாக இருப்பதில்லை. எட்டு எக்கர்களாக மணற்பாம்புகளோடு ஊழி நடனத்தில் மண்மாரி வீசியது. ஆறாவடுவில் சயந்தினின் புனவுகள் நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் மூழ்கி நகர்வதாகும்.

கடலும் கடல் சார்ந்த உலகமும் கடலுக்கு அப்பால் இருக்கும் உலகமும் எக்கர்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் எட்டு ஏக்கரில் எதார்த்தவாத வாழ்வியல் பரப்பும் விவசாயமும் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்கு இடம் பெயர்வதும் கடலைத் தாண்டாத சமூக அக்கரை சார்ந்த நாவலாக உருமாற்றிக் கொள்கிறது. எட்டேக்கர் x எட்டு எக்கர் புனைவில் பிளக்கும் இடைவெளிகளை எழுதிச் செல்வதற்கான பக்கங்கள் முன் கூட்டியே அறியப் பட்ட பக்கங்களை கோரி நிற்பதில்லை. புனைவின் நிகழ்கணம் தான் நவீன நாவலின் உயிர்நாடி. ஆனால் அதே வேளை குடும்பங்களின் எளிய வாழ்விலிருந்து ஆயிரம் துகள் துகல்ளான கீற்றுகள் இந்த நாவலின் வசீகரமான பக்கங்கள். அமிலப் பசியே உன்னை கவனிக்கப் போவதில்லை என்று தாயார் மகளைப் பார்க்க மலை மலையாக இறங்கிப் போகிறாள். அது ஒருபக்கம் இருக்க, குடும்பக் கதைகளுக்கு மேல் ஊழிக்காலத்துடன் தன்னை சயந்தன் கை மூலம் எழுதிக் கொள்கிறது எக்கர் ஞாழல். தனுஷ்கோடியிலிருந்து ஆதிரையில் வரும் ஒரு சில பக்கங்கள் இராமேஸ்வரம் தனுஷ்கோடி என்று குறிப்பிடுவதில் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்லவே.

By

Read More

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்…

நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு துரத்தப்படுறாங்க. இது எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் மனதை கொல்லுகிற விஷயம்தானே. சக போராளிகளா இருந்த வெள்ளையன் கண்ணிவெடிகளை அகற்றி வாழ்க்கையை தொடர, இனிதனை புலம்பெயர வைக்க 40 லட்சங்களை தயார் செய்ய ஒரு குடும்பமே இருக்கிறது. Traumatizing

இப்போது வந்த வெள்ளத்தப்போ டிவியில யாரோ ஒரு மிடில் க்லாஸ் புண்ணியவதி ‘நாளு நாளா யாருமே இந்த பக்கம் வரல. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறோம்’ அப்படின்னு சொன்னுச்சு. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமான்னே தெரியல. சினிமாவுல எல்லாம் தமிழீழ ஆதரவுன்னு ஒரிரு காட்சிகள் வைத்து எவ்வளவு அசிங்கப்படுத்திட்டோம். எல்லாத்தையும் செய்தியா, புள்ளிவிவரமா பாக்குற இரக்கமற்றதனம் தான் மிஞ்சியிருக்கு. Cleansing and counter cleansing –என்னால எந்த பக்கத்து வன்முறையையுமே புரிஞ்சுக்க முடியல. கிட்டதட்ட அதுல வர சந்திரா மாதிரிதான் என் மனநிலையிருக்கு.

By

Read More

ஹரி ராசலெட்சுமி

கதாபாத்திரங்களுக்கிடையே இருக்கக்கூடிய பிக்கல் பிணக்குகள், பிரதேச/வர்க்க/சாதிய/பாலின வேறுபாடுகள் பற்றிய கரிசனையின்றித் தன்பாட்டில் நகர்கிற காலத்தைப் பற்றிய உணர்வை, திகதியிடல் ஏற்படுத்திவிடுகிறது. தனியன்களை மீறிய கால உணர்வை (sense of time) நாம் ஊகித்துக் கொண்டுவிடுகிறோம். நம்மால் ஊகிக்கமுடிகிற, ஆனால் கதாபாத்திரங்கள் புரிந்துகொள்ள சிரமப்படும் இதுவே தேசத்தின் காலம். தனிப்பட்ட மனிதர்களின், பாலினங்களின், சாதிகளின், குழுக்களின் கால உணர்வு படிப்படியாக தேசிய காலத்துக்குள் உள்ளெடுக்கப்படுகிறது. சயந்தனின் கதாபாத்திரங்கள் வேறு வேறு வித்தியாசங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழர்களாக இறந்து போவதன் அடிப்படை இந்த கால-ஒருங்கிணைப்பு சார்ந்த ஒன்று. காலத்தைக் குலைத்துப்போடும் நொன் லீனியர் உத்திகள் `ஆதிரை`க்குத் தேவைப்படாதிருப்பதும் இக் கால-ஒருங்கிணைப்பின் பாற்பட்ட ஒன்றுதான். இல்லை. 1977இல் ஆரம்பித்து, 2013இல் முடிகிற மூன்றரை தசாப்தங்களை, மலையகம், வட/கிழக்கு இலங்கை, தலைநகரம் கொழும்பு, லண்டன் என்று பல்வேறு நிலப்பரப்புகளில் விநியோகித்து, இணைத்துப்போடுகிற நாவலின் கால ஒழுங்கின் கிரகிக்க முடிகிற தன்மையை சயந்தன் உறுதிசெய்தாகவேண்டியிருக்கிறது. காரண-காரியத் தொடர்பாலும், இடையறாத பரவலாக்கத்தாலும் இறுதியில் இக்கால ஒழுங்கு சகலருக்குமானதாகி விடுகின்றது. பண்பு-உடலங்கள் எல்லோரும் இப்போது தமிழர்கள்.

3/இனத்துவ தேசியத்துக்கான தன்னிலைகள்

இனத்துவ தேசியத்தின் அசாத்தியம் வன்முறையாக கற்பிக்கப்பட்ட பின்னர் குடிமைசார் தேசியத்தைத் தேர்ந்து முன்வைப்பது தமிழ் அரசியலின் தற்போதைய பொதுப் போக்காக இருக்கிறது. ஆனால், இனத்துவம் என்ற சடலத்தை, அதன் நினைவை என்ன செய்வது? கைவிடுதலும் நகரலும் அரசியலுக்குச் சாத்தியம். ஆனால், இலக்கியத்துக்கு? தவிர்க்க முடியாமல் காலில் இடறும் சடலத்தின் உடலில் இனத்துவ, குடிமைப்பண்புகளை, மானுடத்தை ஏற்றி வாசிக்க முயல்கிறது `ஆதிரை`. கழிவிரக்கம் தாங்க முடியவில்லை. போராட்டத்தையும் அதன் தார்மீகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரு ideal figureஐச் சடலத்தினின்றும் செதுக்கி எடுத்து, அதி சிறந்த இனத்துவத் தன்னிலை எதுவாக இருக்கமுடியும் என்பதை, ஒரு தொகை சாம்பிள் தன்னிலைகளை விநியோகித்து, அவற்றின் சாய்வுகளை நிர்வகிப்பதன் மூலம் நிகழ்த்திக்காட்ட `ஆதிரை` பக்கம் தோறும் முயல்கிறது.

லட்சுமணன் சிங்கமலைக்கு மலையகம் பிறப்பிடம். இயக்க உறுப்பினனாகி இப்போது பிடிபட்டிருக்கிறான். சிங்களம் பேசவருகிறது, சிங்கள உணவு உண்கிறான், சிங்களக் கிழவியின் வீட்டில் வாடகைக்கு வசிக்கிறான். `தூயதமிழ் பேசுகிற` நிலாம்தீனும், ‘நிலாம்தீனைப்போலவே ’தூயதமிழ்` பேசுகிற இன்னொருவனும், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து லட்சுமணனைச் சித்திரவதை செய்கிறார்கள். `தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?` என்று இந்த முஸ்லிம்களிடம் வசவுவாங்குகிறான். `எங்கள் சனங்களின் கண்ணீர் உன்னைச் சும்மா விடாது` என முஸ்லிம் சித்திரவதையாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள். விசாரணையின் போது நிர்வாணமாக்கப்பட்ட “தமிழர்களின் சாமான்” எள்ளிநகையாடப்படுகிறது. லட்சுமணனை வாடகைக்கு வைத்திருந்த சிங்களக் கிழவியை, சிங்களச் சிப்பாயொருவன் துன்புறுத்துகிறான்; துரோகியென்று சிங்களத்தில் வசைகிறான்.

நாவல் கதாபாத்திரங்களாக அன்றி, கணித்து அடுக்கப்பட்ட சதுரங்க ஏற்பாடுகளாக சிங்கள, முஸ்லிம், தமிழ், மலையக அடையாளங்கள் வந்து போகும் இந்த முதலாவது அத்தியாயம் லெட்சுமணன் சிங்கமலையை அறிமுகம் செய்கிறது. `வீடற்றவனின்` (சி.வி. வேலுப்பிள்ளை) கருத்துருவக விஸ்தரிப்பாக ‘நாடற்றவன்’ என்று சயந்தன் இந்த அத்தியாயத்துக்குத் தலைப்பிடுகிறார். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் `பாதிக்கப்பட்டோர்` அந்தஸ்து, இயக்க உறுப்பினர் வகைமாதிரி, துரோகி கதையாடல் பற்றிய பொது மனச்சித்திரங்களைக் குழப்பியடித்தபடி ஆரம்பிக்கிறது நாவல். `தோட்டக்காட்டான்` ஒருத்தன் விடுதலை இயக்கப் போராளியாயிருக்கிறான். அவன் தட்டையான `தமிழன்` அல்ல. சிங்களவருடன் அன்பு பாராட்ட வல்ல, ஆனால் வேற்றுமையின் ஆழம் அறிந்த ஒருத்தன். `எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்` என்று பிரபாகரன் மட்டும் சொல்லவில்லை. சிங்களச் சிப்பாய், சிங்களக் கிழவியை நோக்கி சொல்வதும் இதைத்தான். நீங்கள் நாவலோடு நகரவேண்டுமானால், புலிகள் இயக்கம் குறித்த அறிவுச்சூழலின் பொதுப்புத்தியை ஒத்திப் போட்டாக வேண்டும்.

முன் கதைக்கு பின்னரான நாவலின் தொடக்கம், லட்சுமணின் 7/8 வயதுக்கு எங்களை அழைத்துச் செல்கிறது. குறிப்பாக, மலையகம், 1977. லட்சுமணனும், 12 வயதான சகோதரி வல்லியாளும், அவர்களது தகப்பன் சிங்கமலையும் இனவெறித் தாக்குதலுக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய லயம் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றது. மனைவியையும், வீட்டையும் இழந்து மலையகத்தமிழரின் உருவாய் நிற்கும் தகப்பன் சிங்கமலை, ’நாடற்ற, அப்பன் இல்லாத பேடி’யென அவமானப் படுத்தப்படுகிறான். அவனுக்கு தன் மூதாதையரின் மொழி (வடுகு) மறந்துபோய்விட்டிருக்கிறது. ஏதிலிகளாக மலையகத்தை விட்டுநீங்கி, முல்லைத்தீவு காட்டுப்புலவில் குடியேறுகிறார்கள். ’பாட்டன், பூட்டன் பூமி’ (இந்தியா) ‘அப்பன் பூமி’ (மலைத்தேசம்) இரண்டில் எதையுமே எட்டமுடியாத, லட்சுமணனின் அப்பாவித்தனத்துடன் காட்டையும் அது சார்ந்த ’தமிழ்ச்சனங்களையும்` அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். தந்தை நிலம் தவறிப் போக வன்னிக்காடு தாய் நிலமாகிவிடுகிறது. பிரஜாவுரிமையற்ற கூலித்தொழிலாளர்களின் பின்புலம், சமகாலம் பற்றியெல்லாம் நாவல் விஸ்தரிக்கப்போவதில்லை, மாறாக எரிகிற லயத்திலிருந்து சில கொள்ளிகளையும், ஒரு கருத்துருவகத்தையும், சில ஏதிலிகளையும் காவிக்கொண்டு வன்னிக்குள் வந்துவிடுகிறது.

முன்னாள் கம்யூனிஸ்ட் அத்தார், வேட்டைக்காரன் சங்கிலி என்று இரு முக்கிய பாத்திரங்களை அடுத்துச் சந்திக்கிறோம். வெள்ளாள முதலாளி ஒருத்தரின் மகளைக் (சந்திரா) காதலித்து மணம் செய்த அத்தார், யாழ்ப்பாணத்தின் சாதிய/வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பிடிக்காமல் இங்கு வந்து குடியேறியவன். சங்கிலிக்கு காடு பரம்பரைக் கொடுப்பினை. அதைவிட்டு வெளியேறியதில்லை அவன். அத்தார் நாடு, சங்கிலி காடு. இந்த இரு பாத்திரங்களும் லட்சுமணனுக்கு இடையறாது பாடமெடுக்கிறார்கள். இருவருக்குமிடையான கூட்டிணைப்பில் லட்சுமணன் சமூகவயப்படுகிறான். ஆண்மைய, தந்தைமுதல்வாத நேர்கோட்டில் மதிநுட்பம் கடத்தப்படுகிறது. “நான் பதினொண்டில அப்பூப்பனோட காட்டுக்கு இறங்கீட்டன். காடும் எனக்கொரு உலகமாகி இருவத்திரண்டு வரிசமாகுது. இன்னும் பத்து வரிசத்தில [மகன்] இறங்கிடுவான்.“ என்று சங்கிலி சொல்கிறபோது, அவன் `கண்கள் இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலுமாக` நுழைந்து வெளியேறுகின்றன.

இவர்களுடன் சுற்றும் பதின்மூன்று வயது லட்சுமணன் குதூகலிக்கிறான். ‘காடு பெரியது’ என்று பிரமிக்கிறான்.

மீண்டும் சங்கிலி: “காட்டை நம்பின ஒருவன் அதிட மடியில கால்வைச்சானென்டா, காடு ஒரு தாயைப் போலத்தான் அவனை அரவணைக்கும். நீ காட்டின்ர பெறாமகன். தாயைக்கண் கொண்டு பார்க்காமல் மனசாலயும் உணரலாம்.”

”காட்டின்ர பிள்ளைகளை சிங்கம் தின்னப்போகுது” அத்தார் சலித்துக்கொண்டான். மறைபொருளில் வார்த்தைகள் எரிச்சலடைந்திருந்தன.

….

”சிங்கமும் காட்டின்ர குழந்தைதான்”

“சிங்கம் இங்கின இருக்குதா?” லட்சுமணன் வியப்போடு திருப்பிக் கேட்டான்.

“சிங்கம் இல்லை. சிறுத்தையள்தான் இருக்கு.” என்றான் அத்தார். வார்த்தைகளில் ஏதோ ஒரு பெருமை.

இந்தரக உரையாடல்களைக் கேட்டுக்கொண்டு லெட்சுமணன், கைகளைப் பருந்துபோல விரித்துக்கொண்டு ‘ஊஊ’ எனச்சப்தமிட்டபடி ஓடுகிறான். காட்டின் பிரமாண்டத்துக்குள் உடல் புதுவிதமாக மாற்றமடைகிறது. பிரமையுறுகிறான். கண்களைச் சொருகி அதை ஆழ அனுபவிக்கிறான். நிலைகொள்ளாத பெருமிதம். திடீரெனப் பெரியமனிதனாகிவிட்டேன் என்று பூரிக்கிறான். காடு அவனுக்கு பெண்ணுடலையும், பெண்மையையும் நினைவூட்டுகிறது; கிறக்கம் தருகிறது. காடு = தாய்(பெண்) என்பதைப் போலவே, ’மிருகக் கூட்டங்களை வழிநடாத்துறது எப்பவுமே தாய் உயிர்தான், தாய்தான் எல்லாம்’ என்றும் அவனுக்குச் சொல்லித்தரப்படுகிறது. எப்படித்தான் வழிநடாத்தினாலும் `சிலதுகள் தனித்துப் போகும்` என்பதும் சொல்லித்தரப்படுகிறது.

லெட்சுமணனுக்கு வல்லியாள் என்றொரு சகோதரி இருக்கிறாள் என்பது தகவல். இந்தப்பக்கங்களிலோ வல்லியாள் பற்றி பெரிதாக எதையும் நாம் காண்பதில்லை. லட்சுமணனையே நாங்கள் தொடர்கிறோம். அவனை சந்திரா-அத்தார் தம்பதியினர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். வல்லியாளோ ’மலையகத்தான்’ சிங்கமலையுடன் தங்கிவிடுகிறாள். இரண்டாவது அத்தியாய முடிவில் வல்லியாள் திடுதிப்பென எட்டிபார்க்கிறாள்:

சிங்கமலை நிலத்துக்கு எல்லைகள் இட்டான். குடிசைபோட்டான். ,,, கூரை வேய்ந்தான். அடுப்புக் கட்டினான்.

அன்றிலிருந்து நான்காவது மாதத்தில் வல்லியாள் பெரியவளானாள். (பக் 38).

அத்தியாயம் சட்டென்று முடிந்து விடுகிறது.

இன்னும் இரண்டு பக்கங்கள் கழித்து, பக்.41இல் பரமக்குடியைப் பூர்வீகம் கொண்ட கணபதியைச் சந்திக்கிறோம். திடுதிப்பென்று இவனுக்கும் வல்லியாளுக்கும் அதேபக்கத்திலேயே திருமணமாகிவிடுகிறது. லெட்சுமணனுக்கு வாய்த்ததைப் போன்ற தமிழாக்கமோ, அதுசார்ந்த அரசியலுணர்வோ வல்லியாளுக்குக் கிட்டுவதில்லை. அவளின் பிள்ளைகள் வந்து அவர்கள்தான் இயக்கத்தில் இணைகிறார்கள். லெட்சுமணன் இப்படியில்லை, அவன் fast-track தமிழ்வயப்படுகிறான். சந்திராவை அம்மா என்று அழைக்கிற லெட்சுமணன், அத்தாரை அப்பா என்றழைப்பதில்லை வைத்திருக்கிறான் (இது குறித்துத் தகப்பன் சிங்கமலைக்கு ஒரு இரகசியப் புளகாங்கிதம்). தகப்பன் பூமி, தாய் நிலம் போன்ற உணர்வூட்டங்கள் நெருக்கமான உறவுகளால் பெறுமானப்படுத்தப் படுகின்றன. லெட்சுமணன் வளர்கிறான். காட்டுப்புலவுக்குள் சிங்களச் சிறைக்கைதிகளை குடியேற்றும் முயற்சியும், அதற்கெதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பும் தொடங்குகின்றன.

By

Read More

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி.

வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை சுடுமணல் பரப்பையும் தாண்டிக் குதித்தோட முடியாது. அங்கு நின்று நிதானித்துப் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அனுபவமும், படிப்பினையும், எதிர்காலத்துக்கான ஓர்மமும், ஏன், நீதியும் கூட அங்குண்டு. ஆயுதப் போராட்டத்தின் பெரும் வெற்றிகளும், (இறுதித்) தோல்வியும் கூட வன்னிப் பெருநிலத்துள்ளேயே நிகழ்ந்து முடிந்தது.

வன்னிப் பெருநிலத்தோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் வாழ்வோடும், புதிய பிறப்புக்களோடும், ஜீரணிக்க முடியாத இறப்புக்களோடும்…. ஒருசில பிழைத்திருத்தல்களோடும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அதன் தொடர் விளைவுகளையும் பேசியிருக்கின்றது சயந்தனின் ‘ஆதிரை’.

வன்னிப் காடுகளுக்குள் உறங்கும் ஆயிரமாயிரம் உண்மைகள் போலயே ஆயுதப் போராட்டத்தின் பக்கங்களை யாராலும் முழுமையாக பேசிவிட முடியாது. ஆனாலும், அங்கு வாழ்ந்தவர்களின் ஒவ்வொரு நாளும், அனுபவமும் புதிய உண்மைகளை இந்த உலகத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவை. அவை, பெரும்படிப்பினைகள். அப்படியானதொரு, முயற்சியின் பக்கத்திலிருந்து புனைவொன்றை எழுதுவதற்கான பொறுப்பினையும், உழைப்பினையும் சயந்தன் ‘ஆதிரை’யை எழுதி முடிப்பதற்கு செலவிட்டிருக்கின்றார். அது, பெரும் உழைப்பினை சலிக்காமல் கோரும் ஒன்றாகவும் இருந்திருக்கும். அதனை வாசித்து முடிக்கின்ற போது அதனை உணர முடிகின்றது.

வன்னிக் காடுகளின் வெம்மையையும், குளிரையும் மாத்திரமின்றி அத்தார், சந்திரா ரீச்சர், மலர் அக்கா, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், விநோதினி, சாரகன், ஒளிநிலா, இசைநிலா…. இன்னும் இன்னும் பலரின் வாழ்வோட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களினூடும் ஆயுதப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் ‘ஆதிரை’ கடக்க முயன்றிருக்கின்றது. நாம் எல்லோருமே அறிந்த பல கதைகளை அல்லது உண்மைகளை ஒரு சில காட்சிகளோடு அல்லது தகவல்களோடு கடந்திருக்கின்ற சயந்தன், இறுதி மோதல்களினை நோக்கிய பயணத்தின் தடத்தினை அழுத்தமான பதிவு செய்ய முனைந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டமொன்று ஏன் ஆரம்பித்தது, பெருவெற்றிக்கணக்கங்களை மக்களிடம் உணரச் செய்தது… ஒரு சில காலத்துக்குப் பிறகு கடுமையான தோல்வியை வழங்கி முடிந்து போனது. இதனையே, ஆதிரையில் வரும் நபர்கள் பிரதிபலிக்கின்றார்கள், பேசுகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மௌனித்து ஆமோதிக்கின்றார்கள். சரி பிழைகள், நியாயங்கள் அநியாயங்கள் என்று எல்லாவற்றையும் பேசுவதற்கு முயன்றிருக்கின்றார்கள். குறிப்பாக, அத்தார், சந்திரா ரீச்சர் பாத்திரங்களினூடு ஆரம்பத்திலிருந்தே அதனைக் கட்டமைத்து எடுத்துச் செல்வதில் சயந்தன் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றார். அதுபோல, ஆயுதப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள் கொடுத்த வலிக்கு அப்பாலும், அந்தப் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் தன்னுடைய கருத்தினை கவனமாக உட்செலுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களை யாழ்ப்பாணம் எடுத்துக் கொண்டாலும், அதன் பெருவெற்றிகளின் பங்களிப்பு என்பது வடக்கு- கிழக்கு மற்றும் வடக்கு- கிழக்கின் கலந்துவிட்ட மலையக மக்களின் பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட்டவை. அதற்கான ஒட்டுமொத்த உரிமையையும் ஒருதரப்பு கோர முடியாது என்பதையும் ஆதிரை பதிவு செய்திருக்கின்றது. அது, ஆயுதப் போராட்டத்தினை வெற்றிக்காரணிகள் சார்ந்து மாத்திரமே உணர்ந்து வைத்திருக்கின்ற பெருமளவான தமிழ் மக்களுக்கு படிப்பினை.

ஆயுதப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் மாத்திரம் சார்ந்தவை அல்ல. அதன் உள்விளைவுகளும், தொடர் விளைவுகளும் ஜீரணிக்க முடியாதவை. அதனை எதிர்கொள்வதற்கான திராணி தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு இல்லை என்பதையும் ‘ஆதிரை’ தன்னுடைய இறுதிப் பாகங்களில் பதிவு செய்திருக்கின்றது. ஒரு இலக்கியப் பிரதியாக ‘ஆதிரை’ வெற்றிகரமாக பக்கத்தில் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ, அதேயளவுக்கு அரசியல் உரையாடல் பதிவுகளாகவும் முக்கிய பங்காற்றியிருக்கின்றது என்று கொள்ள முடியும்.

‘ஆதிரை’யை எழுதிய சயந்தனின் ‘ஆறாவடு’ (2012இல் வெளியான நாவல்) வாசித்த கணத்தில் பெரும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. அந்த உணர்நிலை தொடர்பில் எனக்கு இன்றைக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில், ஆறாவடு மிகமிக அவசரமாக பொறுப்பற்ற தனங்களோடு எழுதப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஆயுதப் போராட்டமொன்று முடிந்து போன கணத்தில் பலருக்கு அது சார்ந்த கதைகளைக் கேட்பதற்கு பாரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தினை சந்தையாக்கும் முயற்சியில் சிலர் இலக்கியங்கள் என்கிற பெயரில் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் ‘ஆறாவடு’வினையும் பார்த்தேன். அது, இலக்கிய அடையாளத்தை நோக்கிப் பறக்கும் குஞ்சொன்றின் பிரதியாகவே இருந்தது.

ஆனால், ‘ஆதிரை’ அப்படியான எந்தவொரு எண்ணத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆறாவடு மூலம் சயந்தன் மீது ஏற்பட்டிருந்த கோபத்தினையும், எரிச்சலையும் ‘ஆதிரை’ துடைத்தெறிந்திருக்கின்றது. ‘ஆதிரை’ தமிழ் மக்களின் குற்றவுணர்சிகளிலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் போதும் அப்படியான மனநிலை தொற்றிக்கொள்கின்றது. சயந்தனும் அந்தக் குற்றவுணர்ச்சி மனநிலைக்குள்ளிலிருந்து தான் எழுதியிருக்கின்றார்.

எல்லாவற்றையும் விட ‘ஆதிரை’, லெட்சுமணனோடு ஆரம்பித்து, காவற்தெய்வம் ஆதிரையோடு முடிந்து போவதுதான் அதன் அழகியலையும், அர்ப்பணிப்பையும், ஏன் நியாயத்தையும் கூட உணர்த்தி நிற்கின்றது.

By

Read More

× Close