றேடியோக்களின் கதை

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’

‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’

‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’

‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’

இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு.

தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க வேணும். அப்ப தான் ஈசல் கணக்கில கொழும்பில தனியார் வானொலிகள் வரத் தொடங்கினது.

யாழ்ப்பாணத்தில இருக்கும் பொழுது இலங்கை வர்த்தக வானொலி கேட்பம். லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு மீராவின் இசையும் கதையும் இப்பிடி நிறைய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பம். ஆனாலும் ஒலித்துல்லியம் பெரிய அளவில் இருக்காது. இலங்கை வர்த்தக வானொலியை விட தூத்துக்குடி வானொலி நல்ல கிளியர். இரவில எட்டே முக்காலுக்கு மூண்டு பாட்டுப் போடுவினம். கொஞ்சம் புதுப்பாட்டுகள் கேட்க வேணும் எண்ட ஆசையை இந்த வானொலிகள் தான் தீர்த்து வைச்சதுகள்.

ஆரம்பத்தில இரவு ஒரு மணித்தியாலத்துக்கு புலிகளின் குரல் ஒலிபரப்பானது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பான இந்த வானொலியில் இலங்கை மண் எண்டொரு நாடகம் போனது. பொன்.கணேசமூர்த்தி எழுதியிருந்தவர். தொடர்ந்து ஒரு வருசம் போன இந்த நாடகத்தை நான் தொடர்ந்து கேட்டன்.

இராவணன் கதையை மையப்படுத்தி இந்த நாடகம் இருந்தது.

தளிர்கள் எண்டொரு சிறுவர் நிகழ்ச்சி புலிகளின்குரலில போனது. அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமலும், அதே நேரம் வயதானவர்கள் கலந்து கொள்ளுற வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமலும் ரண்டும் கெட்டான் வயசில நான் இருக்கிறனே என்று அப்ப எனக்கு கவலையாயிருக்கும்.

புலிகளின் குரலும் தொடர்ந்த ஒலித்தரத்தில் வராது. அன்ரனாக்கு வயர்கள் கட்டி அதைக் கூரையில் கட்டி அப்பிடி இப்பிடித்தான் அந்த வானொலியைக் கேட்பம். (இப்ப செயற்கைக் கோளுக்காலை புலிகளின் குரலை உலகமெங்கும் கேட்ககூடியதாக இருக்கிறதென்பதை நினைக்க சந்தோசமாயிருக்கிறது.)

பிறகு கொழும்பில வந்தாப் பிறகு யாழ்ப்பாணத்தில கேட்ட வர்த்தக வானொலியும் கேட்கிறதில்லை.

ஒரு கொஞ்சக் காலத்துக்குத் தான்.

பிறகு ஒண்டின் பின் ஒண்டாக வரத்தொடங்கின வானொலிகள். முதலில வந்தது சூரியன் FM. அது வரைக்கும் வானொலிகளில இலக்கணச் சுத்தமாக கதைக்கிறதை கேட்டு வந்த எனக்கு சாதாராண பேச்சு வழக்கில வானொலி கேட்க முடிந்தவுடன ஒரு ஆச்சரியமாயிருந்தது.

அந்த நேரம் இந்த வானொலிகள் தமிழைக் கொலை செய்யப்போகின்றன என்றெல்லாம் கதை வந்திச்சு.

எண்டாலும் சூரியன் FM வந்த பிறகு தான் எனக்கு புதுப் பாட்டுகள் எல்லாம் அறிமுகமானது. CD வேண்டித்தான் பாட்டு கேட்க வேணுமெண்ட தேவையே இல்லாமல் போயிட்டுது.

இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்.

தொலைபேசியில வானொலியோடை பேசி அதை நேரடியாக கேட்கிறதை அந்த வானொலிதான் இலங்கையில அறிமுகப்படுத்தினது. தபால் அட்டையளை அனுப்பிப் போட்டு வருமோ வராதோ எண்டு பாத்தக்கொண்டிருந்த சனத்துக்கு இந்த சிஸ்ரம் பிடிச்சிருக்க வேணும்.

எனக்கும் ஆரம்பத்தில அப்படியான நிகழ்ச்சிகளை கேட்கிறது ஆர்வமாத்தான் இருந்தது. ஆனா கடைசிக்காலத்தில எப்ப பார்த்தாலும் ‘ஹலோ யார் பேசுறது. என்ன பாட்டு வேணும். யார் யாருக்காக வேணும்’ எண்டு ஒரே இதையே கேட்க வேண்டியிருந்ததாலை புளிச்சு போட்டுது எனக்கு.

இப்பிடி இருக்கேக்கை சக்தி FM எண்டொரு வானொலி வந்திச்சு. எண்டாலும் அது ஆரம்பத்தில தூய தமிழ் பேசித்தான் நிகழ்ச்சிகள் செய்தது. பிறகு போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமலாக்கும் அதுகும் சாதாரண பேச்சு வழக்கில் தொடங்கிச்சு!

அந்த வானொலி வந்த பிறகு தான் ஒரு சூடு பிடிச்சிது. அந்த நேரத்தில வானொலி அறிவிப்பாளர்களுக்கு இலங்கையில ஒரு நட்சத்திர அந்தஸ்து இருந்தது.

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி’ எண்டு ரஜினி எதுக்கு சொன்னாரோ தெரியேல்ல.. ஆனா சூரியன் அதை அடிக்கடி போடும். எனக்கெண்டா அது ஒரு நாகரீகமில்லாத செயலாத்தான் கிடக்கு.

இதுக்கிடையில ஏற்கனவே அனுங்கிக்கொண்டிருந்த பெரிய கவனிப்பு இல்லாத கலையொலி எண்ட ஒரு வானொலி சுவர்ண ஒலி எண்ட பெயரில பெயர் மாறி கை மாறி தாம் தூம் எண்டு வந்திச்சு.

சிங்கப்பூரிலிருந்து மாலினி எண்டொருவவை அறிவிப்பாளரா கூட்டி வந்தவை. சும்மா கட கட எண்டு கதைக்கிற அவவின்ரை அழகே தனிதான்.

நிறையப் பரிசுகளும் அள்ளி அள்ளி கொடுத்தவை. இளசுகளை மட்டுமே குறிவைச்சு இயங்கினாலும் ஏனோ அவையாள நிண்டு பிடிக்க முடியேல்லை. கொஞ்ச நாளில மீண்டும் புதுப்பொலிவுடன் வருவம் எண்டு நிப்பாட்டினவை தான்.. அவ்வளவும் தான்.

சக்தி வானொலி தாங்கள் தான் தமிழ் வளக்கிறம் எண்டு அடிக்கடி சொல்லும். எனக்கு உண்மையாக் கோபம் வரும். தமிழ் வளக்கிறது எண்டுறது சும்மா தமிழில வணக்கம் சொல்ல வற்புறுத்தவது இல்லை. அல்லது தமிழில கதைக்கிறது மட்டுமில்லை. தமிழோடு இணைஞ்ச இனத்தின் அரசியல் பண்பாடு பொருளாதாரம் அறிவியல் இதெல்லாத்திலையும் முன்னேறுவதற்கான வழி வகைகளைச் செய்யுறது தான்.

இதொண்டையும் செய்யாமல் நாங்கள் தான் தமிழ்க்காவலர்கள் எண்டு யார் சொன்னாலும் எனக்கு கோவம் வருகுது.

செய்திகளைப் பொறுத்த வரை சூரியன் தேடல் மிக்க செய்தியாளர்களை கொண்டிருந்தது. தணிக்கை நடைமுறையிலிருந்த போது அதன் செய்திகளை எல்லோரும் கேட்க விரும்பிச்சினம். (யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் நிமலராஜன் சூரியனின் செய்தியாளராகவும் இருந்தார்.)

மற்றும் படி அந்த ரண்டு ரேடியோவுக்கும் யார் NO.1 என்ற போட்டி இருந்தது. ஒரு பாட்டை போட்டு விட்டு அதை நாங்கள் தான் முதலில போட்டம் எண்டு அவர்கள் அடிபடுறது சின்னப்பிள்ளைகள் அடிபடுறது போல இருக்கும்.

பாட்டுக்களுக்கு இடையில இருந்தாப் போல ‘என்னைப் பத்தி உனக்கு தெரியாது.’ எண்டு ஒரு வசனம் போகும். அல்லது ‘என்னைச் சீண்டாதை. உனக்குத் தான் ஆபத்து’ எண்டு ஏதாவது வசனம் போகும். உண்மையில இது மற்ற வானொலிக்குத் தான் சொல்லுப்படும். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கிற எங்களுக்கு சொல்லுறாங்களோ எண்ட மாதிரி இருக்கும்.

உப்பிடித்தான் ஒருக்கா ஒரு வானொலியிலை தற்போதைய நிலையில் இலங்கையில் கேளிக்கை நிகழ்வுகள் தேவைதானா எண்டு ஒரு கருத்தறியிற நிகழ்ச்சி நடத்தினவை. நேயர்கள் தொலை பேசியில் சொல்ல வேணும். என்ர நண்பன் ஒருத்தன் அழைப்பெடுத்து முதலில உங்கடை இருபத்து நான்கு மணி நேர கேளிக்கைகளை நிப்பாட்டுங்கோ. பிறகு மிச்சத்தை பாக்கலாம் எண்டிருக்கிறான். அதுக்கு அவை நாங்கள் அப்பிடி இல்ல. மற்ற வானொலி தான் அப்பிடி எண்டு சொல்லிச்சினமாம்.

அதே மாதிரி.. ஒருக்கா தொலைபேசியில ஒருவ பாட்டுக் கேட்டவ. அப்ப அங்கை இருந்து ஒருத்தர் உங்களுக்கு திருமணம் ஆகிட்டுதா எண்டு கேட்டவர். அதுக்கு அவ இல்லை எண்டு சொன்னா. பிறகு அவர் அடுத்த கேள்வியா அப்ப எத்தினை பிள்ளையள் எண்டு கேட்டார். அதுக்கு அவ பெரிசா சிரிச்சா. ஏதோ அவர் பகிடி விட்டிட்டார் எண்ட நினைப்பிலை.

உண்மையில அவரிலையும் பிழையில்லை. அவைக்கு அப்பிடி ஒரு ஒழுங்கில கேட்டு கேட்டு பழகிப்போட்டுது.

என்ன செய்ய முடியும்..

By

Read More

பாராளுமன்றில் நான்

கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.

கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது விளங்குகிறது.

இந்த வரை படத்தில் பாருங்கள்.


Image hosted by Photobucket.com

அதன் மையத்தில் இருக்கின்ற சிறிய வட்டத்தில் இருந்த குன்று ஒன்றை வெட்டி எடுத்து அங்கே பாராளுமன்றினை கட்டியிருக்கிறார்கள்.

சூழ இருக்கின்ற பெரிய வட்டங்களும் நீள் கோடுகளும் நகரின் பிரதான வீதிகள்.

சாதாரணமாக உள்ளே அனுமதிக்கிறார்கள். இருப்பினும் உட்செல்லும் வழியூடாக உடல் scan செய்யப் படுகிறது.

உள்ளே பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இடங்களைப் பார்த்தோம்.

இன்னுமொரு பகுதியில் சிறிய திரையரங்கில் பாராளுமன்றம் அமைக்கப்பட்ட வரலாறு கட்டட பணிகள் நடைபெற்ற நாட்கள் என்பவற்றை திரையில் காட்டுகிறார்கள்.


Image hosted by Photobucket.com

பாராளுமன்றிற்கு மேலே சாதாரண தரை போல புல் வளர்க்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும் போது பழைய பாராளுமன்று தெரிகிறது.

பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய போது அதன் முன்பாக இருக்கின்ற சிறிய நீர்ச் சுனையில் கால் நனைத்தேன். அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வந்து அதை நிறுத்தச் சொன்னார்.

காவல் அதிகாரிகள் இப்படித் தான். தங்களுடைய அதிகாரங்களை காட்டுகிறார்கள் என்று நினைத்த போது அவர் சொன்னார்.

அந்த நீர் அழுக்காக இருக்கிறதாம். காலில் தொற்றுக்கள் ஏற்பட கூடுமாம்.

ம்!!!!!

என்ன அங்க நிக்கிறது!! போ போ.. படமெல்லாம் எடுக்க கூடாது!! இங்க நிக்க கூடாது!! இப்படியெல்லாம் சொல்லாத இவர்கள் எல்லாம் என்ன காவல் அதிகாரிகள்!!

By

Read More

ஞாபகிக்கையில் 1

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.

அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.

அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!

எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.

‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”

அவளுக்குத் தெரியாது!

வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.

நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.

ஒரு காலை!

நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!

குடை எடுத்து விரித்தாள் அவள்.

அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின

லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்…. (டேய் கதையைச் சொல்லடா )

‘……” பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.

‘மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ”

‘மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????”

குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?

அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?

ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!

ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்…

அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!

உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.

நாசமாப் போக!!!

By

Read More

திறந்த வெளிச் சிறை


Image hosted by Photobucket.com

ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது.

ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன.

சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக!

படப் பதிவு திரு

By

Read More

எனக்கும் ஒரு சாதி சான்றிதழ்

மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது!
என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பள்ளிக்கு இருக்கின்ற வரைமுறைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு அமையவே அனுமதிகள் தரப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் நான் படகில் வந்தவன் என்ற காரணமும் அவர்களுக்கு ஏதாவது சிக்கல்களை ஏற்படுத்தியிருக்க கூடும்.
இவ்வாறாக ஓர் பள்ளியில் எனது அனுமதிக்காக கொஞ்சம் இறங்கி வந்து T.C மற்றும் சாதிச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு வர சொன்னார்கள்.
இவை மீண்டும் எனக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தன.
முதலாவது அகதியாக படகில் ஏறி வந்த நான் T.C கொண்டு வரவில்லை
இரண்டாவது சாதிச் சான்றிதழ் என்ற ஒன்று என்னிடம் எங்களிடம் இலங்கையில் இல்லவே இல்லை.
இது சாதி என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அவர்கள் அப்படி கேட்டது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது என்கிற எண்ணத்தை ஏற்படுத்த எழுதப்பட்டதல்ல.
சாதி என்பது என் காலத்தில் முன்னிலையில் பேசப்படாத விடயமாகவே இருந்து வந்தது. (மற்றும்படி அது பேசப்பட்டது.)
ஒருவரைப் பார்த்து நீங்கள் என்ன சாதி என்று கேட்பது பண்பற்றது என்ற கருத்தியலில் வளர்ந்த எனக்கு அவ்வாறு கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் ஒருவித சங்கடத்தை உணர்த்தின.
சாதிக்கென தனியான சான்றிதழ் எதுவும் இலங்கையில் கொடுக்கப்படுவதில்லை. நமது பிறப்பு பதிவு சான்றிதழில் சாதி என்கிற ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இலங்கைத் தமிழர் என்று குறிக்கப்படும். அவ்வளவே
இதற்கிடையில் எனக்கான ரி சி யினை இலங்கையிலிருந்து எடுப்பித்தால் சாதிச் சான்றிதழை போலியாக தயாரிக்கலாம் என்று சட்டத்தரணி கூறினார்.
அவ்வாறு தயாரிக்கும் போது பிற்படுத்தப்பட்ட (பிற்பட்ட அல்ல) சமூக அமைப்புகளை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடுகளின் நல்ல பலன் பெற முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
நான் இறுதியாக கல்வி கற்ற பள்ளி வன்னியில் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இலங்கை ராணுவத்தினர் வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு பாதை சமைக்க ஜெயசிக்குறு சமரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வன்னிக்கான எந்த தொடர்புகளும் அற்ற நிலை. எனது ரி சி யினை பெறவே முடியவில்லை.
இப்படியாக மாதங்கள் அள்ளுண்டு போனது.
இறுதியாக கொழும்புக்கும் புறப்பட்டாயிற்று.
இதனை எனது ஊரின் உறவினர்களுக்கு சொன்னபோது ‘கன்றாவி.. அதுக்கெல்லாம் சேட்டிபிகேற் இருக்கோ’ என்று ஆச்சரியப்பட்டனர்..
அவர்களில் சாதியை ஏற்றுக் கொண்டவர்களும் அடக்கம்.

By

Read More

× Close