ராஜ சுந்தர ராஜன்

“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்.

இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும், ‘புலி’ ஆதிரை பற்றிக் கூறும் இறுதி அத்தியாயமும் துண்ண்டாக நின்று, வியக்கத்தக்க வகையில், நாவலுக்கு ஒரு முழுமையைக் கொண்டுதருகின்றன.

பாம்புக்கடி பட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோய், பாதிவழியில், இருட்டுக்குள், பிணமாகச் சுமந்துவரும் தேவமலர் பாத்திரப் படைப்பு போதும், ‘நூலாசிரியர்’ சயந்தனின் திறமையைப் பறைசாற்ற.

தமிழினத்தை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட போரில் போராடிச் செத்தவர்கள் எல்லாரும் ஏழைகள், கீழ்ச்சாதியினர் எனவும்; பணமும் யாழ்ப்பாணமும் தப்பித்துக்கொண்டன என்றும் கோடிகாட்டுகிறது “ஆதிரை”யின் கருத்தாக்கம். புலிகளின் தோல்வியோடு நாவல் முடிந்தாலும் புலிகள் சாகும்வரை போராடியதைச் சுட்டி ஒரு நேர்முறைக் குறிப்போடு முடிகிறது.

By

Read More

கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின் மியூசியம் கதையின் குறியீடைப் பெற்று விடுகிறது. எல்லாச் சம்பவங்களையும் தொகுத்து குட்டிமணி முதல் முள்ளிவாய்க்கால் வரை உதிரம் தோய்ந்த காகிதமடிப்புகளை வரைபடங்களாக வெட்டி ஒட்டும் குலாஜி ஓவியகங்களாக சில நூறு பக்கங்கள் இந்த நாவலை தகவல் நாடாக மாற்றியிருக்கிறது. இந்த தகவல் நாட்டிலிருந்தே கத்தரிக்கப்பட்ட செய்திகளை மற்ற எழுத்தாளர்களின் கண்களுக்குத் தப்பிவிடும் விடுபடல்களையும் சேகரித்திருக்கிறது. நிலப்பரப்பின் தனி மொழியாக மலையக இருப்பின் புராதான இருட்டில் தங்கம்மை, சிங்கமலை, வள்ளியாள், அலைக்கழிந்த வெள்ளையன், லட்சுமணன், விநோதினி இயக்க உறுப்பினர்களாக நாவலின் ஊடே அலைந்து மறைந்து திரிகிறார்கள். ஆனால் பேச்சி தோட்டத்திற்கு அப்பால் எட்டு ஏக்கர் மேட்டு நிலத்திற்கு அப்பாலிருந்து நாவலின் ஊடாக நெளிந்து வரும் விஷம் சுமந்த சர்ப்பம் வாலில் விசும்பி நின்று படம் விரி கோலத்தில் ரசவாதியாகிவிடும் படைப்பாளியைப் பார்க்கிறது. அவன் சாட்சியமாகவே ஆதிரையை விழுங்குகிறது. அவன் சைக்கிள் மீது சாய்கிறாள். பொழுது இருண்டு போகிறது. நாவலின் துக்கம் கனவுப் பாம்பிலிருந்து ஆதிரையை உமிழ்கிறது. வெளிச்சம் வருகிறது. சிறிது சிறிதாக வருகிறது. பின்னே வரும் பக்கங்களையும் ஆதிரையின் சிறிய வெளிச்சத்தில் யாரோ வாசிக்கிறார்கள். மொழி நிழல்கள் காட்டின் உயிர்சுடரில் ஆடி புனைவுப் பாம்பு சயந்தனின் எழுதும் விரலை வலுவாகக் கவ்விக் கொள்கிறது. படைப்பில் விஷத்தை படைப்பாளி கையாள வேண்டிய தருணம் வருகிறது. கணம் தவறினாலும் அவனைக் கொன்று விடும் என்கிறார் காருகி முராகாமி. புனைவாளன் விஷத்தை பளிங்காக மாற்றுகிறான். நீலம் பாதித்த அத்தியாயங்களை வாசிக்கும் போது வாசகனும் சில பக்கங்களில் நீல சரீரமாகிவிடுகிறான். இந்தப் புனைவுப் பாம்பு தீண்டியது மிகச் சிலவே ஆயினும் குறிஞ்சி நிலத்தின் நரம்பறிந்த விரல்களாய் எழுதும் விரல்கள் இருப்பதில் யார் கை மூலம் என்பதை விட சயந்தன் விரல்களால் எழுதப்பட்ட ஆதிரை கழிவிரக்கத்தையும் கையறு நிலையையும் சம்பவங்களூடே கடந்து செல்வதற்குரிய உத்தியாக நான் நினைக்கவில்லை. மலையக இரவுகளும் வன்னிப் பெருநில ஊர்களும் சுன்ணாம்பு வளையத்தில் உள்ள சிறு சிறு தீவுகளும் ஒரே நிலமாக இருப்பதில்லை. எட்டு எக்கர்களாக மணற்பாம்புகளோடு ஊழி நடனத்தில் மண்மாரி வீசியது. ஆறாவடுவில் சயந்தினின் புனவுகள் நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் மூழ்கி நகர்வதாகும்.

கடலும் கடல் சார்ந்த உலகமும் கடலுக்கு அப்பால் இருக்கும் உலகமும் எக்கர்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் எட்டு ஏக்கரில் எதார்த்தவாத வாழ்வியல் பரப்பும் விவசாயமும் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்கு இடம் பெயர்வதும் கடலைத் தாண்டாத சமூக அக்கரை சார்ந்த நாவலாக உருமாற்றிக் கொள்கிறது. எட்டேக்கர் x எட்டு எக்கர் புனைவில் பிளக்கும் இடைவெளிகளை எழுதிச் செல்வதற்கான பக்கங்கள் முன் கூட்டியே அறியப் பட்ட பக்கங்களை கோரி நிற்பதில்லை. புனைவின் நிகழ்கணம் தான் நவீன நாவலின் உயிர்நாடி. ஆனால் அதே வேளை குடும்பங்களின் எளிய வாழ்விலிருந்து ஆயிரம் துகள் துகல்ளான கீற்றுகள் இந்த நாவலின் வசீகரமான பக்கங்கள். அமிலப் பசியே உன்னை கவனிக்கப் போவதில்லை என்று தாயார் மகளைப் பார்க்க மலை மலையாக இறங்கிப் போகிறாள். அது ஒருபக்கம் இருக்க, குடும்பக் கதைகளுக்கு மேல் ஊழிக்காலத்துடன் தன்னை சயந்தன் கை மூலம் எழுதிக் கொள்கிறது எக்கர் ஞாழல். தனுஷ்கோடியிலிருந்து ஆதிரையில் வரும் ஒரு சில பக்கங்கள் இராமேஸ்வரம் தனுஷ்கோடி என்று குறிப்பிடுவதில் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்லவே.

By

Read More

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்…

நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy எல்லாம் எவ்வளவு குரூரமும் அபத்தமுமானவை. ஆற்றொழுக்காக செல்ல வேண்டிய எவ்வளவு பேருடைய வாழ்க்கையும், உறவுகளும், உணர்வுகளும் நம்பிக்கைகளும் கருகி போயிருக்கு. எங்குமே நிலைத்து வாழ முடியாம எவ்வளவு துரத்தப்படுறாங்க. இது எங்கே நடந்தாலும் யாருக்கு நடந்தாலும் மனதை கொல்லுகிற விஷயம்தானே. சக போராளிகளா இருந்த வெள்ளையன் கண்ணிவெடிகளை அகற்றி வாழ்க்கையை தொடர, இனிதனை புலம்பெயர வைக்க 40 லட்சங்களை தயார் செய்ய ஒரு குடும்பமே இருக்கிறது. Traumatizing

இப்போது வந்த வெள்ளத்தப்போ டிவியில யாரோ ஒரு மிடில் க்லாஸ் புண்ணியவதி ‘நாளு நாளா யாருமே இந்த பக்கம் வரல. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறோம்’ அப்படின்னு சொன்னுச்சு. பிச்சைக்காரங்களாட்டம் நிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமான்னே தெரியல. சினிமாவுல எல்லாம் தமிழீழ ஆதரவுன்னு ஒரிரு காட்சிகள் வைத்து எவ்வளவு அசிங்கப்படுத்திட்டோம். எல்லாத்தையும் செய்தியா, புள்ளிவிவரமா பாக்குற இரக்கமற்றதனம் தான் மிஞ்சியிருக்கு. Cleansing and counter cleansing –என்னால எந்த பக்கத்து வன்முறையையுமே புரிஞ்சுக்க முடியல. கிட்டதட்ட அதுல வர சந்திரா மாதிரிதான் என் மனநிலையிருக்கு.

By

Read More

ஹரி ராசலெட்சுமி

அதிகார மையங்களால் எழுதப்பட்ட வரலாறுகளுக்குள் விளிம்பின் இடப்படுத்தல்களையும், எழுதப்படுதலின் வன்முறையையும் குறித்து 80களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழில் நிறையவே ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பின்-அமைப்பியல் சிந்தனை, சபால்டேர்ன் வரலாற்றெழுத்தியல், பெண்ணியம் மற்றும் தலித்தியத்தால் ஊக்கம்பெற்ற விமர்சனமரபு தமிழில் மிகவும் கச்சிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் உண்டு பண்ணியிருக்கின்றது. இந்தப் படிப்பினைகள் இலக்கிய எழுத்தையும் வடிவத்தையும் சிக்கலுக்குள்ளாக்கியிருப்பதற்கான சிறந்த உதாரணமாக ஷோபா சக்தியை எடுத்துக் கொள்ளலாம். பெருங்கதையாடலுக்கான உணர்வெழுச்சிகளை அங்கதம் மூலம் கட்டுறுத்துவதும், மொழியின் உன்னதமாக்கலை பகடி மூலம் கவிழ்ப்பதுவுமான நடையை ஷோபாவிடம் வாசிக்கிறோம். அவரது புனைவுகளில் சுயங்களும், தன்னிலைகளும் ஒத்திப் போடப்படுகின்றன, எடுத்துரைப்பின் தேவை முடிந்ததும் ரத்துச் செய்யப்படுகின்றன. உணர்வேற்றத்துக்கான கச்சாப்பொருள் துயர்மிகுதியில்/திளைப்பில் மாத்திரம் இருந்தன்றி, பிம்பங்கள்/ பிரதிமைகள்/ செய்தியுருக்களில் இருந்தும் இரவல் வாங்கப்படுகிறது. எதுவும் அசலான அசலில்லை. ஷோபா சக்தி முன்வைக்கும் தன்னிலைகள் எல்லாமே ஒரிஜினல் இல்லாத காப்பிகள். சினிமாத் திரை, வானொலிச் செய்தியறிக்கை, மேடைப்பேச்சுகள், சுவரொட்டிகள் மற்றும் தெருநாடகங்கள் நிறைந்தது அவரது புனைவுலகம். நம்பகத்தன்மைக்கான எதிர்பார்ப்பை இந்தவகைப் புனைவு சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறது. பெருங்கதையாடலை அவாவும் தன்னிலையை மைய-நீக்கம் செய்வதால் உருவாக்கித்தரப்படும் இலக்கியவெளி, தனது உள்ளார்ந்த வன்முறையைக் கைவிட்டுவிடும் என்ற நம்பிக்கையில் ஒருதொகை பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன (காண்க: ஷோபா சக்தி, சுகன் தொகுப்புகள்). இப்படியான பண்படுதல், சிறுகதையாடல்களை வரவேற்கும், மற்றமைகளை ஏற்றுக்கொள்ளும், கொண்டாடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

பெருங்கதையாடல் வடிவங்கள் கவிழ்க்கப்பட்டதெல்லாம் பழைய கதை. மையம், விளிம்பு, கட்டுடைப்பு போன்ற பிரயோகங்கள் தமிழிலேயே சலிப்பூட்டும் தேய்வழக்காகிவிட்டிருக்கின்றன. ஆக, என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? நவீனத்துவம் முடிந்து போய்விடவில்லை, மாறாக அது கரைந்து திரவநிலையில் இருக்கிறது என்பார் Zygmunt Bauman. இல்லை, நவீனத்துவத்தின் இடுபாடுகளுடன், நவீன உன்னதங்களையும், பேரவாக்களையும் பேய்ப்பீடிப்பாக உணர்ந்தபடி வாழ்கிறோம் என்று வாதிடுகிறார் Jean-Michel Rabat. நவீனத்துவத்தின் தோல்வியையும், பயனற்ற தன்மையையும், உள்ளார்ந்த வன்முறையையும் அகம்பாவத்துடன் ஒப்புக்கொண்டபடியே அதன் தொடர்ச்சியை விரும்புகிற மெட்டாநவீனத்துவ நிலவரத்தின்கீழ் வாழ்கிறோம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க இன்றைய திரவ/பேய்/மெட்டா நவீனத்துவ நிலவரங்களின் கீழ், அசட்டுத் திடசங்கற்பத்துடன், இலக்கிய வடிவங்கள் தம்மை மீட்டெடுத்துக்கொள்ள எத்தனிக்கின்றன. என்ன செலவானாலும் சரி பெருங்கதையாடல்களை நிகழ்த்தி, வாழ்ந்துபார்த்துவிடுவதற்கான எத்தனங்களை எல்லா இடங்களிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. பின் நவீனத்துவ கொண்டாட்டங்கள் கவிழ்ப்புகளுக்குப் பின்னரான சுதாரிப்பும் மீள்-ஒழுங்காக்கமும் தவிர்க்க முடியாத ஒன்றென்றும், அது ஃபாஸிசத்தின் வடிவத்தை எடுக்குமென்றும் அமெரிக்கா குறித்து ரிச்சார்ட் ரோர்ட்டி 1998இல் எழுதியதைப் போலவே, இன்றைய திகதியில் மாற்றங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். ரோர்ட்டியின் எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, தெல்யூஸிய பெண்ணிய அறிஞர் இஸெபெல் ஸ்டெங்கெர்ஸ் கடந்த வருடம் `பெருங்கேடுதரும் காலத்தில்: எதிர்வரவிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பதெப்படி` என்றொரு முழுநீளப் புத்தகத்தையே எழுதி வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய அழகியலுடைய நிலவரம், மேற்கண்டதைப் போன்றதே. எல்லாப் பெருங்கதையாடல்களையும் போலவே, மிக மோசமான விமர்சனங்களையும், கவிழ்ப்புகளையும், கைவிடப்படுதலையும் தன் காலத்தில் அது சந்தித்திருக்கிறது. தமது இனப் பெருமிதங்களையும் கழிவிரக்கங்களையும் outsource செய்கிற தமிழ்நாட்டுப் புத்திசீவிகளைத் தவிர்த்துப் பார்த்தால் – தமிழ்த்தேசியம் தீவிர சிந்தனைக்குரிய செலாவணியை இழந்து நீண்டகாலம் ஆகிறது. தமிழ்த்தேசியம் விரும்பியோ விரும்பாமலோ தனது சிவில் முகத்தை அரசியலில் காட்டிக்கொண்டிருக்கிற இன்றைய தேதியில், இனத்துவத்துக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இனத்துவத்தின் மறுமையை யார் கனவு காண்கிறார்கள்? யோ.கர்ணனின் குற்றமொப்புக்கொள்ளும் பிரதிகள் இனப்பெருமிதத்தைக் கைவிட்டதாகக் கருத இடமில்லை. யோ.கர்ணனில் மனிதாபிமான வாக்குமூலத்துக்காக ஒத்திப்போடப்பட்டிருந்த இனத்துவ சுயம், குணா கவியழகனிடமும், சயந்தனிடமும் சடலமாக மீட்டெடுக்கப்படுகிறதைக் காண்கிறோம். தேசியவாதக் கற்பிதத்தில் சடலம் ஒருபோதும் வெறும் சடலம் அல்ல. அது விதையுடல்; புத்துயிர்ப்புக்கான வாக்களிப்பு. இரத்தமும் கண்ணீரும் நினைவுமாக இனத்துவம் திரும்பவும் சுயம்கொள்ள ஆரம்பிக்கிறது.

2009க்கு பிற்பட்ட வருடங்களின் ஏழாண்டு இலக்கிய வரலாற்றில், எதை இறக்கி வைக்கின்றோம், எதை ஏற்றி வைக்கின்றோம் என்பதை அவதானித்தால் இந்தப் போக்கு நன்கு புலப்படும். எழுத்தெனும் தேவதூது விடுபடலிருந்து இறங்கி, இடிபாடுகளுக்குள் நிற்கிறது. தடயம் தேடும் கருவியாக, நினைவை அகழும் கருவியாக, மருந்திடும் வலி நிவாரணியாக எல்லாம் அது பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெஞ்சமினின் தேவதூதருக்கு `வடிவாய் ஒருகணம்` இறங்கி வந்து இப்படியான பணிகளில் ஈடுபட விருப்பம் தான், ஆனால் அப்படி இறங்க முடியாதபடி காற்று அவரை எதிர்காலம் நோக்கித் தள்ளுகிறது. முற்போக்கின் எந்தக் காற்றும் அடிக்காத சூழல் எம்முடையது போலும்.

இந்த எழுத்தியக்கத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விமர்சன மரபு தன்னை புதுப்பித்துக் கொள்ளாதிருப்பது இன்னும், இன்னும் நிலவரங்களை மோசமாக்குகிறது. கட்டமைக்கப்படும் கூட்டு நினைவு, அதன்வழிப்பட்ட அடையாளம், அது முன்வைக்கும் அரசியல் போன்றவை பற்றிய கரிசனை, சமூகம் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிற கதைகளில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும். கடந்த காலம் பற்றிய எடுத்துரைப்புகளுக்கும் அடையாள அரசியலுக்கும் இருக்கிற தொடர்பு மிகவும் வலிமையான ஒன்று. “கடந்தகாலம் தொடர்பான எடுத்துரைப்புகள் வேறுபட்ட விதங்களில் நம்மை நிலையுறுத்துகின்றன. அதேவேளை, இக்கதையாடல்களுக்குள் நம்மை நாமே நிலையுறுத்தியும் கொள்கிறோம். இந்த வெவ்வேறு விதங்களுக்கு நாம் வழங்கிக்கொள்கிற பெயர்களே அடையாளங்கள்” என்கிறார் ஸ்ரூவர்ட் ஹால்.

2/வரலாற்றுக்கு-பின்னான மறுமையும், ஊக-எதிர்காலங்களும்

வரலாறு முடிந்து போய்விட்ட உணர்வு சயந்தனின் இரண்டு நாவல்களிலும் அதீதமாக இயங்குகிறது (ஆறாவடு 2012; ஆதிரை 2015). ’ஆறாவடு’வின் போராளிக் கதாநாயகன் இலங்கைத் தீவில் காயப்படுகிறான்; காலிழக்கிறான். ஃபைபர்கிளாஸ் செயற்கைக்கால் பொருத்தப்படுகிறது, ஆனால் வாழ்வோ, காதலோ இத்தீவில் நிச்சயமில்லை. கடல்வழியாகத் தீவை விட்டு வெளியேற முயல்கிறான். ஆனால், முடிவு ஈவு இரக்கமற்று துரத்திக்கொண்டு வந்து அவனை மூழ்கடிக்கிறது. அவனுக்குப் பொருத்தப்பட்ட செயற்கைக்கால் கடலில் மிதக்கிறது. முடிவையும், அதைநோக்கிய பயணத்தையும் 20 அத்தியாயங்கள் செலவழித்துத் துன்பியல் மரபில் சித்தரிக்கும் நாவல், அதன் பின்னான தொடர்ச்சியை, தனித்த இறுதி அத்தியாயமொன்றில் கற்பனை செய்கிறது: கடலில் மிதக்கும் செயற்கைக் கால், எரித்ரிய மீனவக் கிராமத்தில் கரையொதுங்கிகிறது. தேசவிடுதலைக்காய் எரித்ரிய மக்கள் விடுதலை முன்னணியில் போரிட்டுக் காலை இழந்த இத்ரிஸ் என்கிற கிழவன் இந்த ஃபைபர்க்ளாஸ் செயற்கைக்காலைக் கண்டெடுக்கிறான்.

By

Read More

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி.

வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை சுடுமணல் பரப்பையும் தாண்டிக் குதித்தோட முடியாது. அங்கு நின்று நிதானித்துப் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அனுபவமும், படிப்பினையும், எதிர்காலத்துக்கான ஓர்மமும், ஏன், நீதியும் கூட அங்குண்டு. ஆயுதப் போராட்டத்தின் பெரும் வெற்றிகளும், (இறுதித்) தோல்வியும் கூட வன்னிப் பெருநிலத்துள்ளேயே நிகழ்ந்து முடிந்தது.

வன்னிப் பெருநிலத்தோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் வாழ்வோடும், புதிய பிறப்புக்களோடும், ஜீரணிக்க முடியாத இறப்புக்களோடும்…. ஒருசில பிழைத்திருத்தல்களோடும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அதன் தொடர் விளைவுகளையும் பேசியிருக்கின்றது சயந்தனின் ‘ஆதிரை’.

வன்னிப் காடுகளுக்குள் உறங்கும் ஆயிரமாயிரம் உண்மைகள் போலயே ஆயுதப் போராட்டத்தின் பக்கங்களை யாராலும் முழுமையாக பேசிவிட முடியாது. ஆனாலும், அங்கு வாழ்ந்தவர்களின் ஒவ்வொரு நாளும், அனுபவமும் புதிய உண்மைகளை இந்த உலகத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவை. அவை, பெரும்படிப்பினைகள். அப்படியானதொரு, முயற்சியின் பக்கத்திலிருந்து புனைவொன்றை எழுதுவதற்கான பொறுப்பினையும், உழைப்பினையும் சயந்தன் ‘ஆதிரை’யை எழுதி முடிப்பதற்கு செலவிட்டிருக்கின்றார். அது, பெரும் உழைப்பினை சலிக்காமல் கோரும் ஒன்றாகவும் இருந்திருக்கும். அதனை வாசித்து முடிக்கின்ற போது அதனை உணர முடிகின்றது.

வன்னிக் காடுகளின் வெம்மையையும், குளிரையும் மாத்திரமின்றி அத்தார், சந்திரா ரீச்சர், மலர் அக்கா, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், விநோதினி, சாரகன், ஒளிநிலா, இசைநிலா…. இன்னும் இன்னும் பலரின் வாழ்வோட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களினூடும் ஆயுதப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் ‘ஆதிரை’ கடக்க முயன்றிருக்கின்றது. நாம் எல்லோருமே அறிந்த பல கதைகளை அல்லது உண்மைகளை ஒரு சில காட்சிகளோடு அல்லது தகவல்களோடு கடந்திருக்கின்ற சயந்தன், இறுதி மோதல்களினை நோக்கிய பயணத்தின் தடத்தினை அழுத்தமான பதிவு செய்ய முனைந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டமொன்று ஏன் ஆரம்பித்தது, பெருவெற்றிக்கணக்கங்களை மக்களிடம் உணரச் செய்தது… ஒரு சில காலத்துக்குப் பிறகு கடுமையான தோல்வியை வழங்கி முடிந்து போனது. இதனையே, ஆதிரையில் வரும் நபர்கள் பிரதிபலிக்கின்றார்கள், பேசுகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மௌனித்து ஆமோதிக்கின்றார்கள். சரி பிழைகள், நியாயங்கள் அநியாயங்கள் என்று எல்லாவற்றையும் பேசுவதற்கு முயன்றிருக்கின்றார்கள். குறிப்பாக, அத்தார், சந்திரா ரீச்சர் பாத்திரங்களினூடு ஆரம்பத்திலிருந்தே அதனைக் கட்டமைத்து எடுத்துச் செல்வதில் சயந்தன் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றார். அதுபோல, ஆயுதப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள் கொடுத்த வலிக்கு அப்பாலும், அந்தப் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் தன்னுடைய கருத்தினை கவனமாக உட்செலுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களை யாழ்ப்பாணம் எடுத்துக் கொண்டாலும், அதன் பெருவெற்றிகளின் பங்களிப்பு என்பது வடக்கு- கிழக்கு மற்றும் வடக்கு- கிழக்கின் கலந்துவிட்ட மலையக மக்களின் பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட்டவை. அதற்கான ஒட்டுமொத்த உரிமையையும் ஒருதரப்பு கோர முடியாது என்பதையும் ஆதிரை பதிவு செய்திருக்கின்றது. அது, ஆயுதப் போராட்டத்தினை வெற்றிக்காரணிகள் சார்ந்து மாத்திரமே உணர்ந்து வைத்திருக்கின்ற பெருமளவான தமிழ் மக்களுக்கு படிப்பினை.

ஆயுதப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் மாத்திரம் சார்ந்தவை அல்ல. அதன் உள்விளைவுகளும், தொடர் விளைவுகளும் ஜீரணிக்க முடியாதவை. அதனை எதிர்கொள்வதற்கான திராணி தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு இல்லை என்பதையும் ‘ஆதிரை’ தன்னுடைய இறுதிப் பாகங்களில் பதிவு செய்திருக்கின்றது. ஒரு இலக்கியப் பிரதியாக ‘ஆதிரை’ வெற்றிகரமாக பக்கத்தில் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ, அதேயளவுக்கு அரசியல் உரையாடல் பதிவுகளாகவும் முக்கிய பங்காற்றியிருக்கின்றது என்று கொள்ள முடியும்.

‘ஆதிரை’யை எழுதிய சயந்தனின் ‘ஆறாவடு’ (2012இல் வெளியான நாவல்) வாசித்த கணத்தில் பெரும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. அந்த உணர்நிலை தொடர்பில் எனக்கு இன்றைக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில், ஆறாவடு மிகமிக அவசரமாக பொறுப்பற்ற தனங்களோடு எழுதப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஆயுதப் போராட்டமொன்று முடிந்து போன கணத்தில் பலருக்கு அது சார்ந்த கதைகளைக் கேட்பதற்கு பாரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தினை சந்தையாக்கும் முயற்சியில் சிலர் இலக்கியங்கள் என்கிற பெயரில் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் ‘ஆறாவடு’வினையும் பார்த்தேன். அது, இலக்கிய அடையாளத்தை நோக்கிப் பறக்கும் குஞ்சொன்றின் பிரதியாகவே இருந்தது.

ஆனால், ‘ஆதிரை’ அப்படியான எந்தவொரு எண்ணத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆறாவடு மூலம் சயந்தன் மீது ஏற்பட்டிருந்த கோபத்தினையும், எரிச்சலையும் ‘ஆதிரை’ துடைத்தெறிந்திருக்கின்றது. ‘ஆதிரை’ தமிழ் மக்களின் குற்றவுணர்சிகளிலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் போதும் அப்படியான மனநிலை தொற்றிக்கொள்கின்றது. சயந்தனும் அந்தக் குற்றவுணர்ச்சி மனநிலைக்குள்ளிலிருந்து தான் எழுதியிருக்கின்றார்.

எல்லாவற்றையும் விட ‘ஆதிரை’, லெட்சுமணனோடு ஆரம்பித்து, காவற்தெய்வம் ஆதிரையோடு முடிந்து போவதுதான் அதன் அழகியலையும், அர்ப்பணிப்பையும், ஏன் நியாயத்தையும் கூட உணர்த்தி நிற்கின்றது.

By

Read More

× Close