நான் படம் பார்த்த கதை

சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.

அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don’t miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான் அதையும் நம்பிக் கொண்டு திரிஞ்சன்

தியேட்டருக்கு போற பழக்கமெல்லாம் 90 ம் ஆண்டே முடிஞ்சு போட்டுது. யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில கடைசியா ராஜா சின்ன ரோஜா எண்ட படம் பாத்த பிறகு நான் 7 வருசமா தியேட்டர்களுக்கு போனதில்லை. (பிறகு 97 இல திருச்சியில சோனா மீனா எண்டொரு தியேட்டருக்கு போய் படம் பாத்து விரதத்தை முடிச்சன்.)

யாழ்ப்பாணத்தில சண்டை தொடங்கின பிறகும் கொஞ்சக் காலம் கரண்ட் இருந்தது. அப்ப நாங்கள் படங்கள் பாக்கிறனாங்கள். பிறகு ஒரேயடியாய் கரண்ட் போச்சுது. அதோடை படம் பாக்கிறதும் குறைஞ்சு போச்சு. எண்டாலும் அப்பப்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்த வீட்டில படங்கள் போடுவம்.

அந்தக் காலத்தில தான் புலியள் தணிக்கை முறையை கொண்டு வந்தினம். படம் தொடங்கும் போது முதலில புலிகளின் தணிக்கைச் சான்றிதழ் வரும். பிறகு தான் இந்திய தணிக்கை சபையின் சான்றிதழ் வரும். பாட்டுக் கட்டங்கள் போகும் போது சில இடங்களில ரோஜா பூ காட்டுப் படும். அந்த இடங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.

அந்த நேரம் சின்னத்தம்பி படம் நல்ல பிரபல்யம். எங்கடை வீட்டிலும் போட வேணும் எண்டு ரண்டு மூண்டு தரம் முயற்சித்தும் கசெற் கிடைக்கேல்லை. கடைசியா ஒரு மாதிரி கசெற் கிடைக்க ஜெனரேற்றர் வாடகைக்கு எடுத்து வந்து படத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில அது பழுதாப் போட்டுது. எனக்கு அழுகையே வந்திட்டுது. என்ரை அத்தான் எனக்கு நல்ல பேச்சு. ‘சனம் சாகக் கிடக்குது. உனக்கு சின்னத்தம்பி பாக்க முடியேல்லையெண்டு அழுகையோ?’

பிறகு கொஞ்சக் காலத்தில படங்கள் ஒரேயடியாகத் தடை செய்யப்பட்டு விட்டன. யுத்தத்தில சிக்குப்பட்டிருக்கிற மக்களுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருக்கிற சினிமாவை தடை செய்தது பற்றி பரவலான விமர்சனங்கள் வந்தன.

இந்த இடத்தில ஒரு கதையை சொல்ல வேணும். படங்கள் தடை செய்யப்பட்டிருந்த 95 ம் ஆண்டில யாழ்ப்பாணம் கோட்டையில் புலிகளின் காப்பரண்களுக்கான பதுங்கி குழிகள் வெட்டுவதற்காக ஒரு குறித்த சுற்று முறையில் எங்கள் ஊரின் சங்கமொன்றினூடாக நாங்கள் அங்கை போயிருந்தம்.

கோட்டைக்குப் பக்கத்திலை முந்தி இருந்த ஒரு தியேட்டரின் முன் சுவர் மட்டும் இருந்தது. மற்றதெல்லாம் உடைஞ்சு போட்டுது. அது றீகல் தியேட்டர். (இதைப் படிக்கிற ஆரும் பழைய ஆக்களுக்கு பழைய ஞாபகங்கள் வருதோ?) அதன் முகப்பில் அங்கு கடைசியாக ஓடிய ஒரு ஆங்கில படத்தின் பெயர் எழுதப் பட்டு வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு கிடந்தது.

அதைப் பாத்து ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. ம்.. அந்தக் காலம் இந்த மாதிரியான படமெல்லாம் யாழ்ப்பாணத்தில ஓடியிருக்கு. (இது 95 இல் எனது அறிவுக் கெட்டிய நிலையில் எழுந்த எண்ணம்.)

பிறகு கன காலத்துக்கு பிறகு வன்னியிலை இருக்கும் போது திரைப்படங்களுக்கான தடையை புலிகள் நீக்கினார்கள். எண்டாலும் தணிக்கை தொடர்கிறது இப்ப வரைக்கும். கன காலத்தக்கு பிறகு வன்னியிலை காதல் கோட்டை, பூவே உனக்காக மற்றது மாணிக்கம் எண்ட மூண்டு படங்களை ஒரே இரவில பாத்தன்.

இந்தியா போன பிறகு அங்கை இருக்கிற குஞ்சு குருமன் எல்லாம் அஜித் அக்ரிங் சுப்பர் நக்மா டான்ஸ் சுப்பர் எண்டு கதைக்க ஐயோ எனக்கு ஒண்டும் தெரியேல்லையே எண்டு வெக்கமா இருந்தது. பிறகு ஒரு மாதிரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில சினிமா ருடே சினிமா எக்ஸ்பிரஸ் அது இது எண்டெல்லாம் வாங்கிப் படிச்சு என்ரை அறிவை வளர்த்துக் கொண்டன்.

By

Read More

கவித எழுத போறன்!

ஆர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் முடிவெடுத்திட்டன்.
எல்லாரும் கவித எழுதுகினம். அதுவும் நாப்பது ஐம்பது பின்னூட்டங்கள் வேறை.

நல்லாருக்கு, எழும்பியாச்சோ, நித்திர கொள்ளேலையோ எண்டுதான் பின்னூட்டங்கள் வந்தாலும், எனக்கென்ன.. எண்ணிக்கை தானே முக்கியம்.

அதனாலை தான் சொல்லுறன் நான் கவித எழுதியே தீரப் போறன்.

உந்த வசந்தன் சும்மா Anti Poet Org எண்டொரு இயக்கமாம். அது கவித எழுதக்கூடாது எண்டுதாம் எண்டு பினாத்துறார். ஒரு பொதுத்தளத்தில மாற்றுக்கருத்துக்களை வைச்சு விவாதிக்காமல், அதைப்பத்தி கேள்வி கேட்க எனக்கிருக்கிற உரிமையை மறுத்துப் போட்டு உவர் எப்பிடி உப்பிடி சொல்ல முடியும்?

விசயத்துக்கு வாறன்..

இப்ப கொஞ்ச நாளா இரவில எனக்கு நித்திரை வருகுதில்லை. இரவில நேரமும் போகுதில்லை. மெதுவா ஊருது. பேந்த பேந்த முழிச்சுக்கொண்டு இருக்கிறன். பிறகு பகலில நல்லா நித்திர கொள்ளுறன். மத்தியானத்துக்கு பிறகு தான் விடியுது.

சரி இப்ப நான் மேலை சொன்னதை கவிதையாச் சொல்லப் போறன். கவனமாக் கேளுங்கோ

என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன.

அச்சாக் கவித.. எல்லாரும் ஒருக்கா கை தட்டுங்கோ.. மிச்சக்கவித பிறகு சொல்லுறன்

உந்த படிமம் குறியீடுகளைப் பத்தி பெரிசா எனக்கு அறிவில்லை. ஆரும் சொல்லித்தருவியளே..

எட மடையா உது கவிதையே இல்லை எண்டு நினைக்கிறாக்களும் சொல்லுங்கோ..

By

Read More

தமிழனின் பறப்பு முயற்சிகள்

யாழ்ப்பாணத்தில் நவாலி வட்டுக்கோட்டை இணையுமிடத்தில் களையோடை அம்மன் கோவில் என்கிற ஒரு சின்ன அம்மன் கோவில் இருக்கிறது. எனது ஊரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அந்த அம்மன் கோவிலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது கண் அங்கே அந்தக் கோவில் வளாகத்தில் நின்ற ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய ரக விமானத்தை நோக்கும்.

ஆம். அது பறப்பதற்கு முயற்சி செய்து பலன் தராது விட்ட ஒரு சிறிய விமானம்.

85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்களாம்.

யாழ்ப்பாணத்தையும் வலிகாமம் மேற்கையும் இணைக்கும் கல்லுண்டாய் வெளி ஒரு நீள் வீதி. அதிகம் பாவனைக்குள்ளாகாத அந்த வீதி ஒரு விமான ஓடுபாதைக்கு உரிய ஆகக் குறைந்த தகுதிகளை கொண்டிருந்தது. வெளிநாட்டு வீதிகளில் சோறு போட்டு சாப்பிடலாம் என்றால், சோறும் போட்டு சொதியும் விட்டு சாப்பிடக் கூடியதான (அவ்வளவு குழிகள்) யாழ்ப்பாண வீதிகளில் கல்லுண்டாய் வீதி ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

அந்த வீதியினை நம்பித் தானாம் விமானங்கள் கட்டப்பட்டன.

அவ்வகையான விமானங்கள் இரண்டடியோ நாலடியோ மேலெழுந்ததோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டு விட்டன. பிறகு களையோடை அம்மன் கோவில் போன்ற இடங்களில் ஏதாவது மரத்தில் பறந்து கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட சாத்தியமாகாத விடயமாகவே அது அனைவர் மனதிலும் தங்கி விட்டது.

94 என்று நினைக்கின்றேன். கோண்டாவில் பகுதி ஒன்றில் புலிகள் முகாமில் ஹெலிகொப்ரர் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாதாரண பொதுமக்கள் அறியக் கூடியதாக அதன் கட்டமைப்புக்கள் நடந்தன. அது என்ன, எதற்கு என அறிந்து கொள்ளாமலே புலிகள் விமானம் செய்கிறார்கள் செய்தி உலவத்தொடங்கி சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

அது புலிகள் பலாலி இராணுவ தளத்தில் உள்நுழைந்து ஹெலிகொப்ரர் ஒன்றை அழித்த தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாக சொன்னார்கள்.

மீண்டும் 98 இல் இந்தக் கதை சூடு பிடிக்க தொடங்கியது. இலங்கை இராணுவம் தன் ரேடாரில் தெரிகிறது, சத்தம் கேட்கிறது என கதையைக் கிளப்பியது.

முத்தாய்ப்பாக 98 மாவீரர் தினத்தில் புலிகள் தம்மிடமுள்ள விமானப் படை குறித்து பிரகடனம் செய்தனர். மாவீரர் துயிலும் இல்லமொன்றில் விமானம் ஒன்று மலர் தூவியதாக கொழும்பில் அப்போதைய தினமுரசு செய்தி வெளியிட்டது.

வானமேறினான் தமிழன் என்ற கருத்துப்பட புதுவை இரத்தினதுரையின் ஒரு பெருமிதக் கவியை வாசித்த நினைவும் இருக்கிறது.

அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் அப்போதே அரசு செய்யத்தொடங்கி விட்டது. அரச மையங்கள் மீது விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. 98 இலேயே அது பற்றி அறிந்து கொண்டு அதற்கான ஆயத்தங்களையும் செய்து விட்டு மீண்டும் இப்போது 2005 இல் இலங்கை அரசு புலிகளின் விமானங்கள் குறித்து கத்துவதற்கான காரணம் வெளிநாடுகளிடம் புலிகளை போட்டுக் கொடுக்கவும் சிங்கள மக்களுக்கு புலிகள் தொடர்பாய் அச்ச உணர்வை ஏற்படுத்தவுமே..

எங்களிடம் விமானப் படை இருப்பது பழைய விடயம் தான் என புலிகளும் கேட்பவர் அனைவருக்கும் சொல்லி வருகிறார்கள்.

98 இல் மாவீரர் தினத்தின் போது விமானப் பிரசன்னத்தை நேரில் பார்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் அப்போது சந்தோச மேகங்கள் தலை தடவிப் போனதாம்.

கல்லுண்டாய் வெளியில் ஓடித் திரிந்து எவ்வளவு முயன்றும் மேலேற முடியாமல் போன பறப்பு முயற்சிகள் தொடர்பாக சில தகவல்களும் படங்களும் பதியும் எண்ணமிருக்கிறது.

இப்போது எந்தக் காரணமும் அற்று இந்த தலைப்புக்கு பொருத்தமாய்..(ஒரு தமிழனின் பறப்பு முயற்சிகள்) ஒரு படம் போடப் போறன்.

இதிலை பறக்கிறதுக்கு முயற்சி செய்யிறது நான் தான்.


Image hosted by Photobucket.com

By

Read More

கிட்டண்ணை பூங்காவும் நானும்

என்னை உங்கள் எல்லாருக்கும் காட்டுறதுக்காக ஒரு படம் ஒண்டு போட்டன் தானே! அதிலை ஈழநாதன் நல்லூர் கிட்டு பூங்காவில பாத்த மாதிரி கிடக்கு எண்டு ஒரு பின்னூட்டம் விட அதை வாசிக்க எனக்கு மனசெல்லாம் பின்னுக்குப் போட்டுது.

95 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில வலிகாமம் மேற்கு பக்கமா இலங்கைத் தேசிய ராணுவம் சண்டை பிடிச்சுக்கொண்டு முன்னேறி வந்தது. அதுக்கு முன்னேறிப் பாய்ச்சல் எண்டு அதுக்கு பேர் வைச்சிருந்தவை. (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா எண்ட பாட்டு எனக்கு நினைவுக்கு வருது.. முழுக்க எழுதோணும் போல கிடக்கு.. பிறகு ஆரும் குழந்தையள் இதைப் படிச்சு வன்முறையாளர்களானால் எனக்கு ஏன் சோலி)

அந்த நேரம் நிறைய சனமும் செத்துப் போட்டுதுகள். அதுவும் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலை புக்காரா எண்டொரு பிளேன்.. ஒரே நேரத்திலை எட்டு ரொக்கட்டுக்களை அடிக்க அங்கை இடம் பெயர்ந்து வந்து கொஞ்சம் களைப்பாறிக்கொண்டிருந்த சனத்திலை 200 பேருக்குக் கிட்ட செத்தவை.

உப்பிடி எல்லா இடத்திலையும் அடி! ஒரு மாதிரி ஆமி முன்னுக்கு வந்து இடங்களையெல்லாம் பிடிச்சிட்டுது. நாங்களும் யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ளை வந்து ஒரு சொந்தக்காரர் வீட்டிலை இருந்தம். பிறகு ஒரு ஐஞ்சு நாளிலை ஆமி திரும்பி போட்டுது. புலிகள் தான் அடிச்சு கலைச்சவை.

நாங்களும் ஒரு பத்து நாளில வட்டுக்கோட்டைக்கு போனம். (போற வழியிலை கொஞ்சம் கிட்டப் பாதை நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தைக் கடந்து தான் போகும். நாங்களும் அதாலை தான் போனம். அங்கை கட்டட குவியலுக்குள்ளையிருந்து மீட்க முடியாத உடல்த்துண்டுகளை அப்பிடியே எரிச்சுக் கொண்டிருந்தவை. அந்த நேரம் என்ரை சைக்கிள் காத்துப் போக இறங்கி அடுத்த சைக்கிள் கடை வரையும் உருட்டிக் கொண்டு போனன். அதே மாதிரி இன்னும் கொஞ்சம் பேருக்கு அந்த அந்த இடத்திலை காத்துப் போக அது ஒரு கதையாக கொஞ்சக் காலம் உலாவிச்சு. )

ஊரிலை இருந்தாலும் ஒரு பயமாத்தான் கிடந்தது. அதுவும் நான் சரியான பயந்தாங்கொள்ளி. எங்கையும் பிளேன் அடிச்சா ஒருத்தரும் என்னோடை வர வேண்டாம் எண்டிட்டு தனிய எங்கையாவது வயல்வெளியளுக்குள்ளை ஓடிப் போய் படுத்திருந்து கத்துவன். (ஆக்களோடு எண்டால் கூட்டத்தை கண்டு விட்டு குண்டு போடுவான் எண்டு பயம்.)

சரியெண்டு ஒரு கொஞ்ச நாளுக்குப் பிறகு நாங்கள் ரவுணுக்குள்ளை ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தம்.
அது யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு கிட்ட, கிட்டு பூங்காவிற்கு பின்னாலை இருக்கிற சேர்ச்சுக்கு பக்கத்திலை ஒரு ஒழுங்கைக்குள்ளை இருந்தது.

அதே மாதிரி யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் அரண்மனை வாயில், யமுனா ஏரி இதெல்லாம் எங்கடை வீட்டுக்கு கிட்டத்தான் இருந்தது. (இவ்வாறாக எனது வாழ்வின் பெரும் பகுதியை (4 மாசம்) ஆண்ட தமிழினத்தின் வரலாற்றுச் சின்னங்களுடனேயே கழித்திருக்கிறேன் என்பதனை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.)

நாங்கள் வரேக்கை கிட்டு பூங்கா கட்டி ஒரு வருசம் இருக்கும். எனக்கெண்டால் சந்தோசம் தாங்க முடியேல்லை. ராட்டிணத்தை அவ்வளவு நாளும் படங்களிலை தான் பாத்திருக்கிறன். அங்கை தான் நேரை பாத்தன். மனித வலுக் கொண்டு தான் இயங்கினது எண்டாலும் சுப்பர். அது போலத் தான் தொங்குபாலம் ஒண்டு இருந்தது.

அதுவரைக்கும் கலியாண, சாமத்திய வீட்டுச் சடங்கு வீடியோ கசெற்றுக்களிலை சிங்கப்பூரை காட்டேக்கை இப்படியான தொங்கு பாலங்களை சின்னச் சின்ன அருவியளை பாத்திருப்பம். நேரை பாக்கிறம் எண்டால் சந்தோசம் தானே.

அதுவும் அந்த நேரம் நல்லூர்த் திருவிழா நடந்தது. நல்லூர்த் திருவிழா பற்றி யாழ்ப்பாணத்திலை இருந்தவைக்கு சொல்லத் தேவையில்லை. ஐஸ்கிரீம் கடையள், விளையாட்டுச் சாமான் கடைகள் எண்டு சும்மா களைகட்டும். அதோடை விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் (எல்லாருக்கும் இந்தச் சொல்லு விளங்குது தானே) கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்துறது.

உண்மையா உள்ளை போனா ஆசையாத் தான் இருக்கும். ஒரு தனி நாடு எப்பிடிக் கட்டமைக்கப் பட வேணும்.. எப்பிடி வளங்கள் பகிரப் பட வேணும்.. அதின்ரை நிர்வாக அலகுகள் எப்பிடியிருக்கும்.. அதின் பொருளாதார கட்டமைப்பு எப்பிடியிருக்கும்.. எண்டெல்லாம் அங்கை காட்சிகளோடும் தரவுகளோடும் விளங்கப் படுத்துவினம்.

அதே போல புலிகளும் ஆயுதக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கினம் பிறிம்பாக! ஒரு மாசத்துக்கு முதல் நவாலியில குண்டு போட்டு 200 பேரைச் சாகடிச்ச புக்காரா ரக விமானம் ஒன்றை அதே கிழமை புலிகள் சுட்டுவிழுத்தினவை. அந்தப் பிளேனையும் அங்கை காட்சிக்கு வைச்சிருந்தவை. அதை நான் பார்த்தன். (நான் நினைக்கிறன் புலிகளை காரசாரமா விமர்சிக்கிறதுக்கு தகவல்கள் தேடுற ஆட்களுக்கு – அதாவது எப்பிடியாவது கடுமையாத் தாக்கிறது எண்டு முடிவெடுத்த பிறகு அதுக்கு தரவுகள் தேடுறாக்களுக்கு – நான் ஒரு தகவல் வழங்கியிருக்கிறன் எண்டு. அதெப்படி ஆலயங்களிலை ஆயுதக் கண்காட்டி வைக்க முடியும் எண்டு.)

சனமெல்லாம் திருவிழா முடிய அப்பிடியெ திரண்டு கிட்டு பூங்காக்கு வரும். பிறகென்ன நல்லுர்த் திருவிழாக்குப் போனால் கிட்டு பூங்காவிற்குப் போறது எண்டிறதும் ஒரு சம்பிரதாயமாப் போச்சு.

திருவிழா இல்லாத நாட்களிலையும் நான் அங்கை போறனான். அங்கை ஐஸ்கிறீம் வாங்கலாம். அதுக்குத் தான் பின்னேரங்களிலை அங்கை போறனான். (யாழ்ப்பாணத்திலை ஜஸ்கிரீம் சுவை கொஞ்சம் வித்தியாசமாத் தான் உணருகிறன். வேறு யாருக்கும் உந்த எண்ணம் இருக்கோ?)

கிட்டு பூங்கா வாசலில சங்கிலிய மன்னனின் சிலை ஒண்டு இருக்கு. அவர் தான் யாழ்ப்பாணத்தின்ரை கடைசி மன்னன். அதே மாதிரி உள்ளை கேணல் கிட்டுவின் சிலை ஒண்டு இருக்கு. நிறைய பூச்செடிகள், நீரேந்துப் பகுதிகள் எண்டு கனக்க உள்ளை இருக்கும்.

யாழ்ப்பாணத்தைப் பிடிக்கிறதுக்கு ஆமி ஒப்பரேசன் யாழ்தேவி எண்டொரு சண்டையைத் தொடங்கி பிடிக்க முடியாமல் தோத்தது. அந்த சண்டையிலை புலிகள் ஒரு ராணுவ ராங்கியை கைப்பற்றியிருந்தவை. அந்த ராங்கியும் கிட்டு பூங்காவிலை நிண்டது. நான் நினைக்கிறன் அது பழுதாப் போயிருக்க வேணும். (குழந்தையள் விளையாடுற இடத்திலை ராங்கிக்கு என்ன வேலை எண்டு ஆரும் கேட்கப்போகினமோ?)நான் அங்கை தான் ராங்கியை முதலில பார்த்தன்.

மற்றது.. யாழ்ப்பாணத்தாக்கள் கூடுதலா தங்கடை வீட்டில நடக்கிற கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள் இப்பிடியானதுகளை வீடியோ எடுக்கிற பழக்கம் உள்ளவை. கிட்டத்தட்ட அவையின்ரை கலாச்சாரம் மாதிரி இது. நான் நினைக்கிறன் இது ஏன் வந்ததெண்டால் அவையளில குடும்பத்திலை ஆகக்குறைஞ்சது ஒராளாவது வெளிநாட்டிலை இருக்கிற படியாலை (பெரும்பாலான குடும்பங்களில்) அவையளுக்கு அனுப்பத் தான் எடுக்கினம் எண்டு.

அப்பிடி வீடியோ எடுக்கேக்கை இடைக்கிடை சிங்கப்பூர் மாதிரியான நாடுகளிலை எடுத்த சில வீடியோ காட்சிகளை செருகிறவை. கிட்டு பூங்கா வந்த பிறகு நேரை அங்கேயே போய் எடுக்க தொடங்கி விட்டினம். அதுவும் வீடியோக்கு நல்லாத்தான் இருந்தது.

பேந்தென்ன.. 95 ஒக்ரோபர் இடப்பெயர்வு வந்திட்டுது. அதோடை யாழ்ப்பாணத்திற்கு ஆமியும் வந்திட்டுது. கிட்டு பூங்காவின் ஆயுட்காலம் ஒரு ரண்டு வருசம் தான் இருக்கும். ஆனா அந்தக்கால சிறுவர்களின் மனசுக்கு அது கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்.

யாழ்ப்பாணம் ஆமி பிடிச்சாப்பிறகு அந்தப் பூங்காவை ஆமி சிதைத்து விட்டது. காரணம் அது கிட்டுவின் பேரில இருந்த படியாத்தான் எண்டு நினைக்கிறன். கிட்டுவின் சிலையையும் உடைச்சிட்டினம். அதே மாதிரி முன்னாலிருந்த சங்கிலியனின் சிலையையும் உடைச்சுப் போட்டினம்.

கிட்டுவின் சிலையை உடைச்சதை விடுவம். தங்கடை எதிரியின்ரை ஒரு தளபதி எண்ட சினத்திலை அதை உடைச்சிருக்கலாம். சங்கிலியனின் சிலையை ஏன் உடைச்சவை? அது தமிழரின் மன்னன் எண்ட படியாலை தானே!

இல்லாட்டி சங்கிலியனையும் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி எண்டு நினைச்சினமோ தெரியாது.

By

Read More

ஏன் பெயிலாகிறோம்

ஏன் கல்வி ஒரு மாணவனுக்கு கடுமையாக இருக்கிறது.. ஏன் பலர் பரீட்சைகளில் தோற்கிறார்கள் என்கிற ஒரு ஆய்வு எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் சில சமயம் வந்திருக்கும். வராதவர்களுக்காக அதை இங்கை தாறன்!

முதலில ஒரு வருசத்தில இருக்கிற மொத்த நாட்களில 52 ஞாயிற்றுக் கிழமைகள் வருது. ஒரு மனிசனுக்கு ஓய்வு கட்டாயம் முக்கியம் எண்ட படியாலை அந்த 52 நாளும் படிக்க முடியாது. ஆக மிச்சம் 313 நாள் தான் படிக்க இருக்கு.

கோடை விடுமுறை எண்டு ஒன்று இருக்கு. அது ஒரு 50 நாள். சரியான வெயில். அந்த வெக்கையில கடைசி வரை படிக்க முடியாது. அப்ப இப்ப மிச்சம் 263 நாள் இருக்கு.

டொக்ரர்ஸ் என்ன சொல்லுகினம் எண்டால் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணி நேரத் தூக்கம் அவசியமாம். அப்பிடிப் பார்த்தால் ஒரு வருசத்தில இது 122 நாள்.. இப்ப மிச்சம் இருக்கிறது 141 நாள்.

சரி விளையாட்டு உடம்புக்கு தேவையான ஒரு விசயம். அதுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1 மணித்தியாலம் ஒதுக்கினால் அதிலை ஒரு 15 நாள் வந்திடுது. மிச்சம் இருக்கிறது 126 நாள்.

சாப்பிடுறதுக்கு, குடிக்கிறதுக்கு, கொறிக்கிறதுக்கு எண்டு ஒரு நாளைக்கு 2 மணித்தியாலத்தை ஒதுக்கலாம். அப்பிடிப் பாத்தால் வருசத்தில அதுக்கெண்டு 30 நாள் செலவாகுது. இப்ப மீதியாயிருக்கிறது 96 நாள்.

நாலு மனிசரோடை கதைக்கிறதுக்கு, சிரிக்கிறதுக்கு ஒரு 1 மணித்தியாலத்தை ஒதுக்குவோம். (தனிய இருந்தால் மன அழுத்தம் ஏதாவது வந்திடுமெல்லோ.) அப்ப அதிலை ஒரு 15 நாள் போயிட இப்ப இருக்கிறது 81 நாள்.

ஒரு வருசத்திலை 35 நாள் சோதினை நடக்குது. சோதினை நேரம் படிக்ககூடாது எண்டு பெரிய ஆராய்ச்சியாளர் சொல்லுகினம். அப்ப அதை விட்டால் மீதமா 46 நாள் படிக்கிறதுக்கு இருக்கு.

உந்த காலிறுதி, அரையிறுதி, திருவிழா, தேர் எண்டு 40 நாள் லீவு.. லீவுக்குள்ளை படிக்க வேணும் எண்டால் லீவே விடாமல் இருந்திருக்கலாமே? அதனாலை ஒரு 6 நாள் மிஞ்சுது படிக்கிறதுக்கு.

ஒரு வருத்தம், உடம்பு சரியில்லை எண்டு ஒரு வருசத்திலை ஒரு 3 நாள் ஒதுக்கலாம். (சரியான குறைச்சல் தான். ஆனாலும் படிக்கிற ஆர்வத்திலை சரியா குறைச்சிருக்கு).. ம் ம்.. இப்ப 3 நாள் மிஞ்சுது.

ஒரு கல்யாண வீடு, ஒரு புதுப்படம் இதுகளுக்கு போகாமல் இருக்க முடியுமோ? ஒரு 2 நாளை அதுக்கு ஒதுக்கலாம். (அதுக்கு மேலை முடியாது)..

இப்ப ஒரேயொரு நாள்த்தான் கிடக்குது படிக்கிறதுக்கு.

சரி படிக்கலாம்..

அட.. அந்த ஒரு நாள்த்தானே பிறந்த நாள்!

By

Read More

× Close