கருப்பையா பெருமாள்

கதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல் நமது மனதிற்கு நெருக்கமாக மாறிவிடுவதை அவதானிக்கலாம்.
பள்ளி நாட்களில் கற்பனை மனவோட்டத்தால் சாண்டில்யனின் ஜலதீபம் யவனராணி நா.பாவின் மணிபல்லவம் பிடித்தது.கல்லூரி புகுமுக வகுப்பில் ஜெகசிற்பியன் அகிலன் பிடிக்க ஆரம்பித்தது.பட்டவகுப்பில் இந்திய பொதுவுடமை கட்சி உறுப்பினன் ஆனபின்பு மணிக்கொடி கால ஆசிரியர்களும் ஜெயகாந்தனும் நெருக்கமானார்கள். அஞ்சல்துறை பணியில் சேர்ந்தபின் பாலகுமாரன் சிவசங்கரி அனுராதா ரமணன் ஹெப்சிபா ராகிரங்கராசன் சுஜாதா போன்றவர்கள் பிடித்துப்போனார்கள்.
சமீபத்தில் நான் படித்த நாவல் சயந்தன் அவர்களின் ஆதிரை. நாவலாசிரியரின் சில அனுபவங்கள் எனது சொந்த அனுபவங்களின் அடையாளங்களை கொண்டிருப்பதால் எனது மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.மலையக தமிழர்களின் வாழ்வு துயரங்களையும் சந்தோசங்களையும் சொல்லிச்செல்வதால் எனது சொந்த வாழ்வியல் அனுபவங்களை காண்கிறேன்.

எனது தகப்பனாரும் தனது இளமைக்காலத்தில் தேயிலைத்தோட்ட கூலியாக பீர்மேடு தேவிகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டாராம். சிறிது காலம் சென்ற பின் வால்பாறை பகுதியில் வாட்டர்பால்ஸ் தேயிலைத்தோட்டத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.சிங்கமலை போன்றே வாழ்விட மாற்றங்களை எதிர்கொண்டார்.ரொட்டிக்கடை என்ற பகுதியிலிருந்து வாட்டர்பால்ஸ் தோட்டத்திற்கு அப்பாவின் தோள்களில் அமர்ந்து பயணித்ததை சிங்கமலையின் தோட்டம் மாறிய காட்சி ஞாபகப்படுத்துகிறது. வல்லியாளைப்போன்றே எனது தமக்கையும் என்னை அருமையாக கவனித்துக்கொண்டது ஞாபகம்.

நாவலின் செல்வியின் வாயிலாக பலவிஷயங்களை ஆசிரியர்பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது.பாண்டிங் சென்று எதிரியான இலங்கை அரசோடு பேசிய புலிகள் ஏன் சகோதர போராளிகளோடு பேசவில்லை என்பது ஞாயமாக தோன்றுகிறது.1983 கலவரத்திற்குப்பின் உமாமமகேஸ்வரன் பாலகுமாரன் போன்ற எதிர்நிலைப்போராளிகளோடு புலிகள் பேசவே இல்லை எதிராக அவர்களை அழீப்பதில் இன்பம் கண்டதை ஜிரணிக்கமுடியவில்லை.

அத்தார் வாயிலாக ஈழாத்தமிழகத்தில் காணப்பட்ட ஏற்ற தாழ்வுகள் சகமனிதர்களின் உரிமைகளை அநியாயமாக பறிப்பது போன்றவிஷயங்கள் சொல்லாப்படுவது கவனிக்கத்தக்கது.”துவக்கினால் ” தான் ஈழத்தில் சாதீய வேற்றுமை களையப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது.

சுனாமி பேரழிவில் புலிகளின் உதவி விதந்தோதப்பட்டுள்ளது அருமை.

கடைசியாக செல்வி ஆத்தார் இறப்பு நமது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.

நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மனதிற்கு நெருக்காமான நாவலைப்படித்த மகிழ்வு.