ஹரி ராசலெட்சுமி

அதிகார மையங்களையும், ஆண்களையும் திடுதிப்பென்று ரத்துச் செய்துவிட்டு பெண்களுடைய தலையில், மற்றமைகளுடைய தலையில் கனவுகளை ஏற்றிவிடுவது பழியிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் தப்பிக்கும் அரசியல். 30 வருட போராட்டத்தில் பெண்களுடைய வகிபாகம் சிக்கலான ஒன்று. விடுதலைப்புலிகளை அதிகம் சாட முயலாத த்ராவிக் (2007), பெல்ட்ஸர் (2005) போன்றவர்களது கள ஆய்வுகளில், பெண் போராளிகள் ஆளுமையும், சுயாதீனமும் கொண்டவர்களாக வருகிறார்கள். கூர்ந்து வாசித்தால், இலங்கையின் ஒற்றைத் தேசியத்தை எதிர்ப்பதிலன்றி, வீடு, குடும்பம், தேசம், இயக்கம் போன்றவற்றுடன் இடையறாது பேரம்பேசி தமது பங்கேற்புக்கான வழிகளைக் கண்டுபிடிப்பதிலேயே பெண் போராளிகளுடைய உள்ளார்ந்த சுயாதீனம் (agency) அடையாளம் காணப்படுகிறது. தேசியத்தை, அதன் உள்ளார்ந்த கட்டுமானங்களை, போராட்டத்தை, அதன் வடிவங்களைத் தீர்மானிப்பதில், நிர்வகிப்பதில் இந்த ஆளுமை அனுமதிக்கப்படவே இல்லை. பராமரிக்கும், இன்முகம் காட்டும் உணர்நிலைத் தொழிலாளர்களாகவும் (emotional labourers), தேவைப்படும் நேரத்தில் ஆயுதமேந்திய உடல்களாகவும் பெண்கள் இடப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தலைமயிர் வெட்டுவது/வளர்ப்பது, நகை/ஜீன்ஸ்/பாவடை-சட்டை அணிவது போன்ற தெரிவுகளையொத்த, நெளிவு சுளிவான விதிமுறைகளுக்கூடாகத் தங்களுடைய பால்நிலைகளையும், இயல்புகளையும் தீர்மானிக்க, குழப்பிப் பார்க்க முனைந்த காலம் அது. இந்த விடுபடலைத் தேசியம் முற்றுமுழுதாகத் தன்னுடையது என்று சுவீகரிப்பது கயமைத்தனம். பெண்களுடைய உடலையும், அவர்களுடைய வெவ்வேறு தன்னிலையாக்கங்களையும் இலங்கைத் தமிழருடைய சமூக வாழ்வியலில் வைத்துத்தான் விளங்கிக் கொள்ள முடியுமே தவிர, தேசிய விடுதலைப் போராட்டம் என்கிற நீர்க்குமிழியில் அல்ல.

மலையகத் தமிழ் இலக்கியங்களும், பெண்ணிய இலக்கியங்களும் தமிழ்த் தேசியம் குறித்து முன்வைத்த குழப்பங்கள் எதுவும் லெட்சுமணனுக்கோ ஆதிரைக்கோ கிடையாது. பஞ்சமர் இலக்கியத்தின் தடயங்கள் எதுவுமே அத்தாரின் பாத்திரவார்ப்பைச் சீந்துவதில்லை. தத்தமது சமூகப் பின்புலம் தொடர்பான வெற்று அபிப்பிராயங்களை இக் கதாப்பாத்திரங்கள் அடிக்கடிச் சொல்லி வைக்கின்றன. முற்றிலுமாக காற்றில் வரையப்பட்ட சித்திரங்களாக, தமிழ்த் தேசியத்தின் சேவையில் அவை ஈடுபடுத்தப்படுவதன் முரணைக் கவனிப்பதும், மற்றமையில் உடலைத் தமிழ்த் தேசியத்தின் கற்பனைச் சட்டகங்களில் இருந்து விலக்கி எடுத்து இலக்கிய மரபில் வைத்து அணுக வேண்டியதும் விமர்சனத்தின் பொறுப்பு. ஆனால், ஆதிரைக்கு வாய்க்கப்பெற்ற விமர்சனங்கள் எல்லாமே அழிவு, இழப்பு, கையறு நிலை, பெண்மை என்று கிறக்க நிலைகளில் இருந்தே எழுவதைக் கவனிக்கிறேன். (கவிஞர் சுகனின் விமர்சனம் பொன்னான விதிவிலக்கு.) பெண் உடலைத் தொன்மத்துடன் பிணைத்துத் தமிழ்த் தேசிய புத்துயிர்ப்பிற்கான விதையுடலாக மீட்டெடுக்கலாம் என்ற பிற்போக்கான பிரேரணை, எந்த விமர்சனமும் அற்றுச் செல்லுபடியாகிற சூழல் எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாததன் துர்விளைவு என்றே கருதுகிறேன்.

5/வாசிப்புக்கும் எழுத்துக்குமாகச் சில வார்த்தைகள்

`தமிழினி` பதிப்பகத்தார் பரிந்துரைக்கும் மலினமான உணர்வெழுச்சிகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, மௌனங்களையும், பேச்சு நின்று போகும் இடங்களையும் பின் தொடர்வது நாவல் பிரேரிக்கும் அரசியலை மீறி வாசிப்பதற்கான முதல் வழியென்று நினைக்கிறேன்.

தனது குறுகலான அரசியலுக்குள் நின்றபடி, அதன் உள்ளார்ந்த கட்டமைவுகளை, குழப்பங்களை, வேட்கைகளை வெளிப்படையாக முன்வைத்திருக்கும் நாவல் என்றளவில் என்னால் `ஆதிரை`யை ரசிக்க முடிந்தது. ஒரு சில இடங்களை பரிவும், ஆமோதிப்புமாக நகர்ந்து சென்றேன். மற்றமைகள் நோக்கிய அதன் பிரயாசை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. போருக்குப் பிறகு எழுதப்படும் ஒருதொகைக் குப்பைகளோடு ஒப்பிடும் போது, ஆதிரையும் சரி ஆறாவடுவும் சரி தீவிரமான முயற்சிகள் என்பதில் சந்தேகங்கள் இல்லை. சில இடங்களில் சயந்தனுடைய கதை சொல்லும் திறனும், உழைப்பும் நன்கே புலப்படுகின்றன. அவருடைய எதிர்கால எழுத்துகளைப் படிப்பதற்கு நான் பின்னிற்கப் போவதில்லை.

அரசியலை இலக்கியத்தில் எழுதுவது பிரச்சனையில்லை, ஆனால் தன்னுடைய களம் இலக்கியம் என்பதை எழுதுபவர் முதலில் உணர்ந்துகொண்டாக வேண்டும். சயந்தனின் `ஆதிரை`யில் வருவதைப் போலவே, மைக்கேல் ஒண்டாட்ஜியின் அனில்`ஸ் கோஸ்ட்- நாவலிலும் அடிப்படை ஒரு எலும்புக்கூடுதான். இலங்கையின் அரசியல் வன்முறைக்குள் சிக்குண்டு மரணித்துப்போன மானுடத்தின் எச்சத்தையே அந்த நாவலும் தனது பேசுபொருளாகக் கொண்டிருந்தது. ஆனால் எந்த ஒரு அர்த்தத்திலும், அனில்`ஸ் கோஸ்ட் தடயம் தேடும் நாவல் அல்ல. அது தடயம் தேடுவதைப் பற்றிய நாவல். இந்த வித்தியாசம் இலக்கியத்தில் மிக, மிக அடிப்படையானது, முக்கியமானது.

ஒரு தேவதூதருக்காய் காத்திருப்பதைப் போல, விடுபட முயலும் எழுத்துக்காய், விடுபட முயலும் வாசிப்புகளுக்காய் காத்திருப்போம்.

(April, 2015. Surrey)