இரவி அருணாச்சலம்

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது.

சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர் சயந்தனையிட்டு எனக்கு அவ்வளவாக நம்பிக்கை எழவில்லை. அதனை வாசித்துமுடித்த கணத்திலிருந்து எனது கருத்தை நான் மாற்றிக் கொண்டேன். `கணிப்புக்குரிய கதைஞன்’ வந்து சேர்ந்தான்என்று `பொங்குதமிழ்’ இணையத்தில் என் கட்டுரை வெளியாயிற்று. அக்கட்டுரையின் இறுதியில் “கணிப்பிற்குரிய கதைஞன் சயந்தன் என்பதை அடுத்தடுத்து வரும் படைப்புக்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்று எழுதினேன்.
அந்த உறுதிப்பாட்டினை சயந்தன் ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ சிறுகதை மூலமே வெளிப்படுத்தியிருந்தார். `ஆதிரை’ நெடுங்கதையினூடு அவருக்குரிய சிம்மாசனம் தரப்பட்டது. தமிழில் மிகச்சிறந்த புதினங்களின் பட்டியலில் இதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.

1977 தமிழர் மீதான இனப்படுகொலையில் மலையகத்திலிருந்து சில தமிழர்கள் இடம்பெயர்ந்து வன்னியை வந்தடைகின்றனர். அது தான் `ஆதிரை’யின் தொடக்கப் புள்ளி அங்கிருந்து ஆரம்பித்த இடையறாத ஒப்பாரிப் பாடல்கள் முள்ளிவாய்க்கால் ஊழியில் சுற்றிச் சுழன்று, 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதனை கரைத்து விடவில்லை. சுமார் 35 வருடங்கள் நாங்களும் அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லபட்டு பயணிக்கின்றோம்.

`ஆதிரை’ புதினம் பேசிய அரசியல் எனக்கு ஒருப்பட்டது. ஓரிடத்தில் கூட முரண்பட்டுப் போனதில்லை. சிங்கள பௌத்த பெருந்தேசிய இனவாத அரசியலில் உண்மையின் திசை வழியில் நின்றே சம்பவங்கள் புனையப்படுகின்றன. 77 தமிழர் மீதான இனப்படுகொலையில் தொடங்குகின்றது 83 ஐத் தொடுகின்றது முள்ளிவாய்க்காலில் தொடர்கின்றது, முடிந்து விடவில்லை. என் மேலான ஆச்சரியம் இது தான். இலங்கைத் தமிழர் மீது நடாத்தப்பட்ட வன்முறைகளில் பெரும்பாலானவை இதில்பதியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக அல்ல. இரத்தமும் சதையுமான சாட்சியாக அவை பதியப்பட்டிருக்கின்றன.

சயந்தன் அதனை நேர்த்தியாக கையாள்கின்றார்.யாவற்றுக்கும் வகை மாதிரி பாத்திரங்கள் உருவாகின்றன. அப்பாத்திரங்கள் உயிருடனும், உணர்வுடனும் பிணைபடத் தவறவில்லை. தேவையற்றது என்று எப்பாத்திரத்தையும் சொல்லி விடமுடியாது. அது நமக்குள் கொண்ட ஊடாட்டம் நம்பகத்தன்மை வாய்ந்தது. உறவும்காலமும், உணர்வும் ஒரு நார் போல அத்தனை கண்ணிகளையும் இணைத்து விடுகின்றன.

பேரினவாத அலையில் சிக்குண்டு தள்ளாடும் தமிழ்த்தேசிய இனத்தின் பாடுகளை மாத்திரம் இவை பேசவில்லை. சிறு சிறு பாடுகளையும் பேசுகின்றது. பிரதேச வாதம், தலித்தியம், பெண்ணியம் யாவும் பிரச்சாரமாக அமையாது, கலைத்துவமாக பேசப்படுகின்றது.

இதில் முக்கியமாக நான் கருதுவது முள்ளிவாய்க்கால்ஊழி குறித்த சித்திரம், நாங்கள் சில காட்சிப்படுத்தல்களை பார்த்தோம், பலர் சொல்லக் கேட்டோம். ஆனால்,இத்தனை உயிர்ப்புடன் வேறெங்கும் நாம் உணர்ந்ததில்லை. உன்னி எழுந்த ஒரு படைப்பாற்றல் அது. முள்ளிவாய்க்கால் ஊழியை வேறு யாரும் இவ்வளவு சித்தரித்திருக்கிறார்களா என்றால் நான் வாசித்தவற்றில் இல்லைஎன்று மறுதலிப்பேன். முள்ளிவாய்க்கால் ஊழியை சிலர் விளம்பரங்களுக்காகவும், வேறு சிலர் வியாபாரத்திற்காகவும் பயன்படுத்தினர். ஆனால், சயந்தன் படைத்தது மானுடத்தின் ஓலத்தை வெளிக்காட்டுவதற்கே. அதனால்தான் அது உயிர்ப்புடன் திகழ்கின்றது.

‘ஷெல் பீஸ்’ என்னுள் ஏறியது, கந்தக மணத்தை சுவாசித்தேன். பதுங்கு குழியில் இறந்து போன உறவைப் புதைத்து, கண்ணீர் சொரிந்தேன். தியாகங்களை ஓம் என்று ஒப்புக்கொள்ள என் மனம் தயங்கவில்லை. வீரம் விழுந்துபட்டதை எண்ணி துடிதுடித்தது மனது. ஓம் அதுதான் படைப்பு, அதுவே தான் புனைவு. புனைவு என்றால் ‘தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று, பிறர் மீது அந்த உணர்வை கடத்தி கவியச் செய்வது’ என் அனுபவத்தைநான் எழுதுவது எளிது. அதில் புனைவு உண்டு தான்.என் அனுபவத்தை கலைத்துவ நெறிப்பட்டு அந்தந்தப் பருவத்துக்குரிய மனநிலைக்குள் சென்று படைப்பதும் ஒரு புனைவு தான். அது தனி மனித நிலை.

`ஆதிரை’ புனைவு வழிபட்டு ஓர் இலக்கியமாகி நிற்கின்றது. ஈழத்துப் படைப்புக்களில் ஆரம்பத்தில் அது சாத்தியமாகியது. துÖரத்துப் பச்சை (கோகிலம் சுப்பையா), இனிப்படமாட்டேன் (சி.வி.வேலுப்பிள்ளை), தில்லை ஆற்றங்கரையில் (இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்), காட்டாறு (செங்கையாழியான்) என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

சிங்கள மொழியில் மார்டின் விக்ரமசிங்க எழுதிய `கம்பேரலியா’ (கிராமப் பிறழ்வு) மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு புதினம். தமிழ் நாட்டில் புனைவுப் புதினம்என்பதில் வெற்றி பெற்ற நுÖற்றுக்கணக்கான நுÖல்களை என்னால் பட்டியலிட முடியும். கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன்), மரப்பசு (தி.ஜானகி இராமன்), ஆழிசூழ் உலகு(ஜே.டி.குறுஸ்) என்று அவை விரிந்து கொண்டே செல்கிறது.

ஈழத்துத் தமிழில் சயந்தன் `ஆதிரை’ என்ற புதினத்தைத் தந்து சிலபல வெளிகளை தன் புனைவினால் இட்டு நிரப்புகின்றார். ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், இருபது முப்பது மனிதர்கள், நான்கைந்து தளங்கள், பெரும்நிலப்பரப்பு, 35 வருடகாலம், இயற்கை, சூழல், தொழில்,இன்னும் எத்தனை அம்சங்கள் உள்ளனவோ அத்தனையையும் புனைவினுÖடாக சயந்தன் எமக்குள் ஏற்றுகிறார். `சந்தர்ப்பமே இல்லை இவ்வாறான ஒரு புனைவை நாம் கண்ணுறுவதற்கு’

சோபா சக்தி எழுதிய `பொக்ஸ் – கதைப்புத்தகம்’ புனைவு வழிப்பட்டு நமக்கு இன்னோர் உலகத்தையும் நிலத்தையும் காட்டியது. புனைவு வழிப்படுத்திய அந்தப் புதினத்தையும் நான் மெச்சுவேன். ஆனால், அது காட்டிய உலகம்மாயாலோகம். அங்கு வாழ்ந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமானவர் அல்லர், சோபாசக்தி பிடித்துப் பிடித்து வைத்த உருவங்கள் அவை. அங்கு ஒலிக்கும் குரல்கள் யாவும், சோபாசக்தியின் வாய் திறந்து வருபவை. மேலாகஅதன் பூடக அரசியல் சொல்லும் செய்தி மானுட தர்மத்திற்கு உரியதல்ல.

முடிவுக்கு வருகிறேன். இப்பத்தியின் நோக்கம் நிச்சயமாக ஒன்று தான். சயந்தன் எழுதிய `ஆதிரை’ எனும் புதினம் அரசியல், இலக்கிய தளத்தில் சகலராலும் வாசிக்கப்பட வேண்டியது ஒன்று. அதை நான் உரத்துச் சொல்கிறேன்.

 

http://orupaper.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *