பெயரற்றது – சிறுகதை

“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம் இவனுக்குக் கோபம் கிளம்பியது.

சோப்புப் போட்டவரைப்பார்த்து குரலை உயர்த்தி “அண்ணை வாங்கோ, எனக்கு இயக்கக்காரரைத் தெரியும். போய்ச் சொல்லுவம். வெளிக்கிடுங்கோ” என்றான். இப்போது கோயிற்காரர் வாளியைக் கீழே பொத்தென்று வைத்துவிட்டு இவனை முறைத்துப் பார்த்தார்.

“அண்ணை நீங்கள் உங்கடை சித்தப்பாட்டைச் சொல்லுங்கோ. அவர் இயக்கத்தில பெரிய ஆளெல்லே..” என்று தீபன் சொன்னபோது அவர் கழற்றிய கயிறையும் வாளிக்குள் செருகி வைத்தார். “கலிகாலமாப் போச்சு. எல்லா ஆச்சாரமும் போச்சு.. ஆரார் எங்கையெண்டு ஒரு முறையில்லாமல் போச்சு” என்று புறுபுறுத்தவாறே கோயிற்காரர் பின்வாங்கினார். இவர்களைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் கோபமாக திட்டியபடி போவது தெரிந்தது.

இவன் கயிற்றைக் கப்பியில் கொழுவி வாளியை கிணற்றினுள் விட்டான். சோப்புப்போட்டவர் காய்ந்து போயிருந்தார். “தம்பி கொஞ்சத் தண்ணி ஊத்தடா” என்றார்.

“என்ன ஆளண்ணை நீங்கள், நாங்கள் சின்னப்பெடியளே துணிஞ்சு கதைக்கிறம். நீங்களும் சேர்ந்து ஒரு வெருட்டு வெருட்டியிருக்கலாமெல்லே.. அதை விட்டுட்டு பாத்துக்கொண்டு நிக்கிறியள்” என்றான் இவன். இயக்கத்திடம் கட்டாயமாக முறையிட்டிருக்க வேண்டுமென்றான் தீபன். அவர் உடலோடு காய்ந்து போன சோப்பு நுரையை தண்ணீரால் கழுவிக்கொண்டே சொன்னார்.

“விடுங்கோடா விடுங்கோடா.. அவருக்கு நானொரு வெள்ளாளன் என்று தெரியாது போலயிருக்கு.”

குளித்துமுடித்து வரும்போது முகாமில் போராளிகள் கையசைத்தார்கள். இவனது கைகள் தன்னியல்பாக அசைந்தன. அவர்கள் புன்னகைத்தார்கள். அப்பொழுது இவனது உதடுகள் “பாவங்கள்” என்றொரு வார்த்தையை தன்னியல்பாக உச்சரித்தன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *