சினிமா

என்ர குறும் படம்..??

இஞ்சை சிட்னியில அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில இடம் பெற்ற நடன நிகழ்ச்சிக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றினை நான் தயாரித்திருந்தன். இது அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பதாக பார்வையாளர்களுக்கு திரையில் காட்டப்பட்டு பின்னர் வீடியோவின் தொடர்ச்சியாக மேடையில் நடனம் ஆரம்பமானது..

இது ஒரு குட்டிப் படம் எண்டதால இதை குறும்படம் எண்டு சொல்லலாம் தானே.. இந்தக் குறும்படத்தின்ரை இயக்குனரும் படத்தொகுப்பும் நான் தான்.. இப்ப பதிவேற்றியிருக்கிற இந்த வீடியோ எந்த அளவிற்கு எல்லாருக்கும் தெரியும் எண்டு எனக்கு தெரியா.. எனக்கு தெரியுது.. இன்னும் சிலருக்கும் பாக்க கூடியதாக இருக்காம்.. பார்க்க முடிந்தவர்கள் ஒரு + வும்.. பாக்க முடியாத ஆக்கள் ஒரு – வும் குத்திட்டுப்போங்கோ… ஹிஹிஹி.. முடிஞ்சால் பின்னூட்டமும் …..



By

Read More

குண்டு வீச்சிலிருந்து தப்பிப்பது எப்படி

ஆட்லறி

நெடுந்தூர எறிகணை

குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த படியாக சனம் கிலியடைஞ்சு போயிருந்த உயிர் கொல்லும் ஆயுதம்.

விமானக் குண்டு வீச்சுக்களின் போது எங்கு வருகிறது? எங்கு வீசப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது.

எறிகணை வீச்சுக்கள் எங்கு விழப் போகிறன என்பது எவருக்கும் தெரியாது. உண்மையில் அதனை எறிந்தவர்களுக்கு கூட அது தெரியாது. எறிகணைகள் விழுந்ததன் பின்பே இறந்தவர்கள் நீங்கலாக மற்றவர்களால் அது விழுந்த இடம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆட்லறிகள் எனக்கு நினைவு தெரிய முன்னமே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. ஓர் இரவு எங்கள் ஊரை நோக்கி 3 ஆட்லறிகள் ஏவப்பட்டனவாம். பாயில் படுத்திருந்த சிறு குழந்தையான என்னை அம்மா பாயுடன் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடினாவாம். அதன் பின்னரான காலங்களில் நிகழ்ந்த சில ஆட்லறி வீச்சுக்கள் எனக்கு லேசாக நினைவிருக்கிறது.

அப்புறம் இந்திய ராணுவ காலத்தில் இவை பயன் படுத்தப் பட வில்லை.

மக்களும் ஆட்லறியை மறந்து விட்டார்கள்.

மீண்டும் இலங்கை அரசுடன் யுத்தம் ஆரம்பிக்கிறது. ஆட்லறிகள் ஊர் புகத் தொடங்குகின்றன.

வடபகுதியில் பலாலி என்னும் இடத்திலிருந்த இராணுவ தளம் ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்தின் எந்த பகுதிக்கும் சென்று வெடிக்கக் கூடிய தகுதி?? ஆட்லறிக்கு இருந்தது.

ஆரம்பத்தில் சிறிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்கும். அது ஆட்லறி புறப்பட்டு விட்டது என்பதற்கான அறிகுறி. குத்திட்டானடா என்று கத்திக்கொண்டு உடனே எல்லோரும் குப்பிற விழுந்து படுத்து விட வேண்டும். விரும்பியவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளலாம். முடிந்தால் கந்த சஷ்டி கவசமும் செபமும் படிக்கலாம். வயது போன பழசுகள் கடவுளே எங்களை சாகடிச்சுப்போட்டு வாழ வேண்டிய வயசுள்ள இளசுகளை விட்டு விடப்பா என்று பெருங்குரலில் கத்தலாம்.

ஏதுமறியா குழந்தைகள் சத்தம் தாங்க முடியாமல் வீல் என்று கத்தக்கூடும் என்பதனால் தாய்மார்கள் குழந்தைகளின் காதுகளில் பஞ்சு அடைந்து விடுவது முக்கியம்.

பலத்த இரச்சலில் கூவுகின்ற சத்தமும் தொடர்ந்து வானத்தில் மீண்டும் ஒரு வெடிப்புச் சத்தமும் கேட்கும். இந்தச் சத்தம் உங்கள் தலைக்கு நேர் மேலே கேட்டால் நீங்கள் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். ஆட்லறி உங்களை தாண்டிச் சென்று வெடிக்கப்போகிறது. ஆகவே நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அடுத்த ஆட்லறிக்காக காத்திருக்க வேண்டும்.

வானத்தில் கேட்கின்ற இரண்டாவது வெடிப்புச் சத்தம் தொலைவினில் கேட்டால் மன்னிக்கவும் ஆட்லறி உங்கள் தலையிலும் வந்து விழலாம் என்பதனால் தொடந்தும் நீங்கள் படுத்தே இருக்க வேண்டும் அது தரையில் விழுந்து வெடிக்கும் வரை.

சிறு காயமடைகின்ற பலருக்கு உடனடியாக வலி தெரிவதில்லை. இரத்த ஓட்டத்தை கண்ணுற்ற பின்னரே தாம் காயமடைந்திருக்கிறோம் என அவர்கள் பெரும்பாலும் அறிந்து கொள்கிறார்கள். ஆகவே உங்கள் உடம்பில் எங்காவது இரத்த ஓட்டம் இருக்கிறதா என்பதனையும் பரிசோதிக்க வேண்டும்.

எல்லாம் முடிந்து உங்களுக்கு எதுவும் ஆக வில்லை என்றால் உங்களுக்கான சாவுத் திகதி இன்றில்லை என்றறிந்து கொண்டு (ஒரு வேளை அது நாளையாயிருக்கலாம்) வழமையான காரியங்களில் இறங்கலாம்.

அடடா நல்ல வேளை மணிமேகலைப் பிரசுரம் ஈழத்தில் இருந்திருந்தால் ஆட்லறியில் இருந்து தப்புவது எப்படி என்று புத்தகமே அடித்திருக்கும்..?

1995 இல் புலிகள் மண்டைதீவு என்னும் இராணுவமுகாம் ஒன்றை தாக்கினார்கள். அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக பலாலியில் இருந்து படையினர் ஆட்லறிகளை ஏவினார்கள். இரவு 1 மணி முதல் 250 க்கும் மேற்பட்ட ஆட்லறிகள் நகரப்பகுதியில் இருந்த எங்கள் வாழிடங்களுக்கு மேலால் சென்று வெடித்தன. இப்படியான ஷெல் வீச்சுக்களின் போது கொங்கிறீட் கட்டடங்களுக்குள் இருப்பதென்பது உயிருக்கே உலை வைக்கும் என்பதனால் நாம் மாட்டுக் கொட்டகைக்குள் விடியும் வரை தஞ்சமடைந்திருந்தோம்.

ஆக இப்படியான ஒரு ஆயுதம் புலிகளிடம் ஏன் இல்லை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. இன்னும் சிலர் சற்றே மிகைப்படுத்தி ஆட்லறி ஒன்று புலிகளிடம் இருந்தால் தமிழீழம் கிடைத்தது போலத்தான் என்றும் சொன்னார்கள்.
புலிகளின் ஆயுதக்கப்பல் வந்ததாம் என்று செய்திகள் கசிந்தால் கூடவே இந்த கேள்வியும் எழும். அப்ப ஆட்லறியும் கொண்டந்திருப்பாங்களோ?

வெளிநாட்டு ஆயுதச் சந்தைகளில் வாங்கி ஆயுதக் கப்பல்களில் ஏற்றி கடற்பகுதியினூடாக கொண்டு வந்து சேர்த்த ஆயுதங்களில் கடைசி வரை ஆட்லறி வரவே இல்லை.

இறுதியில் யாழ்ப்பாணத்தையும் இழந்தாயிற்று. பின்னர் மொத்த யாழ் குடா நாட்டையே இழந்தாயிற்று. ஆக ஆட்லறிக் கனவு அவ்வளவும் தானா..?

மீண்டும் முல்லைத்தீவில் வாழ்வு துளிர்க்கிறது.

ஒரு காலை விடியலே குண்டுச் சத்தங்களுடன் விடிகிறது. மீண்டும் இராணுவம் முன்னேறுகிறதா? இந்த மண்ணையும் இழக்கப் போகிறோமா? அரசு சொன்னது போல உண்மையிலேயே புலிகளை முற்றாக தோற்கடிக்கப் போகிறதா?

காலை புலிகளின் வானொலி செய்தி கேட்கின்றோம். எதுவும் சொல்ல வில்லை. அந்த நேரம் புலிகள் மீது ஒரு கடுப்பு வரும் பாருங்கள். கண்டறியாத றேடியோ நடத்திறாங்கள்.

நேரம் ஆக ஆக செய்திகள் வரத் தொடங்குகின்றன. முல்லைத் தீவில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வந்த புலிகள் நீண்ட கால இடைவெளியின் பின்னர் நடாத்திய இத் தாக்குதலுக்கு புலிகளின் தலைவர் ஓயாத அலைகள் 1 என்று பெயர் சூட்டுகின்றார்.

அடுத்த நாள் மாலைதான் அந்த செய்தி வருகிறது. சனத்தை எல்லாம் சந்தோசப் பட வைத்தது. அது தாங்க!

ஆட்லறி ரண்டு நம்ம வசமாச்சு.

என்னை ஆயுத வெறியன் என்று சொன்னாலும் பரவாயில்லை.(பாரதியாரே ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியிருக்கிறார் தானே?) எங்கள் உச்சி குளிர்ந்து போனது உண்மை தான்.

ஒரு வாரமாக தொடர்ந்த சண்டையில் 1500 படையிரைக் கொண்டிருந்த அம்முகாமினை புலிகள் கைப்பற்றிய கையோடு சண்டை முடிவுக்கு வந்தது.

சில நாட்களின் பின்னர் ஒரு நாள் பாடசாலை முடிந்து சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு ட்ராக்டர் பச்சை இலைகளால் உரு மறைப்புச் செய்யப்பட்ட ஒரு பெரிய உருப்படியை கட்டி இழுத்துக் கொண்டு வருகிறது. நீண்டிருந்த குழல் பெரிய சில்லு

வீதியெல்லாம் ஒரே ஆரவாரம்…

அந்த உருப்படி தான் ஆட்லறி.


Image hosting by Photobucket

அந்தக் காலங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்திருந்த பாடல் இது தான்

நந்திக் கடலோரம் முந்தை தமிழ் வீரம்
வந்து நின்று ஆடியது நேற்று – இன்று
தந்தனத்தொம் பாடி பொங்கி நடமாடி
இங்கு வந்து வீசியதே காற்று

கையில் வந்து சேர்ந்தது ஆட்லறி – அதை
கொண்டு வந்த வேங்கையை போற்றடி

(2000 களில் அரசும் புலிகளும் பல்குழல் பீரங்கி என்னும் ஒரு வகை ஆயுதத்தை பயன்படுத்தினார்கள். இது பற்றி எனக்கு நேரடி அனுபவம் எதுவும் இல்லை. ஆயினும் செக்கனுக்கு 10 க்கு மேற்பட்ட குண்டுகளை ஓரேயடியாக ஒரே இடத்திற்கு வீசும் இந்த வகை ஆயுதமே வடபகுதியின் சாவகச்சேரி என்னும் நகரினை இன்னுமொரு ஹிரோசிமா ஆக்கியது.

By

Read More

பதுங்கு குழியும் நானும்

யுத்த காலத்தில் நடந்தவையாயினும் சில சம்பவங்கள் சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான நான் அனுபவித்த அல்லது கேட்ட சில சம்பவங்களை அடுத்தடுத்து தரமுடியும் என்று நம்புகின்றேன்

இலங்கை அரசு தன்னுடைய ஆயுத வளத்தை காலத்திற்கு காலம் நவீனப்படுத்த அப்பாவிகளாகிய பொது மக்களும் தங்களுடைய காப்புக்களை நவீனப்படுத்தி கொண்டு வந்தார்கள்.

ஆரம்பத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் சாதாரண குண்டு வீச்சுக்களின் போது வீடுகளின் சீமெந்து சுவர்களே போதுமாயிருந்ததாம். எங்கள் வீட்டு சமையறை கட்டப்பட்ட போது பாதுகாப்பினை மனதில் வைத்தே மிகத் தடிப்பிலான சீமெந்து தட்டுக்கள் கட்டப்பட்டனவாம்.

காலம் கடந்தது. சாதாரண துப்பாக்கி சன்னமே சீமெந்து சுவரை சின்னாபின்னப்படுத்தும் அளவுக்கு அரசு நவீனமடைந்தது. இனி சுவரை நம்ப முடியாது. வீட்டுக்கொரு பதுங்கு குழி அமைக்க வேண்டும்.

வீட்டு வளவில் நின்ற இரண்டு பனை மரங்களும் தறிக்கப் பட்டன. நிலத்தை நீள் சதுர வடிவில் கிடங்காக்கி அதன் மேலே சிறு சிறு துண்டுகளாக்கப் பட்ட பனையை அடுக்கி அதன் மேல் மணல் மூடைகளை போட்டு மணல் பரவி பதுங்கு குழி தயார். தூர நின்று பார்த்தால் அண்மையில் புதைத்த சடலத்தின் சமாதி போல இருக்கும். (வேறு உதாரணமே இல்லையா)

விமானச் சத்தம் கேட்டாலோ ஷெல்லடியில் முதலாவது சத்தம் கேட்டலோ உடன் ஓடிப்போய் சிறிய வாசல் வழியாக அந்த இருட்டுக் குகைக்குள் புகுந்து விட வேண்டும். உள்ளை பாம்பு நிக்குமோ வேறேதாவது நிக்குமோ என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

ஒரு வழியாக எங்கள் வீட்டு பதுங்கு குழியும் கட்டிமுடிக்கப்பட்டாலும் இன்னும் குடிபூரல் நடத்துவதற்கான நாள் கிட்ட வில்லை. அட ஒருத்தரும் வந்து குண்டு போடவில்லை. ம்…. (ஆசையாசையாய் பார்த்திருந்த) அந்த நாளும் வந்தது. அது வரையும் கேட்டிராத விமானச் சத்தங்களோடு வனைக் கிழித்து வந்தன விமானங்கள்.

(விமானச் சத்தங்கள், துப்பாக்கிச் சத்தங்கள் இவற்றை கேட்டே அவை எந்த விதமான விமானங்கள் என்ன வகைத் துப்பாக்கிகள் என்றெல்லாம் சொல்லும் அசாத்திய திறமை எங்கடை குஞ்சு குருமன் எல்லாத்துக்கும் இருந்தது.)

இரைச்சல் காதைக் கிழிக்குது. ஒண்டில்லை. ரண்டு மூண்டு பிளேன். இண்டைக்கு எல்லாரும் சமாதி தான்

என்ரை கையை பிடிச்சுக் கொண்டு அம்மா பதுங்கு குழிப் பக்கம் ஓடுறா.. ஹே…ஹ… இண்டைக்கு எங்கடை பங்கருக்கு குடிபூரல். அதுக்கு முன்னரும் கள்ளன் பொலிஸ் விளையாடேக்கை நான் பங்கருக்குள்ளை ஒளிஞ்சிருக்கிறன் எண்டாலும் இண்டைக்குத்தான் அதிகாரபூர்வ விஜயம் எண்டு சொல்லலாமோ?

நான் அம்மா அம்மம்மா எல்லாரும் மெழுகுவர்த்தியை கொழுத்திப் போட்டு உள்ளை இருக்கிறம். சத்தம் விடேல்லை. என்ன நடக்குதே எண்டு தெரியேல்லை. ஆனால் ஒரு அதிசயம் குண்டு சத்தம் ஒண்டும் கேட்கேல்லை. ஏன் இன்னும் குண்டு போடேல்லை.

வந்தமா குண்டைப் போட்டமா என்றுவிட்டு போக வேண்டியது தானே. புலிக்கு மட்டும் தான் குண்டு போடவேணும் எண்டு அரசு ஒருக்காவும் யோசித்ததில்லையே. அது ஆடோ மாடோ சுப்பனோ சுப்பியோ ஆரிடையாவது தலையிலை தள்ளிப்போட்டு செய்தியிலை மட்டும் புலியை போட்டுத் தள்ளினன் எண்டு போடும்.

அப்ப இன்னும் ஏன் குண்டு போடவில்லை. எனக்கெண்டால் வெறுத்துப் போச்சு. மெதுவா அம்மா வெளியிலை வந்து பார்த்தா. அட மேலை பிளேன் அறம்புறமாச் சுத்துது எண்ட எந்த சிந்தனையும் இல்லாமல் சனம் றோட்டுகளிலை கூலாக ஓடித்திரியுது. இதென்ன அதிசயம். சாகத்துணிதல் எண்டிறது இதைத்தானோ

அப்ப தான் ஒரு அன்ரி வந்தா- உங்களுக்கு விசயம் தெரியுமே.. நான் றேடியோவிலை இப்ப தான் கேட்டன். இந்தியா பிளேனிலை வந்து சாப்பாடு போடுதாம். சனத்தை பயப்பிட வேண்டாமாம். எண்டு அவ சொன்னா

நான் வானத்தை ஆ வெண்டு பாத்தன். அப்ப இனி ஒவ்வொரு நாளும் சாப்பாடு போடுமோ பள்ளிக்குடத்திலை போடுறது மாதிரி

அதுக்கு பிறகு அந்த பதுங்கு குழிக்குள் நான் குண்டு வீச்சுக்காக போனதில்லை. கொஞ்ச நான் கவனிப்பாரற்று அது கிடந்தது. பிறகு அதை மூடி விட்டம். உண்மையில் அதற்கான தேவையும் இருக்க வில்லை. பதுங்கு குழி என்பது எங்கிருந்தோ வீசும் ஷெல்களிலிருந்தும் எட்ட நின்று பொழியும் குண்டுகளிலிருந்தும் மட்டும் காப்பாற்றவே.

By

Read More

அசைலம் அடிக்கேல்லையோ?

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.

“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

“அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?”

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

“என்ன காட் ஆச்சி” எண்டு நான் அவவை கேட்டன்.

“அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்.”

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

“ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்.” எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

“ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?”

தெரியாதெண்டு சொன்னன்.

“விசாரிச்சு பாக்கவில்லையோ?” எண்டு கேட்டார்.

“எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை.” என்று சொன்னன்.

“ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே…” எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

“வீட்டை வந்து போறியள் போல” அவளைப்பார்த்து தான் கேட்டா.

“ஓம். லீவில வந்து போறன்.”

“எந்த நாடு?”

“லண்டனுங்கோ..”

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

“தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

“இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு” எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

“அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?”

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

By

Read More

யாழ்ப்பாணத்தின் ஐஸ்கிரீம்…


Image hosted by Photobucket.com

இந்தப் படத்த நான் யாழ்ப்பாணத்தில இருந்து பதிஞ்சனான். இப்ப பாக்கவும் நாவூறுது..

By

Read More

× Close