சினிமா

அக முகம்-அதிகம் பிடிச்சது..

1
‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.

பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.

‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.

இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..

‘யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ’

‘நிகழ்ச்சி முடிய போய் பேசிப் பாக்கலாம். ஏதாவது கவிதையைப் பற்றித்தான் பேச வேணும். அவளுக்கும் கவிதை எழுத தெரிஞ்சால் எவ்வளவு நல்லது? ‘

‘எப்பிடியிருந்தது நிகழ்ச்சி.. நல்லாயிருந்ததோ’

‘ம்.. உங்கடை கவிதையள் நல்லாயிருந்தது.’

‘எங்கை படிக்கிறியள்’

‘…இஞ்சை தொகுப்புரை தர உம்மை கூப்பிட்டாச்சு போம்..’ பக்கத்திலிருந்தவன் தட்ட வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்தான். வியர்த்தது.

‘விசரர்.. ஒரு ஏ சி ஹோலை புக் பண்ணியிருக்கலாம்..’

குரல் செருமினான். அவள் இவனையே பார்த்தபடி.

‘அப்பொழுது சொன்னதையே இப்பொழுதும் சொல்கிறேன். நாம் ஆண்ட பரம்பரை. மீளவும் ஆளுவோம். அதை யார் தடுத்தாலும் எதிர்த்து போராடுவோம். ‘

2
காடு அமைதியாயிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த அமைதி கலையும்.

அவர்கள் அவசர கதியில் பங்கர்களுக்குள் நிறைந்த நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது..’ யாரோ ஒருவன் பாடினான்.

‘ச்சூய்… காட்டுக்குள்ளை கழுதை வரப்போது. பாட்டை நிப்பாட்டு.’ அது அவன் தான். எப்போதும் போலில்லாமல் இன்று அதிகமாய் பேசியும் சிரித்தும் கொண்டிருந்தான்.

பாடியவன் நிறுத்த ‘சரி சரி பாடு நான் பகிடிக்கு சொன்னன்.. நல்லாத்தான் இருக்கு’ என்றான்.

அவன் பாடவில்லை. எல்லோரும் அமைதியானார்கள்.

‘இன்னுமென்னடா ஒரு ஐஞ்சு மணித்தியாலம். பிறகு எல்லாம் சரி.. பிறகு இங்காலைப் பக்கம் அவன் வந்து பாக்க மாட்டான்.’

மீண்டும் அவனைத் தவிர எல்லோரும் அமைதியாயிருந்தார்கள்.

‘பாட மாட்டியோ.. சரி போ நான் பாடுறன்..’ அவன் பங்கருக்குள் இறங்கி சேற்று நீரை வெளியிறைத்தான்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது’

3
பஸ் சிரிப்புக்களால் நிறைந்தது.

‘பிறகெங்கையடா அவள்’

‘காணேல்லை. தேடினன் போயிட்டாள் போல’

‘சரி விடு.. எப்பிடி எங்கடை விசிலடி’

‘கலக்கிட்டியள்.. ‘

‘எங்கை வேட்டி..’

‘அது சும்மா.. உள்ளை ஜீன்ஸ் போட்டிருந்தன். நிகழ்ச்சி முடிய வேட்டியை கழட்டி எறிஞ்சிட்டன். அதை மனிசன் கட்டுவானே.. சும்மா ஒரு பிலிம் காட்டவெல்லோ அது கட்டினது. எப்பிடி என்ரை கவிதையள்’

‘அந்த மாதிரி.. நல்லா உணர்வு பூர்வமா இருந்திச்சு.. கேட்கறவனுக்கு கட்டாயம் ஒரு பீலிங் வந்திருக்கும்.’

உள்ளுக்குள் பெருமையாயிருந்தது.

‘ம்.. சரி நாளைக்கு படம் பாக்கப் போவமே? ‘

‘புதுசா தமிழ்ப் படம் ஒண்டும் வரேல்லையே’

‘தமிழ்ப்படத்துக்கு ஆர் போறது. இங்கிலிஷ் படத்துக்கு போவம்.’

4
எல்லோருக்கும் உடம்பு வலித்திருந்தது. அருகருகாக அமர்ந்திருந்தார்கள்.

பருத்தித்துறை வடையும் வெறுந்தேத்தண்ணியும் நன்றாகவிருந்தன.

‘வேறை என்னடாப்பா.. ஏதாவது கதையுங்கோவன்.’

இன்னும் சில நிமிட நேரங்கள் இருந்தன. அதன் பின்பு இந்தக் காடு அதிரும்.

அவன் அருகிலிருந்தவனின் முதுகில் சாய்ந்தான். அருகிலிருந்தவன் கண்கள் பனித்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.

வோக்கி இரைந்தது… ‘ரூ..ரூ.. கந்தயா.. ரூ..ரூ கந்தையா..என்னெண்டு சொன்னால்.. .

அவன் எழுந்தான். இடுப்பில் தோளில் என எல்லாவற்றையும் பொருத்தினான். எல்லோருக்கும் கை கொடுத்தான். இருட்டுக்குள் நுழைந்து திரும்பி கையசைத்து திரும்பி நடந்தான்.

நிமிடங்கள் கரைந்தன. காடு வெடியோசையூடு அதிர துரத்தே செந்நிற பிழம்பெழுந்தது. தொடர்ந்து சடசடத்தன. நடு இரவு தாண்டி விட்டது. இனி விடியும்.

5
வெளியே மழை வரும் போல இருந்தது. கட்டிலிலி கால் நீட்டிப் படுத்தான் அவன்.

அன்றைய பத்திரிகை பார்வையில் இருந்தது.

கவிதைப் போட்டி..

எழுந்து உட்கார்ந்தான். இன்றைய சமகால நிலையை பிரதிபலிப்பதாய் நூறு சொற்களுக்கு கூடாமலும் ஐம்பது சொற்களுக்க குறையாமலும் கவிதைகளை அனுப்புங்கள். பரிசு முதல்ப்பரிசு 5000….

பேப்பரும் பேனையும் எடுத்தான்.

‘விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு… ம்…. வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா’ என்று யோசிக்க தொடங்கினான். வெளியே இருட்டிக் கொண்டு வந்தது.

By

Read More

ஆம்பிளைப் பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

‘கட்டின சீலையோடை ஓடுறது’ எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

‘சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது’ எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை ‘நவீன பாஞ்சாலி’ எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ


Image hosted by Photobucket.com

By

Read More

ஞாபகிக்கையில்…

எல்லாருக்கும் வணக்கம்!.. சாரல் தொடங்கி 1 வருமாகப்போது.. டும் டும் டும்.. ஆகவே நண்பர்களே.. என்னவென்றால்.. அதாவது.. ஏதோ சொல்ல வந்தனே.. ஆ… Feb 21 திகதி வரை இது நாள் வரை.. ( எத்தனை பதிவென்று நான் எண்ணவில்லை.. ஆனால்) எழுதியவற்றில் எனக்குப் பிடித்த ஐந்து அல்லது ஆறு பதிவுகளை மீள இடப் போகின்றேன்…

படித்துப் பயன்பெறுக.. ஏற்கனவே எழுதியிருந்த கருத்துக்களில் இந்த ஒரு வருடத்தில் மாற்றங்கள் எனக்குள் இருப்பின்.. அடைப்புக் குறிக்குள்ளை சொல்லுறன்..

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.

அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.

அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!

எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.

‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”

அவளுக்குத் தெரியாது!

வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.

நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.

ஒரு காலை!

நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!

குடை எடுத்து விரித்தாள் அவள்.

அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின

லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்…. (டேய் கதையைச் சொல்லடா )

‘……” பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.

‘மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ”

‘மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????”

குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?

அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?

ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!

ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்…

அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!

உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.

நாசமாப் போக!!!

By

Read More

தமிழக மக்கள் பற்றி பிரபாகரன்

தமிழக மக்களுடனான விடுதலைப்புலிகளின் உறவு குறித்தும் போராட்டம் தொடர்பான அவர்களது நிலைப்பாடு குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் தெரிவித்திருந்த கருத்துக்களை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம்.


நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்

By

Read More

என்ன செய்ய போகிறது இந்தியா?

குமுதம் றிப்போட்டரில் சோலை என்பவர் எழுதியிருந்த அந்த முதல் கட்டுரையை வாசித்த போது அட என்ற உணர்ச்சியெழுந்தது. நக்கீரன், நெற்றிக்கண், ராணி இவ்வாறான பத்திரிகைகளில் அக் கட்டுரை வந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆயினும் இதுவரை குமுதத்தில் கண்டறியாத விடயம் அது!

மகிந்த அரசினை மிக கண்டித்தும், நையாண்டி செய்தும், விடுதலைப் புலிகளை உச்சத்தில் வைத்தும் எழுதப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதனை எழுதியவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகராக பணியாற்றியவர் என யாரோ சொன்னார்கள். அக் கட்டுரையின் ஒரு இடத்தில் புலிகளின் மீதான இராணுவ தளபதியின் எச்சரிக்கையை ‘சூரியனைப் பார்த்து பனித்துளிகள் எச்சரிக்கின்றன என்கிறார் கட்டுரையாளர்.

அக்கட்டுரையின் கருத்துக்கள் குமுதத்தின் கருத்துக்கள் இல்லைத்தான் என்றாலும் அது குமுதத்தினால் கேட்டு வாங்கி பிரசுரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதுகிறேன். ஏனெனில் இரண்டாவது முறையாகவும் குமுதம் றிப்போட்டரில் அதே கட்டுரையாசிரியர் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. மகிந்தாவின் இந்திய விஜயம், அதன் தோல்வி குறித்து அலசுகிறது அக் கட்டுரை.

அண்மையில் சு.ப.வீயின் செவ்வியொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘உங்களை எதிர்த்து எழுதியவர்கள் எல்லாம் இப்போது உங்கள் உண்மையான போராட்டத்தினை உணரத் தொடங்கி விட்டார்கள் என அவர் சொல்கிறார்.

அடுத்தடுத்ததாக சில ஈழ ஆதரவு மாநாடுகள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. வை.கோ உள்ளிட்ட தலைவர்கள் கொஞ்சம் மிகைபடக் கருத்துக்கள் தெரிவித்தாலும் ஈழ ஆதரவு அலையொன்று அங்கு மெதுவாக உருவாகியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. பெரிதாக பொங்கிப் பிரவாகிக்கும் அளவுக்கு ஈழத் தமிழர் ஆதரவு உருவாகவில்லையென்தே உண்மையாயினும் மக்களின் கருத்துலகில் மகிந்தா அரசுக்கு எதிரான சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

அந்தச் சிந்தனைகளே முதல்வர் ஜெயலலிதாவின் மகிந்தவுடனான சந்திப்பினை ரத்துச் செய்திருக்கின்றன நம்பப்படுகிறது. என்னதான் வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் நெருங்குகின்ற சமயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதை ஜெயலலிதா விரும்பாததன் வெளிப்பாடாகவே சந்திப்பு ரத்தாயிருக்கிறது.

ஒருவேளை தனக்குப் பாதகமில்லாத ஒரு சூழ்நிலையில் ஜெயலலிதா மகிந்தாவை சந்திக்கக் கூடும். ஆயினும் அவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே இங்கே நோக்கத்தக்கது.

தலிரவும் மகிந்தாவின் இந்திய விஜயம் பாரியளவு வெற்றியைத்தரவில்லை என்றே கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட இராணுவ ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை. புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும் படி ஆலோசனையே கூறப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் இந்தியாவையும் உள்ளிழுக்கும் மகிந்தாவின் நோக்கம் நிறைவேறவில்லை.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு விடயம் என்ன என்றால், அரைகுறை அதிகாரங்களுடன் திணிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே சமஷ்டி ஆட்சி முறை குறித்து சொல்லப்பட்டிருக்க மகிந்தாவோ ஒற்றையாட்சி முறை மூலம் மட்டுமே தீர்வு எனச் சொல்லுகையில் இந்தியாவின் ஆசி அவருக்கு கிடைக்குமா என்பதே.

இதற்கிடையில் இலங்கையில் உத்தியோகப் பற்றற்ற யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரே இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கின்றதா என கேள்வியெழுப்பும் நிலைவரை வந்தாகி விட்டது.

இராணுவத்தினரின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதற்கான பதிலடிகளும் அங்கே தினமும் நடைபெறுகின்றன. இராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் ஒரு உயிருக்கு 10 இராணுவத்தினரின் உயிரினைப் பறிப்போம் என புலிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் மீண்டும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை செல்ல இருக்கிறார். அங்கு அவர் மகிந்தாவையும் புலிகளின் தலைவரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்ரன் பாலசிங்கம் அவர்களும் வன்னி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுக்களை நோர்வேயில் நடாத்த அரசு சம்மதிப்பின் சமாதானம் அடுத்த படிக்கு ஏறி பின்னர் இழுபடும். இல்லையெனின் இப்பொழுதே முறியும்.

பேச்சுக்கள் இவ்வாறு இழுபடுவதை புலிகள் விரும்பவில்லை. பல விட்டுக் கொடுப்புக்களை செய்தும் உலக நாடெதுவும் சமாதானத்தின் உண்மையான எதிரி யாரென்பதை புரிந்து கொள்ளவில்லையாதலால் இனியும் நற்பெயரை எதிர்பார்த்து நிற்பதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் போல தெரிகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் மீது தடை விதிக்க ஆயத்தமாக இருக்கின்ற இச் சூழலிலும் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தமது இலக்கிற்கான நேரடிச் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதானது, எவர் தடை செய்தாலும் எமக்கென்ன? எங்கள் பாதையில் செல்வோம் என்னும் நிலையில் அவர்கள் நிற்பதனை உணர்த்துகிறது.

புலிகள் மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தால் அவர்கள் பலம் பொருந்திய இராணுவம் ஒன்றினை எதிர் கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இது அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு இராணுவ உதவிகள் வழங்க தயாராயுள்ளது என்பதனை உணர்த்துகிறது. வழங்கட்டும்! என்னுடைய கேள்வியெல்லாம் அமெரிக்கா ஆயுதம் வழங்கி தமிழனை அழிக்க நினைக்கிறது. அதெப்படி முடியும்? நான் ஒருவன் இங்கு ‘பெரியண்ணன்’ இருக்கின்றேன். விட்டுவிடுவேனா? நான் தான் ஆயுதம் வழங்கி தமிழரை அழிப்பேன் என இந்தியா சிந்திக்குமா என்பதே!

By

Read More

× Close