சினிமா

புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி..

அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும் லேபிள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்காக ஒரு வெறும் பதிவினை வெளியிட வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னைய பதிவு அதற்காகத் தான்.லேபிள்களைச் சுட்டுவதன் மூலம் திரட்டப்படும் பதிவுகள் இந்தப் பிரிவுகள் பதிவின் உள்ளடக்கத்திலேயே திரட்டப்படும்.

புளொக்கர் தரும் லேபிள் வசதிகளைப் பரிசோதித்த போது அவற்றின் லேபிள்களை சுட்டினால் அவை குறித்த முழுப் பதிவுகளும் மொத்தமாய் பதிவு உள்ளடக்கத்தோடு வருகின்றன. உதாரணமாக அனுபவம் என்ற லேபிளில் 17 பதிவுகள் இருப்பின் அந்த 17 பதிவுகளும் ஒரே பக்கத்தில் தோன்றுவது அத்துணை நல்லது அல்ல.

நான் இட்டிருக்கும் லேபிள்கள் அவற்றிற்குரிய பதிவுகளின் தலைப்புக்களையும் பதிவு பற்றிய மேலோட்டத்தினை மட்டுமே தரும். இது பக்கம் இலகுவில் தரவிறங்க ஏதுவாகிறது. என்னுடைய லேபிள்கள் பெரும் பிரிவுகள் என்ற தலைப்பில் பக்கத்தே உள்ளது.

இது பற்றிய தொழில் நுட்ப விபரங்களைப் பின்னர் எழுத இருக்கிறேன்.

By

Read More

பிரிவுகள்


By

Read More

என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்

அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது.

1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் எனக்கு எவரையுமே அறிமுகம் இல்லாதிருந்த காலத்தில் அச் சிறுகதை வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு மகனின் தாயின் உணர்வுகளை பேசிய அச்சிறுகதை எனது அச்சில் வெளிவந்த முதற் கதையாயினும் கடந்த வருடம் நின்று திரும்பி பார்த்த போது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கதை என் தொகுப்பில் இடம் பெறவும் இல்லை.

என் சிறுகதை அச்சில் வெளிவந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த கதைகளை எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 நாள் இடை வெளியில் கூண்டு என்னும் அடுத்த சிறுகதை வெளிவருகிறது. வெளிநாடு செல்ல வெளிக்கிட்டு இடைநடுவில் பிடிபட்டு திரும்ப இலங்கை வந்து மீண்டும் வெளிநாடு போகவே மாட்டன் என்றிருந்த வேளையில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு விசாரணையின் பின் விடுதலையான பின்னர் மீண்டும் வெளிநாடு போக விரும்புகின்ற ஒரு பெண்ணின் கதை. கதையோட்டத்தில் எனக்கு திருப்தி தந்த சிறுகதை அது.

இவ்வேளை சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். நான் கதை எழுதுவதையும் அவை பத்திரிகைகளில் வருவதையும் எனது பாடசாலை நண்பர்கள் நம்பத் தயாராய் இருக்க வில்லை. கதிர் சயந்தன் எண்ட பெயரில வேறை யாரோ எழுதுகினம். நீ பொய் சொல்லாதே என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அவர்களை நம்ப வைப்பதற்காக நான் எழுதிய கதைகளின் பாத்திரங்களின் பெயர்களுக்கு என் நண்பர்களின் பெயர்களை இட்டேன். அதன் பின்பே அவர்கள் ஒருவாறு நம்பத் தொடங்கினார்கள்.

அக்கரை என்று நான் எழுதிய ஒரு சிறுகதை எனது இந்திய படகு பயண அனுபவத்தை மையப் படுத்தியது. சிறுகதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அந்த சிறுகதையே இலகுவாக வழி சமைத்தது.

அது வரை காலமும் தினக்குரலில் மட்டுமே எனது சிறுகதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தில் தான் உயிர்ப்புவை நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். கொழும்பில் இயங்கிய தமிழாலயம் என்னும் அமைப்பின் ஊடாக அது வெளிவந்தது. (பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சந்தித்த கருத்து முரண்பாடுகள், கொள்கைப் போரிடல்கள், மனஸ்த்தாபங்கள் என்று எல்லாவற்றையும் நாங்கள் அப்போதே சந்தித்தோம் என்பது வேறு விடயம்)

பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பி விட்டு எப்ப வரும் என்று எதற்காக பார்த்து கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுது தான் நம்மிடமே பத்திரிகை இருக்கிறதே. அதிலேயே என் சிறுகதைகளை வெளியிடலாமே என்ற எண்ணத்தில் அதன் பின்னர் தினக்குரலுக்கு கதைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

முதலாவது உயிர்ப்பில் வந்த சிறுகதை ஐயோ சயந்தா நீயுமா என்று என்னை நானே கேட்க வைக்கின்ற கதை. முழுக்க முழுக்க பாலகுமாரன் பாதிப்பில் அது கிடந்தது. காதலை வெளிச்சொன்ன ஒரு இளைஞனுக்கு காதலிக்க வேண்டாம். கல்யாணம் கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகின்ற ஒரு பெண் தொடர்பான கதை அது. இளைஞன் தமிழனாயும் பெண் சிங்கள இனத்தை சேர்ந்தவளாயும் இருந்தார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி ஒரு கதையை நான் எழுதியிருக்கத் தேவையில்லை என்று தோன்றினாலும் அதுவே எனக்கு பல பெண் நண்பர்களை தேடித்தந்தது என்பது உண்மை… உண்மை… உண்மை…

அடுத்த உயிர்ப்பு இதழில் எனக்கு மன நிறைவு தந்த அர்த்தம் வெளிவந்தது. போராளிகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் சாதாரண மனித உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லிய அந்தச் சிறுகதையின் பெயரிலேயே என் தொகுப்பு இருந்தது. லீவில் வீடு வந்திருந்த போராளி முன் வீட்டில் இருந்த அவனோடு படித்த பெண் பற்றி கேட்பதும் அவளுக்கு கல்யாணம் முடிந்து அவள் வெளிநாடு போய் விட்டாள் என தாய் சொல்வதும் மெல்லிய இதய சுவரோரம் கூரிய முள் ஒன்று லேசாய் கீறிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுவதும் இப்படியாக பல விடயங்களை அச் சிறுகதை தொட்டது.

அந்த போராளி எழுதி வைத்திருந்ததான

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும் இரு விழிகள்

என்ற கவிதை என்னை மிகக்கவர்நத எனது வரிகளில் ஒன்று.

சில விதி முறைகளை மீறிய காரணத்திற்காக நானும் எனது நண்பன் சேயோனும் உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். (பலர் செய்வது போல நானும் அவனும் புதிய உயிர்ப்பு என்ற பெயரில் பத்திரிகை தொடங்குகின்ற முட்டாள்த் தனமான காரியத்தை செய்ய வில்லை. நானும் அவனும் விளம்பர பிரிவுக்கு நியமிக்கப் பட்டோம். அக்கால கட்டத்தில் தான் தமிழ் வெப் றேடியோ மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஆகியவற்றின் விளம்பரங்கள் தாங்கி உயிர்ப்பு வெளிவந்தது என்பதனை எங்களுடைய திறமை குறித்து உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இங்கே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ணுவதாம்.)

அக்கால கட்டத்தில் நான் எந்த சிறுகதையையும் உயிர்ப்புக்கு எழுத வில்லை. எங்கே எனது கதைகள் புறக்கணிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குட்டி குட்டி கவிதைகள் எழுதி வந்தேன்.

மீண்டும் உயிர்ப்பின் ஆசிரியர் குழுவில் நான் இடம் பெற்றேன்.(தண்டனைக் காலம் முடிவடைந்ததும்?????). அதுவே கடைசி வெளியீடு என்பது எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. பேசாமல் இதழின் கடைசி பக்கத்தில் கை கூப்பி நன்றி சொல்லும் பெண்ணின் படம் போட்டு நீங்கள் இது வரை காலமும் தந்த ஆதரவுக்கு நன்றி என்று போட்டு விடலாமா என்றும் யோசித்தேன்.

அந்த இதழில் ஒரு பெண்ணின் புனை பெயரில் நான் எழுதியிருந்த முகங்கள் கதையும் எனக்கு பிடித்தது.

கேள்விகள் என்கின்ற ஒரு சிறுகதை திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட கலைமுகம் என்னும் இதழில் வெளிவந்தது. அக்காலப் பகுதியில் கலைமுகத்தின் ஆசிரியராக இருந்தவன் எனது நண்பன் சோமிதரன். கிட்டத் தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அக் கதையை என்னிடமிருந்து வாங்கி இந்தா வருது அந்தா வருது என்று கொண்டிருந்தான். உது வேலைக்காவாது என்று கருதி விட்டு அச்சிறுகதையை நான் சுடரொளிக்கு அனுப்பியிருந்தேன். பிறகும் பல காலத்தின் பின் ஒருவாறு கலைமுகம் திருமுகம் காட்டியது எனது கதையோடு . நல்ல வேளை சுடரொளியில் வரவில்லை என்று ஆசுவாசப் பட்டபோது அட.. அடுத்த வார சுடரொளியில் அச்சிறுகதை வெளிவந்தது. சோமிதரனிடம் நான் நன்றாகவே வாங்கி கட்டிக்கொண்டேன்.

2003 ஏப்ரல் 20 மீண்டும் தினக்குரலில் எனது சிறுகதை வெளிவருகிறது. கலக்குறே சயந்து என்று என்னை நானே பாராட்டிக் கொள்கின்ற சிறுகதை அது. போர் மையம் கொண்டிருந்த காலத்தில் வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த இளைஞன் ஒருவன் போர் ஓய்ந்த பின் மீண்டும் வன்னிக்கு போகின்றான். அவனது நினைவுத் தடத்திலிருந்த ஒரு பெண் தொடர்பான கதை தான் அது. வெட்கம் என்ற பெயரில் அது வந்தது. (ஆட்டோகிராப் படம் வெளிவர முன்னமே அது வந்து விட்டது என்பதை இத்தால் அறிய தருகிறேன்.) அதுவே இது வரைக்கும் என்னுடைய இறுதிக் கதை.

(இவை தவிர காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகுதல் என்ற பார்வையில் அல்லது போர்வையில் கண்ட கேட்ட ஒரு காதல் பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு வித்தியாசமான தீர்வு கொடுத்து கதையாக்கி நான் எழுதுகின்ற சிறுகதைகள் சஜீ என்ற பெயரில் சுடரொளியில் அவ்வப்போது வெளிவரும். அம்மாவுக்கு கூட தெரியாமல். அம்மாவுக்கு தெரிஞ்சா படிக்கிற வயசில என்ன காதலும் கத்தரிக்காயும் என்று பேசுவா)
September 29, 2004

By

Read More

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..

பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த தமிழீழ எழுச்சிப் பாடல்களில் சிலவும் என் கடந்த காலங்களை நினைவு படுத்தியே நிற்கின்றன.

திலீபன் அழைத்தது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்ற பாடலைக் கேட்கையில் 87 இல் எங்கள் வீட்டின் கட்டட வேலைகள் நடந்த காலம் நினைவுக்கு வருகிறது.

கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என்னும் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் 93 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எனது ஆரம்ப நாட்கள் ஞாபகத்தில் வருகின்றன.

ஓடு ஓடு நீ ஓய்ந்து விட்டால் வரும் கேடு என்ற பாடலில் 95 இன் வரலாற்றுத் துயரம் யாழ்ப்பாண இடம் பெயர்வு நினைவில் எழுகிறது.

சின்ன சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊரிழந்தோம் என்ற பாடல் எனது வன்னி நாட்களை நினைவில் இழுக்கிறது.

ஆரம்ப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த சில எழுச்சி மிகு பாடல்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் பரப்புரைக்கு பயன்படுத்தப் படும் பாடல்களாக இருந்திருக்கின்றன.

ஊமை விழிகள் திரைப் பட பாடலான தோல்வி நிலையென நினைத்தால் அவ்வகையான ஒரு பாடல்.

பின்னர் தமிழீழ விடுதலைப் போரிற்கென தனித்துவமான பாடல்களை தயாரிக்கத் தொடங்கிய காலங்களில் தமிழக கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

தேனிசை செல்லப்பாவின் குரல் இன்னமும் எங்கள் நினைவில் நிற்கின்றது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், இசையமைப்பாளர் வைத்திய நாதன், மனோ ஆகியோரும் குறிப்பிடக் கூடிய அளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

என்ற பாடல் கேட்பவர்களின் கண்ணீரை வரவழைக்கும்.

மலேசியா வாசுதேவன் பாடிய
நடடா ராசா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவலைக் காளை நாளை விடிய போகுது
பொழுது சாயும் நேரம் – இது
புலிகள் வாழும் தேசம்

என்ற பாடல் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு பாடல்.

மனோ இன்னுமொரு பெண் பாடகியுடன் இணைந்து பாடிய பாடல் காதல் வயப்பட்டிருந்த இரு உள்ளங்கள் விடுதலைப் போரில் இணையும் பொருட்டு தம் காதலை தியாகம் செய்வதாய் அமைந்திருந்தமை கவனிப்புக் குரியது.

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

என்று ஆரம்பிக்கின்ற பாடல் இப்படி தொடர்கிறது.

காவலுக்கு வந்த பேய்கள்??? கடிக்கும் நாளையில் – ஒரு
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன். – தமிழ்
ஈழம் வந்தால் வாறேன்.

தவிர ஒரு சிறுமியின் குரலில் தமிழக பாடகி ஒருவர்(பெயர் நினைவில்லை) பாடிய காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
என்ற பாடல் அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருந்தது.

வாணி ஜெயராம் பாடிய வீசும் காற்றே தூது செல்லு என்ற பாடலின் பல வரிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்பது ஆச்சரியமாய் இருக்கிறது. அது இதுதான்.

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ – கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது..

கால ஓட்டத்தில் தமிழகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடல்கள் எங்கள் தாயக தேசத்திலேயே உருப் பெற தொடங்கின.

தாயகத்தில் வெளியான ஆரம்ப கால பாடல்களில் பாடகர் சாந்தன் மற்றும் சுகுமார் ஆகியோரின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சாந்தன் பாடிய எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம். தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம் என்ற பாடலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ஒரு சிறுவன் இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு பாட்டுப் பாடுமாறு இராணுவம் கேட்க பாடிக் காட்டினானாம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் கவிஞருமான புதுவை இரத்தினை துரை அவர்கள் பெருமளவில் எழுச்சிப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவரின் பாடல்களில் இது வரை என்னைக் கவர்ந்தவை கரும்புலிகள் என்கிற ஒலிப்பதிவுத் தட்டில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தான்.

அநாமதேயமான அந்த வரிகள் பல கேள்விகளின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் – இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யாரறீவீர்கள்.
October 31, 2004

By

Read More

தலைப்பெதுவும் கிடையாது

பள்ளியின் பின்புறமாக எல்லோருடைய சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவளதும் அவனதும் சைக்கிள்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது தான் அவள் அறிமுகமானாள்.

வித்தியாசமாக தெரிந்தாள்.

இப்பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவனது சைக்கிள் அவளினது சைக்கிளின் அருகே நிறுத்தப்படுகிறது.

இயல்பாகவே விழிகள் அவளை தேடத்தொடங்குகின்றன.

தினமும் பார்த்து விடத் துடித்தான்.

மற்றவர்களிடத்தினின்று தன்னை வித்தியாசப்படுத்த, தனித்துவமாய் திகழ திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

ரியூசனிலும் அவள் இணைந்து கொண்டாள்.

பின்தொடர்தல்கள் தொடர்கின்றன.

மனசுக்குள் பூப்பூக்கத்தொடங்குகின்றது.

அவள் எப்போதும் அவனையே பார்ப்பதாய் எண்ணங்கள்.

நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஒரு சில வேளைகளில் அதுவே உண்மையாயும் இருந்தது.

காதலிக்க தொடங்குகின்றான்.

எதிர்காலம், தொழில், திருமணம் என்பன குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், என்னையும் அவள் காதலித்தாக வேண்டும் என்ற ஒரே இலக்கில்

காதலிக்க தொடங்குகின்றான்.

காய்கள் நகர்கின்றன.

அடுத்த நாளினை அவளோடு எப்படி ஆரம்பிப்பது என்ற திட்டமிடலிலேயே இரவுகள் கழிந்தன.

‘இப்படிப் பேசினால், அவள் அப்படிப் பதில் சொல்லுவாள், அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னால், அவள் சிரிப்பாள்”

அவளின் கவனத்தை பெறும் ஒரே நோக்கில்

நடந்தான்.

இருந்தான்.

படித்தான்.

பாடினான்.

சிரித்தான்.

நண்பர்கள் அவர்களை ஜோடி கட்டி பேசத்தொடங்கினார்கள்.

பொய்யாய் கோபப்பட்டான்.

உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

மிகுந்த திட்டமிடலின் பின் ஒர வார காலம் வகுப்புக்களுக்கு மட்டம் போட்டான் அவன்.

‘உங்கடை Commerce கொப்பியை தாங்களேன். நோற்ஸ் எழுதிட்டு தாறன்”

முறைத்தாள்.

‘அதுக்கு வேறை யாரையும் பாருங்க”

அவமானப்பட்டது போல இருந்தது.

கோபம் வந்தது.

அவன் கேட்டால் அவள் தந்தே தீருவாள் என்ற கர்வம் உடைந்து போனது.

இருப்பினும், முயற்சி திருவினை ஆக்கியே தீர்ந்தது.

அவன் எது கேட்டானோ அந்த நோட்ஸ் கொப்பி அது அவன் கை வந்தது.

நான்கோ ஐந்தோ நாள் வைத்திருந்தான். அவ்வப்போது எடுத்துப் பார்த்தான்.

நெஞ்சில் அணைத்தான்.

அட, முத்தம் கூட இட்டானாம் அந்த வெற்றுக் காகித கொப்பிக்கு.

அந்த நாட்களில் அவள் கையெழுத்துப் போலவே எழுதவும் பழகினான்.

அடி முன் ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்ணே நான் அழகில்லையா (!!!!அட்ரா.. அட்ரா.. !!!)
உன் கனவுக்குள் வரவில்லையா..

அவளது கொப்பியில் அவளது கையெழுத்தில் எழுதினான்.

அசாத்திய துணிச்சல்.

அவள் மீதான ஈர்ப்பை நடவடிக்கைகளால் உணர்த்த தொடங்கினான்.

ஒரு முறை அற்லஸ் (உலக வரைபடம்) கேட்டாள்.

அதை அட்ரஸ் என்று அவசரப்பட்டு விளங்கிக் கொடுக்க,

அதில் அவமானப்பட்டுப் போனான்.

ஏற்கனவே வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த ஆங்கில அறிவு பற்றி என்ன நினைத்திருப்பாள்?

அவனை மலேரியா தாக்கியது. ஒரு வார காலம். அதே காலத்தில் அது அவளையும் தாக்கியது.

அவனுக்கு காய்ச்சல் வந்தால் அது அவளுக்கும் வருகிறது. கணக்குப் போட்டான்.

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளை யாரோ படம் எடுக்க அவள் அந்த யாரோவோடு சண்டை பிடிக்க

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளுக்கு யாரோ காதல் கடிதம் கொடுக்க அவள் அதை கிழித்தெறிய

சந்தோசப் பட்டான்.

குதூகலம்

கிளுகிளுப்பு.

அவளோடு படித்த ஒருவன் அவளிடம் கொப்பி கேட்க அவள் கொடுக்க

கவலைப் பட்டான்.

…………………………….

…………………………….
October 10, 2004

By

Read More

× Close