ஆமியும் அரிசியும்

இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும்.

பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!
ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?) என்ற ஒரு வகைப் பாண் அப்ப ரொம்ப பிரபல்யம். கொஞ்சம் பிந்திப் போனாலும் பாண் முடிந்து அந்த ஆட்டுக் கால் விசுக்கோத்துத் தான் கிடைக்கும்.

எனது பெரியப்பா விடிய வெள்ளனவே என்னையும் ஏற்றிக் கொண்டு சைக்கிளில் பறப்பார். சில வேளைகளில் பாண் கிடைக்கும். சில வேளைகளில் ஆட்டுக்கால் விசுக்கோத்துத்தான்.

இதற்கிடையில் பங்கீட்டு அடிப்படையில் இந்திய ராணுவமே உணவு வழங்க தொடங்கியது. அரிசி மா சீனி பருப்பு மற்றும் எண்ணெய் என்பன வழங்கப்பட்டன.

பொதுவாக இள வயதுள்ளவர்கள் இவற்றை வாங்க செல்வதில்லை. வயது போனவர்கள் தான் அதிகம் போவார்கள்.

எப்போதெல்லாம் ஆமி சாமான் குடுக்குதாம் என்று கேள்விப் படுகிறோமோ ( ஒழுங்கு முறையில் வழங்கப்படுவதில்லை.) ரண்டு மூன்று பைகளை எடுத்துக் கொண்டு ஓடுவது தான் எங்களுக்கு வேலை.

அப்ப சிறுவர்கள் தான் ரொம்ப Busy..

யாராவது இளம் வயதுள்ளவர்.. அல்லது கொஞ்சம் வலுவான தோற்றமுள்ளவர் எங்காவது தூர இடங்களுக்கு போவதென்றால் ஒரு சிறுவனையோ சிறுமியையோ தன்னுடன் கூட்டி செல்வார்.

அப்ப தான் ஆமி ஒண்டும் செய்யாது எண்ட ஒரு ஐதீகம்!!!

எங்காவது ஒரு சந்தியில் ஆமி எல்லாரையும் மறிக்கும். எல்லாரும் இறங்கி உருட்டிச் செல்ல வேணும். ஒரு இடத்தில ஒருவர் முகத்தை முழுவதுமாக மறைத்து நிற்பார். அவரைப் பார்த்தவாறு நடந்து செல்ல வேண்டும்.
அவர் இல்லை என்று தலையாட்டினால் மேற்கொண்டு போகலாம். ஆம் என்றால் அவ்வளவும் தான்.

அப்படி தலையாட்டுபவரை தலையாட்டி என்று செல்லமாக கூப்பிடுவோம்.

சந்தியிலை தலையாட்டி நிற்குதாம் வேறை றோட்டாலை போங்கோ இப்படி அடிக்கடி யாராவது சொல்ல கேட்கலாம்.

அந்தத் தலையாட்டி தன்னுடைய எந்த சொந்தப் பிரச்சனையை – அது காணிப் பிரச்சனையோ ,வேலிப் பிரச்சனையோ – மனசில் வைச்சும் தலையாட்டலாம். அப்படி தலையாட்டினால் அதுவே முடிந்த முடிவு.

இவ்வாறான ஒரு அதி நம்பகத்தன்மை வாய்ந்த எதிரிகளைக் கண்டறியும் (கண்டறியாத!!!) முறையினை ராணுவம் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

சிலர் சிறுவர்களை விட குழந்தைகள் இன்னும் பிரயோசனமானவர்கள் என்று கருதி யாருடை குழந்தைகளையாவது தூக்கி செல்வதுமுண்டு.

வெயிலில் குழந்தைகள் அழ கூடிய சீக்கிரம் தங்களை ஆமி விடும் என்கிற ஒரு நம்பிக்கை!

இவ்வாறான ஒரு புறச் சூழ்நிலையில் !!! நானும் ஆமியிடம் சாமான் வாங்க போனேன்.

வழமையாக நானும் பெரியப்பாவும் தான் போவது வழக்கம். சில நேரங்களில் அம்மம்மாவும் வருவா.

வட்டுக் கோட்டைச் சந்தியில் சாமான் குடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட வரிசை

ஒரு ஆமி மா குடுக்கும். (அவர் முழுதும் வெள்ளையாய் நிற்பார்). இன்னொருவர் அரிசி. (இப்பிடி அரிசி எண்டு எழுதும் போது பசிக்கு அரிசி என்ற பதமும் வாய்க்கு அரிசி என்ற பதமும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது.)

நாங்கள் ஒரு ரண்டு மணித்தியாலமா வரிசையில நிற்கிறம். எங்கடை முறை வர இன்னும் நேரமிருக்கு. இதுக் கிடையில எங்கட அம்மம்மா ஆமிக்கு கிட்ட போய் என்னைக் காட்டி சின்னப் பிள்ளையோடு வந்திருக்கிறன். (அப்ப நான் சின்னப் பிள்ளை !) கெதியா விட முடியுமோ எண்டு கேட்டா. அதுக்கு அந்த ஆமி மற்ற எல்லாரையும் காட்டி ஏதோ சொன்னான்.

ம்.. வந்திருந்த முக்கால்வாசிப் பேர் குழந்தைகளோடும் சிறுவர்களோடும் தான் வந்திருந்தவை.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கிட்ட வந்திட்டம். எனக்கு கால் வேறை உளையுது. நான் சிணுங்க பெரியப்பா சினக்கிறார்.

சரியா கிட்ட வராட்டிலும் இண்டைக்கு சாமான் வாங்கிடுவம் எண்டு நம்பிற அளவுக்கு கிட்ட வந்தாச்சு.

திடீரென்று ஒரு ஜீப்பொண்டு வந்து நிண்டது. அதிலை இருந்து பட படவெண்டு குதிச்சினம். எல்லாம் இழுத்துப் பூட்டிச்சினம்.
அந்தக் காம்பிற்கு அடுத்த காம்பில பொடியள் கிரேணைட் எறிஞ்சு ரண்டோ மூண்டு ஆமி செத்துப் போச்சுதாம். அதுவும் இங்கையிருந்து போய்த்தான் எறிஞ்சவங்களாம். எல்லாரையும் உடனை செக் பண்ண தொடங்கினாங்கள்.

சாமான் தருவதை நிப்பாட்டியதாயும் இன்று போய் இனி நாளை வரும் படியும் சொன்னார்கள். (இராம நாட்டிலிருந்து வந்தவர்கள் தானே! இதைச் சொல்லத் தான் நேற்றொருவர் பகிடியாய்ச் சொன்னது நினைவுக்கு வருது. இலங்கைக்குள் நுழைந்த முதல் றோ உளவாளி அனுமர் தானாம்.)

பிறகென்ன.. நான் வெயில் என்று சிணுங்க பெரியப்பா தலையிலை ரண்டு தட்டு தட்டி கூட்டிக் கொண்டு போனார்.

நான் சிணுங்கியதால் தட்டினாரா அல்லது சாமான் தரவில்லை என்று தட்டினாரா என்று தெரியவில்லை.

பிற்குறிப்பு: பலதடவைகள் இப்படி இடை நடுவில் வந்திருக்கிறோம். இப்படி ஏதாவது நடந்திருக்கும். அல்லது சாமான் முடிந்திருக்கும். இருந்தாலும் இன்று போய் இனி நாளை வா என்று சொன்னாலும் நாளை போய் வென்று வந்த சம்பவங்களும் இருக்கிறது.

By

Read More

யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்!

அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம்.

ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான பெயருகளிலை நிறைய தோட்டங்கள். ஆச்சி தோட்டம் G.S காணி வெள்ளைக் கேற் (Gate) சிவத்தக் கேற் பத்தேக்கர் காணி எண்டு உப்பிடி நிறைய வித்தியாசமான பெயர்கள்.

நாங்கள் வந்திறங்கின தோட்டம் ஆச்சி தோட்டம். அது என்ன காரணப்பெயரா என்று எனக்கு தெரியாது.

அதுக்குள்ளை ஒரு மண்ணாலான கட்டிடம் இருந்தது. தேங்காய் எண்ணைக்கு பாவிக்கிற கொப்பறாக்களை மூட்டை மூட்டையாக கட்டி அதுக்குள்ளை வைச்சிருந்தினம்.

எண்ணை வாசம் சும்மா அந்த மாதிரி கமகமக்கும்.

அதுக்குள்ளைதான் அண்டைக்கு இரவு படுத்தம்.

இரவு வந்தபடியால எனக்கு இடம் வலம் எதவும் தெரியேல்லை. நல்ல களைப்பு வேறை.. அப்பிடியே நல்ல நித்திரை…

விடிய நல்லா நேரஞ்செண்டுதான் எழும்பி பாத்தன்..

என்ரை கடவுளே.. ஏதோ நடுக் காட்டுக்குள்ளை கொண்டு வந்து விட்ட மாதிரி கிடந்தது.

பாக்கிற இடமெல்லாம் தென்னை மரங்கள்.. அதை தாண்டினா காடுகள்..

ஏதோ ஒரு வனாந்தரத்தில வந்து நின்ற மாதிரியான ஒரு வெறுமை..

என்ன செய்ய முடியும்.. வந்தாச்சு இனி வழியைப் பாக்க வேணும்.
நாங்களும் ஒரு வீடு கட்டுவதென்று முடிவாச்சு. அதுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த காணின்ரை பெயர் பத்து ஏக்கர் காணி.

அதுக்கு ஒரு காரணம் இருந்தது. வன்னியிலை சீமெந்து கட்டு கட்டப்பட்ட கிணறுகள் அரிது அல்லது கிடையாது. ஆனால் அந்த காணிக்குள்ளை இருந்த கிணறு அப்பிடி கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல தண்ணி கிணறு இருந்த ஒரே காணியும் அதுதான்.

ஆனால் இன்னொரு பக்கத்தாலை அந்தக் காணியில வேறை சில விசயங்களும் இருந்தது.

அதன் ரண்டு பக்கங்கள் காட்டோடு இணைந்திருந்தன. இன்னொரு பக்கம் ஒரு ஒற்றை வீதியூடும் மற்றயது ஆச்சி தோட்டத்துடனும் இணைந்திருந்தது.

காட்டோடு இணைந்திருந்தமையால் யானைகளின் தொல்லை இருக்குமென்று சொன்னார்கள்..

அதுவும் அந்த தோட்டத்திலை இளம் தென்னைகள் தான் நாங்கள் இருக்கும் போது இருந்தன. அதனால யானைகள் கட்டாயம் வரும் எண்டும் சொல்லிச்சினம்.

இருந்தாலும் பறவாயில்லை எண்டு நாங்கள் தொடங்கிட்டம் வீடு கட்ட. காடுகளிற்குள் அனுமதியின்றி மரம் தறித்தல் சட்டவிரோதமாக புலிகள் அறிவிச்சிருந்தவை. அதனாலை அனுமதி பெற்று மரங்களை தறிச்சு களி மண்ணிலை கல் அரிஞ்சு ஒரு மாதிரி வீட்டை எழுப்பிட்டம்.

நானும் பள்ளிக்கூடம் ரியூசன் நண்பர்கள் எண்டு திரிய பழைய வெறுமையும் மறந்து போச்சு.

மிச்சம் வரும்!

By

Read More

மீண்டும் வணக்கம்

ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக ஒரு படம்! புது வீட்டில் படங்கள் எல்லாம் சரியாக வருகிறதா என பரிசோதிக்க இது.



ஒஸ்ரேலிய பழங்குடியினர் சிட்னியில் எடுக்கப்பட்டது.

பிற்குறிப்பு: தமிழில் பின்னூட்டம் தொடர்பாக எல்லா இடத்திலும் சொன்னது மாதிரி முயற்சித்து விட்டேன். ஒரு பயனும் இல்லை. பின்னூட்டத்தினை அனுப்பும் போது ERROR வருகிறது. யாராவது ஏதாவது சொல்லுங்கப்பா….

By

Read More

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது.

அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற எண்ணமும் ஒருங்கே உண்டாகின்றன.
சக்தி சொல்லியதை வைத்துப் பார்த்தால் நமது அதிபர் சற்றுக் கடுமையாகத் தான் கருத்து வெளியிட்டிருக்கிறார் போல தெரிகிறது.

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாகவும், சிறு சிறு விடயங்களிற்கு எல்லாம் அரசிலிருந்து விலகப் போவதாக மிரட்டுவதாகவும்,அவ்வாறு விலக விரும்பினால் அவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அரச பங்காளிக் கட்சியான ஜே வி பியின் நடவடிக்கைகளால் சந்திரிகா எவ்வளவுக்கு நொந்து போயிருக்கிறார் என்பதை அவரது கருத்துக்கள் சொல்கின்றன.

பார்க்கலாம்!

”கண் கெட்ட” பின்னாலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்

By

Read More

× Close