ஞாபகிக்கையில் 1

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.

அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.

அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!

எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.

‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”

அவளுக்குத் தெரியாது!

வீதியின் வளைவுகளில் மறைந்திருந்து அவள் வருகை தெரிய ஓடிப் போய் அப்போது தான் வருவதாய் அவன் உணர்த்துவது அவளுக்கு தெரியாது.

நடக்கின்ற அந்த பத்து மணித்துளிகளில் அவர்கள் அரசியல், குண்டு வெடிப்புக்கள், சினிமாக்கள் என்று பலதும் பத்தும் பேசிக் கொள்வார்கள்.

ஒரு காலை!

நடக்கின்ற வழியில் மழை தூறத் தொடங்கியது!

குடை எடுத்து விரித்தாள் அவள்.

அவன் மேல்த் தூறல்கள் விழத் தொடங்கின

லேசாய் இடித்தது! காலைக் குளிரில் மழையின் குளிர் வேறு! மின்னல் தெறித்தது. தெறிப்பில் அவள் முகம்…. (டேய் கதையைச் சொல்லடா )

‘……” பெயர் சொல்லி அழைத்தாள் அவள்.. என் பெயர் இத்தனை அழகா என்று அவன் நினைக்க முன்பாக (ஐயோ.. ஐயோ..) அவள் சொன்னாள்.

‘மனசுக்குள்ளை ஒண்டுமில்லாட்டி குடைக்குள்ளை வாங்கோ”

‘மனசுக்குள்ளை ஒண்டும் இல்லாட்டி????”

குடைக்குள் போகாமல் மனசுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என உணர்த்தலாமா?

அல்லது மனசுக்குள்ளை கிடக்கிறது மண்ணாங்கட்டி! கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோமா?

ஆயிரம் சிந்தனைகளோடு அவன்!

ஆனால் தூறலடித்த மழை அப்பவே நின்று போனது! மழையாக பொழியாமல்…

அவள் குடையை மடித்து வைத்துக் கொண்டாள்!

உடனடிக்கு நினைவுக்கு வராத மழைக்குப் பொறுப்பான கடவுள் மீது கோபம் வந்தது அவனுக்கு.

நாசமாப் போக!!!

By

Read More

உயிராய்.. உணர்வாய்


பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட!

போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான்.

என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு.

சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் வித்தியாசம் தானே.. அது தான் இதிலை ஒலி வடிவிலை இணைச்சிருக்கிறன். எங்கை காணவில்லை எண்டு தேடுறியளோ?

வரும். வரும் என்ரை கதை முடிய பாட்டு வரும். நானும் கொஞ்சம் கதைக்கிறேனே!

பாட்டை பாடியிருக்கிறது சந்துஷ் பார்த்தி மற்றது நிரோஷா.. சிங்களப் பாடகியான நிரோஷா சிறீலங்கால பேசப்படுற ஒரு ஆள். அவ ஏதோ ஒரு தென்னிந்திய தமிழ்ச் சினிமாவிலையும் பாட்டொன்று பாடியிருக்கிறா!

மற்றது இலங்கையிலை சமாதானம் வேண்டி வெண்புறாவை வரச் சொல்லியும் ஒரு பாட்டு அவ பாடினவ. பாட்டு பாடி பத்து வருசமாயிருக்கும். வெண்புறா தான் இன்னும் வரேல்லை.

அதை விடுவம். இந்தப் பாட்டு ஆராலை எனக்கு கிடைச்சது எண்டதை நான் சொல்லாமல் விடேலாது. அப்பிடி விட்டால் நண்பன் எண்ட பேரிலை ஒராள் வந்து உங்களுக்கு நன்றி சொல்லுற பழக்கம் எல்லாம் கிடையாதோ எண்டு பின்னூட்டம் எல்லாம் விடுவார்.

அதனாலை இந்தப் பாட்டை எனக்கு வீடியோ வடிவில் அனுப்பினது சேயோன். அவருக்கு என்ரை நன்றி.

அகலப் பட்டையா பாட்டையா எண்டு தெரியேல்லை. எதுவோ அந்தப் பட்டை வைச்சிருக்கிறாக்கள்.. குடுத்திருக்கிற இந்தச் சுட்டியிலை போய் வீடியோவையும் தரவிறக்கி பாக்கலாம். நல்ல ஒளிப்பதிவு.

சரி. தொடர்ந்து பாட்டைக் கேளுங்கோ!!!

By

Read More

சுதந்திர வேட்கையும் 800 டொலரும்

மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.

பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.

ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.

பொதுவாக அந்த வேலை ஒப்பீட்டளவில் இலகுவானது தான். ஆனால் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக இரவுகளில்!

மொத்தமாக எரிபொருள் நிரம்பும் 30 இயந்திரங்கள் இருக்கின்றன. உள்ளே உட்கார்ந்திருந்து எந்த இயந்திரம் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.

அப்படி பயன்படுத்தியவர்கள் எல்லோரும் உள்ளே வந்து கட்டணம் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏதாவது சந்தேகத்திற்கிடமானவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தால் அவர்களது வாகனத்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள வேண்டும். (சந்தேகத்திற்கிடமானவர்களை எப்படி அடையாளம் காண்பது என எனக்கு இன்னமும் தெரியவில்லை)

எரிபொருள் நிரப்பி விட்டு உள்ளே பணம் செலுத்த வருபவர்களிடம் மகிழ்ச்சியாக நாலு வார்த்தை பேசி விட்டு கணணித் திரையில் காட்டப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டணத்தை பணமாகவோ Cards மூலமாகவோ அறவிட்டு விட்டு see ya சொல்லி அனுப்பி விட்டு Next please சொல்ல வேண்டியது தான்.

வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே ஒஸ்ரேலியாவில் திருடர்கள் தான் அதிகம் என ஒஸ்ரேலியரான Boss சொல்லி விட்டார். அது என்னை அவதானமாக இருக்க சொல்லிய அறிவுறுத்தல்.

இருப்பினும் குட்டி குட்டியாக தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அந்தப் பெரியயய தவறு நடக்கும் வரை!

ஆரம்பத்தில் 40 டொலர் செலுத்த வந்த ஒருவரின் கடன் அட்டையிலிருந்து இலக்கம் அழுத்துகையில் தவறுதலாக 400 டொலரினை அறவிட அந்த வாடிக்கையாளர் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்.

தவறு என்னுடையது தான் மிகுதி மேலதிக தொகையை பணமாக தந்து விடுகிறேன் என சொல்லியும் அந்த நண்பர் என்னை விடுவதாகவில்லை.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரத்தின் புதன் கிழமை. அது எனது இரவு வேலை நாள்.

இரவு பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. பொதுவாக 12 மணிக்கு பின்னர் அதிகாலை 4 மணிவரை அமைதியாக இருக்கும். பெரியளவில் யாரும் வர மாட்டார்கள்.

முடிந்த நாளுக்கான வரவு செலவுகளை கணணி முடித்துத் தர எல்லாம் கிட்டத்தட்ட (மிகச் சரியாக எனக்கு ஒரு போதும் அது இருந்ததில்லை) சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு…..

விட்டு….. நான் அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கையை (இரண்டாம் தரம்) வாசிக்க தொடங்கினேன்.

தமிழகத்துடன் இந்தியாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தொடர்புகள் அரசியல் வாதிகளின் உதவிகள் என அது ஆர்வமாய்ச் சென்றது.

ஒரு 30 நிமிடம் கழிந்திருக்குமோ?

எதேச்சையாக கணணித்திரையை நோக்கினேன். எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் 27 மற்றும் 29 இலிருந்து மொத்தம் 800 டொலருக்கு டீசல் அடிக்கப்பட்டிருப்பதாக அது சிவத்த எழுத்தில் சொன்னது.

அப்பவே சின்னதாக ஒரு பதட்டம் மனதில் குடி கொண்டு விட்டது.

விழுந்தடித்துக் கொண்டு எழுந்து இயந்திரங்களைப் பார்த்தேன்.

அங்கு எவருமோ எந்த வாகனமுமோ இல்லை.

கடவுளே.. 800 டொலர்!! எப்போதாவது யாராவது இருபதோ முப்பதோ டொலரிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு பணம் தராமல் ஓடக்கூடும் என்று ஏற்கனவே எண்ணியிருக்கிறேன். ஆனால் அது இப்படி 800 டொலர்களாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.

800 டொலர்களிற்கு டீசல் அடித்துச் செல்வதென்றால் அது சிறிய வாகனமாக இருக்காது. ஏதாவது பார ஊர்தியாகத் தான் இருக்கும். அப்படியான ஒன்று வந்து செல்லும் வரை சுரணை அற்று இருந்திருக்கிறேனே என்று என் மேலே கோபம் வந்தது.

காலை 7 மணிக்கு Boss வந்தார். பொதுவாகவே கலகலப்பாக பேசுபவர். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் தொண்டை வரள வரள தண்ணி குடித்து குடித்து நடந்ததை விபரித்தேன்.

நித்திரை கொண்டு விட்டதாகத் தான் சொன்னேன். (சுதந்திர வேட்கை! மூச்!)

எவ்வளவு காசு என்று அவர் கேட்கும் வரை இயல்பாகத் தான் இருந்தார். ஒரு வேளை 20 அல்லது 30 ஆக இருக்க கூடும் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

800 டொலர் என்று சொன்னேன்.

மனிசன் தலையிலை கை வைச்சிது. நான் முழிசிக் கொண்டு நிண்டன்.

என்ன செய்யப் போகிறாய்?

எனக்கு எங்கேயிருந்தோ அவசரமாக பதில் வந்தது. என்னிலை தான் பிழை. ஆகவே எனது சம்பளத்திலை இருந்து எடுத்துக் கொள்ளுங்கோ.

எனக்கென்னவோ அப்பிடிச் சொல்வது தான் எனக்கு மரியாதையாகப் பட்டது.

சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கண்முழித்து (சுதந்திர வேட்கை படித்து??) உழைத்த சம்பளம். அநியாயமாய்ப் போயிட்டுதே என்ற கவலை.

அதன் பின் கடந்த வாரம் எனக்கு பதில் இன்னுமொருவரை அனுப்பி வைத்து விட்டு நான் வேலைக்கு லீவு போட்டிருந்தேன்.

நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு! boss பேசினார். நீ இன்னும் சம்பளம் எடுக்க வில்லையா?

எனக்கு சம்பளம் வங்கிக் கணக்கிற்கெல்லாம் போவதில்லை. (அதெல்லாம் Tax சம்பந்தப் பட்ட விடயங்கள். கண்டு கொள்ள வேண்டாம்) எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தோமோ அதற்கேற்றவாறு சம்பளம் அங்குள்ள ஒரு இடத்தில் வைக்கப் படும். வாரா வாரம் அதிலிருந்து எடுக்க வேண்டியது தான்.

இல்லை என்றேன் நான்.

சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ… என்று துண்டித்து விட்டார் அவர்.

ஆஹா…

By

Read More

பதில் தருமா உலகு

தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!

இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு

இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.

சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.

மேற்குறித்த செய்திகள் கடந்த சில நாட்களுக்குள் குறித்த இடைவெளிகளில் இலங்கை அரசியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில செய்திகள்.

மூன்றாம் தர அரசியல் நாகரீகம் பின்பற்றப் படும் நாடுகளில் ஓர் இறுதி முடிவு குறித்து ஆளும் கட்சிகள் எதிர்க் கட்சிகள் எதிரிக்கட்சிகள் என்பவற்றுக்கிடையில் எழும் முரண்கள் தான் இவை என எவரேனும் நினைப்பின் அது தவறு.

இலங்கையை ஆளும் சிறீலங்கா மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கூட்டுக் கட்சியின் பல்வேறு பட்ட தரத்து நிலையிலானவர்கள் இனப்பிரச்சனைத் தீர்வு என்னும் பொது விடயம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களே இவை. தெளிவான ஒருமித்த கருத்தேதும் இன்றி ஆளாளுக்கு வாய்க்கு வந்த படி இனப்பிரச்சனை தொடர்பாக செய்தி வெளியிடுகின்ற கேலிக் கூத்தே அது.

இறுதிக் கட்டத்தில் இது தமிழர் தரப்பில் இப்படி ஒரு சந்தேகமாக எழுந்திருக்கிறது. அதாவது நகர்த்தப்படாமல் இழுபட்டுக்கொண்டு போகின்ற சமாதாப் பேச்சுக்களுக்கு காரணம் கேட்கும் உலக நாடுகளுக்கு தமக்கிடையேயான உள் முரண்பாடு தான் காரணம் எனக்கூறி தொடர்ந்தும் இதனை இவ்வாறே இழுத்துச் செல்ல அரசு திட்டமிட்டு முயல்கிறதா என்பதே அது.

இது தவிர ஜே வி பி க்கும் சந்திரிக்கா கட்சிக்கும் இடையிலான இம் முரண்பாடு அடுத்த தேர்தலுக்கான பங்குப் போட்டியின் வெடிப்பாகவும் இருக்க கூடும்.

எதுவாகவேனும் இருக்கட்டும். யுத்தம் வன்முறையானது. அது பயங்கர வாதமானது. அது மனித நேயமற்றது. அதைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வு காணலாம் என புலிகளுக்கு ஆலோசனை விடுத்த சர்வதேச நாடுகள் இப்பொழுது என்ன சொல்லப் போகின்றன என்பதே கேள்வி

By

Read More

கடலின் பசு

பாக்கு நீரிணை கடற்பரப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஹவாய்த் தீவுகளில் மட்டுமே வாழ்கின்ற அருகி வருகின்ற ஒரு உயிரினம் இக் கடற்பசு. ஈழக் கடலின் தனித்துவமான பெரிய உயிரினங்களில் ஒன்றான இது Dugong எனப்படுகிறது.

தாவர உண்ணி என்பதனாலேயே அதிகம் பவளப் பாறைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த ஈழத்தின் மேற்குக் கடல் பகுதியில் இவ்வுயிரினம் வாழ்கிறது.

ஆகக் கூடியதாக 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.

இரண்டு சிறு குறிப்புக்கள்

மன்னாரில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வொன்றில் கண்டு பிடிக்கப் பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்திய கற்கோடரி ஒன்றில் கடற்பசுவின் எலும்பு பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அண்மையில் யாழ்ப்பாண கடற்பரப்பில் இவ்வகை கடற்பசு ஒன்று இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

பட உதவி திரு


Image hosted by Photobucket.com

By

Read More

× Close