நான் வளர்கிறேனே! மம்மி

உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்… படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்..
Image hosted by Photobucket.com

இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.


Image hosted by Photobucket.com
இந்தப்படத்தை ஏற்கனவே என்ரை வலைப்பதிவில போட்டிருக்கிறன். ஏதோ ஒரு நாடகத்தில (பெயர் மறந்து போச்) நான் ரீச்சர் வேசம் போட்டிருக்கிறன். அசல் பொம்பிளை மாதிரி சீலை நுனியை பிடிச்சிருக்கிறனாம் எண்டு ஆரோ பின்னூட்டம் அப்ப போட்டிருந்தவை. 93 காலப்பகுதியில எடுத்த படமெண்டு நினைக்கிறன்.

Image hosted by Photobucket.com

ஹி..ஹி.. இந்தப் படத்தை வைச்சு வசந்தன் ஒரு போட்டியே அறிவிச்சிருந்தவர். கனபேர் சரியா சொல்லியிருந்தவை. அதுக்கு காரணம் வசந்தன் என்ன படம் போட்டாலும் அது நானாய்த்தான் இருப்பன் எண்ட மாதிரி போட்டுது. ஆனா முதலில இந்தப்படத்தை பாத்த வசந்தனும் உது ஆரெண்டு தான் கேட்டவர். 96 இல வன்னியில முத்தயன் கட்டு அணைக்கட்டோரம் எடுத்த படம் இது. வடிவா இருக்கிறன் தானே!

Image hosted by Photobucket.com

2003 இல ஒரு நாள். வெளிய மழை பெய்து கொண்டிருந்தது. யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம். அப்பிடிப் படுத்திருந்தவனை தட்டி எழுப்பி ராகுலன் எடுத்த படம் இது. தலைகணியை விட மாட்டாங்கள்!



Photobucket - Video and Image Hosting

கடைசியாக

By

Read More

சைய சையா நய்.. தைய தையா

எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள்.

வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது ஏதோ ஒரு ஹிந்திப்பாட்டை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். நீண்ட முடி வளர்த்திருந்த அவர் சரியாகச் சொல்லப்போனால் பேயோட்டுபவர் மாதிரி பாடிக்கொண்டிருக்க ‘ஐயோ.. பயமாக்கிடக்கு’ எண்டு முதல் அலறல் எங்களிட்டை இருந்து வெளிப்பட்டது.

இருக்கைகளில் 3D கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தவுடனையே எடுத்துப் போட்டுப்பாத்தன். எல்லாம் அப்பிடியே தான் இருந்திச்சு. ‘கழட்டுடா. எப்ப போடுறது எண்டு சொல்லவாங்கள் எண்டான் எனக்கு பக்கத்தில இருந்தவன்.

இரண்டு பெரிய திரைகள் அரங்கத்தின் அருகருகாக இருக்க அதில நிகழ்வுகள் போய்க்கொண்டிருந்தன. ரஹ்மான் மேடையின்ரை நடுவில கொஞ்சம் பின்னுக்காக நின்றுகொண்டு keyboard வாசிச்சுக்கொண்டிருந்தார். மேடையின் ஒரு புறத்தில சிவமணி தாரை தப்பட்டையளோடை நிண்டு கொண்டிருந்தார்.

முதலில் போனதெல்லாம் பரிச்சயமில்லாத ஹிந்திப்பாடல்கள் எண்ட படியாலை அமைதியாத்தான் இருந்தம்.

ஒரு கொஞ்ச நேரத்தில சங்கர் மகாதேவன் வந்தார். ‘தமிழ்ப்பாட்டு ஒண்ணு பாடலாமா’ எண்டதும் தான் தாமதம், ஆங்காங்கே இருந்து ஹே என்ற கத்தல்கள். (தமிழர்கள் தங்கள் சிறுபான்மைப் பலத்தை காட்டிச்சினம்.)

உப்பக்கருவாடு பாட்டைத்தான் சங்கர் பாடினவர்.

அந்தப்பாட்டு முடிய திரும்பவும் ஹிந்திக்கு போயிட்டினம். எண்டாலும் எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ப்பாடல்களின் மெட்டுக்கள் தான். அதே நேரம் ஹிந்திப்பாட்டுக்களின் இடையில அவ்வப்போது தமிழ் வரிகளையும் சேத்திச்சினம். அந்த நேரமெல்லாம் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்தம்.

எண்டாலும் ஹிந்தியில ஆரம்பிச்ச பாட்டுக்கள் ஒரு கட்டத்தில அடுத்தடுத்து தமிழுக்கு மாறிச்சுது. சிலர் we want hindi எண்டு கத்துற அளவுக்கு நிலைமை இருந்திச்சு. எங்களுக்கு முன்னாலை இருந்த ஒருவர் சைய சையா எண்டு கத்தினார்.

பின்னாலை இருந்த நாங்கள் சைய சையா நய்.. தைய தையா எண்டு கத்த அவர் ஒரு நட்புடன் எங்களைப்பாத்து சிரிச்சார்.

அவ்வப்போது இப்பொழுது உங்கள் 3D கண்ணாடிகளை அணியுங்கள் என்றும் இப்பொழுது கழற்றுங்கள் என்றும் அறிவிப்பு திரையில் வந்தது.

3Dயில் திரையில் அவ்வப்போது சில காட்சிகள் போய்க்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவற்றைப்பார்ப்பதில் இருந்த ஆர்வம் பின்னர் இல்லாமல் போய்விட்டது.

ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.

நிகழ்வின் நடுவில் சிவமணியின் தாளவாத்திய நிகழ்வு நடந்தது. அந்த நேரம் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும் சேர்ந்து ஏதோ ஆங்கிலத்தில பாடினவ. அவ பாடுற நேரம் தவித்து மற்ற நேரங்களில் சிவமணியின் கைகள் புரியும் நர்த்தனத்தை வாய் பாத்தக்கொண்டிருந்தா.

அதுக்கு பிறகும் ரஹ்மான் உங்கள் எல்லாருக்கு bombay dreams வேணுமா எண்டு கேட்டார். முதல் பாடின வெள்ளைக்கார பெண்மணி தான் வந்து பாடினா. அது தாளத்தில வாற ஒரு பாட்டுமாதிரி இருந்தது.

அ.ஆ படத்தில இருந்து ரஹ்மான் ஒரு பாட்டுப் பாடினார்.

ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன்.. அடியேன் தமிழன்.. எண்ட பாட்டு..

ஒவ்வொரு முறையும் அடியேன் தமிழன் எண்டும் போதும்.. கலக்கிட்டமில்ல!!

அதுக்கடுத்ததா வந்தது மரங்கொத்தியே பாட்டு. தமிழென்ன ஹிந்தியென்ன? அந்த ஹிந்திச் சகோதரிகள் ஆடிக் கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில எங்களுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எழும்பிட்டமில்ல!!

இறுதிப்பாடல் சரிகமே! மொத்த அரங்கமும் எழுந்து நின்றாடியது.

கடைசியாக வந்தே மாதரம்! அத்துடன் நிறைவுற்றது நிகழ்வு. வீட்டுக்கு வந்திட்டமில்ல!!

By

Read More

மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும்
ஒரு பகிரங்க அறிவித்தலும்.

வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழக கண்மணிகளுக்கு நிறைய நேர மற்றும் இன்னொரன்ன நெருக்கடிகள் காரணமாய் ஒண்டும் சரிவர எழுத முடியேல்லை. ஒஸ்ரேலியாக்கு வந்த புதுசில வீடும் படிப்பும் வேலையும் எண்டிருந்த எங்கடை கழக கண்மணிகள்.. இப்ப உலகமும் ஒஸ்ரேலியாவும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடி பட வீட்டிலயே இருக்கிறதில்லை.

முந்தியொரு காலத்தில தினமும் பதிவுகள் போட்டு வந்த நாங்கள் இப்பவெல்லாம் ஏதோ நாங்களும் இருக்குறமுங்கோ எண்டு காட்டுறதுக்காகவே படங்களும் பத்துவரிப் பதிவுகளும் போட்டுக்கொண்டிருந்தம்.

இப்பிடி வலைப்பதிவகளில் எங்கடை மெல்பேண் கழக மூத்த உறுப்பினர்களுக்கு ஆர்வமும் உற்சாகமும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைஞ்சு கொண்டு வரேக்கை முந்தநாள் (நேற்று முன்தினம்) இரவு பத்து மணிக்கு பிற்பாடு!! (முந்தியெண்டால் இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டை வந்திடுவம்.) அவசரமான ஒரு மீற்றிங்கை வசந்தன் கூட்டினார். அதுவும் City Flinder Street Station க்கு பக்கத்தாலை ஓடுற yara ஆற்றங்கரையில இருந்து கொஞ்ச நேரமும் நடந்து கொஞ்ச நேரமும் மீற்றிங் நடந்திச்சு.

அந்த நேரம் பயங்கர காத்து. மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில காத்து வீசினது. சரியா 10.15 க்கெல்லாம் நான் வசந்தன் மற்றது அருணன் இவையெல்லாம் அந்த இடத்தில சந்திச்சம்.

வசந்தன் கொஞ்சம் குண்டாயிட்டார் இப்ப. அருணன் கொஞ்சம் வளந்திட்டார்.

வசந்தன் நேரடியா விசயத்துக்கு வந்திட்டார். ‘உங்களையெல்லாம் ஏன் கூப்பிட்டனான் தெரியுமே எண்டார்.’

‘தெரிஞ்சிருக்கும் எண்டால் எங்களை கூப்பிட்டிருப்பீரோ எண்டு நான் பதிலுக்கு ஒரு கேள்வியைப் போட்டன். வசந்தன் அதைப்பத்தி சட்டை செய்யாமல் நான் சொல்லப் போற திட்டத்தை பற்றி வடிவாக் கேளுங்கோ.. அதுக்கு பிறகு நீங்கள் கதைக்கலாம் எண்டார். அவர் என்னை மனசில வைச்சுத்தான் அதை சொல்லியிருக்க வேணும்.

‘இவ்வளவு நாளும் நாங்கள் வலைப்பதிவில பெரிசா ஒண்டும் எழுதாமல் இருந்திட்டம். அது ஏன் எதுக்கு எண்டெல்லாம் நான் ஆராயப்போறதில்லை. ஆனா.. ஒரு மூத்த மெல்பெண் வலைப்பதிவர் எண்ட முறையில தொடந்தும் இதை நான் அனுமதிச்சுக் கொண்டிருக்க முடியாது. எண்ட படியாலை’….. எண்டு வசந்தன் இழுக்க இடையில குறுக்கிட்டார் அருணன்.

‘நீர் பிரச்சனை விளங்காமல் கதைக்காதையும்.. நீர் என்னைத்தான் சொல்லுறீர் எண்டு விளங்குது. ஆரம்பத்தில வலைபதிவு தொடங்கிட்டு இடையில கைவிட்ட ஆள் நான் தான். அனா அதுக்கு காரணங்கள் இருக்கு. எண்டாலும் அந்தக் காரணங்களை குறிப்பிட்டு அதை ஒரு பதிவாக்கி விடைபெறுகிறேன் நண்பர்களே எண்டு போட்டுவிட்டு பிறகு கொஞ்சக் காலத்தாலை என்னாலை வலைப்பதியாமல் இருக்கவே முடியுதில்லை எண்டு வாறாக்கள் மாதிரி நான் செய்யேல்லையே.. ‘ எண்டு அருணன் நீட்டி முழக்கினார்.

‘ஷ்் உதையெல்லாத்தையும் விடும்.. இப்ப நான் சொல்லுறதை கேளும்.. ‘ எண்டு ஒருக்கா தொண்டையைச் செருமிக்கொண்டு தொடங்கினார்.

‘இவ்வளவு நாளும் மெல்பேண் வலைப்பதிவர் கழகமாயிருந்த எங்கடை அமைப்பை நான் இண்டையில இருந்து தென்துருவ வலைப்பதிவர் கழகமா அதாவது ஒரு அகண்ட வலைப்பதிவர் கழகமா மாத்துறன்..’ எண்டு விட்டு நாங்கள் ஏதும் சொல்லுறோமோ எண்டு பாத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஏதும் சொல்லேல்லை எண்டுற அதேவேளை வசந்தனுக்கு தட்டிட்டுதோ எண்டும் நினைக்கவில்லை.

‘இந்த தென்துருவ வலைப்பதிவர் கழகம் 3 பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். சிட்னி, நியூஸிலான்ட், மெல்பெண்.. இந்த மூண்டு இடத்திலயும் மெல்பேண் தான் தலைமைச்செயலகமாவும் அதிகார மையமாவும் இருக்கும்.’

மீற்றிங் எண்டு வந்தால் நாலு பேருககு முன்னாலை எழும்பி நிண்டு மூண்டு கேள்வி கேக்க வேணும் எண்ட படியாலை இந்த இடத்தில நான் ஒரு கேள்வி கேட்டன்.

‘அது எப்பிடி நாங்களாவே மெல்பேணை தலைமைச் செயலகமாக்கிறது ..? .. இது ஜனநாயக விரோதமெல்லோ! இந்தக் கேள்விக்கு பதிலளிக்காவிட்டால் மாற்றுக்கருத்தை மதிக்காதவர் எண்டு வரலாறு நாளையிண்டைக்கு உம்மைத் தூற்றும் எண்டு நான் சொன்னன்.’

இந்தக் கேள்வி மீற்றிங்கில சலசலப்பை உண்டாக்கினது. நான் கேட்ட ஒரு கேள்வி ஒரு இடத்தில சலசலப்பை உண்டு பண்ணுறது எண்டுறது எனக்கு சரியான சந்தோசம். மற்றும் படி அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வேணுமெண்ட எந்த தேவையும் எனக்கு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் சும்மாதான் அப்பிடிக் கேட்டன். ஏனெண்டால் நானும் ஒரு பெரிய ஆள் எண்டு காட்டத்தானே வேணும்.

சலசலப்பெல்லாம் முடிய ஒருமாதிரி வசந்தன்ரை எண்ணத்தை நாங்கள் மனப்பூர்வமா ஏற்றுக்கொண்டம். அதன்படி நியூஸி பிரிவுடனும் சிட்னிப்பிரிவினருடனும் சுமுகமான ஒரு உறவை ஏற்படுத்தி அவையை ஒரு குடையின் கீழை காணாட்டி ரண்டு மூண்டு குடைக்கு கீழை கொண்டாறதுக்கான முயற்சிகளில இப்ப இருந்தே ஈடுபடுறது எண்டும் முடிவெடுத்தம்.

இந்த எங்கடை திட்டங்களுக்கு சம்மரிலிருந்து (Summer) திரும்புதல் எண்டு வசந்தன் பேர் சூட்டினார். அதை நாங்கள் கைதட்டி வரவேற்றம்.

எங்கடை திட்டத்தின்ரை முதல்ப்டியாய், ஒரு நல்லெண்ணை.. மன்னிக்கவும் நல்லெண்ண முயற்சியாய் எங்கடை பிரதிநிதி ஒருவரை சிட்னிக்கு அனுப்பி அங்கை இருக்கிற பிரிவினரோடு பேச்சுக்களை நடத்தி எங்கடை ஒரு குடையின் கீழி கொண்டுவருதல் எண்டுற திட்டத்துக்கு இசைய செய்யிற அது முடியாட்டி பணியச் செய்யிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எண்டு தீர்மானிச்சம்.

அதன் படி வசந்தனை சிட்னிக்க அனுப்ப தீர்மானிச்சிருக்கிறம். (அல்கொய்டா அமைப்பு சிட்னியையும் தாக்குறதுக்கு முடிவு செய்திருக்கிறது எண்ட படியாலை பாதுகாப்பு காரணங்களுக்காக வசந்தன் எப்ப சிட்னி போறார் எண்டதை பகிரங்கமா இப்போதைக்கு வெளியிட முடியாது.)

மீற்றிங்கின் முடிவில் அருணன் சில கோரிக்கைகளை வைச்சார். Modern Girl ஒஸ்ரேலியால இருந்து முந்தி பதியிறன் எண்டு சொன்னவ. அவ எங்கையெண்டு தெரியேல்லை. சிட்னியா மெல்பேணா அல்லது வேறெங்காவதா எண்டு சொன்னால் வசதியாயிருக்கும். மெல்பேண் எண்டு சொன்னால் எங்கடை அதிகார மையத்தில அவவுக்கு ஒரு அதியுச்ச பதவியை குடுக்க நாங்கள் இணங்கியிருக்கிறம்.

தென்துருவ வலைப்பதிவர் கழகம் எண்டுறது ஒரு பரந்த விரிந்த எண்ணம் சிந்தனை செயற்பாடு. குழுக்கள் குழுக்களா இருக்கிறதை விட இப்பிடி ஒரு பெரிய இயக்கமா வளருறதை தான் நாங்கள் விரும்பிறம். அப்பிடி ஒரு எண்ணத்தலை தான் அந்த கழகத்தின்ரை அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறம்.

முக்கிய குறிப்பு: இதன்படி சிட்னி மற்றும் நியுஸி பிரிவினர் என்ன செய்தாலும் அதற்கு மெல்பேண் தலைமைச் செயலகத்தில் அனுமதி பெற வேண்டும். விரைவில் நியூஸியில் நடக்க இரக்கிற வலைப்பதிவர் மாநாட்டுக்கு எங்களுக்கு சரியான முறையில் அறிவிக்கவும் இல்ல. அனுமதி வாங்கவும் இல்ல. இதை சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்க வேணும்.

இனியும் தொடரும்

By

Read More

முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது,

ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால் ஏதாவது பகுதி நேர வேலை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது கிடைக்கும் நேரத்தை பயனாக செலவழிக்கலாம் என்பதனால் அல்ல அதுவே கட்டாயமும் என்பதனாலும் ஆகும்.

ஆக இங்கு வந்து ஆரம்பத்தில் அதிகம் யாரையும் அறியாமல், சரியான சாப்பாடு இல்லாமால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அக்காலத்திலும் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதை நான் விடவில்லை. ஆனால் வேலை தரும் நேரத்துக்கு நான் போக வேண்டும் என்ற யதார்த்தை முறித்து எனக்கு வசதிப்படும் நேரங்களிலேயே என்னால் வேலைக்கு போக முடியும் என்பதனால், நிறைய வாய்ப்புக்கள் கைவிட்டுப் போய்க்கொண்டிருந்தன.

இந்த காலத்தில் தான் அந்த அண்ணா எனக்கு அறிமுகமானார். இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு Petrol Station இல் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். பார்க்கும் எவரிடமும் ஏதாவது வேலைக்கு சொல்லி வைத்துக்கொண்டிருந்ததனால் அவரிடமும் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என சொல்லியிருந்தேன்.

பகுதி நேரமாக பலதரப்பட்ட வேலைகள் உதாரணமாக தொழிற்சாலைகளிலோ அல்லது சுத்தீகரிப்பு வேலைகளோ எடுக்கலாம் எனினும் படிக்கும் மாணவர்களுக்கு உடல் அலுப்பு தராத வேலைகளே பொருத்தமாயிருக்கும் என்பதனால் அவ்வாறான ஒரு வேலைக்கு என்னை முயற்சிக்க சொன்னவர் எனது தொலைபேசி இலக்கத்தையும் வாங்கி கொண்டார்.

கடந்த வருடம் September மாதத்தில் முதல் வாரம்!

அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘என்ன மாதிரி வேலை வேணுமோ’

‘ஓ.. ஓ..’ நான் நாக்கை தொங்கப்பட்ட நாய் மாதிரி பதில் சொன்னன்.

‘சரி நான் வேலை செய்யிற Petrol Station க்கு நாளைக்கு மத்தியானம் போல வாரும்’

அந்த Station அதிஷ்ட வசமாக எனது வதிவிடத்துக்கு மிக அருகில் இருந்தது. அடுத்த நாள் மத்தியானம் நான் அங்கு ஆஜர்.

அந்த Station இன் Boss ஒரு ஒஸ்ரேலியர். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

‘English எல்லாம் எப்பிடி என்று Boss கேட்டார்.

‘அதெல்லாம் சமாளிக்கலாம் என்று நான் சொன்னேன்.

Computer பாவனையஜன’ பழக்கம் என்ன மாதிரி என்று கேட்டார்.

‘அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று நான் சொன்னன்.

சரி! அவ்வளவும் தான். எனக்கு வேலை கிடைத்து விட்டது. 2 வாரங்கள் பயற்சிக்கு சென்றேன். அதன் பின்னர் எனது கடமை ஆரம்பித்தது.

எனது படிப்பு தவிர்ந்த, எனக்கு வசதிப்பட்ட நேரங்களில் நேரம் ஒதுக்கி தந்தார் அந்த அண்ணா.

எங்களது Station எரிபொருள் தவிர்ந்த உள்ளே உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் எல்லாம் கொண்ட ஒரு கலவைக் கடை.

உணவுப்பொருட்கள் வேலை செய்பவர்களுக்கு இலவசம்! இது மட்டும் போதுமே எங்களுக்கு. பலருக்கு ஒவ்வொரு நாளுக்குமான உணவே கடையில் தான் கழிந்தது. உண்மையைச் சொன்னால் ஒரு கட்டத்தில் அளவு கணக்கு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரை நான் வேலை செய்யும் நாட்களில் கட்டாயமாக ஒரு ஐஸ்கிரீம், ஒரு குளிர்பானம் இன்னும் சில இனிப்பு வகைகள்.. இது தான் எனது மெனு.

வேலை செய்யும் நாள் மட்டும் தான் என்றில்லை. எனக்கு வெலை இல்லாத நாட்களிலும் நான் வீடு வரும் வழியிலேயே கடை இருப்பதனால் உள்ளே சென்று ஏதாவது எடுத்து சாப்பிட்டுக்கொண்டோ குடித்துக் கொண்டோ தான் வருவேன்.

இப்படியிருக்க எங்களது Boss ஒரு நடைமுறை கொண்டு வந்தார். நாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறொம் என்பதை அறிய (அதிகார பூர்வமாக அறிய) ஒவ்வொருவரும் எடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துக்குமான விலைப்பட்டியலை எடுத்து மொத்த தொகையை Station Use Account இல் போட வேண்டும். இது எங்களுக்கு சினத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எல்லோரும் ஒன்று கூடி பேசாமல் இனி இலவசமாய் எடுப்பதை நிறுத்தி எடுக்கும் பொருட்களுக்கு காசு கொடுப்போமா என்று யோசித்தாலும் பிறகு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தோம்.

எங்களது கடையில் Boss ம் அவரது மனைவியும் மதியம் 1 மணி வரை நிற்பார்கள். மொத்தம் 2 Counter. அதில் ஒன்றில் 1 மணி வரை மனைவி நிற்பார். Boss கணக்கு வழக்குகள் சரி பார்ப்பார்.

அந்த ஒரு மணி வரைதான் அது ஒஸ்ரேலியருக்கு சொந்தமான கடை. அதன் பிறகு அது எங்களது கடை. அங்கு வேலை செய்கின்ற எல்லோருமே இலங்கையர்கள். அங்கு வேலை செய்பவர்கள் மூலமாகவே புதிதாக வருபவர்கள் இணைவதனால் இது தொடர்ந்தும் சாத்தியமாயுள்ளது.

வாரமொருநாள் நான் திங்கட்கிழமைகளில் இரவு வேலை செய்கின்றேன். இரவு 11 மணி முதல் காலை 7 மணிவரை. மிகச் சரியாய் நேரங்களை பிரித்து செய்வதனால் இலகுவாக செய்ய முடிகிறது. 12 மணிக்கு அந்த நாளுக்கான கணக்கு வழக்குகளை முடித்து 3 மணி வரை வருகின்ற பால் பாண் முதலானவற்றை சரிபார்த்து வைத்தேன் என்றால் 3 மணிக்கு தொலைபேசியோடு ஐக்கியமாகி விடுவேன். இங்கே மூன்று மணியென்பது ஐரோப்பிய நாடுகளில் மாலை 7 மணி. ஆறுதலாக இருந்து கதைப்பதற்கு அவர்களுக்கு ஏற்ற நேரம்.

காலை 5.30 இலிருந்து 7 மணி வரையும் தான் சரியான நெருக்கடியாக இருக்கும். அதையும் முடித்தால்… சரி..

அதே போல வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. இருவர் வேலை செய்வோம். அரசியல் பேசி வாழ்க்கை பற்றி பேசி, வந்து போகும் நபர்களை பற்றி புறம் பேசி இப்படிப் போகும் பொழுது..

அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலிருந்து மதியம் 3 மணிவரை. இந்த Shift ஐ நான் விரும்பி எடுத்தேன். குட்ட நெருக்கடியே இருக்காது. தவிர ஞாயிற்றுக் கிழமை Boss ம் மனைவியும் வரமாட்டார்கள். Boss இன் அப்பா தான் வருவார்.

முதியவரான அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தீகரிப்பு வேலைகளில் ஈடுபடுவார். பழகுவதற்கு நல்லவர். கிறீக் நாட்டை சேர்ந்தவர். (ஒஸ்ரேலியாவில் மூன்றிலொரு பங்கினர் கிறீக் மொழி தெரிந்தவர்கள்). தாங்கள் நாடு பற்றி, தாங்கள் ஒஸ்ரேலியா வந்த காலங்கள் பற்றி சொல்லுவார்.

போன ஞாயிற்றுக் கிழமை.. அவர் மதியம் புறப்பட்டார். போகும் போது தான் பெற்றோல் அடிக்க போவதாக கூறினார். சரி அடியுங்கோ.. நான் Station use account இல் போடுறன் என்று சொன்னேன்.

உடனேயே மறுத்த அவர்.. அதெல்லாம் வேண்டாம்.. நான் வந்து காசு தருவன் என்றார். சொன்ன மாதிரியே வந்து காசும் தந்தார்.

வெளிநாடுகளில அவர்கள் தாங்கள் தங்களுடைய செலவுகளை பார்க்கிறார்கள் தான். ஆனாலும் வேலை செய்யும் நாங்களே எடுத்து சாப்பிட்டு விட்டு Station use என்று விட்டு வாறம். இவர் தன்ரை மகன்ரை கடையில வந்து பெற்றோல் அடிச்சிட்டு காசு தந்திட்டு போறார் என்று யோசித்துக் கொண்டிருந்தன்.

அந்த யோசினையோடையே வேலை முடிய ஒரு ஐஸ்கிரீமை எடுத்து Station use க்குள்ளை போட்டுவிட்டு வெளியேறினேன்.

By

Read More

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது.

எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான்.

அப்பிடியென்ன பிரமாதம் உலகில் இல்லாத பிரமாதம் என யாரும் கேட்கலாம். அப்படி எதுவும் இல்லைத்தான். ஆனால் யுத்த காலத்தில் எங்கள் வயதொத்த சிறுவர்களின் மகிழ்வுக்கான தளமாக அது இருந்தது.

யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தப் பூங்கா, புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. அதிலும் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு தூர்வாரப்பட்டது.

இம்முறை கிட்டு பூங்காவிற்கு சென்று நிறைய நேரம் உலாவித்திரிந்தேன். சிதைந்து போயிருந்தது பூங்கா…


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

By

Read More

× Close