ஊர் எண்டால் ஒரு பம்பல் எப்பவும் இருக்கும். பதின்ம வயசுடைய ஒரு கூட்டம் எக்காலத்திலும் தனக்குரித்தான குறும்புத்தனத்தை செய்து கொண்டே இருக்கும். இளநீர்களை களவாக பறிக்கிறது. பிலாப்பழத்தை களவாக வெட்டிக்கொண்டு போறது. இப்பிடி கிழமையில எதாவது ஒண்டு எப்பவும் நடக்கும்.
இப்பிடியான ஒரு கூட்டத்தில முழுநேர உறுப்பினராய் இருக்கிறதுக்கு எனக்க பெரிசா வசதிப்படேல்லை. சின்ன வயசிலையே யாழ்ப்பாணத்தை விட்டு போன படியாலை அந்த வாய்ப்பு கிடைக்கேல்லை. இருக்கும் வரையும் நானும் ஒரு இளநிலை உறுப்பினராத்தான் இருந்தனான் எண்டாலும் பெரிசா ஒண்டும் சாதிக்கேல்லை.
எனக்கு நாடகம் பழக்கினவர் எண்டு ஒராளை முந்தி சொன்னானெல்லோ. அவர் தேனீ வளக்கிறவர். வடிவா ஒரு பானையை தன்ரை வளவில இருக்கிற மரத்தில கட்டி மனிசன் எப்பிடியாவது அதுக்குள்ளை தேனியளை குடியேத்திப் போடும். இப்பிடி தேனியள் அதுக்குள்ளை வதை எல்லாம் வைச்சு நல்ல கணக்காக வரேக்கை மரத்தில இருந்த பானையோடு கடத்திப் போடுவாங்கள்.
இப்பிடி எத்தினையோ நடந்தாலும் உதுகள் நடக்கிற நேரம் அப்ப சின்னப்பெடியனான எனக்கு கலந்து கொள்ள முடியாத நேரம்.
2002 பாதை திறந்த பிறகு ஊருக்கு போனன். அதே திருகுதாளங்களோடை அந்த குறூப்பை கண்டன். அதுவும் முந்தி வாலுகளாக இருந்த என்ரை வயசுக்காரர் தான் இப்ப பெரிய தலைகளாக இருக்கிற குறூப். அப்பிடியே ஐக்கியமாயிட்டன்.
பின்னேரம் ரண்டு மணிக்கெல்லாம் இறங்கிடுவம். சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு காணிக்கு போய் கொஞ்ச நேரம் விளையாட்டு. அந்த நேரம் எல்லை, பேணியடிக்கிறது இப்பிடியான விளையாட்டுக்கள் தான் விளையாடுறது. இப்ப கிரிக்கெற் விளையாடுறாங்கள். கொழும்பில இருந்து வந்திருக்கிற படியாலை நல்லா நான் கிரிக்கெற் விளையாடுவன் எண்டு அவங்கள் நம்பினாங்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றுறதுக்காகவே நான் ஊரிலை கிரிக்கெற் விளையாடுறேல்லை. அதுவும் அவங்கள் விளையாடேக்கை ஏதாவது இசகு பிசகாகி என்னிடம் வந்து முடிவு கேக்கேக்கை என்ன சொல்லுறதெண்டே தெரியாமல் இருக்கும்.
விளையாடி முடிஞ்ச பிறகு அப்பிடியே ஊர் சந்தியில இருக்கிற கேணிக்கட்டில போய் குந்துறது எல்லாரும். பிறகு ஒரு 9 மணிவரைக்கும் அரட்டைதான். எல்லா விசயமும் அங்கை வந்து போகும். சந்திரிகாவில இருந்து சந்திரமுகி வரைக்கும் வரும். போனவருசம் சித்திரைக்கு நான் அங்கை போயிருந்தன். ஒரு பின்னேரம் முயல் பிடிக்க போறம் எண்டு சொன்னாங்கள். சரியெண்டு நானும் வெளிக்கிட்டு விட்டன். அதுகும் காலைமை பத்து மணியிருக்கும். எல்லாரும் கையில ஒரு பொல்லு.. பிறகு சாக்குகளில கல்லு.. எல்லாத்தோடும் வெளிக்கிட்டாச்சு.
றோட்டாலை நடந்து போறம். ஊருக்கே தெரியுது நாங்கள் எங்கையோ வேட்டைக்கு போறம் எண்டு. (இந்த செய்கைகள் பிடிக்காத பலர் ஊரில் இருந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பினம். வீட்டில் வாழைக்குலையையோ அல்லது கோழியையோ பறி கொடுத்தவர்களாக இருப்பினம். அவர்கள் காதுபடவே எங்களை வேடர்கள் எண்டு திட்டுவினம்.)
ஒரு பற்றைகள் நிறைந்த வளவு.. இதுக்குள்ளை தான் முயலை தேடவேணுமாம். எல்லாருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப் படுது. பிறகென்ன ஒரே களேபரம் தான். அடியடா, பிடியடா, கொல்லடா, விடாதை, பிடி, துரத்து, எறி இதுகள் தான் கேட்கும். நான் போன நாள் எந்த முயலும் சிக்கவில்லை.
எல்லாரும் நல்ல களைச்சிட்டினம். திருபுறது எண்டு முடிவாச்சு. சரி எண்டு நான் வீட்டை வந்து குளிச்சு விட்டு வர ஒரு பொடியன் வந்தார். முயல் பிடிச்சாச்சாம்.. அங்கை இறைச்சி காய்ச்சுப்படுகுது உங்களை வரட்டாம். எண்டு சொன்னார். சரியெண்டு வெளிக்கிட்டன்.
நான் நின்ற காலத்தில ஊரில ஒரு வாசிக சாலை புதுசா கட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. அதுக்குள்ளை தான் சமையல் நடக்குது. ஒரு தாய்ச்சிக்குள்ளை இறைச்சி காய்ச்சுப் படுகுது. போற வாற சனத்துக்கெல்லாம் இண்டைக்கு முயல் பிடிச்சனாங்கள் எண்டு கதை வேறை.
இறைச்சிக்கு பாண்தான் நல்லாயிருக்கும் எண்டு 10 றாத்தல் பாணும் வாங்கினம். எல்லாம் முடிய சாப்பிடுற தட்டுகள் தேவையாயிருந்தது. அப்ப அதில ஒரு பெடிப்பயல் நிண்டவர். அவற்றை வீடு பக்கத்தில தான் இருந்தது. அவரை அனுப்பினம் போய் தட்டுக்கள் கொஞ்சம் எடுத்தாடா எண்டு.. சரியெண்டு போனவனை கனநேரமா காணேல்லை.
கறி வேறை ஆறிப்போகுது. கடைசியா ஆள் வந்துது. என்னடா அசைஞ்சு வாறாய்.. உடனை வரத்தெரியாதோ உனக்கு எண்டு ஆளுக்கு நல்ல பேச்சு..
இல்லயண்ணை.. வீட்டில கோழியொண்டைக் காணேல்லையாம்.. அது தான் அம்மா எரிஞ்சு விழுகிறா.. சரியண்ணை நிங்கள் சாப்பிடுங்கோ நான் போய்த் தேட போறன் எண்டுவிட்டு அவன் ஓடினான்.
என்னத்தை இனித் தேடி…
நான் வந்த போதே அது முயல்க்கறி இல்லை. கோழிக்கறிதான் எண்டு எனக்கு விளங்கிட்டுது. ஆனா அது அந்தப் பெடியனின் வீட்டு கோழி தான் எண்டு அங்கை நிண்ட எல்லாருக்கும் அப்பதான் தெரிஞ்சுது.
உதோடை சேர்ந்த இன்னொரு வேலையையும் செய்தாங்கள். கோழி இறைச்சியெடுத்த பின்னர் எஞ்சிய இறக்கை கழிவுகளை ஒரு சீமெந்து பையில் இட்டு வடிவாக மடித்து கட்டினாங்கள். றோட்டாலை Bar க்கு கீழாலை சைக்கிளோடிக்கொண்டிருந்த ஒரு சின்ன பெடியனை கூப்பிட்டு அதைக் குடுத்து.. ஊரில சைக்கிள் கடை வைச்சிருந்த ஒருவரின் பெயரை சொல்லி அவரிடம் கொண்டு போய் குடுத்து ‘நீங்கள் கேட்டது இப்ப இவ்வளவும் தானாம் கிடைச்சது. மிச்சம் பிறகு அனுப்பிறமாம் எண்டு சொல்லிக் கொடு என்றோம்.
அவனும் சரியெண்டு விட்டு ஆர் தந்தது எண்டு கேட்டால்.. என்ன சொல்லுறது எண்டான் அப்பாவியாக. ஊரில பலசரக்கு கடை வைச்சிருக்கிறவரின் பெயரை சொல்லி அவர் தந்தவர் எண்டு சொல்லு எண்ட அவன் வாங்கி கொண்டு போனான்.
கண்டிப்பாக சைக்கிள் கடை வைத்திருப்பவர் அன்று ஊரின் மொத்த இளைஞர் கூட்டத்தையும் திட்டி தீர்த்திருப்பார்.
குறிப்பு வேட்டையாடு விளையாடு இந்த பெயரில கமல் ஒரு படம் நடிக்கிறாராம். நல்ல தமிழ்ப் பெயரென?