ஆறா வடு – நந்தா கந்தசாமி

சாரலின் ஆரம்ப காலங்களில் இருந்தே தனித் தன்மையான  எள்ளலுடன் கூடிய சயந்தனின் எழுத்துகளுடன்  எனக்கு பரீட்சயம் உண்டு, சயந்தன் ஒரு நல்ல  சிறுகதை சொல்லி. சயந்தனின் ஏற்கனவேயான  அறிமுகம் ஆறாவடு நாவலை வாசிக்க தூண்டியது.கனடாவில்  வெளியீடு நடக்கும் என அறிவிப்பு வராத ஒரு  தரணத்தில் இந்தியாவில் இருந்து  அந்த நாவலை எனது நண்பி ஒருவர் அனுப்பி இருந்தார். எந்த  புத்தகத்தையும் ஒரே  மூச்சில் படித்து முடிப்பது எனது வழக்கம் அல்ல.  நிதானமாய் ஒவ்வொரு  வரிகளையும் அனுபவித்து வாசிப்பதே எனது வழக்கம்,  ஆறாவடுவயும் நிதானமாய்  அனுபவித்தே வாசித்தேன். குறிப்பிட்ட இரண்டு சமாதான  காலபகுதிகளில் நடந்த  போரின் அனர்த்தங்களை பதிவு செய்து போகும் நாவலில் ,

வாசகனின் வாசிப்பின்  உச்சம் என,

“அகிலா திமிறினாள், சின்ன பொடியன் திடீரென எழுந்து இவனை மிரட்சியுடன் பார்க்க தொடங்கினான் ,,,

” எடே வேசை மகனே பண்டார வன்னியா ,,, என்ற வரிகளுடன் தொடரும் அந்த முழு பந்தியும்,

வெளிப்   படலையை இரண்டு இளஞர்கள்  தட்டினார்கள் அதற்கு சற்று நேரம் கழித்து   அவர்கள்  தேவபாலுவையும்  தட்டினார்கள் என்ற மொழியின் வீரியமும்,

மொழிபெயர்ப்பாளர் நேரு அய்யா, “நான்  கண்களை மூடி நீங்கள் இல்லை என்று   நினைத்து  பார்த்தேன் எவ்வளவு சந்தோசமாக இருந்தது” என்பதுவும்  அதற்கு அமுதன் ” நானும் கண்களை மூடி நீங்கள் இல்லை என்று நினைத்து பார்த்தேன் உங்கள் குடும்பம்  எவ்வளவு  கஷ்டபடுகுது” என்பதுவும், இவாறான கேள்விகேட்கும் ஒரு வெளியை யாரும் அனுபவித்ததாகவோ அனுமதித்ததாகவோ இல்லை என்பது வேறுவிடயம். இப்போ  இருக்கும் யதார்த்தம் புரிந்தவர்களுக்கு இது கதை  சொல்லின் யுக்தி.  காலங்கள் செல்ல  இவ்வாறான  இலகு நிலை இருந்தது என்னும்   ஆபத்தான நினைவு கூறலுக்கு  ஆதாரமாகும் ஆபத்தும் உண்டு.

“சண்டையில்   நிக்கிற நேரங்களில் காயபடலாம் என்றோ செத்து  போவேன்  என்றோ  நினைப்பெதுவும்  எனக்கு வருவதில்லை ,,,,,,, “நான் சாவினை விரும்பவில்லை”  என்ற சுய  விமர்சனத்துடனான  விமர்சனமும்.

“எனக்கு  இயக்கத்தில்  கோபம் வந்தது பின் நான் தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது  பிறகு  சனங்களில் கோபம் வந்தது” என்ற வரிகளில் மக்களை  விட்டு  அந்நியமாதலின்   வேர்விடுதலை சொல்லி நிற்கும் வரிகளும் மனதில் பெரும்  சுமையை  கொண்டுவந்தது.

சயந்தனின் இந்த நாவலை  வாசித்துக்கொண்டு  வரும் போது வேனில் இருந்து இறக்கி கட்டலுக்க ஏற்ற  கொண்டு போன  அரிசி  பருப்பு கருவாட்டு சிற்பத்துக்கும்  கணக்கு  எடுத்துகொண்டது என் மனது.   அப்பவே இது சின்ன வள்ளம் கரையில இருந்து பெரும்  கடல் வரை மட்டும்  போகுதாக்கும் என்று கணிக்க தொடங்கியது. மொத்தம்  அறுபத்தி ஆறு பேர் .இந்த  மீன்பிடி ரோலர் தான் (நாவலாசிரியரின் சொல்லில்  வள்ளம்)  இத்தாலி வரை  போகபோகின்றது என மனது நம்பவில்லை , இதில் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக  Craftsmanship சறுக்க தொடங்கியது போல இருந்தது.

அத்தியாயம்   நாலில் ஆறு மாதங்களின் பின் வீடு  திரும்பும் சிவராசன் ஒருவித   துர்நாற்றத்தை உணர்கிறார் நீட்டி நிமிந்து படுத்திருக்கும்  ஊனம்   வழிந்துகொண்டிருக்கும்  புழுக்கள் நெளியும் எலும்பு கூடை காண்கிறார்   இதிலும்அத்தியாயம் ஐந்தில் பெரிய மார்புகளை உடைய நிலாமதி மார்புகளுக்கு   இடையில்  கிரனைடை ஒளித்து வைத்தலும் Craftsmanshipன் சறுக்கலின்  அதீதம்.

அந்த   பாரிய இடபெயர்வின் பொது யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை போலவே   வீட்டு வளர்ப்பு நாய்களும் கட்டா காலி நாய்களும் கைவிடபட்டிருந்தன. எது   கிடைத்தாலும் உண்பதற்கு  அவை பசியோடு அலைந்து திரிந்தன யதார்த்தம்   அவ்வாறெனில் சிவராசனின் அம்மாவின் மிஞ்சிய எலும்புக்கூடுகள் கிடைப்பதே   ஆச்சரிய பட கூடிய விடையம்.  நிரப்பப்பட்ட  ஐந்து கிளாஸ் தண்ணீருடன் வயதான   எழுந்து நடக்க முடியாத அம்மா எவ்வளவு நாள் உயிர்  வாழ்ந்திருக்க முடியும் ?   நாய்களின் பசிக்கு அவவின் உடம்பு எத்துபடவில்லை என வைத்து கொண்டாலும்   அவர் ஆறு மதங்களில் திரும்பி வரும்போது காய்ந்து கருவாடகிய அம்மாவின் உடலும் எலும்புகளுமே சிவராசனுக்கு கிடைத்திருக்கும்.

குண்டு பாப்பா என  அழைக்கப்படும்  நிலாமதிக்கு தெரியும் எவன் எப்ப பார்த்தாலும் முதலில் எங்க  கண்ண, கைய  வைப்பான் என, அதுவுமல்லாமல் கிரனைட்ட அதனை தொட அதனை நன்கு  அறிந்தவர்கள்  கூட உடலுடன் வைத்திருக்க பயப்பிடுவார்கள் அதனை மார்புகளுக்கு  இடையில்  புதைத்து வைத்தாள் அது குளிர்ந்தபடி இருந்தது என்பது யார்தார்த்தமிழந்ததாக  இருந்தது எனக்கு.

ஏனோ  “ஒழிக்க இடமில்லாம போய் விதானையார் வீட்டில ஒழித்தானம்” என்ற பழமொழி  நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த  நான்காம்  அத்தியாயம் ஒரு  இடைசெருகலாக யதார்த்தத்தை மீறிய ஒன்றாக  இருந்தது. அதில் நிலாமதிக்கு  கொடுத்த விவரண அளவு பயணத்துக்கு பயன்படுத்திய  ரோலருக்கு கொடுக்கப்படவில்லை. சென்றி பொயின்ட்களில் பெரிய, சிறிய  மார்புகளின்  அளவுகளில் இந்திய அமைதி காக்கும் படை வித்தியாசம்  கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரிசையில் நின்ற பெண்களின் முலைகளை தொட்டு  பார்பதற்கு என்ன   “பொம்”ஆ என தொட்டு தடவி கசக்கி பார்த்தவை எல்லா சென்றி  பொயின்ட்களிலும்   நடந்தவை தான். என்னை பொறுத்தவரை இந்தியன் ஆமியின்  கொடுரத்தை சயந்தனின்  ஆறாவடு  குறைவாகவே சொல்லி இருக்கிறது.

மற்றும்  எல்லா  ஊர்களிலும்  ஒரு “வெற்றியை” ஒத்த ஒரு புலிவீரன் இருந்தான். இந்திய  அமைதி  காக்கும் படை வெளியேற போவதாக அறிக்கைகள் வர ஆரம்பித்த காலம்   களவுகளும்  அதிகரிக்க தொடக்கி இருந்தது. 1989 ம் ஆண்டின் தொடக்கத்தில்  எங்களது வீடு  அன்றைய முன் இரவில் முன்றாவது வீடாக ஆயுததாரிகளால் கொள்ளை  அடிக்கபட்டது.  அன்றைய இரவில் கொள்ளையர்களுக்கு ஆட்காட்டியாக வந்த வாசலில்  நின்றவனை  சாந்தன் மூன்று முறை மேல் வெடி வைத்து கைது செய்தான். தினமும்  வெள்ளை  சீருடை அணிந்து பாடசாலை செல்லும் மாணவனாய் அவனை கண்டிருக்கிறேன்.  கைது  செய்யபட்டவன்  அடுத்தநாள்  உப்புமோட்டை சந்தியில் வைத்து சாந்தனால்  சுட்டு  கொல்லபட்டான்.  வடமராட்சியில் “தும்பனை” போலவே கோண்டாவிலில்  சாந்தன்  இருந்தான். அவன் அனைத்து  இந்திய அமைதிபடைக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவனாகவே  இருந்தான். சாந்தனால் இலக்கு வைக்கபட்டவர்களுக்கு மட்டுமே அவனை  யார் என  தெரிந்திருந்தது. அவ்வாறு அவனை தெரிந்தவர்களுக்கு  அவனை காட்டி கொடுக்கும்  சந்தர்பத்தை அவன் விட்டு வைக்கவில்லை. இந்திய அமைதி படையிலும்  பலர் அவனை  தெரிந்துகொண்ட ஆச்சரிய கண்களுடன் இறந்துபோய் இருந்தார்கள்.  இறுதியில்  இந்திய அமைதிப்படை வெளியேற போகின்றதென்ற ஒரு அசன்டையீனமான நாள்  ஒன்றில் ஒரு  சுற்றுவளைப்பில் சாந்தன் சயனைட் குப்பி கடித்து செத்து  போனான். செத்த பின் இவன்  தான் “சாந்தன்” என அறிந்த இந்திய அமைதி படை அவன்   தலையை வெட்டி கொக்குவில்  சந்தியில் காட்சிக்கு வைத்தது.அதுவே அவர்கள்  வெளியேற முன் செய்த இறுதி  வீரமாகவும் இருந்தது.

இப்பிடி ஏராளம்  கதைகள் எல்லா  ஊர்களிலும் உண்டு. இவ்வாறான நாவலுக்கான தொடர் களம் இருந்தும்  சயந்தனின்  ஆறாவடு, நாவல் ஒன்றை வாசிக்கும் அனுபவத்தை கொடுக்க தவறி  சிறுகதைகளாகவே  எனது வாசிப்புக்குஉள்ளானது. இது எனது வாசிப்பின் அனுபவம்  மட்டுமே. இது  எனது வாசிப்பின் குறைபாடாகவும் இருக்கலாம்.

இந்த  நாவலில்  கப்பல், மற்றும் பயணத்தின் விபரணம் குறைவாகவே விபரிக்க   பட்டிருக்கிறது.ஆனாலும் அதனை ஈடு செய்வதாக அட்டைபடம் இருந்தது. அட்டை   படத்தை வரைந்தவர் யார் என்னும் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாதது    வருத்தத்துக்கு உரியது.  கரையில் இருந்து அரிசி பருப்பு கருவாடு போன்றவற்றை   ஏற்றும் போது அதன் அளவுகள் நீண்டதொரு கடல் பயணத்துக்கு ஏற்றதாய்    இருக்கவில்லை. நீண்ட போராடம் ஒன்றில் பங்கு பற்றிய “அமுதனின்”  கவனத்தில்   இது பட்டிருக்கவேண்டும் இந்த ஒரு விடயமே பயணத்தின் தகிப்பை சொல்ல போதுமானது, அது சொல்லாமல் தவிர்கபட்டிருகிறது.

அந்த மீன்பிடி ரோலரும்   பயணமாந்தர்களும் கடலும் அலைகளும் ஒரு நூலிழையாய் நாவல் முழுவதும் வருதல்   தவிர்த்து அப்பப்போ கப்பலுக்கு என நடந்திருக்கும் என்று தேடி பார்க்கும்   ஒரு வாசக அனுபவத்தை கொடுத்து அது விடுபட்டு தொடர்பின்றி இருந்தது.

By

Read More

ஆறா வடு – கறுப்பி

”இனிமேல் படைப்புக்களை விமர்சனம் செய்பவர்களை, அப்படைப்பில் இருக்கும் அரசியலை தவிர்த்து படைப்பின் மற்றைய குணங்களை விமர்சனத்திற்குட்படுத்துக்கள் என்று கேட்டுக்கொள்ளல் நன்று”

”இப்போது இரண்டு இலக்கியத் தரப்புக்கள் உருவாகி விட்டன. ஒன்று யோ.கர்ணனைத் துாக்கிப் பிடிக்கின்றது, மற்றது சயந்தனைத் துாக்கிப் பிடிக்கின்றது’

’இப்போது இரண்டு சார்புநிலைகள் இலக்கியவிமர்சனங்களில் உருவாகி விட்டன. ஒன்று புலிசார்பு இலக்கியங்கள், மற்றையது புலி எதிர்ப்பு இலக்கியங்கள்”

”உலகமே சார்பு நிலையில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, அதிலிருந்து எவரும் தப்ப முடியாது, கைலாசபதி, சிவத்தம்பிகூட சார்பு நிலை இலக்கியவிமர்சகர்களாக இயங்கியவர்கள்தாம் எனவே நாம் அவ்வாறு செயல்படுவது தவறல்ல. அது தவிர்க்க முடியாதது நாம் அப்படிதான் செயல்படமுடியும்”

”விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள்தான், ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் எந்த ஒரு போராட்டத்தையும் எடுத்துப் பாருங்கள், அங்கெல்லாம் தவறுகள் நடந்துதான் இருக்கின்றன எனவே இதுவும் தவிர்க்க முடியாதது, அது அப்படித்தான் இருக்கும் அப்படித்தான் செயல்பட முடியும்”.

அண்மைக்கால இலக்கிய அரசியல் கூடல்களின் போது காதில் விழுந்தவை.

எனது நாவல் வாசிப்பில் எனக்கான நிறைவைத் தரும் படைப்புகளின் குணாதிசயங்கள் என்று நான் உள்வாங்கி் வைத்திருப்பவை.

சமூகப்பிரக்ஞை கொண்ட கருவோடு, பாத்திரக்கட்டமைப்புக்கள், நிலவியல் கட்டமைப்புக்கள் என்பன நிறைவாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் போலல்லாது நாவல் ஒரு நீண்ட பயணத்திற்கு எங்களை ஆயத்தம் செய்வதால் இவை நிறைவாக இருக்கும் பட்சத்தில் எனது பயணம் ஒரு போதும் சலிப்புத் தட்டியதில்லை. (இரசணை என்பது மனிதனுக்கு மனிதன் வேறு படுகின்றது என்ற புரிதலோடு) நாவலின் இரண்டு அத்தியாயங்களைத் தாண்டும் போது ஒரு வாசகியாக நாவலின் கட்டமைப்புக்குள் புகுந்து கொண்டு நீரோட்டம்போல் தடைகளின்றி புனைவாளர் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் முன்னேற முடிகின்றது.

மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல்களை வாசித்த பின்னர் அதன் நிலவியல் கட்டமைப்பின் தரவுகளை கூகிள் செய்து மேலும் அது பற்றி அறிந்து கொள்வதன் மூலம் ஒரு அறியப்படதா நாட்டின், நகரத்தின் அல்லது கிராமத்தின் இயற்கை வனப்பை, கலாச்சரப் பண்புகளை உள்வாங்கிக் கொண்டு, அதனுடன் சிறிது காலமேலும் வாழ்ந்து விட முடிகின்றது. (பயணங்கள் சாத்தியப்படாத பட்சத்தில் இது ஒரு நிவர்த்தி செய்யும் யுக்தியாகிவிட்டது)

இதன் அடிப்படையில் அண்மைக்கால எனது வாசிப்பில் இரு முக்கியமான நாவல்களான

”ஆறா வடு”, ”கசகறணம்”  இரண்டையும் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் எனக்குள் எழுந்தது, இருப்பினும்  ”கசகறணம்” புலி எதிர்ப்பு நாவல் என்ற வகைக்குள் அடங்கி புலி எதிர்ப்பு வாதிகளால் துாக்கி ஏற்றப்பட்டதாகவும் (அதற்குள் நானும் அடக்கம்) ”ஆறா வடு” புலி ஆதரவு நாவல் என்ற வகைக்குள் அடங்கி புலி ஆதரவாளர்களால் துாக்கி ஏற்றப்படுவதாகவும் ஒரு விமர்சனத்திற்குள் விமர்சனம் ஒன்று ஊடாடிக்கொண்டிருக்கின்றதையும் உணரமுடிகின்றது.  (ஆறா வடு எதற்காக இப்படியொரு சார்பு நிலையைத் தட்டிக்கொண்டது என்பது புரியா புதிர்)

இவற்றையெல்லாம் விடுத்து, இந்நாவல்களின் அரசியலை எல்லாம் தவிர்த்து அதன் மொழி வடிவம் கட்டமைப்புப் போன்றவற்றை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எனக்குள் விஞ்சி நிற்கின்றது.

இரண்டுமே ஈழப்போராட்டத்தின் சாட்சியங்களா உருவாக்கப்பட்ட படைப்புக்கள். இரண்டுமே நேர்மை அரசியலைத் தளமாகக்கொண்டு புனையப்பட்டவை என்பதை அதன் காலகட்டத்தில் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்து புலம்பெயர்ந்தவர்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனவே தகவல்களின் விமர்சனங்கள் வைத்தல் என்பது வெறும் சார்பு நிலையாக மட்டுமே அமைந்து விடும்.

நாவல் வடிவமைப்பில் என் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பாத்திரக்கட்டமைப்பு, நிலவியல் கட்டமைப்பு என்பனவற்றின் மூலம், ”கசகறணம்” முழுமையான அனைத்துக்கட்டமைப்புக்களையும் தன்வசம் கொண்ட நாவலாக என்னை வாசிப்பின் போது தன்னோடு உறவாட வைத்தது. படைப்பில் ஒரு நாயகத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத விமல் குழந்தைவேலின் பாத்திரத் தெரிவு, அதாவது நாவலின் முக்கியபாத்திரங்கள் என்பன ஒரு வயது முதிர்ந்த மையிலிப்பெத்தா என்று அறியப்படும் பெண்மணியும், ஒரு சந்தையும் என்பது இங்கே பிரத்தியே முக்கியத்துவம் பெறுகின்றன.  அது மட்டுமன்றி நாவலின் அனைத்துப் பாத்திரங்களையும், நிலவியல் அமைப்புகளையும் புனைவாளர் நுணுக்கமாக அவதானித்து செதுக்கியதன் மூலம் வாசகர்களை அந்த நிலத்திற்கும், அந்த மக்களிடமும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த நெருக்கம் ஒரு வாசகிக்கு நாவலின் பாத்திரங்களுடனும்,  மண்ணுடனும் ஏற்படும் பட்சத்தில் பாத்திரங்களின் அனைத்து உணர்வுகளையும் வாசகியும் உணரத்தொடங்குகின்றாள். அந்த மண்ணை வாசகி அறியத் தொடங்கும் பட்சத்தில் அதன் அழிவு அவளையும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது.  பல பெயர்பெற்ற நாவல்களின் உருவமைப்புப் பாத்திரங்கள், உயிர்வாழும் பாத்திரங்களாக மாறிப்போவது புனைவாளரின் நுண்ணிய கட்டமைப்புத் திறனால் உருவாகுகின்றது. ”கசகறணம்” நாவலின் ஒரு துணைப்பாத்திரமாக வந்து போன குலத்தழகிப் பாத்திரம் என் வாயில் எப்போதும் வந்து போகும் ஒரு உயிர்வாழும் பெண்ணாக மாறிப்போனது விமல் குழந்தைவேலின் பாத்திர கட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி.  கசகறணத்தில் வந்து போகும் அனைத்துப் பார்த்திரங்களும் உயிர் கொண்டிருப்பதோடு அந்தக் கிராமம், புறச்சூழல் என்பனவற்றை புனைவாளன் அவதானமாகக் கருத்தில் கொண்டு கட்டமைப்பித்திருப்பதால் வாசகர்கள் இடையூறின்றி அனைத்ததையும் அடையாளப்படுத்தக்கூடியதான விருந்தது.

Barbara Kingsolver இன் The Poisonwood Bible வாசித்த போது கொங்கோ நாட்டின் கிராமங்களையும், அதன் கலாச்சாரப் பண்புகளையும் அதன் அதிஉச்ச வளங்களையும் புனைவாளர் வாசகியாகிய என்னையும் தன்னோடு அழைத்துச் சென்று காட்டி வந்தார். ஒரு புனைவாளனின் நுண்ணிய அவதானங்கள் புனைவுகளின் வெளிப்படும் போது வாசகியும் அதனை உணர்ந்கொள்கின்றாள். அப்போது அப்புனைவு வெற்றிபெறுகின்றது.

இந்த வகையில் ”ஆறா வடு” நாவலைப் பார்க்கையில் புனைவாளர் தகவல் திரட்டலுக்குக் கொடுத்த முக்கியத்தைப் பாத்திரக்கட்டமைப்பிற்கோ, நிலவியல் கட்டமைப்பிற்கோ கொடுக்கவில்லை என்பது என் அவதானிப்பாகவுள்ளது. நாவலின் முக்கிய பாத்திரத்தை என்னால் புனைவாளரான சயந்தன் (அவரன் புகைப்படத்தைக் கொண்டு) எனும் உருவத்தைக் கொண்டுதான் கட்டமைக்க முடிந்தது. அந்த வெளியை புனைவாளன் நிறப்பவில்லை. பல பாத்திரங்கள், ஊர்கள்,  பெயரளவில் வந்து வந்து போகின்றன. எதுவும் மனதில் பதியவில்லை. இது ஒரு அரசியல் பதிவு நாவல் எனும் பட்சத்தில் சம்பவங்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்ற என்று வாதிட்டாலும், துப்பாக்கியால் ஒருவன் சுடப்பட்டுக்கொல்லப்படுகின்றான் என்பதை செய்தியாகச்சொல்லிப் போகும் சயந்தனின் எழுத்து வாசகியாகி என்னுள் உணர்வு ரீதியான பாதிப்பு எதையும் ஏற்படுத்தாவிடின், எதற்கு நாவல் என்ற ஒரு வடிவம் இங்கே தேவை என்ற கேள்வியும் எழுகின்றது. ”முறிந்தபனை”, ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம், ’போரும் சமாதானமும்”  போன்ற தகவல்திரட்டல்களால் ஆன கட்டுரைப் பதிவுகள் ஏற்கெனவே கைவசம் இருக்கும் பட்சத்தில் நாவல் என்ற வடிவத்தின் கீழ் வெளியாகும் ஒரு படைப்பின் மேல் உண்டாகும் எதிர்பார்ப்பை அது தன்னளவில் தனது வடிவத்தை நிவர்த்திசெய்வதாக அமைந்திருத்தல் முக்கியம். ”ஆறா வடு” பல அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு புனைவாளரின் பிரத்தியேக எள்ளலுடன் கலந்த எழுத்து வடிவில் கொடுத்திருக்கின்றது என்பது உண்மையே. இருப்பினும் அரசியல் தவிர்த்து ”ஆறா வடு” அதன் வடிவத்திற்காக ஆராய்ந்து பார்க்க முனைந்தால் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. பாத்திரங்கள் எதுவும் மனதில் பதியும் படியாகப் புனைவாளன் செதுக்கவில்லை. அதை விட நிலவியல் கட்டமைப்பிற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புனைவாளன் புனைவாளனாகவிருந்து கதை சொல்ல, நான் வாசகியாகவிருந்து கேட்டு விட்டுச் செல்லும் அனுபவத்தைத்தான் ”ஆறா வடு”வின் வாசிப்பின் இறுதியில் பெற்றேன். புனைவாளன் வாசகர்களை சம்பவதளங்களுக்குத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை என்ற ஏமாற்றம்தான் நாவல் மூடியபோது எனக்குக் கிடைத்தது.

”ஆறா வடு” நாவல் பார்க்கப்பட வேண்டிய ஒரு ஒளிவீச்சு வீடியோ போல் அமைந்திருந்தால் ”கசகறணம்” பார்க்கப்பட வேண்டிய ஒரு ”ஆர்ட் ப்லிம்” போல் அமைந்திருந்தது. நான் தேடித் தேடி ”ஆர்ட் பிலிம்” களையே விரும்பிப் பார்ப்பேன்.

By

Read More

ஆறா வடு – கவிஞர் திருமாவளவன்

(ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு கா…ரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே கொண்டிருந்தேன். முன்னால் உள்ள அத்தியாயங்களை தனித்தனி நல்ல சிறுகதைகளாக பார்க்க முடியும். பல நல்ல சிறுகதைகளை ஒரு நாரில் தொடுத்த கதம்பச்சரம் போல தோன்றியது. போகப்போக அவசரப்பட்டிருக்கிறார் என்றே நானும் எண்ணினேன். என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். நான் உசாவியதில் 2009இல் தொடங்கி பின் போட்டுவைத்து 2011 தொடர்ந்து முடித்ததாக சொன்னார். அவருக்குள் எற்பட்ட மாற்றங்களே மேலே நான் உணர்ந்த மாற்றங்களுக்கு காரணம். தொடகிய காலத்திலிருந்து தொடர்சியாக எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். கசகரணம் ஆறாவடு இரண்டுமே தொடற்சியான துன்பம் என்ற ஒரு பொருள் தருகின்ற சொற்கள். அண்மைக்காலத்தில் வெளிவந்த இரண்டு ஈழநாவல்லளுக்கு ஒரே பொருள் படும் தலைப்பு அமைந்ததே சிறப்புத்தான்.

By

Read More

ஆறா வடு – நடராஜா முரளிதரன்

தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்தவை இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பணயம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் “நேரு ஐயா” என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம். நாவலின் இறுதிப்பாகங்கள் தொடக்கத்தைவிடக் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்’ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் “ஆறா வடு” முக்கியமான ஒரு நாவல்.

By

Read More

ஆறா வடு – லேகா சுப்ரமணியம்

மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”.

“நிழலை விலக்க முடியாதபோது தோற்றுப் போன போர் வீரன் பாதுகாப்பில்லாத வெளியில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான் மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன்

By

Read More

× Close