டிசே தமிழன்

திரை’ நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின் கடினத்தைப் பற்றிச் சொல்கின்றேன். இவ்வளவு நிறையப் பக்கங்களில், புலம்பெயர்ந்த சூழலில் இருந்து வந்த படைப்புக்கள் எவையென்று யோசிக்கும்போது ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’, ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பவை உடனே நினைவிற்கு வந்தன. ஆனால் அவை தன் வரலாறு சார்ந்து எழுதப்பட்ட நூற்கள். புனைவின் எழுத்தின் வகைக்குள் வராதவை. தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’யே நமக்கு முன்னோடியாக இருக்கின்றது. ஆனால் அதைக் கூட தேவகாந்தன் இலங்கை மற்றும் இந்தியாவில் -தமிழ் நன்கு பரிட்சயமான சூழலிருந்தே- பெரும்பகுதியை எழுதியிருக்கின்றார். அந்த வகையில் ‘ஆதிரை’ நம் புலம்பெயர்ந்த சூழலில் தொடங்கப்பட்ட, ஒரு பயணத்திற்கான முக்கிய காலடி எனத்தான் சொல்லவேண்டும்.

ஆதிரையில் முதல் அத்தியாயமாகவும் இறுதிஅத்தியாயமாகவும் இருப்பவற்றை ஏற்கனவே சிறுகதைகளாக வெளிவந்து அவற்றை வாசித்ததாகவும் நினைவிலுண்டு. ஆதிரை மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்றது. அதில் ஒரு குடும்பம் மலையகத்திலிருந்து வன்னிக்குள் கலவரங்களில் நிமித்தம் இடம்பெயர்கின்றது. இன்னொரு குடும்பம் வன்னிக்குள்ளேயே நீண்ட காலமாய் வசித்துவருகின்றது. இந்த இரண்டு குடும்பச் சங்கிலிகளுக்குள் வேறு குடும்பங்களும் முக்கியமான பாத்திரங்களாகவும் உதிரிகளாகவும் வந்து சேர்கின்றனர். அவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் வந்து சேர்கின்றவர்கள்தான் அத்தாரும், சந்திராவும். அவர்கள் தொடக்கத்தில் யாழில் இருந்து  வன்னிக்குள் வந்தது போரின் நிமித்தம் அல்ல; யாழ்ப்பாணிகளின் சாதித்திமிரிலிருந்து தப்பிவந்தே வன்னிக்குள் தமக்கான வாழ்க்கையை அமைக்கின்றனர்.

இந்நாவலில் வன்னிக்காடும், வேட்டை நுட்பங்களும் அற்புதமாய்ச் சித்தரிக்கப்படுகின்றன. காடும் காடு சார்ந்து வாழ்ந்த சங்கிலியினதும், மயில்குஞ்சனினதும் வாழ்க்கை எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மாறுகின்றன என்பதை நாவல் இயல்பாய் வாசிக்கும் நம்மிடையே எடுத்து வருகின்றது. பண்ணைகள் அமைத்து  அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டவற்ற பண்ணைகளைச் சுவீகரித்து, இயக்கங்கள் தமக்கான தளங்களை வன்னிக்குள் அமைக்கத் தொடங்குகின்றபோது, காட்டிற்குள் செல்லும் உரிமை மறுக்கப்படும்போது சங்கிலி கொந்தளிக்கின்றார். மயில்குஞ்சன் காலப்போக்கில் இயக்கத்தோடு சேர்ந்து அவர்களது தாக்குதல்களுக்கு உதவி செய்யும் ஒருவராக மாறிப்போகின்றார்.

நாட்டின் எந்தப் பகுதியில் கலவரங்கள் நடக்கின்றபோதும் வன்னி ஒவ்வொரு பொழுதும் அதிர்கின்றது. இறுதியில் போர், வன்னிக்குள்ளும் கால் வைக்கின்றது. இராணுவம் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்கின்றனர். இயக்கக்காரர்கள் திரும்பி இராணுவத்தோடும் பொலிசோடும் பொருதுகின்றனர். மக்கள் வீணாய்க் கொல்லப்படுகின்றார்கள் என்பதைக்  காரணங்காட்டி மற்ற இனமக்களையும் இயக்கம் கொல்கின்றது. இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம் என்று இராணுவங்கள்தான் மாறுகின்றரே தவிர, யுத்தம் தொடர்கின்றது. அது ஏற்படுத்தும் அழிவுகளும் மனக்காயங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றது.

போருக்குள்ளும் மறுபுறத்தில் வாழ்க்கை தளிர்க்கின்றது. பிள்ளைகள் பிறக்கின்றனர் .அடுத்தடுத்த தலைமுறைகள் தோன்றுகின்றன. வழமைபோலவே பெண்களும் குழந்தைகளும் எதையும் பேசாது அல்லது அவர்கள் பேசுவதற்கான எந்த வெளிகளும் இல்லாமல் போகின்றது. அவர்களே ஆண்களை விட எல்லா இழப்புக்களையும், வடுக்களையும் தாங்குகின்றனர்.  நெருக்கமானவர்கள் கொல்லப்படுகின்றபோதும், காணாமற்போகும்போதும், இயக்கங்களுக்குப் போகும்போதும் இந்தப் பெண்களே தம் குடும்பங்களை வழிநடத்துகின்றனர். எல்லாத் துயரங்களோடும் அடுத்ததலைமுறையை வளர்த்து ஆளாக்கியும் விடுகின்றனர்.

 

வ்வளவு பெரிய நாவல் பல்வேறுதளங்களில் ஊடறுத்துச் செல்வதற்கான வெளிகள் இருக்கின்றன. ஆனால் நாவல் புலிகள் ஆதரவு மற்றும் எதிர் என்று இரண்டு தளங்களுக்குள் அப்பால் நகரக் கஷ்டப்படுகிறது. அதிலும் அவ்வப்போது உரையாடும் பாத்திரங்கள் மூலமே எதிர் விமர்சனம் வருகின்றதே தவிர, முழுமையாக வரவும் இல்லை. ஒரு படைப்பாளி ஒரு சார்பு எடுத்து எழுதுவதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் ஒரு படைப்பு எப்போது நம்மால் மறக்கமுடியாத நாவலாக மாறுகின்றதென்றால் ஒரு பாத்திரம் அதன் பலவீனங்களுடன் என்றாலும் அதற்குரிய நியாயத்தைக் கொண்டிருப்பதை வாசக மனதில் பதிய வைப்பதில்தான் இருக்கிறது.  ஏன்  எப்போதே எழுதிய ரஷ்ய நாவல்களை இன்றும் விதந்தோத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் நாவல்களில் இருந்த பலவீனமான மனிதர்களாயினும் நாம் அவர்களைக் கடந்துபோக முடியாத பாத்திரங்களாய்ப் படைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணம் எனலாம்.

புலிகள் மீது ஒரளவு விமர்சனங்களை வைப்பது சந்திரா என்கின்ற பாத்திரம் மட்டுமே. அந்தப் பாத்திரத்திற்குள் கூட உள்ளே நுழைய சயந்தன்  அவ்வளவு மினக்கெடவில்லை. ஒரு தீவிர புலி அனுதாபியான அத்தாரை, சந்திரா அவ்வப்போது கேள்விகளால் மடக்கின்றாரே தவிர வேறு எந்த நுட்பமான விமர்சனங்களையும் நாவலில் எளிதாய்ப் பார்க்கமுடியவில்லை.  அத்தார் கூட, இளமையில் ஒரு கம்யூனிஸ்டான இருந்த அவர் பின்னாளில் தேசியவாதியாக மாறுகின்றார் என்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. புலிகளால் கொல்லப்படுவதற்காய்த் தேடப்பட்ட எத்தனையோ பேர் பின்னாட்களில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக மாறியதை நாமறிவோம். அது மட்டுமின்றி அவர்களின் ஒருவகையினர் இன்றும் கூட இத்தனை நிகழ்ந்தபிறகும் புலிகளின் எல்லாவற்றையும் ஆதரிப்பதையும் காண்கின்றோம். அந்தவகையில் சயந்தன் இறுதிப்போர்க்கட்டங்களில் நிகழ்ந்த கட்டாய ஆட்சேர்ப்புக்களை மறைக்காமலும், அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தாமலும் உள்ளதை உள்ளபடி எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

இந்த நாவல்  இத்தனை நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுகின்றதென்றால், பல்வேறு அடுக்குகளில் இது இன்னும் விரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. வாசிப்பவர் இந்தப் பாத்திரம் சரியா அல்லது தவறா என்று யோசிப்பதற்கான வாய்ப்புக்கள் அநேக பாத்திரங்களுக்கு வழங்கப்படவில்லை. உதாரணமாக புலிகள் அனுதாதபுரத்தில் சிங்கள மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய உளவுத்துறையினர். எல்லா இயக்கங்களும் சேர்ந்து இருந்த கூட்டத்தில் இந்தப் படுகொலையை யார் நிகழ்த்தப்போகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டபோது ஏனைய இயக்கங்கள் தயங்கியபோது, புலிகள் முன்வந்ததை புளொட்டில் அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

ஏன் இத்தனை பெரிய நாவலில் நம் இயக்கங்களின் வளர்ச்சியை இயல்பாக விடாது பயிற்சி முகாங்களும், ஆயுதங்களும் அள்ளிக்கொடுத்து ஊதிப்பெருப்பித்த இந்தியாவின் அரசியல் கோரமுகம் வெளியே வரவில்லை. சிங்கள அரசு மற்றும் இராணுவத்தின் கொடும் முகங்களை இந்தளவிற்குக் காட்டமுடியுமென்றால் மெளனமான பெரும் தந்திரம் நிறைந்த இந்தியா எப்படி நம் போராட்ட வரலாற்றிலிருந்து தப்பிவிட முடியும். இந்திய அரசினதும், உளவுத்துறையினதும் பங்கின்றி நாம் நமது போராட்டங்களின் வரலாற்றை எப்படி எழுதிவிடமுடியும்?

மேலும், புலி ஆதரவு எதிர்ப்பாடு என்ற பாத்திரங்களைத் தவிர வேறு எந்த விதிவிலக்கான பாத்திரங்களும் இந்ந்தாவலில் வளர்க்கப்படவில்லை. முக்கியமாய் முஸ்லிம் பாத்திரம் எதையுமே இந்த நாவலில்  காணவேயில்லை. அப்படி ஒரு பாத்திரம் படைக்கப்பட்டிருந்தால் இந்த நாவல் இன்னும் ஆழத்திற்குள் இறங்கியிருக்கும். அதே போன்றே புலிகள் சாராத இன்னொரு இயக்கத்தின் முன்னாள் போராளியின் பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கலாம். அதன் மூலம் நமது போராட்டத்தின் உரையாடலை இந்த நாவலில் வளர்த்தெடுத்திருந்தால் எத்தனை அற்புதமாக  இந்நாவல் உருமாறியிருக்குமென  வாசிக்கும்போது நினைத்துக்கொண்டிருந்தேன்.

 

யந்தனின் சமகாலத்தவனாக இருப்பதால் இந்த நாவல் வாசிப்பில்  அது பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் என்ற நினைப்பே வந்தது. இந்த நாவலிற்குள் சயந்தனின் அழகான மொழி நடை  கூடவே வந்ததால் வாசிப்பு அவ்வளவு தடைசெய்யவில்லை.

இப்போது நமது ஆயுதப்போராட்டம் குறித்து நிறைய  புதினங்கள் வரத்தொடங்கியிருக்கும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு படைப்பைத் தருவதில் மிகப் பெரும் சவால் இருக்கின்றதென நினைக்கின்றேன். நமது ஆயுதப்போராட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதற்கு அப்புவின் ‘வன்னி யுத்தம்’ , யோ.கர்ணனின் ‘கொலம்பஸின் வரைபடம்’, தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ என்பவை நம் முன்னால் இருக்கின்றன. இன்னொரு புறம் புலிகளின் போராட்டங்கள் பற்றிக்கூற பெண்புலிகளின் போராட்டத்தின் பங்களிப்பைக் கூற ‘விழுதுமாகி வேருமாகி’, ‘மலைமகள் கதைகள்’, ‘மேஜர் பாரதியின் படைப்பு’க்கள் என நிறைய ஏற்கனவே முன்னரே வெளிவந்திருக்கின்றன. இன்னொரு புறத்தில் ‘விடமேறிய கனவு’, ‘பொக்ஸ் கதைப்புத்தகம்’ என புனைவின் நுட்பங்களுக்கு உதாரணங்களாய் இருக்கின்றன.

நிறைய வாசிப்பதென்பது ஒருவித பலவீனமோ என யோசித்த தருணமும் ஆதிரையை வாசித்தபோது எனக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆதிரையின் நிறைய இடங்கள், எனக்கு வேறு படைப்புக்களை நினைவூட்டிக்கொண்டிருந்தது. உதாரணமாக மிகச் சிறப்பாக ஆதிரைக்குள் வடிவமைக்கப்பட்ட வெள்ளையக்கா என்கின்ற மலரின் பாத்திரம் எனக்கு  வெற்றிச்செல்வியின் ‘போராளியின் காதலி’யின் முக்கிய பாத்திரத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது. ஆதிரையில் வரும் சித்திரவதைக்கூடங்கள் பற்றிய சித்தரிப்பு விடமேறிய கனவின் பக்கங்களையும், இறுதிப்போர் பற்றிய சித்திரங்கள் அப்புவின் ‘வன்னியுத்தத்தையும்’, கொலம்பஸின் வரைபடத்தை’யும் நினைவுபடுத்தியிருந்தன. இதன் அர்த்தம் ஆதிரை அவற்றைப் பின்பற்றியது என்பதல்ல. ஒரு வாசக மனது எந்தத்திசையில் சிந்தித்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே.

ஆகவே இனி நமது படைப்பாளிகளுக்கு முன்னாலுள்ள பெரும் சவால் என்னவென்றால் உம்பர்த்தோ ஈக்கோ ஓரிடத்தில் சொல்வதுபோல, ‘வாசகருக்கு எது வேண்டுமெனத் தெரிந்து எழுதுவதல்ல. நமது ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றமாதிரி வாசகரை மாற்றுகின்ற வித்தையை நாம் எழுத்தினூடாக அறியவேண்டியிருக்கின்றது’ என்பது பற்றியே நாம் யோசிக்கவேண்டியிருக்கின்றது. அதுவே நம் எல்லோருக்கும் முன்னால் உள்ள சவால். அதை எப்படி எதிர்கொள்கின்றோம், தாண்டிச் செல்கின்றோம் என்பது குறித்து இனி நாம் அக்கறைப்பட வேண்டியிருக்கின்றது..

 

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ வந்தபோது அதை வியந்து ஷோபாசக்தியின் காலத்தைய ஒரு இயக்க நண்பரோடு உரையாடியிருந்தது நினைவுக்கு வருகிறது. இதிலென்ன இருக்கின்றது இதைவிட நிறைய விடயங்கள் எனக்குத் தெரியும் என அந்த நண்பர் சொன்னபோது எனக்கு கோபமே வந்தது. இப்போது ஆதிரையை பற்றிப் பேசும்போது அதேதான் ஞாபகம் வருகின்றது. சயந்தனின் சமகாலத்தவனாக நானும் இருப்பதால் எனக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளின் தொகுப்பாக இருப்பதால் என்னால் இதை ஒரு மிகச்சிறந்தநாவலாக முன்வைக்கமுடியாது எனச் சொன்னால் நான் ‘கொரில்லா’விற்காய் கோபப் பட்டத்தைப் போல யாரேனும் ஒருவர் கோபப்படக்கூடும். அதைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால் நாவலிற்கான திறனாய்வுகள் என்பது அடுத்து எழுதுவதற்கு ஏதோ ஒருவகையில் உதவும் என்கின்ற முறையில் நம்புகின்றவன். வெளிப்படையாக நாம் வாசிப்புக்களை வைக்கும்போதே நாம் நம் வாசிப்புக்களுக்கு நேர்மையாகவும், அதேவேளையில் படைப்பாளிக்கு உந்துசக்தியாகவும் இருக்கமுடியுமெனவும் நினைப்பவன்.

ஒரு சிறந்த படைப்பு அது வெளிவரும் காலத்தைய புகழ்ச்சிகள் தூற்றல்கள் என்பவற்றைத்தாண்டி எதிர்காலத்தில் தன்னை நிலைநிறுத்தும். அது வெளியிலிருந்து அல்ல, ஒரு நாவல் அது தன்னியல்பிலேயே தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்ளும். சயந்தனின் ‘ஆதிரை யும் அப்படித் தன்னை எதிர்வரும் காலங்களில் மீளக் கண்டடையவேண்டும் என பிரியப்படுகிறேன்.

By

Read More

ஆதவன் தீட்சண்யா

மணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட  கட்டுரை

 

1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடைந்தன.

உயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில் வரலாற்றுரீதியாக, குறிப்பாக பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பிற சாதியினரை ஒடுக்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருக்கிற யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரது ஏகபோகத்தை பாதிப்பதாகவும் அமைந்தது. அவர்கள் தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பாதிப்பதாக முன்னிறுத்தினர். பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு பிறபகுதி மாணவர்களை விட தாங்கள் கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ள தரப்படுத்துதலை எதிர்த்த மாணவர் போராட்டம் அங்கு தீவிரமடைந்தது. இது, இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்தியாவில் உயர் சாதியினர் இன்றளவும் நடத்திவரும் போராட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகும் தன்மைகொண்டது.

1976 மே 15ம் தேதி தமிழர் ஐக்கிய முன்னணியின் மாநாடு வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூளை என்று முன்பு வர்ணிக்கப்பட்டவரும் 1960களின் பிற்பகுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை தொடங்கி நடத்தியவருமான வி.நவரத்தினம் என்பவரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்கிற கருத்தாக்கம் உள்வாங்கப் பட்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் 1974 செப்டம்பர் 1ம் நாள் காமன்வெல்த் பாராளுமன்றவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மனுவிலேயே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான தொடக்கநிலைக் கூறுகளை காண முடிந்தது.

ஆட்சிமொழியாக சிங்களத்தை மட்டுமே ஆக்கியது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணக்கையை குறைத்தது, தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தியது, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள்- ஒன்பது பேரின் உயிரிழப்புகள், அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த இனக்கலவரங்கள் என இலங்கை ஆட்சியாளர்களிடையே சிங்கள பேரினவாதம் திரண்டுவந்தது. அது ஓர் இனம் என்ற வகையில் தமிழர்களுக்குரிய பல்வேறு ஜனநாயக உரிமைகளையும் பண்பாட்டு தனித்துவத்தையும் ஏற்க மறுத்தது. இந்த நிலைமைகளும், தரப்படுத்துதலுக்கு எதிரான வெள்ளாள மேட்டுக்குடியின் கொந்தளிப்பான குமைச்சலும் 1977 ஆம் வருடத்திய பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அமோக வெற்றியைத் தந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் கிடக்கையும் இதிலடங்கும். இவ்வெற்றியானது தனிஈழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கிடைத்த ஒப்புதலாக முன்னிறுத்தப்பட்டது. தமிழர்கள் நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள் என்று ஏற்கனவே சிங்களவர்களிடம் முளைவிட்டிருந்த பிரச்சாரம் ஒரு வெறியாக கிளப்பிடப்பட்டது. அவர்களது வெறிக்கு எளிய இலக்காக முதலில் சிக்கியவர்கள் மலையகத்தவர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள்.

யாழ்ப்பாணத்தவர்கள் கேட்கும் தனி ஈழம் இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்கியதில்லை. ஆனாலும் சிங்களவர்கள் மலையகத் தமிழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழீழத்திற்கான ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் ராணுவத்துக்கும்/ சிங்களவர்களுக்கும் இடையே எங்கு கலவரம் மூண்டாலும் அதற்கான தண்டனையை இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு சிங்களவர்கள் வழங்கினர். அவர்களது வன்முறைக்கு காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் துணை நின்றது. பிறந்த வளர்ந்து பாடுபட்டு உருவாக்கிய மலையகத்திலிருந்து வேறெங்காவது தப்பியோடினால் தான் குறைந்தபட்சம் உயிரையாவது தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற உளவியல் முற்றுகைக்கு இந்த மலையகத் தமிழர்கள் ஆட்பட்டனர். எனவே அவர்களில் சிலர் மலையகத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்கள். ஆதிரை நாவல் மிகச் சரியாக இந்த இடத்தில் தொடங்குகிறது. ஆனால் அது தனி ஈழக் கோரிக்கை உருவான இந்த வரலாற்றுப் பின்புலத்திற்குள் நுழையாமல் ( நுழைய வேண்டிய தேவையை இந்த நாவலின் அமைப்பு கோரவுமில்லை) அதற்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள், அவை நடந்த விதம், போரினூடாக மக்களது பாடுகள், ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களினதும் போராளிகளினதும் நிலை என்பது வரையாக நீண்டு முடிகிறது.

‘ஒண்டரை லட்சம் சனங்களையும் நாற்பதாயிதரம் பொடியன்களையும்’ கொன்று தனிஈழத்திற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. வெறும் எண்களாக சுருக்கிச் சொல்லப்படும் இந்த மக்களை எவ்விதமான துன்பதுயரங்களுக்கு ஆட்படுத்தி இலங்கை அரசாங்கம் கொன்றொழித்தது என்பதை கொல்லப்பட்டவர்களின் சார்பான நிலையிலிருந்து சொல்கிறது ஆதிரை. ஒதியமலையில் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நடராசனின் பிணத்தை பார்ப்பதிலிருந்து லெட்சுமணனை தடுத்துவிட முதலில் நினைக்கிற அத்தார் பிறகு வெறியும் வன்மமும் மேவ ‘அவன் பார்க்க வேணும். இந்தக் கோலத்தை அவன் காண வேணும். தமிழன் எண்ட பெயரைத் துரத்தி வருகிற அழிவையும் பேயாட்டதையும் அவன் அறிய வேணும்…’ என்று பார்க்கவிடுகிறான். இந்த நாவலின் முதன்மை நோக்கமும் கூட அதுதான். நடராசனின் பிணத்தை பார்க்கச் செய்வதனால் லெட்சுமணனிடம் எதிர்பார்க்கப்படும் மனமாற்றத்தை தனது வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறது நாவல். அதற்காகவே அது ஒவ்வொரு தனிச்சாவுகளையும் கூட்டுக்கொலைகளையும் கொப்பளிக்கும் ரத்தத்தின் சூட்டோடும் தெறித்த சதைத்துண்டத்தின் பிசுபிசுப்போடும் நமக்கு காட்டத் துடிக்கிறது.

தனி ஈழக் கோரிக்கை, அதற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டம், போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள், குழுக்களுக்கிடையே பகை, குழுக்களுக்குள்ளேயே நிலவிய கருத்து மாறுபாடுகள், விசுவாசிகள், துரோகிகள், பிற போராளிக்குழுக்கள் பலவற்றையும் அழித்து விடுதலைப்புலிகள் ஏகத்துவம் பெறுதல், புலிகளின் குணநலன்கள், ஆயுதபலம், சாகசங்கள், தியாகங்கள், புலிகள் நடத்திய தனி அரசாங்கத்தின் கீழ் மக்களது அன்றாட வாழ்க்கை, பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், உடன்படிக்கை என்று சொல்லிக்கொண்டே நடந்த மோதல்களும் மீறல்களும், இந்தப் போராட்டத்தையும் போராளிக்குழுக்களையும் குறித்து சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த வெகுமக்களின் கருத்து ஆகியவற்றை வகைமாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் வழியே நாவல் முன்வைக்கிறது.

தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் சாதியம், பின்தங்கியப் பகுதியான வன்னிக்கு இடம் பெயர்ந்த நிலையைக்கூட குறைந்த கட் அப் மதிப்பெண்ணில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனையும் யாழ்ப்பாண வெள்ளாளத்துவ மனம், இயக்கத்தில் சேர்ந்துவிடும் முன்பாக அல்லது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மொத்தச் சொத்தையும் அழித்தாவது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வைக்கும் மேட்டுக்குடியினரின் தந்திரம், கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவிப்பதற்காக செய்விக்கப்படும் இளம் வயது திருமணங்கள், பொய்க் கல்யாணம் செய்வித்து காட்டப்படும் போலி ஜோடிகள், பொய்க்கல்யாணம்தான் என்றாலும் அவனோடு படுத்திருக்க மாட்டாளா என்று பெண்ணை சந்தேகிக்கும் ஆண்வீட்டார், முஸ்லிம்களுடன் ஏற்பட்ட திருகல் நிலை- கட்டாய வெளியேற்றம், மலையகத் தமிழர்கள் குறித்த கீழான பார்வை – இப்படியாக போர்ச்சூழலிலும் வெளிப்படும் மனித இழிவுகளை கவனத்தோடு பதிவு செய்கிறது ஆதிரை. அதேவேளையில் இவ்வளவு ஏறுமாறுகளுக்கும் இடையில் சனங்கள் ஒன்றையொன்று அனுசரித்து உயிர்வாழப் பதைக்கும் மனோநிலை வெளிப்படும் தருணங்களையும் கவனப்படுத்துகிறது. தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட அவகாசம் அற்றவர்களாக ஓடிய அவர்கள் ஒருகட்டத்தில் காயமடைந்தவர்களையும்கூட அப்படியே விட்டுவிட்டு ஓடும் அவலநிலைக்கு ஆளாவது குறித்த உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிணங்களைத் கைவிடத் தொடங்கியவர்கள் கடைசியில் மனிதர்களையும் கைவிட்டு அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலைக்கு ஆளான போதும் தாங்கள் வளர்த்த ஆடுமாடுகள், கோழிகள், மரம் செடிகொடிகள், குலதெய்வம் என்று எதுவொன்றைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். 2009 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்கையில் நெடுஞ்சாலையின் மருங்குகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் அநாதையாய் திரிந்ததைக் கண்ட போது எனக்கேற்பட்ட துக்கம் சொல்லி மாளாதது. இடம் பெயர்ந்து ஓடும் பதைப்பிலும் பெண்ணொருத்தி ‘விதியிருந்தால் மறுபடியும் சந்திப்போம்’ என்று தான் ஆசையாய் வளர்த்த மாடுகளை அவிழ்த்து காட்டுக்குள் ஓட்டிவிடும் துயரத்தை என்னவென்ற சொல்வது? தனக்கொரு குழந்தையில்லையே என்று காலம் முழுவதும் தீராக்கவலையில் உருகிக்கிடந்த சந்திரா, போரினால் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்களையும் உளவியல் சிதைவுகளையும் காணப் பொறுக்காமல் ‘என்ர வயித்தில் உயிரொண்டும் சனிக்காதிருந்ததுக்கு நன்றியப்பா..’ என்று சொல்லும் நிலையைத்தான் போர் உருவாக்கியதா என்கிற கேள்வியையும் நாவல் எழுப்பிப் போகிறது.

கைக்கு சிக்கிய தமிழ் இளைஞர்களை பிடித்துவந்து சித்ரவதை செய்கிற ராணுவத்தினர் கடைசியில் புலிச்சீருடையை அணிவித்து சுட்டுக்கொல்வது ( வீரப்பனைப் பிடிப்பதாக காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இப்படி பழங்குடி இளைஞர்களை தேவாரம் சுட்டுகொன்றதை சோளகர் தொட்டியில் காணலாம்),   இசை நிலா ஒளிநிலா என்று பெயர் வைத்திருப்பதைக்கூட உன்னிப்பாக கவனித்து ஒரு ராணுவத்தான் கேள்வியெழுப்பும் போது பெயரை மாற்றி விடுகிறோம் என்று பதைப்போடு தாய் சொல்வது, வீட்டில் தனக்கு வைத்த பெயரே தூயவன் தான், ஆனால் ஆமிக்காரன் நம்பமறுக்கிறான் என்று ஒருவன் பகடியாக சொல்வது, யாருடைய காயத்திலிருந்தோ பெயர்ந்து விழுந்திருந்த ரத்தம் தோய்ந்த பஞ்சை எடுத்து வெடியோசை கேட்காமலிருக்க குழந்தையின் காதில் அடைப்பது என்று சிறுசிறு காட்சிகள் வழியே நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணரமுடிகிறது.

நடராசனின் பிணத்தை மூன்றாம் மனிதனாக ஓடிப்போய் பார்க்கிறவன், இந்திய அமைதிப் படையினரால் (?) கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார் தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில் ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும் தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது, போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும் நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம் எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?’ என்கிற கேள்விக்கும், போரின் முடிவில் ராணுவத்திடம் பிடிபட்டவர்களில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்களும் இடம் பெற்றது எங்ஙனம் என்பதற்கும் இவனது குடும்பத்தின் வழியாக விடை கிடைக்கிறது.)

அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் யாவும் நம்மை அவமானத்தில் ஆழ்த்துகின்றன. கன்டோன்மெண்ட் என்கிற பெயரிலான ராணுவ முகாமிடங்களில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக நியமித்து வல்லுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் எச்சில்பால் குடித்து வளர்ந்த இந்திய ராணுவம் இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களை பிதுரார்ஜிதமாக பெற்றிருக்கிறது. நானும் இந்தியன் தான் என்று கதறுகிற எத்தனையோ சிங்கமலைகளை அது கொன்றிருக்கிறது. ‘பெத்தத் தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்… இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா’ என்று சபித்தவாறே இடதுமார்பில் கத்தியை பாய்த்துக் கொண்டு செத்துப்போன எத்தனையோ தாய்மார்களின் பிணங்களை பதக்கங்களாக குத்திக் கொண்டிருக்கிற பலர் அதில் இருக்கிறார்கள்.

ஆயுதக்குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக வெகுமக்கள் மீது ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட கண்காணிப்புகளும் சித்ரவதைகளும் மனிதகுலம் இதுவரை காணாத கொடூரங்களின் பூமியாக தமிழர் நிலத்தை மாற்றிவிட்டது. போரின் முடிவில் பிடிபட்ட போராளிகளை இலங்கை அரசும் ராணுவமும் நடத்திய விதம் சர்வதேச கண்டனங்களைப் பெறுமளவுக்கு கீழ்த்தரமானவை, மனிதவிரோதமானவை. போருக்குப் பிந்தைய புனர்வாழ்வில் பங்கெடுப்பதாக சொல்லிக் கொண்டு வந்துள்ள தன்னார்வ அமைப்புகள், தனவந்தர்கள், கனவான்கள் ஆகியோரது செயல்பாடுகள் மேனாமினுக்கித்தனமானவை என்பதையும் யாருக்காக போராடினார்களோ அவர்கள் முன்னாள் போராளிகளை நடத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் நாவலுக்குள் பொருந்தி நிற்கும் வண்ணம் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் போராளி என்பதாலேயே வெள்ளையனை காவலாளி வேலையில் வைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவர் மறுத்துவிடுவதும், கடைசியில் அவன் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை தோண்டியெடுத்து செயலிழக்கச் செய்யும் வேலையில் ஒரு என்.ஜி.ஓவிடம் சேர்வதும், முன்னாள் போராளிகளின் கைவிடப்பட்ட நிலையைக் காட்டுவதற்கு போதுமானதாயிருக்கிறது.

தான் பிறந்த சிற்றூரைத் தவிர வேறு திசைகளை அறியாத மக்களின் வாழ்வையும் சாவையும் எங்கோ இருக்கிற அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவும் இந்தியாவும் தீர்மானிக்கும் படியாய் விட்டுவிட்டு இயக்கத்தலைமை முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டது. கடைசி நேரத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தைகளைக் கூட பிடித்துப் போய் ஆயுதம் தரிக்க வைத்தது, ராணுவத்திடம் பிடிபடும் தருவாயில்கூட வெகுமக்களை விடுவிக்காமல் ஆயுதமுனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆகியவற்றின் மூலம் இவ்வளவு கூடிய உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் இயக்கமும்கூட காரணமாக இருந்துவிட்டது என்று இதற்கு முன்பாக சிலர் முன்வைத்த விமர்சனங்களை இந்த நாவலும் வழிமொழிகிறது. ‘காய்ந்த கட்டாந்தரைக்கு தண்ணீர் பாய்ச்சியது’ போலாகிவிட்டதோ என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டே, இத்தனைக்குப் பிறகும் இயக்கத்தை ஆதரிப்பதற்குரிய நியாயங்கள் தனக்கிருப்பதாக நாவலுக்குள்ளிருந்து சயந்தன் வாதிடுகிறார். இயக்கத்தின் பிழைகளை போராளிகளின் தியாகங்களையும் வெகுமக்களின் துயரங்களையும் காட்டி நேர்செய்வதற்கான முயற்சியோ என்று எண்ணும் வகையிலும் சில வாதங்களை இந்நாவல் முன்வைக்கிறது. நாவலில் ஓரிடத்தில் வருவது போல வரலாறென்பது யார் சொல்கிறாரோ அவரது நோக்கங்களையும் உலகக் கண்ணோட்டத்தையும் சார்ந்ததுதானே. வரலாற மட்டுமல்ல எதுவொன்றும் அவரவர் மனச்சாய்வுகளக்கு இயைந்தே எழுதவும் வாசிக்கவும் படுகிறது.

***

ஓரிடத்திலும் நிலைகொண்டு தலைசாய்க்கவொட்டாமல் துரத்தும் சாவுக்கு அஞ்சி ஓடிச் சலித்த மக்கள் இயலாமையின் முற்றிய கட்டத்தில் செத்தொழிந்தால்கூட பரவாயில்லை என்கிற மனநிலையை எய்திய போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரோடிக்கிறோம் என்பதைத் தவிர வாழ்வதற்கு வேறு ஆதாரங்களே இன்றி கைவிடப்பட்ட அம்மக்கள் சோதிமலர் சொல்வது போல ‘எங்கட வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்க வேணும்’ என்று நிற்கிறார்கள். வளர்பிறையின் ஜொலிக்கும் நட்சத்திரத்தின் குறியீடாக ஆதிரை என்று பெயர் சூட்டப்பட்டாலும் அந்தப் பாத்திரம் திடுமென வந்து தலைப்பாக மாறிவிட்டதேயொழிய அதற்குரிய ஆளுமையோடு வளராமல் முடிந்துவிட்டது. அல்லது தலைப்பிடப்படுமளவுக்கு ஆதிரை பற்றி எழுதப்படவில்லை. ஒருவேளை நாவலில் இடம் பெற்றுள்ள எல்லா பெண்களின் கூட்டுப்பெயராக அது உருவகித்துக் கொள்ளப்பட வேண்டுமாயிருப்பின் அதற்குரிய அழுத்தத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

***

ஈழத்திற்குள்ளேயே இவ்வளவு காலமும் இருந்து எல்லாவிதத் துயரங்களையும் தாங்கிக் கழித்த மக்களுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான மனநிலை வாய்க்குமா? தாங்கள் கடந்துவந்த துயரங்களை மீண்டும் நினைவூட்டுதானது தங்கள் மீது அவை மறுபடியும் நிகழ்த்தப்படுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் புலம் பெயர்ந்து போய் போரின் கொடுமையிலிருந்து ஓரளவேனும் தப்பித்துவிட்டவர்கள், ‘வேறு கண்ணீர் தேடும்’ ஊடகக்காரர்கள், போரின் துயரங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு கதை எழுதக் கிளம்பியவர்கள் அல்லது கருத்தரங்குகளில் கொட்டி முழக்கி கண்ணீரையும் கைத்தட்டலையும் பெறக்கூடியவர்கள், தெருச்சண்டையில் பங்கெடுத்த அனுபவம் கூட இல்லாவிடினும் தேசிய விடுதலைப் போரை நடத்தப்போவதாக சவடாலடிக்கிற தமிழகத்தவர்கள் போன்றோருக்கு இந்த நாவல் மிகுந்த உவப்பைத் தரலாம். ஒருவேளை இவர்களை கருத்தில் கொண்டே இந்த நாவல் விரித்து விரித்து இவ்வளவு பெரிதாக எழுதப்பட்டிருக்கிறதா?

திகுதிகுவெனக் கொதிக்கும் வெக்கையொடு சொல்வதற்குண்டான இக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்தி அலுப்பூட்டக்கூடியவையாக சயந்தனின் வர்ணனைகளும் விவரிப்புகளும் உள்ளன. கதையின் மையப்பொருளுக்கு தேவைப்படுகின்ற விவரங்களுக்குப் பதிலாக தேவையற்ற விவரங்கள் பத்திபத்தியாக தகவல் குவிப்பாக நிரம்பிக் கிடக்கின்றன. படிக்காமலே புரட்டி கடந்துவிடலாமா என்றும்கூட சில இடங்களில் தோன்றியது. துயரம் மிகுந்த காட்சிகளை சுரீரென விரித்துச் செல்ல ‘கிராமத்தை இழுத்து கடலின் அடியில் அமிழ்த்தியதைப் போல’, ‘றப்பர் போல நிலம் அதிர்ந்து தணிந்தது’, ‘காலொடிந்த இரவு..’ என்றெல்லாம் எழுதமுடிந்த சயந்தன், ஒடுங்கும் சுபாவமுள்ள, பெண் சகவாசத்தை அறிந்தேயிராதவனாக காட்டும் லெட்சுமணன் ‘காமத்தின் உச்சத்தை தொட்டதைப் போல’ என்று கூறுவதாக எழுதுகிறார். இப்படியான பொருத்தமற்ற பல ஒப்பீடுகள் நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஊளைச்சதையை கழித்து உடம்பைக் கண்டுபிடிப்பது போன்று தான் இந்த தடித்தப் புத்தகத்திலிருந்து உள்ளிழைந்து நிற்கும் கதையை நாம் வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பாதிப்பு, நாவலென்றால் தடிமனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ‘தமிழினி மேனியாவால்’ ஏற்பட்டிருக்குமாயின் அதிலிருந்து சயந்தன் விடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். ஆறாவடுவை எழுதிய சயந்தனுக்கு அது சாத்தியம்தான்.

By

Read More

பாதசாரி

ஆதிரை நாவல் முதல் வாசிப்பு முடித்தேன். நுட்பங்களை தவற விடாமல் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.. அதற்குள் அவசரப் பட்டு எழுதத்தூண்டுது அந்தரித்த மனது..!

வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான இடைவெளித்தூரம் என்பது இந் நாவலில் ஒரு பெருமூச்சின் நீளமே… படைப்பு நோக்கத்தின் அடிப்படைத் தார்மீகம், படைத்த விதத்தில் நம்பகத்தன்மை, வெளிப்பாட்டில் அழகு என மூன்றிலும் பூரணத்தன்மையை நிறைத்துக் கொண்ட முழு நாவல் ஆதிரை… எங்கே தொடக்கம்…எங்கே முடிவு… என்பதான ஈழப்போராட்ட வரலாற்றை மானுட வாழ்வுப் பிண்ணனியில் மட்டுமே கூடுதல் சித்திரமாக சொல்ல முற்பட்ட புதினம் இது..

போரும் அமைதியும் அல்ல – போரும் விளைவும் .. என்பதன் நடைச்சித்திரம்.. உயிரைப் பிடித்துக் கொண்டு ஒடிக் களைத்து, வாயில் நுரை தள்ளி நிற்கும் பிழைப்பினூடேயும் மனித உறவுகளிடையே மலரும் காதல், கருணையான மேலான தருணங்கள்.., நம் மனதை தீமையின் விடக்கனிகளை அண்ணாந்து பார்க்க விடாமல் செய்கின்றன..

இப்படி தடுத்தாட்கொள்ளும் பெண் சக்திப் பாத்திரங்கள் ஆச்சிமுத்துக் கிழவி, மலர், நாமகள், இறுதியில் ஆதிரை எனப் பலரும்… அவரவர் மனமுதிர் சோலையில்..

“ஒரு பொம்பிளை வயித்திலே பிறந்திட்டு இதையெல்லாம்செய்யிறே. நல்ல சாவே வராது ..” படுகொலைப் பாதகருக்கு சாபமிடும் ஆச்சிமுத்துக் கிழவி. பொம்பிளை வயிறு கடவுளின் சொந்த வயிறல்லவா.. பசி மரணத்திற்கு அஞ்சாது… என்றொரு உக்கிர வரி நாவலில்.. உலகின் மன சாட்சி உலுக்கப்படலையா… சர்வதேச நாடுகளின் கூட்டு பயங்கர வாத இறுதிக்கட்ட தாக்குதலில்- நின்றாலும் நடந்தாலும் நிலை ஒன்று தான் – என்ற கையறு நிலையில் இயக்கம் உறைந்தது…. அந்தரத்தில் அலைந்த இலவம் பஞ்சுகள்.. இறுதியில் குந்தக் கிட்டியது வெறுமைச்சுடு பாறையென முடிந்தது அந்தோ மக்கள் ஈழம்… புலத்தில் ஏது போரும் முடியும்.. அல்லது போர் நிறுத்தம் காணும்.. மனித மனங்களிடையேயான சாதிமத இன பேதப் போர் – நாவலில் ஒரே இனத்தினுள்ளும் சாதி வன்மம் சுட்டப்படுகிறது பல இடங்களில் – நிறுத்தப் படுமா…புறப்போருக்கு உயிர்த்தியாகம்.. ஆறாவடு தான் அந் நடுகல்லும்.. புற உறுப்புகள் கொண்டு என்னத்தை வாழ்ந்தோம்..

ஒரு குறள்: புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை..அகத்து உறுப்பு அன்பிலவர்க்கு…

அமைதிப்படை அட்டூழியம், சிங்கள ராணுவ கொடுங்கோன்மை இவற்றோடு புலி இயக்கதவறுகளையும் – புலிக்கென்றால் தவறு மட்டும் தானா ?! – சயந்தன் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.. முஸ்லீம் மக்கள் படுகொலை, கட்டாய ஆள் சேர்ப்பு, துரோகிகள் என சகோதர கொலைகள்.. என பலதையும் சுட்டித்தான் செல்கிறார் ஒரு எழுத்துக் கலைஞனாக… அதனால் தான் இது எதையும் ஒளித்துக் கொள்ளாத, உள் நோக்கம் அற்ற படைப்பாகிறது…

என்ன ஆயினும் கடைசி வரை சந்திரா கதா பாத்திரம் புலிகளை விமர்சிப்பதை நிறுத்தவில்லை… ஆனாலும் பெண் அல்லவா.. தன்னுள் ஒரு சேய் இல்லை யெனினும் பார்க்கும் இடமெல்லாம் தன் சேய்களென வாழும் ஜீவன் அவள்… கருணை தான் வீரம் அவளுக்கு.. எனக்கு வீரம் மட்டுமே வீரம்… என்னிடம் இல்லாததின் மீது வியப்பு நாட்டம்.. எனவே இயக்கத்தை என்றும் குறைத்துப் பேசமாட்டேன்… மேலும் இறுதிவரை மா பெரும் தலைமையும் உப தலைமைகளும் சொந்த வாழ்வு தேடி ஓடி விடவில்லை, அறத்தின் பாற்பட்டு மறத்தியாகம் தான்…

By

Read More

தமிழ்நதி

எந்தவொரு படைப்பையும் முன்முடிவுகளோடு வாசிக்கக்கூடாதென அண்மைக்காலமாக எண்ணுகிறேன். ஆனால், முகநூலும் சில இணையப் பதிவுகளும் தந்த சித்திரங்களை எளிதில் துடைத்தழித்துவிட்டு வாசிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். அதிலும் குறிப்பாக அ.இரவியால் எழுதப்பட்ட விமர்சனங்கள்… பிடித்த குழந்தையை கொஞ்சிக் கொஞ்சி கன்னம் வலிக்கப் பண்ணும் நேசம் அது.

முப்பதாண்டு கால வரலாற்றின் (அது எப்போதும் பகுதி வரலாறே) நெடுக்குவெட்டுத் தோற்றத்தை புனைவின் ஓரம்சமாகிய அழகியல் கெடாது கொணர்வதென்பது இலகுவான வேலையன்று. இலக்கியகர்த்தாக்கள் குழுக்களாகப் பிரிந்து இயங்கும் துரதிர்ஷ்டவசமானதொரு சூழலில் காலப்பிழைகள், தரவுத் தவறுகள் நேர்ந்துவிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இல்லையெனில், கிழித்துத் தோரணங் கட்டிவிடுவார்கள். சாதாரணர்களுக்கு கைகூடாத வன்மம் உக்கிரங் கொண்டியங்கும் காலமிது. இத்தகைய பிழைகளற்று, தன் பாத்திரங்களுக்கூடாக காலத்தை நகர்த்திச் செல்வதில் சயந்தன் வெற்றிபெற்றிருக்கிறார். ஒரு படைப்புக்கு இத்தனை ‘நீதி’செய்வதற்கு கடும் உழைப்பு வேண்டும். இந்நாவலை எழுதுவதற்கு சயந்தன் எடுத்துக்கொண்ட காலம் வீணாகிவிடவில்லை. ‘ஆதிரை ஒரு வரலாற்று ஆவணம்’ என்று சொல்வது அதீதந்தான். ஈழ வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு துளி இந்நாவல் என்றால் அது மிகையில்லை. சயந்தன் ஒரு அற்புதமான கதைசொல்லி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

சற்றே அரதப் பழசான வாசகம் என்றாலும், ‘இந்நாவல் மண்வாசனையை மீட்டு வந்தது’என்பதைக் கூறியேயாக வேண்டும். பிரதேச மொழி வழக்குகளிலும் பிசகு நேர்ந்துவிடாதவாறு கவனஞ் செலுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சொல்லப்படாத உவமானங்களும் நிலத்துக்கு நெருக்கமான அவற்றின் தன்மையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
உதாரணத்துக்கு ஒன்று: ‘குளுவன் மாட்டைப் போல சொற்கள் அடம்பிடித்தன’

இதுவொரு துன்பியல் நாடகம். இந்நாவலில் வரும் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். ‘ஆதிரை’யில் துயரம் குறைவாக இருக்கிறதென்றும் மேலும் வேண்டுமென பதிப்பாசிரியர் கேட்டதாகவும், அதனால் மேலும் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு சயந்தன் எழுதியதாகவும் தமிழ்க்கவி அவர்கள் இந்நாவல் விமர்சனக் கூட்டத்தில் கூறியதாக சித்தாந்தன் எழுதியிருந்ததை வாசித்தேன். அதீத துயரம் சிலசமயங்களில் படைப்பிலிருந்து வாசகரை ‘ஓடிப் போ’என்கிறது. நான் நாவலை எடுப்பதும் வைப்பதுமாக இருந்து ஒருவழியாக வாசித்து முடித்தேன். அப்படிச் செய்வதானது ஒருவகையான தப்பித்தல்தான். இன்னுஞ் சொல்லப்போனால், 2009 ஏப்ரல், மே பற்றி எழுதப்பட்ட பக்கங்களை புரட்டிப் புரட்டிக்கொண்டு அடுத்த விசயத்திற்குத் தாவிவிடலாமா என்றுகூட எண்ணினேன். ஆனால், சமகாலத்தில் ஒருவரால் எழுதப்பட்ட படைப்பின் ஒரு வரியையும் தவறவிடாமல் படித்துவிடவேண்டும் என்ற ஓர்மத்தினால் தொடர்ந்து வாசித்தேன். அக்காலகட்டப் பகுதி குறித்து எழுதப்பட்டிருந்த அநேகமானவை ஏற்கெனவே அறியப்பட்டவையே. பிரான்ஸிஸ் ஹாரிசனும், குணா கவியழகனும் தமிழ்க்கவியும் கார்டன் வெய்ஸ்-ம் பல்லாயிரம் ஆதரவு-எதிர் இணையப் பக்கங்களும் கூறியவையே. எனினும், இலக்கியமெனப்படுவது மீள வலி கிளர்த்தும் வலிமை பொருந்தியது.

எதிரெதிரில் நின்று தர்க்கம் புரியும் பாத்திரங்களாகிய சந்திராவும் அத்தாருமே இந்நாவலின் உந்துவிசைகளாக இயங்கியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள்மீது விமர்சனங்களைக் கொண்ட சந்திராவும், அவர்கள்பால் மென்சாய்வு கொண்ட அத்தாரும் நாவலை வளர்த்திச் செல்கிறார்கள். அவர்கள் இருவரும் இறந்தபிறகு நந்தன் சேரும், பெயர் குறிப்பிடப்படாத அந்த மனிதனும் எதிரெதிர் நின்று வார்த்தையாடுகிறார்கள். ஒரு தட்டு தாழ்கிறபோது மற்றத்தட்டில் இட்டு நிரப்புகிற வேலையை சயந்தன் பிரக்ஞையோடே செய்திருக்கிறார் என்று வாசிக்கும்போது தோன்றியது.

இந்த ‘நடுநிலை’என்ற சொல் ஒரு வில்லங்கம் பிடித்த சனியன். நீதிக்கும் அநீதிக்குமான இழுபறியில் (அப்படியொன்றும் பெரிய கோடு இடைநடுவில் இல்லையென்றபோதிலும்) நடுவில் நின்று அல்லாடும் உத்தரிப்பினால் மனம் சிதைந்து அழிபவர்கள் உண்டு. மற்றொரு ‘நடுநிலை’யினரோ பிழைப்புவாதிகள்.
என்னதான் விடாப்பிடியாக அழாமலிருந்தாலும் ஒரேயொரு இடத்தில், கண்கள் கலங்கி வழிய புத்தகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு (மன்னிக்கவேண்டும் சயந்தன்) அமர்ந்துவிட்டேன். உடலில் குருதிபோல நாவலின் உயிரியக்கத்திற்குக் காரணமான அத்தார் இறந்து கிடக்கிறபோது ஒருவன் கூறுவான்:

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்குப் பிள்ளையள் இல்லை.”

இதுதான் அந்த ‘மனிதன்’இன் அடையாளம்! பாழாய்ப் போகாதா இந்த சமூகம்!

எங்கள் மண்ணைப் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகள் பல்லாயிரம் இருக்கக்கூடும். அவற்றுக்காகக் காத்திருப்போம். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமற் போகிறபோது…. வேறென்ன செய்வது? வாசிப்பதை நிறுத்திவிட்டாற் போகிறது.

By

Read More

சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும்.

கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார்.

sintasu

சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் ஒழுங்கா குண்டியை குத்தியில வைச்சு இருக்கலாம்தானே” என்று எனக்குள் ஓடும். துாரத்திலேயே நின்று கொள்வேன். சுட்ட மீனின் வேகாத வெள்ளைச் சதையும் கருகிச் சுருங்கிய தோலும் செதில்களும் அரியண்டமாயிருந்தன. அப்பொழுது அவர் என்னை நோக்கி பிளாவை நீட்டுவார்.

“வா மருமோன், எப்பன் குடி” நான் முகத்தைச் சுழித்தபடி நிற்பேன்.

“கற்பகதருவடா.. உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.”

“புளிச்ச கள்..” என்றுவிட்டு நான் நகர்ந்த பிறகு பின்னால் ஒரு குழந்தைப் பிள்ளைச் சிரிப்பொன்று படரும். “மாமிட்டைக் கேள், சுறாவும் கெளுத்து முட்டையும் எடுத்து வைச்சிருக்கிறன். கொண்டு போய் கொப்பம்மாட்டைக் குடு”

அப்பம்மாவின் சமையலில், மஞ்சள் சேர்த்த சுறா வறுவல், பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போலிருக்கும். வெறும் வெள்ளைச் சோற்றில் பால் சொதியும் சுறா வறையும் பிசைந்து வாரத்தில் ஏழு நாளும் சாப்பிட நான் தயாராயிருந்ததை சின்ராசு மாமா அறிந்திருந்தார். குழம்பில் கலந்திருக்கும் கொண்டைக் கடலை அளவிலிருந்த கெளுத்து மீன் முட்டைகளை தங்கச்சி அடிபட்டுச் சாப்பிடுவாள். மாமா அவளுக்கு இரண்டு பெயர்களை வைத்திருந்தார்.

“முட்டைச்சி, கருவாட்டுப் பூனை”

சின்ராசு மாமாவிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பவை போலவே கட்டுமரம், எஞ்சின் படகு, சமயங்களில் எதுவுமில்லாத வெறும் துாண்டில் என நிலையற்ற தொழிலும் இருந்தது. நாட்டு நிலமைகள் குலைய முன்னிருந்தே அவரிடம் இரட்டை எஞ்சின்கள் பொருத்திய சற்றே பெரிய படகொன்றிருந்தது. இரண்டொரு பேரை அழைத்துக் கொண்டு அவரே வலை படுக்கப் போவார். பதின்நான்கு வயதில் அப்படிப் போகத் தொடங்கியவர் கல்யாணத்திற்குச் சற்றுக் காலம் முன்பாக கடன் பட்டு அந்த எஞ்சின் படகினை வாங்கியிருந்தார். ஆட்களை வைத்துத் தொழில் செய்யத் தொடங்கிய பிறகும் சின்ராசு மாமா கடலுக்குப் போகாத நாள் கிடையாது. பொழுது நன்றாய்க் கழிந்து இருள் பரவிய பிறகு ஆளும் பேருமாய் அவரது படகினை நீருக்குள் தள்ளி இறக்குவார்கள். பின்பகுதியில் எஞ்சினுக்கு அருகில் சின்ராசு மாமா உட்கார்ந்து கொள்வார். அவரே அதனை இயக்குவார். நட்சத்திரங்கள் அவருக்கு வழிகாட்டின.

கரையின் வெளிச்சங்கள் மறைந்த துாரத்தில் அந்தத்தில் ஈயக்குண்டுகளையும் மேலே உருண்டை மிதவைகளையும் கொண்ட வலையை அவர்கள் கடலில் இறக்கினார்கள். சீசனுக்கு ஏற்ற மாதிரி மாமா வலைகளைத் தீர்மானிப்பார். முரல் காலங்களில் பறவை வலையும், சூடை மீன் நாட்களில் சூடை வலையும் தவிர்த்து மற்றைய நாட்களில் அறக்கொட்டி வலையை அவர் எடுத்து வருவார். அந்த வலையில் சற்றே உருப்படியான மீன்கள் அள்ளுப்பட்டன.

வலையைப் படுத்த பிறகு நீரின் மேலே மஞ்சள் வெள்ளை நிறங்களாலான உருண்டை ரெஜிபோம் காவிகள் அரை வட்ட வடிவில் அல்லது நேர்கோட்டுக் கிடையில் அலையினில் துள்ளியபடி மிதந்து கொண்டிருக்கும். வலையின் இரண்டு முனைகளையும் படகோடு இணைத்து எஞ்சினை அணைத்து சற்றுத் தொலைவினில் நங்கூரம் பாய்ச்சியிருப்பார்கள். சின்ராசு மாமா சட்டியில் குழைத்த சோற்றினில் ஜாம் போத்தலில் எடுத்து வருகிற புளிச் சொதியை ஊற்றிப் பிசைந்து மற்றவர்களுக்கு கவளமாகக் கொடுப்பார். அவர்கள் இளைஞர்கள். நீண்ட காலமாக மாமாவோடு தொழிலுக்கு வருகிறவர்கள்.

“கடைசி வரைக்கும் என்னோடேயே இருந்து தொழில் செய்யலாம் என்று நினைக்கக் கூடாது. ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு சொந்தமாத் தொடங்கிவிட வேணும். அப்பவும் கடலுக்கு வாறதை நிப்பாட்டக் கூடாது. இது உங்கடை கடல், உங்கடை சொந்தத் தொழில். நீங்கள்தான் வரவேணும். வீட்டில இருந்து கடல்தொழில் செய்ய முடியாது”

“கடல் ஒரு திரவியம், எப்பவும் சுரந்து கொண்டே இருக்கிற மடி. இந்த மடியை விட்டுட்டு சவுதிக்கும் ஓமானுக்கும் போய் என்ன செய்யப்போறாங்கள்” என்று மாமா சமயங்களில் அலுத்துக் கொள்வார்.

இரவுத் தொழிலில் அவர் கண்ணயர்வதில்லை. படகின் விளிம்பில் முதுகு சாய்த்து நட்சத்திரங்களை அளந்து கொண்டிருப்பார். அவை ஒவ்வொன்றினதும் பெயர்களை அவர் நினைவு வைத்திருந்தார். அவற்றைச் சத்தமாகச் சொல்லிப் பார்ப்பார். விரிந்த கடலும் இருண்ட வானமும் முகத்தில் வருடுகிற குளிர் காற்றும் இன்னதென முடியாத உணர்வலைகளை அவருக்குள் உண்டு பண்ணின. அக்கணங்களில் அவரது உடல் அசைந்து நடுங்குவதைப் போலிருக்கும். “முப்பது வருடங்களின் அரைவாசி நாட்கள் இந்தக் கடலின் அலைகளின் நடுவே கழிந்தன” எனத் தோன்றுகையில் திடீரென்று விரல்களை விரித்து தண்ணீருக்குள் அங்குமிங்கும் அலம்புவார். சட்டென்று நீரை அள்ளி தீர்த்தம் போல பருகி நெற்றியில் தடவி தலையினில் தெளித்துக் கொள்வார்.

பின்நிலவு வெளிக்கிளம்ப முன்னர் வலையின் இரு முனைகளையும் பிடித்து வலித்து படகில் ஏற்றத் தொடங்குவார்கள். பாடு அதிகமென்றால், அலைகளில் படகு தள்ளாடியபடியிருக்க இழுத்து ஏற்றுவதில் சிரமமிருக்கும். அச்சமயங்களில் மாமா சாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு பென்ரரோடு கடலுக்குள் இறங்கி விடுவார். தண்ணீருக்குள் நீந்தியபடி அவர் தள்ளிக் கொடுக்க இளைஞர்கள் வலையை ஏற்றுவார்கள்.

வலையின் கண்ணிகளுக்குள் உடலை நுழைத்து இழைகள் இறுக்க செத்த மீன்களைத் தவிர்த்து நட்சத்திரங்களும் அகப்பட்டன எனத் தோன்றும் குட்டிக் குட்டியான வெள்ளி நிற மீன்களும் பெரிய வாட்களையொத்த மீன்களும் சட சட என உடலை அடித்துத் துடிக்கிற சத்தம் ஒரு கலவர சூழலை படகுக்கு கொடுத்திருக்கும். சின்ராசு மாமா இரண்டு புறங் கைகளையும் தலையில் வைத்து விரல்களை மடக்கி நாவூறு கழித்துக் கொள்வார். அவரிடம் வினோதமான ஒரு பழக்கம் இருந்தது. கரைக்குப் புறப்பட முன்னர், உயிரோடு துடிக்கிற ஒரு மீனை மீண்டும் கடலுக்குள் விடுவார். அது நீரைச் சுழித்து ஓடுகிறதா என் இருட்டுக்குள் தேடுவதைப் போல சற்று நேரம் பார்த்தபடியிருப்பார். அவரது முதலாளியிடமிருந்து இந்தப் பழக்கத்தை தானும் கொண்டதாக ஒரு நாள் சொல்லியிருந்தார். அப்போது இளைஞர்களில் ஒருவர் க்ளுக் என்று சிரித்தான்.

“நாளைக்கே இந்த மீன் திரும்பவும் பிடிபட்டு கறிக்கு துண்டானால் என்ன செய்யிறது”

சின்ராசு மாமா அவனை ஊடுருவிப் பார்த்தார். “பிடிபடட்டும். துண்டாகட்டும். ஆனால் ஒரு நாளென்றாலும் கூடுதலாக அதுக்கு உயிர் வாழக் கிடைச்சது பார்த்தியா. அதுதான் விசயம். இது மீனுக்கு மட்டுமில்லை. எனக்கு உனக்கு என்று எல்லாருக்கும் தான் பொருந்தும். மனிசர்களுக்கும் அப்பிடித்தான். இப்ப சாகிறாயா இல்லாட்டி கொஞ்சம் நேரம் கழிச்சு சாகிறாயா எண்டு எமன் கேட்டால் நீ என்ன சொல்லுவாய்..” என்றவர் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். “கிடைக்கிற ஒரு நிமிசமென்றாலும் உயிரோடு வாழத் துடிக்கிறதுக்குத்தான் கடலுக்கையும் வெயிலுக்கையும் புழுதிக்கையும் இந்த ஓட்டம்.”

நாட்டு நிலமைகள் சீரழியத் தொடங்கின. இந்திய இராணுவ காலத்தில் கடலில் இறங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் வந்தன. இரவுத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. சின்ராசு மாமா முதன்முறையாக சிகரெட்டில் இருந்து பீடிக்கு மாறினார். எஞ்சின்கள் கழற்றப்பட்ட அவரது படகு கடற்கரைச் சுடுமணலில் நீண்டகாலத்திற்குக் குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அவரோடு தொழிலுக்கு வந்த இளைஞர்களில் ஒருவன் கட்டடத் தொழில் ஒப்பந்தத்தில் அபுதாபிக்குப் போனான். இடுப்பளவு தண்ணீரில் தனித்து நின்று துாண்டில் போட்டுச் சேர்த்த மீன்களோடு கரைக்குக் நடக்கும் போது ஒரு காலத்தில் கரையேறிய படகிலிருந்து துாக்க முடியாமல் சுமந்து வந்து ஏலம் கூறுமிடத்தில் கொட்டிய மீன் திரள் குவியல் நினைவுக்கு வரும். தன் கால்கள் சொர சொர மணலில் புதைவதாய் உணர்ந்து திடுக்கிட்டுச் சுதாகரிப்பார்.

செலவுகளைச் சமாளிக்க படகின் எஞ்சின்களை அடிமாட்டு விலைக்கு சின்ராசு மாமா விற்றார். மாதகலில் இருந்து இந்தியாவிற்கு கடத்தல் செய்கிற ஒரு கோஷ்டி அதனை வாங்கியது. “நாங்கள் ஒளிச்சு மறைக்கேல்லை. கடத்தல் செய்யத்தான் கேட்கிறம்” என்று அவர்கள் சொன்ன போது மாமா அவர்களிடம் “அதுக்குப் பேர் கடத்தல் இல்லை” என்றார்.

“இது யாவாரம். தொன்று தொட்டு நடக்கிற யாவாரம். இடையில அரசாங்கங்கள், சுங்கம் எண்டும் வரியெண்டும் கொண்டந்திட்டு காலம் காலமா நடக்கிற யாவாரத்தை கடத்தல் எண்டுறாங்கள். உங்களுக்குத் தெரியுமோ அந்த நேரம் பர்மா வரைக்கும் இந்த யாவாரம் நடந்தது”

அவர் வலைகளையும் விற்கும் காலம் வந்தது. பகலில் கண்ணுக்குத் தெரிகிற துாரத்தில் களங்கண்ணி செய்து பார்க்கலாம் என்றான பிறகு, உசரத்தில் படுக்கிற வலைகள் தோதுப்படவில்லை. அவற்றை விற்று களங்கண்ணி வலையும் பதினைந்து முழக் கம்புகளும் வாங்கினார். காய்ந்த பாசிகள் முழுதும் வழியாத பழைய வலைகள். கண்டல் பட்டை சாயம் போட்டு அவற்றை அவித்தெடுத்தார்.

நீண்ட காலத்தின் பின் படகு மீண்டும் நீரில் இறங்கியது. மகனைப் பள்ளிக்கூடத்தால் அன்றைக்கு நிறுத்தி அழைத்துச் சென்றிருந்தார். தடியூண்டித் தாங்கியபடி சென்று கரை நிலம் தெரிகிற துாரத்தில் வைத்து கடலில் கம்புகளை வட்டமாகப் புதைத்தார். மகன் ஒரு தவளையைப் போல கைகளையும் கால்களையும் விரித்து ஒவ்வொரு கம்புகளுக்கு இடையிலும் பாய்ந்து அவற்றில் வலைகளைப் படரவிட்டான். மாமா படகில் ஏறி களங்கண்ணிக் கூட்டை திருப்தியோடு பார்த்தார். அமாவாசைக் காலமான இந்த இரண்டு வாரமும் மீன்பாடு பரவாயில்லாமல் இருக்குமெனத் தோன்றியது.

அன்றைக்கு இரவு மாமியோடு பெரும் புடுங்குப்பாடு அவருக்கு வந்தது. மகனை பள்ளிக் கூடத்தால் நிறுத்தி கூட்டிச் சென்றதற்கு மாமி சத்தம் போட்டார். சின்ராசு மாமாவிற்கு சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிட்டு “அவன்ரை வாழ்க்கையையும் தண்ணிக்குள்ளை தாழ்க்காட்டப் போறியளே..” என்றார்.

மாமா இன்னமும் சாப்பிடத் தொடங்கவில்லை. பிசைந்து கொண்டிருந்தார். மனைவியிடமிருந்து அவ் வார்த்தைகளை அவர் எதிர்பார்க்கவில்லை. கையில் வைத்திருந்த பீங்கானைச் சுழட்டி எறிந்தார். அது குசினிச் சுவரில் பட்டு துண்டுகளாய்ச் சிதறியது. நீளத்திற்கும் சோறும் கறியும் கொட்டுப் பட்டிருந்தன. காலடியில் கிடந்த அரிக்கன் லாம்பை காலால் உதைந்து விட்டார். அது சரிந்து விழுந்து உருள, உள்ளே நெருப்பு பக் பக் என்று சத்தமிட்டது. மாமி ஓடிவந்து அதனை நிமிர்த்தியபோது சடாரென எழுந்த சின்ராசு மாமா அவவின் தலைமயிரை கொத்தாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மாமியின் புறங்கழுத்தில் ஒன்றிரண்டு அடிகளும் விழுந்தன. மாமி பெருங்குரலெடுத்து “கொல்லுங்கோ, என்னைக் கொல்லுங்கோ” என்று குழறினா. மகன் ஓடிவந்து அவரைப் பிடித்து விலக்கினான். மாமி தொடர்ந்தும் அழுதபடியிருந்தார். மாமா கோபம் தாங்காது மூசிக்கொண்டிருந்தார்.

“நீ இவ்வளவு நாளும் திண்ட சோறு, போட்டிருக்கிற நகை, உடுத்த புடைவை எல்லாம் இந்தக் கடலின்ரை உப்புக்கையும் குளிருக்குள்ளையும் நான் கிடந்து உழல்ந்தபடியால தான் கிடைச்சதுதான். இப்ப கடல் உனக்கு கொலைகாரியாப் போச்சுது. கடலம்மா தாய்க்குச் சமானமடி. நம்பி வாற ஆரையும் கைவிடாது..”
சின்ராசு மாமா ஒருபோதும் வெறுமனே கடல் என்றது கிடையாது. கடலம்மா, அம்மா அல்லது சீதேவி என்பார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. சற்றுத் தள்ளி குடிமனைகளுக்குள் அய்யனார் கோயிலுக்கு அருகாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் அந்த வீட்டில் ஒருவிதமான கடல் வாசம் வீசிக்கொண்டேயிருந்தது. கேற்றைத் திறந்தவுடன் குப் என முகத்தில் அடிக்கிற வாசம்.

வலைகளுக்கு பொத்தல் போடுவதாயினும் ஈயக் குண்டுகளை கட்டுவதாயினும், அவித்துக் காயவிடுவதாயினும் வீட்டின் முற்றத்தில்தான் நடந்தன. “உந்த வலையளை கடற்கரை வாடியிலை வைச்சு பொத்தலாம் தானே” என்றால் மாமா சிரிப்பார்.

“எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு. இந்த வாசம் இந்த வீட்டுக்குள்ளை எப்பவும் இருக்க வேணும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னையும் ஒருநாள் மாமா கடலுக்கு அழைத்துச் சென்றார். நான் சின்ன வயதிலேயே நீந்தப் பழகியிருந்தேன். என்றாலும் மாரிகாலக் கிணறும் கேணியும் கடற்கரையின் தப்புத்தண்ணீருமென அது மட்டுப்பட்டிருந்தது. “தவளைதான்ரா கிணத்துக்கை நீந்தும்” என்று மாமா நக்கலடிப்பார்.

எனக்கு கடல் அச்சம் தந்தது. கடலின் சுழிகளைக் கேள்விப்பட்டிருந்தேன். சில சமயங்களில் கரைகளுக்கு சுழி வரும். அகப்பட்டால் ஆளைச் சுழற்றியடித்து உள்ளே அமுக்கி விடும். ஒரு முறை இதைச் சொல்லி “கடல் சனியன்” என்றபோது அருகில் நின்ற மாமா நாக்கைக் கடித்தபடி ஓங்கிக் குட்டினார். கடல் பரவாயில்லைப் போலயிருந்தது.

“கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்”

இம்முறை ஓர் அசட்டுத் துணிவில் நான் படகில் ஏறியிருந்தேன். கடல் அமைதியாக இருந்தது. பெரிய ஆழமில்லை. தாங்கும் கம்பை நீருக்குள் குத்தி அடி நிலத்தில் ஊன்றித் தள்ள படகு முன் நகர்ந்தது. அப்போது உண்டாகிற நீர் மேடுகளைத் தவிர்த்து பெரிய அலைகள் இல்லை. சிலர் ஐந்தரை முழக் களங்கண்ணிகளை நெஞ்சளவு உயரத் தண்ணீரிலேயே போட்டிருந்தார்கள். அவற்றில் தாக்காது மாமா லாவகமாக இரு பக்கங்களிலும் மாறி மாறி கம்பூன்றினார்.

“இப்பிடியே போனால், கடைசியில இந்த வள்ளத்தையும் வித்துப் போட்டு நானும் கரையிலதான் வலை விரிக்கோணும்.. இப்பவே இதை வித்துப் போட்டு கட்டுமரமொன்றை வாங்கலாமோ என்று யோசிக்கிறன். கைக்கெட்டும் துாரத்திற்குப் போறதுக்கு இது என்னத்துக்கு..”

நான் அமைதியாக இருந்தேன். துாரத்தே நேவிக்கப்பல் ஒன்று புகாரின் நடுவில் தெரிவது போல மங்கலாகத் தெரிந்தது. கடலில் இப்படியான ரோந்துகள் வழமையாகி விட்டிருந்தன. சின்ராசு மாமாவும் அதனை அவதானித்திருக்க வேண்டும். அவரிடமிருந்து ஆழ்ந்த மூச்சு வெளிப்பட்டது. “பிரேமதாசா எல்லாத்தையும் சரிப்பண்ணுவான் எண்டு நினைச்சிருந்தன். தலைகீழாப் பிரட்டிப் போட்டான். ”

களங்கண்ணிகளுக்கு அருகாக படகை நிறுத்திய மாமா நீருக்குள் இறங்கினார். “இறங்கடா” என்றார். நான் தயங்கிய படி நின்றேன்.

“உன்ரை வயசில நான் கடலில ரண்டு நாள் காணமல் போய் திரும்பியிருக்கிறன். அதுவும் இப்பிடித் தப்புத்தண்ணியில்லை. ஆழக்கடல். இந்தியன் நேவி எங்களுக்கு புது உடுப்பெல்லாம் தந்து கொண்டந்து விட்டாங்கள்.. ம். அதுவொரு காலம்..”

ஊன்றப்பட்டிருந்த களங்கண்ணிக் கம்பொன்றை படகிலிருந்த படியே பற்றிப் பிடித்து நான் மெதுவாக காலை வைத்தேன். “எப்பிடியும் இரண்டு பேரைத் தாழ்க்கும் ஆழம் இருக்கும்” இலேசாகக் குளிர்ந்தது. சமநிலை செய்வதற்காய் நீருக்குள் கால்களை உதைத்தபோது கால் விரல்கள் வலையின் கண்ணிகளுக்குள் சிக்கி மீண்டன. இடுப்பின் அரைப்பகுதி எரியத் தொடங்கியது. கொஞ்ச நாட்களாக வட்டக்கடி மாதிரியென்னவோ அங்கு பரவியிருந்தது. விறாண்டி விறாண்டி புண்ணாக்கி வைத்திருந்தேன். “இந்த மீன்களைச் சாப்பிடுவதில்லை” என்று நினைத்துக் கொண்டேன்.

சின்ராசு மாமா களங்கண்ணிக் கூட்டிலிருந்த ஒரு முனையின் கம்பைப் பெயர்த்தெடுத்து வந்து என்னிடம் பிடித்துக் கொள்ளச் சொன்னார். நான் பிடித்து நின்ற கம்போடு அதனை அணைத்துப் பிடித்துக் கொண்டேன். லேசாக ஆடுவதைப் போலிருந்தது. கடற்பாசிகளும் கஞ்சல்களும் உடலைத் தொட்டுப் போயின. அரியண்டமாயிருந்தது. மாமா மற்றைய கம்புகளையும் பெயர்த்து ஒன்றாக அணைத்துக் கொண்டு வந்தார். கண்ணியின் வட்டப்பரப்பு ஒடுங்கி வந்தது.

நான் படகில் ஏறி ஒன்றாய்ச் சேர்ந்த கம்புகளைின் மேல் நுனியைக் கட்டிப்பிடித்தபடியிருந்தேன். சட்டென்று நீருக்குள் மூழ்கியவர் கம்புகளின் அடிமுனையை பிடித்தபடி தலையைச் சிலுப்பிக் கொண்டு மேலெழுந்தார். “ஹே” என்று சத்தமிட்டபடி துாக்கி படகில் போட்டார். வலைக்குள் வெள்ளி வெள்ளியாக மீன்கள் துடித்தபடியிருந்தன. பெரிய பாடில்லை. சிறிய மீன்கள்.

நேவிக்கப்பல் நீண்ட துாரம் பயணித்திருந்தது. “பெரும் மீன் கடல் முழுக்க அவன்தான் திரியிறான்” என்றார் மாமா. கரைக்கு வேகமாகப் படகு நகர்வதைப் போல் தோன்றிற்று. கம்பு ஊன்றிய போது, வயர்களால் பின்னப்பட்டிருந்த பையிலிருந்த போத்தல் கள்ளை மாமா அப்படியே கவிழ்த்துக் குடித்ததை நான் கண்டேன். மாமா தொழிலின் போது கள்ளுக் குடிப்பது இது முதற்தடவையெனத் தோன்றியது.

நிலைமைகள் நாளும் நாளும் மோசமாகத் தொடங்கியிருந்தன. கடலில் எப்பொழுதும் ஒன்றிரண்டு நேவிக்கப்பல்கள் தரித்து நிற்கத் தொடங்கின. நேவியை உச்சிவிடலாம் என உசரப்போன ஒன்றிரண்டு பேர் திரும்பி வரவேயில்லை. பரன் அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து ஆறேழு மாதங்களே ஆகியிருந்தது. நிலவற்ற ஒரு இரவில் அவர் அப்படி ஆழக்கடலுக்குப் போனார். திரும்பி வரவில்லை. அன்றைய இரவில் கடலில் வெடிச்சத்தங்கள் கேட்டிருந்தன.

அழுது வடிந்து வீங்கிய முகத்தோடு அவரது மனைவி புவனா அக்கா ஒவ்வொரு காலையும் கடற்கரைக்கு வந்து நிற்பார். கடற்கரை மணலில் அவர் கால்களை நீட்டி உட்கார்ந்து விக்கி விக்க அழுவதைப் பார்க்க அந்தரமாயிருந்தது. அப்போது அவர் பிள்ளைத்தாச்சியுமாயிருந்தார். “பிள்ளை, உனக்காக இல்லாட்டியும், வயித்தில வளருகிற பிள்ளைக்காக எண்டாலும் ஒரு வாய் சாப்பிடு” என்று அவரது அம்மா சாப்பாட்டை நீட்டியபோது புவனா அக்கா கையால் வீசித்தட்டி விட்டார். கோப்பை கவிழ்து கடற்கரை மணலில் கொட்டுப்பட்டது. சற்று நேரம் அதையே வெறித்தபடியிருந்த புவனா அக்கா பிறகு என்ன நினைத்தாரோ, வெறி கொண்டவரைப்போல கொட்டிக் கிடந்த சோற்றை எடுத்து அவுக் அவுக் என விழுங்கினார். கடலைத் திரும்பியும் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடி வீட்டுக்கு ஓடினார். மூன்றாவது மாதம் ஆண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். அதனை கடலே இல்லாத ஊரில் வைத்து வளர்க்கப்போவதாக ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருந்து புவனா அக்கா சத்தமிட்டார்.

கடலில் தினமும் சண்டைகள் என்றானது. கரையில் நின்று பார்க்கும் போது, பீரங்கிகளும் தெரிகிற தெளிவில் நேவிக் கப்பல்கள் அண்மித்தாக நின்றன. போராளிகள் மண்மூடைக் காவலரண்களை கடற்கரையெங்கினும் அமைத்தார்கள். இரவு பகலென்று சென்ரிக்கு நின்றார்கள்.

ஒருநாட் காலை எவரையும் கடலுக்கு இறங்க வேண்டாம் என்று தடுத்தார்கள். நீண்ட வாகனங்களில் கூர் மூக்குகளைக் கொண்ட படகுகளைக் கொண்டு வந்து கரையினில் இறக்கினார்கள். தனியாக எடுத்துவந்த பீரங்கிகள் படகுகளில் பொருத்தப்பட்டன. போராளிகளின் பாட்டும் கூத்தும் கும்மாளமுமாக கடற்கரை நிறைந்திருந்தது. செய்தி ஊருக்குள் பரவி சனங்கள் வந்திருந்தார்கள். சின்ராசுமாமா வாடிக்கு வெளியில் போட்டிருந்த நீண்ட பனங்குற்றியில் இருந்து பார்த்தபடியிருந்தார். கரும்சட்டை போட்ட இரண்டு இளைஞர்கள் தம் வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி அவரைக் கடந்து போனார்கள். கடலில் கால்நனைத்து விளையாடினார்கள்.

வோக்கிகள் இரைந்து இரைந்து பேசின. பிறகு கரையிலிருந்து நான்கைந்து படகுகள் நீரைக்கிழித்தபடி விரைந்தன. கடைசியாகப் புறப்பட்ட படகில் கருஞ்சட்டை இளைஞர்கள் இருவரையும் சின்ராசு மாமா கண்டார். அவர்கள் திரும்பிக் கையசைத்தார்கள். தன்னையுமறியாமல் அவர் மெதுவாகக் கையசைத்தார். பெரும் ஈயக்குண்டு ஒன்றை தொண்டைக்குள்ளால் நெஞ்சுக்குள் இறக்கியதைப் போலவிருந்தது.

கடலினில் வெடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. “காங்கேசன்துறையில இருந்து வெளிக்கிட்ட கப்பலை மறிச்சு அடிக்கிறாங்கள்” என்று யாரோ சொன்னார்கள். கடலின் அடி ஆழத்தில் மங்கலாகத் தெரிந்த நேவிப்படகு வழமையை விட வேகமாக நகர்வதாகத் தோன்றிற்று. திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

சற்று முன் தன்னைக் கடந்து போனவர்களுக்கு மகனின் வயதை விட ஒன்றிரண்டு வயதுகளே அதிகமிருக்கும் என சின்ராசு மாமாவிற்குத் தோன்றிய போது உடல் அசைந்து திடுக்கிட்டது. எழுந்து விறு விறு என வீட்டுக்கு நடந்தார். “நீ இனிக் கடலுக்கை வரவேண்டாம். நானும் போறதாயில்லை.” என்று மகனிடம் சொன்னார்.

அப்பொழுது கிளாலிப் படகுச் சேவை நடந்து கொண்டிருந்தது. கொம்படி, ஊரியான், ஆனையிறவு, கேரதீவு பூநகரிப் பாதைகள் மூடப்பட்டிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனங்கள் கிளாலிக் கடனீரேரியைக் கடந்து கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் கொழும்பிற்கும் போய் வந்தபடியிருந்தனர். மீன்பிடிப் படகுகளே சேவையில் ஈடுபட்டிருந்தன. எஞ்சின் பூட்டிய ஒரு படகின் பின்னால் ஐந்தாறு படகுகளை கயிற்றால் தொடுத்துச் சனங்களை ஏற்றினார்கள். கடலில் நேவியின் அசுமாத்தம் தெரிந்தால், தொடுவைப் படகுகளுக்கான இணைப்புக் கயிற்றை வெட்டிவிட்டு எஞ்சின் படகு ஓடித்தப்பிவிடும் எனக் கதை இருந்ததால் சனங்கள் முதலாவது படகிலேயே ஏற அடிபிடிப் பட்டார்கள். பூநகரியிலிருந்தோ ஆனையிறவிலிருந்தோ புறப்படுகிற நேவிப்படகுகள், கிளாலிக் கடலில் சனங்களை வெட்டிப்போட்ட சம்பவங்களும் நடந்திருந்தன.

சின்ராசுமாமா இன்னொரு படகும் எஞ்சினும் இருந்தால் கிளாலி ஓட்டம் செய்யலாம் என நினைத்தார். ஏகப்பட்ட கடன் ஏற்கனவே இருந்தது. வலைகளை விற்றார். மாமி மிச்சமுள்ள நகைகளையும் விற்றார். மண்ணெண்ணெய்க்குப் பழக்கப்பட்ட எஞ்சின் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது.

கிளாலியில் பயணச் சேவையை போராளிகளின் வருவாய்ப் பகுதியினர் நிர்வகித்தனர். சின்ராசு மாமா ஓடவேண்டிய தினங்களும் நேரங்களும் அவர்களால் வழங்கப்பட்டன. வேறும் நான்கு படகுகளை அவர்கள் தொடுவையாக இணைத்தனர்.

நன்றாய்ப் பொழுது சாய்ந்த இரவு சின்ராசு மாமா முதற்பயணத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு படகிலும் பதினைந்துக் குறையாமல் ஆட்கள் இருந்தனர். மாமா படகினில் செருப்புப் போடுவதில்லை. பயணிகள் அப்படியிருந்தது மாமாவிற்கு என்னமோ போலிருந்தது. கடலிலோ படகிலோ செருப்பணிந்த யாரையேனும் காண நேரும்போது கடல் மாதாவைக் காலால் உதைப்பதைப்போன்றதொரு சித்திரம் அவர் மனதிற்குள் ஓடியது. “சனத்திற்குப் பிளேனில போறதெண்ட நினைப்பு”

“எவ்வளவு நேரத்தில போவீங்கள்,” என்று இளைஞன் ஒருவன் கேட்டான். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உள்ளுக்குள் அவனைத் திட்டினார். “தம்பி, இப்பிடியான பயணங்களுக்கு நேரம் கேட்கக் கூடாது, என்ரை சக்திக்கு உட்பட்டு நான் உங்களை கரையில கொண்டுபோய்ச் சேர்ப்பன்.”

பயணம் பெரிய கஸ்டமாகத் தெரியவில்லை. நேவியின் அசுமாத்தம் இல்லாத நாட்களாயிருந்தன. நட்சத்திரங்களைப் பிடித்து மாமா படகை ஓட்டினார். உப்புத்தண்ணீர் உடலில் படாத ஒன்றை கடல்தொழில் என அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருப்தியின்மை தொடர்ந்தபடியிருந்தது. ஆயினும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தொடங்கியிருந்தார்.

ஒரு நாள் வந்தது. காலம் பூராகவும் அவரது துாக்கத்தைக் கெடுத்துத் திடுக்கிட வைத்து உடல் வியர்க்க மூச்சு வாங்குகிற நாள். மூன்று நாட்களுக்கு முன்பாக படகில் சனங்கள் ஏறிபடியிருந்தார்கள். சின்ராசு மாமா அவர்களுக்கு ஷொப்பிங் பைகளை விநியோகித்த படியிருந்தார். “சத்தி வந்தா தலையைக் குனிஞ்சு இதுக்குள்ளை எடுங்கோ, போட்டுக்குள்ளயோ மற்றாள் பாக்கக் கூடியமாதிரியோ எடுத்துப் போட வேண்டாம். பிறகு மற்றாட்களுக்கும் வரும். பக்கத்தில இருக்கிறவரை தலையைப் பிடிச்சுக் கொள்ளச் சொல்லுங்கோ.. சரியாப் போடும்.”

பதினாறு படகுகள் புறப்பட்டுச் சென்றன. மாமா ஸ்ரார்ட் செய்தார். தண்ணீரை கைகளால் கோலி அள்ளிக் கொஞ்சம் குடித்து நெற்றியிலும் தலையிலும் தடவி “கடலம்மா” என்றார். படகு புறப்பட்டது. பத்து நிமிடம் ஆகியிருக்காது, கரையில் ரியுப் லைட் வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிந்தன. கடலைக் கிழித்தபடி இரைச்சலோடு வந்த போராளிகளின் “குருவி”ப் படகொன்று மெதுவாகி சமாந்தரமாக நின்றது. “நிப்பாட்டுங்கோ, பூநகரி நேவி கடலுக்கை இறங்கிட்டான். போட்டை உடனை கரைக்குத் திருப்புங்கோ. நாங்கள் முன்னுக்கு போன போட்டுகளை நிப்பாட்டித் திருப்ப வேணும்.” என்று விட்டு மீண்டும் வேகமெடுத்து இருளுக்குள் மறைந்தது.

படகிலிருந்த சனங்கள் குளறத் தொடங்கினார்கள். இறுதித் தொடுவைப் படகிலிருந்து அழுகை ஓலம் கிளம்பியது. “ஒருத்தரும் பதட்டப்படவேண்டாம். கரையிலதான் நிக்கிறம்” என்றார் சின்ராசு மாமா. ஒரு அரை வட்டமடித்து படகுகளைத் திருப்பினார். உடல் குளிர்ந்து விறைப்பதைப் போலத் தோன்றிற்று. பதினாறு படகுகளில் நுாற்றுக்கணக்கான சனங்கள் கடலுக்குள் இறங்கியிருந்தார்கள்.

அவர் ஷொப்பிங் பைகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது அணித்தாகச் சென்ற இரண்டாவது தொடுவையில் தாயின் மடியில் ஸ்வெட்டர் உடுப்பும் தொப்பியும் அணிந்திருந்த குழந்தையொன்று மெதுவாக அவரைப் பார்த்து சிரித்தது. சின்ராசு மாமாவின் வெண்ணிறத்தாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். அதன் சிரிப்பில் மனது இலேசாவதைப் போன்றதொரு உணர்வை அவர் அனுபவித்தார். தாடியைத் தடவிவிட்டுச் சிரித்தார். “மாமாக்கு டட்டா சொல்லு..” என்று தாய் சொன்ன போது பிஞ்சுக் கைகளை அது மெதுவாக ஆட்டியது. சின்ராசு மாமா தன்னையுமறியாமல் கைகளை அசைத்தார்.

பதினாறு படகுகளில் நான்கு நேவியிடம் சிக்கிக் கொண்டன. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மூன்று நான்கு தொடுவைகள் இருந்தன. காலையில் இருந்தே கடற்கரை அதகளப்பட்டது. உடலங்களை அலை கிளாலிக்கும் மறுகரையான நல்லுாருக்கும் மாறி மாறிச் சேர்த்தது. அவைகளில் மருந்திற்கும் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருக்கவில்லை. வாள் வெட்டுக்கள். கையிலும், முகத்திலும், நெஞ்சிலுமாக உடலைப் பிளந்த கோடு கோடான வெட்டுக்கள். மணிக்கட்டுக்களில் கைகள் துண்டாக்கப்பட்டிருந்தன. சின்ராசு மாமா கரைமணலில் தன்போக்கில் நடந்தார். காலடியில் அச்சம் உறைந்த வெறித்த கண்களோடு சடலங்கள் கிடந்தன. நுாற்று நாற்பத்து நான்கு சடலங்கள்!

புலிகளின் குரலில் செய்தியறிந்து சிந்தாமணி மாமியும் மகனும் கடற்கரைக்கு வந்திருந்தார்கள். சிதைந்த உடலங்களைப் பார்த்த மாமி ஓங்காளித்துச் சத்தி எடுத்து தலையைப் பிடித்தபடி ஓரிடத்தில் உட்கார்ந்தார். மகன் பேயறைந்தவனைப் போல நின்றான். அவனைக் கூட்டிக்கொண்டு உடனே வீட்டுக்குப் போகும்படி மாமா வற்புறுத்தினார்.

“உந்தத் தொழிலும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். நாங்கள் பிச்சை எடுத்துச் சாப்பிடலாம். நீங்கள் வாங்கோ”

“வருவன், வள்ளத்தை எடுத்துக் கொண்டு வாறன், நீ போ, வாறன். ஒண்டும் நடக்காது. நீ போ”

மூன்றாவது நாள், படகுகள் வழமைபோல ஓடத்தொடங்கின. சனங்களால் கடற்கரை நிறைந்திருந்தது. வேறு வழியிருக்கவில்லை. சின்ராசுமாமா கடலில் இறங்கினார். இரண்டு தொடுவைகளிலும் சேர்த்து நாற்பது பேரளவில் இருந்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இறுகியிருந்தார்கள். அவ்வப்போது நெஞ்சில் கை வைத்து வேண்டிக் கொண்டார்கள். பாதிரியார் ஒருவர் கைகளில் செபமாலை வைத்து செபித்தபடியிருந்தார். அமைதியைக் குலைத்தபடி குழந்தையொன்று வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சிலர் முகங்களில் கலவரம் படர்ந்ததை சின்ராசு மாமா கண்டார்.

“என்ரை குஞ்செல்லே, அழாதயணை.. அப்பாட்டையெல்லே போறம். அழப்படாது.” குழந்தை மீண்டும் துாங்கிப் போனது.

நல்ல நிலவிருந்தது. அதன் ஒளி, உயரும் அலை மேடுகளில் பட்டு வெளிச்ச நடனம் புரிந்தது. சின்ராசு மாமா நேரத்தைப் பார்த்தார். இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள் நல்லுார்க் கரையை அடைந்து விடலாம். சற்று வேகப் படுத்தினார். “டக்” என்று என்னவோ முன் அணியத்தின் கீழே முட்டுப்பட்டது போலத் தோன்றியது. முன்னர் தொழிலுக்கு பெருங்கடலுக்குச் செல்கிற சமயங்களில் சற்றே பெரிய சுறாக்கள் படகில் முட்டுப்பட்டு ஓடும்போது இப்படிச் சத்தம் கேட்பது வழமை. ஆனால் மாமாவின் உள்ளுணர்வு அது சுறா இல்லை என்று சொல்லியது. வேகத்தை மெதுவாக்கினார். அருகிருந்த சக ஓட்டியிடம் எஞ்சினின் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பதட்டத்தை வெளிக்காட்டாமல் அணியத்தை நோக்கி நடந்து கீழே பார்த்தார்.

அப்படியே தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. படகின் விளிம்பில் கைகளை ஊன்றித் தாங்கிக் கொண்டார். எல்லாமே இருண்டு போவதாகத் தோன்றியது. சுதாகரிக்கப் படாத பாடு பட்டார்.

கீழே ஒன்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றின் கால்கள் வெட்டப்பட்ட சடலம் தண்ணீரில் அணியத்தின் வெளிப்புறத்தோடு அணைந்திருந்தது. அதன் அறுணாக் கயிறு ஆணியொன்றில் மாட்டியிருக்க படகு சடலத்தைத் தள்ளியபடி முன்னேறியது. குழந்தையில் வெள்ளை பாய்ந்திருந்தது. அறுணாக் கொடியில் வெள்ளிக் கூடொன்றிருந்தது. கால்கள் இல்லை. வெட்டிய இடத்தில் இரத்தம் கழுவுப்பட்டு வெள்ளைத் தசைகள் பிய்ந்து தண்ணீரில் இழுபட்டன. முகம், சிரித்துக் கொண்டே செத்ததைப் போலிருந்தது. அன்றைக்கு கையசைத்துச் சென்ற ஸ்வெட்டர் போட்ட குழந்தையின் நினைவுகள் அலைகளாய் திரண்டன. அது என்னானதோ..

மாமா படகில் சனங்களைப் பார்த்தார். ஆளையாள் வெறித்தபடியிருந்தார்கள். மெதுவாக விளிம்பில் நெஞ்சை அழுத்திக் குனிந்து கைகளால், மாட்டியிருந்த அறுணாக்கயிற்றை எடுத்து விட்டார். அழுகை உடைத்துக் கொண்டு வந்துவிடுமாற் போல இருந்தது. குழந்தையை படகினின்றும் துாரத்தே தள்ளிவிட்டார். அருகிருந்தவர்கள் என்ன என்பதைப் போல பார்த்தார்கள். “கடற்பன்றி” என்று பொய் சொன்னார்.

எஞ்சினருகில் வந்து உட்கார்ந்து படகை இலேசாகத் திருப்பியபோது துாரத்தே அவருக்கு இடதுபுறமாக குழந்தை மிதந்து கொண்டிருந்தது. அன்றைக்கு இரவு சினிராசு மாமாவிற்கு காய்ச்சல் வந்தது.

மாமா வீட்டிற்கு வந்தார். யாரோடும் முகம் கொடுத்துப் பேசாது தன் போக்கில் திரிந்தார். சோம்பிக் கிடந்தார். ஒரு கனவில் இருளில் எல்லாப்பக்கமும் விரிந்த கடலின் நடுவே கட்டுமரமொன்றில் மாமா தனித்து விடப்பட்டிருந்தார். பிரகாசமான நிலவொளி தண்ணீரில் தெறித்தது. ஆனால் மேலே நிலவில்லை. அது ஏன் என்று யோசித்தபடியிருந்தார். அப்பொழுது துாரத்தே குழந்தையொன்று தண்ணீரில் மிதந்து அவர் அருகில் வந்தது. அது கண்களை மூடித் துாங்குவதைப் போலிருந்தது. மாமா அதன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அது சிரித்தது. கன்னத் தசைகளை விரித்து நன்றாகச் சிரித்தது. ஆனால் செத்துப் போயிருந்தது.

மாமா திடுக்குற்று விழித்தார். உடல் வியர்த்துக் கொட்டியது. எழுந்து சிகரெட்டைத் தேடினார். வெறும்பெட்டிதான் சட்டைப்பையில் இருந்தது. பழைய பீடியொன்றைத் தேடிப் பற்றவைத்தார். வெளியே வந்து இருட்டினில் அமர்ந்து கொண்டார். சிந்தாமணி மாமியும் எழுந்து வந்து ஆறுதலாக தலையைத் தடவினார்.

“என்னய்யா..”

“நான் இனி கிளாலியில ஓடேல்லை. நாளைக்கு போய் போட்டை எடுத்தரலாம் எண்டு நினைக்கிறன். எங்கடை கடலிலயே கரையில எதையாவது செய்யலாம்.”

அடுத்த நாள் காலை பூநகரியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் கிளாலியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். புலிகள் தொடர்ந்தும் எதிர்த்தாக்குதலை நடாத்துவதாக புலிகளின் குரலும், கைப்பற்றிய பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பணிகளில் இராணுவம் ஈடுபடுவதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையும் செய்தி சொல்லின. சின்ராசு மாமா இடிந்து போய் உட்கார்ந்தார். அவரது எஞ்சினும் வள்ளமும் இரண்டு லட்சமாயினும் பெறுமதியாயிருந்தன.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், கிளாலியைக் கைப்பற்றியிருந்த படையினர் விரட்டியடிக்கப்பட்டனர் எனக் காலைச்செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே சின்ராசுமாமா கிளாலிக்குப் புறப்பட்டார். கிளாலி எரிந்து கொண்டிருந்தது. கரை முழுவதும் இராணுவச் சடலங்கள்; கடலுக்கென்ன, அது எல்லாச் சடலங்களையும் கரை சேர்க்கிறது.

ஓலையால் வேயப்பட்டிருந்த பயண அலுவலகங்கள், சனங்கள் இளைப்பாறும் கொட்டில்கள் எல்லாம் எரிந்து கருகியிருந்தன. படகுகளிலிருந்தும் கைவிடப்பட்ட வாகனங்களிலிருந்தும் புகையெழுந்தபடியிருந்தது. சின்ராசு மாமாவின் உள்ளுணர்வு அவரது ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. நடை தளர்ந்து கால்கள் துவண்டன. கைகளால் பின்னங்கழுத்தைப் பொத்தி வானத்தைப் பார்த்தவாறு முழங்கால்களை மணலில் ஊன்றி விழுந்தார்.

துாரத்தே, ஒரு சிறிய தென்னை மரத்தின் கீழே, சிந்தாமணி, எப்போது பார்த்தலும் கல்யாணக் காலங்களை நினைவுறுத்துகிற அவரது படகு கருகிய எலும்புக் கூடாக கவிழ்ந்திருந்தது. சின்ராசு மாமா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.

அன்றிலிருந்து மாமா ஒடுங்கிப்போனார். கரைவலை வீச்சு, துாண்டில், களங்கண்ணியென்று போவதையும் நிறுத்தினார். எல்லா வருத்தங்களும் வந்து சேர்ந்தன. கண்கள் உள்ளிழுத்து, தோல்கள் சுருங்கி முதுமையின் கோடுகள் சீக்கிரமாகவே அவரை ஆக்கிரமித்தன. கள்ளைக் குடித்துவிட்டு “நான் செத்தபிறகு, நீங்கள் என்ன செய்வியளோ தெரியாது. என்ரை சாம்பலை இந்தக் கடலில கரைக்கோணும். அதுவும் கரையில இல்லை. நல்லா உசரப்போய்.. கரை மறைஞ்ச கடலில கொட்டோணும்”

மாமா சின்னச்சின்ன கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியிருந்தார். பழக்கமேயில்லாத தொழில்கள். தேங்காய் உரிக்கப் போனபோது உள்ளங்கையை அலவாங்கு குத்திக் கிழித்திருந்தது. விறகு வெட்டினார். வலதுகாற் பெருவிரல் நகத்தை கோடாலி கொண்டு போனது. குடும்பத்தைக் கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக இருந்தது. கடன்காரர்கள் நெருக்கினார்கள். “நிலமைகள் சரிவரட்டும், இன்னும் தெம்பிருக்கு. கடலுக்குப் போவன்.” அன்று அவர்களுக்குச் சொன்னார்.

சிந்தாமணி மாமி சந்தைக்கு மீன் விற்கப் போனார். சொரியலாக வாங்குகிற மீன்களை இரண்டு மண்ணெண்ணெய் பரல் மூடிகளில் பரப்பி சந்தையில் நாள் முழுதும் உட்கார்ந்திருந்தார். எல்லாம் ஒரு சாணுக்குள் அடங்குகிற சின்ன மீன்கள். பெரிதாக யாவாரம் ஆகவில்லை. பழைய நினைவுகள் அவரை வாட்டியெடுத்தன. கல்யாணமான காலம், சின்ராசு மாமா கடலால் மீண்டு வீட்டுக்குள் நுழையும் தோற்றம் எப்போதும் ஒரேமாதியிருந்தது. ஒரு கையில் பெரிய பாலை மீனின் வாலைப்பிடித்துத் துாக்கியவாறு சாரத்தின் ஒரு முனையைத் துாக்கி வாயில் கடித்தபடி அவர் நுழைவார். மாமி தனக்குள் சிரித்துக் கொள்வார். “அய்யனார்தான்”

“இதென்ன, சாறத்தைத் துாக்கிக் காட்டினபடி வாறியள், தெருவால பெண் பிரசுகள் திரியிறேல்லயே..”

“நானென்ன செய்ய..? வாழ்க்கையில அரைவாசிக் காலம் பென்ரரோடையே வாழ்ந்திட்டன். உடம்பில துணி நிற்குதில்லை. நீ இரவில…” மாமி தனது கைகளால் மாமாவின் வாயைப் பொத்துவார். “வெட்கம் கெட்ட மனுசன்..”
அதுவொரு காலம்;

சந்தையில் பெரிய வருமானம் கிடைத்ததில்லை. சாப்பாட்டுச் செலவுகளுக்குப் போதுமாயிருந்தது. மாமா எப்போதாவது கடற்கரைப் பக்கம் வந்து போவார். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பிவிடுவார். அவர் பிரேமதாசாவிற்குப் பிறகு இரண்டு பேரை நம்பியிருந்தார்.

“சந்திரிக்கா என்ன இருந்தாலும் ஒரு பொம்பிளை, ஒரு தாய், கஸ்ரம் தெரிஞ்சவள். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டி, கடலைத் திறந்து விடுவாள். காலம் வரும்”

“ரணிலைப் பார்க்கவே படிச்ச களை தெரியுது. அதிர்ந்து கதைக்கத் தெரியாத ஆள்ப்போல கிடக்கு. சனங்களின்ரை கஸ்ரத்தை தெரிஞ்சு வைச்சிருப்பான். இந்த நாட்டின்ரை முன்னேற்றம் எங்களை மாதிரியான ஆட்களின்ரை கையிலதான் இருக்கென்று அவனுக்குத் தெரியும். மகன் வாத்தி வேலை கிடைக்குமெண்டு கம்பசுக்குப் போறான். நிலைமை சரிவருமென்றால் படிச்சு முடிய கடல் தொழிலுக்குத்தான் அவனை அனுப்புவன். வழியொன்று வரும்.”

கடைசியாக மகிந்த ராஜபக்ஷ கடல்வலயத் தடைச் சட்டத்தைச் சற்றுத் தளர்த்தி, மட்டுப்பட்ட அளவில் மீன்பிடிக்கான அனுமதியை வழங்கினார்.

0 0 0
மேற்படி கதை முடிந்துவிடவில்லை. அதனை எங்கு முடிப்பதென பிரதியாளருக்குக் குழப்பம் இருந்தது. எப்படி முடிப்பதென்பதிலும்,

ஒரு நல்ல நடுநிலையாளருக்கு எது அழகு என குப்புறப்படுத்து யோசித்ததில் ஒன்று (ஒன்றல்ல மூன்று) புலப்பட்டது. அதன்படியாக இந்தப் பிரதி மூன்று இடங்களில் முடிக்கப்படுகிறது. ஒரேயொரு இடத்தில் முடிகிறது.

0 0 0
1
கடற்கரையின் சோதனைச் சாவடியில் சின்ராசு மாமா வரிசையில் நின்றார். இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் பெயர் முகவரிகளைப் பதிந்து அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டனர். எதிரே கடல் விரிந்திருந்தது. அன்றொருநாள் அதன் கரைவழியே நடந்த கரும் சட்டை இளைஞர்களின் சிரித்த முகங்கள் நினைவுக்கு வந்தன. அவர்களது மூச்சுக் காற்றும் உடலும் கலந்த கடல்..
“அவர்களின்.. கனவு..”

மாமாவின் முறை வந்தது. சிப்பாய் கையை நீட்டி, “ஐடென்ரி காட்” என்றான். அந்தக் கை..! பரனைச் சுட்ட கை, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னாலும் மறக்க முடியாத குழந்தையை துாக்கி வெட்டிய கை.. இரத்தம் வழிகிற கை.. பிசாசின் கை..

சின்ராசு மாமா அடையாள அட்டையைக் கொடுக்கவில்லை. வரிசையினின்றும் விலகி “இல்லை, நான் கடலுக்குப் போகேல்லை. போக மாட்டன்” என்று விட்டு விறு விறு எனத் திரும்பினார். “தமிழன், பச்சைத் தமிழன்.. என்ரை கடலில இறங்க நீங்கள் ஆர் பெர்மிஷன் தர… மாட்டன். அப்பிடியொரு பெர்மிஷன் எனக்கு வேண்டாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனைக்க மாட்டன்.” வைராக்கியத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டார். அதற்கடுத்த மூன்றாவதோ நான்காவது வாரத்தில் சின்ராசு மாமா செத்துப் போனார்.

2
கடற்கரையெங்கும் மீனவர்கள் திரண்டிருந்தனர். சின்ராசு மாமா தன் பேரனின் கையில் செங்கொடியொன்றைக் கொடுத்து மேடையில் நிறுத்தியிருந்தார். மாமாவின் உடல் தளர்ந்திருந்தாலும் குரலில் நடுக்கமிருக்கவில்லை. “மீனவத்தோழர்களே, இன்றைக்கு இந்தக் கடற்கரையில் இருந்த அதிகார ராணுவத்தினரை கற்களால் எறிந்தே நாம் கலைத்தோம். நாம் இத்தோடு நிறுத்தப் போவதில்லை. சிங்கள சீன ரஷ்ய கியுப மீனவர்களையும் திரட்டி உலகம் தழுவிய கூட்டுப் புரட்சியை ஏற்படுத்தி – நமக்கான கடலை, நமக்கான வயலை, நமக்கான தொழிற்சாலைகளை, நமக்காகப் பெறுவோம். தோழர்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்த இராணுவச் சாவடிக்கு கற்களால் எறிந்தது போல, அன்றைக்கு இந்தக் கடற்கரையை ஆக்கிரமித்து நின்ற புலிகளையும் துரத்தியிருந்தால் நாம் இத்தனை துன்பப்பட்டிருக்கத் தேவையில்லை. மேலும் தோழர்களே நமது எதிரி இன்றைக்கு ஓடிய இராணுவத்தினர்கள் அல்ல. அவர்கள் வெறும் கருவிகள். கருவிகளை இயக்குகின்ற கயிறுகள் முதலாளிகளின் கைகளில் இருக்கிறது.”
அப்பொழுது எல்லோரும் அந்த ஊரின் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். அவர் வீட்டுக்கு கல் எறியத் தொடங்கினார்கள்.

3
“ஐடென்ரிகாட் தாங்க” என நீட்டிய சிப்பாயின் கையை சின்ராசு மாமா வாஞ்சையுடன் பற்றிக் கொண்டார். “புத்தா, நெஞ்சில் கை வைத்துச் சொல்கிறேன். இலங்கையில் மனிதாபிமானம் மிக்கவர்கள் எவரென்றால் அது நீங்களே.” என்று அவனுடைய கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். சிப்பாய் சிரித்தான்.
சின்ராசு மாமா வரிசையில் நின்றவாகளைப் பார்த்து மேலும் சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்கிறேன், கேளுங்கள். இன்றைக்கு இலங்கை மாதாவின் இந்தப் பிள்ளைகள், நம்மைக் கடலுக்குப் போய் வாருங்கள் என அனுப்புகிறார்கள். ஏன் அப்படியொரு வாய்ப்பை புலிகள் நமக்குத் தரவில்லை.. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது வெள்ளாளர்கள் கடல் தொழிலுக்குப் போவதில்லை என்பது மட்டுமே. வயல் நிலங்களைப் பாதுகாத்த புலிகள் கடலைப் பாதுகாக்கத் தவறியதன் பின்னாலிருக்கிற சாதி அரசியல் இதுதான்.

இன்று அந்த வாய்ப்பை நமக்கு இந்தப் பிள்ளைகள் தந்திருக்கிறார்கள். நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கே எல்லோரும் பாடுங்கள், “நமோ நமோ தாயே, நம் சிறிலங்கா.. நல்லெழில் சீரணி, நலங்கள் யாவும் நிறை மாமணி.. லங்கா.. ”

எல்லோரும் பாடினார்கள். இராணுவத்தினர் கைதட்டினார்கள்.

0 0 0
பெரிய வரிசையில்லை. அழுக்கடைந்த பெனியனும் மடித்துக்கட்டிய சாரமும் கட்டி சின்ராசு மாமா வரிசையில் நின்றார். காலை எட்டுமணிக்கெல்லாம் சாவடியைத் திறந்து தொழிலுக்கு அனுமதிக்கிறார்கள். பொழுது சாய்வதற்குள் கடற்கரையை விட்டு வெளியேறிவிட வேண்டும். இரவுத் தொழிலுக்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

“ஐடென்ரி காட்” கூட்டுக்குள் இருந்தவனுக்கு மகனின் வயதுகள் வரும். கொடுத்தார்.

“என்ன செய்யிறது..” என்று அவன் கேட்டான். மாமாவிற்கு சரியாக விளங்கவில்லை. அவனுக்கு அருகாக முகத்தைக் கொண்டுபோய் “என்ன.. சேர்..” என்றார்.

“என்ன தொழில் செய்யிறது..” அவன் குரலை உயர்த்தியது அச்சமூட்டுவதாய் இருந்தது. மாமாவின் உடல் ஒருதடவை அசைந்து திடுக்கிட்டது. அவருக்கு பின்னால் நின்றவரைச் சுட்டினார். “இவர் பதினைஞ்சு முழக் களங்கண்ணி போட்டிருக்கிறார். இவரோடை உதவி ஒத்தாசைக்குப் போறனான் சேர்.” நேற்றும் சொல்லியிருந்தார்.

“சரி, பின்னேரம் வரும்போது ஐடென்ரி கார்ட்டை எடுக்கணும்”

மாமா நடந்தார். பின்னால் வந்தவனும் இவரோடு இணைந்து கொண்டான். சின்ராசு மாமா அவனது கையைப் பிடித்து யாரும் வருகிறார்களா எனப் பார்த்தார். சற்றுத் தயங்கினார். பிறகு “தம்பி, நிலவில்லாக் காலம்தானே, என்ரை மனசு, நல்ல பாடிருக்கும் என்றுதான் சொல்லுது. எனக்கொரு ஒரு ஐம்பதாயிரம் ரூபா தருவியே.. பிறகு வேலையில கழிச்சுக் கொள்ளன். இவன் மகனை அபுதாபிக்கு அனுப்பிற ஒரு அலுவல் சரிவந்திருக்கு.

By

Read More

× Close