சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும்.

கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார்.

சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் ஒழுங்கா குண்டியை குத்தியில வைச்சு இருக்கலாம்தானே” என்று எனக்குள் ஓடும். துாரத்திலேயே நின்று கொள்வேன். சுட்ட மீனின் வேகாத வெள்ளைச் சதையும் கருகிச் சுருங்கிய தோலும் செதில்களும் அரியண்டமாயிருந்தன. அப்பொழுது அவர் என்னை நோக்கி பிளாவை நீட்டுவார்.

“வா மருமோன், எப்பன் குடி” நான் முகத்தைச் சுழித்தபடி நிற்பேன்.

“கற்பகதருவடா.. உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.”

“புளிச்ச கள்..” என்றுவிட்டு நான் நகர்ந்த பிறகு பின்னால் ஒரு குழந்தைப் பிள்ளைச் சிரிப்பொன்று படரும். “மாமிட்டைக் கேள், சுறாவும் கெளுத்து முட்டையும் எடுத்து வைச்சிருக்கிறன். கொண்டு போய் கொப்பம்மாட்டைக் குடு”

அப்பம்மாவின் சமையலில், மஞ்சள் சேர்த்த சுறா வறுவல், பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போலிருக்கும். வெறும் வெள்ளைச் சோற்றில் பால் சொதியும் சுறா வறையும் பிசைந்து வாரத்தில் ஏழு நாளும் சாப்பிட நான் தயாராயிருந்ததை சின்ராசு மாமா அறிந்திருந்தார். குழம்பில் கலந்திருக்கும் கொண்டைக் கடலை அளவிலிருந்த கெளுத்து மீன் முட்டைகளை தங்கச்சி அடிபட்டுச் சாப்பிடுவாள். மாமா அவளுக்கு இரண்டு பெயர்களை வைத்திருந்தார்.

“முட்டைச்சி, கருவாட்டுப் பூனை”

சின்ராசு மாமாவிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பவை போலவே கட்டுமரம், எஞ்சின் படகு, சமயங்களில் எதுவுமில்லாத வெறும் துாண்டில் என நிலையற்ற தொழிலும் இருந்தது. நாட்டு நிலமைகள் குலைய முன்னிருந்தே அவரிடம் இரட்டை எஞ்சின்கள் பொருத்திய சற்றே பெரிய படகொன்றிருந்தது. இரண்டொரு பேரை அழைத்துக் கொண்டு அவரே வலை படுக்கப் போவார். பதின்நான்கு வயதில் அப்படிப் போகத் தொடங்கியவர் கல்யாணத்திற்குச் சற்றுக் காலம் முன்பாக கடன் பட்டு அந்த எஞ்சின் படகினை வாங்கியிருந்தார். ஆட்களை வைத்துத் தொழில் செய்யத் தொடங்கிய பிறகும் சின்ராசு மாமா கடலுக்குப் போகாத நாள் கிடையாது. பொழுது நன்றாய்க் கழிந்து இருள் பரவிய பிறகு ஆளும் பேருமாய் அவரது படகினை நீருக்குள் தள்ளி இறக்குவார்கள். பின்பகுதியில் எஞ்சினுக்கு அருகில் சின்ராசு மாமா உட்கார்ந்து கொள்வார். அவரே அதனை இயக்குவார். நட்சத்திரங்கள் அவருக்கு வழிகாட்டின.

கரையின் வெளிச்சங்கள் மறைந்த துாரத்தில் அந்தத்தில் ஈயக்குண்டுகளையும் மேலே உருண்டை மிதவைகளையும் கொண்ட வலையை அவர்கள் கடலில் இறக்கினார்கள். சீசனுக்கு ஏற்ற மாதிரி மாமா வலைகளைத் தீர்மானிப்பார். முரல் காலங்களில் பறவை வலையும், சூடை மீன் நாட்களில் சூடை வலையும் தவிர்த்து மற்றைய நாட்களில் அறக்கொட்டி வலையை அவர் எடுத்து வருவார். அந்த வலையில் சற்றே உருப்படியான மீன்கள் அள்ளுப்பட்டன.

வலையைப் படுத்த பிறகு நீரின் மேலே மஞ்சள் வெள்ளை நிறங்களாலான உருண்டை ரெஜிபோம் காவிகள் அரை வட்ட வடிவில் அல்லது நேர்கோட்டுக் கிடையில் அலையினில் துள்ளியபடி மிதந்து கொண்டிருக்கும். வலையின் இரண்டு முனைகளையும் படகோடு இணைத்து எஞ்சினை அணைத்து சற்றுத் தொலைவினில் நங்கூரம் பாய்ச்சியிருப்பார்கள். சின்ராசு மாமா சட்டியில் குழைத்த சோற்றினில் ஜாம் போத்தலில் எடுத்து வருகிற புளிச் சொதியை ஊற்றிப் பிசைந்து மற்றவர்களுக்கு கவளமாகக் கொடுப்பார். அவர்கள் இளைஞர்கள். நீண்ட காலமாக மாமாவோடு தொழிலுக்கு வருகிறவர்கள்.

“கடைசி வரைக்கும் என்னோடேயே இருந்து தொழில் செய்யலாம் என்று நினைக்கக் கூடாது. ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு சொந்தமாத் தொடங்கிவிட வேணும். அப்பவும் கடலுக்கு வாறதை நிப்பாட்டக் கூடாது. இது உங்கடை கடல், உங்கடை சொந்தத் தொழில். நீங்கள்தான் வரவேணும். வீட்டில இருந்து கடல்தொழில் செய்ய முடியாது”

“கடல் ஒரு திரவியம், எப்பவும் சுரந்து கொண்டே இருக்கிற மடி. இந்த மடியை விட்டுட்டு சவுதிக்கும் ஓமானுக்கும் போய் என்ன செய்யப்போறாங்கள்” என்று மாமா சமயங்களில் அலுத்துக் கொள்வார்.

இரவுத் தொழிலில் அவர் கண்ணயர்வதில்லை. படகின் விளிம்பில் முதுகு சாய்த்து நட்சத்திரங்களை அளந்து கொண்டிருப்பார். அவை ஒவ்வொன்றினதும் பெயர்களை அவர் நினைவு வைத்திருந்தார். அவற்றைச் சத்தமாகச் சொல்லிப் பார்ப்பார். விரிந்த கடலும் இருண்ட வானமும் முகத்தில் வருடுகிற குளிர் காற்றும் இன்னதென முடியாத உணர்வலைகளை அவருக்குள் உண்டு பண்ணின. அக்கணங்களில் அவரது உடல் அசைந்து நடுங்குவதைப் போலிருக்கும். “முப்பது வருடங்களின் அரைவாசி நாட்கள் இந்தக் கடலின் அலைகளின் நடுவே கழிந்தன” எனத் தோன்றுகையில் திடீரென்று விரல்களை விரித்து தண்ணீருக்குள் அங்குமிங்கும் அலம்புவார். சட்டென்று நீரை அள்ளி தீர்த்தம் போல பருகி நெற்றியில் தடவி தலையினில் தெளித்துக் கொள்வார்.

பின்நிலவு வெளிக்கிளம்ப முன்னர் வலையின் இரு முனைகளையும் பிடித்து வலித்து படகில் ஏற்றத் தொடங்குவார்கள். பாடு அதிகமென்றால், அலைகளில் படகு தள்ளாடியபடியிருக்க இழுத்து ஏற்றுவதில் சிரமமிருக்கும். அச்சமயங்களில் மாமா சாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு பென்ரரோடு கடலுக்குள் இறங்கி விடுவார். தண்ணீருக்குள் நீந்தியபடி அவர் தள்ளிக் கொடுக்க இளைஞர்கள் வலையை ஏற்றுவார்கள்.
வலையின் கண்ணிகளுக்குள் உடலை நுழைத்து இழைகள் இறுக்க செத்த மீன்களைத் தவிர்த்து நட்சத்திரங்களும் அகப்பட்டன எனத் தோன்றும் குட்டிக் குட்டியான வெள்ளி நிற மீன்களும் பெரிய வாட்களையொத்த மீன்களும் சட சட என உடலை அடித்துத் துடிக்கிற சத்தம் ஒரு கலவர சூழலை படகுக்கு கொடுத்திருக்கும். சின்ராசு மாமா இரண்டு புறங் கைகளையும் தலையில் வைத்து விரல்களை மடக்கி நாவூறு கழித்துக் கொள்வார். அவரிடம் வினோதமான ஒரு பழக்கம் இருந்தது. கரைக்குப் புறப்பட முன்னர், உயிரோடு துடிக்கிற ஒரு மீனை மீண்டும் கடலுக்குள் விடுவார். அது நீரைச் சுழித்து ஓடுகிறதா என் இருட்டுக்குள் தேடுவதைப் போல சற்று நேரம் பார்த்தபடியிருப்பார். அவரது முதலாளியிடமிருந்து இந்தப் பழக்கத்தை தானும் கொண்டதாக ஒரு நாள் சொல்லியிருந்தார். அப்போது இளைஞர்களில் ஒருவர் க்ளுக் என்று சிரித்தான்.

“நாளைக்கே இந்த மீன் திரும்பவும் பிடிபட்டு கறிக்கு துண்டானால் என்ன செய்யிறது”

சின்ராசு மாமா அவனை ஊடுருவிப் பார்த்தார். “பிடிபடட்டும். துண்டாகட்டும். ஆனால் ஒரு நாளென்றாலும் கூடுதலாக அதுக்கு உயிர் வாழக் கிடைச்சது பார்த்தியா. அதுதான் விசயம். இது மீனுக்கு மட்டுமில்லை. எனக்கு உனக்கு என்று எல்லாருக்கும் தான் பொருந்தும். மனிசர்களுக்கும் அப்பிடித்தான். இப்ப சாகிறாயா இல்லாட்டி கொஞ்சம் நேரம் கழிச்சு சாகிறாயா எண்டு எமன் கேட்டால் நீ என்ன சொல்லுவாய்..” என்றவர் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். “கிடைக்கிற ஒரு நிமிசமென்றாலும் உயிரோடு வாழத் துடிக்கிறதுக்குத்தான் கடலுக்கையும் வெயிலுக்கையும் புழுதிக்கையும் இந்த ஓட்டம்.”

நாட்டு நிலமைகள் சீரழியத் தொடங்கின. இந்திய இராணுவ காலத்தில் கடலில் இறங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் வந்தன. இரவுத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. சின்ராசு மாமா முதன்முறையாக சிகரெட்டில் இருந்து பீடிக்கு மாறினார். எஞ்சின்கள் கழற்றப்பட்ட அவரது படகு கடற்கரைச் சுடுமணலில் நீண்டகாலத்திற்குக் குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அவரோடு தொழிலுக்கு வந்த இளைஞர்களில் ஒருவன் கட்டடத் தொழில் ஒப்பந்தத்தில் அபுதாபிக்குப் போனான். இடுப்பளவு தண்ணீரில் தனித்து நின்று துாண்டில் போட்டுச் சேர்த்த மீன்களோடு கரைக்குக் நடக்கும் போது ஒரு காலத்தில் கரையேறிய படகிலிருந்து துாக்க முடியாமல் சுமந்து வந்து ஏலம் கூறுமிடத்தில் கொட்டிய மீன் திரள் குவியல் நினைவுக்கு வரும். தன் கால்கள் சொர சொர மணலில் புதைவதாய் உணர்ந்து திடுக்கிட்டுச் சுதாகரிப்பார்.

செலவுகளைச் சமாளிக்க படகின் எஞ்சின்களை அடிமாட்டு விலைக்கு சின்ராசு மாமா விற்றார். மாதகலில் இருந்து இந்தியாவிற்கு கடத்தல் செய்கிற ஒரு கோஷ்டி அதனை வாங்கியது. “நாங்கள் ஒளிச்சு மறைக்கேல்லை. கடத்தல் செய்யத்தான் கேட்கிறம்” என்று அவர்கள் சொன்ன போது மாமா அவர்களிடம் “அதுக்குப் பேர் கடத்தல் இல்லை” என்றார்.

“இது யாவாரம். தொன்று தொட்டு நடக்கிற யாவாரம். இடையில அரசாங்கங்கள், சுங்கம் எண்டும் வரியெண்டும் கொண்டந்திட்டு காலம் காலமா நடக்கிற யாவாரத்தை கடத்தல் எண்டுறாங்கள். உங்களுக்குத் தெரியுமோ அந்த நேரம் பர்மா வரைக்கும் இந்த யாவாரம் நடந்தது”

அவர் வலைகளையும் விற்கும் காலம் வந்தது. பகலில் கண்ணுக்குத் தெரிகிற துாரத்தில் களங்கண்ணி செய்து பார்க்கலாம் என்றான பிறகு, உசரத்தில் படுக்கிற வலைகள் தோதுப்படவில்லை. அவற்றை விற்று களங்கண்ணி வலையும் பதினைந்து முழக் கம்புகளும் வாங்கினார். காய்ந்த பாசிகள் முழுதும் வழியாத பழைய வலைகள். கண்டல் பட்டை சாயம் போட்டு அவற்றை அவித்தெடுத்தார்.

நீண்ட காலத்தின் பின் படகு மீண்டும் நீரில் இறங்கியது. மகனைப் பள்ளிக்கூடத்தால் அன்றைக்கு நிறுத்தி அழைத்துச் சென்றிருந்தார். தடியூண்டித் தாங்கியபடி சென்று கரை நிலம் தெரிகிற துாரத்தில் வைத்து கடலில் கம்புகளை வட்டமாகப் புதைத்தார். மகன் ஒரு தவளையைப் போல கைகளையும் கால்களையும் விரித்து ஒவ்வொரு கம்புகளுக்கு இடையிலும் பாய்ந்து அவற்றில் வலைகளைப் படரவிட்டான். மாமா படகில் ஏறி களங்கண்ணிக் கூட்டை திருப்தியோடு பார்த்தார். அமாவாசைக் காலமான இந்த இரண்டு வாரமும் மீன்பாடு பரவாயில்லாமல் இருக்குமெனத் தோன்றியது.

அன்றைக்கு இரவு மாமியோடு பெரும் புடுங்குப்பாடு அவருக்கு வந்தது. மகனை பள்ளிக் கூடத்தால் நிறுத்தி கூட்டிச் சென்றதற்கு மாமி சத்தம் போட்டார். சின்ராசு மாமாவிற்கு சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிட்டு “அவன்ரை வாழ்க்கையையும் தண்ணிக்குள்ளை தாழ்க்காட்டப் போறியளே..” என்றார்.

மாமா இன்னமும் சாப்பிடத் தொடங்கவில்லை. பிசைந்து கொண்டிருந்தார். மனைவியிடமிருந்து அவ் வார்த்தைகளை அவர் எதிர்பார்க்கவில்லை. கையில் வைத்திருந்த பீங்கானைச் சுழட்டி எறிந்தார். அது குசினிச் சுவரில் பட்டு துண்டுகளாய்ச் சிதறியது. நீளத்திற்கும் சோறும் கறியும் கொட்டுப் பட்டிருந்தன. காலடியில் கிடந்த அரிக்கன் லாம்பை காலால் உதைந்து விட்டார். அது சரிந்து விழுந்து உருள, உள்ளே நெருப்பு பக் பக் என்று சத்தமிட்டது. மாமி ஓடிவந்து அதனை நிமிர்த்தியபோது சடாரென எழுந்த சின்ராசு மாமா அவவின் தலைமயிரை கொத்தாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மாமியின் புறங்கழுத்தில் ஒன்றிரண்டு அடிகளும் விழுந்தன. மாமி பெருங்குரலெடுத்து “கொல்லுங்கோ, என்னைக் கொல்லுங்கோ” என்று குழறினா. மகன் ஓடிவந்து அவரைப் பிடித்து விலக்கினான். மாமி தொடர்ந்தும் அழுதபடியிருந்தார். மாமா கோபம் தாங்காது மூசிக்கொண்டிருந்தார்.

“நீ இவ்வளவு நாளும் திண்ட சோறு, போட்டிருக்கிற நகை, உடுத்த புடைவை எல்லாம் இந்தக் கடலின்ரை உப்புக்கையும் குளிருக்குள்ளையும் நான் கிடந்து உழல்ந்தபடியால தான் கிடைச்சதுதான். இப்ப கடல் உனக்கு கொலைகாரியாப் போச்சுது. கடலம்மா தாய்க்குச் சமானமடி. நம்பி வாற ஆரையும் கைவிடாது..”
சின்ராசு மாமா ஒருபோதும் வெறுமனே கடல் என்றது கிடையாது. கடலம்மா, அம்மா அல்லது சீதேவி என்பார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. சற்றுத் தள்ளி குடிமனைகளுக்குள் அய்யனார் கோயிலுக்கு அருகாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் அந்த வீட்டில் ஒருவிதமான கடல் வாசம் வீசிக்கொண்டேயிருந்தது. கேற்றைத் திறந்தவுடன் குப் என முகத்தில் அடிக்கிற வாசம்.

வலைகளுக்கு பொத்தல் போடுவதாயினும் ஈயக் குண்டுகளை கட்டுவதாயினும், அவித்துக் காயவிடுவதாயினும் வீட்டின் முற்றத்தில்தான் நடந்தன. “உந்த வலையளை கடற்கரை வாடியிலை வைச்சு பொத்தலாம் தானே” என்றால் மாமா சிரிப்பார்.

“எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு. இந்த வாசம் இந்த வீட்டுக்குள்ளை எப்பவும் இருக்க வேணும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னையும் ஒருநாள் மாமா கடலுக்கு அழைத்துச் சென்றார். நான் சின்ன வயதிலேயே நீந்தப் பழகியிருந்தேன். என்றாலும் மாரிகாலக் கிணறும் கேணியும் கடற்கரையின் தப்புத்தண்ணீருமென அது மட்டுப்பட்டிருந்தது. “தவளைதான்ரா கிணத்துக்கை நீந்தும்” என்று மாமா நக்கலடிப்பார்.

எனக்கு கடல் அச்சம் தந்தது. கடலின் சுழிகளைக் கேள்விப்பட்டிருந்தேன். சில சமயங்களில் கரைகளுக்கு சுழி வரும். அகப்பட்டால் ஆளைச் சுழற்றியடித்து உள்ளே அமுக்கி விடும். ஒரு முறை இதைச் சொல்லி “கடல் சனியன்” என்றபோது அருகில் நின்ற மாமா நாக்கைக் கடித்தபடி ஓங்கிக் குட்டினார். கடல் பரவாயில்லைப் போலயிருந்தது.

“கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்”

இம்முறை ஓர் அசட்டுத் துணிவில் நான் படகில் ஏறியிருந்தேன். கடல் அமைதியாக இருந்தது. பெரிய ஆழமில்லை. தாங்கும் கம்பை நீருக்குள் குத்தி அடி நிலத்தில் ஊன்றித் தள்ள படகு முன் நகர்ந்தது. அப்போது உண்டாகிற நீர் மேடுகளைத் தவிர்த்து பெரிய அலைகள் இல்லை. சிலர் ஐந்தரை முழக் களங்கண்ணிகளை நெஞ்சளவு உயரத் தண்ணீரிலேயே போட்டிருந்தார்கள். அவற்றில் தாக்காது மாமா லாவகமாக இரு பக்கங்களிலும் மாறி மாறி கம்பூன்றினார்.

“இப்பிடியே போனால், கடைசியில இந்த வள்ளத்தையும் வித்துப் போட்டு நானும் கரையிலதான் வலை விரிக்கோணும்.. இப்பவே இதை வித்துப் போட்டு கட்டுமரமொன்றை வாங்கலாமோ என்று யோசிக்கிறன். கைக்கெட்டும் துாரத்திற்குப் போறதுக்கு இது என்னத்துக்கு..”

நான் அமைதியாக இருந்தேன். துாரத்தே நேவிக்கப்பல் ஒன்று புகாரின் நடுவில் தெரிவது போல மங்கலாகத் தெரிந்தது. கடலில் இப்படியான ரோந்துகள் வழமையாகி விட்டிருந்தன. சின்ராசு மாமாவும் அதனை அவதானித்திருக்க வேண்டும். அவரிடமிருந்து ஆழ்ந்த மூச்சு வெளிப்பட்டது. “பிரேமதாசா எல்லாத்தையும் சரிப்பண்ணுவான் எண்டு நினைச்சிருந்தன். தலைகீழாப் பிரட்டிப் போட்டான். ”

களங்கண்ணிகளுக்கு அருகாக படகை நிறுத்திய மாமா நீருக்குள் இறங்கினார். “இறங்கடா” என்றார். நான் தயங்கிய படி நின்றேன்.

“உன்ரை வயசில நான் கடலில ரண்டு நாள் காணமல் போய் திரும்பியிருக்கிறன். அதுவும் இப்பிடித் தப்புத்தண்ணியில்லை. ஆழக்கடல். இந்தியன் நேவி எங்களுக்கு புது உடுப்பெல்லாம் தந்து கொண்டந்து விட்டாங்கள்.. ம். அதுவொரு காலம்..”

ஊன்றப்பட்டிருந்த களங்கண்ணிக் கம்பொன்றை படகிலிருந்த படியே பற்றிப் பிடித்து நான் மெதுவாக காலை வைத்தேன். “எப்பிடியும் இரண்டு பேரைத் தாழ்க்கும் ஆழம் இருக்கும்” இலேசாகக் குளிர்ந்தது. சமநிலை செய்வதற்காய் நீருக்குள் கால்களை உதைத்தபோது கால் விரல்கள் வலையின் கண்ணிகளுக்குள் சிக்கி மீண்டன. இடுப்பின் அரைப்பகுதி எரியத் தொடங்கியது. கொஞ்ச நாட்களாக வட்டக்கடி மாதிரியென்னவோ அங்கு பரவியிருந்தது. விறாண்டி விறாண்டி புண்ணாக்கி வைத்திருந்தேன். “இந்த மீன்களைச் சாப்பிடுவதில்லை” என்று நினைத்துக் கொண்டேன்.

சின்ராசு மாமா களங்கண்ணிக் கூட்டிலிருந்த ஒரு முனையின் கம்பைப் பெயர்த்தெடுத்து வந்து என்னிடம் பிடித்துக் கொள்ளச் சொன்னார். நான் பிடித்து நின்ற கம்போடு அதனை அணைத்துப் பிடித்துக் கொண்டேன். லேசாக ஆடுவதைப் போலிருந்தது. கடற்பாசிகளும் கஞ்சல்களும் உடலைத் தொட்டுப் போயின. அரியண்டமாயிருந்தது. மாமா மற்றைய கம்புகளையும் பெயர்த்து ஒன்றாக அணைத்துக் கொண்டு வந்தார். கண்ணியின் வட்டப்பரப்பு ஒடுங்கி வந்தது.

நான் படகில் ஏறி ஒன்றாய்ச் சேர்ந்த கம்புகளைின் மேல் நுனியைக் கட்டிப்பிடித்தபடியிருந்தேன். சட்டென்று நீருக்குள் மூழ்கியவர் கம்புகளின் அடிமுனையை பிடித்தபடி தலையைச் சிலுப்பிக் கொண்டு மேலெழுந்தார். “ஹே” என்று சத்தமிட்டபடி துாக்கி படகில் போட்டார். வலைக்குள் வெள்ளி வெள்ளியாக மீன்கள் துடித்தபடியிருந்தன. பெரிய பாடில்லை. சிறிய மீன்கள்.

நேவிக்கப்பல் நீண்ட துாரம் பயணித்திருந்தது. “பெரும் மீன் கடல் முழுக்க அவன்தான் திரியிறான்” என்றார் மாமா. கரைக்கு வேகமாகப் படகு நகர்வதைப் போல் தோன்றிற்று. கம்பு ஊன்றிய போது, வயர்களால் பின்னப்பட்டிருந்த பையிலிருந்த போத்தல் கள்ளை மாமா அப்படியே கவிழ்த்துக் குடித்ததை நான் கண்டேன். மாமா தொழிலின் போது கள்ளுக் குடிப்பது இது முதற்தடவையெனத் தோன்றியது.

நிலைமைகள் நாளும் நாளும் மோசமாகத் தொடங்கியிருந்தன. கடலில் எப்பொழுதும் ஒன்றிரண்டு நேவிக்கப்பல்கள் தரித்து நிற்கத் தொடங்கின. நேவியை உச்சிவிடலாம் என உசரப்போன ஒன்றிரண்டு பேர் திரும்பி வரவேயில்லை. பரன் அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து ஆறேழு மாதங்களே ஆகியிருந்தது. நிலவற்ற ஒரு இரவில் அவர் அப்படி ஆழக்கடலுக்குப் போனார். திரும்பி வரவில்லை. அன்றைய இரவில் கடலில் வெடிச்சத்தங்கள் கேட்டிருந்தன.

kadalஅழுது வடிந்து வீங்கிய முகத்தோடு அவரது மனைவி புவனா அக்கா ஒவ்வொரு காலையும் கடற்கரைக்கு வந்து நிற்பார். கடற்கரை மணலில் அவர் கால்களை நீட்டி உட்கார்ந்து விக்கி விக்க அழுவதைப் பார்க்க அந்தரமாயிருந்தது. அப்போது அவர் பிள்ளைத்தாச்சியுமாயிருந்தார். “பிள்ளை,  உனக்காக இல்லாட்டியும், வயித்தில வளருகிற பிள்ளைக்காக எண்டாலும் ஒரு வாய் சாப்பிடு” என்று அவரது அம்மா சாப்பாட்டை நீட்டியபோது புவனா அக்கா கையால் வீசித்தட்டி விட்டார். கோப்பை கவிழ்து கடற்கரை மணலில் கொட்டுப்பட்டது. சற்று நேரம் அதையே வெறித்தபடியிருந்த புவனா அக்கா பிறகு என்ன நினைத்தாரோ, வெறி கொண்டவரைப்போல கொட்டிக் கிடந்த சோற்றை எடுத்து அவுக் அவுக் என விழுங்கினார். கடலைத் திரும்பியும் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடி வீட்டுக்கு ஓடினார். மூன்றாவது மாதம் ஆண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். அதனை கடலே இல்லாத ஊரில் வைத்து வளர்க்கப்போவதாக ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருந்து புவனா அக்கா சத்தமிட்டார்.

கடலில் தினமும் சண்டைகள் என்றானது. கரையில் நின்று பார்க்கும் போது, பீரங்கிகளும் தெரிகிற தெளிவில் நேவிக் கப்பல்கள் அண்மித்தாக நின்றன. போராளிகள் மண்மூடைக் காவலரண்களை கடற்கரையெங்கினும் அமைத்தார்கள். இரவு பகலென்று சென்ரிக்கு நின்றார்கள்.

ஒருநாட் காலை எவரையும் கடலுக்கு இறங்க வேண்டாம் என்று தடுத்தார்கள். நீண்ட வாகனங்களில் கூர் மூக்குகளைக் கொண்ட படகுகளைக் கொண்டு வந்து கரையினில் இறக்கினார்கள். தனியாக எடுத்துவந்த பீரங்கிகள் படகுகளில் பொருத்தப்பட்டன. போராளிகளின் பாட்டும் கூத்தும் கும்மாளமுமாக கடற்கரை நிறைந்திருந்தது. செய்தி ஊருக்குள் பரவி சனங்கள் வந்திருந்தார்கள். சின்ராசுமாமா வாடிக்கு வெளியில் போட்டிருந்த நீண்ட பனங்குற்றியில் இருந்து பார்த்தபடியிருந்தார். கரும்சட்டை போட்ட இரண்டு இளைஞர்கள் தம் வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி அவரைக் கடந்து போனார்கள். கடலில் கால்நனைத்து விளையாடினார்கள்.

வோக்கிகள் இரைந்து இரைந்து பேசின. பிறகு கரையிலிருந்து நான்கைந்து படகுகள் நீரைக்கிழித்தபடி விரைந்தன. கடைசியாகப் புறப்பட்ட படகில் கருஞ்சட்டை இளைஞர்கள் இருவரையும் சின்ராசு மாமா கண்டார். அவர்கள் திரும்பிக் கையசைத்தார்கள். தன்னையுமறியாமல் அவர் மெதுவாகக் கையசைத்தார். பெரும் ஈயக்குண்டு ஒன்றை தொண்டைக்குள்ளால் நெஞ்சுக்குள் இறக்கியதைப் போலவிருந்தது.

கடலினில் வெடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. “காங்கேசன்துறையில இருந்து வெளிக்கிட்ட கப்பலை மறிச்சு அடிக்கிறாங்கள்” என்று யாரோ சொன்னார்கள். கடலின் அடி ஆழத்தில் மங்கலாகத் தெரிந்த நேவிப்படகு வழமையை விட வேகமாக நகர்வதாகத் தோன்றிற்று. திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

சற்று முன் தன்னைக் கடந்து போனவர்களுக்கு மகனின் வயதை விட ஒன்றிரண்டு வயதுகளே அதிகமிருக்கும் என சின்ராசு மாமாவிற்குத் தோன்றிய போது உடல் அசைந்து திடுக்கிட்டது. எழுந்து விறு விறு என வீட்டுக்கு நடந்தார். “நீ இனிக் கடலுக்கை வரவேண்டாம். நானும் போறதாயில்லை.” என்று மகனிடம் சொன்னார்.

அப்பொழுது கிளாலிப் படகுச் சேவை நடந்து கொண்டிருந்தது. கொம்படி, ஊரியான், ஆனையிறவு, கேரதீவு பூநகரிப் பாதைகள் மூடப்பட்டிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனங்கள் கிளாலிக் கடனீரேரியைக் கடந்து கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் கொழும்பிற்கும் போய் வந்தபடியிருந்தனர். மீன்பிடிப் படகுகளே சேவையில் ஈடுபட்டிருந்தன. எஞ்சின் பூட்டிய ஒரு படகின் பின்னால் ஐந்தாறு படகுகளை கயிற்றால் தொடுத்துச் சனங்களை ஏற்றினார்கள். கடலில் நேவியின் அசுமாத்தம் தெரிந்தால், தொடுவைப் படகுகளுக்கான இணைப்புக் கயிற்றை வெட்டிவிட்டு எஞ்சின் படகு ஓடித்தப்பிவிடும் எனக் கதை இருந்ததால் சனங்கள் முதலாவது படகிலேயே ஏற அடிபிடிப் பட்டார்கள். பூநகரியிலிருந்தோ ஆனையிறவிலிருந்தோ புறப்படுகிற நேவிப்படகுகள், கிளாலிக் கடலில் சனங்களை வெட்டிப்போட்ட சம்பவங்களும் நடந்திருந்தன.

சின்ராசுமாமா இன்னொரு படகும் எஞ்சினும் இருந்தால் கிளாலி ஓட்டம் செய்யலாம் என நினைத்தார். ஏகப்பட்ட கடன் ஏற்கனவே இருந்தது. வலைகளை விற்றார். மாமி மிச்சமுள்ள நகைகளையும் விற்றார். மண்ணெண்ணெய்க்குப் பழக்கப்பட்ட எஞ்சின் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது.

கிளாலியில் பயணச் சேவையை போராளிகளின் வருவாய்ப் பகுதியினர் நிர்வகித்தனர். சின்ராசு மாமா ஓடவேண்டிய தினங்களும் நேரங்களும் அவர்களால் வழங்கப்பட்டன. வேறும் நான்கு படகுகளை அவர்கள் தொடுவையாக இணைத்தனர்.

நன்றாய்ப் பொழுது சாய்ந்த இரவு சின்ராசு மாமா முதற்பயணத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு படகிலும் பதினைந்துக் குறையாமல் ஆட்கள் இருந்தனர். மாமா படகினில் செருப்புப் போடுவதில்லை. பயணிகள் அப்படியிருந்தது மாமாவிற்கு என்னமோ போலிருந்தது. கடலிலோ படகிலோ செருப்பணிந்த யாரையேனும் காண நேரும்போது கடல் மாதாவைக் காலால் உதைப்பதைப்போன்றதொரு சித்திரம் அவர் மனதிற்குள் ஓடியது. “சனத்திற்குப் பிளேனில போறதெண்ட நினைப்பு”

“எவ்வளவு நேரத்தில போவீங்கள்,” என்று இளைஞன் ஒருவன் கேட்டான். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உள்ளுக்குள் அவனைத் திட்டினார். “தம்பி, இப்பிடியான பயணங்களுக்கு நேரம் கேட்கக் கூடாது, என்ரை சக்திக்கு உட்பட்டு நான் உங்களை கரையில கொண்டுபோய்ச் சேர்ப்பன்.”

பயணம் பெரிய கஸ்டமாகத் தெரியவில்லை. நேவியின் அசுமாத்தம் இல்லாத நாட்களாயிருந்தன. நட்சத்திரங்களைப் பிடித்து மாமா படகை ஓட்டினார். உப்புத்தண்ணீர் உடலில் படாத ஒன்றை கடல்தொழில் என அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருப்தியின்மை தொடர்ந்தபடியிருந்தது. ஆயினும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தொடங்கியிருந்தார்.

ஒரு நாள் வந்தது. காலம் பூராகவும் அவரது துாக்கத்தைக் கெடுத்துத் திடுக்கிட வைத்து உடல் வியர்க்க மூச்சு வாங்குகிற நாள். மூன்று நாட்களுக்கு முன்பாக படகில் சனங்கள் ஏறிபடியிருந்தார்கள். சின்ராசு மாமா அவர்களுக்கு ஷொப்பிங் பைகளை விநியோகித்த படியிருந்தார். “சத்தி வந்தா தலையைக் குனிஞ்சு இதுக்குள்ளை எடுங்கோ, போட்டுக்குள்ளயோ மற்றாள் பாக்கக் கூடியமாதிரியோ எடுத்துப் போட வேண்டாம். பிறகு மற்றாட்களுக்கும் வரும். பக்கத்தில இருக்கிறவரை தலையைப் பிடிச்சுக் கொள்ளச் சொல்லுங்கோ.. சரியாப் போடும்.”

பதினாறு படகுகள் புறப்பட்டுச் சென்றன. மாமா ஸ்ரார்ட் செய்தார். தண்ணீரை கைகளால் கோலி அள்ளிக் கொஞ்சம் குடித்து நெற்றியிலும் தலையிலும் தடவி “கடலம்மா” என்றார். படகு புறப்பட்டது. பத்து நிமிடம் ஆகியிருக்காது, கரையில் ரியுப் லைட் வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிந்தன. கடலைக் கிழித்தபடி இரைச்சலோடு வந்த போராளிகளின் “குருவி”ப் படகொன்று மெதுவாகி சமாந்தரமாக நின்றது. “நிப்பாட்டுங்கோ, பூநகரி நேவி கடலுக்கை இறங்கிட்டான். போட்டை உடனை கரைக்குத் திருப்புங்கோ. நாங்கள் முன்னுக்கு போன போட்டுகளை நிப்பாட்டித் திருப்ப வேணும்.” என்று விட்டு மீண்டும் வேகமெடுத்து இருளுக்குள் மறைந்தது.

படகிலிருந்த சனங்கள் குளறத் தொடங்கினார்கள். இறுதித் தொடுவைப் படகிலிருந்து அழுகை ஓலம் கிளம்பியது. “ஒருத்தரும் பதட்டப்படவேண்டாம். கரையிலதான் நிக்கிறம்” என்றார் சின்ராசு மாமா. ஒரு அரை வட்டமடித்து படகுகளைத் திருப்பினார். உடல் குளிர்ந்து விறைப்பதைப் போலத் தோன்றிற்று. பதினாறு படகுகளில் நுாற்றுக்கணக்கான சனங்கள் கடலுக்குள் இறங்கியிருந்தார்கள்.

அவர் ஷொப்பிங் பைகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது அணித்தாகச் சென்ற இரண்டாவது தொடுவையில் தாயின் மடியில் ஸ்வெட்டர் உடுப்பும் தொப்பியும் அணிந்திருந்த குழந்தையொன்று மெதுவாக அவரைப் பார்த்து சிரித்தது. சின்ராசு மாமாவின் வெண்ணிறத்தாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். அதன் சிரிப்பில் மனது இலேசாவதைப் போன்றதொரு உணர்வை அவர் அனுபவித்தார். தாடியைத் தடவிவிட்டுச் சிரித்தார். “மாமாக்கு டட்டா சொல்லு..” என்று தாய் சொன்ன போது பிஞ்சுக் கைகளை அது மெதுவாக ஆட்டியது. சின்ராசு மாமா தன்னையுமறியாமல் கைகளை அசைத்தார்.

பதினாறு படகுகளில் நான்கு நேவியிடம் சிக்கிக் கொண்டன. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மூன்று நான்கு தொடுவைகள் இருந்தன. காலையில் இருந்தே கடற்கரை அதகளப்பட்டது. உடலங்களை அலை கிளாலிக்கும் மறுகரையான நல்லுாருக்கும் மாறி மாறிச் சேர்த்தது. அவைகளில் மருந்திற்கும் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருக்கவில்லை. வாள் வெட்டுக்கள். கையிலும், முகத்திலும், நெஞ்சிலுமாக உடலைப் பிளந்த கோடு கோடான வெட்டுக்கள். மணிக்கட்டுக்களில் கைகள் துண்டாக்கப்பட்டிருந்தன. சின்ராசு மாமா கரைமணலில் தன்போக்கில் நடந்தார். காலடியில் அச்சம் உறைந்த வெறித்த கண்களோடு சடலங்கள் கிடந்தன. நுாற்று நாற்பத்து நான்கு சடலங்கள்!

புலிகளின் குரலில் செய்தியறிந்து சிந்தாமணி மாமியும் மகனும் கடற்கரைக்கு வந்திருந்தார்கள். சிதைந்த உடலங்களைப் பார்த்த மாமி ஓங்காளித்துச் சத்தி எடுத்து தலையைப் பிடித்தபடி ஓரிடத்தில் உட்கார்ந்தார். மகன் பேயறைந்தவனைப் போல நின்றான். அவனைக் கூட்டிக்கொண்டு உடனே வீட்டுக்குப் போகும்படி மாமா வற்புறுத்தினார்.

“உந்தத் தொழிலும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். நாங்கள் பிச்சை எடுத்துச் சாப்பிடலாம். நீங்கள் வாங்கோ”

“வருவன், வள்ளத்தை எடுத்துக் கொண்டு வாறன், நீ போ, வாறன். ஒண்டும் நடக்காது. நீ போ”

மூன்றாவது நாள், படகுகள் வழமைபோல ஓடத்தொடங்கின. சனங்களால் கடற்கரை நிறைந்திருந்தது. வேறு வழியிருக்கவில்லை. சின்ராசுமாமா கடலில் இறங்கினார். இரண்டு தொடுவைகளிலும் சேர்த்து நாற்பது பேரளவில் இருந்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இறுகியிருந்தார்கள். அவ்வப்போது நெஞ்சில் கை வைத்து வேண்டிக் கொண்டார்கள். பாதிரியார் ஒருவர் கைகளில் செபமாலை வைத்து செபித்தபடியிருந்தார். அமைதியைக் குலைத்தபடி குழந்தையொன்று வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சிலர் முகங்களில் கலவரம் படர்ந்ததை சின்ராசு மாமா கண்டார்.

“என்ரை குஞ்செல்லே, அழாதயணை.. அப்பாட்டையெல்லே போறம். அழப்படாது.” குழந்தை மீண்டும் துாங்கிப் போனது.

நல்ல நிலவிருந்தது. அதன் ஒளி, உயரும் அலை மேடுகளில் பட்டு வெளிச்ச நடனம் புரிந்தது. சின்ராசு மாமா நேரத்தைப் பார்த்தார். இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள் நல்லுார்க் கரையை அடைந்து விடலாம். சற்று வேகப் படுத்தினார். “டக்” என்று என்னவோ முன் அணியத்தின் கீழே முட்டுப்பட்டது போலத் தோன்றியது. முன்னர் தொழிலுக்கு பெருங்கடலுக்குச் செல்கிற சமயங்களில் சற்றே பெரிய சுறாக்கள் படகில் முட்டுப்பட்டு ஓடும்போது இப்படிச் சத்தம் கேட்பது வழமை. ஆனால் மாமாவின் உள்ளுணர்வு அது சுறா இல்லை என்று சொல்லியது. வேகத்தை மெதுவாக்கினார். அருகிருந்த சக ஓட்டியிடம் எஞ்சினின் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பதட்டத்தை வெளிக்காட்டாமல் அணியத்தை நோக்கி நடந்து கீழே பார்த்தார்.

அப்படியே தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. படகின் விளிம்பில் கைகளை ஊன்றித் தாங்கிக் கொண்டார். எல்லாமே இருண்டு போவதாகத் தோன்றியது. சுதாகரிக்கப் படாத பாடு பட்டார்.

கீழே ஒன்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றின் கால்கள் வெட்டப்பட்ட சடலம் தண்ணீரில் அணியத்தின் வெளிப்புறத்தோடு அணைந்திருந்தது. அதன் அறுணாக் கயிறு ஆணியொன்றில் மாட்டியிருக்க படகு சடலத்தைத் தள்ளியபடி முன்னேறியது. குழந்தையில் வெள்ளை பாய்ந்திருந்தது. அறுணாக் கொடியில் வெள்ளிக் கூடொன்றிருந்தது. கால்கள் இல்லை. வெட்டிய இடத்தில் இரத்தம் கழுவுப்பட்டு வெள்ளைத் தசைகள் பிய்ந்து தண்ணீரில் இழுபட்டன. முகம், சிரித்துக் கொண்டே செத்ததைப் போலிருந்தது. அன்றைக்கு கையசைத்துச் சென்ற ஸ்வெட்டர் போட்ட குழந்தையின் நினைவுகள் அலைகளாய் திரண்டன. அது என்னானதோ..

மாமா படகில் சனங்களைப் பார்த்தார். ஆளையாள் வெறித்தபடியிருந்தார்கள். மெதுவாக விளிம்பில் நெஞ்சை அழுத்திக் குனிந்து கைகளால், மாட்டியிருந்த அறுணாக்கயிற்றை எடுத்து விட்டார். அழுகை உடைத்துக் கொண்டு வந்துவிடுமாற் போல இருந்தது. குழந்தையை படகினின்றும் துாரத்தே தள்ளிவிட்டார். அருகிருந்தவர்கள் என்ன என்பதைப் போல பார்த்தார்கள். “கடற்பன்றி” என்று பொய் சொன்னார்.

எஞ்சினருகில் வந்து உட்கார்ந்து படகை இலேசாகத் திருப்பியபோது துாரத்தே அவருக்கு இடதுபுறமாக குழந்தை மிதந்து கொண்டிருந்தது. அன்றைக்கு இரவு சினிராசு மாமாவிற்கு காய்ச்சல் வந்தது.

மாமா வீட்டிற்கு வந்தார். யாரோடும் முகம் கொடுத்துப் பேசாது தன் போக்கில் திரிந்தார். சோம்பிக் கிடந்தார். ஒரு கனவில் இருளில் எல்லாப்பக்கமும் விரிந்த கடலின் நடுவே கட்டுமரமொன்றில் மாமா தனித்து விடப்பட்டிருந்தார். பிரகாசமான நிலவொளி தண்ணீரில் தெறித்தது. ஆனால் மேலே நிலவில்லை. அது ஏன் என்று யோசித்தபடியிருந்தார். அப்பொழுது துாரத்தே குழந்தையொன்று தண்ணீரில் மிதந்து அவர் அருகில் வந்தது. அது கண்களை மூடித் துாங்குவதைப் போலிருந்தது. மாமா அதன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அது சிரித்தது. கன்னத் தசைகளை விரித்து நன்றாகச் சிரித்தது. ஆனால் செத்துப் போயிருந்தது.

மாமா திடுக்குற்று விழித்தார். உடல் வியர்த்துக் கொட்டியது. எழுந்து சிகரெட்டைத் தேடினார். வெறும்பெட்டிதான் சட்டைப்பையில் இருந்தது. பழைய பீடியொன்றைத் தேடிப் பற்றவைத்தார். வெளியே வந்து இருட்டினில் அமர்ந்து கொண்டார். சிந்தாமணி மாமியும் எழுந்து வந்து ஆறுதலாக தலையைத் தடவினார்.

“என்னய்யா..”

“நான் இனி கிளாலியில ஓடேல்லை. நாளைக்கு போய் போட்டை எடுத்தரலாம் எண்டு நினைக்கிறன். எங்கடை கடலிலயே கரையில எதையாவது செய்யலாம்.”

அடுத்த நாள் காலை பூநகரியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் கிளாலியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். புலிகள் தொடர்ந்தும் எதிர்த்தாக்குதலை நடாத்துவதாக புலிகளின் குரலும், கைப்பற்றிய பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பணிகளில் இராணுவம் ஈடுபடுவதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையும் செய்தி சொல்லின. சின்ராசு மாமா இடிந்து போய் உட்கார்ந்தார். அவரது எஞ்சினும் வள்ளமும் இரண்டு லட்சமாயினும் பெறுமதியாயிருந்தன.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், கிளாலியைக் கைப்பற்றியிருந்த படையினர் விரட்டியடிக்கப்பட்டனர் எனக் காலைச்செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே சின்ராசுமாமா கிளாலிக்குப் புறப்பட்டார். கிளாலி எரிந்து கொண்டிருந்தது. கரை முழுவதும் இராணுவச் சடலங்கள்; கடலுக்கென்ன, அது எல்லாச் சடலங்களையும் கரை சேர்க்கிறது.

ஓலையால் வேயப்பட்டிருந்த பயண அலுவலகங்கள், சனங்கள் இளைப்பாறும் கொட்டில்கள் எல்லாம் எரிந்து கருகியிருந்தன. படகுகளிலிருந்தும் கைவிடப்பட்ட வாகனங்களிலிருந்தும் புகையெழுந்தபடியிருந்தது. சின்ராசு மாமாவின் உள்ளுணர்வு அவரது ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. நடை தளர்ந்து கால்கள் துவண்டன. கைகளால் பின்னங்கழுத்தைப் பொத்தி வானத்தைப் பார்த்தவாறு முழங்கால்களை மணலில் ஊன்றி விழுந்தார்.
துாரத்தே, ஒரு சிறிய தென்னை மரத்தின் கீழே, சிந்தாமணி, எப்போது பார்த்தலும் கல்யாணக் காலங்களை நினைவுறுத்துகிற அவரது படகு கருகிய எலும்புக் கூடாக கவிழ்ந்திருந்தது. சின்ராசு மாமா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.

அன்றிலிருந்து மாமா ஒடுங்கிப்போனார். கரைவலை வீச்சு, துாண்டில், களங்கண்ணியென்று போவதையும் நிறுத்தினார். எல்லா வருத்தங்களும் வந்து சேர்ந்தன. கண்கள் உள்ளிழுத்து, தோல்கள் சுருங்கி முதுமையின் கோடுகள் சீக்கிரமாகவே அவரை ஆக்கிரமித்தன. கள்ளைக் குடித்துவிட்டு “நான் செத்தபிறகு, நீங்கள் என்ன செய்வியளோ தெரியாது. என்ரை சாம்பலை இந்தக் கடலில கரைக்கோணும். அதுவும் கரையில இல்லை. நல்லா உசரப்போய்.. கரை மறைஞ்ச கடலில கொட்டோணும்”

மாமா சின்னச்சின்ன கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியிருந்தார். பழக்கமேயில்லாத தொழில்கள். தேங்காய் உரிக்கப் போனபோது உள்ளங்கையை அலவாங்கு குத்திக் கிழித்திருந்தது. விறகு வெட்டினார். வலதுகாற் பெருவிரல் நகத்தை கோடாலி கொண்டு போனது. குடும்பத்தைக் கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக இருந்தது. கடன்காரர்கள் நெருக்கினார்கள். “நிலமைகள் சரிவரட்டும், இன்னும் தெம்பிருக்கு. கடலுக்குப் போவன்.” அன்று அவர்களுக்குச் சொன்னார்.

சிந்தாமணி மாமி சந்தைக்கு மீன் விற்கப் போனார். சொரியலாக வாங்குகிற மீன்களை இரண்டு மண்ணெண்ணெய் பரல் மூடிகளில் பரப்பி சந்தையில் நாள் முழுதும் உட்கார்ந்திருந்தார். எல்லாம் ஒரு சாணுக்குள் அடங்குகிற சின்ன மீன்கள். பெரிதாக யாவாரம் ஆகவில்லை. பழைய நினைவுகள் அவரை வாட்டியெடுத்தன. கல்யாணமான காலம், சின்ராசு மாமா கடலால் மீண்டு வீட்டுக்குள் நுழையும் தோற்றம் எப்போதும் ஒரேமாதியிருந்தது. ஒரு கையில் பெரிய பாலை மீனின் வாலைப்பிடித்துத் துாக்கியவாறு சாரத்தின் ஒரு முனையைத் துாக்கி வாயில் கடித்தபடி அவர் நுழைவார். மாமி தனக்குள் சிரித்துக் கொள்வார். “அய்யனார்தான்”

“இதென்ன, சாறத்தைத் துாக்கிக் காட்டினபடி வாறியள், தெருவால பெண் பிரசுகள் திரியிறேல்லயே..”

“நானென்ன செய்ய..? வாழ்க்கையில அரைவாசிக் காலம் பென்ரரோடையே வாழ்ந்திட்டன். உடம்பில துணி நிற்குதில்லை. நீ இரவில…” மாமி தனது கைகளால் மாமாவின் வாயைப் பொத்துவார். “வெட்கம் கெட்ட மனுசன்..”
அதுவொரு காலம்;

சந்தையில் பெரிய வருமானம் கிடைத்ததில்லை. சாப்பாட்டுச் செலவுகளுக்குப் போதுமாயிருந்தது. மாமா எப்போதாவது கடற்கரைப் பக்கம் வந்து போவார். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பிவிடுவார். அவர் பிரேமதாசாவிற்குப் பிறகு இரண்டு பேரை நம்பியிருந்தார்.

“சந்திரிக்கா என்ன இருந்தாலும் ஒரு பொம்பிளை, ஒரு தாய், கஸ்ரம் தெரிஞ்சவள். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டி, கடலைத் திறந்து விடுவாள். காலம் வரும்”

“ரணிலைப் பார்க்கவே படிச்ச களை தெரியுது. அதிர்ந்து கதைக்கத் தெரியாத ஆள்ப்போல கிடக்கு. சனங்களின்ரை கஸ்ரத்தை தெரிஞ்சு வைச்சிருப்பான். இந்த நாட்டின்ரை முன்னேற்றம் எங்களை மாதிரியான ஆட்களின்ரை கையிலதான் இருக்கென்று அவனுக்குத் தெரியும். மகன் வாத்தி வேலை கிடைக்குமெண்டு கம்பசுக்குப் போறான். நிலைமை சரிவருமென்றால் படிச்சு முடிய கடல் தொழிலுக்குத்தான் அவனை அனுப்புவன். வழியொன்று வரும்.”

கடைசியாக மகிந்த ராஜபக்ஷ கடல்வலயத் தடைச் சட்டத்தைச் சற்றுத் தளர்த்தி, மட்டுப்பட்ட அளவில் மீன்பிடிக்கான அனுமதியை வழங்கினார்.

0 0 0
மேற்படி கதை முடிந்துவிடவில்லை. அதனை எங்கு முடிப்பதென பிரதியாளருக்குக் குழப்பம் இருந்தது. எப்படி முடிப்பதென்பதிலும்,

வரவேற்று உபசரித்த ரசிகர்கள் திருப்தியுற காலம் முழுதும் எழுத்துாழியம் செய்வது ஒரு இலக்கிய நெறியாகி விட்ட காலத்தில் யாரைத் திருப்தியுறச் செய்வதென்பதில் தெளிவிருக்கவில்லை. போகட்டும், தன் சொந்த அரசியலுக்கு ஏற்ப முடித்துவிடலாம் என நினைத்தால் அண்மையில்தான் தனக்கான அரசியல் நீக்கச் சடங்கினை வேறு முடித்திருந்தார். ஒரு நல்ல நடுநிலையாளருக்கு எது அழகு என குப்புறப்படுத்து யோசித்ததில் ஒன்று (ஒன்றல்ல மூன்று) புலப்பட்டது. அதன்படியாக இந்தப் பிரதி மூன்று இடங்களில் முடிக்கப்படுகிறது. ஒரேயொரு இடத்தில் முடிகிறது.

0 0 0
1
கடற்கரையின் சோதனைச் சாவடியில் சின்ராசு மாமா வரிசையில் நின்றார். இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் பெயர் முகவரிகளைப் பதிந்து அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டனர். எதிரே கடல் விரிந்திருந்தது. அன்றொருநாள் அதன் கரைவழியே நடந்த கரும் சட்டை இளைஞர்களின் சிரித்த முகங்கள் நினைவுக்கு வந்தன. அவர்களது மூச்சுக் காற்றும் உடலும் கலந்த கடல்.. “அவர்களின்.. கனவு..”
மாமாவின் முறை வந்தது. சிப்பாய் கையை நீட்டி, “ஐடென்ரி காட்” என்றான். அந்தக் கை..! பரனைச் சுட்ட கை, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னாலும் மறக்க முடியாத குழந்தையை துாக்கி வெட்டிய கை.. இரத்தம் வழிகிற கை.. பிசாசின் கை..

சின்ராசு மாமா அடையாள அட்டையைக் கொடுக்கவில்லை. வரிசையினின்றும் விலகி “இல்லை, நான் கடலுக்குப் போகேல்லை. போக மாட்டன்” என்று விட்டு விறு விறு எனத் திரும்பினார். “தமிழன், பச்சைத் தமிழன்.. என்ரை கடலில இறங்க நீங்கள் ஆர் பெர்மிஷன் தர… மாட்டன். அப்பிடியொரு பெர்மிஷன் எனக்கு வேண்டாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனைக்க மாட்டன்.” வைராக்கியத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டார். அதற்கடுத்த மூன்றாவதோ நான்காவது வாரத்தில் சின்ராசு மாமா செத்துப் போனார்.

2
கடற்கரையெங்கும் மீனவர்கள் திரண்டிருந்தனர். சின்ராசு மாமா தன் பேரனின் கையில் செங்கொடியொன்றைக் கொடுத்து மேடையில் நிறுத்தியிருந்தார். மாமாவின் உடல் தளர்ந்திருந்தாலும் குரலில் நடுக்கமிருக்கவில்லை. “மீனவத்தோழர்களே, இன்றைக்கு இந்தக் கடற்கரையில் இருந்த அதிகார ராணுவத்தினரை கற்களால் எறிந்தே நாம் கலைத்தோம். நாம் இத்தோடு நிறுத்தப் போவதில்லை. சிங்கள சீன ரஷ்ய கியுப மீனவர்களையும் திரட்டி உலகம் தழுவிய கூட்டுப் புரட்சியை ஏற்படுத்தி – நமக்கான கடலை, நமக்கான வயலை, நமக்கான தொழிற்சாலைகளை, நமக்காகப் பெறுவோம். தோழர்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்த இராணுவச் சாவடிக்கு கற்களால் எறிந்தது போல, அன்றைக்கு இந்தக் கடற்கரையை ஆக்கிரமித்து நின்ற புலிகளையும் துரத்தியிருந்தால் நாம் இத்தனை துன்பப்பட்டிருக்கத் தேவையில்லை. மேலும் தோழர்களே நமது எதிரி இன்றைக்கு ஓடிய இராணுவத்தினர்கள் அல்ல. அவர்கள் வெறும் கருவிகள். கருவிகளை இயக்குகின்ற கயிறுகள் முதலாளிகளின் கைகளில் இருக்கிறது.”
அப்பொழுது எல்லோரும் அந்த ஊரின் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். அவர் வீட்டுக்கு கல் எறியத் தொடங்கினார்கள்.

3
“ஐடென்ரிகாட் தாங்க” என நீட்டிய சிப்பாயின் கையை சின்ராசு மாமா வாஞ்சையுடன் பற்றிக் கொண்டார். “புத்தா, நெஞ்சில் கை வைத்துச் சொல்கிறேன். இலங்கையில் மனிதாபிமானம் மிக்கவர்கள் எவரென்றால் அது நீங்களே.” என்று அவனுடைய கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். சிப்பாய் சிரித்தான்.

சின்ராசு மாமா வரிசையில் நின்றவாகளைப் பார்த்து மேலும் சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்கிறேன், கேளுங்கள். இன்றைக்கு இலங்கை மாதாவின் இந்தப் பிள்ளைகள், நம்மைக் கடலுக்குப் போய் வாருங்கள் என அனுப்புகிறார்கள். ஏன் அப்படியொரு வாய்ப்பை புலிகள் நமக்குத் தரவில்லை.. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது வெள்ளாளர்கள் கடல் தொழிலுக்குப் போவதில்லை என்பது மட்டுமே. வயல் நிலங்களைப் பாதுகாத்த புலிகள் கடலைப் பாதுகாக்கத் தவறியதன் பின்னாலிருக்கிற சாதி அரசியல் இதுதான்.

இன்று அந்த வாய்ப்பை நமக்கு இந்தப் பிள்ளைகள் தந்திருக்கிறார்கள். நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கே எல்லோரும் பாடுங்கள், “நமோ நமோ தாயே, நம் சிறிலங்கா.. நல்லெழில் சீரணி, நலங்கள் யாவும் நிறை மாமணி.. லங்கா.. ”

எல்லோரும் பாடினார்கள். இராணுவத்தினர் கைதட்டினார்கள்.

0 0 0
பெரிய வரிசையில்லை. அழுக்கடைந்த பெனியனும் மடித்துக்கட்டிய சாரமும் கட்டி சின்ராசு மாமா வரிசையில் நின்றார். காலை எட்டுமணிக்கெல்லாம் சாவடியைத் திறந்து தொழிலுக்கு அனுமதிக்கிறார்கள். பொழுது சாய்வதற்குள் கடற்கரையை விட்டு வெளியேறிவிட வேண்டும். இரவுத் தொழிலுக்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

“ஐடென்ரி காட்” கூட்டுக்குள் இருந்தவனுக்கு மகனின் வயதுகள் வரும். கொடுத்தார்.

“என்ன செய்யிறது..” என்று அவன் கேட்டான். மாமாவிற்கு சரியாக விளங்கவில்லை. அவனுக்கு அருகாக முகத்தைக் கொண்டுபோய் “என்ன.. சேர்..” என்றார்.

“என்ன தொழில் செய்யிறது..” அவன் குரலை உயர்த்தியது அச்சமூட்டுவதாய் இருந்தது. மாமாவின் உடல் ஒருதடவை அசைந்து திடுக்கிட்டது. அவருக்கு பின்னால் நின்றவரைச் சுட்டினார். “இவர் பதினைஞ்சு முழக் களங்கண்ணி போட்டிருக்கிறார். இவரோடை உதவி ஒத்தாசைக்குப் போறனான் சேர்.” நேற்றும் சொல்லியிருந்தார்.

“சரி, பின்னேரம் வரும்போது ஐடென்ரி கார்ட்டை எடுக்கணும்”

மாமா நடந்தார். பின்னால் வந்தவனும் இவரோடு இணைந்து கொண்டான். சின்ராசு மாமா அவனது கையைப் பிடித்து யாரும் வருகிறார்களா எனப் பார்த்தார். சற்றுத் தயங்கினார். பிறகு “தம்பி, நிலவில்லாக் காலம்தானே, என்ரை மனசு, நல்ல பாடிருக்கும் என்றுதான் சொல்லுது. எனக்கொரு ஒரு ஐம்பதாயிரம் ரூபா தருவியே.. பிறகு வேலையில கழிச்சுக் கொள்ளன். இவன் மகனை அபுதாபிக்கு அனுப்பிற ஒரு அலுவல் சரிவந்திருக்கு.

By

Read More

இறுதி வணக்கம்

நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன்.

வளவனை நேரிற் கண்டு ஒருநாள் பூரணமாயிருந்த்து. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நேற்றுக் காலையில் ஊருக்கு வந்திருந்தேன். கொழும்பு விமானநிலையத்திலிருந்து நேராகவே அக்காவீட்டுக்குப் பயணம். நீண்ட பயணங்களில் நினைவுப் பெருவெளிகளில் மனதை நுழைத்துச் சுகிப்பது அலாதியானது. நினைவுகள் சமயங்களில் பனியெனக் கவியவும் பலநேரம் தீயெனச் சுடரவும் செய்யும். அந்நாளில், இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில் நான், அம்மா, பெரியம்மா, பெரியப்பா, எல்லோரும் முல்லைத்தீவில் இருந்தோம். அக்காவும் அங்கேதான் பகலைத் தின்னும் அடர் கானகத்தில் உருமறைந்த முகாமொன்றில் இருந்திருக்க வேண்டும்.

“இவனை வள்ளத்தில் இந்தியாவிற்குக் கொண்டுபோகப் போகின்றேன். இனியும் இந்த மண்ணில் வைத்திருக்க என்னிடம் மனத் தைரியம் இல்லை” என்ற அம்மா இராமேஸ்வரத்திலிருந்து 45 மைல் தொலைவிலிருந்த மன்னாரின் கடலோரக் கிராமம் ஒன்றிற்கு என்னையும் இழுத்துக்கொண்டு புறப்பட்டபோது, பெரியம்மாவும், பெரியப்பாவும் என்னை ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்கள். பெரியப்பாவின் விரலின் தொடுகை என்னில் துண்டித்த கணத்தில், யாருமற்ற வனாந்தர வெட்டையொன்றில் நான் தனித்து நுழைவதைப் போல் உணர்ந்தேன். என் சிறுவயது ஞாபகங்கள் அனேகம் அவர்களைச் சுற்றியே குவிந்திருந்தன. பெரியப்பாவிற்கு ஆண்பிள்ளைகள் இல்லை. பெருநாட்களில் அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். பாலன் பிறக்கிற எல்லா நடுசிகளிலும் நான் அவர்களின் வீட்டிலேயே தோத்திரம் சொன்னேன். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, நான் எல்லோரும் வரிசையாக முழந்தாளிட்டு “மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்.. மாடுகள் அடையும் தொழுவத்திலே மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே.’ என்று ஒருமித்த இசையில் பாடுவோம். அக்காவின் கணீரென்ற குரல் மற்றெல்லோரையும் மேவி ஒலிக்கும்.

பெரியப்பாதான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தந்தார். அவர்தான் வாசிகசாலையில் எடுத்துவந்து புத்தகங்களை அறிமுகம் செய்தார். அவரிடம்தான் என் முதற் கவிதையைக் காட்டினேன்.

“எங்களோடு நீங்களும் இந்தியாவிற்கு வாருங்கள்” என்று பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கேட்கமுடியாத காலமாயிருந்த்து. அக்கா இயக்கத்தில் இருந்தாள். மகளை விட்டு ஓர் அங்குலம் கூட அவர்கள் நகர்வதாக இல்லை. “அவள் திரும்பி வருவாள்.. ஏசப்பா என் மகளை அழைத்து வருவார்” என்று பெரியம்மா தினமும் மன்றாடித்தொழுதாள். கண்ணீர் வழிய மண்டியிட்டு அவள் ஜெபிப்பாள். “விண்ணகத் தந்தையே, உமது தொழுவத்திலிருந்து வழிதவறிச் சென்ற உம் பிள்ளையை, மீண்டும் உம்மிடம் அழைத்துக் கொள்வீராக என்று, உம்மை மன்றாடுகின்றேன்..”

அக்கா இயக்கத்தில் சென்று சேர்ந்தது ஓர் ஆச்சரியமான தருணம்தான். என்னை விடவும் அவள் இரண்டு வயது மூத்தவள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சனிக்கிழமை காலை, திருப்பலிக்குக் கூடியிருந்த யாகப்பர் தேவாலயத்தின் கூரையில் விழுந்த விமானக்குண்டுவீச்சில் அகப்படும்வரை கரியால் மெழுகிய இருட்டைத்தவிர்த்து அவள் வேறெதற்கும் பயந்தவள் இல்லை. அன்றைய சம்பவத்தில், வேரோடு சரிந்த சுவரொன்றின் இடிபாடுகளுக்கிடையில் அவள் நசுங்கியிருந்தாள். உடல்நோவும், சிதறிய கொங்கிறீட் கற்கள் குத்திய சிராய்ப்புக் காயங்களும்தான். ஆனால் கண்ணுக்கு முன்னால் குருதி பிசிறியடிக்க இறுதி மூச்சைத் தொலைத்த உயிர்களும், எஞ்சிய தேவாலயச் சுவர்களில் எதிரொலித்த மரணக் கூச்சலும் அவளைப் பித்துப்பிடித்தது போலாக்கின. சிதறிக்கிடந்த மனித இறைச்சிக் குவியல்களில் புழுதியைக் குழைத்து அப்பிய உடலோடு கால்களைப் புதைத்து நடந்து வந்தபோது, அவளுக்கு வலிப்பு வருவது போல உடல் வெடுக் வெடுக்கென உதறத்தொடங்கியது. மூர்ச்சையானாள்.

அன்றிலிருந்து சின்னதொரு வெடிச்சத்தமும் அவளைக் கலவரப்படுத்தியது. தூரத்தில் கேட்கும் வெடியொலிகளை பொதுவாக நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவள் அப்படியல்ல, அந்நேரங்களில் தண்ணீரில் பலவந்தமாக அமிழ்த்தப்பட்டதைப்போல, முகம் வெளிற கண்களில் பீதி உறையத்தொடங்கும். யாருடனும் பேச மாட்டாள். தனித்திருப்பாள். அவளின் அறையில் ஒரு கனதியான தேக்குமர மேசை இருந்தது. பழைய காலத்து மேசை. சீமெந்துத் தரையில் அதனைத் தேய்த்து இழுத்தால், பூம்ம்ம்… என்றொரு சத்தம் வரும். அது ஓரளவுக்குக் கிபிர் விமானம் ஆகாயத்தைக் கிழிக்கும் ஓசையை ஒத்திருக்கும். அக்கா பகலில் நித்திரை கொள்ளும் நேரம் பார்த்து பகிடியாக மேசையை இழுத்துவிட்டு ஓடியிருக்கிறேன். அவள் துடிக்கப்பதைக்க எழுந்து சுதாகரித்து “சனியனே” என்று திட்டித் துரத்துவாள்.

storநன்றாக நினைவிருக்கிறது. முல்லைத்தீவிற்கு இடம்பெயர்ந்து குடிசைகளை அமைத்துக்கொண்டு இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. ஷெல் சத்தங்களோ துப்பாக்கி வேட்டுக்களோ இப்பொழுது கேட்பதில்லை. ஆயினும் ட வடிவப் பதுங்குகுழிகளை முற்றத்தில் எட்டித்தொடும் தூரத்தில் வெட்டியிருந்தோம். அக்கா சற்று இயல்படைந்திருந்தாள். உயர்தரப் பரீட்சைக்காக அவள் கல்லூரியொன்றில் இணைந்திருந்தாள். அது சற்றுத் தொலைவிலிருந்தது. சிவப்பு நிற லுமாலா சைக்கிள் ஒன்றை பெரியப்பா அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் காலை, அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். இரண்டு கிபிர் விமானங்கள் சமாந்தரமாகப் பாயும் கூரிய ஈட்டிகளைப்போல வானில் நுழைந்தன. உயிரைப் பிராண்டி வழித்தெடுக்கின்ற இரைச்சல்.. பதுங்கு குழிக்குள் ஓடினோம். “ஐயோ, மகள் தெருவில் தனிய..” பெரியம்மா அடிக்கடி குழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பதைத்தாள். கிபிர் நேராக காதிற்குள் நுழைந்து மூளையின் மென் சவ்வுகளைத் சீவியெறிவதைப்போல, இரைச்சல் ஆர்முடுகியது. சட்டென்று, கண்ணாடி மாளிகையொன்று நொருங்கி விழுவதைப்போல பொல பொல எனச்சத்தம் கேட்டது. “போட்டுவிட்டான்.. போட்டுவிட்டான்” ஒரு தவளையைப்போல, பதுங்கு குழியில் படுத்திருந்து கத்தினேன். காற்று ‘பூம்..’ என்று அதிர்ந்து அடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இடிமுழக்கம் தணிவதைப்போல கிபிரின் இரைச்சல் நகர்ந்து மெதுவானபோது நானும் பெரியம்மாவும், தெருவுக்கு விரைந்தோம். அக்கா மூச்சிரைக்க ஓடிவந்தாள். “எங்கே விழுந்ததென்று தெரியவில்லை, இயக்கத்தின் வாகனத்தில் காயப்பட்ட சனங்களை ஏற்றிக்கொண்டு இந்த வழியால்தான் போகிறார்கள். கண்கொண்டு பார்க்க முடியாது. வாகனம் முழுவதும் இரத்தமும் ஓலமும்..” என்றாள்.

“அக்கா சைக்கிள் எங்கேயடி” என்று நான் கேட்டேன். அவள் நடுங்கும் குரலில், “சிவப்பு நிறத்தைக் கண்டால், குண்டு வீசுவான். அதனால் வீதியோரம் எறிந்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்” என்றாள். நான் சிரிப்பை அடக்கப் பிரயத்தனப்பட்டு தோல்வியுற்றேன். “நல்ல வேளை வெள்ளைச் சட்டையோடு போனாய்” என்றேன். அக்கா முகத்தைப் பொத்திக்கொண்டு ஓடினாள். சுவரில் சாய்ந்து அழத்தொடங்கினாள்.

அக்கா இயக்கத்தில் இணைந்ததை எவராலும் நம்பமுடியவில்லை. அவள் கடைசிவரை அதே பயந்த சுபாவத்தோடுதான் இருந்தாள். எந்தவொரு கணத்தில் அப்படியொரு முடிவை எடுத்தாள் என்பது பெரும் புதிராயிருந்தது. ஏன் போகின்றேன் என்று ஒரு கடிதமும் எழுதி வைக்கவில்லை. கல்லூரியால் மூன்று மணிக்கெல்லாம் வந்துவிடுபவள் வராதபோது பெரியம்மா அந்தரிக்கத் தொடங்கினாள். பெரியப்பா விசாரிக்கச் சென்றார். இருள் மூடத்தொடங்கியபோது அவர் சைக்கிளை மரத்தில் சாய்த்துவிட்டு ஒரு பிணம்போல வந்து குந்தினார். ஒரு குழந்தைப்பிள்ளையைப் போல அவர் அழத்தொடங்கியபோது எனக்குப் புரிந்திருந்தது. அன்றைக்கு அக்காவின் கல்லூரியிலிருந்து 13 பேர் இயக்கத்திற் சென்று சேர்ந்தார்கள். அடுத்தநாள் முழுவதும் நானும் பெரியம்மாவும் அருகில் உள்ள முகாம்களில் சென்று விசாரித்தோம். கடைசியாக ஓரிடத்தில் அவளது சிவப்பு நிற லுமாலா சைக்கிளைத் தந்தார்கள். பெரியம்மா அந்த முகாமின் வாசலை விட்டு அகலமாட்டேன் என்று தரையில் கால்களைப் பரவி உட்கார்ந்து கதறத்தொடங்கினாள். “அவளை ஒருதடவை என் கண்ணில் காட்டுங்கள் என் ஐயாக்களே” என்று புரண்டழுதாள். அந்தக் கணத்தில் அக்காவை மனதிற்குள் திட்டித்தீர்த்தேன்.

“அவள் பயந்த குழந்தை. வீட்டைத் தவிர வேறெங்கும் தங்கி நிற்க மாட்டாள், எப்படியும் வந்துவிடுவாள்..” என்று மூன்று வருடங்களாகப் பெரியம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். அவளது மன்றாட்டங்களும் வேண்டுதல்களும் அக்காவின் வருகைக்காயிருந்தன. அப்படியொருநாள் அக்கா வந்தாள்.

வாசலில் மோட்டார் சைக்கிளொன்றின் உறுமல் தணிந்து ஓய்ந்ததை நான் கேட்டேன். அதில் உட்கார்ந்து கால்களால் நிலத்தில் உந்தி உருட்டியபடி அக்கா உள்ளே வந்தாள். அவளின் பின்னால் இன்னொரு தோழி அமர்ந்திருந்தாள். இருவரும் சீருடையில் இருந்தார்கள். அக்கா தலைமுடியை தோளுக்கு மேலே கத்தரித்திருந்தாள். அது அவளுக்குப் புதியதொரு தோற்றத்தைத் தந்திருந்தது. கழுத்தில் தொங்கிய கறுப்புக் கயிறை சீருடையின் இடது பொக்கற்றில் நுழைத்திருந்தாள்.

“என் பிள்ளை வந்துவிட்டாள்” தளதளத்த குரலோடு பெரியம்மா ஓடிச்சென்று அக்காவை கட்டித் தழுவினாள். அவளது அணைப்பிற்குள் உடலை ஒடுக்கி நின்று கையிற் கட்டியிருந்த கறுப்பு நிற மணிக்கூட்டில் அக்கா நேரத்தைப் பார்த்தாள்.

“வேறொரு அலுவலாக இந்தப்பக்கம் வந்தோம். வந்த இடத்தில் இங்கேயும் வந்தேன்.”

“பின்னேரம், அப்பா வந்துவிடுவார். இரவு தங்கிவிட்டு விடியப் போகிறாயா” பெரியம்மா கெஞ்சுவதைப்போலக் கேட்டாள்.

அக்கா பதிலொன்றும் சொல்லாமல் சிரித்தாள். தானே குசினிக்குள் சென்று எலுமிச்சைச் சாறு கரைத்து நிறையச் சீனிபோட்டு எடுத்துவந்து தோழிக்கும் கொடுத்தாள். ஒரு மிடறு குடித்துவிட்டு என்னைப்பார்த்து “என்னடா செய்கிறாய்” என்றாள். “இருக்கின்றேன்..” என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு நான் அமைதியானேன்.

பெரியம்மா அக்காவின் நெற்றியை வாஞ்சையோடு தடவினாள். “உனக்குப் பயமாயில்லையா மகள்” என்று கேட்டாள். பக்கத்திலிருந்த தோழி ஓங்கிச் சிரிக்கத்தொடங்கினாள். தொண்டையில் புரக்கேறி எலுமிச்சைச் சாறு மூக்காற் சிந்தியது. இப்பொழுது பெரியம்மா அத்தோழியின் தலையில் மெதுவாகத்தட்டி ஆசுவாசப்படுத்தினாள். “அதை ஏன் கேட்கிறீர்கள், இருட்டென்றால், நாலு பேர் உங்கள் மகளுக்கு அருகிலேயே நிற்கவேண்டும்.”

“சும்மா இரடி” என்று அக்கா சொன்னாள். “இன்னொரு நாளைக்கு வருகின்றேன் அம்மா” என்று சென்று மோட்டார் சைக்கிளை உதைத்தாள். அதுவொரு சிவப்பு நிற ஹொண்டா சி.டி 90 ரக வண்டி. இரண்டு தரம் அதன் அக்சிலேற்றரை முறுக்கினாள். பிறகு காற்றில் பறந்து போனாள். பெரியம்மா கணமும் தாமதியாது ஓடிச்சென்று மண்டியிட்டாள். “பரலோகத் தந்தையே, உம் பிள்ளைக்கு நீரே உறுதுணையாயும், பக்கபலமாயும் அருகிருந்து காத்துக்கொள்வீராக என்று உம்மை மன்றாடுகின்றேன்..”

எனக்கு ஆச்சரியமாயிருந்தது. எப்பொழுதும், ஏதாவது பகிடிவிட்டும், சமயங்களில் அவளைக் கோபமூட்டியும் சீண்டுகிறவன் அன்றைக்கு அக்கா நின்ற வரைக்கும் வார்த்தைகளைத் தொலைத்து ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன். வாடி, போடி என உரையாடும் நெருக்கத்திலிருந்தவள் திடீரென்று தொலைவிற் சென்றது போலிருந்தது. ஏதேனும் குற்ற உணர்வினால் அப்படியிருக்கலாம் என்று யோசித்தேன். அன்றைக்குப் பிறகு அக்காவைக் கண்டதில்லை.

நான் இந்தியாவில் நல்லதொரு ஏஜென்டைப் பிடித்தேன். சென்று சேர்ந்த பிறகே காசு தருவேன் என்ற ஒப்பந்தத்தில், லண்டனிற்கு வெறும் நான்கே நாட்களில் போய்ச்சேர்ந்தேன். அந்நாட்களில், பத்து மாதங்களுக்கும் மேலாகப் பயணித்தவர்களும் உண்டு. சீக்கிரம் உழைத்துத் தா என்ற ஒப்பந்தத்தில் ஏஜென்டுக்கான பணத்தை சுவிஸிலிருந்தும் பிரான்ஸிலிருந்தும் மாமன்கள் இறைத்திருந்தார்கள். அகதித்தஞ்சம், வழக்கு, விசா, வேலையென்று காலங்கள் ஓடித்தீர்ந்தன. பெரியப்பாவை பாம்பு தீண்டி இறந்த செய்தி பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தபோது இரண்டாவது வேலையின் (அதையொரு பெற்றோல் ஸ்ரேஷனில் செய்தேன்.) இரவுநேர ஷிப்டிற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். பெரியப்பாவை என்றாவது நேரிற் காணுவேன் என்றுதான் நம்பியிருந்தேன்.

அக்கா திருமணம் செய்துகொண்டாள் எனக் கிடைத்த கடிதத்தில்தான், அவள் யுத்தமுனையொன்றில் காலில் காயமாகியிருந்தாள் என்றும், பின்னர் மருத்துவப் போராளியாகப் பணியாற்றினாள் என்றும், அக்காலங்களில் சக போராளி ஒருவனைக் காதலித்திருந்தாள் என்றும் எழுதப்பட்டிருந்தது. ஒரு சட்டகத்திற்குள் அடக்க முடியாதவாறு அவளின் வாழ்வு திருப்பங்களோடு நகர்கின்றது என்று ஆச்சரியப்பட்டேன். அவளைப்பற்றி அறிய நேர்ந்த போதெல்லாம், திடீர் திடீரென்று காட்சிகள் மாறுவதைப்போல, வெவ்வேறு பாத்திரங்களை அவள் ஏற்றிருந்தாள். கடைசியாக வளவனுக்கு அம்மா ஆகியிருந்தாள். அப்பொழுதுதான் யுத்தம் ஆட்டு மந்தையொன்றைச் சாய்த்துச் செல்வதுபோல சனங்களைக் கடற்கரை ஒன்றை நோக்கி விரட்டத்தொடங்கியிருந்தது.

அக்காவைப் பற்றியோ பெரியம்மாவைப் பற்றியோ அதன்பிறகு ஒரு தகவலும் இல்லை. எல்லாச் செய்திகளும் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. இணையத்தில் குருதி வழிகிற பிஞ்சு உடல்களைக் கண்ட போதெல்லாம் இன்னமும் முகம் தெரியாத வளவன் நினைவாகவே இருந்தது. அவனைப் பற்றிய கற்பனைச் சித்திரமொன்றை எனக்குள் வரைந்திருந்தேன். பெரியப்பாவைப்போல, அடர்த்தியான இமைகள், கூரான மூக்கு, சற்றே ஒடுங்கிய எப்பொழுதும் சிரிக்கிற முகம்…

ஓர் இராட்சத மிருகம் தன் அகன்ற நாவால் நிலத்தை வழித்துச் சுருட்டித் தின்று செரித்ததுபோல, ஒருநாள் எல்லாம் ஓய்ந்தது. புகை அடங்கிய வெளியில் வளவனை இடுப்பில் சுமந்தபடி அக்கா வெளிப்பட்டாள். அத்தான் சரணடைந்தார். அன்றைக்கு பெரியம்மாவின் 18வது நினைவு நாள்.

0 0 0
என்னைக் கண்டமாத்திரத்தில் மெல்லிய கேவல் ஒலியில், புறங்கைகளால் அக்கா கண்ணீரைத் தேய்த்தாள். கண்ணீரைத் தடுக்க முடியாதவளாய், முகத்தை பொத்தி அழத்தொடங்கினாள். அப்பொழுது அவள் சிறு சத்தத்திற்கும் அச்சப்படும் பழைய அக்காவாகத் தோன்றினாள். அவளைச் சீருடையோடு கண்டது, பனிப்புகார் மூடிப்பரவிய ஒரு காலை நேரத்துக் கனவு போலிருந்தது. தலையைக் குனிந்து நின்றேன். அக்காவின் சட்டையின் பின்னால் ஒளிந்துகொண்டு என்னைப் பார்ப்பதும், தலையை உள்ளிழுப்பதுமாக வளவன் நின்றான். அவனைத் தூக்கி முத்தமிட்டேன். அவன் அதை விரும்பாதவனாக கன்னங்களை அழுத்தித் துடைத்தான்.

“உனக்கு அவரைத் தெரியாது என்ன..” என்று இரவு அக்கா கேட்டாள். “உன் அத்தான் ஷெல் பக்டரியொன்றுக்குப் பொறுப்பாயிருந்தவர். சொந்த இடம் சம்பூர் திருகோணமலை. ஒருதடவை, பக்டரியில் தவறுதலாக வெடித்தபோது, முகத்திலும் நெஞ்சிலும் பயங்கரக் காயங்கள் ஏற்பட்டன. அப்பொழுது சிகிச்சைக்கு வந்த இடத்தில்தான் பழக்கம்.” அவள் அத்தானின் புகைப்படமொன்றைக் காட்டுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் வளவன் பிறந்தபோது எடுத்த ஒரு சில படங்களைக் காட்டினாள். அவற்றில், அத்தான் இல்லை. பிறகு அவளாகவே “அவருடைய ஒரு படமும் என்னிடம் இல்லை. இருந்ததெல்லாம் சீருடையோடு எடுத்த படங்கள். ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் போகும்போது, கிழித்து எறிந்துவிட்டுத்தான் போனேன்.” என்றாள். நான் பெருமூச்செறிந்தேன். “ம்” கொட்டிக் கேட்கிற கதைகளா இவை.. ?

“உன் அத்தான் இறுதிக்காலத்தில் எங்களோடு இருக்கவில்லை. ஷெல் பக்டரிகள் இயங்காமற் போன பிறகு துயிலுமில்லங்களுக்கான பொறுப்பில் நின்றார். அவையும் ஓரிடமென்று நிலைத்து இருக்கவில்லைத்தானே. கிடைக்கிற சிறு சிறு துண்டு நிலங்களில் எல்லாம், குழிகளைவெட்டி உடல்களை இறக்கி மூடினார்கள். அவர் என்றைக்காவது பயன்படுமென்று போராளிகளின் பெயர் விபரங்கள், புதைத்த இடங்கள் என எல்லாத் தரவுகளையும் ஆவணப்படுத்தினார். அகப்படுகிற காகித அட்டைகளில், பெயரையும், திகதியையும் எழுதி புதைத்த இடங்களில் நட்டார். அவரைச் சந்திக்கச் சென்ற எல்லாச் சமயங்களிலும் வளவனையும் இடுப்பில் சுமந்தே சென்றேன். அவனைத் தனியே விட்டு ஓர் அங்குலம் கூட நகரவில்லை. எப்பொழுது போனாலும், ஒரு தொகை உடல்கள் அடக்கம் செய்வதற்காக வரிசையாக வளர்த்தப்பட்டிருந்தன. அருகிலே, பெற்றவர்கள் கதறி அழுதார்கள். யாரும் அழாத உடல்களும் கிடந்தன. அழுவதற்கும் ஆட்கள் இல்லாத காலமொன்று வருமென்று நினைத்திருப்போமோ.. இறுதி வணக்க நிகழ்வுகள் இரண்டொரு நிமிடத்திற்குள் முடிந்தன. குழிகளை மூடிக்கொண்டேயிருந்தார்கள். அதை விஞ்சிய வேகத்தில் உடல்கள் வந்துகொண்டேயிருந்தன. ஒருநாள் உன் அத்தான் சொன்னார். காகித அட்டைகளில் வீரச்சாவு என்று எழுதும்போது எனக்குக் கை நடுங்குகிறது, என்று ”

அக்கா நிறுத்தினாள். தூக்கத்தில் உடலை அசைத்த வளவனை திரும்பிப் பார்த்தாள். தீனமான பார்வையாயிருந்த்து. ஒருவேளை அவளின் நினைவுகளைக் கிளறி, துயரை அதிகரிக்கின்றேனோ என்று தோன்றியது.

“இவனை நினைக்கும் பொழுதுதான் மனதை ஆற்ற முடியவில்லை. என்னை விடு. இரத்தமும் சதையுமே எனக்கு வாழ்க்கையாயிருந்தது. உச்சச் சண்டை நடக்கிற நாட்களில், மருத்துவப் போராளிகள் இரத்தத்தில் குளித்துத்தான் நிற்போம். வலி பொறுக்கமுடியாத முனகல்களும், வெறிகொண்டது மாதிரியான ஆவேசக் குரல்களும் பழகியிருந்தன. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் துண்டாகி, மயக்கம் தெளிந்தபோது, “அக்கா எனக்குச் சயனைட் குப்பியைத் தாருங்கள். சாகப்போகின்றேன்” என்று கெஞ்சிய பிள்ளையொருத்திக்கு மனதைக் கல்லாக்கிக்கொண்டு சிதைவை வெட்டி அகற்றியிருக்கின்றேன். வளவனுக்கு, அப்படியல்ல. அவன் குழந்தை. அவனைச் சுற்றி நிறையச் சாவுகள் நடந்தன. சிதறிய மூளை, பிய்ந்த கால்கள், வயிற்றைப் பிளந்து கொட்டிய குடல், இறைச்சிக் குவியல் மாதிரிக் கிடந்த உடம்பு, எல்லாவற்றையும் அவன் கண்ணால் கண்டான். ஆரம்பத்தில் அவனது கண்களை நான் சட்டென்று பொத்துவேன். வேண்டாம், வளவன்.. நீங்கள் இதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று வேறெங்காவது கொண்டு போவேன். நாளாக நாளாக, நானும் எத்தனைக்கென்று கண்களைப் பொத்துவது. உன் அத்தானைத் தேடிப்போன நேரமெல்லாம், திமிறிக்கொண்டு அந்த நிலமெல்லாம் ஓடித்திரிவான். நான்கு வயதில் நடந்ததெல்லாம் அச்சொட்டாக நினைவு வைத்திருப்பானா என்று தெரியவில்லை. ஆனால் டொக்டர் அதற்குச் சாத்தியமிருக்கின்றது என்றுதான் சொல்லியிருக்கிறார்”

நான் நிமிர்ந்து “டொக்டரிடம் ஏன்…” என்று இழுத்தேன். உள்ளுக்குள் கலவரமாயிருந்தது.

“இவன் வளவில் பூச்சி, பூரான், தவளை, ஓணான் ஒன்றையும் விட்டுவைப்பதில்லை. மண்டை விறைத்தவன் போல, பின்னாலேயே சென்று, கல்லைத் தூக்கிப்போட்டோ, தடியால் அடித்தோ கொன்று விடுகிறான். ஓணான் முட்டைகளைக் குத்தி உடைக்கின்றான், குருவிக் கூடுகளை கலைக்கின்றான்… இதென்ன குரூரம் என்று தெரியவில்லை. தவளையைக் கொன்று புதைத்து பத்துப் பதினைந்து நாட்களில் எலும்புகளைக் கிளறி எடுக்கின்றான். கோபத்தில், இரண்டு தட்டுத் தட்டினால் இன்னுமின்னும் முரட்டுக் குணமாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவன் முகத்தைப்பார். நம்ப முடிகிறதா.. அடிக்கவும் முடிவதில்லை..” அக்காவில் கண்ணீர் திரண்டது. நான் வளவனுக்கு அருகாகச் சென்று அமர்ந்தேன். அவனின் முதுகைத் தடவிவிட்டேன். அவனின் முகம், முன்னர் செய்திகளில் பார்த்த குழந்தைகளை நினைவுபடுத்திற்று.

“இன்னும் கொஞ்சம் நாட்களில் அப்பாவைப்பற்றிக் கேட்பான். இப்பொழுதும் யோசிக்கக்கூடும்” என்றாள் அக்கா.

அத்தானைப் பற்றி, என்னிடம் ஒரு முன்தீர்மானம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாட்களையும் நம்பிக்கை என்ற இழையில், பற்றிப் பிடித்திருப்பவளிடம் என் வார்த்தைகளை நான் சொல்ல முடியாது. கண்ணால் கண்டிராத, ஒரு கற்பனை மனிதராக அத்தான் என் மனதில் படிந்திருந்தார். அதனாலேயோ என்னவோ, மனதில் அதிக உளைச்சலின்றி இருந்தது.

“என்ன நடந்திருக்கும் என்பதை எனக்கும் ஊகிக்க முடிகிறதுதான்” என்றாள் அக்கா. “அவரை மீட்டுக்கொண்டு வருவதல்ல… முதலில் வளவனுக்குச் சொல்வதற்கு ஒரு பதில் வேண்டும். இரண்டாவது புருசனைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாள் என்ற இந்தச் சனங்களுக்குச் சொல்ல ஒரு பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இத்தனை அலைச்சலும், மனுக்களும், ஆர்ப்பாட்டங்களும். ஓரளவிற்கு எல்லாச் செய்திகளுக்கும் தயாராகத்தான் இருக்கின்றேன். அவரும் தயாராகித்தான் இருந்தார். கடைசி நாளில், அதிகாலையிலேயே அவர் எங்களிடம் வந்துவிட்டார். இன்றைக்கு நாங்கள் இறந்தால் வரலாற்றில் காணாமற் போனவர்கள் ஆவோம். ஒருவேளை பிழைத்துக்கொண்டால் வரலாற்றில் தூக்கி எறியப்பட்டவர்கள் ஆவோம் என்றார். ஓடி ஓடித்தான் தூரத்தைக் கடந்தோம். சற்று வெளிச்சம் பரவியபிறகு வீதியோரத்தில் திறந்த பதுங்குகுழி ஒன்றில், இருபது முப்பது உடல்கள் குவிக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன். அத்தனை பேரும் போராளிகள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம். துர்நாற்றமிருந்தது. உன் அத்தான் அப்படியே நிலத்தில் முழந்தாளில் விழுந்தார். மனம் பிறழ்ந்தவர் போல கைகளால் மண்ணை விராண்டினார். விரித்த உள்ளங்கைகளில் மண்ணை ஏந்தி “ஓ….” என்று அலறினார். எனக்குத் தெரியும். நெஞ்சுத் தசைகள் உரிந்து காயப்பட்ட நேரத்தில் கூட அழாமற் கிடந்தவர் அவர். இப்பொழுது பொங்கிப்பொங்கி அழுதார். அவரை இழுத்தேன். வேர் விட்டது போல நகரவேயில்லை. குனிந்து காதுகளில் “வளவனுக்காக..” என்று கெஞ்சினேன். அப்பொழுதுதான் மெதுவாக எழுந்து ஒரு நடைப்பிணம்போல நடந்தார். ராணுவத்தினர் மிகச்சாதாரணமாக அவரை ஒரு போராளியென்று அடையாளம் கண்டார்கள். இவரும் அதிகம் தர்க்கப்படவில்லை. என் அருகாக வந்து “நீ போராளி என்பதைச் சொல்லத்தேவையில்லை. யாராவது காட்டிக்கொடுக்கும் வரை நீயாகச் சொல்ல வேண்டாம்… வளவனுக்காக..” என்றுவிட்டு நடந்தார். அவர்கள் எல்லோரையும் ஒரு பஸ்ஸில் ஏற்றினார்கள். பஸ் புறப்பட முன்பாகவும், எந்த உணர்ச்சியுமற்ற முகத்தோடு உள்ளிருந்து கை காட்டினார். நான் பஸ் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”

நுளம்புகள் இரைந்தன. ஒன்றிரண்டு என்னில் கடித்தன. அக்கா எழுந்து சென்று பட்டுச் சேலையொன்றை எடுத்துவந்து வளவன் மேலே போர்த்தாள். “கொசு வலை இருக்கிறது. இவன் அதன் உள்ளே படுக்க மாட்டான். என்னாலேயே முடிவதில்லை. ஏதோ பதுங்கு குழிக்குள் அடைந்து கிடப்பதபோல ஒரு அமுக்கம் மாதிரி மூச்சு முட்டுகிறது”

“வளவன் என்னோடு படுக்கட்டும்” என்றேன். “அவன் கையாற் காலால் உதைவான். கவனம்” என்றாள் அக்கா. “ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அதிகாரி ஒருவர் நாளை ரவுணுக்கு வருகிறார். மனுக் கொடுக்க வேண்டும். காலையிலேயே போய்விடுவேன். அவனைப் பார்த்துக்கொள்.”

அக்கா நாங்கள் விழித்துக்கொள்ள முன்னரே புறப்பட்டிருந்தாள்.

0 0 0

வளவன் இப்பொழுது நிலத்தில் குந்தியிருந்தான். கொங்கிறீட் கல்லை நகர்த்தி, நசுங்கிக்கிடந்த, தவளையை அவன் வெறித்துக்கொண்டிருந்தான். எழுந்து சென்று அவனை அழைத்து வரலாமா என்று நினைத்தேன். ஆனால், பிதுங்கிக்கிடக்கும் தவளையை கற்பனையில் நினைத்தபோது வயிற்றைப் புரட்டியது.

“வளவன், நீங்கள் நல்ல பிள்ளையல்லவா, இங்காலே வாங்கோ” என்று அழைத்தேன். அவன் என்னை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. காற்சட்டை இடுப்பிலிருந்து நழுவ நழுவ அதை இழுத்துப்பிடித்தபடி ஓடிப்போய், பெரிய பூவசரம் இலையொன்றைப் பறித்துவந்தான். தவளையின் உடலை சுள்ளித்தடிகளால் நகர்த்தி இலையில் ஏற்றினான். மறுபடியும் ஓடிச்சென்று, வேலியோரமாக வீசப்பட்டிருந்த பழைய சிரட்டையை எடுத்துவந்து மண்ணை வறுகிக் கிண்டினான். தவளையை இலையோடு அச்சிறுகுழிக்குள் இறக்கியவன் கன்னத்தில் கையை ஊன்றி அதையே பார்த்துக்கொண்டிருந்தான். எனக்குள் பதற்றம் நுரைக்கத்தொடங்கியது. வளவன் கண்களிலிருந்து இருசொட்டுக் கண்ணீர் மண்ணில் இறங்கியதை நான் கண்டேன். என் உடல் நடுங்கித் தணிந்தது. வெடுக் என்று ஓடிப்போய், அவனை அள்ளித் தூக்கி மார்பில் சாய்த்தேன். “வளவன் அச்சாப்பிள்ளையல்லவா, நாங்கள் மணலில் வீடு கட்டி விளையாடுவோமா” என்று அவனின் நெற்றியை வருடியபடி கேட்டேன். காலால் மண்ணை நிறைத்துக் குழியை மூடினேன். அப்பொழுதும் தவளையைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

வளவன் என் அணைப்பினின்றும் திமிறினான். கால்களால் உதைந்தான். மார்பைக் கைகளால் உந்தித் தள்ளினான். “என்னை இறக்கி விடுங்கள். நான் இறுதி வணக்கம் செய்யப்போகின்றேன்” என்று அழத்தொடங்கினான்.

என் குரல் உடைந்து அந்த நிலமெங்கும் வழியத்தொடங்கியது.

(அம்ருதா ஜனவரி இதழில் வெளியானது)
ஓவியம்: Yulanie Jayasena

By

Read More

குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று கும்பிட்டு வாங்கிக்கொண்டு போச்சினமாம். ஆனால் எலக்ஷனில ஆள் தோத்திட்டார். கூரைத்தகடு வாங்கின ஆக்களின்ரை வோட்டு விழுந்ததே சந்தேகமாம். ஆள் கொஞ்சம் கோபத்தோட போய், நீங்களெல்லாம் என்ன மனிசர். பல்லை இளிச்சு வாங்கிக்கொண்டுபோயிற்று கழுத்தை அறுத்திட்டியளே என்று திட்டினாராம். சனம் ஒண்டும் விளங்காமல், ஐயா நீங்கதானே வீட்டுக்குப் போடச்சொன்னியள் என்று இழுத்திச்சினமாம்…”

இந்தக்கதையை எனக்குச் சொன்னவர் எனது பெரியப்பா. இன்னும் இரண்டு வருடத்தில் எழுபது வயதாகிறது. தச்சுவேலை செய்கிறார். கோப்பிச வேலைகளில் (கூரை வேலைகள்) ஸ்பெஷலிஸ்ற். மேற் சொன்ன கதை நிச்சயமாக ஒரு புனைவுதான். நிச்சயமாக பெரியப்பாவே புனைந்திருப்பார். எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேர்தான் புனைவாளர்கள். அந்நேரத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தவரும் அவரே. (சென்ற வருடம் அ.இரவி அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அப்பாவிடம் – சயந்தன் எழுதுறதுகளை வாசித்திருக்கிறியளா என்று கேட்டார். அப்பா தலையைச் சொறிந்து கொண்டே, என்னமோ எழுதுறான்தான். சந்தோசம்தான். ஆனால் வாசிக்கிறதில்லை என்றார். திடீரென்று இரவியண்ணை நீங்களும் ஒரு மனிசரோ என்று பொரிந்துதள்ளத்தொடங்க அப்பா திகைத்துப் போய்விட்டார். அப்படி அப்பா டோஸ் வாங்கிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்ற வெர்ஜினியாவை காணவேயில்லை. அடுத்தது தனக்குத்தான் என்றோ என்னவோ ஓடி ஓளிந்துவிட்டார். மறுநாள் காலை இரவியண்ணை போனபிறகு, அப்பா சொன்னார். “இப்பிடி ஆக்களைக்கூட்டிக்கொண்டு வந்து பேச்சு வாங்கித்தராதை… ”)

பெரியப்பாவைப்போல நிறையக்கதைகளைப் புனையும், மனிதர்களை கிராமங்கள் தமக்குள் வைத்திருக்கின்றன. அவற்றை புளுகுகள் என்று கடந்துபோய்விட முடியுமென்று தோன்றவில்லை. எதிர்காலத்தினுடைய நாட்டார் கிராமியக் கதைகள் இவைகளாகத்தான் இருக்குமோ என யோசிக்கின்றேன். எப்படியாவது இவை தமக்குரிய இடத்தை எடுத்துக்கொள்ளும்.

ஊரில் இன்னொரு சுவாரசியமான மனிதர் இருக்கிறார். சீனியர் என்று பெயர். ஒருமுறை நாங்கள் சிறுவர்கள் வைரவர் கோயிலில் இருந்து ஏவிய.. (இந்த வார்த்தை கொஞ்சம் அதிகப்படியானதோ…) ஈர்க்குவாணம் அவரது வீட்டில் விழுந்து மனைவியையோ மகளையோ அச்சப்படுத்தியது என்று விரைந்துவந்து எங்கள் ஆறுபேரையும் கைதுசெய்து சந்தியில் நிறுத்தியிருந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அம்மாவோ அப்பாவோ வந்தே பிள்ளைகளை அழைத்துச்செல்லவேண்டுமென்பது அவரது ஆணை. ஆனாலும் அச்செய்தியை அந்த வீடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமல்லவா. என்னைத்தான் அனுப்பினார். பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சீனியர் அவ்வளவு மோசமில்லை. சங்காபிஷேகத்து முதல்நாள் இரவு கோயிலில்தான் படுத்திருப்போம். சிறு பையன்களைக் கட்டிமேய்க்கிறது அவர்தான். வண்டிவண்டியாகக் கதை சொல்லுவார். அப்படியொருமுறை சொன்ன கதைதான் இது.

“இந்தியன் ஆமிக்காலமடா, மயிர். இந்தியன் ஆமியெண்டா எனக்கென்ன. நான் விடிய நாலு மணிக்கு எழும்பி றோட்டு முழுக்கத்திரிஞ்சு பூ பிடுங்கிக்கொண்டு வருவன். அப்பிடியொருநாள் பூப்பிடிங்கிக்கொண்டு வாறன், ஒரு குழை வண்டில் புல் லோட்டோட வருகுது. (விவசாய நிலத்தில் பசளைக்கு பாவிக்க இலைகுழைகளை ஏற்றிய மாட்டு வண்டில்கள் அதிகாலையிலேயே புறப்பட்டுவிடும்). மாடு ரண்டும் குதிரைமாதிரி. ஆளைப்பாத்தால் அந்த மீசையை எங்கயோ கண்டமாதிரிக் கிடக்கு. தலைப்பா கட்டியிருந்ததால டக்கெண்டு பிடிபடல்லை. பக்கத்தில வந்து சரக் என்று பிரேக் அடிச்சார். (இதனால் அன்றுமுதல் மாட்டுவண்டிலுக்கு பிரேக் அடித்த சீனியர் என்றும் அவர் அறியப்படலானார்). கையைக்காட்டி சீனியர் எப்பிடிச் சுகங்கள். மன்னிக்கோணும். கதைக்க நேரமில்லை. நிறைய அலுவல், பிறகொருநாளைக்குச் சந்திக்கிறன் என்றுபோட்டு கிர் கிர் என்றார். மாடு ரண்டும் புழுதியைக்கிளப்பிக்கொண்டு பறந்திச்சு. எனக்கு அப்பதான் டக்கெண்டு விளங்கிச்சு. அது ஆரு தெரியுமோ…. சீனியர் இந்த இடத்தில் நிறுத்தி எங்களையெல்லாம் பார்ப்பார்.

“டேய் அது தம்பி பிரபாகரன்டா. குழை வண்டில் முழுக்க ஆயுதங்களைத்தான் அடைஞ்சு கொண்டுபோயிருக்க வேணும். அந்த அவசரத்திலயும் அவன் சீனியரை மறக்கலையடா…”

இதே சீனியர்தான் இன்னொருமுறை தாங்கள் கேதீஸ்வரத்திலிருந்து வந்தபோது ரக்ரர் காத்துப்போய்விட்டதென்றும் ஒருவகைக் காட்டுப்புல்லை ரயருக்குள் அடைந்து நிரப்பிவிட்டு ஓடி வந்தார்களென்றும் சொன்னார். அது பரவாயில்லை. வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, ரயருக்குள் புல்லு கோதுமை மாப்போல அரைபட்டுக்கிடந்ததாம். அதைத் தவிடு கரைப்பதுபோல தண்ணீரில் கரைத்து மாட்டுக்கு வைத்தபோது அது 2 லீற்றர் பால் அதிகம் கறந்தது என்று சொன்னதுதான் ஹைலைற்.

சீனியரைப் போன்றவர்கள், எதற்காக இக்கதைகளைப் புனைந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சிறுசிறு கதைகளால்தான் நாட்கள் சுவாரசியமாக புதுப்புதிதாக நகர்ந்தன. அந்நாட்கள் இந்நாளைப்போல் ஒரேமாதிரி இருக்கவில்லை.

94 – 95 காலம். தோதான வயதிலிருந்தேன். முயல் வேட்டைக்கெனக் கிளம்புவோம். கையில் பொல்லுகள் சகிதம், இரண்டு மூன்று நாய்களோடு பத்துப் பதினைந்து பேரெனக் கிளம்பினால், கைப்புள்ள கிளம்பிட்டான், எத்தனை உசிர் போகப்போகுதோ என்ற கணக்காக ஊர் எங்களைப் பார்க்கும். பற்றைப் புதர்களுக்கு பொல்லால் எறிவதென்றும் முயல்கள் பாய்ந்து ஓடினால், நாய்கள் அவற்றைத் துரத்திப்பிடிக்கும் என்பதுதான் திட்டம். ஆனால் நான் அறிந்து முயல் ஒரு பொழுதும்அகப்பட்டதில்லை. வயலோரமாக ஏதாவது கோழியைத்தான் அமுக்குவார்கள் அண்ணமார். அங்கேயே கோழியை உரித்து வயலுக்குள்ளேயே மூன்று கல் அடுக்கி, அடுப்புச் மூட்டி சமைப்போம். ஆனந்தியப்பு கடையில் யாராவதுபோய் ஐந்து றாத்தல் பாண் வாங்கி உரப் பையில் சுற்றி வருவார்கள்.

நல்ல நினைவிருக்கிறது. அப்படியொருநாள் சாப்பிட்டு முடிய, உரித்த கோழியின் சிறகுகள் மற்றும் கழிவுகளை ஒரு ஷொப்பிங் பையில் கட்டி, அதனைச் சீமெந்துப்பையில் வைத்து மடித்து – அந்தவழியால் பாருக்குக் கீழால் கால் விட்டுச் சைக்கிள் ஓடிய சிறுவன் ஒருவனை மறித்தோம். “டேய் தம்பி, கரணைச்சந்தியில் சைக்கிள் கடை வைச்சிருக்கிற ஆனந்தன் அண்ணன், ஒரு சாமான் கேட்டவர். நேராப்போக நேரமில்லை. இதையொருக்காக் குடுத்துவிடுறியே..” என்று பார்சலை ஒப்படைந்தோம். சரியென்று வாங்கிக்கொண்டு போனான். நாங்கள் பேணிகளை அடுக்கிப் புளிச்சல் விளையாடத்தொடங்கினோம்.

சற்று நேரத்தில் சிறுவன் இன்னொரு பொதியோடு திரும்பி வந்தான். “அண்ணை, குடுத்திட்டன். மறக்காமல் குடுத்துவிட்டதுக்கு நன்றியாம். போனமுறை நீங்கள் வந்தபோது தர மறந்திட்டாராம். இதை உங்களிட்டை குடுக்கச்சொன்னவர்” என்று பொதியைத் தந்தான். வாங்கித் திறந்து பார்த்தோம். நாலைந்து பழைய ரியூப் ஒட்டுகிற நெளிஞ்சுபோன சொலுஷன் ரின், கொஞ்சம் போல்ஸ், ஒட்டுப்போட இடமேயில்லாமல் ஒட்டியிருந்த ரியூப், ஒரு பெடல், என்று அவருக்கே உரித்தான சில பொருட்கள். பெரிய கிலிசைகேடாய்ப் போய்விட்டது.

மிகுந்த கற்பனை வளம் உள்ள மனிதரைத் தவிர்த்து வேறுயாரால் இப்படிச் செய்யமுடியும்.?

எனது ஒன்றிரண்டு சிறுகதைகளில் ஐயாத்துரை மாஸ்ரர் என்று ஒருவர் இருந்திருப்பார். அதுவொரு நிஜமான பாத்திரம்தான். அவரிடம் நான் நாடகங்கள் பழகியிருக்கிறேன். எப்பொழுதும் பெண்வேஷம்தான் கிடைக்கும். வேஷங்களுக்கான பொருட்களை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் எல்லோரும் தயார் செய்வார்கள். என்னிடம் மட்டும் நீண்ட கூந்தல் மயிரும், இரண்டு பாதிச் சிரட்டைகளும் நிரந்தரமாயிருந்தன. அதைப்பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். அப்படியொரு சிவராத்திரிநாள், கிளம்பிப்போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானத்தில் நான்கு வெளிச்ச வட்டங்கள், வண்ணங்களில் வெடித்துப்பெரிதாகித் தூர்ந்தன. இராணுவத்தினரின் பரா லைற் அப்படி ஒளிர்வதில்லை. அது வெளிர்நிறம். இத்தனை அழகில்லை.

fireworks-6Fire works என்ற வார்த்தையைக்கூட நாங்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. முதலில் ஏதாவது வெடிபொருட்களாயிருக்கலாம் என்று பயந்தோம். இந்தியக்கடலில் உதவிகேட்கும் கப்பல் ஒன்றின் சமிக்ஞையாக இருக்கலாமென்றோ, அல்லது கடற்படையினர் ஒருவித கொண்டாட்ட மனநிலையில் ஏவியிருக்கலாமோ என்பதையெல்லாம் யோசிக்கிற அறிவுமட்டம் குறைவு.

ஐயாத்துரை மாஸ்ரர், திடீரென்று கைகளை மேலே குவித்து, என்ரை சிவபெருமானே வந்துட்டீரோ என்று கதறினார். பிள்ளைகாள் இந்த வருஷப் பஞ்சாங்கத்தில் சிவராத்திரியன்று இப்படி நடக்குமென்று உள்ளது. பார்க்கக் கிடைத்தவர்களுக்கு முத்தி நிச்சயம். எல்லோரும் கும்பிட்டுக்கொள்ளுங்கள்..

நல்லவேளையாக ஐயாத்துரைமாஸ்ரர் வழமையாகப்பாடும் தோடுடைய செவியனைப்பாட முயற்சிக்கவில்லை. நாங்களெல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டோம். எனக்கென்ன ஆச்சரியமென்றால், சைக்கிள் கேப்பில – ஐயாத்துரைமாஸ்ரர் பஞ்சாங்கக் கதையை எப்படிப் புனைந்தார் என்றுதான். அவர் புனையக்கூடிய ஆள்த்தான். ஒருமுறை அவரது நாடகமொன்றில் இராமன், தன்னிடமுள்ள ஈட்டியை நிலத்தில் குத்த அவ்விடத்திலிருந்து தண்ணீர் சீறிப்பாய்வதுபோல ஒரு காட்சியிருந்ததாம். அதனால் மேடைக்கு கீழே ஒருவனை தண்ணீர் பைப்போடு இருத்தி, இராமன் ஈட்டியைக் குத்தியதும் தண்ணீரைப் பாய்ச்சு என்று சொல்லியிருந்தாராம். அவனோ இராமன் எப்பொழுது குத்துவான் என்று அத்துவாரத்திலேயே கண்ணை வைத்திருக்கிறான். குத்து கண்ணில் இலேசாகப்பட்டுவிட்டது. நிலைகுலைந்து மீள்வதற்குள் காட்சி முடிந்துவிட்டது. அடுத்தகாட்சியில் மழைவேண்டி யாகம் வளர்த்தார்களாம். ஓமகுண்டலத்தைச் சுற்றியிருந்த முனிவர்கள் தீவளர்த்து வானத்தையே பார்த்தபடியிருக்க, திடீரென்று ஓமகுண்டலத்திலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்ததாம். முனிவர்களாக நடித்த சிறுவர்கள் கலவரப்பட்டு எழும்பி ஓட, திரையை மூடியபோது ஐயாத்துரை மாஸ்ரர் அறிவித்தாராம்.

“இப்படியாக யாகத்தின் மகிமையுணர்ந்த பூமாதேவி, தன்னையே பிளந்து தண்ணீரைப் பாய்ச்சலானாள்..”

By

Read More

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர்  சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும் அதே புலி. கழுத்தினில் சுற்றப்பட்டு மார்பினில் தொங்கிய மிதமான குளிரைத்தாங்கும் சிவத்த கம்பளிச் சால்வையின் இரு முடிவிடங்களிலும் இரண்டு புலிகள் பாய்ந்தன. கன்னங்களில் மெல்லிய கறுத்தக்கோடாக தாடியை இழுத்திருந்தவனும், தாடையில் குஞ்சுத்தாடியை விட்டிருந்தவனும், சொக்கிலேட்டுக்கும் குங்குமக்கலருக்கும் இடைப்பட்ட வண்ணத்தில் நெற்றியில் புரண்ட தலைமுடியை நிறம் மாற்றியிருந்தவனுமாகிய அவ் இளைஞனை குமாரசூரியன் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமா எனப் பிரயத்தனப்பட்டார். மேலும் இரண்டொரு தடவைகள் நெற்றியைத் தேய்த்துக் கொண்டார்.
சுமார் பதின்மூன்று, பதின்நான்கு வருடகால அகதித் தஞ்ச மொழிபெயர்ப்பு அனுபவத்தில் நுாற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கடந்தவர், தனியே இந்த இளைஞனை மட்டும் நினைவு வைத்திருக்க நியாயப்பாடு எதுவும் இல்லைத்தான். இருந்தாலும் இவனுக்கான மொழிபெயர்ப்பாளராக தானேயிருந்து அவனிடம் விஷேட கதைகள் ஏதேனுமிருந்திருப்பின் அவனை அடையாளம் காண்பதொன்றும் சிரமமான காரியமில்லையென்று குமாரசூரியர் நினைத்தார்.

அப்படி நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய பல கதைகள் குமாரசூரியரின் தொண்டைத்தண்ணீரை வற்றவைத்து அடுத்த வார்த்தை பேசவிடாமல் தடுத்திருக்கின்றன. நெஞ்சடைத்துப் போகும். ஜெர்மன் மொழியில் வார்த்தைகளைக் கோர்க்கமுடியாமல் திகைத்தவர் போல உட்கார்ந்திருப்பார். திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்களை இராணுவம் சுட்டதில் செத்தவனின் தம்பியின் விசாரணைக்கு குமாரசூரியர் போயிருந்தார். அவனுக்கு பதினெட்டு வயதுகளே இருந்தது. அண்ணனை விட இரண்டு வயதுகள் இளையவனாயிருந்தான். அவன் ஒரு புகைப்பட அல்பத்தினையும் சில பத்திரிகைகளையும் கொண்டு வந்திருந்தான். அல்பத்தில் ஒன்றாய் சைக்கிளில் உட்கார்ந்தபடி, தோளினை அணைத்தபடி, தலைக்குப் பின்னால் கொம்பு முளைத்தது போல விரல்களைக் காட்டியபடி என அண்ணனோடு சேர்ந்து எடுத்த படங்கள் இருந்தன.  பத்திரிகையின் முன்பக்கத்தில் செய்தியோடு அண்ணனும் இன்னும் நான்கு மாணவர்களும் செத்துக் கிடந்த படம் வண்ணத்தில் இருந்தது. அண்ணனின் நெற்றியில் திருநீற்றுக் கீறும் சந்தனப் பொட்டும் அழியாதிருந்தன. விழிகள் திறந்திருந்தன. அவற்றில் மரணபயம் உறைந்திருந்ததாய் குமாரசூரியருக்குத் தோன்றியபோது நெஞ்சடைப்பதாய் உணர்ந்தார். மனதிற்குள் “யேசுவே” என்று உச்சரித்தார்.

அவன் பத்திரிகையையும் அல்பத்தினையும் விசாரணையாளனிடம் கொடுத்தபோது கண்கள் நீரைக் கசியத்தொடங்கின. துடிக்கும் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கப் படாதபாடு பட்டான். முடியவில்லைப் போலிருந்தது. தலையை முழுவதுமாகத் தாழ்த்திக் கொண்டான்.  விசாரணையாளன் பத்திரிகையின் படத்தையும் அல்பத்தின் படங்களையும் பார்த்தபடியிருந்தான். “ஏன் அண்ணாவைச் சுட்டார்கள். அவர் இயக்கத்திலேதாவது இருந்தாரா” என்று கேட்டான். குமாரசூரியன் “தம்பி” என்றார். அவன் நிமிர்ந்தானில்லை. “தம்பி உம்மடை அண்ணை இயக்கத்தில இருந்தவரோ..”

அவனில் அழுகை வெடித்திருந்தது. உடல் குலுங்கி அழத்தொடங்கினான். அப்பொழுதும் அழுகையை எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டுமென அவன் பிரயத்தனப்படுவது தெரிந்தது. மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்கிற பெண்ணும் கதிரையைத் திருப்பி அவனைப் பார்த்தபடியிருந்தாள். கரித்தாஸ் நிறுவனம் அனுப்பி வைத்திருந்த பெண்ணுக்கு பத்தொன்பது இருபது வயதுகளே இருக்கும். அவளும் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டு மௌனமாயிருந்தாள். கீச்சிட்ட ஒலியையொத்த அவனது அழுகையைத் தவிர்த்து அந்த அறையில் நிசப்தம் நிரவியிருந்தது. விசாரணையாளன் ஒன்றிரண்டு தடவைகள் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். பெரும்பாலும் விசாரணையை அவன் இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்கக் கூடுமென குமாரசூரியர் எதிர்பார்த்தார். அப்பொழுது அழுகையை நிறுத்தியவன் நிமிர்ந்து கண்ணீரை புறங்கையால் அழுத்தித் துடைத்தான்.  “சொறி..”

“அண்ணன், பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். அவர் இயக்கங்களில் தொடர்பு பட்டிருக்கவில்லை. அப்பொழுது அச்சமான சூழலும் நிலவியிருக்கவில்லை. போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. அண்ணனும் அவனது நண்பர்கள் ஆறுபேரும்  கடற்கரை சென்று திரும்பியிருந்தார்கள். எந்தப் பதற்றமும் நகரில் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னேரப் பொழுது இருக்கும். அவனின் கைத்தொலைபேசியில் இருந்து  வீட்டிற்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவன் அப்பாவிடம் பேசினான். அவனது குரல் அச்சமுற்றிருந்தது. இராணுவம் தங்களை கடற்கரை வீதியில் தடுத்து வைத்திருப்பதாகவும், நிறைய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னான். அப்பா அவனை பதட்டப்படவேண்டாம். அடையாள அட்டையில் மாணவன் என்று உள்ளது. அதனை அவர்களிடம் காட்டு என்றார். அண்ணன் அவசர அவசரமாக நான் பின்னர் கதைக்கிறேன் என்று தொடர்பை துண்டித்துக் கொண்டான். அப்பா அவனைப் பார்த்துவரப் புறப்பட்டார். அவர் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நிலம் அதிரும் தனித்தனி வெடிகள். நான் எதையெல்லாமோ யோசிக்கத்தொடங்கினேன். அம்மா பதட்டமுற்றிருந்தார். நான் அண்ணனுக்கு தொலைபேசியில் அழைப்பெடுக்க முயற்சித்தேன். அழைப்பு போய்க்கொண்டிருந்தது. பதில் இல்லை.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அப்பாவின் செய்தி வந்து அம்மாவைச் சைக்கிளில் ஏற்றி ஓடி அடைந்தபோது அண்ணன் செத்துப் போயிருந்தான். அவனோடு இன்னும் நான்குபேர் இரத்தம் வழிய மணலுக்குள் புரண்டு கிடந்தார்கள். நெஞ்சையும் வயிற்றையும் தோள்மூட்டையும் துப்பாக்கி ரவைகள் சல்லடையாக்கியிருந்தன. அண்ணா தொலைபேசியை பற்றியபடியிருந்தான். அதில் இரண்டு இலக்கங்களின் தவறவிடப்பட்ட அழைப்புக்கள் நிறைய இருந்தன. ஒன்று எங்களது வீட்டு இலக்கம். மற்றையது அவனோடு படித்தவளது இலக்கம். எனக்கு அவளைத் தெரிந்திருந்தது.
அண்ணாவின் செத்த வீட்டிற்கு அவள் வந்தே தீருவேன் என புரண்டழுது பிடிவாதம் பிடித்தபோது அவளது அம்மா வந்து அப்பாவோடு பேசினார். அப்பா அவரைத்தனியாக அழைத்துச் சென்று “இன்னமும் காலமும் வாழ்வும் இருக்கிற பிள்ளை அவள். அவளை அழைத்து வந்து ஊர் கண்ணுக்குக் காட்ட வேண்டாம்.” என்றார்.  பின்னாட்களில் அவளைக் காண்கிற போதெல்லாம் அம்மா பெரும் குரலெடுத்து அழுது தீர்த்தார்.

செத்தவீடு முடிந்த இரண்டொரு நாளில் மிரட்டல்கள் வரத்தொடங்கின. அண்ணாவின் மரணம் பற்றி யாருக்கும் முறையிடக்கூடாதென்றும் வெளிநாட்டு அமைப்புக்களிற்கு தெரியப்படுத்தக் கூடாதென்றும் தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. கூடவே இன்னொரு மகனையும் இழக்க விருப்பமா என்ற கேள்விகள்.  கொதித்துக் கொண்டிருந்த அப்பா அடங்கிப்போனார். நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாகிப் போனோம்.

வழக்குகளில் எனக்கு நம்பிக்கையிருக்கவில்லை. எந்த வழக்கின் முடிவும் அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எந்த வழக்கின் முடிவும் எனது அண்ணனை மீளத்தரவும் போவதில்லை. என்ன கேட்டீர்கள், அண்ணனை ஏன் சுட்டார்கள் என்றா..? ஏன் சுட்டார்கள் என்று எங்களுக்கு இதுவரை புரியவேயில்லை.  அண்ணனும் அறிந்திருக்க மாட்டான். சுட்டவர்களிடம் கூட காரணமேதுமிருந்திருக்காது அவன் ஒரு தமிழன் என்பதைத் தவிர.. ”

இறுதிச் சொற்களை மொழிபெயர்த்தபோது குமாரசூரியர் தழுதழுத்தபடியிருந்தார். அவனது வார்த்தைகளில் உண்மை இழைந்து கிடந்ததாக பரிபூரணமாக நம்பினார். விசாரணையாளன் எப்பொழுதும் போல விறைத்த தலையனாக முகத்தை வைத்துக்கொண்டிந்தாலும் தட்டச்சுகிற வெள்ளைப் பெண்ணின் முகத்தில் துயரம் படிந்திருந்தது. கரித்தாஸ் பெண் கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தாள்.

இப்படி மற்றுமொரு அகதித்தஞ்ச விசாரணையையும் குமாரசூரியரால் மறக்க முடியாதிருந்தது. அந்த விசாரணை ஒரு கொலைவழக்கு விசாரணையாகாமல் அவர் தடுத்திருந்தார். அவனுக்கு முப்பது முப்பத்தொரு வயதிருக்கலாம். விசாரணை முழுவதும் ஒருவித மன அழுத்தத்தோடு இருந்தான். நிறையக்கேள்விகளுக்கு எரிச்சலோடும் எடுத்தெறிந்தும்  பதில் சொன்னான். அவற்றை மிகப்பணிவான பதில்களாக குமாரசூரியர் மொழிபெயர்த்தார். மூன்று மணிநேரமாக அவனது கேள்விகளும் பதில்களும் குறுக்கு விசாரணைகளுமாகப் போய்க்கொண்டிருந்தது. அவன் சொன்னான். “கல்யாணம் கட்டின கொஞ்ச நாட்களிலேயே தேடத் தொடங்கி விட்டார்கள். ஓட வேண்டியதாய்ப் போனது. ஊரில் மனைவி இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறா. மூன்று மாதம்.. அவவுக்கு பக்கத்தில் இருக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. குழந்தை பிறக்கும் போது முகம் பார்க்கவும் கொடுத்து வைக்கவில்லை. நினைக்கும் போது அந்தரமாயும் விரக்தியாயும் இருக்கிறது.”

விசாரணையாளன் நிமிர்ந்து கண்ணாடிக்கு கீழாகப் பார்த்தான். அவன் அடுத்ததாகக் கேட்ட கேள்வியில் குமாரசூரியரே திக்குமுக்காடிப் போனார். தமிழில் வார்த்தைகளை கோர்த்தபோது மூளை விறைத்தது. க்ளாசிலிருந்த தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“நல்லது, உம்மடை மனைவி ஊரில மூன்றுமாதக் கர்ப்பம் என்று சொல்லுறீர். ஆனால் இவர் என்ன கேட்கிறார் என்றால், நீர் ஊரைவிட்டுவந்தும் மூன்று மாதங்கள் ஆகிறது என கோரிக்கையில் உள்ளது. அதனால நீர் எப்படி அது உம்மடை பிள்ளைதான் என்று உறுதியாச் சொல்லுவீர்..? அது இன்னொராளின்ரை …” குமாரசூரியர் வார்த்தைகளை முடிக்கவில்லை.

அவன் மேசையில் இரண்டு கைகளாலும் சடார் என்று அடித்து எழுந்தான். கதிரையைத் தலைக்குமேலே ஓங்கி வித்தியாசமான குரல் எழுப்பிக் கத்தினான். தனது தலையே சிதறப்போகிறது என கைகளால் தலையைப் பொத்திய குமாரசூரியர் “லுார்த்ஸ் மாதாவே, காப்பாற்றும்” என்று கத்தினார். தட்டச்சு செய்தவள் எழுந்து ஓடி சுவரோடு ஒடுங்கி நின்றாள். அவன் ஓங்கிய கதிரையோடு விசாரணை அதிகாரியை நோக்கி இரண்டு எட்டு வைக்கவும்தான் சுதாகரித்த குமாரசூரியர் சட்டென்று எழுந்து அவனைப் பின்புறத்தால் கட்டிக்கொண்டார். அவன் திமிறினான். “என்னை விர்றா, இந்த நாயை இண்டைக்கு கொல்லாமல் விடமாட்டன்..”

“தம்பி, சொன்னாக் கேளும், பிறகு எல்லாம் பிழைச்சுப் போயிடும், உடனடியா கதிரையைக் போட்டுட்டு என்ன ஏதென்று தெரியாமல் கீழை விழும்.. மிச்சத்தை நான் பாக்கிறன்..”

அவன் என்ன நினைத்தானோ கதிரையை ஓரமாக எறிந்துவிட்டு நின்ற இடத்தில் கீழே விழுந்து கால்களிரண்டையும் நீட்டி விரித்து மேலே பார்த்து விசும்பி அழத்தொடங்கினான்.

குமாரசூரியர் விசாரணையாளனைச் சமாதானப்படுத்தினார். அவனது முகம் இறுகியிருந்தது. சற்றுப் பயந்தது போலவும் தோன்றிற்று. “மன்னிக்க வேண்டும். எங்களது கலாச்சாரத்தில் ஒருவனைக் கோபப்படுத்தவும், கேவலப்படுத்தவுமே இப்படியான கேள்விகளைக் கேட்பதுண்டு. அவை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடியாக் கேள்விகள்  ” விசாரணையாளன் தோள்களைக் குலுக்கி “ஊப்ஸ்” என்றான். விசாரணை மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ma3குமாரசூரியர் ஒரு வழக்கறிஞர் அல்ல. வழக்கு எழுதுபவரும் அல்ல. இன்றைய நாளில் ஒரு வழக்கு எழுதுவதற்கு ஐநுாறிலிருந்து ஆயிரம் பிராங்குகள் வரை வாங்குகிறார்கள். இலங்கைப் பிரச்சனையின் தேதி வாரியான முக்கிய சம்பவங்களின் புறப்பின்னணியில் புதிய கதை மாந்தராக தஞ்சக் கோரிக்கையாளரை உள் நுழைத்து புனையும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தால் போதும். வழக்கு எழுதியே பிழைத்துக் கொள்ளலாம். குமாரசூரியர் அந்த ஆற்றல் அற்றவர். அவர் வெறும் மொழிபெயர்ப்பாளர். அவரால் வழக்கு விசாரணையைத் தலைகீழாக மாற்றிவிடமுடியாது. ஆயினும் விசாரணைக்கு வருபவர்கள், கெஞ்சும் குரல்களால் “ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். எப்பிடியாவது கார்ட் கிடைக்க ஏதாவது செய்யுங்கோ” என்பார்கள்.

அவராலும் செய்ய முடிந்த ஒன்றிரண்டு காரியங்கள் இருக்கத்தான் செய்தன. விசுவநாதனின் முகம் குமாரசூரியரின் நினைவில் நிற்கிறது. அவனது இரண்டு விசாரணைகளுக்கும் அவரே மொழிபெயர்ப்பாளராயிருந்தார். அதுவொரு தெய்வச் செயல் என்றே கருதினார். அவனது முதலாவது விசாரணை வெறும் அரைமணி நேரத்தில் நடந்தது. குறுக்கு விசாரணைக் கேள்விகள் எதுவும் இருக்கவில்லை. வெறுமனே அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டு பதிவு செய்து கொண்டார்கள். இரண்டாவது விசாரணை ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நடந்தது. விசுவநாதன் சற்றே உடல்பருத்திருந்தான். முன்னரைப்போல கன்னத்தசைகள் உப்பியிருக்கவில்லை. ஆனாலும் குமாரசூரியர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். “ஒன்றரை வருடங்களாக முடிவேதும் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வந்த நேரம், கனடாவிற்குப் போயிருக்கலாம்” என்று சலித்துக் கொண்டான். அன்றைய விசாரணை ஐந்து மணிநேரத்திற்கு நீடித்தது. விசுவநாதன் கூறிக்கொண்டிருந்தான். “என்னை சிங்கள இராணுவத்தினர் கட்டியிழுத்து ட்ரக்குகளில் ஏற்றினர்..” என்றபோது அவன் இடைமறிக்கப்பட்டான்.

“உங்களை அவர்கள் எதனால் கட்டியிருந்தனர்..”

விசுவநாதன் போகிற போக்கில் “கயிற்றால்” என்றுவிட்டு மேலும் சொன்னபடியிருந்தான். குமாரசூரியருக்கு சட்டென்று பொறி தட்டியது போலயிருந்தது. அவர் தனது நினைவு இடுக்குகளில் அவனது முதல் விசாரணை நாளைத் தேடினார். தனது ஞாபகத்தை ஒருமுறை நிச்சயப்படுத்திக்கொண்டார். இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்தார்கள் என குமாரசூரியர் மொழிபெயர்த்தார். சென்றதடவை விசுவநாதன் அப்படியே சொல்லியிருந்தான் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

கயிறும் சங்கிலியுமாகக் குழப்பினால் என்ன நடக்கும் என்று குமாரசூரியருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. வழக்கு நிராகரிக்கப்பட்ட கத்தையான தாள்களில் ஏதேனும் ஒன்றில், இரண்டு விசாரணைகளிலும் மாறுபாடான தகவல்களைத் தந்துள்ள காரணத்தினால் வழக்கில் உண்மைத்தன்மை இல்லாமற் போகிறது என்றும் இன்னோரன்ன காரணங்களினால் தஞ்சக் கோரிக்கையை ஏற்க முடியாதுள்ளது. நபர் முப்பது நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எழுதப்பட்ட கடிதமொன்று விசுவநாதனுக்கு அனுப்பப்பட்டிருக்கும். வழக்கின் முடிவில் அவனுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஒரு காரணம் குறைந்திருக்கும் என்பது குமாரசூரியருக்குத் தெரிந்திருந்தது.

இப்போதெல்லாம் வழக்கு விசாரணைகளில் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிராகரிப்பிற்கான காரணங்களைத் தேடுகிறார்கள். சிறிய தகவல் பிழைகளும் நிராகரிப்பில் கொண்டு வந்து நிறுத்தின. குமாரசூரியர் தன்னால் முடிந்ததைச் செய்தார். கேள்விகளை தமிழ்ப்படுத்தும்போது சொற்களோடு சொற்களாக “முகத்தைச் சரியான கவலையா வைச்சிரும்” என்றோ “நாட்டுக்கு அனுப்பினால் கட்டாயம் என்னைக் கொலை செய்வாங்கள் என்று அடிச்சுச் சொல்லும்” என்றோ அவரால் சொல்லமுடிந்தது. அவருக்குத் தெரியும். இவையெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாதவை. ஆயினும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குமாரசூரியரும் அகதித்தஞ்சம் கேட்டே இங்கே வந்திருந்தார். ஆதலால் அப்படி வருபவாகள் மீது இப்போதும் இரக்கமாயிருந்தார்.

அப்போதெல்லாம் இன்றைய விசாரணைகளைப்போல நீண்ட கேள்விளும் நிறையப்பதில்களும் ஏகப்பட்ட காரணங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை. குமாரசூரியரிடம் இருந்தது ஒரேயொரு காரணம்தான். அல்பிரட் துரையப்பாவைத் துளைத்த குண்டு, பாய்ந்து வந்த கோணத்தை வைத்துப் பார்க்கும் போது அது சற்றுக் கட்டையான மனிதனால் சுடப்பட்ட குண்டென்றும் அது காரணமாய் ஊரில் உள்ள கட்டையான மனிதர்களைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொல்கிறார்கள் என்றும் தானுமொரு கட்டையன் என்பதால் தன்னையும் கொல்வது நிச்சயம் என்று குமாரசூரியர் சொன்னார்.  விசாரணை அதிகாரியும் ஒரு கட்டையனாக இருந்ததாலேயோ என்னவோ அவரது வழக்கு வெற்றியடைந்தது. அந்த வருடம் எண்பது கட்டையர்களுக்கு விசாக் கொடுத்தார்கள்.

0 0 0

“பெயர் சொல்லுங்க”

“பிரதீபன்”

“வேறு பெயர்கள் உண்டா?”

பிரதீபன் சற்றுக் குழம்பினான். கண்கள் அகல விரிந்து முழிப்பது போலிருந்தது. பள்ளிக்காலத்தில் அவனுக்கு முழியன் என்றொரு பட்டப்பெயர் இருந்தது. அதனைச் சொல்லலாமா என யோசித்தான். “அதாவது ஏதேனும் இயக்கங்களிலோ அமைப்புக்களிலோ வேறு பெயர்களில் இயங்கியிருந்தால் அவற்றைச் சொல்லவும்” என்றார். பிரதீபன் இல்லையென்று தலையைப் பலமாக அசைத்து மறுதலித்தான்.

“வாயால் சொன்னால்தான் அதுவொரு ஆவணமாகும்.”

“இல்லை. வீட்டில் தீபன் என்று கூப்பிடுவார்கள், அதை விட வேறு பெயர் ஒன்றும் இல்லை.”

“சுவிற்சர்லாந்தில் வந்து இறங்கிய இடம்..”

“சூரிச் தொடரூந்து நிலையம்”

“பயண வழி”

“இலங்கையிலிருந்து துபாய் அங்கிருந்து ஆபிரிக்காவில் பெயர்தெரியா நாடொன்று, அங்கிருந்து இத்தாலி பின்னர் தொடரூந்தில் சூரிச்”

“யார் அழைத்து வந்தார்கள்”

“யாரும் அழைத்து வரவில்லை. இத்தாலியின் மிலானோ நகரில் தொடரூந்தில் ஏற்றி விட்டார்கள். வந்து இறங்கினேன்..”

“யார்..”

“தெரியவில்லை.

“பயணம் முழுமைக்கும் எவ்வளவு காலம் செலவாயிற்று”

“ஆபிரிக்காவில் மொத்தம் ஒன்றரை வருடங்களும் இத்தாலியில் இரண்டு நாட்களும்”

“பாஸ்போட் எங்கே”

“பாஸ்போட் என்னிடமில்லை.. அதனை அவர்கள் வாங்கிவிட்டார்கள்.”

“வேறும் ஏதாவது நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியுள்ளீரா, அது நிராகரிக்கப்பட்டுள்ளதா”

“வேறெந்த நாட்டிலும் அகதித் தஞ்சம் கோரியிருக்கவில்லை. ஆதலால் நிராகரிக்கவும் இல்லை”

நிமிர்ந்து உட்கார்ந்த விசாரணை அதிகாரி பிரதீபனை கண்ணும் கண்ணுமாகப் பார்த்தான். பிரதீபன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். அவை கணத்திற்கொருமுறை உலர்வது போலயிருந்தது. முகத்தைத் தாழ்த்திக் கொண்டான்.

“சிறிலங்காவில் பொதுவாக என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிக நன்றாகத் தெரியுமாதலால் நீங்கள் உங்களுக்கு அங்கே உயிர்வாழ முடியாத அளவிற்கு என்ன நடந்ததென்பதை மட்டும் சொல்லுங்கள்” என்ற முன்னறிவிப்போது விசாரணையாளன் ஆரம்பித்தான். “நீங்கள் இங்கே அகதித்தஞ்சம் கோருவதற்கான காரணங்கள் என்ன..?”

தஞ்சம் கோருவதற்கான காரணம் ஒன்று

பிரதீபன் ஆகிய நான் யாழ்ப்பாணத்தில் படித்தேன். உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழகம் நுழைவதற்கு முடிவுகள் போதாது இருந்தபோது இரண்டாவது முறையாகப் பரீட்சைக்குத் தோற்றலாம் என்றிருந்தேன். அப்பொழுது இலங்கையில் சமாதானப்பேச்சுக்கள் ஆரம்பித்தன. அதன்படி புலிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து அலுவலகங்களை அமைத்தார்கள். புலிகளும் இராணுவமும் வீதிகளில் கைகுலுக்கிப் பேசியதை நான் கண்டேன். அவ்வாறான படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகின. அதனால் அச்சமற்று நாமும் புலிகளோடு கைகுலுக்கிப் பேசினோம். எனது ஊரின் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒரு விடியற்காலை பிரபாகரனின் ஆளுயரக் கட்அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவத்தினர் சிரித்தபடி பார்த்து நின்றனர்.

புலிகள் தம்முடைய பிரதேசங்களில் நிர்வாகம் மற்றும் வங்கிப் பணிகளுக்கு ஆட்களை வேலைக்குக் கேட்டிருந்தார்கள். வன்னியில் இறுதிநேரம் நடந்த சண்டைகளால் அங்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் குறைவாக இருந்தார்கள். பலர் படிப்பினை இடைநிறுத்தி புலிகளில் இணைந்திருந்தார்கள். ஆயினும் நிர்வாக வேலைகளுக்கு படித்த ஆட்களே தேவைப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தார்கள். நான் அவர்களிடத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

கிளிநொச்சியில் தமிழீழ வைப்பகத்தில் எனக்கு கணக்காளர் வேலை கிடைத்தது. வாரத்திற்கு ஒருதடவையோ, இரண்டு தடவையோ யாழ்ப்பாணம் போனேன். மற்றைய நோட்களில் கிளிநொச்சியிலேயே தங்கியிருந்தேன். முகமாலை சோதனைச்சாவடி இராணுவத்திற்கு நான் கிளிநொச்சியில் புலிகளது வங்கியில் வேலை செய்வது தெரிந்திருந்தது.

இப்படியிருந்தபோது திடீரென்று புலிகள் தங்களது அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குப் போனார்கள். சமாதானம் குழம்பப்போகிறது கதை உலாவியது. அதற்குப் பிறகும் நான் சற்றுக்காலம் கிளிநொச்சியில் வேலை செய்தேன். இரண்டாயிரத்து ஐந்தாம் வருடம் டிசம்பரில், நான் வேலையை விட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். இரண்டாயிரத்து ஆறு ஒக்டோபரில் இராணுவத்தினர் வீட்டில் வைத்து என்னைக் கைது செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஒபரேஷன் போல அதனைச் செய்து முடித்தனர். அதிகாலையில் கிணற்றடியில் பதுங்கியிருந்தவர்கள் நான் ரொய்லெட்டிற்கு தண்ணீர் எடுக்க வரும்போது பாய்ந்து அமுக்கினர். அப்பொழுது எனது முதுகில் துப்பாக்கியின் பின்புறத்தால் குத்தினார்கள்.

புலிகளோடு தொடர்பு வைத்திருந்தேன், புலிகளுக்காக வேலை செய்தேன், புலிகளது பணத்தை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்தேன் இவற்றோடு ஊரில் பிரபாகரனுக்கு கட் அவுட் வைத்தேன் என்றெல்லாம் சொல்லி ஒரு வாரகாலமாக என்னை அவர்கள் சித்திரவதை செய்தார்கள். சித்திரவதையின் போது “சமாதான காலத்தில் எங்களது கைகள் கட்டப்பட்டிருந்தன. ஆயினும் கண்கள் திறந்தே இருந்தன” என்று இராணுவ வீரன் ஒருவன் சொன்னான். அவர்கள் பேசியதிலிருந்து என்னைக் கொல்வதற்கு அவர்கள் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டேன். இதற்கிடையில் கொழும்பில் இருக்கின்ற மாமா பெருந்தொகைப்பணத்தை இராணுவத்திற்கு கொடுத்து என்னை விடுவித்தார். பணத்தை வாங்கிக்கொண்டு என்னை விடுதலை செய்ததனால் கைதை உறுதிசெய்யும் ஆவணங்களை என்னால் பெறமுடியவில்லை.

தஞ்சம் கோருவதற்கான காரணம் இரண்டு

யாழ்ப்பாணத்தில் உயிராபத்து நிறைந்திருந்தது. நான் கொழும்பிற்குப் புறப்பட்டேன். கொழும்பில் எனது மேற்படிப்பைத் தொடர்வதும் நோக்கமாயிருந்தது. ஒருநாள் ரியுசனுக்கான வழியில் ஒரு பின்னேரப்பொழுதில் வெள்ளவத்தை நெல்சல் ஒழுங்கையில் வைத்து என்னை வாகனமொன்றிற்குள் தள்ளித் திணித்து ஏற்றினார்கள். நான் திமிறியபோது என் பிடரியில் கனமான இரும்புக் கம்பியினால் தாக்கினார்கள். அவர்கள் தம்மை ஈபிடிபி என்று அறிமுகப்படுத்தினார்கள்.

கிளிநொச்சியில் வேலை பார்த்தது, பின்னர் இராணுவம் கைது செய்தது என சகல செய்திகளையும் அறிந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோதே கன்னத்தில் அடித்தார்கள். அவர்களுக்கு அதுவொரு விளையாட்டுப் போலிருந்தது. சிரித்துச் சிரித்து அடித்தார்கள். அப்படி அடிக்கிற போது அவர்களில் ஒருவன் கேட்டான். “நீ ஆமிக்கு மட்டும்தான் காசு குடுப்பியா, எங்களுக்குத் தரமாட்டியோ”
அவன் கேட்ட தொகை இராணுவத்தினருக்கு எனது மாமா அளித்த அதே தொகையாயிருந்தது. உங்களுக்கு புரியும். இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் திட்டமிட்டு இதனைச் செய்தனர். இம்முறையும் மாமாவே பணம் கொடுத்தார். வெளிநாட்டிலிருந்த ஒன்றிரண்டு சொந்தக்காரர்களும் உதவியிருந்தனர்.

பன்னிரெண்டாவது நாள் அவர்களே என்னை வீதியில் விடுவித்து திரும்பிப்பாராமால் நடக்கச் சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டதை என்னால் தெளிவாக கேட்க முடிந்தது. ஒருவன் சொன்னான். “இவனொரு பொன் முட்டை இடுகிற வாத்து. வாத்தை உடனேயே அறுத்துவிடக் கூடாது” அப்பொழுது அருகிருந்தவன் பெருங்குரலில் சிரித்தான். அறுக்கிறது என அவர்கள் பேசிக்கொண்டது கொலை செய்வதையே. உங்களுக்கு பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியாது போனால் அதனையும் நானே சொல்கின்றேன். ஒரு ஊரில் ஒரு குடியானவனிடம் ஒர பொன்முட்டையிடும் வாத்து இருந்தது. ………………………………..

தஞ்சம் கோருவதற்கான காரணம் மூன்று

யாழ்ப்பாணம், கொழும்பு என கொலை என்னைத் துரத்தியபடியிருந்தது. முழு இலங்கையும் என்னை அச்சறுத்தியது. இலங்கைக்கு வெளியே ஓடித்தப்பினால் அன்றி வேறு வழியில்லை என்றானபோது மாமா அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதுவரையான நாட்களுக்கு என்னைப் பதுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இராணுவம், கொழும்பில் ஈபிடிபி, மட்டக்களப்பில் கருணா குழு, மலையகத்தில் “வசதிக்குறைவு” என்ற காரணங்களால், வவுனியாவில் ஒளிந்து கொண்டேன். அங்கேயும் புளொட் பிரச்சனை இருந்ததுதான். இருந்தும் வேறு வழியில்லை. மாமா ஏற்பாடுகளைக் கவனிக்கும் வரை வவுனியாவில் தங்கியிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே இறங்கியதில்லை. வீட்டின் சுவர்களுக்குள் முடங்கியிருந்தேன். அவஸ்தையான வாழ்க்கை அது. இரண்டு மாதங்களைக் கடத்தினேன். பாஸ்போட் எடுப்பதற்காக மாமா உடனடியாக கொழும்பு வரச்சொன்ன அடுத்தநாள் கூமாங்குளம் என்ற கிராமத்து தெருவொன்றில் வைத்து, ஒரு ஓட்டோவில் என்னைத் தள்ளியடைந்து மோசமான ஆயுதங்களால் தாக்கினார்கள். பொல்லுகள், இரும்புக் குழாய்கள், நீண்ட கத்திகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகங்களை கறுப்புத்துணியால் மறைத்து மூடிக் கட்டியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் என்னோடு மட்டுமல்ல தமக்குள்ளும் பேசியிருக்கவில்லை. அவர்கள் புளொட்டாக இருக்கலாம், இராணுவ உளவுப்பிரிவினராக இருக்கலாம் ஆயினும் தாம் யாரென்றோ எதற்காக அடித்தார்கள் என்றோ எனக்கு இறுதிவரை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் கொலை வெறியொடு இருந்தார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்லமுடியும். நான் மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். கடவுள் கிருபையில் தெருவில் ஆட்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்தபோது அவர்கள் என்னை விட்டு ஓடினார்கள். நான் காப்பாற்றப்பட்டேன்.

நான் உணர்கிறேன். இலங்கையில் தொடர்ந்தும் வாழ்ந்தால் நிச்சயமாகக் கொல்லப்படுவேன் என்பதை இப்பொழுது நீங்களும் உணர்வீர்கள். அவர்கள் என்னைக் குறிவைத்து கொலை செய்ய அலைகிறார்கள். எனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்புவீர்களாக இருந்தால் இலங்கைக்குள் நுழைகிற வழியில் நான் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவேன். உயிர்வாழும் உரிமையை ஏற்பதும் மனிதாபிமானம் மிக்கதுமான இந்நாடு எனது உயிரைக் காத்துக் கொள்ள தஞ்சத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

0    0    0

இருபது தாள்களில் பிரதீபனின் வழக்கு ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. “வேறு ஏதாவது சொல்ல இருக்கிறதா” என்றான் விசாரணையாளன். பிரதீபன் இல்லை எனத் தலையாட்டிவிட்டு “இல்லை” என்றும் சொன்னான். அதிகாரி கத்தைத் தாள்களை மேசையில் தட்டி ஒன்றாக்கினான்.

“ஆகவே, உமக்கு, இலங்கையில் ஆயுததாரிகளான இராணுவம், ஈபிடிபி, கருணாகுழு, புளொட் அல்லது புலனாய்வுப் படை என்றறிய முடியாத ஒரு குழு போன்றவற்றால் உயிராபத்து உள்ளது என்கிறீர். உமது வாக்குமூலத்தின் அடிப்படையில் புலிகளால் உமக்கு உயிராபத்து ஏதுமில்லை. நல்லது. இப்பொழுது இந்த தாள்கள் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட வேண்டும்” என நீட்டினான்.

பிரதீபன் நாக்கைக் கடித்தான். “ஸ்ஸ்” என்றொரு சத்தமிட்டு இரண்டு கைகளாலும் தலையைப்பிடித்துக்கொண்டான். எதையோ நினைவு படுத்திக் கொள்பவனைப்போல கண்களை உருட்டினான்.  “எனக்கு இப்ப எல்லாம் நினைவுக்கு வருகுது. வவுனியால என்னை ஓட்டோவில கடத்திக்கொண்டுபோய் அடிச்சதெண்டு சொன்னன்தானே.. அது ஆரெண்டு விளங்கிட்டுது. அது புலிகள் தான். இதையும் என்ரை கேசில சேர்க்கவேணும். சேர்க்கலாமோ ” என்று கெஞ்சுவது போலக் கேட்டான். அதிகாரி நெற்றியைச் சுருக்கினான். “எப்பிடித் தெரியும்” என்றான்.

“ஓம்.. எனக்கு அடி மயக்கத்தில சரியா ஆட்களைத் தெரியேல்லை. இருந்தாலும் அவங்கள் சுத்தவர நிண்டு அடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவங்களில ஒருவருக்கு வோக்கியில மெசேச் வந்தது. அவர் நல்ல தமிழில கதைச்சவர். உங்களுக்குத் தெரியும்தானே. நல்ல தமிழிலதான் புலிகள் கதைக்கிறவை. அதுமட்டுமில்லாமல் கதைச்சு முடிய “ஓவர் ஓவர்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிட்டுத்தான் நிப்பாட்டினவர். இது எனக்கு தெளிவாகக் கேட்டது. நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அவர்கள் புலிகள்தான். ”

பிரதீபன் கடைசியாகச் சொன்னதனைத்தையும் குமாரசூரியர் ஜெர்மனில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

0 0 0

டிவியில் அந்த இளைஞன் இன்னும் இன்னும் உச்சமான ஸ்தாயியில் கத்தினான். “ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்” ஒவ்வொருமுறையும் குதிக்கால்களை உயர்த்தி உயர்த்தி அவன் கத்தினான். கமெரா அவனை நிறையத் தரம் முகத்தை மட்டும் காட்சிப்படுத்தியது. அவன் குறையாத வேகத்தோடிருந்தான்.
ஆனால் எத்தனை முயன்றும், குமாரசூரியரால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முன்னரே சொன்னதுபோல வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் அவரால் நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை.

-கனடா காலம் இதழிலும் பெயரற்றது தொகுப்பிலும் வெளியானது –

By

Read More

செங்கடல் படம் பற்றிய உரையாடல்

sengadal124.03.2013 சுவிற்சர்லாந்து சூரிச் நகரில், செங்கடல் படம் திரையிட்டதன் பின்பாக படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையுடனான கலந்துரையாடலின் காணொளிப்பதிவுகள்.

Youtube

By

Read More

× Close