அமல்ராஜ் பிரான்சிஸ்

மூன்றுவாரப் பயணம்… இன்றுதான் கடைசிப் பக்கத்தில் முட்டி பெரும் கனத்தோடு நிமிர்ந்திருக்கிறேன்.

ஆதிரை..!

இது சுமார் இரண்டு தசாப்தகால ஈழத்து வாழ்வியலின் அடுக்கு. வன்னி, புலிகள், போராட்டம், இறுதியுத்தம், முள்ளிவாய்க்கால், மெனிக்பாம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் புலிகள், மீண்டும் வன்னி என சுழலுகின்ற ஒரு பேரிடர்க்காலத்தின் அறியப்படாத முகம்.

அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து அதிக எதிர்பார்ப்புக்களோடு வெளியாகிய போர் சார் படைப்புக்களில் ஆதிரை முக்கியமானது என்றபோதுதான் அதை அவசரமாக படித்து முடித்துவிடவேண்டும் என்கின்ற ஏக்கம் தொற்றியது. அதை வாங்கி கையில் ஏந்தியபோதே அது கனத்தது (664 பக்கங்கள்!). வாசித்து முடிந்து அதை அலுமாரியில் செருகிய பின்னரும் கனக்கிறது. நம் இனத்தினுடைய ஆயுதப்போராட்டத்தையும் அதன் வழிசார் வாழ்வியலையும் நேரடியாக பார்த்து வளராத என்னைப்போன்ற ஒரு “அரச கட்டுப்பாட்டு” சமூகத்திற்கு இந்த ஆதிரை ஒரு வரலாற்றுப் படிப்பினையை நிகழ்த்தியிருக்கிறது.

வாசித்துக்கொண்டிருக்கையில் உணர்வுகளை அடக்க முடியாமல் அவ்வப்போது புத்தகத்தை மூடிவிட்டு ஜன்னல் பக்கம் ஓட வைக்கிறது. போரின் கடைசி நிமிடங்களிலான மனித அவலத்தையும் பின்னர் ஆதிரை பற்றிய கதையையும் சயந்தன் சொல்லும்போது மண்டை வெடிக்கிறது. புலிகள் எனப்படும் ஒரு கட்டமைப்பின் அகவியல்புகள், அதற்குள்ளிருந்து ups & downs, ஈழப்போராட்டத்தின் மீது அந்த “தமிழ்” இளைஞர்கள் கொண்டிருந்த வேட்கை, கடைசி நிலமும் கைநழுவும் வேளையில் அவர்களுக்குள்ளிருந்த உணர்வு ரீதியான உளவியல் போராட்டங்கள் போன்ற சிக்கல்தன்மைகளை ஆதிரை அழகாகப் பேசுகிறது.

ஒரு புனைவிற்கும் ஒரு வரலாற்று குறுப்பிற்கும் இருக்கும் இடைவெளியை இது தீர்க்கமாக போக்கியிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு வரலாற்று பதிவை புனைவு என்னும் கருவியினால் (tool) அழகியல் மற்றும் யதார்த்தத் தளங்களை அடியில் கொண்டு கட்டமுடியுமாயின் அது “ஆதிரை” எனக்கொள்ளலாம். சம்பவங்களையும் பாத்திரங்களையும் timeline வழுவின்றி ஒட்டியும், புனைவு அழகியலின் மொழியை solecism பிறழாமலும் நகர்த்தப்படும் ஆதிரை அட்டகாசமானது.

ஒரு வரலாறாக, ஒரு புனைவு இலக்கியமாக, ஒரு போர்க்காலக் குறிப்பாக, ஒரு தன்னிலை பேசும் ஆவணமாக ஆதிரை தன் வேலையை திறமாகச் செய்கிறது. கதைக்கருவின் விஸ்தீரணம் அந்த கதையோட்டத்தை மிதிக்காமல் நகர்வது ஆசம். கதைசொல்லலில் இருக்கின்ற நுட்பங்களை ஒரு மாணவனாக படிக்கமுடிந்தது.

“ஆதிரை” தொலைக்கப்பட்ட ஆயிரமாயிரம் உணர்வுகளின் திரட்டு. பேசப்படாத, அறியப்படாத ஆயிரமாயிரம் ஈழக்கதைகளின் சாட்சி.

நல்லதொரு வாசிப்பனுபவத்திற்கு நன்றி Sayanthan Kathir. வாழ்த்துக்கள்ணே.

ஆதிரையை இலங்கையிலிருந்து “அன்பளிப்பாக” எனக்கு அனுப்பிவைத்த எங்கள் பிரபலம் அண்ணன் Vikey Wignesh, உங்களுக்கும் நன்றிகள்.