வாழ்வு

ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.

இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.

எனக்கு கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்ச, அறிஞ்ச சாப்பாடு ஏதும் வேணுமெண்டா இப்பிடியான இந்திய சாப்பாட்டு கடையளுக்குத் தான் போறனான். (எனக்கு சப்பாத்தி, பூரி எண்டால் நல்லா பிடிக்கும்.) அதுவும் நல்ல உறைப்புச் சாப்பாட்டுக்கு இந்திய கடைகளுக்குத் தான் போகவேணும். (எங்களுக்கு உறைப்பு இல்லாட்டி நாக்கு செத்துப் போயிடுமே!)

அப்ப, இப்பிடி Tram இற்கு நிக்கிற நேரம் பக்கத்திலை இருக்கிற அந்த இந்தியக் கடைக்கு போய் ஏதாவது இனிப்பு வகைகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நிப்பன். (கள்ளத்தீனி, நொறுக்குத் தீனி) மைசூர் பாகில இருந்து பெயர் தெரியாத எல்லா இனிப்பையும் நாளுக்கு ஒன்றாய் வாங்குவன்.

எந்த இனிப்பெண்டாலும் ஒரு துண்டு, ஒரு டொலர் அங்கை.

முதல் நாள் ஒரு டொலரைக் குடுத்து ஒரு இனிப்பைக் கேட்டன். அங்கை நிண்ட கடைக்காரர் 3 இனிப்பைத் தூக்கி தந்தார். நான் நினைச்சன் மனிசன் மாறித் தருகுதாக்கும் எண்டு நினைச்சக்கொண்டு நான் ஒரு டொலர் தான் தந்தன் எண்டு சொன்னன். அதுக்கு அவர் பரவாயில்லை.. இருக்கட்டும் எண்டு சொன்னார்.

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மீள் பதிவு

சரியெண்டு வாங்கி கொண்டு வந்திட்டன். (ஒரு வேளை பழுதாப்போயிருக்குமோ எண்டும் நினைச்சன். ஆனால் நல்லாத்தான் இருந்தது.)

உப்பிடி நிறைய நாள் நடந்திட்டுது. நேற்று ஜிலேபி வாங்க ஒரு டொலர் குடுத்தன்.( ஜலேபியை இலங்கையில தேன் குழல் எண்டுறவை.) அவர் ரண்டைத் தூக்கி தந்தார்.

நானும் சிரிச்சுக் கொண்டே நன்றியைச் சொல்லிப்போட்டு தொடர்ந்து இப்படித்தான் ஒண்டு கேட்டால் ரண்டு மூண்டு தாறியள் எண்டு சொன்னன்.
அவரும் சிரிச்சுக் கொண்டு நீங்களும் எங்கடை நாடு தானே.. அது தான், எண்டார்.

ஓஹோ இது தான் விசயமா எண்டு நினைச்சக்கொண்டு வந்து ட்ராமில் ஏறி வாற வழியெல்லாம் யோசிச்சுக் கொண்டு வந்தன்.

சும்மாவே எனக்கு முதலில அறிமுகமாகிற சிங்களப் பெடியள் எந்த இடம் எண்டு கேட்டால் யாப்பாணே என்றோ Jaffna என்றோ சொல்லாமால் வீம்புக்கு யாழ்ப்பாணம் எண்டு அறுத்துறுத்து சொல்லுறனான்.

இப்பிடியிருக்க நேற்று அந்தக் கடைக்காரர் நீங்களும் இந்தியர் தானே என்ற கருத்துப்பட சொன்ன போது, இல்லை நான் சிறீலங்கன் என ஏன் நான் சொல்ல வில்லை? ஏன் நான் சிறீலங்கன் எண்ட தேசியம் எனக்குள் விழித்துக் கொள்ளவில்லை?

இதிலென்ன சந்தேகம்… எல்லாம் அந்த ஒரு டொலர் ஜிலேபிக்காகத் தான் என்று இலகுவாக சொல்லிவிட்டு போனாலும் வேறும் ஏதாவது இருக்கக்கூடும்!

By

Read More

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.

தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.

தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.

(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)

யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.

எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!

முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.

பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)

ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.

அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.

(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)

எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.

தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?

அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.

அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.

மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து ‘நம்ம ரூம் எங்கேருக்கு சார்” என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?

ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.

ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)

அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)

இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.

மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.

சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.

என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ… சாமி கும்பிர்றன் சாமி..

இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.

தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.

நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.

ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.

ஒன்றைச் சொல்ல முடியும்!

இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது “Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn’t Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise” என்ற மாதிரி..

இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.

அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.

இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.

By

Read More

சுதந்திர வேட்கையும் 800 டொலரும்

மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.

பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.

ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.

பொதுவாக அந்த வேலை ஒப்பீட்டளவில் இலகுவானது தான். ஆனால் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாக இரவுகளில்!

மொத்தமாக எரிபொருள் நிரம்பும் 30 இயந்திரங்கள் இருக்கின்றன. உள்ளே உட்கார்ந்திருந்து எந்த இயந்திரம் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவ்வப்போது அவதானிக்க வேண்டும்.

அப்படி பயன்படுத்தியவர்கள் எல்லோரும் உள்ளே வந்து கட்டணம் செலுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஏதாவது சந்தேகத்திற்கிடமானவர்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தால் அவர்களது வாகனத்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள வேண்டும். (சந்தேகத்திற்கிடமானவர்களை எப்படி அடையாளம் காண்பது என எனக்கு இன்னமும் தெரியவில்லை)

எரிபொருள் நிரப்பி விட்டு உள்ளே பணம் செலுத்த வருபவர்களிடம் மகிழ்ச்சியாக நாலு வார்த்தை பேசி விட்டு கணணித் திரையில் காட்டப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டணத்தை பணமாகவோ Cards மூலமாகவோ அறவிட்டு விட்டு see ya சொல்லி அனுப்பி விட்டு Next please சொல்ல வேண்டியது தான்.

வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்திலேயே ஒஸ்ரேலியாவில் திருடர்கள் தான் அதிகம் என ஒஸ்ரேலியரான Boss சொல்லி விட்டார். அது என்னை அவதானமாக இருக்க சொல்லிய அறிவுறுத்தல்.

இருப்பினும் குட்டி குட்டியாக தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அந்தப் பெரியயய தவறு நடக்கும் வரை!

ஆரம்பத்தில் 40 டொலர் செலுத்த வந்த ஒருவரின் கடன் அட்டையிலிருந்து இலக்கம் அழுத்துகையில் தவறுதலாக 400 டொலரினை அறவிட அந்த வாடிக்கையாளர் என்னை ஒரு வழி பண்ணி விட்டார்.

தவறு என்னுடையது தான் மிகுதி மேலதிக தொகையை பணமாக தந்து விடுகிறேன் என சொல்லியும் அந்த நண்பர் என்னை விடுவதாகவில்லை.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரத்தின் புதன் கிழமை. அது எனது இரவு வேலை நாள்.

இரவு பன்னிரண்டு மணி தாண்டி விட்டது. பொதுவாக 12 மணிக்கு பின்னர் அதிகாலை 4 மணிவரை அமைதியாக இருக்கும். பெரியளவில் யாரும் வர மாட்டார்கள்.

முடிந்த நாளுக்கான வரவு செலவுகளை கணணி முடித்துத் தர எல்லாம் கிட்டத்தட்ட (மிகச் சரியாக எனக்கு ஒரு போதும் அது இருந்ததில்லை) சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு…..

விட்டு….. நான் அடேல் பாலசிங்கம் எழுதிய சுதந்திர வேட்கையை (இரண்டாம் தரம்) வாசிக்க தொடங்கினேன்.

தமிழகத்துடன் இந்தியாவுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தொடர்புகள் அரசியல் வாதிகளின் உதவிகள் என அது ஆர்வமாய்ச் சென்றது.

ஒரு 30 நிமிடம் கழிந்திருக்குமோ?

எதேச்சையாக கணணித்திரையை நோக்கினேன். எரிபொருள் நிரப்பும் இயந்திரங்கள் 27 மற்றும் 29 இலிருந்து மொத்தம் 800 டொலருக்கு டீசல் அடிக்கப்பட்டிருப்பதாக அது சிவத்த எழுத்தில் சொன்னது.

அப்பவே சின்னதாக ஒரு பதட்டம் மனதில் குடி கொண்டு விட்டது.

விழுந்தடித்துக் கொண்டு எழுந்து இயந்திரங்களைப் பார்த்தேன்.

அங்கு எவருமோ எந்த வாகனமுமோ இல்லை.

கடவுளே.. 800 டொலர்!! எப்போதாவது யாராவது இருபதோ முப்பதோ டொலரிற்கு எரிபொருள் நிரப்பி விட்டு பணம் தராமல் ஓடக்கூடும் என்று ஏற்கனவே எண்ணியிருக்கிறேன். ஆனால் அது இப்படி 800 டொலர்களாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.

800 டொலர்களிற்கு டீசல் அடித்துச் செல்வதென்றால் அது சிறிய வாகனமாக இருக்காது. ஏதாவது பார ஊர்தியாகத் தான் இருக்கும். அப்படியான ஒன்று வந்து செல்லும் வரை சுரணை அற்று இருந்திருக்கிறேனே என்று என் மேலே கோபம் வந்தது.

காலை 7 மணிக்கு Boss வந்தார். பொதுவாகவே கலகலப்பாக பேசுபவர். இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் தொண்டை வரள வரள தண்ணி குடித்து குடித்து நடந்ததை விபரித்தேன்.

நித்திரை கொண்டு விட்டதாகத் தான் சொன்னேன். (சுதந்திர வேட்கை! மூச்!)

எவ்வளவு காசு என்று அவர் கேட்கும் வரை இயல்பாகத் தான் இருந்தார். ஒரு வேளை 20 அல்லது 30 ஆக இருக்க கூடும் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

800 டொலர் என்று சொன்னேன்.

மனிசன் தலையிலை கை வைச்சிது. நான் முழிசிக் கொண்டு நிண்டன்.

என்ன செய்யப் போகிறாய்?

எனக்கு எங்கேயிருந்தோ அவசரமாக பதில் வந்தது. என்னிலை தான் பிழை. ஆகவே எனது சம்பளத்திலை இருந்து எடுத்துக் கொள்ளுங்கோ.

எனக்கென்னவோ அப்பிடிச் சொல்வது தான் எனக்கு மரியாதையாகப் பட்டது.

சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. கண்முழித்து (சுதந்திர வேட்கை படித்து??) உழைத்த சம்பளம். அநியாயமாய்ப் போயிட்டுதே என்ற கவலை.

அதன் பின் கடந்த வாரம் எனக்கு பதில் இன்னுமொருவரை அனுப்பி வைத்து விட்டு நான் வேலைக்கு லீவு போட்டிருந்தேன்.

நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு! boss பேசினார். நீ இன்னும் சம்பளம் எடுக்க வில்லையா?

எனக்கு சம்பளம் வங்கிக் கணக்கிற்கெல்லாம் போவதில்லை. (அதெல்லாம் Tax சம்பந்தப் பட்ட விடயங்கள். கண்டு கொள்ள வேண்டாம்) எத்தனை மணித்தியாலங்கள் வேலை செய்தோமோ அதற்கேற்றவாறு சம்பளம் அங்குள்ள ஒரு இடத்தில் வைக்கப் படும். வாரா வாரம் அதிலிருந்து எடுக்க வேண்டியது தான்.

இல்லை என்றேன் நான்.

சரி நான் வைத்திருக்கிறேன். வந்து எடுத்துக் கொண்டு போ… என்று துண்டித்து விட்டார் அவர்.

ஆஹா…

By

Read More

எனக்கும் ஒரு சாதி சான்றிதழ்

மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது!
என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பள்ளிக்கு இருக்கின்ற வரைமுறைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு அமையவே அனுமதிகள் தரப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் நான் படகில் வந்தவன் என்ற காரணமும் அவர்களுக்கு ஏதாவது சிக்கல்களை ஏற்படுத்தியிருக்க கூடும்.
இவ்வாறாக ஓர் பள்ளியில் எனது அனுமதிக்காக கொஞ்சம் இறங்கி வந்து T.C மற்றும் சாதிச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு வர சொன்னார்கள்.
இவை மீண்டும் எனக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தன.
முதலாவது அகதியாக படகில் ஏறி வந்த நான் T.C கொண்டு வரவில்லை
இரண்டாவது சாதிச் சான்றிதழ் என்ற ஒன்று என்னிடம் எங்களிடம் இலங்கையில் இல்லவே இல்லை.
இது சாதி என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அவர்கள் அப்படி கேட்டது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது என்கிற எண்ணத்தை ஏற்படுத்த எழுதப்பட்டதல்ல.
சாதி என்பது என் காலத்தில் முன்னிலையில் பேசப்படாத விடயமாகவே இருந்து வந்தது. (மற்றும்படி அது பேசப்பட்டது.)
ஒருவரைப் பார்த்து நீங்கள் என்ன சாதி என்று கேட்பது பண்பற்றது என்ற கருத்தியலில் வளர்ந்த எனக்கு அவ்வாறு கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் ஒருவித சங்கடத்தை உணர்த்தின.
சாதிக்கென தனியான சான்றிதழ் எதுவும் இலங்கையில் கொடுக்கப்படுவதில்லை. நமது பிறப்பு பதிவு சான்றிதழில் சாதி என்கிற ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இலங்கைத் தமிழர் என்று குறிக்கப்படும். அவ்வளவே
இதற்கிடையில் எனக்கான ரி சி யினை இலங்கையிலிருந்து எடுப்பித்தால் சாதிச் சான்றிதழை போலியாக தயாரிக்கலாம் என்று சட்டத்தரணி கூறினார்.
அவ்வாறு தயாரிக்கும் போது பிற்படுத்தப்பட்ட (பிற்பட்ட அல்ல) சமூக அமைப்புகளை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடுகளின் நல்ல பலன் பெற முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
நான் இறுதியாக கல்வி கற்ற பள்ளி வன்னியில் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இலங்கை ராணுவத்தினர் வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு பாதை சமைக்க ஜெயசிக்குறு சமரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வன்னிக்கான எந்த தொடர்புகளும் அற்ற நிலை. எனது ரி சி யினை பெறவே முடியவில்லை.
இப்படியாக மாதங்கள் அள்ளுண்டு போனது.
இறுதியாக கொழும்புக்கும் புறப்பட்டாயிற்று.
இதனை எனது ஊரின் உறவினர்களுக்கு சொன்னபோது ‘கன்றாவி.. அதுக்கெல்லாம் சேட்டிபிகேற் இருக்கோ’ என்று ஆச்சரியப்பட்டனர்..
அவர்களில் சாதியை ஏற்றுக் கொண்டவர்களும் அடக்கம்.

By

Read More

யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்!

அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம்.

ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான பெயருகளிலை நிறைய தோட்டங்கள். ஆச்சி தோட்டம் G.S காணி வெள்ளைக் கேற் (Gate) சிவத்தக் கேற் பத்தேக்கர் காணி எண்டு உப்பிடி நிறைய வித்தியாசமான பெயர்கள்.

நாங்கள் வந்திறங்கின தோட்டம் ஆச்சி தோட்டம். அது என்ன காரணப்பெயரா என்று எனக்கு தெரியாது.

அதுக்குள்ளை ஒரு மண்ணாலான கட்டிடம் இருந்தது. தேங்காய் எண்ணைக்கு பாவிக்கிற கொப்பறாக்களை மூட்டை மூட்டையாக கட்டி அதுக்குள்ளை வைச்சிருந்தினம்.

எண்ணை வாசம் சும்மா அந்த மாதிரி கமகமக்கும்.

அதுக்குள்ளைதான் அண்டைக்கு இரவு படுத்தம்.

இரவு வந்தபடியால எனக்கு இடம் வலம் எதவும் தெரியேல்லை. நல்ல களைப்பு வேறை.. அப்பிடியே நல்ல நித்திரை…

விடிய நல்லா நேரஞ்செண்டுதான் எழும்பி பாத்தன்..

என்ரை கடவுளே.. ஏதோ நடுக் காட்டுக்குள்ளை கொண்டு வந்து விட்ட மாதிரி கிடந்தது.

பாக்கிற இடமெல்லாம் தென்னை மரங்கள்.. அதை தாண்டினா காடுகள்..

ஏதோ ஒரு வனாந்தரத்தில வந்து நின்ற மாதிரியான ஒரு வெறுமை..

என்ன செய்ய முடியும்.. வந்தாச்சு இனி வழியைப் பாக்க வேணும்.
நாங்களும் ஒரு வீடு கட்டுவதென்று முடிவாச்சு. அதுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த காணின்ரை பெயர் பத்து ஏக்கர் காணி.

அதுக்கு ஒரு காரணம் இருந்தது. வன்னியிலை சீமெந்து கட்டு கட்டப்பட்ட கிணறுகள் அரிது அல்லது கிடையாது. ஆனால் அந்த காணிக்குள்ளை இருந்த கிணறு அப்பிடி கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல தண்ணி கிணறு இருந்த ஒரே காணியும் அதுதான்.

ஆனால் இன்னொரு பக்கத்தாலை அந்தக் காணியில வேறை சில விசயங்களும் இருந்தது.

அதன் ரண்டு பக்கங்கள் காட்டோடு இணைந்திருந்தன. இன்னொரு பக்கம் ஒரு ஒற்றை வீதியூடும் மற்றயது ஆச்சி தோட்டத்துடனும் இணைந்திருந்தது.

காட்டோடு இணைந்திருந்தமையால் யானைகளின் தொல்லை இருக்குமென்று சொன்னார்கள்..

அதுவும் அந்த தோட்டத்திலை இளம் தென்னைகள் தான் நாங்கள் இருக்கும் போது இருந்தன. அதனால யானைகள் கட்டாயம் வரும் எண்டும் சொல்லிச்சினம்.

இருந்தாலும் பறவாயில்லை எண்டு நாங்கள் தொடங்கிட்டம் வீடு கட்ட. காடுகளிற்குள் அனுமதியின்றி மரம் தறித்தல் சட்டவிரோதமாக புலிகள் அறிவிச்சிருந்தவை. அதனாலை அனுமதி பெற்று மரங்களை தறிச்சு களி மண்ணிலை கல் அரிஞ்சு ஒரு மாதிரி வீட்டை எழுப்பிட்டம்.

நானும் பள்ளிக்கூடம் ரியூசன் நண்பர்கள் எண்டு திரிய பழைய வெறுமையும் மறந்து போச்சு.

மிச்சம் வரும்!

By

Read More

× Close