முதன்மை

நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.

ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.

நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.

பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.

ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.

இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)

என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?

ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..

முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..

By

Read More

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.
பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று.

இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் ஐஸ்பழக் காரர் வர ஆரேனும் 50 சதம் தரமாட்டினமோ எண்டு மனம் அலைபாயும். அந்த நேரம் கோன் கிறீம் 2 ரூபா வித்தது. எண்டாலும் அது எங்கையாவது கோயிலுக்குப் போனாத்தான் வாங்கித் தருவினம். மற்றும் படி வீடுகளில இருக்கிற நேரம் ஐஸ்பழம் தான்.

ஞாபகப்படுத்திப் பாத்தால் ஐஸ்பழம் சிவப்பு நிறத்திலையும், மஞ்சளும் ஒரேஞ்சும் கலந்த ஒரு நிறத்திலையும் தான் அதிகம் இருந்தது போல. நீல நிறத்திலையோ பச்சை நிறத்திலையோ அதை நான் பாத்ததில்லை.

ஐஸ் பழக்காரர் ஒரே பெட்டியிலயே ஐஸ்பழங்களையும், கிறீமையும் வைச்சிருந்து எடுப்பார். சில வேளை பெட்டியை ரண்டாப் பிரிச்சு வைச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். முன்னாலை கோன் பிஸ்கற்றை அடுக்கி வைத்திருப்பார். சில வசதியான ஐஸ்பழக்காரர் சைக்கிள் டைனமோவில பாட்டும் போட்டுக் கொண்டு வாறவை. ஆனா மணிச் சத்தம் தான் பிரசித்தம்.

எங்கடை அம்மம்மா கச்சான் விக்கிற படியாலை அதுக்கான பைகளை ஒட்டிக் குடுத்தால் 25 சதம் அல்லது 50 சதம் தருவா. அல்லது கச்சான் விற்கும் போதும் நேரை கோவிலுக்குப் போய் அம்மம்மாவை ஒரு அப்பாவிப் பார்வை பாத்துக் கொண்டு நிண்டா ஐஸ்பழம் வாங்கக் காசு தருவா.

இதெல்லாத்தையும் விட அந்த நேரம் ஒரு நடைமுறையிருந்தது. ஐஸ்பழக் காரரிடம் ஏதாவது பழைய இரும்பைக் குடுத்தால் அவர் ஐஸ்பழம் தர மாட்டார். ஆனா ஒரு தட்டையான பிஸ்கற்றில கொஞ்சக் கிறீம் போட்டுத் தருவார். இதனாலை எங்கடை வீட்டில இருந்த பழைய நெளிஞ்ச புட்டுப்பானை, வாளிக் கம்பி இதெல்லாம் அந்தரத்தக்கு எனக்குக் கை கொடுத்திருக்குது.

ஒரு முறை.. எங்கடை வீட்டுச் சாமியறைக்குள்ளை சாமிக்குத் தண்ணி வைக்கிறதுக்கெண்டு (ஒரு கமண்டலம் இருந்தது. கமண்டலம் அங்கை அப்ப அரிதான பொருளாம். (கமண்டலம் தானா சரியான பெயர் எனத் தெரியாது. அகத்தியர் வைச்சிருந்தாரே அது ) அந்தக் கமண்டலம் ஒரு நாள் வீட்டில இருந்து காணாமல் போனது. கடைசியில சரியான விசாரனைகளுக்குப் பிறகு அதை நான் தான் ஐஸ்பழக் காரருக்கு குடுத்தனான் எண்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாப் போச்சு. எண்டாலும் வழமையா வெறும் பிஸ்கற்றில கிறீம் பூசித் தாற ஐஸ்பழக் காரர் கமண்டலத்துக்கு ஒரு முழு ஐஸ்பழமே தந்தார் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன்.

ஐஸ்பழங்களிலயும் நிறையச் சுவையள் இருக்கு. சிலது முடியும் வரை நாவுக்குச் சுவை தரும். சிலது ஒரே உறிஞ்சலில, நிறமும் போய், சுவையும் போய் வெறும் ஐஸ்கட்டியா குச்சியில ஒட்டிக் கிடக்கும்.

காலம் போகப் போக ஐஸ்பழ வாகனங்கள் ஊருக்குள்ளை வரத் தொடங்கின. சினிமாப் பாட்டுக்களைப் போட்டு விட்டு குழந்தைகள் இருப்பதாய் அவர்கள் அவதானிக்கிற வீடுகளில் நெடுநேரமாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். அவர்களிடம் அறிமுகமானது தான் ஐஸ் சொக்.
வெளியே சொக்லெற் பூசப்பட்ட, உள்ளே பாற் சுவையில் (ஐஸ் பழத்தைப் போலல்லாது கடைசி வரை நிண்டு நிலைக்கும் மாறாச் சுவை) நிறைய ருசியாக இருக்கும். அதுவும் கோன் கிறீமும் சமமான விலையில் விற்றன.

இரண்டு மூன்று பேர்களுடன் ஐஸ் பழம் வாங்கி அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு நான் குடிக்கத் தொடங்குவதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை கோவில் திருவிழா ஒண்டில் எனக்கு கோன் ஐஸ் கிரீம் ஒண்டு வாங்கித் தந்தினம். தனியக் கிறீமை மட்டும் சாப்பிட்டு விட்டன். கோன் பிஸ்கற் மட்டும் அப்பிடியே முழுசாக் கிடந்தது. மனசுக்குள்ளை ஒரு யோசினை. யாருமில்லாமல் நான் மட்டும் ஐஸ்பழ வாகனத்தை நோக்கிப் போனன். அங்கை ஆக்கள் எல்லாம் வாங்கி முடியட்டும் எண்டு காத்திருந்தன். ஒரு மாதிரி ஒரு இடை வெளி கிடைச்சுது. ஒரு தயக்கமாவும் கிடக்குது. பரவாயில்லை எண்டு நேரை போய் அண்ணாந்து வாகனத்துக்குள்ளை இருந்தவரைப் பாத்து வெறும் பிஸ்கற் கோனை நீட்டிக் கேட்டன்

இதுக்கை கொஞ்சம் கிறீம் போடுவியளே..?

அவருக்கு ஒரே சிரிப்பு. இங்கை என்ன சபையோ வைக்கிறம்.. ( சாப்பாட்டுப் பந்தி ) கறி முடிஞ்சால் போடுறதுக்கு..

நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நிண்டன். பிறகு வந்திட்டன். என்ர கஸ்ர காலம் பரன் எண்டொரு அண்ணை அதை கண்டு வீட்டை சொல்ல.. எல்லாற்றை மானத்தையும் நான் காத்தில பறக்க விடுறதா … பிறகென்ன வழமையான பூசை தான்.
கிராமத்தின் பாடசாலையை விட்டு நகரப் பாடசாலைக்கு பெயர்ந்த காலங்களில்த்தான் எனக்கு கூல்பார்களும் கப்பில் போட்டுச் சாப்பிடும் ஐஸ்கிறீம்களும் அறிமுகமாயின. அப்போது கூட நோர்மல் ஸ்பெசல் என்ற இரண்டு வகைதான் பாவனையிலிருந்தது. சொன்னா நம்ப மாட்டியள்.. 6 ம் ஆண்டு நகரப் பாடசாலைக்கு வந்த பிறகு முதலாம் தவணைச் சோதினையில 7ம் பிள்ளையா வந்த எனக்கு அடுத்த முறை 3ம் பிள்ளைக்குள்ளை வந்தால் ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் வாங்கித் தரப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. என்னால் நிறைவேற்ற முடியேல்லை எண்டாலும் ஐஸ்கிரீம் கிடைச்சது.

அதுவே அடுத்த ஐந்தாறு வருடங்களில் 20ம் 25 ம் பிள்ளையாக வந்த போது எனக்கு எதுவும் வாங்கித் தருவதாய் எவரும் சொல்ல வில்லை. அந்த நேரங்களில ஆசைப் பட்டதை வாங்கித் தரவும் முடியாது தானே.

By

Read More

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30

மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.


Image hosted by Photobucket.com

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.


Image hosted by Photobucket.com

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.

By

Read More

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

‘கட்டின சீலையோடை ஓடுறது’ எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

‘சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது’ எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை ‘நவீன பாஞ்சாலி’ எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ


Image hosted by Photobucket.com

By

Read More

ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.

இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.

எனக்கு கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்ச, அறிஞ்ச சாப்பாடு ஏதும் வேணுமெண்டா இப்பிடியான இந்திய சாப்பாட்டு கடையளுக்குத் தான் போறனான். (எனக்கு சப்பாத்தி, பூரி எண்டால் நல்லா பிடிக்கும்.) அதுவும் நல்ல உறைப்புச் சாப்பாட்டுக்கு இந்திய கடைகளுக்குத் தான் போகவேணும். (எங்களுக்கு உறைப்பு இல்லாட்டி நாக்கு செத்துப் போயிடுமே!)

அப்ப, இப்பிடி Tram இற்கு நிக்கிற நேரம் பக்கத்திலை இருக்கிற அந்த இந்தியக் கடைக்கு போய் ஏதாவது இனிப்பு வகைகள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நிப்பன். (கள்ளத்தீனி, நொறுக்குத் தீனி) மைசூர் பாகில இருந்து பெயர் தெரியாத எல்லா இனிப்பையும் நாளுக்கு ஒன்றாய் வாங்குவன்.

எந்த இனிப்பெண்டாலும் ஒரு துண்டு, ஒரு டொலர் அங்கை.

முதல் நாள் ஒரு டொலரைக் குடுத்து ஒரு இனிப்பைக் கேட்டன். அங்கை நிண்ட கடைக்காரர் 3 இனிப்பைத் தூக்கி தந்தார். நான் நினைச்சன் மனிசன் மாறித் தருகுதாக்கும் எண்டு நினைச்சக்கொண்டு நான் ஒரு டொலர் தான் தந்தன் எண்டு சொன்னன். அதுக்கு அவர் பரவாயில்லை.. இருக்கட்டும் எண்டு சொன்னார்.

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மீள் பதிவு

சரியெண்டு வாங்கி கொண்டு வந்திட்டன். (ஒரு வேளை பழுதாப்போயிருக்குமோ எண்டும் நினைச்சன். ஆனால் நல்லாத்தான் இருந்தது.)

உப்பிடி நிறைய நாள் நடந்திட்டுது. நேற்று ஜிலேபி வாங்க ஒரு டொலர் குடுத்தன்.( ஜலேபியை இலங்கையில தேன் குழல் எண்டுறவை.) அவர் ரண்டைத் தூக்கி தந்தார்.

நானும் சிரிச்சுக் கொண்டே நன்றியைச் சொல்லிப்போட்டு தொடர்ந்து இப்படித்தான் ஒண்டு கேட்டால் ரண்டு மூண்டு தாறியள் எண்டு சொன்னன்.
அவரும் சிரிச்சுக் கொண்டு நீங்களும் எங்கடை நாடு தானே.. அது தான், எண்டார்.

ஓஹோ இது தான் விசயமா எண்டு நினைச்சக்கொண்டு வந்து ட்ராமில் ஏறி வாற வழியெல்லாம் யோசிச்சுக் கொண்டு வந்தன்.

சும்மாவே எனக்கு முதலில அறிமுகமாகிற சிங்களப் பெடியள் எந்த இடம் எண்டு கேட்டால் யாப்பாணே என்றோ Jaffna என்றோ சொல்லாமால் வீம்புக்கு யாழ்ப்பாணம் எண்டு அறுத்துறுத்து சொல்லுறனான்.

இப்பிடியிருக்க நேற்று அந்தக் கடைக்காரர் நீங்களும் இந்தியர் தானே என்ற கருத்துப்பட சொன்ன போது, இல்லை நான் சிறீலங்கன் என ஏன் நான் சொல்ல வில்லை? ஏன் நான் சிறீலங்கன் எண்ட தேசியம் எனக்குள் விழித்துக் கொள்ளவில்லை?

இதிலென்ன சந்தேகம்… எல்லாம் அந்த ஒரு டொலர் ஜிலேபிக்காகத் தான் என்று இலகுவாக சொல்லிவிட்டு போனாலும் வேறும் ஏதாவது இருக்கக்கூடும்!

By

Read More

× Close