நான் எப்பிடி இருக்கிறன்!

எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்!

எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்..

அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!!

இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு …. இந்தப் படத்தை Save picture as பண்ணி எடுத்துக்கொள்ளுற உரிமையை தாறன்.

முக்கிய குறிப்பு: நான் கவிதை எழுதச் சொன்னதையோ அல்லது நீங்கள் கவிதை எழுதுவது பற்றியோ பொடிச்சிக்கும் வசந்தனுக்கும் மதியக்காவிற்கும் மூச்சு விட வேண்டாம்.


Image hosted by Photobucket.com

By

Read More

றேடியோக்களின் கதை

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’

‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’

‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’

‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’

இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு.

தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க வேணும். அப்ப தான் ஈசல் கணக்கில கொழும்பில தனியார் வானொலிகள் வரத் தொடங்கினது.

யாழ்ப்பாணத்தில இருக்கும் பொழுது இலங்கை வர்த்தக வானொலி கேட்பம். லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு மீராவின் இசையும் கதையும் இப்பிடி நிறைய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பம். ஆனாலும் ஒலித்துல்லியம் பெரிய அளவில் இருக்காது. இலங்கை வர்த்தக வானொலியை விட தூத்துக்குடி வானொலி நல்ல கிளியர். இரவில எட்டே முக்காலுக்கு மூண்டு பாட்டுப் போடுவினம். கொஞ்சம் புதுப்பாட்டுகள் கேட்க வேணும் எண்ட ஆசையை இந்த வானொலிகள் தான் தீர்த்து வைச்சதுகள்.

ஆரம்பத்தில இரவு ஒரு மணித்தியாலத்துக்கு புலிகளின் குரல் ஒலிபரப்பானது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பான இந்த வானொலியில் இலங்கை மண் எண்டொரு நாடகம் போனது. பொன்.கணேசமூர்த்தி எழுதியிருந்தவர். தொடர்ந்து ஒரு வருசம் போன இந்த நாடகத்தை நான் தொடர்ந்து கேட்டன்.

இராவணன் கதையை மையப்படுத்தி இந்த நாடகம் இருந்தது.

தளிர்கள் எண்டொரு சிறுவர் நிகழ்ச்சி புலிகளின்குரலில போனது. அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமலும், அதே நேரம் வயதானவர்கள் கலந்து கொள்ளுற வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமலும் ரண்டும் கெட்டான் வயசில நான் இருக்கிறனே என்று அப்ப எனக்கு கவலையாயிருக்கும்.

புலிகளின் குரலும் தொடர்ந்த ஒலித்தரத்தில் வராது. அன்ரனாக்கு வயர்கள் கட்டி அதைக் கூரையில் கட்டி அப்பிடி இப்பிடித்தான் அந்த வானொலியைக் கேட்பம். (இப்ப செயற்கைக் கோளுக்காலை புலிகளின் குரலை உலகமெங்கும் கேட்ககூடியதாக இருக்கிறதென்பதை நினைக்க சந்தோசமாயிருக்கிறது.)

பிறகு கொழும்பில வந்தாப் பிறகு யாழ்ப்பாணத்தில கேட்ட வர்த்தக வானொலியும் கேட்கிறதில்லை.

ஒரு கொஞ்சக் காலத்துக்குத் தான்.

பிறகு ஒண்டின் பின் ஒண்டாக வரத்தொடங்கின வானொலிகள். முதலில வந்தது சூரியன் FM. அது வரைக்கும் வானொலிகளில இலக்கணச் சுத்தமாக கதைக்கிறதை கேட்டு வந்த எனக்கு சாதாராண பேச்சு வழக்கில வானொலி கேட்க முடிந்தவுடன ஒரு ஆச்சரியமாயிருந்தது.

அந்த நேரம் இந்த வானொலிகள் தமிழைக் கொலை செய்யப்போகின்றன என்றெல்லாம் கதை வந்திச்சு.

எண்டாலும் சூரியன் FM வந்த பிறகு தான் எனக்கு புதுப் பாட்டுகள் எல்லாம் அறிமுகமானது. CD வேண்டித்தான் பாட்டு கேட்க வேணுமெண்ட தேவையே இல்லாமல் போயிட்டுது.

இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்.

தொலைபேசியில வானொலியோடை பேசி அதை நேரடியாக கேட்கிறதை அந்த வானொலிதான் இலங்கையில அறிமுகப்படுத்தினது. தபால் அட்டையளை அனுப்பிப் போட்டு வருமோ வராதோ எண்டு பாத்தக்கொண்டிருந்த சனத்துக்கு இந்த சிஸ்ரம் பிடிச்சிருக்க வேணும்.

எனக்கும் ஆரம்பத்தில அப்படியான நிகழ்ச்சிகளை கேட்கிறது ஆர்வமாத்தான் இருந்தது. ஆனா கடைசிக்காலத்தில எப்ப பார்த்தாலும் ‘ஹலோ யார் பேசுறது. என்ன பாட்டு வேணும். யார் யாருக்காக வேணும்’ எண்டு ஒரே இதையே கேட்க வேண்டியிருந்ததாலை புளிச்சு போட்டுது எனக்கு.

இப்பிடி இருக்கேக்கை சக்தி FM எண்டொரு வானொலி வந்திச்சு. எண்டாலும் அது ஆரம்பத்தில தூய தமிழ் பேசித்தான் நிகழ்ச்சிகள் செய்தது. பிறகு போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமலாக்கும் அதுகும் சாதாரண பேச்சு வழக்கில் தொடங்கிச்சு!

அந்த வானொலி வந்த பிறகு தான் ஒரு சூடு பிடிச்சிது. அந்த நேரத்தில வானொலி அறிவிப்பாளர்களுக்கு இலங்கையில ஒரு நட்சத்திர அந்தஸ்து இருந்தது.

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி’ எண்டு ரஜினி எதுக்கு சொன்னாரோ தெரியேல்ல.. ஆனா சூரியன் அதை அடிக்கடி போடும். எனக்கெண்டா அது ஒரு நாகரீகமில்லாத செயலாத்தான் கிடக்கு.

இதுக்கிடையில ஏற்கனவே அனுங்கிக்கொண்டிருந்த பெரிய கவனிப்பு இல்லாத கலையொலி எண்ட ஒரு வானொலி சுவர்ண ஒலி எண்ட பெயரில பெயர் மாறி கை மாறி தாம் தூம் எண்டு வந்திச்சு.

சிங்கப்பூரிலிருந்து மாலினி எண்டொருவவை அறிவிப்பாளரா கூட்டி வந்தவை. சும்மா கட கட எண்டு கதைக்கிற அவவின்ரை அழகே தனிதான்.

நிறையப் பரிசுகளும் அள்ளி அள்ளி கொடுத்தவை. இளசுகளை மட்டுமே குறிவைச்சு இயங்கினாலும் ஏனோ அவையாள நிண்டு பிடிக்க முடியேல்லை. கொஞ்ச நாளில மீண்டும் புதுப்பொலிவுடன் வருவம் எண்டு நிப்பாட்டினவை தான்.. அவ்வளவும் தான்.

சக்தி வானொலி தாங்கள் தான் தமிழ் வளக்கிறம் எண்டு அடிக்கடி சொல்லும். எனக்கு உண்மையாக் கோபம் வரும். தமிழ் வளக்கிறது எண்டுறது சும்மா தமிழில வணக்கம் சொல்ல வற்புறுத்தவது இல்லை. அல்லது தமிழில கதைக்கிறது மட்டுமில்லை. தமிழோடு இணைஞ்ச இனத்தின் அரசியல் பண்பாடு பொருளாதாரம் அறிவியல் இதெல்லாத்திலையும் முன்னேறுவதற்கான வழி வகைகளைச் செய்யுறது தான்.

இதொண்டையும் செய்யாமல் நாங்கள் தான் தமிழ்க்காவலர்கள் எண்டு யார் சொன்னாலும் எனக்கு கோவம் வருகுது.

செய்திகளைப் பொறுத்த வரை சூரியன் தேடல் மிக்க செய்தியாளர்களை கொண்டிருந்தது. தணிக்கை நடைமுறையிலிருந்த போது அதன் செய்திகளை எல்லோரும் கேட்க விரும்பிச்சினம். (யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் நிமலராஜன் சூரியனின் செய்தியாளராகவும் இருந்தார்.)

மற்றும் படி அந்த ரண்டு ரேடியோவுக்கும் யார் NO.1 என்ற போட்டி இருந்தது. ஒரு பாட்டை போட்டு விட்டு அதை நாங்கள் தான் முதலில போட்டம் எண்டு அவர்கள் அடிபடுறது சின்னப்பிள்ளைகள் அடிபடுறது போல இருக்கும்.

பாட்டுக்களுக்கு இடையில இருந்தாப் போல ‘என்னைப் பத்தி உனக்கு தெரியாது.’ எண்டு ஒரு வசனம் போகும். அல்லது ‘என்னைச் சீண்டாதை. உனக்குத் தான் ஆபத்து’ எண்டு ஏதாவது வசனம் போகும். உண்மையில இது மற்ற வானொலிக்குத் தான் சொல்லுப்படும். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கிற எங்களுக்கு சொல்லுறாங்களோ எண்ட மாதிரி இருக்கும்.

உப்பிடித்தான் ஒருக்கா ஒரு வானொலியிலை தற்போதைய நிலையில் இலங்கையில் கேளிக்கை நிகழ்வுகள் தேவைதானா எண்டு ஒரு கருத்தறியிற நிகழ்ச்சி நடத்தினவை. நேயர்கள் தொலை பேசியில் சொல்ல வேணும். என்ர நண்பன் ஒருத்தன் அழைப்பெடுத்து முதலில உங்கடை இருபத்து நான்கு மணி நேர கேளிக்கைகளை நிப்பாட்டுங்கோ. பிறகு மிச்சத்தை பாக்கலாம் எண்டிருக்கிறான். அதுக்கு அவை நாங்கள் அப்பிடி இல்ல. மற்ற வானொலி தான் அப்பிடி எண்டு சொல்லிச்சினமாம்.

அதே மாதிரி.. ஒருக்கா தொலைபேசியில ஒருவ பாட்டுக் கேட்டவ. அப்ப அங்கை இருந்து ஒருத்தர் உங்களுக்கு திருமணம் ஆகிட்டுதா எண்டு கேட்டவர். அதுக்கு அவ இல்லை எண்டு சொன்னா. பிறகு அவர் அடுத்த கேள்வியா அப்ப எத்தினை பிள்ளையள் எண்டு கேட்டார். அதுக்கு அவ பெரிசா சிரிச்சா. ஏதோ அவர் பகிடி விட்டிட்டார் எண்ட நினைப்பிலை.

உண்மையில அவரிலையும் பிழையில்லை. அவைக்கு அப்பிடி ஒரு ஒழுங்கில கேட்டு கேட்டு பழகிப்போட்டுது.

என்ன செய்ய முடியும்..

By

Read More

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.

தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.

தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.

(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)

யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.

எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!

முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.

பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)

ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.

வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!

மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.

நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.

அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.

(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)

எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.

தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?

அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.

அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.

மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து ‘நம்ம ரூம் எங்கேருக்கு சார்” என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.

நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?

ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.

ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)

அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)

இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.

மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.

சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.

என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ… சாமி கும்பிர்றன் சாமி..

இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.

தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.

கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.

நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.

ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.

ஒன்றைச் சொல்ல முடியும்!

இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.

அதாவது “Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn’t Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise” என்ற மாதிரி..

இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.

அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.

இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.

By

Read More

ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch!

தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம்.

இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.

மீண்டும் jungfraujoch

சுவிற்செர்லான்டில் இருக்கிறது ஐரோப்பாவின் உயரமாகிய இந்த வெள்ளிப் பனிமலை! அதன் உச்சியில் நிற்கின்ற போது உடலும் மனசும் சேர்ந்து இளகிப்போகின்றது.

ஐரோப்பிய குளிர் நாடுகளிலும் வெயில் இப்படி வெட்டி எறிக்கும் என உணர்த்திய ஒரு summer காலத்தில் நான் jungfraujoch போனேன்.


Image hosted by Photobucket.com

குறித்த ஓர் இடம் வரை சாதாரண தொடரூந்தில் பயணித்து பின்னர் விசேடமான தொடரூந்துகள் மூலம் பயணம் தொடர்ந்தது.

மலைகளை சுற்றி சுற்றி ஏறாமல் அவற்றினை உள்ளாக ஊடறுத்து செல்லும் தொடரூந்தின் சில்லுகள் கூடிய உராய்விற்காக பற்சில்லுகளாக அமைக்கப்பட்டிருந்தன.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி மலையின் உள்ளிருந்து வெளியே பார்க்க விடுகிறார்கள்.

எங்கெங்கு நோக்கினும் வெண்பனி மலைகள் தான்!

பயணத்தின் போதே வண்டி செல்லும் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றினை ஒளிப்படமாக காட்டுகிறார்கள்.

முடிவில் உள்ளாக வந்து வெளியே தலைகாட்டுகிறது தொடரூந்து.
பனிச்சறுக்கு, பார்வையிடும் இடங்கள் என பொழுது போக்கு மையங்களோடு விரிந்தது அந்தப் பனிப்பாலை வனம்!

பனிமாளிகை என்னும் ஓர் இடம்!

பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட உருவங்களை வைத்துப் பேணுகிறார்கள் அங்கு! நடந்து செல்லும் பாதை கூட பனிப் பளுங்கில் தான் இருந்தது.


Image hosted by Photobucket.com

அந்த இடத்திற்கு வந்து போனதாய் சான்றிதழ் கூட தருகிறார்கள். ஆனால் காசு!

ஏதோ புது உலகில் நிற்பது போன்ற உணர்வு அங்கு நின்ற ஒவ்வொரு கணமும் இருந்தது.

By

Read More

மடத்தனமாய்..

எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.

இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.

இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.

எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.

தினக்குரல் பத்திரிகையில் வெளிவருகின்ற சிங்கள நாளேடுகளில் இருந்து என்னும் ஒரு பகுதி!

அதனை ஆரம்ப காலங்களிலிருந்தே வாசிப்பது வழமை. தமிழர் போராட்டம் அது சார்ந்த நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள இனவாதப் போக்கு என்ன கருதுகிறது என்பதனை அறிய அந்தப் பகுதி வழியாயிருந்தது.

சிங்கள இனவாத பத்திரிகையில் எழுதுபவர்கள் எதுவும் தெரியாத மடையர்கள் என்கிற கருத்து எனக்குள் மெல்ல மெல்ல உருவாகி இப்பொழுது முழுவதுமாக உறுதியாகி விட்டது.

அண்மைக் கால உதாரணங்கள் சிலவற்றைப் பாருங்கள்.

சுனாமியின் தாக்குதலுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய செய்தியொன்று கிளம்பியிருந்தது.

அத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது!

எல்லா இனவாத சிங்கள பத்திரிகைகளும் உள்ளிருந்து பார்த்தது போல எழுதத் தொடங்கின.

கருணாவின் தகவலின்படி புலிகளின் தலைவர் இருக்கின்ற இடம் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான். அவர் மீண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவை எழுதின.

புலிகளும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட அந்த இனவாதக் காகிதங்களுக்கு குஷி தாங்க முடியவில்லை. தாம் என்ன நடக்க வேணும் என்று எதிர் பார்க்கிறார்களோ அது நடந்தது போலவே எழுதிக் கிழித்தன.

அந்த மேசைப் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எங்கோ முல்லைத் தீவில் நடந்திருக்க கூடிய சம்பவத்தை பக்கத்தில் நின்று பாத்து எழுதினர்.

சில காலத்தின் பின்னர் சுனாமி மீள் கட்டுமானம் குறித்து புலிகளின் தலைவர் வெளிநாட்டு தமிழ் அறிஞர்களைச் சந்தித்தமை குறித்த செய்தியும் படங்களும் வெளிவந்த போது உண்மையில் அந்தப் பத்திரிகைகள் ஆற்றாமையினால் வெம்பியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவே இல்லை!

அந்தப் புகைப்படத்தில் இருப்பது பிரபாகரன் இல்லை. அவர் போலத் தோற்றமுடைய இன்னொருவர். என்று அவை செய்தி எழுதின.

இனி இல்லை என்று சொல்லக்கூடிய மடத்தனத்தில் அந்தச் செய்திக்கு அவை சொல்கின்ற காரண காரியங்கள் இருந்தன.

அதாவது

உண்மையில் பிரபாகரன் இறந்து விட்டார். கிட்டத் தட்ட அவரைப் போல இருக்கின்ற 6 பேரை பொட்டம்மான் தெரிவு செய்து பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து உரு மாற்றியிருக்கிறார். வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் வரும் போது அவர்களோடு எப்படி பேசுவது என்பதை பொட்டம்மான் நெறிப்படுத்துகிறார்.

இதனாலேயே அடிக்கடி பிரபாகரன் மீசையோடும் மீசையற்றும் தோன்றுகிறார். அது தவிர இறந்து போன புலிகளின் தலைவருக்கு கையில் ஒரு பெருவிரல் இல்லை. ஆனால் தற்போதுள்ளவருக்கு அது இருக்கிறது. ஆக மொத்தத்தில் புலிகளின் தலைவர் சுனாமியில் இறந்து விட்டார்.
என அந்த பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இன்று வரைக்கும் அதையே எழுதி வருகின்றன.

உண்மையை சொல்லுங்கள். இது ஒரு மாற்றுக் கருத்து. அதனைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

அண்மையில் கௌசல்யன் கொலை குறித்த ஒரு கற்பனை ஆக்கத்திலும் தலைவர் இப்போது இல்லை. ஆகவே நீ எங்களோடு வந்து இணைந்து விடு என கருணா தரப்பிலிருந்து கௌசல்யனைக் கேட்டதாக எழுதியிருக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கும் மடத்தனமான கருத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தில் இது இரண்டாவது வகை.

மாற்றுக் கருத்துக்களை காது கொடுத்து கேட்கின்ற அதே வேளை அந்தக் கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்துக்களேயாதலால் அவையும் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களில் இருக்கின்ற நியாயத் தன்மையை உணர்ந்து கொள்கின்ற அதே வேளை அந்த கருத்துக்களுக்கான எதிரான கருத்துக்களும் மாற்றுக் கருத்தக்களேயாதலால் அவற்றில் உள்ள நியாயத் தன்மையும் உணர்ந்து கொள்ளப் பட வேண்டும்

நான் சொன்ன வடிகட்டின மடைத்தனமான கருத்துக்களை எழுதி தங்களையும் பேயன்களாக்கி வாசிக்கிறவர்களையும் விசரர் ஆக்க முயற்சிக்கிற பத்திரிகைகளை நினைத்தால் கோபம் வருகிறது.

அதை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்களை நினைத்தால் கவலை வருகிறது.

பின்குறிப்பு: நடப்பது யுத்தம்! இதிலே இவ்வாறான கருத்துக்கள் வருவது சகஜம் தானே. புலிகள் மட்டும் இப்படி எழுதியதே இல்லயா என்று யாராவது கேட்டுப் பின்னூட்டம் இடுவார்களோ தெரியவில்லை.

By

Read More

× Close