போய்வருக தாய் நிலமே

UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996

நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக் கொண்டிருப்பவருக்கான பொதுவிதி.

ஆனாலும் என்னவோ பள்ளிக் காலம் என்றவுடன் UK என்கிற உடையார் கட்டு பாடசாலைதான் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். அது முதன் முறையாக பெண்களோடு அருகருகே பயிலும் வாய்ப்பு. வாராது வந்த மாமழையான வாய்ப்பு. பதற்றமும் தயக்கமும் மகிழ்ச்சியுமான அப்போது வயது 16.

ஒரு ஏப்ரல் நாள். கடந்த நான்கு மாதங்களில் வன்னி மெதுமெதுவாக இயைபடைந்து விட்டிருந்தது. கொஞ்சக் காலம் கொட்டில் கட்டுவதில் போனபோது சும்மாயிருக்கிறோமே எனத் தோன்றவில்லை. மென் இருண்மைக் காடுகளில் சூரை முட்கள் கிழித்தெடுக்க தடிகள் வெட்டினோம். சூரை முள் சும்மா இல்லை. மற்றைய முட்களினின்றும் மாறுபட்டது. தூண்டிலைப் போல எதிர் வளமாய் இருக்கும். ஆரம்பங்களில் கிழி கிழியென கிழித்திருக்கிறது.

மொத்தம் மூன்று கொட்டில்கள். சிறிதும் பெரிதுமாக. சுவர்களுக்கு மண்ணுக்காக குழிகள் தோண்ட வேண்டியிருந்தது. ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் யானைக்கு பொறிக் கிடங்கு ஆகியிருக்கும். ஆனால் நீளமாக ஓடி பிறகு வலது பக்கம் திரும்பி கிட்டத்தட்ட ட வடிவில் மண்ணை அகழ்ந்தெடுத்தோம். பொதுக் கிணறு பொதுக் கக்கூசு (காட்டின் எல்லையோரம் ஆளுயரப் புற்களின் மறைப்பிலான பொது நிலம்தான் அது) போலவே பொதுப் பதுங்கு குழி அது. குண்டு தள்ளி விழுந்தால் பதுங்கு குழி. உள்ளே விழுந்தால் மரணக் குழி.

வன்னி அவ்வாறான ஒரு சனத்திரளை கண்டிருக்காது. திடீரென வீங்கி முட்டியதைப் போல கொஞ்சமென்ன அதிகம் திணறித் தான் போனது. நிலம் பெரிதுதான். யாழ்ப்பாண குடாவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்தான். ஆனால் அத்தனை மக்கட் கூட்டத்தின் கொள்ளளவைத் தாங்கிக் கொள்வதற்கு அது தயாராய் இருக்கவில்லை. தன்னளவில் நிறைவான உற்பத்தியோடு தன்னளவில் அளவான விலை விகிதங்களோடு எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒற்றை ஜீவனைப் போல வன்னி தன் பாட்டுக்கு சிவனே என்று இருந்தது.

ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம்தான். 94 வரையும் வன்னி தொடர்பான யாழ்ப்பாணத்துப் புரிதல் எப்படி இருந்தது. வன்னியோ அது காய்ந்து போன கருவாட்டு நிலமெல்லோ.. அங்கை மனிசர் இருப்பினமோ.. நுளம்பும் மலேரியாவும்.. ச்சீச்சீ தூத்தூ..

ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும் அடித்து துவைத்துக் காயப் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கொசுக்கள் பழகின. காடு பழகியது. யானைகள் பழகின. குரங்குகள் பழகின.

இனிப் பள்ளிக் கூடம் பழக வேண்டும்.

கையில் பள்ளிச் சான்றிதழ்களோ ஏதும் அடையாளங்களோ இல்லை. கட்டடத்தின் வெளியே ஒரு மேசையைப் போட்டு பெயர் முன்னைய பாடசாலை கடைசியாய் படித்த வகுப்பு எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம் சேர். பின்னாட்களில் எனது கணக்கு வாத்தியார். ஆசிரிய பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணம் பல தடவைகள் முன்பு வந்திருக்கிறார். பாடநேரங்களில் சில முன் வலிகள் அவரையுமறியாமல் வந்து விழும். ம்.. அப்ப எல்லாம் ட்ரெயினிங் வந்த போது வன்னியென்டால் ஒரு நக்கல் உங்களுக்கு. இப்ப….? என்பதோடு நிறுத்துவார். அந்த மனதை அப்போதை விட இப்போது ஆழமாக உணர முடிகிறது.

வெள்ளைச் சேட்டு நீலக் காற்சட்டை கறுத்தச் சப்பாத்து கட்டாயம் என்ற முன்னைய பாடசாலையின் கொழுப்பெடுத்த விதிகளை யுத்தம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. வெள்ளையைக் கிட்டவும் நெருங்க முடியாத ஒரு மண்ணிற அரைக் கை சேர்ட்டும் சாம்பல் நிற காற்சட்டையும் கான்சர் வருமென பயமுறுத்தினாலும் கனகாலமாக என் காலோடு தேய்ந்த நீல நிற முள்ளுச் செருப்புமென ஏகாம்பரம் சேருக்கு எனது முன்னைய பள்ளியின் பெயரையும் படித்த வகுப்பையும் சொன்னேன். ”ஓ.. அப்ப இந்த வருசம் ஓ எல் சோதினை.. என்று நான் மறந்தே போயிருந்த விசயத்தை அவர் நினைவு படுத்தினார். இன்னும் எட்டே மாதங்கள் இருக்கிறது. கடந்த ஆறு மாதமாய் பள்ளிப் புத்தகங்களை பார்த்தது கூட இல்லை.

பாடசாலைக் கட்டடங்களில் மக்கள் இருந்தார்கள். வெளியே மரநிழல்களில் வாங்கு மேசைகளை போட்டோம். ஆரம்பத்தில் நிரந்தர மாணவர்களுக்கு காலையும் இடம் பெயர்ந்தவர்களுக்கு மாலை வகுப்பும் என நடாத்தினார்கள். மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும். வீட்டில் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஓடி வந்தால் அருமையான நித்திரை வரும். மரநிழல் சுகமான காற்று தாலாட்டும். ஆசிரியர்கள் திட்டுவதற்கு எழுப்பினால் கூட வீடு வாசல் கிராமம் நகரம் என அனைத்தையும் இழந்து வந்த சோகத்தை முகத்தில் அப்பி விட்டு நிற்போம். இரங்கி இறங்கி விடுவார்கள். (முன்னைய யாழ்பாணத்து பள்ளியில் புண்ணியலிங்கம் சேர் தண்டிப்பதற்கு அழைத்தால் முதல்வேலையாக நெற்றியில் திருநீறை அப்பி முன் சென்று நிற்போம். சிவனடியார்களை துன்புறுத்தலாகாது என்பது அவரது கொள்கை.)

மதிய நேரத்துப் பள்ளி வேலைக்காகாது என்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டார்கள். ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் கூடிய வாழ்வில் மறக்கவே முடியாத பள்ளி வாழ்க்கை அதன் பின்னர் எனக்கு ஆரம்பித்தது.

காரணமவள்.

0 0 0

20090224_pg17வள்ளிபுனம் சந்தியிலிருந்து தேவிபுரத்திற்கு பிரியும் வீதியில் கொஞ்சத் தூரத்தில் இருக்கிறது ஆச்சி தோட்டம். பென்னம் பெரிய தென்னந் தோட்டம். ஏக்கர் கணக்கில் சரியான அளவு தெரியாது. மண்ணால் சுவரெழுப்பப்பட்ட ஒரு சுமாரான வீடு அதன் நடுவில் இருந்தது. சீமெந்துக் கட்டுடன் கூடிய கிணறு, சற்றுத் தொலைவில் தேங்காய்களை கொப்பறா ஆக்கி எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலை.

ஆச்சி தோட்டம் எப்போதுமே மனிதர்கள் நிறைந்து காணப்படும். தேங்காய்களை பொறுக்குபவர்கள், தேங்காய்களை, உரிப்பவர்கள், காய வைப்பவர்கள், குரங்கு திரத்துபவர்கள் என எனக்கு முற்றிலுமான புதிய அலாதியான உலகம் அது. நல்ல மனிதர்கள். பெரும்பாலானவர்களின் பூர்வீகம் தமிழகத்தின் தென்மாவட்டங்கள்தான். கலவரங்களின் போது மலையகங்களில் இருந்து வன்னியில் குடியேறியவர்கள். வன்னியைத் திருத்தியவர்கள். காடுகளை விவசாய நிலங்களாக்கியவர்கள்.

ஆச்சி தோட்டத்தின் வீட்டுச் சுவரில் இடியன்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கட்டுத் துப்பாக்கிகள். பகல்களில் குரங்குகளை விரட்ட அவ்வப்போது வெடிக்கும். இரவுகளில் வெடித்தால் மான் அல்லது மரை அல்லது காட்டுப் பன்றி. சூடு வாங்கி அவை தப்பித்து ஓடிவிடும். விடிகாலையில் இரத்தத்தைத் தொடர்ந்து சென்று எடுத்துவர வேண்டும் உடலமாய்.

ஆச்சிதோட்டத்தை சுற்றியும் வேறும் பல பெயர்களையுடைய தென்னங்காணிகள் இருந்தன. பத்து ஏக்கர் காணி , மஞ்சள் கேட் காணி, சிவத்தக் கேற் காணி என அடையாளப் பெயர்கள். பத்து ஏக்கர் காணியில் நாங்கள் குடியிருந்தோம். காணியின் ஒரு முடிவில் காடு தொடங்கியது. இரண்டு அல்லது மூன்று வருடங்களேயான இளைய தென்னைகள் அப்போது நின்றன. ஒரு குடி நீர்க் கிணறு இருந்தது. அந்த சுற்று வட்டாரத்திற்கான குடி தண்ணீர்க் கிணறு அது ஒன்றுதான். கிணற்றடி எப்போதும் களை கட்டியிருக்கும்.

நாங்கள் மூன்று கொட்டில்களை அங்கு அமைத்தோம். காட்டின் ஓரமேயிருப்பதாலும் இளைய தென்னைகள் என்றதாலும் இரண்டு தடவைகள் யானை வந்திருக்கிறது. அப்போது நடைபெறும் களேபரங்களில் யானையே மிரண்டு போயிருக்கும். என்ன அடுத்த நாள் பார்க்கையில் சமையல் சட்டிகளும் பாத்திரங்களும் வளைந்தும் நெளிந்தும் போயிருக்கும்.

சைக்கிளில்த்தான் பள்ளி செல்வேன். முக்கால்மணி நேரம் எடுக்கும். கிட்டத்தட்ட புதுக் குடியிருப்புக்கும் அதேயளவு தூரம்தான். இரண்டும் எதிரெதிர்த் திசைகளில் இருந்தன. வள்ளிபுனம் சந்தியில் ஏறினால் பரந்தன் வீதியில் உடையார்கட்டு நேர் வீதி. ஆனால் அப்படியெல்லாம் செல்வதில்லை. இடையில் சுதந்திரபுரச் சந்தியில் திருப்பி உட்சென்று ஒழுங்கைகளில் ஏறி மிதந்து சுற்றியடித்து மீளவும் பரந்தன் வீதியில் ஏறுவேன். பள்ளி முடியும் போதும் அப்படித்தான்.

காரணமவள்!

0 0 0

udaiகண்ணன் அண்ணை பத்து ஏக்கர் காணியிலேயே தங்கி விட்டார். வன்னிக்கு இடம் பெயர்ந்த போது மகன் சுஜீவனுக்கு 3 வயது இருந்திருக்கும். கிளாலிப் படகில் அவன் என் கை அரவணைப்பில் இருந்தான். மகள் சுபா கலையக்காவின் வயிற்றிலிருந்தாள். பின்னர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அவள் பிறந்த போது வெளியே இரணைப்பாலையில் கிபிர் குண்டுத்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு பெயர் வைக்க ஆலோசனைகளை கேட்ட போது கிபிரி என்ற பெயரைப் பரிந்துரைத்தேன். கண்ணன் அண்ணை ணங் என தலையில் குட்டினார்.

நாமெல்லாம் வெளியேறிய பிறகு அவருக்கு இன்னொரு மகள் பிறந்தாள். அவருக்கு ஆச்சி தோட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்புக் கிடைத்திருந்தது.

கடந்தவாரம் ஆச்சிதோட்டத்தில் செல் விழுந்து எட்டுபேர் பலியாகியதாக தமிழ்நெட் சொல்லியது. வேறெந்த தகவலும் இல்லை. பிறிதொரு நாள் என் UK central college முகப்பில் சிங்கள ராணுவச் சிப்பாய் நிற்கக் கண்டேன். பள்ளி முகப்பில் வெள்ளைக் கொடி பறந்து கொண்டிருந்தது.

காரணமவளானவளெங்கே…

By

Read More

இந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?

அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….

antonதமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி வீரர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப் பட்டனர்.

இந்திய தூதர் திரு டிக்சிட் அவ்வேளையில் புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப் பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு டிக்சிட்டுடன் தொலைபெசியில் கதைத்த போது அவர் என்னை பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப்படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதி படைகளிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அத்துடன் மாவட்ட தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய தமிழ் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டிருந்தது.

இந்த அமைதிச் சூழலில் எதுவித குற்றமும் புரியாத போர் நிறுத்த விதிகளையும் மீறாத கைது செய்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்த்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.

இந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட்சி ங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம் தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்து தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும் ஒரு சிறிய பிரச்சனையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது குற்றம் சாட்டினார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தை கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்ன போது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென்று இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவ தளபதி எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்திய தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.

000

மறுநாள் காலை ஆகஸ்ட் 4ம் நாள் நான் பலாலிக்கு வருகை தந்து திரு டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது குரல் தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கை கடைப்பிடிப்பதாகச் சொன்னார். புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதர் சொன்னார்.

எமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே ஜெயவர்த்தனா பிரகடனம் செய்துள்ளார். அதன் பிறகு நம் போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முயல்வது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும். என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்கு சுட்டிக் காட்டினேன்.

பலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன்.

இந்தியத் தூதர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாகவே நின்றனர். போராளிகளை கொழும்பு கொண்டு செல்வதற்கான சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டிற்கு தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப்படைத் தளபதி ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி பிரச்சனை தீர்க்கப் படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு இந்தியத் தூதர் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார்.

நான் ஏற்கனவே இந்திய அமைதிப்படைத் தளபதியுடன் உரையாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கும் மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்து விட்டார். தான் ஒரு இராணுவ கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப் பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் விவாதம்.

அன்று நான் அவரைச் சந்தித்த போது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர் (டிக்சிட்) இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். சிறிலங்கா இராணுவத்திற்கும் எனது படையினருக்கும் நிச்சயமாக மோதல் வெடிக்கும் என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் புலிகள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர் இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.

எதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில் எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மானத்தை எழுத்தில் வரைந்து அதில் எல்லோரும் கையொப்பமிட்டு அந்த கடிதத்தை பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி அவமானப்பட்டு உயிர் நீப்பதை விட இயக்கத்தின் போரியல் மரபுக்கு அமைவாக தமது உயிரைத் தாமே அழித்து கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ளத் தாம் உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ளார்கள். சயனைட் விசக் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு கடித முடிவில் உருக்கமாக கேட்டிருக்கிறார்கள்.

அன்றிரவு பிரபாகரனைச் சந்தித்த போது ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு அத்துலத் முதலியின் வஞ்சகம் டிக்சிட்டின் கையாலாகத்தனம் அமைதிப்படைத் தளபதியின் அகம்பாவம் எமது போராளிகளின் அவல நிலை ஆகியவற்றை விளக்கினேன். எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி இந்தியாவுக்கு நாம் ஒத்துழைத்த காரணத்தினால்த்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்றார் பிரபாகரன். போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நடந்தால் ஏற்படும் பாரதூரமான விளைவை இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.

மறுநாட் காலை அக்டோபர் 5 பலாலி விமானத் தளத்திற்கு சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரனின் செய்தியைத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். இறுதி தடவையாக முயன்று பார்க்கின்றேன் என்றார். சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அன்று மதியம் உணவுப் பொருட்களுடன் பலாலித் தளம் சென்று எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவு செய்தேன். புலிகளின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.

அன்று மாலை அளவில் சிறிலங்கா விமானத் தளத்தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா போராளிகளை வலுவந்தமாக விமானத்தில் ஏற்ற தனது படையணிகளுக்கு உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தினர் போராளிகளை நெருங்கிய போது அவர்கள் அனைவரும் சயனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரசாவை தழுவிக் கொள்ள மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள்.

இந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள். இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக்கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். புலிபோராளிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர் தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார்.

87 அக்டோபர் 7ம் நாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே சி பாண்ட் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜி ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்து ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார். இராணுவ பலத்தைப் பிரயோகித்து புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அறியத் தரப்பட்டது. ஜெயவர்த்தனாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை புலிகளுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுத்து அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பவான் நடவடிக்கையை அக்டோபர் 10ம் நாள் ஆரம்பிப்பதென முடிவாயிற்று.

1987 அக்டோபர் 10ம் நாள் இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. அன்றைய நாள் அதிகாலை ஈழமுரசு முரசொலி ஆகிய நாளிதழ்களின் செயலகங்களிற்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர் பத்திரிகை கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்துடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். புலிகளின் தொலைக் காட்சி நிறுவனமான நிதர்சனம் தீவை த்து கொழுத்தப்பட்டது.

இந்திய புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் நீடித்தது.

இணைப்புக்கள்

1. இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய இலங்கை ஒப்பந்தந்தின் கடப்பாடுகளுக்கு அமைய தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்திய தளபதிகளின் கருத்தாகும். 1992 இல் தான் எழுதி வெளியிட்ட The IPKF in Sri Lanka என்ற நூலில் இந்திய இராணுவ தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப் பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்.

புலிகளுக்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாம் கடும் போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சி சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாது தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தை கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். புலிளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங் கடும் முயற்சிகள் எடுத்தார். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அவ்வேளை அவர் கடும் சுகவீனமுற்று அமெரிகாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சென்னையில் பண்டுருட்டி இராமச் சந்திரனை சந்தித்த திபேந்தர் சிங் ரஜீவ் காந்தியுடன் பேசி போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் படி சொன்னார். ஆனால் அமைச்சர் பண்டுருட்டியாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தனது ஆலோசனைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மாறாக புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப் பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இதுவொரு அரசியல் முடிவென்றே கருதினார் அவர்.

2.
இந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.

By

Read More

லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல

love_clipart_03வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் 🙂

ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா மனுசி கலையகம் வெளியிடுகிறது :))

By

Read More

பூவைப் போல புன்னகை காட்டு – புலிகளின் பாடல்

நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன்.

அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார். அவர் இசையமைத்த விடுதலை மூச்சுத் திரைப்படத்தில் பாடகர் திப்புவின் பாடலும் இடம் பெற்றிருந்தது.



By

Read More

இது ஒப்பாரி அல்ல – நினைவு 1

புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன்.

டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா – ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´

அம்மா இன்னும் வந்த பாடில்லை – நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.

மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் – காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் – மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.

´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.

´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.

பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´

தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.

´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மூன்று வயது மகள் வீரிட்டுக் கத்தினாள். அதையும் தாண்டி அம்மம்மா பெருங்குரலெடுத்து கடவுள்களை அழைத்தா. அம்மா அமைதியாயிருந்தா ஆனால் அழுதுகொண்டிருந்தா. மகனும்

இம்முறை தலைக்கு மேல் அல்லாது சற்றுத் தூரத்தில் மேலே வெடித்து காற்றை உதைத்து முன்னேறி வரும் இரைச்சல் கேட்டது. ´´பிள்ளையாரப்பா .. என்ரை பிள்ளையளைக் காப்பாற்று .. ´´அம்மா முணுமுணுத்தா. ´´இங்கைதான் எங்கையோ விழப்போது. போறதெண்டால் எல்லாரும் ஒண்டாப் போகவேணும். ´´ இருந்தாற்போல அம்மம்மாவிடமிருந்து வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.

விழுந்த இடமெங்கும் செந்நிறம் பாய்ச்சி வெடித்தது ஆட்லறி – அது 1986 ம் ஆண்டு

By

Read More

× Close