ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள்.

சிறுவன் கால்களில் விழப் “பஞ்சிப்படும்” வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் “வணங்கி ஆசிபெறும்” படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக முக்கியமாக வணங்க வேண்டிய நபர் சிங்களவராகவும் இருந்துவிட – மேசைச் செய்தியாளர்கள் திரைக்கதை கதை வசனம் என புனைந்து தள்ளி விட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை காலில் விழுந்து வணங்குவது ஒரு பண்பாடாக அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் தந்தையரைவணங்குவது கூட பரவலாக நம்மிடம் வழக்கத்தில் இல்லை. சிங்கள சமூகத்தில் “நல்லநாள் பெரியநாட்களில்” ஒரு இயல்பு வழமையாக பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கும் முறைமை உள்ளது. குறிப்பாக சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு தொடர்பாக, கல்விப்புத்தகப் பாடங்களில் அவ்வாறு தாய் தந்தையரை விழுந்து வணங்கும் படங்களை சிறுவயதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அந்தச் சூழல்கள் என்னோடு ஒட்டாமல் தள்ளியே நின்றன. இன்னும் கோயில்களில் “சுற்றமும் முற்றமும் பார்த்துநிற்க” நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் சிறு வயதுகளில் வெட்கமாகவும் உணர்ந்திருக்கிறேன்.

அப்படியொரு முற்றிலும் புதிய முறைமையில், நாலுபேர் பார்த்துநிற்க விழுந்து வணங்குகின்ற வெட்கத்தில் சிறுவன் “பம்ம” அவனை வெற்றி வீரனாக பேஸ்புக்கிலும் இணையச் செய்தித்தளங்களிலும், விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

நாங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்குகின்ற சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன். சாமத்திய வீட்டிலும் திருமணச் சடங்கிலும் அப்படியொரு சம்பிரதாயம் இருக்கிறது. அது கூட வீடியோ எடுப்பவர் “ஓகே.. ரெடி .. இப்ப விழுங்கோ” என்ற பிறகுதான்..

0 0 0

இதுவும் காலில் விழுகிற சமாச்சாரம்தான். இங்கேயொரு கோயிலில் நடந்தது. பூசைகள் முடிந்து ஐயர் வீபூதி கொண்டுவருகிற நேரம், அன்றைக்குப் புதிதாகக் கோயிலுக்கு வந்திருந்த வடஇந்தியக் குடும்பமொன்று கணவன், மனைவி, இருபிள்ளைகள் என ஐயரின் காலடியில் “குடும்பத்தோடு விழுந்து கிடந்து” வணங்கினார்கள். ஐயரும் ஒருகணம் அந்தரித்துத்தான் போய்விட்டார். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. குனிந்து தொட்டுத் துாக்குவதா அல்லது தொட்டு ஆசீர்வதிப்பதா அல்லது இவர் “சிவனே” என்று நிற்க அவர்களாக எழும்புவார்களா என ஒரு “மண்ணும்” அவருக்குத் தோன்றவில்லையோ என நான் நினைத்தேன்.

பிறகு அவர்கள் எழுந்து கொஞ்சம் குனிந்து வாய்பொத்தி நிற்க அவர்களது நெற்றியில் ஐயர் விபூதியைப் பூசினார். அப்பொழுது அவர்களைப் பார்க்க ஜெயலலிதாவிற்கு முன்னால் நிற்பவர்களைப் போலிருந்தது.

இதற்கிடையில் அப்பால் நின்ற சில “தமிழ்த்தாய்” மார் ஐயர் வரும்போது விழுந்து வணங்குவதற்காக தமது பிள்ளைகளையும் “ரெடி”ப்படுத்தினார்கள். ஐயர் வந்து நின்றார். இரண்டு சிறுவர்களின் “கழுத்தைப் பிடித்து” ஒரு தாய் தள்ளினார். அவர்கள் திமிறிக்கொண்டு நின்றார்கள். பிறகு பிடியிலிருந்து நழுவி தாய்க்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நெளிந்தார்கள். அவ்வளவு நேரமும் “அவங்கள் விழுவாங்கள்” என்று மரம்போல் நின்ற ஐயருக்கு “இது வேலைக்காவாது” என்று விளங்கியிருக்க வேண்டும். நகர்ந்து போய்விட்டார்.

அந்தச் சிறுவர்களைச் சந்திக்க வேண்டும். சிலநேரங்களில் அவர்களும் ஏதாவது வீர நிலத்தின் விழுதுகளாக இருக்கலாம். ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.

By

Read More

மொட்டை மாடிக் கனவுகள்..

எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது. ஒரு ஒன்று கூடல் மாதிரி பேசிப் பறைந்து விட்டுக் கலைவார்கள். இளந்தாரிப் பெடியள் ஒரு ரேடியோவைக் கையில் வைத்து அங்கையிங்கை திருப்பி வருகிற இரைச்சல் சவுண்டுகளையும் புரியாத மொழிகளையும் பைலட்காரர் கதைப்பதாகச் சொல்வார்கள். அது உண்மைதானா அல்லது இலங்கை வானொலியின் சிங்களச் சேவையில் போன ஏதும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிதானா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
Continue Reading

By

Read More

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.

ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுக் கொள்ள மாபெரும் மனிதப்பேரவலம் அங்கு நிகழ்ந்தேறியது. அன்றைய சில மணிநேரங்களில் செத்தவர்கள் தொகை ஆயிரத்தைத் தாண்டியது.
Continue Reading

By

Read More

நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன் (ஒஸ்ரேலிய மாவீரர் தினம்) திருமா (டென்மார்க் மாவீரர் தினம்) வைகோ (லண்டன் மாவீரர் தினம்) என யாருக்கும் அந்தந்த நாடுகளுக்குள் நுழைவனுமதி கொடுக்கவில்லையாம். நல்லது.

சுவிஸில் நிகழ்ந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனது படத்தை மாவீரர் வரிசையில் செருக யாரோ முயற்சிப்பதாகவும் அதைத் தடுப்பதற்கெனவும் பலரும் பரபரப்பாக இருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பிரபாவின் மாவீரர் தின உரையை இணைக்க முடியவில்லையென அறிவித்த போது அனைவரும் கை தட்டினார்கள். இவற்றுக்கு அப்பால் தங்கள் பிள்ளைகளின் சகோதரங்களின் படங்களின் முன்னால் கண்ணீரோடு கதறலோடும் அமர்ந்திருந்தனர் பெற்றோரும் மற்றவர்களும்..

சுவிஸ் மாவீரர் நாளில் அண்மைக்காலம் வரை களத்தில் போராளிகளாயிருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. பலரும் பல்வேறு வழிகளில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் இன்னமும் சுவஸில் தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்படும் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் போராளிகளாயிருந்தார்கள் என அறிந்தவர் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாய் வந்தார்கள் மண்டப வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்தார்கள். முடிந்த பிறகும் அவ்வாறே ஒரு எடுபிடியாய் நின்றார்கள். பிறகு போனார்கள்.

விடுதலைப்புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் பிரிவு தலைவர் தயாமோகன் அண்மையில் சுவிஸ் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் முன்னாளா அல்லது இந்நாளும் இருக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அவருக்கு கூட அது தெரியுமா எனத் தெரியவில்லை. இதையெல்லாம் இப்போது யார் தீர்மானிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனக்கென்னவோ வருடா வருடம் மாவீரர் உரை தயாரிப்பதைத் தவிர இப்போதைக்கு விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகத்திற்கு ?? செய்வதற்கு என்ன இருக்கிறது என யோசிக்கத் தோன்றுகிறது. என்னவோ செய்யட்டும்! இறுக்கமான கட்டுக்கோப்பில் திகழ்ந்த புலிகள் இயக்கத்திற்கு இந்தக் கதி நேர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. தலைவர் பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடைசிக் காலங்களில் கலைத்திருந்தால் இப்படி அவரா இவரா எவரோ என்கிற குழப்பங்கள் ஏற்பட்டிருக்காதோ என எண்ணுகிறேன்.

0 0 0

புலம்பெயர்ந்த தேசங்களில் கொஞ்சம் வயசானவர்கள் தாங்கள் நாட்டுக்குப் போகப்போறம் நாட்டுக்குப் போகப்போறம் என கனகாலமாகவே சொல்லி வருகிறார்கள். போவதும் போகாது விடுவதும் அவர்களது விருப்பம். அவ்வாறு அடுத்த வருடம் போக இருப்பதாகச் சொன்ன ஒருவரின் உரையாடல் இது. “போகப்போறன். முதலொருக்க போய் நேச்சர்களைப் பாத்திட்டு வந்து பிறகு போகப்போறன். ”
“போய் என்ன செய்யப் போறியள்” – இது நான்
“வீடெல்லாம் ரிப்ரொப்பாகத் திருத்தியாச்சு.. போய் காலாட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். பின்னேரங்களில டேய்.. சின்னவா இங்கை வாடா இறக்கடா கள்ளை என்றால் சின்னவன் கள்ளு இறக்கித் தருவான். வேற என்ன வேணும்? ஒரே கொந்தாய்தான்”

மேற்சொன்ன அன்பரை விடுங்கள் ஐம்பதுகளைத்தாண்டியிருந்தார். மடிப்புக்களும் சுருக்கங்களும் இன்னும் போயிருக்காது. இவ இருபத்தாறு வயதுப் பெண் பிரான்சில் இருந்து வந்திருந்தா. சிறுவயதிலேயே புலம் பெயர்ந்தவ. ஒரு சந்திப்பில் மாற்றமுடியாத நமது பண்பாடான யாழ்ப்பாணத்தில எவ்விடம் என்ற கேள்வியோடு ஆரம்பித்து அவ நெருங்கிக் கொண்டிருந்தா. அவர் சொல்கிற நபர்களை நான் அறிந்திருந்தேன். மில்கார பாலுவைத் தெரியுமா என்று அவ கேட்டா. (தெரியாமல் இருக்குமா) அவையிட ஆட்கள்தான் நாங்கள்.. ஒரிஜினல் ……… என்ற அவவின் வார்த்தைகளை சத்தியமாக ஜீரணிக்க முடியவில்லை என நான் எழுதுவது ஏதோ அதிர்ச்சித் தொனிக்காக அல்ல. அது ஒருபோதும் எதிர்பாராதது. அவவுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்..? ஏன் டூப்ளிக்கேற்றும் உண்டோ என்று கேட்பதைத் தவிர..

எப்போதோ எழுதி வைத்திருந்த ஒரு சிறுகதைக்கு அதன் பிறகே நான் புடுங்கியிருக்கிறது என்று தலைப்பிட்டேன். புலம்பெயர்ந்த உலகச் சமூகங்களில் அரசியல் மற்றும் சமூகக் கருத்தியலில் ஒரு செத்த இனமாக நாங்கள் உருவாவதுபோலத் தெரிகிறது. நாங்கள் ஒட்டுண்ணிகள். அவ்வளவே..

0 0 0

vஅண்மைக்காலமாக எனது பதிவுகள் இரயாகரனின் தமிழரங்கத்தில் வெளியாகின்றன. ஒரு ஊடகத்திற்கு குத்தப்பட்ட முத்திரையைக் கொண்டே அதில் வெளியாகிற பதிவுகளின் நபர்களும் பார்க்கப்படுகிற சூழல் நிலவுகிறதெனினும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. பொது வெளியில் ஏதோ ஒரு வழியில் வெளிவந்துவிட்ட பிறகு அது எங்கிருந்தும் வரட்டும். அது பேசுகிற பொருளைப் படிப்பவர்கள் படிக்கட்டும். மற்றவர்கள் இவனொரு விலைபோனவன் என்று சொல்லட்டும். தமிழரங்கத்தில் வெளியாகிற பதிவுகள் தம்முடைய நியாயப்பாடுகள் அல்லது விருப்பங்களுக்கு ஏற்று “தமக்குச் சரிப்பட்டு” வரக்கூடிய உடன்பாடுகளுக்கு உட்படுகிறதாக அமையின் அவற்றை வெளியிடுகிறார்கள் என நினைக்கிறேன். உதாரணமாக இந்தப்பதிவின் முதல் இரண்டு பகுதிகளும் “அவர்களுக்குச் சரிப்பட்டு” வரக்கூடியதாக அமையலாம். அமையின் அவர்களாகவே எடுத்துப் போடுகிறார்கள். பெரும்பாலும் பதிவெழுதும் போதே “அவர்களுக்குச் சரிப்பட்டு வரும்..” “வராது” எனப் புரிந்து விடுகிறது. மற்றும்படி இதனை வெளியிடவும் என தமிழரங்கத்திற்கு அனுப்புவதோ “லிங்” கொண்டு சென்று குத்தும் விளம்பரப்படுத்தல்களையோ செய்வதில்லை.

இனியொரு தளத்தில் இரயா குறித்த அசோக் யோகன் எழுதிய பதிவொன்றினைப் படித்தேன். அதில் இரயாவின் விமர்சன மொழி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. என் சின்ன வயதுகளில் ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். தெளிவாகவே அவர் தனது வார்த்தைகளில் தன்னையொரு சாதிய மேலாளர் எனக் காட்டிக் கொள்வார். “நாய்ச்சாதி.. நலமெடுத்த நாயே.. நக்கிப்பிழைக்கிற எளிய வடுவா.. அவனோடை படுத்த முண்டம்.. மூதேவி ” இப்படியாகத்தான் அவரது வசவுகள் நீளும். பாடசாலைகளுக்குள்ளும் அவை நீண்டிருந்ததாகத்தான் படித்தவர்கள் சொன்னார்கள். அவ்வப்போது இரயா பயன்படுத்தும் வசவு மொழிகளும் வாத்தியார் மொழிகளோடு பெரிதும் வேறுபடுவன அல்ல. அவற்றைப் படிக்கும் போதெல்லாம் எனக்கெழுகிற உணர்வு என்னவெனில் “நல்ல வேளையாக இரயாகரனின் கையில் ஆயுதங்கள் இல்லை” என்பதுவே..

0 0 0

ஒன்றிரண்டு இணைப்புக்கள்
புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும் – பூராயம்
ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? -கீற்று

By

Read More

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

By

Read More

× Close