ஆறா வடு – கவிஞர் சேரன்

அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல, இரு வேறு அரசியலையும் பற்றியன.

ஆனால் Cat’s Table க்குக் கிடைக்கிற பவிசும் கவனமும் ஆறா வடுவுக்கு இப்போது கிடைக்காது.யாராவது அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வரை/Just finished reading a brilliant novel in Tamil by Sayanthan-Aaraa vadu ( Unhealed wounds). It would be a wise literary exercise to compare this novel with Ondaatje’s Cat’s Table. Both talk about Ships but what a difference in depth, politics and sensitivity!!!!!

By

Read More

ஆறா வடு – ஷோபாசக்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் நாவலின் சிறப்புகள். முற்றுமுழுவதுமாக அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட பிரதியாக இருப்பது சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் சயந்தனின் கதைசொல்லும் ஆற்றல் ஆறாவடுவை மிக முக்கியமான இலக்கியப் பிரதியாக்குகிறது

நாவலில் இலங்கை – இந்திய இராணுவங்கள், அரசுகள் புலிகள், ஈபிஆர்எல்எவ், பிரபாகரன், வரதராஜப்பெருமாள் என்று எல்லோருமே தைரியமாக விமர்சிக்கப்படுகிறார்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அதிலும் முக்கியமாக நாவலின் முதன்மைப் பாத்திரமான விடுதலைப்புலி அமுதன் தன்னைத்தானே செய்துகொள்ளும் சுயகிண்டல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையே. இவற்றை சயந்தனின் காட்டமான விமர்சனங்களாக கொள்ளலாம். ஓர் எதிர் அரசியலை நாவல் முன்வைக்காமலிருப்பது என்னளவில் சற்று ஏமாற்றம். கண்டிப்பாக அவ்வாறான எதிர் அரசியல் இருக்கவேண்டும் என இலக்கிய நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனால் என்னளவில் நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவே. அதைத் தாண்டியும் ஆறாவடு இலக்கியமாக முக்கியமான பிரதியே. குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

By

Read More

பிரபாகரனுக்கு இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை – விகடன்

”இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் அவனுக்கு இருந்தன. அவற்றில் சதா காலத்துக்கும் ஒரேயரு கனவு மீதம் இருந்தது. அது தனி எரித்திரிய விடுதலை தேசம்!”

– தனது ‘ஆறாவடு’ நாவலின் இறுதி அத்தியாயத்தை இப்படி ஆரம்பிக்கிறார் சயந்தன். 50 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு கால ஆயுத யுத்தம் என நாடுநாடாக நிழல் தேடி ஓடிய ஈழ மக்களின் ஓட்டத்தையும் அதன் கொடும் வலியையும் மக்களின் பார்வையில் இருந்து தனது நாவலில் பதிவுசெய்திருக்கும் சயந்தன், அண்மையில் தனது நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதில் இருந்து…

”இடப்பெயர்வுதான் ஈழ மக்கள் சந்தித்த இரண்டாவது பெரும் யுத்தம். ஒரு பக்கம் இனவாத அரசு, இன்னொரு பக்கம் ஊரைவிட்டுத் துரத்தும் இடப்பெயர்வுகள் என இயற்கையோடு மோதிய உயிர் விளை யாட்டு அது. அப்படித்தான் எங்களின் இடப்பெயர்வும் நடந்தது. எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, 1983-ல் அப்பா சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்ந்தார்.

1995-ல் நடந்த மாபெரும் இடப்பெயர் வில் நானும் அம்மாவும் தங்கையும் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவில் காடு கள் சூழ்ந்த தேவிபுரம் எனும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தோம். மூன்று வருடங் களுக்குப் பிறகு ‘வெற்றி நிச்சயம்’ என்ற பெயரில் வன்னி மீது இலங்கை ராணுவம் பெரும் எடுப்பில் போர் தொடுத்தது. மீண்டும் உயிர் வாழ்க்கை நிச்சயமற்ற தாகியபோது, மன்னாரில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தோம். சற்றே பெரிய மீன்பிடி வள்ளத்தில் சுமார் 40 பேர் பயணித்தோம். வெறும் 18 மைல் இடை வெளியில் இந்தியாவும் இலங்கையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அகதிகளுக்கு அந்தத் தூரம் கொடும் அமைதி சூழ்ந்த பெருந்தூரம். வாழ்தலுக்கான கனவைக் கடலுக்குக் காவு கொடுத்திடாமல் தப்பிப் பிழைப்பதே இயற்கையோடு நாங்கள் நடத்தும் போராட்டம்தான். இரவு 10 மணிக்குப் புறப்பட்ட வள்ளம் மறு நாள் காலை 10 மணி அளவில் கடலில் வைத்து ராமேஸ்வரத்தின் வெளிச்சக் கோபுரம் ஒன்றை மெல்லிய ஒளிக்கோடாகக் காட்டியபோதுதான் மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து அழைத்துச் சென்று, எங்களை மண்டபம் அகதி முகாமில் தங்கவைத்து இருந்தார்கள்.

அங்கு காலையில் எழுந்ததும் கடலை வெறித்துப் பார்த்தபடி இருந்தோம். பின்னர் மதியம், அந்தியிலும் கடலையே பார்த்தோம். கடலைப் பார்ப்பதைத் தவிர, ஒரு குடிமைச் சமூகத்தின் உரிமைகளான கல்வியோ, வேலையோ யாருக்கும் வழங் கப்படவில்லை. பெரும்பாலான குடும்பங் கள், 200 ரூபாயோடும் கொஞ்சம் பருப்பு, அரிசியோடும் வாழ முடியாது இருந்தனர். இவ்வாறான நிலையில், வேறு வழி இல்லா  மல் நாங்கள் களவாக எங்கு இருந்து தப்பி வந்தோமோ, மீண்டும் அந்த தேசத்துக்குக் களவாகவே சென்றோம்.
இலங்கையில் இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் உலகெங்கும் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். சொந்த நாட்டைவிட்டு ஓடவைத்ததில்… குண்டுகள், ஷெல்லடிகள், கடத்தல்கள், கொலைகள், ஆயுதங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த ஓட்டம் நிம்மதியான பயணம் அல்ல. கனவை, காதலை, காணியை, பிறந்த வீட்டை, நாட்டை என எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் துரத்தியிருக்கிறது யுத்தம். 80-களின்தொடக்கத்திலேயே மனிதர்களை இலங்கையை விட்டுத் துரத்தத் தொடங்கிய யுத்தம், இன்னமும் துரத்தியபடியே இருக்கிறது!”

‘ஒரு பக்கம் போர் வெடிக்கும் என்கிறார்கள்… இன்னொரு பக்கம் ஈழம் சாத்தியம் இல்லை என்கிறார்கள்… நீங்கள் எந்தப் பக்கம்?”

‘நான் எந்தப் பக்கமும் இல்லை. சில காயங்கள், கவலைகள் இருந்தாலும் என் மனைவி-குழந்தையோடு சுவிஸ்ஸில் ஓரளவு நிம்மதியாகவே வாழ்கிறேன். போர் வேண்டும் என நான் சொல்ல விரும் பினால், முதல் துப்பாக்கியை என் குழந்தையின் கைகளிலேயே கொடுக்கும் யோக்கியனாக நான் இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. யாருமே விரும்பாத ஓர் இடத்துக்கு வன்னி மக்கள் வந்துவிட்டார் கள். புலிகளை விமர்சித்தவர்கள்கூட வன்னி மக்களின் இந்தத் துயரத்தை விரும்பவில்லை. பெரும் மரணத் துயருள் சிக்கி, போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலை யிலும் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் தெரியவில்லை. யுத்தம் மக்களைத் தின்று தீர்த்ததே தவிர, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. யுத்தத்தின்போது இருந்த அதே பதற்றமும் உயிர்க் கொலை அச்சமுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் காணாமல்போன யாரோ ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய கனவைத் தவிர, வேறு எதுவுமே அவர்களிடம் இல்லை. ஆகக் குறைந்தது, வீடுகளுக்கு முன்னால் நிற்கிற ராணுவத்தினர் கொஞ்சம் அப்பால் நகர வேண்டும்!”

‘ஏகப்பட்ட தமிழ்த் தலைமைகள் ஈழ மக்களுக்காக உருவாகிவிட்டனவே?”

‘ஆமாம்… மக்கள் எண்ணிக்கையைவிட தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. துரோகி, கைக்கூலிப் பட்டங்களும் அதிகம். பிரபாகரன் எடுத்த காரியத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தார். அந்த இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க பெரும்பாலான ஈழ மக்களால் இயலாது. பந்தயத்தில் நாமும் இருக்க வேண்டும் என்றுதான் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் ஈழம்தான் கனவாக இருக்கிறது. ஆனால், அதை அடையும் வழி தெரியாமல் குழுக்களாகப் பிரிந்து மல்லுக் கட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கோ, பிரபாகரனுக்கோ இருந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு, இப்போது எந்த அமைப்புக்கும் இல்லை என்பதுதான் உண்மை. கசந்துபோன மனநிலையில் இருக்கும் ஈழ மக்கள், இன்று சில உண்மைகளை உணர்கிறார் கள். இனப்படுகொலை அறிக்கையை ஐ.நா. வெளியிடுகிறது என்றால், ‘படுகொலையைத் தடுக்காத ஐ.நா. இப்போது அறிக்கை வெளியிடு கிறதா?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி மட்டுமே எங்கள் மக்களின் நியாயமான உணர்வு என்று நான் நம்புகிறேன்!”

‘ஈழ மக்களின் இன்றைய தேவை என்ன?”

‘நிச்சயமாக அவர்களால் ஆயுதங்களை உண்ண முடியாது. உலகின் மிக மோசமான ஒரு ராணுவக் கண்காணிப்பின் கீழ் அவர் கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் இருந்து சிலர், ‘ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அவர்களின் நிலம், உணவு, வேலை, கல்வி எனச் சகல வாழ்வுரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பௌத்த விஹாரைகளை நிறுவுகிறது இலங்கை அரசு. ஈழத் தமிழர் களைச் சூழ்ந்துள்ள இருண்ட மேகங்கள் கலையாத வரை அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும், இழந்தவற்றைப் பெற்றுக் கொடுக்கவுமே நாம் குரல் கொடுப்பது நேர்மையாக இருக்கும்!”

‘இந்தியா இலங்கையைப் பயன்படுத்துகிறதா? இலங்கை இந்தியாவைப் பயன்படுத்துகிறதா?”

”இந்தியா தன் அரசியல் ராணுவ நலன் களுக்காக இலங்கையைப் பயன்படுத்த முயல்கிறது. மிகக் குறைந்த தூரத்தில் இலங்கை இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் அரசியல் ஆதிக்கம் இலங்கையில் அண்டவிடாமல் தனித்துவமிக்க ஒரு நாடாக இலங்கையைக் காத்துவருகிறார்கள் சிங்கள ஆட்சியாளர் கள். இது அவர்களின் தனித் திறமை என்றே சொல்லலாம். ஜெயவர்த்தனே தொடங்கி இன்றைய ராஜபக்ஷே வரை இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது. வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு வரை செல்வாக்கு செலுத்தும் இந்தியாவை இலங்கை மிகத் தந்திரமாகக் கையாள்கிறது என்பதே உண்மை. தனக்குத் தேவையான எல்லா வற்றையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தந்திரத்தை இலங்கை மிக நுட்பமாகச் செய்துவருகிறது என்றே நினைக்கிறேன்!”

”சரி, இந்தியாவிடம் ஈழ மக்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?”

‘என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா? எதுவுமே வேண்டாம்… ஆளைவிடுங்க… பட்டதே போதும்!”

By

Read More

திருத்தியெழுதப்பட்ட கதைகள்

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது

கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் நடந்து அவர் கண் இழந்திருந்தார்.

இப்பொழுது சமாதானம் மெலிதாக அரும்பியிருந்தது. ரணில் பதவியேற்றிருந்தார். ஆகவே ஓர் அரசியல் “ஆய்” வாளனான எனக்கும் நிறைய வேலை இருந்தது. சமாதானம் நிலைக்குமா, சர்வதேசம் ஏமாற்றுமா, தலைவர் பிரபாகரன் ஏமாறுவாரா என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கி ஒரு வாய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன்.

இதழின் டம்மியை புரூப் பார்ப்பதற்காக பிரதீபாவிடம் கொடுத்திருந்தேன். அவர் ஓகே செய்தபிறகு இதழ் அச்சுக்குப் போனது.

எனது கட்டுரையில் ரணில் அரசமைத்ததன் பின்னணியில் என்றவாறாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அது டம்மி இதழில் – ரணில் அர
சமைத்ததன் பின்னணியில் என்றவாறாக அர முதலாவது வரியில் முடிந்தும் அடுத்தவரியில் சமைத்ததன் என்றும் ஆரம்பித்தது. பிரதீபாவிற்கு இங்கே தான் டவுட் ஆரம்பமாகியது.

“சமைத்ததன்” பின்னணியில் என்பது சரியாக டைப் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கருதினார். ஆனால் “அர” என்று டைப் செய்யப்பட்டிருப்பதில் என்னவோ தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் நம்பினார்.

சமைத்ததன் பின்னணியையும் அர வையும் போட்டுக்குழப்பி கடைசியில் கண்கள் பிரகாசிக்க அவர் ஒரு முடிவினை எடுத்தபோது “அர” என்பது என்னவாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

அச்சாகிய இதழில் எனது கட்டுரையில் இடையில் இப்படியொரு வசனம் சம்பந்தமே இல்லாமல் வந்தது.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில், புலிகள் சமாதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

நல்லவேளையாக, டம்மி இதழில் சமாதானத்தின், சமா எங்காவது விடுபட்டிருந்தால் பிரதீபா திருத்தியபிறகு கட்டுரை வரிகள் இப்படியிருந்திருக்கலாம்.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில் புலிகள் அன்னதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

0 0 0

இதுபற்றி முன்னர் எங்காவது குறிப்பிட்டேனோ தெரியவில்லை. பாடசாலையின் மதிலுக்கு அந்தப்பக்கம் அமைந்திருந்த பெண்கள் கல்லுாரி அது. Partner School என்றார்கள். மனது அப்பிடி ஒருபோதும் கருதியதில்லை. தமிழில் சகோதர பாடசாலை என்றார்கள். அப்படி வேண்டுமானால் இருக்கக் கூடும்.

அவர்களது உயர்தர வகுப்புக்காரர்கள் விஞ்ஞான இதழொன்றை வெளியிட்டார்கள். இதழின் புரூப் யார் பார்த்தார்களோ தெரியவில்லை. இதழில் எய்ட்ஸ் பற்றி ஒரு கட்டுரையொன்று வந்திருந்தது. எயிட்ஸ் தொற்று ஏற்படாத காரணிகள் என்றொரு லிஸ்ட் அதிலிருந்தது. அதில் ஒன்றாக

தாய் குழந்தைக்கு கொடுக்கும் பாலினால் – என்று இருந்திருக்க வேண்டும்.

புரூப் பார்ப்பதற்கு முந்தைய டம்மியில் – தாய் ..ந்தைக்கு கொடுக்கும் பாலினால் என்று இருந்திருக்குமென நினைக்கிறேன்.  திருத்தியவர் .. ந்தைக்கு என முடியும் சொல் என்னவாக இருக்குமென மூளையைப் போட்டுக் குழப்பியிருக்கலாம். இறுதியில் அவருக்கு பொறி தட்டியபோது பொருத்தமான சொல்லாக தந்தைக்கு என்பதே தோன்றியிருந்தது.

By

Read More

வெட்கம்

டந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.

‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து காத்திருப்பார்கள்..

”எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..” அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

‘ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..’ போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

“கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே..” தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

“அதுக்கென்னடா வாவன்…”

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

‘அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?’

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. ‘முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..’

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. ‘ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..’

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

‘அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..’

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

க்கா அக்கா..” வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மண் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

“அம்மா ஆரோ வந்திருக்கினம்…” அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

“கெனடியே.. வா வா என்ன திடீரென்று..” அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

“கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்..”

“இல்லையக்கா வேண்டாம்..” கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

“இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்..” அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

“நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு..” அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

“அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?” கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

“வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்..”

“ஓம் அக்கா..” கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

‘ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..’ அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

‘கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..’ என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் ‘நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்’ என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து … அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

“அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா..” அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு ‘முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..’ என்று தான் முதலில் நினைத்தான்.

“வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு..”

“குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்”

“சத்தம் வையுங்கொ அது போயிடும்.”

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

“அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்.” என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

“அக்கா இப்பவும் யானையள் வாறதோ?”

“அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்..” சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். “எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. “வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

‘மனிசன் மாறேல்ல’

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

“தம்பி என்ன படிக்கிறியள்”

“நேசறி”

“படிச்சு என்னவா வர போறியள்”

“டொக்டரா வருவன்..”

“டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ”

“இல்லை”

“அப்ப..?”

“பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்..”

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். “இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை.” கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

“பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்..” சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

“என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ..” என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

“அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்..” அக்கா அமைதியானாள்.

“அவன் இப்ப இல்லை” கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

“வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்”

கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். “ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது.” படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

“கிழடுகள் மாதிரி கதையாதையடா” என்று கெனடி கூட சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

“ஏதேனும் அலுவலா வந்தனியோ..?”

“இல்லை சும்மா உங்களையும்..” என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

‘மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..’ கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

“மாலிக்கா நில்லும்” இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

“நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ”

“ம்..”

“போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ” மாலிக்கா பேசாமல் நின்றாள்.

“போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ..” என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. ‘இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..’

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. ‘மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..’

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

“ஆரப்பன் உள்ளை வாரும்”

“ஐயா மாலிக்கா நிக்கிறாவோ..”

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

“இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா..” கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

“வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்” கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

“எப்பிடி சுகமாயிருக்கிறியளோ..”

“ம்” கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

“என்னோடை படிச்சவை”

மாலிக்கா நிறைய பேசினாள். “என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை..” தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

“அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு.” கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

“சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்.” மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். “கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ..”

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

“ம்..” கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.

20.04.2003 தினக்குரல்

By

Read More

× Close