ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை. என்னைக் கேட்டால் சயந்தன் வேறு களங்களை நாவலாக்கியிருக்கலாம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் அந்த விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. (புலியெதிர்ப்பு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பைக் கொண்டிருப்பதாக யமுனா குறிப்பிட்டிருந்தார். உண்மையில் பங்குச்சந்தையில் எதனது பங்கு உச்சவிலையிலிருக்கிறதென்பதற்கு இது உதாரணமாகயிருக்கும்)

ஆறாவடு விடுதலைப்புலிகள் பற்றிய வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்யவில்லை. சற்றே கறாராக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றிய விபரிப்புக்களில் கிட்டத்தட்ட தென்னிந்தியத் திரைப்படங்களைத்தானது நினைவுபடுத்தியது. அதில் சித்தரிக்கப்பட்டதல்ல விடுதலைப்புலிகளின் வாழ்க்கை. தவிரவும், அதில் குறிப்பிடப்படதெதுவுமே விடுதலைப்புலிகள் மீதான ஆழமான விமர்சனங்கள் கிடையாது. அவையெல்லாம் புலிகளின் சாதாரண முகங்கள். அந்த முகங்கள் மீது சனங்களிற்கு ஆழமான விமர்சனங்களெதுவுமேயிருந்திருக்கவில்லை. செல்லக் கோபங்களுடன் சனங்கள் அனுசரித்துச் செல்லும் விடயங்களவை. விடுதலைப்புலிகள் குறித்து வெளிநாட்டிலிருந்து ஆய்வுசெய்பவர்களே சுமத்தவல்லதான மென்போக்கான விமர்சனங்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீதான பிம்பங்களை உடையவிடாத மனமொன்றின் பதிவுகள்.

http://yokarnan.com/?p=363#.UGLqA_PTwe8.facebook

By

Read More

வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. வரலாற்றுப் பிரக்ஞையற்ற அவனது மூளை போர்க்கருவிகளால் வடிவமைக்கப்பட்டது. பேரினவாத காற்றைக் குடித்து பெருத்த சிங்களச் சிப்பாய் தான் தேடிய உயிர் அடங்கிய உடலைக்கண்டடைந்த மணித்துளியை வரலாறு கனத்த மௌனத்துடன்தான் பதிவு செய்கிறது.

சிதிலமடையாத எண் 001 குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைக்கருகில் திறந்து கிடக்கும் சிங்கப்பூர் லோஷன் பாட்டிலில் இருந்து கிளம்பிய திராட்சை வாசனையால் நிறைந்திருந்தது அக்குறு நிலம். தன் உடலைப்புரட்டுகிற சிப்பாய் பிறப்பதற்கு முன்னான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவங்கியிருந்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். முப்பதாண்டுகள் வீரச்சமருக்கு ஒப்புக்கொடுத்திருந்த உடலது. பேரினவாதம் காத்திருந்த நிமிடத்திற்குப் பிறகான நாட்கள் யாவும் தலைகீழாக மாறத்தொடங்கின.

முள்ளிவாய்க்கால் எனும் பெயர்ச்சொல் வலி, வேதனை, துயரம்..துரோகம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. போருக்கான சாத்தியங்களை முற்றாக துடைத்தழிக்கத் துவங்கியிருக்கிறது பௌத்த பேரினவாதி அரசு. போர்க்கருவிகளுடன் மானுடவியல் ஆய்வாளாகளும் களம் புகுந்துள்ளனர். ஆதாரங்களை உருமாற்றி வேறு ஒன்றாக்கிடும் வித்தையைக் குடித்திருந்த ஆய்வாளர்களின் நிலமாகிவிட்டது தமிழ் நிலம். கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வரலாற்று ஆதாரம் என நம்பச் செய்திருக்கின்றனர். பிரபாகரனின் மரணத்திற்குப் பிறகான பதினாறாம் நாளில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாக போதிமரக்கன்றை இலங்கைத் தீவிற்கு கொண்டுவந்த பேரரசர் அசோகரின் மகள் சுங்கமித்திரையின் சிலையை மகிந்தாவின் மனைவி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதும், போதிமரக்கன்றொன்றை ராஜபக்ஷே சாஞ்சி புத்த மடாலயத்திற்கு கொண்டு வருவதும் தனித்து திட்டமிட்டு நிறைவேற்றப்படுகிற அரசியல் குயுக்திகள் அன்றி வேறென்ன..

யாவற்றையும் எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் தமிழர்கள் முள்வேலிக்கம்பிகளுக்குள் வீழ்ந்திருக்க எழுதிக்கடப்பதைத் தவிர என்செய்வது இப்போது என்றே எழுத்தாணியின் கூர்முனையைத் தீட்டித்தொடர்கிறார்கள் ஈழத்தின் மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள். விமல் குழந்தைவேலு, ராகவன், கர்ணன் என நீண்டு தொடர்கிறது எழுத்தாளர்களின் புனைவுகள் யாவற்றுள்ளும் போர் நிகழ்த்திய நிலத்தின் அழியாத ரேகைகள் ரத்தாம்பர நிறத்தில் விரிகிறது. முப்பது வருடத்திற்கும் மேலாக நீடிக்கிற போரின் வலியை துயரச்சொற்களால் வடித்திட்ட சயந்தனின் முதல் நாவலே ஆறாவடு.

பல குறும்போர்களுக்கு இடையிலான அமைதிக்காலத்தின் கதையை ஆறாவடுவிற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் புனைவாக்கியிருக்கிவில்லை. எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகமே திரண்டு இந்திய அரசே இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு என வீதியெங்கும் முழங்கியதையும் மாணவர்கள் ரத்தத்துளிகளலான கடிதங்களை டெல்லிக்கு அனுப்பியதையும் ஏற்றே இலங்கைக்கு ராணுவத்தை இந்திய அரசு அனுப்பியது என தமிழர்களும், இந்திய ராணுவம் வந்தால் தமிழ் ஈழம் மலர்வது உறுதியென்று ஈழத்தமிழர்களும் நம்பத்தான் செய்தார்கள். அந்த நம்பிக்கையில் போவோர் வருவோருக்கெல்லாம் இளநீர் சீவித்தந்த அய்யாமார்களின் மனநிலையை எழுத்தாளன்  மட்டுமே அறிந்திட இயலும். எண்பத்தி ஏழின் இதே மனநிலையை ஈழம் இரண்டாயிரத்து மூன்றிலும் அடைந்தது. அப்போது புலிகளுக்கும் ரணிலுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தை துவங்கியிருந்தது. இருமுறையும் அமைதியெனும் சொல் நிலத்தில் வரைந்திட்ட துயர்மிகு கதைகளே ஆறாவடு. எண்பத்தி ஏழுக்கும், இரண்டாயிரத்து மூன்றிற்குமான கால இடைவெளிகளின் கதைப்பரப்பில் பெயரி ஐயா, நேரு ஐயா, அமுதன், வெற்றி, நிலாமதி, பண்டாரவன்னியன், தேவி…. ஏன் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும், பாலசிங்கமும் கூட தங்களைப் பதிவறுத்திக்கடக்கிறார்கள் நாவலுக்குள்..

சகலவற்றிலிருந்தும் தப்பி வெளியேறுவது மனம் விரும்பும் செயல் அல்ல. கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் டயர் எரியூட்டப்பட்டு விடுமோ, பதுங்கு குழிக்குள் செல் அடிக்கப்பட்டு விடுமோ, போர்க்கருவிகள் சூழ ஆள்காட்டிகள் நம்மையும் மேலும் கீழும் தலையாட்டிக் காட்டி விடுவார்களோ, எனும் பதைப்புடன் நிலம் அகன்று சிதறித் தெறித்துக் கிடப்பவர்களின் புனைவுக் காலமிது. வெற்றிச் சொற்களால் கட்டமைக்கச் சாத்தியமற்ற போரின் வாதையை தனித்த மொழியால் கையகப்படுத்தி கடக்கத் துவங்கியிருக்கிறார்கள். இனியான தமிழ்ப்புனைவை எழுதப்போகிறவர்கள் இவர்களே. அவாகளின் துயருற்றுப்பீறிடும் மொழியைத் தாங்கிடுமா தமிழ் என்பதே இப்போதைய கேள்வி என்பதை ஆறாவடுவிற்குள் பயணிக்கும் வாசகன் அறியப்போவது நிஜம்.

நீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குப் பயணிக்கும் தமிழ் இளைஞர்களின் கதை சீட்டாட்ட மேசையில் விரிகிறது. இதற்கு முன் கப்பலைக்கண்டிராதவாகள் கடலுக்குள் மிதந்தபடி கதையாடிக்கடத்துகிறார்கள் போர் சிதைத்த பெருநிலத்தின் கதையை. அரசதிகாரமும், போராளிக்குழுக்களும் விரித்து வைத்திருக்கும் கண்காணிப்பு வளையங்களை கடந்து வெளியேறியவர்கள் சோமாலியா கடற்கொள்ளையர்களின் புன்னகையை எதிர்கொள்கிறார்கள் பரிசாக நடுக்கடலில். பதட்டத்திற்கும் புன்னகைக்கும் இடையேயான பயணமே ஆறாவடு.

மூன்று தசாப்த காலத்தின் கதைகளை கடல் நுரையால் நெய்யப்பட்ட காகிதப்பரப்பில் அடுக்குகிறார்கள். யுத்தம் நிகழ்த்திய கொடுரத்தையும் வலிகளையும் தாங்காது தள்ளாடுகிறது கப்பல். போர் நிகழ்த்திய காயத்தின் வடுவை கடல் நீரிலிருந்து கிளம்பிச் சுழலும் உப்பங்காற்றாலும் ஆற்றிட இயலவில்லை. தனித்தனியே சொல்லப்பட்ட கதைகளை சேர்த்து தைத்து நாவலாக்கியுள்ளார் சயந்தன். இத்துனை கச்சிதமான மொழியால் கட்டமைக்கப்பட்ட புனைவு எப்போதாவதுதான் சாத்தியமாகிறது.

book_aaravaduபோராளிகளுக்கு இடுகிற பெயர்களின் வழியிலே இயக்கத்தின் திசைப்போக்கை கண்டுரைக்கும் ஆற்றல் மிக்கவன் புனைவெழுத்தாளன். பரந்தாமனின் பெயர்களான் இவானுக்கும் அமுதனுக்கும் இடையில் கூட வரலாற்றின் கரைபடர்ந்த பக்கங்களை வாசித்தறியலாம் நாம். இவான் எனும் பெயரை அவன் அடைந்த போது இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுகிறது. அமுதன் என அவனை யாவரும் இழைக்கத் துவங்கிய நாளில்தான் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் வரத்துவங்குகிறது என நாவல் பதிவு செய்கிறது. புரட்சி, அதிகாரமாற்றம், சேகுவரா, கொரில்லாயுத்தம் எனத்துவங்கிய போராளிக் குழுக்கள் இடது அரசியல் நீக்கம் பெற்று தமிழ்த்தேசிய அடையாளத்திற்குள் தங்களை ஒப்புக் கொடுத்ததன் வரலாற்று சாட்சியம் இதுவென வாசகன் கண்டடைகின்றான். அவனுக்கான திறப்புகளை வழி நெடுக விரித்து வைத்திருக்கிறது நாவல்.

எழுத்தாளன் எழுதிச்செல்லும் கதை முடிச்சுக்களை அவிழ்த்திடும் பொறுப்பினை வாசகனிடம் ஒப்படைத்து கடக்கிறது நாவல். இது படைப்பாளியும் வாசகனும் சேர்ந்து இயங்கச் சாத்தியம் கொண்ட கதைப்பரப்பு. அமுதனைப்போலத்தான் துவக்குகளோடு சயனைட் குப்பியை அணிந்தபடி போர்க்களத்தில் அலைவுற விரும்புகிறார்கள் போராளிகள். பதுங்கு குழிக்குள் ஷெல் அடித்ததால் இரண்டு கால்களையும் இழந்த பெண் அண்ணா என அமுதனைக் கையுயர்த்திக்காப்பாற்ற அழைக்கும் போது கூட அவள் குப்பியைத்தர சம்மதிக்கவில்லை. அமுதனும் தன்னுடைய கால் ஒன்றைப் போருக்கு கொடுத்த பிறகான நாட்களில்தான் அரசியற்துறைக்கு மாற்றப்படுகின்றான். அரசியல் நீக்கம் பெற்று போர்க்கருவிகளை சுமந்தலையும் இளைஞர்களால் நிறையத்துவங்கியது தமிழ்நிலம் என்பதையும் நாவல் மிக நுாதனமாக வாசகனுக்குள் கடத்துகிறது. “சண்டைப்போராளியாக இருப்பது எவ்வளவு நல்லது. சனங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதில்லை. அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அல்லாட வேண்டியதில்லை. என தனக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் அமுதனும் நேரு ஐயாவும் நாவலுக்குள் நிகழ்த்தும் உரையாடல் மிக நுட்பமானது.

நேரு ஐயா புலிகள் அமைப்பிற்கு உலகம் முழுவதும் நடந்தேறிய யுத்தத்தின் வரலாற்றை தமிழ்ப்படுத்தித் தரும் வேலை செய்பவர். அவர் பொதுவெளிகளில் ஒருவராயும் தனக்குள்ளும் அமுதனுடன் உரையாடும்போதும் வேறு ஒருவராகவும் வெளிப்படுகிறார். இவரையே அந்நாளைய அறிவுஜீவிகளின் அடையாளமெனக் கொள்ள இடமிருக்கிறது நமக்கு. ஓயாத தர்க்கத்தை அமுதனுடன் எப்போதும் நிகழ்த்துகிறார். அது அமுதனுக்குள் முழு முற்றாக இறங்குவதால்தான் அவரல்லாத போதிலும் கூட இந்த விடயத்தை ஐயா எப்படி எதிர்கொள்வார் கருத்துரைப்பார் என்கிற இடத்திற்கு அவனை நகர்த்துகிறது.

“சின்னச் சின்ன வெற்றிகளாலேயே கடைசி வரைக்கும் நாட்டைப்பிடிக்க முடியும் எண்டு நான் நினைக்கேல்லை. இது ஒரு பேரம் பேசுகிற சக்தி. இந்தச் சண்டை முடிஞ்ச உடன எப்படியும் சந்திரிக்கா பேச்சுக்கு வருவாள். இறுதி முடிவு சண்டையில வராது. அது மேசையில் தான் வரும்.” இப்படியான ஐயாவின் கூற்றால் எரிச்சல் அடைகிற அமுதன் “பிடிக்காத இயக்கத்திற்கு ஏன் வேலை செய்கிறீர்கள்” என்கிறபோது “சம்பளம் தாறியள்” என்ற பதிலையும் “ஆமிக்காரன் துட்டுத்தருவான். அவனிட்டையும் வேலை செய்வியளோ” என்பதை “ஒப்கோர்ஸ்” என சட்டென எதிர்கொள்வதையும் வாசித்துக் கடக்கும் வாசகனுக்குள் நேரு ஐயாவின் மங்கிய பிரதிமைகள் வரிசையாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் விதவிதமான பெயர்களுடன் உலாவரும் ஒருவரே அவர்கள் யாவரும் என்பதையும் அவரின் நாமகரணம் அரசியல் பிழைத்தோர் என்பதையும் கண்டுணர்கிறோம் நாம். இப்படி எழுதப்பட்ட பக்கங்களுக்குள் எழுதப்படாத பகுதிகளையும் நிறைத்து நகர்வதால் கனவுப்படைப்பாகிறது நாவல் விதவிதமான ரூபங்களில்.

ஏன்டா இந்தியாவோட கொட்டைமாதிரி கீழே கிடந்திட்டு ஆட்டமாடா போடுறீங்க என்கிற தலைப்பாகையும் தாடியும் வைத்த ஆமிக்காரனிடம் தான் சிக்குவதற்கு முன்பு வரை பெரிதாக தமிழ்நாட்டைப்பற்றி அமுதனுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்திய இராணுவம் வருகிறது எனக் கதையடிப்பட்ட போது இவனுக்கு இந்தியாவைப்பற்றி மூன்று சங்கதிகள் மட்டுமே தெரிந்திருந்தன. 1.இந்தியா ஒரு வெளிநாடு. 2. இந்தியாவின் ஜனாதிபதி எம்ஜிஆர். அவர் ஒரு தமிழர். 3. இந்தியாவில் ரஜினிகாந்த் விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா அமலா நதியா முதலான நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்றே அவன் நம்பினான். நம்முடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்மைப்பற்றிய புரிதலின் எல்லை அப்போது இப்படித்தான் இருந்தது என்பதை எதிர்கொள்ள நாம் சிரமம் கொண்டாலும் அதுவே நிஜமாகவிருந்திருக்கிறது.

இந்திய இராணுவம் வந்தால் ஈழம் மலருமென நம்பினார்களோ இல்லையோ, அமைதி நிலவும் போர்க்கருவிகள் எழுப்பிய புகைமூட்டம் அற்றிருக்கும் தமிழ்நிலம்.. பயமின்றி பள்ளி செல்வார்கள் நம்குழந்தைகள் என உறுதியாக நம்பியிருக்கிறார்கள். நம்பிக்கையைக் குலைத்து பதட்டத்தையும் துயரத்தையும் பலிகளையும் நிலத்தில் விரவச்செய்த ராணுவத்தின் கொடுரத்தை நிலாமதி எனும் பள்ளிச்சிறுமி நம்முன் கடத்துகிறாள். ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்கது நம்முடைய இந்திய ராணுவம் என உளறிக்கொண்டலையும் ஜெயமோகன்களை தேவியெனும் விசித்திரியின் கதையால் எதிர்கொள்கிறார் சயந்தன்.

நிலாமதியின் வழித்தடமெங்கும் பருத்த அவளின் மார்பை வெறித்தலையும் கண்களே பதிந்து கிடக்கின்றன. அவளறிவாள் தலைமூடிய சாக்குப் பைகளுக்குள் உருளும் ஆள்காட்டியின் கண்களாயினும் சரி, மணல் மூட்டைகளுக்குப்பின்ஆயுதங்களுடன் வெறிக்கும் இந்திய ஆமிக்காரனின் கண்ணென்றாலும் வெறித்து நிலை குத்திக்கிடப்பது அவளின் மார்பின் மீதுதான் என்பதை அறிவாள் அவள். புலிகளை பொடியன்கள் எனப்போற்றிப் பராமரித்த தாயின் பிள்ளையிவள் என்பதாலே ஆமியின் கண்காணிப்பின் வளையத்திற்குள் சிக்கிய குடும்பமது. இப்படியான குடும்பங்களே முப்பதாண்டு கால சமரின் பின்புலமாக இருந்திருக்கின்றன. போர்க்களத்தில் மட்டும் இருந்திருக்கவில்லை புலிகள். “இப்ப பிடிச்சுக்கசக்கடா என வெற்று மார்புடன் தன் வீட்டிற்குள் நுழைந்த ராணுவக்காரனை எறிகுண்டோடு பாய்ந்து வீழ்த்துகிறாள் நிலாமதி. அவளும் தமிழ்ப்புலிதான் போராளிக்குழுக்களில் பயிற்சி பெற்றிராத புலியவள்.

போர் சிதைத்திட்ட மனித குலத்தின் துயரத்தை சொற்களற்ற செயல்களால் நாவலுக்குள் நிறைக்கிறாள் தேவி. தன் மரணம் இப்படியாகத்தான் வியாக்கியாணப்படும் என்பதையெல்லாம் அறிந்திடாத விசித்திரியவள். இட்ட வேலைகளை எடுத்துச்செய்யும் எளியவள். இந்தியன் ஆமிக்கோ அவள் பெண். விசித்திரியின் உடலை போர்க்கருவிகளின் அதிகாரம் சிதைக்கிறது. அப்படித்தானே நடக்கச் சாத்தியம். பதட்டம் நிறைந்த நிலத்தில் நிகழும் மரணம் எதிர்கொள்ளப்படும் விதத்தில்தான் புனைவு உச்சம் அடைகிறது. “தேவியொரு உளவாளியாம். ஆமிக்காரங்களுக்கு மெசேச் எடுத்துக்குடுக்கறவளாம்.” “இவள் ஏதோ ஆமிக்காரங்களோட போய் சண்டை பிடிச்சவளாம். அவங்கள்தான் சுட்டுட்டாங்கள்” “ஆமியோட தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டுட்டுதாம்… என தேவியின் மரணம் எதிர்கொள்ளப்படுகிற போதும் கூட எனக்குப் பசிக்கேல்லை எனக்குப் பசிக்கேல்லை என்னைய விட்டுறுங்க என குழறி இந்தியன் ஆமிக்கேம்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் தேவிகளால் நாம் பெரும் அவஸ்தைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.

புனிதப்படுத்திடும் தன்மையிலான வெள்ளைப்பக்கங்களை மட்டும் கொண்டதல்ல ஆறாவடு. அதன் கருமையும் இணைத்தே பதிவு செய்துள்ளது. அமுதனையும் அவனுடைய காதலையும் இயக்கம் எதிர்கொண்ட விதம், புளுபிலிம் சிடிக்களை பெட்டியில் போடுங்கள் என பிரச்சாரம் செய்திட்ட ஒழுக்க மேனேஜேராகிடும் அதிகாரத்தின் தனித்துவம் என இன்னபிறவற்றையும் நாவல் பதிவுறுத்துகிறது. அதிலும் அமுதனைப்பேட்டி எடுக்கிற பிரெஞ்சுப் பத்திரிகையாளினியின் குரல் மிக முக்கியமானது. அது சயந்தனின் குரலாகவும் சில இடங்களில் நம்முடைய குரலாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களிடம் அடிவாங்கி குடும்பத்திற்குள்ளேயே உழலும் தமிழ்ப்பெண் போராளிகளும் இருக்கிறார்களே எனும் பத்திரிகைகாரியின் கேள்விக்கு அமுதன் இப்படியான கேள்விகளுக்கு நீங்கள் தமிழினி அக்காவைத்தான் தொடர்பு கொள்ள வேணும் எனும் பதிலால் சட்டெனக் கடக்கிறானே எதனால்.. பேட்டிக்குள் அமுதனின் போர்க்காட்சிகள் விரிகின்றன. மனித மனம் எல்லாவற்றையும் கடந்து வாழத்துடிக்கிறது என்பதால்தான் அவனின் கால்கள் நீக்கப்பட்ட நொடியில் தோன்றிய கனவின் காட்சியை பேட்டியில் சொல்லாது நமக்கு மட்டும் சொல்கிறான். “கைகளில் மலர்களை ஏந்திய வெள்ளைச் சிறுமியொருத்தி என் முழங்கால்களுக்கு கீழ் நின்று அண்ணாந்து என்னைப்பார்த்து நன்றியுடன் சிரித்தாள். பின் தன் கைகளை நீட்டினாள். நான் பற்றிக்கொண்டேன். அப்பொழுது எனக்குக் கால்கள் இருந்தன…. ”

எதற்காக இவ்வளவு இழப்புக்களும் சேதாரங்களும் எனும் கேள்வியை எதிர்கொள்ளாமலா போராளிகள் இயங்கியிருப்பார்கள். அதிகாரம் யாவற்றையும் நிர்மூலமாக்குகிறது. போர்க்கருவிகள் இருக்கும் இடம் வேறாக இருக்கலாம். ஆனால் செயலுக்கும் இயக்கத்திற்கும் பேதமிருப்பதில்லை. இந்திய ஆமிக்காரனின் தலைப்பாகையும் தாடியும் தோற்றுவித்த பயத்திற்கும் இலங்கை இராணுவத்தின் போர்க்கருவிகள் விளைவித்த அச்சத்திற்கும் வித்தியாசம் இருக்க முடியாதுதான். மோட்டார் பைக்குகளில் சைனட் குப்பிகள் காற்றில் பறந்திட துவக்குகளோடு வலம் வருகிற போராளிகளைப் பார்த்தும் அதிர்ச்சியடைகிறானே தமிழன் எனும் கேள்வியைக் கேட்காமலிருக்க முடியாது. தலையாட்கள் ராணுவத்திற்கு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் போராளிக்குழுக்களுக்கும் தலையாட்டிகள் அவசியமாயிருந்ததே எதனால் எனும் கேள்விகளும்தான் ஆறாவடுவினால் வாசகனுக்குள் எழுகிறது.

பயத்தையும் பதட்டத்தையும் அச்சத்தையும் முப்பதாண்டுகளாக பழக்கப்படுத்தியிருக்கின்றன போர்க்கருவிகள். ஈழத்தில் வாழ்வது குறித்த அச்சமும் எச்சூழலையும் கடந்து வாழத்துடிக்கும் மனமுமே சாகச பயணங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கத் துாண்டுகின்றன. நீர்கொழும்பில் இருந்து கிளம்பிய கப்பலில் அமுதனுடன் பயணித்தவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களர்களும் கூட நிலம் விட்டகன்று இத்தாலிக்கு விரைகிறார்களே ஏன்.. “ பண்டாரண்ணை.. ஒண்டு கேட்டால் குறை நினைக்கக் கூடாது. எங்களுக்கு நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு. குண்டு ஷெல் பிளேனடி, ஆமி பொலிஸ் பதிவு, ஜெயில் எண்டு எக்கச்சக்கம். நீங்கள் என்னத்துக்கு நாட்டை விட்டு வெளியேற வேணும்…..”  “அதிகாரிகள் ஒருபக்கத்தாலும், புலிகள் மறுபக்கத்தாலும் வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப்பார்க்கிலும் கொடும் வதையாக கனவுகள் இருந்தன. ஒரே இரவின் தொடர் கனவுகளே அவனை இத்தாலிக்குத் துரத்துகிறது எனும் கதையாடல் மனித குலத்தினை நிர்மூலமாக்கிடும் போரின் கொடுந்துயரத்தின் சாட்சிதானே..

மொழிச்செயற்பாட்டில் கூட முற்றுப்புள்ளி அதிகாரத்தின் குறியீடுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை ஒருபோதும் கலைஞன் ஏற்பதில்லை. எண்பத்திஏழில் சிங்கள ராணுவம் கொன்றழித்த தமிழ் உடல்களின்   தீராத வெப்பத்தின் மூச்சிலிருந்தே விடுதலைப்புலிகள் இயக்கம் வலுப்பெற்றது. போன் இன்னும் முடியவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப்பின் எல்லாம் முடிந்துவிட்டதா எனும் நம்மை அச்சறுத்தும் கேள்விகளை கடலில் மிதக்கும் அமுதனின் செயற்கை மரக்கால்களால் எதிர்கொள்கிறார் எழுத்தாளன்.

நடுக்கடலில் யாரும் அறியாமல் சாகத்தானா இங்கு வந்தோம் எனும் பதட்டத்தை மொத்தக்கப்பலும் அடையும்போது அது இருந்ததற்கான எல்லாத் தடயங்களையும் அழித்து விட்டது கடல். கடலினுள் உயிர் துளி துளியாக பிரிகிற நொடியில் தன்னுடைய செயற்கைக் காலை பிய்த்து வெளித்தள்ளுகிறான் அமுதன். அவனின் கடைசி எண்ண அலைகளை ஆற்றலுடன் கண்டுணர்ந்து நமக்குச் சொல்கிறார் சயந்தன். “பொங்குகிற அலைகளையும் கடலையும் தோற்கடித்து விடுகிற வெறியில் பச்சை நிறத்திலான பனியனை அணிந்த ஆமிக்காரனொருவன் நீந்திக்கொண்டிருந்தான். அம்மா தலைவிரி கொலமாய் இந்தியச் சிப்பாயொருவனின் முன் நின்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக் குளறினாள். அகிலாவின் வெற்று மார்புகள் சுட்டன. அவள் “இண்டைக்கு மட்டும்தான் நெடுகலும் கேட்கக்கூடாது” என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்..

பளபளப்பான பைபர் கிளாஸினால் வார்க்கப்பட்டிருந்த இவனது வெண்புறா செயற்கைக் கால் முன்னைப் போல் கொப்பளிக்கும் இரத்தமும் பச்சை வரிகளால் ஆன பிய்ந்துபோன சீருடைத்துணியும் இன்றி வேகத்தோடு தண்ணீரில் மிதந்து செல்கிறது. இந்தச் செயற்கைக் காலை சயந்தன் கொண்டு வந்து சேர்க்கும் இடமே இந்த நாவலின் உச்சம். அது போரால் தன்னுடைய கால்களை மட்டுமல்ல தன் செயற்கைத் தகரக்காலையும் இழந்த இத்ரீஸ் கிழவனை வந்தடைகிறது. முப்பது வருடங்களுக்கு முன் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் கொண்ட எரித்திரிய கிழவன் அவன். சீனாவிற்குப் பயிற்சிக்குப் போய்த் திரும்பியிருந்த ஐசேயாஸ் அபேவர்கியுடன் எரித்திரிய விடுதலை முன்னணியில் படைத்தளபதியாக இருந்தவன் இத்ரிஸ். எரித்திரயாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் மூண்ட பெரும் யுத்தத்தில் கால் இழந்த இத்ரீஸின் கைகளில் வந்தடைகிறது ஈழப்போராளி விடுதலைப்புலியின் செயற்கைக் கால். புலியின் கால்களைப்பெற்ற எரித்திரிய விடுதலை முன்னணியின் தளகர்த்தன் அதற்கு முத்தமிடுகிற அந்த நொடியில் எல்லாம்தான் நமக்குள் உருவாகிறது. வரலாற்றுப் புள்ளி விபரங்களுக்குள் சிக்கிடாத அதீத மணித்துளிகள் அவை. கணக்கீடுகளை கலைத்துப் போடும் ஆற்றல் மிக்கவன் கலைஞன். எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத்துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலை நயத்தோடு சொல்லிச் சென்ற வரலாற்றுப் பெரும்புனைவே ஆறாவடு.

-கல்குதிரை
பனிக்கால இதழ்
2013

By

Read More

சயந்தனின் ஆறாவடு

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி.

(அநேகமான சில குறிப்புகளில் தொனிப்பதுபோல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது சரியல்ல. நாவல்கள் நம் அறிவைப் பெருக்குவதற்காகப் படிக்கப்படுவனவும் அல்ல. இது ஒரு அனுபவப்பகிர்வு. ஆசிரியனின் அனுபவத்தினதும் ஆவேசங்களினதும் கனவுகளினதும் ஒரு கலவை. போர்நடக்கும் ஒரு நாட்டில் நான்கு ஆயுதப்படைகளின் மத்தியில் வாழநேர்ந்த, ஆயுதத்தைத் தூக்க நேர்ந்த ஒரு இளைஞன் தான் அனுபவித்ததை, பார்த்த போரிடும் உலகத்தின் நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றான்.

// இனியில்லை என்ற அளவுக்கு எலும்பும்தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்தான் (பக் 105.) //

// தூரவாகப்போய் நின்றுகொண்டார்கள் (பக் 15.) //

என்பதுபோன்ற பேச்சுமொழியிலான வரிகளைப்படிக்கையில் தாயகத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு போராளி நண்பன் எனக்கு எழுதியிருக்கக்கூடிய இயல்பான கடிதங்கள்போலவும் அவனே அருகிலிருந்து பேசுவதுபோலவும் விபரிப்புகள் என் நெஞ்சுக்கு அத்தனை நெருக்கமாக வந்துவிழுகின்றன. இங்கே ஆசிரியன் நாவலின் மொழிக்கோ, பாத்திரவார்ப்புகளுக்கோ, புனைவுத்திக்கோ அதிகம் வினைக்கெட்டதாகத் தெரியவில்லை. இன்னும் இயல்பான அங்கதம் தோய்ந்த நடையில் கதையாடிச்செல்வதுவும் வாசிப்பின் சுவையை அதிகரிக்கிறது.

இயைபுவாழ்வை வாழ்ந்திருந்த சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு பல்வேறுமுனைத்திறனுடைய போராட்ட சக்திகளால் உள்ளிழுக்கப்பட்டார்கள், பிழியப்பட்டார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதுவும் ; வாழ்வின் அநித்தியம், அவதி, அவலங்கள் என்பனவும் சிக்கின்றி இப்புதினத்தில் வார்த்தை வயப்படுகின்றன.
‘அண்ணைக்கு எல்லாம் தெரியும்’ என்று இருந்தவர்களைவிடவும் ‘அண்ணைக்கு ஒன்றுந்தெரியாது, பக்கச்சாவி இல்லாத வண்டியைத்தான் விரைந்து ஓட்டுகிறார்’ என்பதைத் தெரிந்திருந்தவர்களும் கையாலாகாதவர்களாக, விதையடிக்கப்பட்டவர்களாக இருக்கவே பணிக்கப்பட்டனர்.

‘அவர்கள் கேட்டார்களில்லை.’ – முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான பேட்டியொன்றில் – கா.சிவத்தம்பி.
– சந்திரிகாவுடனான சமாதனம் முறிந்தபோது
‘களநிலமை அப்பிடீடாதம்பி முறிச்சேயாக வேணும்’ – புதுவை இரத்தினதுரை.
‘ எமக்கு மாற்று வழிகள் இல்லை ’ – பாலகுமார்.

சந்திரிகாவுடன் நெருக்கமான, அவரின் கருத்தியல்களை அணுகக்கூடிய மாற்றுக்கருத்துக்களையும் பரிசீலனை செய்யவைக்கக்கூடிய நீலன் திருச்செல்வத்தைப் பயன்படுத்தி எமக்குச்சாதகமாக் எதையாவது பண்ணுவோமா ? ‘வேண்டாம் ஒரு பயலும். போட்டுத்தள்ளு அந்த மசிராண்டியையும்’.
தினவுமிகவெடுத்து அரசியல் அல்லாத காரணத்தைச் சாக்குவைத்து சந்திரிகாவுடனான சமாதானத்தைப் புலிகள் முறித்துகொண்டமையும், அதையுண்டான மக்களின் சினமும் நேரு அய்யாவின் வாய்மூலத்தால் பதிவுசெய்யப்படுகின்றது.

இன்னும் நாவலில் அங்கங்கே சில இடங்களில் பாய்ச்சல்களும் இடம்பெற்றுள்ளமையை ஒப்பத்தான் வேண்டும். ஒரு இளம்படைப்பாளனின் படைப்பில் இத்தனை நீர்மட்டம் பிடிக்கத்தான்வேணுமோ என ஒருகணம் தோன்றினாலும் ஒரு போராளி இளைஞனின் கதையாடல் என்கிறவகையில் இப்பாய்ச்சல்கள் என்னை உறுத்துவதால் இங்கே குறிப்பிடப்படுகின்றன. சந்திரிகாவுடனான சமாதானத்துக்கும் – ரணிலுடனான சமாதானத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான்

1. யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டார்கள். (இதைப்பற்றி டி.சே.தமிழனும் குறிப்பிடுகிறார்)
2. முல்லைத்தீவில் வல்லிபுனம் செஞ்சோலை பாசறையில் முதலுதவிப் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட்ட 62 பேர்மீது விமானங்கள் குண்டுவீசிக்கொன்ற கொடூரநிகழ்வு.
3. நவாலி சென். பீற்றர் தேவாலயத்தின் அகதிகள் மீதான குண்டுவீசி 147 பேரைக்கொன்றதும் 360 பேரைப்படுகாயப்படுத்தியதுமான நிகழ்வு (இது ஓரிடத்தில் மிக லேசாகச்சுட்டப்டப்படுகிறது).
4. மணாலாறு தாக்குதலில் 185 பெண்போராளிகளின் இழப்பு.
5. ஆனையிறவுப்படைமுகாம் மீதான முதலாவது தாக்குதலில் 800 போராளிகள்வரையில் மடிய நேர்ந்தமை போன்ற பேரழிவுகள் எதுவும் புதினத்தில் குறிப்பிடப்படாமல் இருப்பதைச்சொல்லலாம்.

இன்னும் நாவலின் இறுதிப்பகுதியில் சகபோராளி ஒருவர் இயக்கத்திலிருந்து விடுத்துக்கொண்டுபோய் தன்காதலியைத் திருமணம் செய்துகொண்டு சாதாரண இயல்புவாழ்வுக்குத் திரும்ப விழையும்போது இயக்கம் அவருக்கு சிரமதான தண்டனை வழங்குகிறது. இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களைக்கொண்டு கொத்தடிமைகள் போல வேலைவாங்கப்பட்டு யாழ் கோட்டை உடைக்கப்பட்டதை யாம் அறிவோம்.

இவனும் தான் பலகாலம் இயக்கத்தில் பணியாற்றியதால் தனக்கும் திருமணஞ்செய்தலோ, இயக்கத்திலிருந்துவிடுபடுதலோ அத்தனை சிரமமாக இருக்காது என்றும் நினைக்கிறான். ஆனால் இத்தாலியின் திசையில் கடைசியாக வள்ளம் ஏறும்வரையில் பொலீஸில் பிடிபட்டுச்சிலகாலம் சிறைக்காவலில் இருப்பதெல்லாம் நடக்கிறது. இயக்கத்தைவிட்டு அவர்கள் அனுமதியுடன்தான் வெளியேறினானா, அல்லது தானாக வெளியேறுகிறானா என்கிற விபரணம் தரப்படாத அந்த இடமும் சிறு பாய்ச்சல்தான்.
சில நாவலாசிரியர்கள் நாவலை வெளியிட முன்னர் தயங்காமல் மென்போக்குடைய இலக்கியர்களிலிருந்து கறாரான விமர்சகர்கள் வரையில் தம் பிரதியை வாசிப்புக்குத் தருவதுண்டு. ஜெயமோகன் தான் அப்படிச்செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்டாயம் எல்லாரும் அப்படித்தான் பண்ணவேண்டுமென்று நான் சொல்லுவதாக இதற்கு அர்த்தமில்லை. ஆனால் அப்படியொரு முன்வாசிப்புக்கு இப்பிரதியும் உட்பட்டிருந்தால் இச்சிறு குறைகளும் பாய்ச்சல்களும் தவிர்க்கப்பட்டு இன்னும் செப்பனிடப்பட்டிருந்திருக்கும்.

9000 கடல் மைல்களைக்கடந்து செல்லவேண்டிய ஒரு பயணத்தில் வள்ளத்துக்கு குறைந்தபட்ஷம் 2000 லிட்டர் டீசலாவது தேவைப்பட்டிருக்கும். நம்பகமான தொலையாடல் கருவிகள், அவசரகால/அபாய அறிவிப்புக்கருவிகள், மற்றும் 60 மனிதர்களுக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கான உணவு போன்ற முன் தயாரிப்புகள் எல்லாம் இருந்திருக்கவேண்டும். போதுமான முன் தயாரிப்பில்லாத கப்பல்களை சோதனையிடவும் வேண்டுமானால் கைப்பற்றவும் எந்த நாட்டினதும் அதிகாரிகளுக்கும் (Cost Surveyors) உரிமையுண்டு.

நான் அறிந்த வரையில் சர்வதேசப்பதிவில் இல்லாத எந்த மீன்பிடிவகையிலான படகும் இத்தனை மனிதர்களுடன் சூயெஸ்கால்வாயைக் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தும் அதனைச் சும்மா வேதாரணியப் பக்கமாகப்போய்த் திரும்புவதற்கான ஒரு சிறுபடகைப்போலச் சித்தரித்திருப்பதும் சரியல்ல.

சிறந்த ஒப்புநோக்குமையால் பிரதியில் இரண்டொரு எழுத்துப்பிழைகளை மட்டுமே காணமுடிந்தது. இத்தனை கவனம் எடுத்து நூலை ஆக்கியிருக்கும் தமிழினிக்கு இன்னும் அழுத்தமான உயர்ந்த தாள்களில் நூலைப்பதித்திருக்கவும் முடியும். சயந்தனிடம் ஏதாவது காரணம் இருக்குந்தான், ஆனாலும் ‘ஆறாவடு’ என்கிற இத்தலைப்பு இந்நாவலோடு எந்தவகையில் பொருந்திவருகிறது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.

எரித்திரிய போராளிக்கு, ஈழப்போராளியின் செயற்கைக்கால் கிடைப்பதான தரிசனத்தில் அழகியலின் உயர்வோ, பிறழ்வோ, சறுக்கலோ எப்படியும் முடிப்பதற்கான ஆசிரியனின் உரிமையை மதிக்கவும் , புரிந்துகொள்ளவும் முடிகிறது.

கதையாடலை வாசகனின் நெஞ்சோடு அணுகிச் சொல்லத்தெரிந்து வைத்திருக்கும் இவ்விளையவனின் வருகை தமிழுக்கு நல்வரவு. சயந்தனுக்கு இன்னுமொரு சபாஷ் !
1 மே. 2012 பெர்லின்.

P.Karunaharamoorthy, Berlin. Tel:004930/54493337

By

Read More

இந்தியாக் காரன்

“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். இடத்திற்குப் புதியவனைப்போலவே தோன்றியது. கண்டதில்லை. முதுகில் தொங்கிய பையின் கைப்பிடியை நெஞ்சோடு அழுத்திப் பிடித்திருந்தான். ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்த்தான். கண்களில் சிநேகமா அச்சமா என் உய்த்துணரமுடியாத பார்வையிருந்தது. அவன் அப்படிப் பார்த்தபோதெல்லாம் அவனை எரித்துவிடுவது போல பூலோகத்தார் முறைத்தார். “பாரன், களவெடுத்துப் பிடிபட்டவன் மாதிரி அவன்ரை முழியை.. யாரைப் பேக்காட்டலாம் என்று நினைக்கிறார். இமிக்ரேஷன் பொலிஸை வேண்டுமென்றால் ஏமாத்தியிருக்கலாம். பூலோகத்தாரிடம் அது நடக்காது.”

பிபிசி என்றும் வீரகேசரிப் பேப்பர் என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் அழைக்கப்படுகிற பூலோகத்தார் இம்மாதிரிக் கதைகளை எப்பொழுதும் விரல் நுனியில் வைத்திருந்தார். அகப்படுகிற நாலு பேருக்கு சொல்லாமலும் விட்டதில்லை. அவர் வேலைக்குப் போவதில்லை. சமூக உதவித்தொகை பெறுகிறார். பென்ஷனுக்கு இன்னும் ஐந்து வருடம் இருக்கத்தக்கதாக வேலையை விட்டிருந்தார். “இனி என்னத்துக்கு வேலைக்குப் போகவேணும். இரண்டு குமருகளையும் நல்ல இடமாப் பார்த்துக் கட்டிக் கொடுத்தாச்சு, மூத்தவனை லண்டனுக்கு எடுத்து விட்டாச்சு. ஊர் வளவுக்கை ஒரு பெரிய வீடு கட்டி முடிச்சிட்டன். ஷோசல் காசில மிச்சம் பிடிச்சுச் சேர்த்தனென்றால் பென்ஷனையும் எடுத்துக் கொண்டு ஊர்ப்பக்கம் போயிடுவன்”

பூலோகத்தார் ஊரில் தனக்கு ஆறு பிள்ளைகள் என பொய்க்கணக்குக் காட்டி பிள்ளைகளுக்கான உதவிப் பணத்தினையும் பெற்றுக்கொண்டதாக சுற்றுவட்டத்தில் ஒரு கதையிருந்தது. கேட்டால், “யாரடா அப்படிச் சொன்னது” என்று எகிறுவார். “பொறாமை பிடிச்ச எளிய சனங்கள், கையில கிடைக்கட்டும் கண்டதுண்டமாக்கிப் போடுவன்.”

ஆனால் தன்னுடைய பூராயங்களுக்கான மூலத்தை பூலோகத்தார் ஒருபோதும் சொன்னது கிடையாது. பதிலுக்கு அவரிடமிருந்து பழைய கோச்சி ரெயின் போன்றதொரு வெடிச்சிரிப்பும், பெருமிதம் மிதந்து வழிகிற வார்த்தைகளும் மட்டுமே கிளம்பும். “ஹா.. ஹா.. டேய்.. இந்தப் பூலோகத்தான் ஒருத்தன்ரை கண்ணைப் பார்த்தே கதையைச் சொல்லுவான்ரா ” அப்படியொரு ஏழாவது அறிவு அவருக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் சமயங்களில் எனக்கும் தோன்றியிருக்கிறது. முதற்தடவை அவரைச் சந்தித்தபோது அப்படிக் குழம்பியிருந்தேன்.

நல்ல நினைவிருக்கிறது. மூன்றாண்டுகளுக்க முன்னர் ஒரு குளிர்காலம். நல்ல பனி பெய்தது. வீடுகளை, மரங்களை, வீதிகளை, ரயில் தண்டவாளங்களை, துாரத்தே மலைகளை, அவற்றின் அடிவாரங்களை மிச்சம் வைக்காமல் வெண்பனி மூடியிருந்தது. வெண்ணிறக் காடு..

ரயிலால் இறங்கி நடந்தேன். மைனஸ் பத்து செல்சியஸைத்தாண்டிய குளிர். காது மடல்களைத் தேய்த்துச் சூடாக்கியபடி படிகளில் இறங்கினேன். படிகள் பனிச் சேறாகியிருந்தன. அதன் ஓரத்துச் சுவரோடு தோளினைச் சாய்த்தபடியிருந்தவரை அடையாளம் தெரியவில்லை. முழங்கால்கள் வரையான கம்பளிக் கோட்டு அணிந்திருந்தார். காதுகளை மூடியபடிக்கு தலையில் கம்பளித் தொப்பியிருந்தது. இரண்டு உள்ளங்கைகளுக்கிடையில் பியர் ரின் ஒன்றை உருட்டியபடியிருந்தார். அவ்வப்போது வாயில் வைத்து அருந்தினார். அவரின் காலடியில் மேலும் இரண்டு பியர் ரின்கள் இருந்தன.

சிறியதாய் ஓர் ஏளனப் புன்னகை என்னில் தோன்றி மறைந்தது. அவரைத் தாண்டி நடந்தேன். கீழே சப்பாத்தும் புதைகிற அளவில் பனியிருந்தது.

“டேய் தம்பி, உன்னைத் தான், ..”

எதிரில் வந்த வெள்ளைப் பெண்ணொருத்தி என்னைத் தொட்டு “அவர் உன்னைத்தான் கூப்பிடுகிறார்” என்றாள். திரும்பவும் படியேறி அருகில் போய் நின்று என்ன என்பதைப்போல பார்த்தேன். அவர் என்னை சற்று நேரம் ஏறிட்டு நோக்கினார்.

“நீ அமரேசன்ரை மகன் தானே”

“ம்”

“போன வருடம்தானே கல்யாணம் கட்டினாய்”

“ஓம்..”

“பக்டரி வேலையெல்லாம் எப்பிடி.. நிறையத் தமிழ் ஆட்கள் அங்கை வேலை போல.. ”

பதிலேதுமின்றி அவரைக் கீழும் மேலுமாகப் பார்த்தேன். இவரொரு சோதிடராக இருக்கக் கூடும். இப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து இப்படி சோதிடர்கள் வருகிறார்கள். ஒரு சிறிய அட்டையில் குருஜி ஜோதிட மையம் என்றோ, ஆதிபகவான் அற்புத ஜோதிடமென்றோ எழுதி ஏதும் தமிழ்க் கடையொன்றின் ஓரத்தில் குந்திக் கொள்கிறார்கள். எம் ஜி ஆருடன், மூப்பனாருடன், விஜயகாந்துடன், கவுண்டமணியுடன் சேர்ந்தெடுத்த போட்டோக்களை அருகில் பரவி வைத்திருப்பார்கள். கத்தரிக்காய் கால் கிலோ வாங்கப் போனால் “தாயே உன் முகத்தில் தீராக் கவலையொன்று உள்ளது. இப்படி வந்து உட்கார்” என்று கூவுகிறார்கள்.

பதின்ம வயதுப் பிள்ளைகளின் அம்மாக்கள்தான் பெரும்பாலும் சிக்கிக் கொள்கிறார்கள். “பிள்ளையின் பழக்க, வழக்கம் சரியில்லை.” “கூடாத நண்பர்கள் சேர்க்கை,” “இரவுகளில் நண்பிகளுடன் தங்கச் செல்லும் பெண் பிள்ளை..” “அப்பா அம்மா என்று மரியாதை தரத்தெரியாத பையன்” இப்படி எல்லோருக்கும் தீராக் கவலைகள். இரண்டாயிரம் வருடங்களாக பீடு நடைபோடும் தமிழர் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க முடியாத வெப்பியாரத்தினையும் அந்த வரலாற்றுப் பழிக்கஞ்சிய துயரத்தினையும் ஜோதிடர்கள் கபக் என்று பற்றிக் கொண்டு விடுகிறார்கள். சிக்கினால் பரிகாரம், பூஜை, தகடு என்று ஐநுாறு பிராங்குகளுக்கு ஆப்பு நிச்சயமாயிருந்தது.

படிக்கட்டுக்களில் உட்கார்ந்திருந்தவரும் என் முகத்தில் படரும் ஏதேனும் துயர ரேகையைப் படித்திருக்கக் கூடுமென நினைத்தேன். முன்பொருநாள் என் முகத்தில் பிஸினஸ் களை உண்டெனச் சொன்ன ஜோதிடர் நினைவுக்கு வந்தார். இந்த ஏரியாவில்தான் அவர் சுற்றித் திரிகிறார். சீக்கியராக இருக்க வேண்டும். எப்போதும் தலைப்பாகையும் தாடியும் இருக்கும். சற்று வயதானவராயினும் ஜீன்ஸ் ரி சேட்டில் எடுப்பாக இருப்பார். ஆங்கிலத்தில்தான் பேசுவார்.

அன்றைக்கு ரயிலின் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். எதிர், அருகு இருக்கைகள் ஆட்களற்று இருந்தன. அடுத்த நிறுத்தத்தில் ஏறிய அவர் முன் இருக்கையில் அமர்ந்தார். சிநேக பூர்வமாகச் சிரித்தார். பதிலுக்கு கீறலாக புன்னகையைப் படரவிட்டு வெளியே பார்வையை எறிந்தேன். நல்ல வெயில் காலம். பசுமை விரிந்து ஓடிக்கொண்டிருந்தது. துாரத்தின் மலை முகடுகளில் மட்டும் இன்னமும் பனி கரைந்திருக்கவில்லை.

சீக்கியர் என்னை ஊடுருவிப் பார்ப்பதாய்த் தோன்றியது. அது ஒருவித அந்தர உணர்வாயிருந்தது. “ப்ரெண்ட், உனக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது..” என்றார் சீக்கியர். ஜோதிடமொன்றும் அவ்வளவு பொருட்படுத்தக்கூடியது அல்ல என்று நம்பினாலும் இப்படியாக எங்காவது வாசித்தால், யாரேனும் சொல்வதைக் கேட்டால் உற்சாகம் கண்டபடிக்கு கரை புரண்டு ஓடுகிறது. சற்றுப் புளுகத்தோடு “தாங்ஸ்” என்றேன்.

“உன்னிடம் வர்த்தக ஆற்றலும் மார்க்கெட்டிங் தந்திரோபாயங்களும் நிரம்ப இருக்கிறது”

ஓ, சிங் வரைக்கும் விடயம் போய்விட்டதா என்றுதான் முதலில் தோன்றியது. அதற்கும் ஒரு தாங்ஸ் வைத்தேன். மேலும் நான்கைந்து தாங்க்ஸ் என்னிடமிருந்து வாங்கிய பிறகு “இப்பொழுது எனக்கு ஐம்பது பிராங்குகள் கொடு” என்றார் அவர்.

“என்ன.. ?” நான் முகத்தைச்சுருக்கி அவரைப் பார்த்தேன்.

“ஆம்.. நானொரு ஜோதிடன், எனது தொழிலைச் செய்தேன். நீ பணம் தரவேண்டும்” எடுத்த எடுப்பிலேயே குரலை உயர்த்தினார். சீக்கியர்களுக்குப் பயந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது அவர்களிடம் முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாகிகளும் கிரேனைட் குண்டுகளும் இருந்தன.

ரயிலில் சனங்கள் எங்களைப் பார்த்தார்கள். சீக்கியர் குரலை உயர்த்திக்கொண்டே போனார். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன். “நீயும் இறங்கு பேசலாம்” என்றேன். அவர் இறங்காமலேயே போய்விட்டார்.

இப்பொழுது இவர். படிக்கட்டு ஜோதிடரை எப்படிச்சமாளிப்பது என்று ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. தலையைச் சொறிந்தபடி நின்றேன். காசேதும் கேட்பாரோ..

“என்னடா முழுசுறாய்.. இதெல்லாம் எப்பிடித்தெரியுமெண்டோ..” என்றவர் முதற் தடவையாக வெடிச்சிரிப்பையும் அந்தப் பிரகடனத்தையும் சொன்னார். “டேய் இந்தப் பூலோகத்தான் கண்ணாலை பார்த்தே கதையைச் சொல்லுவானடா..”

அன்றைக்கு அறிமுகமானார் பூலோகத்தார். நல்ல வெயில் நாட்களில் மாலைப் பொழுதுகளில் ஏரிக்கரையோரம் போய் அமர்ந்திருப்பேன். துாரத்தே கண்டுவிட்டு அருகில் வந்து அமர்ந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் புதுக்கதையொன்றை கொண்டிருப்பார். “ பாலன்ரை பெட்டையும் மூர்த்தியின்ரை பெடியனும் தனியப்போய் இருக்கினம். இரண்டு வீட்டிலயும் பெரும் சண்டை. பெட்டைக்கு இந்த வைகாசி வந்தால் பத்தொன்பது வயசு. ” என்பதையெல்லாம் கண்ணாலே பார்த்துச் சொல்லமுடியுமா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது.

பூலோகத்தார் சுட்டிய இளைஞன் பஸ் தரிப்பிடத்தில் காத்து நின்றான். எதேச்சையாக நம்மை நோக்குவதும் பின்னர் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுமாக அந்தரிப்பது போலிருந்தது. ஒரு மணிநேரத்திற்கு ஒன்றான இரண்டாம் இலக்க பஸ் வந்தபோது ஏறிக்கொண்டான். குறைவான சனங்களே ஏறினார்கள். மலைக் கிராமமொன்றுக்கு அந்த பஸ் பயணிக்கிறது. பல்நாட்டவரும் தங்கவைக்கப்பட்ட அகதிகள் முகாமொன்று அங்கிருந்தது. அவனும் அங்கு தங்கியிருக்கக் கூடும்.

“அண்ணை உண்மையைச் சொல்லுங்கோ, நீங்கள் அவனை வெருட்டிக் கேட்டுத்தானே இந்தியாக்காரன் என்று கண்டுபிடிச்சனியள்.. ” என்று கேட்டேன். பூலோகத்தார் அவசர அவசரமாக மறுத்தார். “அதொண்டுமில்லை.” என்று மட்டும் சொன்னார்.

பஸ் வளைவில் திரும்பி மறைந்தது. சற்று நேரம் அமைதியாயிருந்த பூலோகத்தார் சட்டென்று “எங்கடை சனங்களின்ரையும் குழந்தைகளின்ரையும் பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்” என்று சொன்னார்.

நான் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை என்று நினைத்தேன். “ஏன் நாங்கள் மட்டும் அதில குளிர்காயலாமோ” என்று நான் கேட்கலாம். அதற்கு “ஓம்.. நாங்கள் குளிர்காயிறது வேறு விடயம். ஆனால் கொழுத்தினவன் குளிர்காயலாமோ” என்ற மாதிரியான பதிலை அவர் வைத்திருப்பார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதும் இலங்கைத் தமிழ் அகதி என நிரூபித்து அரசியல் தஞ்சம் கேட்பதுவும் ஒன்றும் பரம ரகசியமல்ல.

அப்படி வந்தவர்களில் ஒருவரை சந்தித்திருக்கிறேன். ஜெர்மன் மொழியிலான கடிதமொன்றை வாசித்துச் சொல்வார் என யாரோ வதந்தியைக் கிளப்பியிருக்க வேண்டும். என்னைத் தேடி வந்திருந்தார். அரவிந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் தஞ்சாவூரில் ஒரு கிராமம். இங்கு வந்து ஏழு மாதங்கள் முடிகிறதென்றார்.

அரவிந்தன் கொண்டு வந்திருந்த கடிதத்தில் அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. கடிதத்தின்படி அவர் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளையில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு பிறந்திருந்தார். மகாஜனா கல்லுாரில் படித்திருந்தார். தெல்லிப்பளையை இலங்கை இராணுவம் கைப்பற்றியதும் பின்னர் அது உயர்பாதுகாப்பு வலயமானதும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் அரவிந்தன் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். ஐந்து வருடங்கள் அவர்களோடு இயங்கினார். பின்னர் அவரை மலேசியாவிற்குப் படிப்பிற்காக அனுப்பியிருந்தார்கள். ஒருசில மனக்கசப்புக்களுக்குப் பின்னர் திரும்பவும் அரவிந்தனை புலிகள் வன்னிக்கு அழைத்திருக்கிறார்கள். அவருக்கு அச்சமிருந்தது. கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சம். அவர் வன்னிக்குத் திரும்ப விரும்பவில்லை. இயக்கத்தில் இருந்ததனால் கொழும்பிற்கும் திரும்பமுடியவில்லை.

இவ்வாறாக முதல் பன்னிரெண்டு பக்கங்களில் அரவிந்தனின் வழக்கு விபரங்கள் இருந்தன. தஞ்சக்கோரிக்கையோடு அவரது இலங்கை அடையாள அட்டையையும் இலங்கைப் பிறப்புச் சான்றிதழயும் கையளித்திருந்தார். தெல்லிப்பளை கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தற் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.

கடிதத்தின் மிகுதிப் பக்கங்களில் வழக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என விரிவாகச் சொல்லப்பட்டிருந்தது. அரவிந்தன் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார் என விசாரணைகளில் சொல்லியிருந்தாலும் அதனை நிரூபிக்கும் ஆவணங்களைத் தராதபடியாலும், மலேசியாவில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான கல்வியைத் தொடர்ந்தார் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுக்காதபடியினாலும்…. இன்னோரன்ன காரணங்களாலும் கொழும்பில் வாழமுடியும், கண்டியில் வாழமுடியும் என்ற ஆலோசனைகளோடு வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரவிந்தன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் சந்தேகமிருக்கிறது என்ற வார்த்தை ஓரிடத்திலும் இருக்கவில்லை.

நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது மேல் முறையீடு செய்யவோ அரவிந்தனுக்கு முப்பது நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தன. அரவிந்தன் பதட்டமாயிருந்தார். வார்த்தைகள் சீராக வரவில்லை. “பிடிச்சு திருப்பி அனுப்பிடுவாங்களா, நிறையச் செலவழிச்சிருக்கேன், நிறையக் கஸ்டப்பட்டிருக்கோம்.”

“எதுக்கு பைலட் படிப்பு என்று கொடுத்தீங்கள், ஒரு பிளைட்டைத் தந்து ஓடுங்க என்றால்.. அப்படிக் கூட வேண்டாம், கொஞ்சம் விளங்கப்படுத்துங்க என்றால் உங்களால் முடியுமா” என்றேன். முன்பொருமுறை புலிகளின் இசைக்குழுவில் மிருதங்கம் வாசித்தேன் என்றொருவர் சொன்னபோது விசாரணையின் போதே மிருதங்கத்தைக் கொடுத்து எங்கே வாசி என்று கேட்டார்களாம் என்ற கதையொன்று நினைவில் ஓடியது. அரவிந்தன் சற்றைக்கு மௌனமாயிருந்தார். பிறகு “எழுதித்தந்தாங்க, மனப்பாடம் பண்ணிச் சொன்னேன்.” என்றார்.

அரவிந்தனுக்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ரீயைக் குடியுங்கோ” என்றேன்.

“நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா..” என்றவர் அடுத்ததாகத் தூக்கிப்போட்ட கேள்வியில் குடித்துக் கொண்டிருந்த தேனீர் புரக்கேறி மூக்கிற்குள்ளால் வந்தது. “அவங்களோட தலைவர் கிட்ட லெட்டர் ஏதாச்சும் வாங்கலாமா..”

அரவிந்தனிடம் மேல் முறையீடு செய்யச் சொன்னேன்.

“கிடைச்சிடுமா..”

“நிச்சயமாச் சொல்லத் தெரியேல்லை. ஆனால் இன்னும் ஒன்றிரண்டு வருசம் இழுக்கலாம்.. இடைப்பட்ட காலத்தில என்ன வேலையென்றாலும் செய்து காசு சேர்க்கப்பாருங்கோ”

பத்து லட்சம் இந்தியரூபாய்களைச் செலவழித்து அரவிந்தன் இங்கு வந்திருந்தார். “நாங்க குடும்பத்தில மூணு பையன்கள்.. ஒரு பொண்ணு, எனக்கு மூத்தவங்க அவங்க.. தஞ்சாவூருதான் பூர்வீகம். விவசாயக் குடும்பம் நாங்க, எல்லாருமே விவசாயம்தான் பாத்திட்டிருந்தோம். கேள்விப்பட்டிருப்பீங்க.. தண்ணிர் பிரச்சனை அப்புறம் நிறைய பிரச்சனைகள். முன்னைய மாதிரி இல்லை. விவசாயம் சரியாகல்லை. அப்பா தவறிட்டாங்க , முதல்ல எங்காவது மிடில் ஈஸ்ற்தான் போவோம்ணு நினைச்சேன். அப்புறம் நம்ம கூட்டாளியொருவன் பாரீசுக்கு போனான். அதான் விவசாய நிலத்த வித்திட்டு வந்திட்டேன். அக்கா கல்யாண வயசில இருக்கிறாங்க.. தம்பிங்களைப் பாக்கணும்..”

அரவிந்தன் திரைப்படக் கமரொ உதவியாளராக வந்திருந்தார். வருடத்தின் தொடக்கத்தில் இங்குள்ள தியேட்டர்களில் இரவு பன்னிரெண்டு மணிக்கும் ஹவுஸ் புல் காட்சியாக ஓடிய தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல் காட்சியை இங்கே பனி நிரம்பிய மலையடிவாரங்களில் படம் பிடித்திருந்தார்கள். சென்னையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் நடந்த உண்ணாவிரதமொன்றிற்கு அந்த நடிகர் வரவில்லை என்பதனால் படத்தினைப் புறக்கணிக்குமாறு ஒன்றிரண்டு ஈமெயில்களும் எனக்கு வந்திருந்தன.

பாடலில் கொட்டும் பனியில் நடிகை மெல்லிய சேலையில் குளிரை சிம்பிளாகத் தாங்கினார். பாவம், நடிகர் கைக்கு உறை, ஜக்கெட், கழுத்தைச் சுற்றிய சால்வையென அந்தரப்பட்டார்.

அரவிந்தன் அவர்களோடு வந்தார். அவரோடு மேக்கப்பிற்கு இருவர், நடனக்காரர்களாக இருவர் என மொத்தம் ஐந்து பேர். வருவதற்கு முன்பாக அரவிந்தன் இருபது தடவைகள் தெனாலி படத்தைப் பார்த்தாராம். பயண ஏற்பாடுகளைச் செய்தவர்கள், தெனாலி, நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால் முதலான படங்களை ஏராளம் தடவைகள் பார்க்கச் சொல்லிருந்தார்களாம்.

அரவிந்தன் சொன்னார். “உங்களை மாதிரித்தாண்ணே.. நாட்டில வாழ முடியல்ல..”

நிராகரிக்கப்பட்ட வழக்கினை அரவிந்தன் மேன்முறையீடு செய்தார். வன்னியோடு தொடர்பற்றுப் போனதால் எதுவித ஆதாரங்களையும் பெற முடியவில்லையென்று கரித்தாஸ் வழக்கறிஞர் அவருக்காக வாதாடினார். மூன்றாம் விசாரணையில் தனக்கு வாய்த்த மொழிபெயர்ப்பாளர் தெய்வம் என்று ஒருமுறை சந்தித்த போது அரவிந்தன் சொன்னார்.

சரியாக, எட்டாவது மாதத்தில் பதிவுத்தபாலில் அரவிந்தனது தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்ட கடிதமும் சுவிற்சர்லாந்தில் வாழும் பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சிறு கைநுாலும் வந்து சேர்ந்தது. தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு அரச உதவி கிடைக்குமென்ற போதும் அரவிந்தன் ரெஸ்ரோரன்ற் ஒன்றில் வேலை தேடிக்கொண்டார். பகுதி நேரமாக மக்டோனால்ட்டிலும் வேலையில் சேர்ந்தார்.

நீண்டகாலத்தின் பிறகு ஒரு பயணத்தில் பஸ்ஸில் அரவிந்தனைச் சந்தித்திருந்தேன். தனியாக வீடெடுத்து தங்கியிருப்பதாகச் சொன்னார். அக்காவிற்கு திருமணம் சரிவந்திருக்கிறது. அதனால் இந்தியாவிற்கான பயண ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.

பிறகொருநாள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பிறந்து அகதித் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு இந்தியத் துாதரகத்தில் விசா கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் தனக்கும் விசா கிடைக்கவில்லையென்றும் துயரத்தோடு அரவிந்தன் சொன்னார்.

அரவிந்தனின் கதையை பூலோகத்தாருக்கு சொல்லியிருந்ததாக நினைவு. பதிலுக்கு என்ன சொன்னார் என்பதனை ஞாபகத்தில் கொண்டுவர முடியவில்லை. ஏதேனும் கோக்குமாக்காக அவர் கூறியிருக்கலாம். அவர் அப்படித்தான். வார்த்தைகள் மூளைக்குள் நுழையாமல் நேராக வாய்க்கு வந்துவிடுகின்றன.

நன்றாகப் பனி கொட்டியபடியிருந்த ஒரு நாள், பூலோகத்தார் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார். “நாளைக்கு வாறியே, மாவீரர் தினக் கொண்டாட்டத்துக்குப் போயிட்டு வருவம், இங்கையிருந்து பஸ் போகுது..”

வானொலியாகட்டும் தொலைக்காட்சியாகட்டும், மாவீரர் தினக் கொண்டாட்டம் என்றுதான் சொல்கிறார்கள். நாட்டிலேதான் நினைவு கூருகிறார்கள். வெளிநாடுகளில் கொண்டாடுகிறார்கள் என யாரோ எழுதியிருந்ததைப் படித்ததாயும் ஞாபகம்.

தங்கள் சாவு, வெளிச்சத்தின் விதை என நம்பியவர்கள், அருகே அம் மண்ணில் துாங்குகிறார்கள் என்ற நினைப்புத் தருகின்ற உள்ளொடுக்கம் வேறு எங்கேயும் கிடையாதென்றே நம்பினேன். “நான் வரேல்லை, நீங்கள் போட்டு வாங்கோ..”

பூலோகத்தார் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தார். “தமிழனாடா நீ..” என்று சத்தம் போட்டுச் சந்தேகப்பட்டார்.

“ரண்டாயிரம் வருசமா தமிழன் அடிமையாவே கிடந்து சாகிறதுக்கு நீங்கள் தானடா காரணம்” என்றுவிட்டு விறு விறு என்று திரும்பி நடந்தார்.

இப்படியாக எங்கு முடிவதெனத்தெரியாது அங்குமிங்குமாக இந்தக் கதை அலைந்து திரிந்த போதே அது நடந்தது. இந்தியாக்காரன் என்னைச் சந்தித்தான். எதேச்சையான சந்திப்பு. அவன் அங்குமிங்குமாய் பார்வையை வீசி பூலோகத்தார் அருகில் இல்லையென்பதை உறுதிப்படுத்தினான். அவரில் அச்சமுற்றிருந்தது போலயிருந்தது. மெல்லிதாகச் சிரித்தான்.

“அவர் உங்க சொந்தக்காரரா..”

“யார்..”

“உங்க கூட இருப்பாரே, வயசான ஐயா..”

“ஓ.. அவரா.. தெரிஞ்சவர், பொழுது போகாமல் கதைச்சுக் கொண்டிருப்பார்..”

“அப்படியா, அவர் காண்கிற இடமெல்லாம் என்னைத் திட்டுகிறார். இந்தியாக்காரன் என்று பொலிசுக்கு சொல்லிக் கொடுத்திடுவாராம்..”

பூலோகத்தாருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று நினைத்தேன். மனுசன் உண்ட களைப்புக்கு கொழுப்பெடுத்து ஆடுது..

“நான் எவ்வளவோ சொன்னேன், நம்புகிறார் இல்லை. நேற்று பஸ்ஸில கெட்டவார்த்தையால திட்டினார். குடிச்சிருந்தார்.” அவனது கண்களில் அவமானம் படர்ந்திருந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.

“சே.. அவர் அப்பிடித்தான். அதை பெரிசா எடுக்காதேங்கோ, நான் அவரிட்டைச் சொல்கிறேன்” என்றேன்.

“இல்லையே.. என்று தொடங்கியவன் மேலும் மேலும் தொடர எனக்கு பூலோகத்தார் மீது இன்னதென முடியாத ஆத்திரம் நெருப்பாய் பரவியபடியிருந்தது. மனதிற்குள் திட்டத்தொடங்கினேன். எப்போதும் தவிர்த்துவிட்டு செல்ல விரும்புகிறவன் அன்றைக்கு அவரைத் தேடி ரயில்நிலைய படிக்கட்டுகளுக்குப் போனேன். காணவில்லை. தமிழ்க்கடையில் யாருக்கேனும் அரசியல் வகுப்பெடுத்தபடி நிற்கக் கூடுமென நினைத்தேன். அங்குமில்லை. இறுதியில் ஏரிக்கரையில் அகப்பட்டார். நன்றாக கால்களை நீட்டியபடி உட்கார்ந்திருந்தார். அருகில் பை இருந்தது. அதனுள் முழுக்கவும் பியர் ரின்கள்.

முன்னால் நின்று கொண்டேன். பூலோகத்தார் நிமிர்ந்து நோக்கினார். அருகில் இரு என்பதைப் போல சைகை செய்தார்.

“அவன் யாரெண்டு உங்களுக்குத் தெரியுமோ” என்றேன். எவன் என்பதைப் போல பார்த்தார். சற்றைக்கு முன்னர் இளைஞன் சொன்ன கதையை அவருக்குச் சொல்லத் தொடங்கினேன்.

0    0    0

அவன் சொன்ன கதை

இரண்டு வருடங்களுக்கு முந்தைய நாளொன்றில் பிரான்சுக்கும் சுவிசுக்கும் இடையிலான சிறிய கிராமமொன்றினுாடாக நடந்தே உள்நுழைந்து இங்கு வந்து சேர்ந்தேன். முகாமில் தஞ்சம் கோரிப் பதிந்தபோது, கடவுள் கிருபையில் நான் பிரான்சிலும் ஒருவருடம் தங்கியிருந்தேன் என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட வில்லை.  துபாய் வந்து, அங்கிருந்து எதியோப்பியா சென்று, பிறகு இந்தோனேசியாவிற்கான பயணப்பாதையில் பிரான்சில் இறங்கி அங்கும் அகதியாயிருந்தேன். பத்து மாதங்களில் என்னை நிராகரித்தார்கள். வேலையில்லை.

சுவிற்சர்லாந்தில் இன்னும் விசாரணை முடிந்துவிடவில்லை. இரண்டாவது விசாரணை ஆறு மணிநேரம் வரை நீண்டது. எனது ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு ஆதாரம் கேட்கிறார்கள். நம்பமாட்டீர்கள், கிளிநொச்சியின் காலநிலை எத்தனை பாகை செல்சியஸ் என்று கேட்டார்கள். சிரிப்புத்தான் வந்தது. மூன்றாவது விசாரணைக்கு அழைப்போம் என்றிருக்கிறார்கள். மண்டையைத் துளைக்கிற கேள்விகளையும் பதில்களையும் சுமந்தபடி திரிகிற நரக வாழ்க்கை இது.

சரியான விசா இல்லையென்பதால் யாரும் வேலை தருகிறார்களும் இல்லை. கிழமைக்கு எழுபது பிராங்குகள் முகாமில் தருகிறார்கள். நாளுக்கு பத்து பிராங்குகளை வைத்து என்ன செய்துவிட முடியும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனக்குப் பணம் தேவையாயிருக்கிறது. தமிழ்க் கடையொன்றில் களவாக வேலை செய்கிறேன். காலையில் போனால், கழுவித் துடைத்து வர இரவாகும். பன்னிரண்டு மணிநேரம் உடல் முறிகிற வேலை. பொலிஸ் பாயலாம் என்கிற பயம் வேறு. சம்பளம் அப்பிடி இப்படித்தான். விசா இல்லாத ஒருவரை வேலைக்கு வைத்திருப்பதனால் தனக்கு ரிஸ்க் என்றும் அதனால் கால்வாசி சம்பளமே தரமுடியுமென்றும் தமிழ் முதலாளி சொல்லியிருக்கிறார். பரவாயில்லை.. எனக்குப் பணம் தேவைப்படுகிறது.. அப்பாவையும் அக்காவையும் வெளியே எடுத்து விட வேண்டும். அவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருக்கிறார்கள்.

பாருங்கள், நானும் இங்கு முகாமில்.. அவர்களும் முகாமில்..  உங்களுக்குத் தெரியுமா..? யாருக்கோ பணம் கொடுத்தால் முகாம்களில் உள்ளவர்களை வெளியே எடுத்துவிட முடியுமாம். இராணுவமே கூட்டிச்சென்று விட்டுவிடுமாம். விசாரிக்க வேண்டும். எப்பிடியும் எடுத்துவிட வேண்டும். வெளியே வந்த பிறகு எங்கே செல்வார்கள் என்பதுதான் புரியவில்லை. அப்பா பதுளைக்குப் போவாரா தெரியவில்லை. பதுளை எங்கிருக்கிறது என்று தெரியுமா? அது நுவரெலியாவிற்கு கிட்டவாக இருக்கிறதாம். அல்லது கண்டிக்கு அருகாகவோ தெரியவில்லை.

அப்பா அம்மாவின் சொந்த இடம் எங்கிருக்கிறதென எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆச்சரியமில்லையா. ஆனால் அப்பா தன் சொந்த இடமென ஒருபோதும் பதுளையைச் சொன்னதில்லை. செட்டிக்குளம் அகதிகள் முகாமிலும் சொந்த இடம் கிளிநொச்சி என்றே பதிந்திருப்பார்.

நான் ஒருபோதும் பதுளைக்குப் போனதில்லை. அண்ணனும். ஆனால் அவன் அங்கேதான் பிறந்தான். அப்பா சிறுவயதில் தாத்தாவோடு அங்கே வந்து சேர்ந்தாராம். இந்தியாவில் இராமநாதபுரப் பக்கம் ஏதோ ஒரு கிராமத்திலிருந்தவர்களை வெள்ளைக்காரர்கள் நல்ல சம்பளத்தோடு வேலையென்று அழைத்து வந்திருக்கிறார்கள். அப்பா சொல்லுவார். தாத்தா தன்னைத் துாக்கித் தோளில் சுமந்தபடி மன்னாரிலிருந்து நடந்தே வந்து சேர்ந்ததாக. வழியில் நிறையப் பேர் செத்துப் போனதாகவும்.

மலைநாட்டில் ஏதோவொரு கலவரம் வெடித்தபோது அப்பா அண்ணனைத் துாக்கித் தோளில் சுமந்தவாறு கிளிநொச்சிக்கு ஓடிவந்தார். அப்போதும் நிறையப் பேர் செத்துப் போனார்கள். அண்ணனுக்கு ஒன்றரை வயது நடந்து கொண்டிருந்தது. அவன் கிளிநொச்சியிலேயே வளர்ந்தான். கிளிநொச்சியிலேயே பள்ளிக்கூடம் போனான். அங்கேயே இயக்கத்திற்கும் போனான். கிளிநொச்சியை மீட்குமொரு சண்டையிலேயே செத்தும் போனான்.

சண்டையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவம் பின்வாங்கியிருந்தது. நாங்கள் மீண்டும் வீட்டுக்குப் போனோம். நிலம் காடுபற்றிக் கிடந்தது. அதனுள் அடையாளம் தெரியாதபடி வீட்டின் ஒரு சுவர் மட்டும் தனித்து நின்றது. அப்பா சொன்னார். அது முன்னரும் காடாய்க்கிடந்த நிலமென. அவர் தன்னந்தனியராய் அதனை வெட்டிச் சீரமைத்தார். இப்பொழுதும் அப்படியே..

நான் உங்களுக்கு அம்மாவைப் பற்றியும் அக்காவைப்பற்றியும் சொல்லவில்லை. அம்மா என் சின்ன வயதுகளிலேயே செத்துப்போனார். வாயில் பெயர் நுழையா ஏதோ ஒரு நோய். அக்காவிற்கும் எனக்கும் நான்கைந்து வயதுகளே வித்தியாசமெனினும் அவளே என் அம்மாவாயிருந்தாள். அவளுக்கொரு கல்யாணம் கட்டிக்கொடுத்துவிட வேண்டுமேன அப்பா ஆசைப்பட்டிருந்தார். யாருக்குத் தெரியும் இப்படியேதும் நடக்குமென..

கிளிநொச்சியிலிருந்து வெளிக்கிட அப்பா ஒருபோதும் சம்மதித்திருக்கார். சென்றமுறை நானும் அக்காளும் அவரை இழுத்து வந்தோம். “நீங்க ரண்டும் போங்க, நான் வரலை.. ” அப்பாவைப்போலவே எனதும் அக்காளினதும் பேச்சிருந்தது. எங்கள் சுற்று வட்டாரத்தில் அப்படித்தான் பேசினோம்.

தொன்னுாற்றைந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு திருவிழாப்போல சனங்கள் வந்திருந்தார்கள். கிளிநொச்சி கொள்ளாமல் தவித்தது. எங்கள் நிலத்திலும் கொட்டில்கள் போட்டு நிறையப்பேர் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு வன்னிநிலம் ஒத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்திற்கே திரும்பிவிட்டார்கள். பெரு வெள்ளம் வடிந்த நிலமாய் திரும்பவும் கிளிநொச்சி வெறுமையானது. அப்பொழுதே நாமும் பதுளைக்குப் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால் அப்பா ஒருபோதும் சம்மதித்திருக்கார்.

அப்பா பாவம், முதுமையின் நோய்களோடு முகாமில் என்ன செய்வாரோ.. அவரையும் அக்காளையும் முகாமிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கு காசு சேர்க்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் எங்காவது இரவு வேலை உள்ளதா, களவாகச் செய்ய..

0    0    0

எனது மூச்சுக்காற்று சீராக இருக்கவில்லையென்று உணர்ந்தேன். படபடப்பான வார்த்தைகளிலேயே அவன் கதையைச் சொல்லி முடித்தேன். பூலோகத்தாரின் முகத்தில் கலவரம் படரும் என எதிர்பார்த்தேன். அவர் சலனமேதுமற்று ஏரியின் நீர் அலைவைப் பார்த்தபடியிருந்தார். சிலசமயம் என்னிடம் மன்னிப்புக் கேட்கக்கூடும். வயதில் மூத்த ஒருவர் அவ்வாறு கேட்கையில் அதை எதிர்கொள்வதென்பதில் குழப்பமாயிருந்தது.

“சரி பரவாயில்லை, முடிஞ்சால் அவனுக்கொரு வேலை தேடிக்கொடுங்கோ” என்று சொல்லவேண்டும்.

நீடித்த அமைதிக்குப்பிறகு பூலோகத்தாரிடமிருந்து வெடிச்சிரிப்பு அவரது உடலைக் குலுக்கியபடி கிளம்பிற்று. “ஹா.. ஹா.. ஹா.. டேய், மடப்பயலே. அப்பிடிப்பாத்தாலும் கூட அவன் இந்தியாக்காரன் தானே” என்ற பூலோகத்தார் ஏரிக்கரையோரம் என்னைத் தனியே விட்டுவிட்டு எழும்பி தன்போக்கில் நடந்தார்.

-தமிழினி, யூலை 2012

By

Read More

ஆறா வடு – பொ.கருணாகரமூர்த்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி.

(பதிவான சில குறிப்புகள்போல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது சரியல்ல. நாவல்கள் நம் அறிவைப் பெருக்குவதற்காகப் படிக்கப்படுவனவும் அல்ல. இது ஒரு அனுபவப்பகிர்வு. ஆசிரியனின் அனுபவத்தினதும் ஆவேசங்களினதும் கனவுகளினதும் ஒரு கலவை. போர்நடக்கும் ஒரு நாட்டில் நான்கு ஆயுதப்படைகளின் மத்தியில் வாழநேர்ந்த, ஆயுதத்தைத் தூக்க நேர்ந்த ஒரு இளைஞன் தான் அனுபவித்ததை, பார்த்த போரிடும் உலகத்தின் நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றான்.

// இனியில்லை என்ற அளவுக்கு எலும்பும்தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்தான் (பக் 105.) //

// தூரவாகப்போய் நின்றுகொண்டார்கள் (பக் 15.) //

என்பதுபோன்ற பேச்சுமொழியிலான வரிகளைப்படிக்கையில் தாயகத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு போராளி நண்பன் எனக்கு எழுதியிருக்கக்கூடிய இயல்பான கடிதங்கள்போலவும் அவனே அருகிலிருந்து பேசுவதுபோலவும் விபரிப்புகள் என் நெஞ்சுக்கு அத்தனை நெருக்கமாக வந்துவிழுகின்றன. இங்கே ஆசிரியன் நாவலின் மொழிக்கோ, பாத்திரவார்ப்புகளுக்கோ, புனைவுத்திக்கோ அதிகம் வினைக்கெட்டதாகத் தெரியவில்லை. இன்னும் இயல்பான அங்கதம் தோய்ந்த நடையில் கதையாடிச்செல்வதுவும் வாசிப்பின் சுவையை அதிகரிக்கிறது.

இயைபுவாழ்வை வாழ்ந்திருந்த சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு பல்வேறுமுனைத்திறனுடைய போராட்ட சக்திகளால் உள்ளிழுக்கப்பட்டார்கள், பிழியப்பட்டார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதுவும், வாழ்வின் அநித்தியம், அவதி, அவலங்கள் என்பனவும் சிக்கின்றி இப்புதினத்தில் வார்த்தை வயப்படுகின்றன.

‘அண்ணைக்கு எல்லாம் தெரியும்’ என்று இருந்தவர்களைவிடவும் ‘அண்ணைக்கு ஒன்றுந்தெரியாது, பக்கச்சாவி இல்லாத வண்டியைத்தான் விரைந்து ஓட்டுகிறார்’ என்பதைத் தெரிந்திருந்தவர்களும் கையாலாகதவர்களாக, விதையடிக்கப்பட்டவர்களாக இருக்கவே பணிக்கப்பட்டனர்.

‘அவர்கள் கேட்டார்களில்லை.’ – முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான பேட்டியொன்றில் – கா.சிவத்தம்பி.

– சந்திரிகாவுடனான சமாதனம் முறிந்தபோது

‘களநிலமை அப்பிடீடா தம்பி முறிச்சேயாக வேணும்’ – புதுவை இரத்தினதுரை.

‘எமக்கு மாற்று வழிகள் இல்லை ’ – பாலகுமார்.

சந்திரிகாவுடன் நெருக்கமான, அவரின் கருத்தியல்களை அணுகக்கூடிய மாற்றுக்கருத்துக்களையும் பரிசீலனை செய்யவைக்கக்கூடிய நீலன் திருச்செல்வத்தைப் பயன்படுத்தி எமக்குச் சாதகமாக் எதையாவது பண்ணுவோமா ? ‘வேண்டாம் ஒரு பயலும். போட்டுத்தள்ளு அந்த மசிராண்டியையும்’.

தினவுமிகவெடுத்து அரசியல் அல்லாத காரணத்தைச் சாக்குவைத்து சந்திரிகாவுடனான சமாதானத்தைப்புலிகள் முறித்துகொண்டமையும், அதையுண்டான மக்களின் சினமும் நேரு அய்யாவின் வாய்மூலத்தால் பதிவுசெய்யப்படுகின்றது.

இன்னும் நாவலில் அங்கங்கே சில இடங்களில் பாய்ச்சல்களும் இடம்பெற்றுள்ளமையை ஒப்பத்தான் வேண்டும். ஒரு இளம்படைப்பாளனின் படைப்பில் இத்தனை நீர்மட்டம் பிடிக்கத்தான்வேணுமோ என ஒருகணம் தோன்றினாலும் இப்பாய்ச்சல்கள் என்னைச் சற்று உறுத்துகின்றன. ஒரு போராளி இளைஞனின் கதையாடல் என்கிறவகையில் சந்திரிகாவுடனான சமாதானத்துக்கும்- ரணிலுடனான சமாதானத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான்
1. யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டார்கள். (இதைப்பற்றி டி.சே.தமிழனும் குறிப்பிடுகிறார்)

2. முல்லைத்தீவில் வல்லிபுனம் செஞ்சோலை பாசறையில் முதலுதவிப் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட்ட 62 பேர்மீது விமானங்கள் குண்டுவீசிக்கொன்ற கொடூரநிகழ்வு.

3. நவாலி சென். பீற்றர் தேவாலயத்தின் அகதிகள் மீதான குண்டுவீசி 147 பேரைக்கொன்றதும் 360 பேரைப்படுகாயப்படுத்தியதுமான நிகழ்வு (இது ஓரிடத்தில் மிக லேசாகச்சுட்டப்டப்படுகிறது).

4. மணாலாறு தாக்குதலில் 185 பெண்போராளிகளின் இழப்பு.

5. ஆனையிறவுப்படைமுகாம் மீதான முதலாவது தாக்குதலில் 800 போராளிகள்வரையில் மடிய நேர்ந்தமை போன்ற பேரழிவுகள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருப்பதைச்சொல்லலாம்.

இன்னும் நாவலின் இறுதிப்பகுதியில் சகபோராளி ஒருவர் இயக்கத்திலிருந்து விடுத்துக்கொண்டுபோய் தன்காதலியைத் திருமணம் செய்துகொண்டு சாதாரண இயல்புவாழ்வுக்குத் திரும்ப விழையும்போது இயக்கம் அவருக்கு சிரமதான தண்டனை வழங்குகிறது. இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களைக்கொண்டு கொத்தடிமைகள் போல வேலைவாங்கப்பட்டு யாழ் கோட்டை உடைக்கப்பட்டதை யாம் அறிவோம்.

இவனும் தான் பலகாலம் இயக்கத்தில் பணியாற்றியதால் தனக்கும் திருமணஞ் செய்தலோ, இயக்கத்திலிருந்துவிடுபடுதலோ அத்தனை சிரமமாக இருக்காது என்றும் நினைக்கிறான். ஆனால் இத்தாலியின் திசையில் கடைசியாக வள்ளம் ஏறும்வரையில் பொலீஸில் பிடிபட்டுச்சிலகாலம் சிறைக்காவலில் இருப்பதெல்லாம் நடக்கிறது. இயக்கத்தைவிட்டு அவர்கள் அனுமதியுடந்தான் வெளியேறினானா, அல்லது தானாக வெளியேறுகிறானா என்கிற விபரணம் தரப்படாத அந்த இடமும் சிறு பாய்ச்சல்தான்.

சில நாவலாசிரியர்கள் நாவலை வெளியிட முன்னர் தயங்காமல் மென்போக்குடைய இலக்கியர்களிலிருந்து கறாரான விமர்சகர்கள் வரையில் வாசிப்புக்குத் தம் பிரதியைத் தருவதுண்டு. ஜெயமோகன் தான் அப்படிச்செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்டாயம் எல்லாரும் அப்படித்தான் பண்ணவேண்டுமென்று நான் சொல்லுவதாக இதற்கு அர்த்தமில்லை. ஆனால் அப்படியொரு முன்வாசிப்புக்கு இப்பிரதியும் உட்பட்டிருந்தால் இச்சிறு குறைகளும் பாய்ச்சல்களும் தவிர்க்கப்பட்டு இன்னும் செப்பனிடப்படப் பட்டிருந்திருக்கும்.

9000 கடல் மைல்களைக்கடந்து செல்லவேண்டிய ஒரு வள்ளத்துக்கு குறைந்தபட்ஷம் 2000 லிட்டர் டீசலாவது தேவைப்பட்டிருக்கும். நம்பகமான தொலையாடல் கருவிகள், அவசரகால/அபாய அறிவிப்புக்கருவிகள், மற்றும் 60 மனிதர்களுக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கான உணவு போன்ற முன் தயாரிப்புகள் எல்லாம் இருந்திருக்கவேண்டும்.

நான் அறிந்த வரையில் சர்வதேசப்பதிவில் இல்லாத எந்த மீன்பிடிவகையிலான படகும் இத்தனை மனிதர்களுடன் சூயெஸ்கால்வாயைக் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தும் அதனைச் சும்மா வேதாரணியப் பக்கமாகப்போய்த் திரும்புவதற்கான ஒரு சிறுபடகைப்போலச் சித்தரித்திருப்பதும் சரியல்ல.

சிறந்த ஒப்புநோக்குமையால் பிரதியில் இரண்டொரு எழுத்துப்பிழைகளை மட்டுமே காணமுடிந்தது. இத்தனை கவனம் எடுத்து நூலை ஆக்கியிருக்கும் தமிழினிக்கு இன்னும் அழுத்தமான உயர்ந்த தாள்களில் நூலைப்பதித்திருக்கவும் முடியும். சயந்தனிடம் ஏதாவது காரணம் இருக்குந்தான், ஆனாலும் ‘ஆறாவடு’ என்கிற இத்தலைப்பு இந்நாவலோடு எந்தவகையில் பொருந்திவருகிறது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.

எரித்திரிய போராளிக்கு, ஈழப்போராளியின் செயற்கைக்கால் கிடைப்பதான தரிசனத்தில் அழகியலின் உயர்வோ, பிறழ்வோ, சறுக்கலோ எப்படியும் முடிப்பதற்கான ஆசிரியனின் உரிமையை மதிக்கவும் , புரிந்துகொள்ளவும் முடிகிறது.

கதையாடலை வாசகனின் நெஞ்சோடு அணுகிச் சொல்லத்தெரிந்து வைத்திருக்கும் இவ்விளையவனின் வருகை தமிழுக்கு நல்வரவு. சயந்தனுக்கு இன்னுமொரு சபாஷ் !

1 மே. 2012 பெர்லின்.

By

Read More

× Close