வலைப் பதிவு நுட்பம், படிக்கலாம் வாங்கோ

இதுவரை நுட்பக் கட்டுரைகளோ, வழிகாட்டற் குறிப்புக்களோ எழுதி எனக்குப் பழக்கமில்லை. பாடசாலையில் விஞ்ஞான மலரில் கருந்துவாரங்கள் (Black Holes) என்ற ஒரு அறிவியல் ? சிறுகதையை எழுதியது தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லையாயினும் இனி எனது வலைப்பதிவில் ஆகக் குறைந்தது வலைப் பதிவு நுட்ப விபரங்களையாவது எழுத முயலலாம் எனத் துணிந்தமைக்கு சில காரணங்கள் உள்ளன.

அண்மையில் அற்புதன் என்னும் ஒரு பதிவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்களின் (அவர் ஈழப் பதிவர்கள் என குறிப்பிட்டிருந்தார்) இடுகைகள் இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவனவாக, நனவிடை தோய்தல்களாக இருப்பதனை அவர் சுட்டியிருந்தார். நான் உட்படப் பலர் அதையே செய்து கொண்டுடிருந்தோமாயினும் இயல்பாகவே அதில் ஒரு ஈடுபாடின்மை எனக்கு ஏற்பட்டுவிட்டதன் பிரதி பலிப்பே அண்மைக் காலமாக நான் இட்டு வந்த மீள்பதிவுகள் மற்றும் மீள் மீள் பதிவுகள்.

ஆயினும் வலைப் பதிவில் உள்ள நுட்பச் சிக்கல்களுடனும், நுட்ப விபரங்களுடனும் அண்மைக் காலமாக மல்லுக் கட்டுவது ஒரு வித ஈர்ப்பைத் தந்ததினால் அதன் காரணமாகவே என்னால் மீண்டும் புதிய ஈடுபாட்டுடன் வலையில் செயற்பட முடிந்தது.

தமிழ் வலையுலகில் துறை சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நிதி, மருத்துவம், அறிவியல், நுட்பம் போன்ற பதிவுகள் சீரான வீச்சுடன் வருவதில்லை. தமிழில் உள்ள 1000 பதிவுகளில் எத்தனை வீதம் துறை சார் பதிவாக இருக்கும் என்பது மகிழ்ச்சி தராத விடையினைத் தான் தரும்.

வலைப் பதிவுகளில் பொழுது போக்கு என்பதற்கும், பொழுது போக்குவதற்காக வலைப் பதிவு என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென சில பதிவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.

இத்தகைய வரலாற்றுப் புறச் சூழ்நிலையில்.. (நல்லாத் தானே எழுதிட்டிருந்தான்..? திடீர்ன்னு ஆரம்பிச்சிட்டான்) அண்மைக் காலமாக நான் புளொக்கரில் குடைந்து, கடைந்தெடுத்த சமாசாரங்களைச் சொல்வதும், எழுதுவதும் என்னை இன்னொரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து இயங்க வைக்கும் என நம்புகின்றேன்.

என்னுடைய சாரல் வலைப்பதிவு புதிய புளொக்கருக்கு மாறி விட்ட போதும், இன்னமும் அது கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துகிறது. (அதிலிருந்தும் அடித்துக் கலைக்கவோ, ஆட்டோ அனுப்பித் தூக்கி ஏற்றவோ மாட்டார்கள் என நம்புவோமாக) ஆக அடிப்படையில் அது பழைய புளொக்கர் தான். புதிய Layout முறையிலான வார்ப்புருவின் மூலம் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்த முடியாது என சொல்லப் படுகின்ற கிளாசிக் வார்ப்புருவில் இருந்து கொண்டே நான் அமைத்துக் கொண்ட வசதி வாய்ப்புக்கள் இவை

  1. பதிவுகளுக்கு லேபிள் இடும் வசதி : இது புளொக்கர் தரும் லேபிள் இடும் வசதியைப் பயன்படுத்தாது வேறு வழியில் பதிவுகளைத் திரட்டுகிறது. புளொக்கர், Search முறையில் லேபிள் குறிச் சொற்களை வைத்து பதிவுகளைத் தேடித் திரட்டுவதோடு, திரட்டப்படும் ஒரே வகையான மொத்தப் பதிவுகளையும் அவற்றின் உள்ளடக்கத்துடன் ஒரே பக்கத்தில் காட்டுகின்றது. இது பக்கத் தரவிறக்கலுக்கு சாதகமானதல்ல. சாரலில் பயன்படுத்தப் படும் முறை நேரடியாக பதிவுகளைத் திரட்டுவதோடு, முதலில் ஒரே வகையான பதிவுகளின் தலைப்புக்களை மட்டுமே, தருகிறது. அவற்றிலிருந்து பயனர் தனது தேர்வினைச் சுட்டி, முழுப் பதிவிற்கும் செல்லலாம். சாரலில் இவ் வகையான வகைப்படுத்தல் Drop down menu முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை லேபிள்கள் இட்டாலும், நமது பக்கத்தில் இடத்தினைப் பிடிக்கும் அடாத்து வேலையினைச் செய்யாது. பார்க்க சாரலின் பெரும் பிரிவுகள்
  2. கடந்த காலப் பதிவுகளை Drop down menu இல் காட்டுதல் : இது இதற்கு முன்பும், பலரால் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு வருடங்களைத் தாண்டிய நிலையில் மொத்தம் 24 மாதப் பதிவுகளை இது உள் வைத்திருந்து, தேவைக்கு ஏற்பத் தரும். சாதாரண முறையில் 24 மாதங்களும் பதிவில் எத்தனை இடத்தினைப் பிடிக்கும் என்பது தெரியும் தானே..? (இது ஒரு அழகுணர்ச்சி ஏற்பாடே தவிர பெரிய அளவில் நுட்பப் பயன் இல்லை) பார்க்க காலம் எழுதிய கதை
  3. நமக்குப் பிடித்த வேறு பதிவுகளைத் திரட்டல் : நாம் விரும்பிப் படிக்கும் வேறு பதிவர்களுக்கு நமது தளத்தில் ஏற்கனவே இணைப்புக் கொடுத்திருப்போம். ஆனால் இந்த நுட்பத்தின் மூலம், அவர்கள் எழுதிய, எம்மைக் கவர்ந்த பதிவுகளுக்கு மட்டும் தனியாக இணைப்பினைக் கொடுக்கலாம். வேறு வலைப்பதிவுகளின் செய்தி ஓடையைப் பயன் படுத்தி கூகுள் றீடர் இந்த வசதியைத் தருகிறது. நமது பதிவர்கள், புதிதாக ஒரு பதிவு எழுதி, அது நமக்குப் பிடித்திருந்தால் (பிடிக்காவிட்டால் கூட எனக்குப் பிடிக்காத பதிவுகள் எனத் திரட்டலாம்;))கூகுள் றீடரில் ஒரு சின்னக் கிளிக் மூலம் அதைத் தெரிவித்தால் போதும். உங்கள் பக்கத்தில் அது திரட்டப்படும். ஒப்பீட்டு அடிப்படையில் இலகுவான நுட்பம். பார்க்க எனக்குப் பிடிச்சிருக்கு
  4. இறுதிப் பின்னூட்டம் இட்டவர்களையும் பின்னூட்டங்களின் சில வரிகளும் : இதன் மூலம் எமக்கு இறுதியாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், இப் பின்னூட்டங்களின் ஒரு சில வரிகளையும், நமது பதிவின் அனைத்துப் பக்கங்களிலும் காட்சிப்படுத்தலாம். எத்தனை பின்னூட்டங்களை வெளியிடலாம் என்பதனையும், பின்னூட்டத்தில் எத்தனை சொற்கள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாமே முடிவு செய்யலாம். புளொக்கர் கூட இவ்வாறான ஒரு வசதியைத் தருகின்றது. பின்னூட்டமிட்டவரின் பெயர் மற்றும் நேரம் என்பவற்றை நமது பக்கத்தின் முகப்பில் காட்டும் வசதியே அது (முகப்பில் உள்ள பின்னூட்டங்களை மட்டுமே). ஆனாலும் முகப்பிலிருந்து தனியான ஒரு பதிவிற்குள் நுழைந்தீர்களாயின், பின்னர் இறுதிப் பின்னூட்டங்கள் காட்டப் படாது. சாரலில் நீங்கள் எந்தப் பக்கத்தில் எப்படி நின்றாலும் இறுதியாக சாரலுக்கு வந்த (அல்லது நானாகவே இன்னொரு பெயரில் போட்ட ;))பின்னூட்டங்கள் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும்.பதிவர்களின் பெயர்கள் மேலே கிளிக்கினால் மூலப் பதிவுக்குப் போக முடியும். பதிவுகள் வழியாகப் பின்னூட்டங்கள் என்பதை விடுத்து முதலில் பின்னூட்டங்கள் பின்னர் அது வழியாகப் பதிவுகள் என்ற புதிய புரட்சியை இது தோற்று விக்கும்;) பார்க்க இப்போ கருத்து இட்டவர்கள்
  5. இது தவிர சாரலுக்கெனத் தனியான Flash Audio player: திருப்தி தரக் கூடிய வகையில் இது இயங்குகிறது. நமது MP3 கோப்பையும் ஒரு சிறிய flash (2kb) கோப்பையும் அதனுடன் ஒரு xml கோப்பையும் bandwidth பிரச்சனை வராத இடத்தில் ஏற்றும் வசதி இருக்குமாயின் இதுவே போதும் இதனைப் பயன் படுத்த. பார்க்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஒலிப்பதிவு

தொடர்ந்தும் இவை பற்றித் தனித்தனியாக நிறுவுதல் முதற்கொண்டு பயன்படுத்துவது வரை முடிந்தவரை இலகுவாக எழுத உள்ளேன். நிறைய ஆர்வமும் கொஞ்சூண்டு திறமையும் இருந்தால்ப் போதும். இவற்றை நீங்களும் உங்கள் வலைப் பதிவில் பயன் படுத்தலாம். பதிவுகளை எழுதும் போதே பரிசோதனை முயற்சியாக நீங்களும் முயற்சிக்கலாம். இவற்றை முயற்சிக்க புதிதாய் ஒரு புளொக்கரைத் தொடங்குவதும் அல்லது இருப்பதையே பயன்படுத்துவதும் உங்கள் தெரிவு. ஆனால் இத்தனை வசதிகளும் கிளாசிக் வகை வார்ப்புருவிலேயே அமைந்ததென்பதால் நீங்கள் அந்த வார்ப்புருவுக்கு மீண்டு வர வேண்டியிருக்கும்.

யுத்தம் முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகும். விரைவில் யுத்தம் முடிய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக;)

By

Read More

கேள்விகள்

ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். ‘ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். அற்புதமான குரல் அவனுக்கு.. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக்கச்சேரியுடன் தான் கழிந்தது.

‘கவனமடா.. பாத்துப்போ..” பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம் அறிவிப்புக்கள்.

‘ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன்,இந்தியன் எண்டு ஒரு முன்னு}று வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது.. இதுக்காக நாங்கள் கொடுத்த உயிர் விலை முவாயிரத்துக்கும் மேலை..”

பக்கவாட்டாக வீசிய காற்று என் காதுகளில் ‘இர்…” என்று இரைந்து கொண்டிருந்ததால் அவன் குரலை உயர்த்தியே சொல்ல வேண்டியிருந்தது.நான் அமைதியானேன். கிட்டத்தட்ட மூன்று வருசத்துக்கு முதல் இதே வீதிகளில் இரவுகளில் அவர்கள் உலவியிருப்பார்கள். காயம் வழி குருதி வழிந்தோட கிடந்திருப்பார்கள். உயிர் பிரிந்திருப்பார்கள். அவர்களின் சுவாசப்பையை தொட்டு வந்த காற்று இந்தப்பெரு வெளியில் உலவக்கூடும்.

நகுலன் மோட்டர்சைக்கிளை மெதுவாக்கி ஓரமாக்கினான். டொல்பின் வாகனமொன்றில் ‘காய் கூய்” என்று கத்தி கை தட்டிப்பாடி, இளைஞர் கோஷ்டியொன்று எங்களைக் கடந்து எதிர்த்திசையில் சென்றது. சற்று முன்னர் நாங்கள் கடந்த ஆனையிறவு வரவேற்புப் பலகை முன்பாகவோ அல்லது தகர்க்கப்பட்டுக் கிடந்த இராணுவ டாங்கி முன்பாகவோ இறங்கி நின்று அவர்கள் படமெடுத்துக்கொள்ளக் கூடும்.

‘டேய்.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பேர் என்ன..? ” வரும் வழியில் இயக்கச்சிக்கு பிரியும் வழியில் இருந்த அந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி நான் கேட்டேன். ஒன்றிரண்டு மரநிழல்கள் தான். அவற்றின் கீழ் பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். பெயர்ப்பலகை கூட இல்லை எப்பிடியும் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்குள்ளை தான் எல்லோருக்கும் இருக்கும். மோட்டர் சைக்கிளை நிறுத்தச் சொல்லி விட்டு நான் இறங்கிக்கொண்டேன். மர நிழல் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களும் இடம் பெயர வேண்டியிருக்கும். எப்பிடியும் உச்சி வெயில் தலையைப் பிளக்கும்.

‘என்ன.. இங்கை நிறைய பள்ளிக்குடங்கள் இப்படித்தான்.. கட்டடிடங்களெல்லாம் சிதைஞ்சு போச்சு.. கட்டித்தருவாரும் இல்லை. கணக்கெடுப்பாரும் இல்லை..அதுக்காக.. விடமுடியுமே..? ” நகுலனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.

‘நகுலா.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பெயர் என்னண்டு கேட்டன்.”

‘ஓ.. அந்த இயக்கச்சிப் பள்ளிக்குடமோ.. தெரியேல்லையடா.. வேணுமெண்டால் வரேக்கை கேட்பம்” என்றவன் ‘இல்லை கேட்க முடியாது” என்றான்.

‘ஏன்..”

‘பின்னேரம் அந்தப் பள்ளிக்குடம் இருக்காது. நாளைக்கு காலமை தான் இருக்கும்..”.
உண்மைதான். மாலையில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததென்று அடையாளமே தெரியாமலிருக்கும். பரந்தன் சந்திக்கு வந்தோம். எனக்கு கால் விறைத்திருந்தது. ‘நகுலன்.. கொஞ்ச நேரம் நிப்பாட்டு.. கால் விறைச்சுப் போச்சு.. ” நகுலன் நிறுத்தினான்.

‘சங்கீதா எங்கை நிற்பாள்..? வீட்டிலயா.. அல்லது..?”

‘ரண்டிடத்திலயும் போய்ப்பாப்பம். சரி ஏறு..” நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

‘சங்கீதாவை எப்பிடித்தெரியும்..?” நான் அவனுக்கு பதில் சொல்ல வில்லை. அவனும் திருப்பிக் கேட்கவில்லை.

சங்கீதாவிற்கு முழங்காலுக்கு கீழே ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்ததை முதல் சந்திப்பிலேயே நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் படு இயல்பாக ஊன்று கோலுடன் அவள் நடப்பதும், சில சமயங்களில் ஓடுவதும், கால் மேல் கால் போட்டுக்கொள்வதும்.. எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு வேளை மனசுக்குள்ளே வலியிருக்குமோ..? ஆறேழு மாதங்களுக்கு முதல் ஏதோவொரு நிகழ்வில் எங்கேயிருந்து வாறியள் என்று அவள் கேட்டபோது தான் அவள் அறிமுகமானாள். பதில் சொன்னபோதே அவள் முகத்தில் ஏதோ ஒரு ஏளனம் தோன்றியது உடனடியாகத் தெரிந்தது. அதனை நேரடியாகச்சொல்லும் வரை காரணம் கேட்க முடியவில்லை. அன்று மாலை வந்து அழைத்த போது கேட்க முடிந்தது.

“தமிழ் வளக்கிறவரே.. ரீ குடிக்க வாங்கோ..” எழுந்து போகும் போதே கேட்டேன். “அதென்ன தமிழ் வளர்க்கிறவர் எண்டு நக்கலாய்….?”

“தமிழைச்சாகவிடாமல் வளக்கிறது நாங்கள் தான் எண்டு மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லுறது நீங்கள் தானே…..நீங்கள் எண்டால் நீங்கள் இல்லை..உங்களைச் சார்ந்த பிரதேசம், சூழல்..இதெல்லாம் தான்..”

உண்மைதான் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும்… அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்க ரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக்கேட்டது.

“அப்படி வளர்க்கிறதிலை என்ன பிழை.”

“ஒண்டு சொன்னா பிழையா நினைக்கக்கூடாது. தமிழை வளக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..? என்ன உரிமை இருக்கு..?தமிழ் எண்டுறது வெறும் மொழி மட்டுமில்லை. அது சார்ந்த இனம் பண்பாடு பொருளாதாரம் அரசியல் எல்லாம் தான்.. நீங்கள் என்னத்தை வளர்த்திருக்கிறியள்..? ”

இதுநாள் வரை எனக்குள்ளேயே பொங்கி எழுந்த கேள்விகள் தான் அவை. இப்போது இன்னொருவரிடமிருந்து வந்தது. வெளியே சொல்லாது உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ‘சரியான வாய்க்காரி..’ அதற்கடுத்த அடுத்த நாட்களில் அவள் எழுதிய சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஒரு கொப்பி முழுதும் எழுதப்பட்ட கவிதைகளை அவளே கொடுத்தாள். ஒரு காலையில் ஓரமாயிருந்து புரட்டிக்கொண்டிருந்தபோது நடந்து வந்து முன்னால் அமர்ந்து கொண்டாள்.

தெருப்புழுதியில்
கந்தகம் மட்டுமே
கரைந்திருந்தது..
குழந்தைகளின் கூக்குரல்களே
காற்றலைகளை
நிறைத்திருந்திருந்தன

“என்ன கவிதைக்குள்ளை எதுகை மோனையை தேடுறியள் போலை கிடக்கு.. அதெல்லாம் கிடைக்காது…. எங்கடை கவிஞர் சொன்னது போல உள்ளே கொதிப்புறும் உலைமுகத்தின் வாய்மொழியில் புனைவுகள் இருக்காது. பொய்யான வேஷங்கள் இருக்காது. அது மாதிரித்தான் இதுவும்.. அதைவிட்டிட்டு சும்மா விழ விழ எழு எழு எண்டு வழ வழாவெண்டு எழுத எனக்கு தெரியாது. அப்படி எழுதுறாக்களுக்கு ஒரு பெயர் சொல்லட்டே.. சொல்லடுக்குக் கொத்தனார்கள். கவிதைக்கான வார்த்தைகளை தேடுவதிலேயே சொல்ல வந்த பொருளை மறந்து போகின்றவர்கள்..” அவள் சொன்ன எதுவுமே எனக்கு புதிய விடயமாகத்தெரியவில்லை. ஆனாலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘எங்கடை மண்ணிலை இருந்து எழுதுற எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்..” அது வரை பேசிக்கொண்டிருந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

‘எங்கை தெரியப்போது..? உங்களுக்கு சாண்டில்யனையும் ராஜேஸ்குமாரையும் உங்கடை பொம்பிளைப்பிள்ளையளுக்கு ரமணிச்சந்திரனையும் விட்டால் ஆரைத்தெரியும்..?”

‘இல்லை எனக்குத் தெரியும்..” என்றேன் நான்

‘உங்களுக்கு என்றால் நீங்கள் இல்லை..நீங்கள் சார்ந்த பிரதேசம்,சூழல் இவையெல்லாம் தான்..” மீண்டுமொரு முறை அவள் நினைவூட்டினாள். எனக்கு கோபம் எதுவும் வரவில்லை. ஆனாலும் குரலை கடுமையாக்கி வார்த்தைகளில் செயற்கையாய் சூடேற்றிச்சொன்னேன்.

‘இஞ்சை பாருங்கோ.. எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டுமென்றில்லை.. அது அவையின்ரை தேடலைப்பொறுத்தது. எல்லாத்தையும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும் எண்டு எந்த கொம்பனும் கட்டளையிட முடியாது..” கடுமையான எனது தொனி அவளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. ‘கொம்பன் இல்லை கொம்பி..” என்று அவள் சொல்ல அவளுடன் சேர்ந்து நான் தான் சிரிக்க வேண்டியதாய்ப்போனது.

‘உங்களை, உங்கடை எழுத்துக்களை ஏன் எங்களுக்கு தெரியாமல் போனதெண்டால் அதுக்கு காரணம் இஞ்சை நடந்த சண்டைதான். இவ்வளவு காலமும் நீங்கள் எங்களை வந்து சேரேல்லை. இனி வருவியள்..சரியான ஊடகங்கள் அந்த வேலையைச் செய்யும். சரி.. நீங்கள் எழுதின கவிதையளைத் தாங்கோ.. நான் கொண்டு போய்க்குடுக்கிறன்.. “

அவள் அப்போது கோபப்பட்டிருக்கக்கூடும். ‘என்ன..? நான் என்ன பப்ளிசிட்டிக்கு அலையிற ஆளெண்டு நினைச்சியளே..?” அவளது கேள்வியில் வேறு யாரோ அலைகிறார்கள் என்கிற தொனி அப்பட்டமாய்த் தெரிந்தது. அதனைக்கேட்டு பெரிசுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பப்ளிசிட்டியை விரும்பாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்குள் தொக்கி நின்றது.

அன்று மதியம் வரை அவள் நிறையப்பேசினாள். . ‘செம்மணியில் புதைக்கப்பட்ட சனங்களுக்காக அந்த இடத்தில ஒரு நினைவுச்சின்னம்..அல்லது ஒரு ஞாபகச்செய்தி எண்டு ஒண்டும் இல்லை. ஆனா எங்கையிருந்தோ வந்த ரேடியோக்காரன் அதிலை கட்அவுட் வைச்சு வரவேற்கிறான்.” என்று சினந்தாள். ‘யாழ்ப்பாண லைபெறறி எண்டுறது சுண்ணாம்பு அடிச்ச அந்தக்கொங்கிறீட் கட்டிடமில்லை. அது எங்கடை ஆத்மா..” என்று விளங்கப்படுத்தினாள். ‘எந்தவொரு ஆக்கிரமிப்பாளனுக்கும் மண்டியிடாமல் கடைசி வரை நின்று போராடிய பெருமை முல்லைத்தீவைத்தான் சேரும்..” என்று பெருமைப்பட்டாள். உறுதியாக, மாற்றுக்கருத்துக்களே கிடையாது என்ற ரீதியில் அவள் பேசிய விடயங்கள் பரவலாயிருந்தது

ஆண்கள் நிறைந்த சபைகளிலே அவர்கள் என்ன சொன்னாலும் வாய்மூடி மௌனிகளாகக் கேட்டுவிட்டு ஆட்டு மந்தைகள் போல் தலையசைத்துச்செல்கின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். ‘அவையும் அவையின்ரை வெட்கமும்..”
சில வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றின் முகப்பில் வைத்து ‘தேவையில்லாத வேலை பார்த்தாயெண்டா உதை வாங்குவாய்” என்று ஒருத்தி சொன்ன போது அவமானத்திற்குமப்பால் மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த மகிழ்ச்சி சங்கீதாவைச் சந்திக்கும் போதும் வந்தது.

மோட்டார் சைக்கிள் சடார் சடார் எண்டு வீதியின் குழிகளுக்குள் துள்ளித்துள்ளி விழுந்தது.

‘எங்கடை சர்வதேசத் தர வீதியிலை பயணம் செய்ய குடுத்து வைச்சிருக்கவேணும் நீ..” எனக்குச் சிரிப்பு வந்தது. பிரதான வீதியிலிருந்து விலகி மோட்டர் சைக்கிள் உள் வீதியொன்றில் நுழைந்து சங்கீதா வீட்டின் முன் நின்றது. நான் கேற்றைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன். நகுலன் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான். கேற் திறந்த சத்தம் கேட்டிருக்க வேண்டும் போல.. சங்கீதா தான் வந்து பார்த்தாள்.

‘அட.. வாங்கோ.. வாங்கோ..” அழைத்துக்கொண்டு போய் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நகுலனை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கிடுகுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்றலில் பூங்கன்றுகள் வரிசையாய் பூத்திருந்தன.

சங்கீதா இப்போதெல்லாம் அவள் ஊன்று கோல் இல்லாமலே நடக்கிறாள்
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். சங்கீதா சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசினாள். ‘எங்களில கன பிள்ளையள் கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியயெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப அனைத்துலக கல்வியறிவும் இருக்கிறது தான். அதை எங்களுக்கும் தரவேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை..”

‘சரி சங்கீதா.. நாங்கள் வரப்போறம்.. நகுலனுக்கு வேறை இடத்திலை அலுவல் ஏதோ இருக்காம்..” நான் புறப்பட்டேன்.

‘சரி..சந்திப்பம்..” மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார நகுலன் ஸ்ரார்ட் செய்தான்.

‘என்ன நகுலன்.. போச்சிப்போத்திலை எறிஞ்சிட்டீர் போலை..” பெற்றோலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் மோட்டர் சைக்கிளை ஸ்ரார்ட் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிறிற் அல்லது ரின்னர் அடைக்கப்பட்ட சிறு குப்பியைத்தான் சங்கீதா போச்சிப்போத்தல் என்றாள். இப்போது அது தேவைப்படவில்லை.

‘இல்லை. எறியேல்லை.. பத்திரமா வைச்சிருக்கிறன். திரும்பத் தேவைப்படுமோ தெரியாது..”

வரும் வழியில் நகுலன் பேசிக்கொண்டே வந்தான். இங்கையிருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையை சுமந்து கொண்டு தான் வாழுகினம். பாத்தாய் தானே படிக்கப்பள்ளிக்குடம் இல்லை.. சரியான வேலையில்லை. யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கியிருக்கு..? கையை இழந்து காலை இழந்து எத்தனை ஆண்கள்…பெண்கள்… “
நான் அமைதியாகவே வந்தேன். ‘இப்பிடி அங்கவீனமான ஆண்களைப்பற்றி பெண்களைப்பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நாளைக்கு கலியாணம் எண்டொரு நிலை இவைக்கு வரேக்கை கலியாணத்தின்ரை தேவையை வேறை விதமா விளங்கிக்கொள்கிற ஆக்களே நிறைய இருக்கிற எங்கடை சமூகத்திலை இருந்து அங்கவீனமானவர்களை கலியாணம் கட்ட எத்தனை பேர் முன்னுக்குனு வருவினம்..?”

‘நகுலன் நிப்பாட்டு நான் ஓடுறன்..” நகுலன் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் மோட்டர் சைக்கிளை ஓட்டத்தொடங்கினேன். ஆரம்பித்து விட்ட ஆனையிறவுப் பெருவெளியின் காற்று முகத்திலடித்தது. சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூமழை தூவியது..இப்போது நான் தான் பாடினேன். என்னாலும் பாட இயலும்.
November 13, 2004

By

Read More

நம்மைப் பிடித்த …………… போயின..

‘எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. ” சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள்.

சாரகன் அமைதியாய் நின்றான்.

‘அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ..” எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.

‘ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா..” நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.

‘சொல்லுங்க”

‘இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?”

அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..

“இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா..”

“உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..

“எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா..”

“உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..?

ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்… நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்..

கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.

சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..

‘சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா…” சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.

வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.

‘அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க..” சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.

‘சாரகன் உங்க நம்பர் என்ன..?” ஒரு முறை கேட்ட போது சொன்னான்.

‘வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்” என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.

‘நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?” தொடர்ந்து கேட்டாள்.

‘ம்.. நிறைய..”

தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.
* * *

‘என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?”

‘இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்..” சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.

நிரோஷா சிரித்தாள்..

‘நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்… ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. “

சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான்.

இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.

‘என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க..”

சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான்.

ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..?

வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. ” என்று தொடர்ந்தவனை ‘நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க..” என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.

‘அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்..” கை குவித்துச் சொன்னான்..

‘கீப் இற் அப்..” என்றாள் நிரோஷா

‘உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு..” இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.

இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.

‘இந்தச்சிரிப்புத்தானே….” என்றெழுந்த மனதை ‘ச்சே.. சும்மாயிரு..” என்று சாரகன் அடக்கினான்.
* * *

அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.

தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..

‘ஹலோ..”

‘ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. “

சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. ‘சின்ன வயது தானே.. அது தான் அப்படி..” என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..

‘சொல்லு.. ” தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

‘என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?”

‘குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு..”

‘உங்கடை பிறந்த நம்பர் என்ன..”

உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.

‘ஏன்.. கேட்கிறாய்..”

‘நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்… சொல்லுங்கோ.. என்ன நம்பர்..”

‘இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. ” என்றான் சாரகன்.

‘பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ..” அட்சயா விடாது கேட்டாள்..

‘ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்..” சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.

நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.

‘என்னடா..” என்று கேட்டான் சாரகன்.

‘அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்..”

சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..

‘நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி..” ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

‘முழுப்பாட்டும் என்னண்ணா..”

‘கொஞ்சம் பொறு..எடுத்தாறன்” சாரகன் உள்ளே போனான்.
October 18, 2004

By

Read More

இலங்கை வானொலியில் Comedy Time

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தன் தமிழ் ஊடாக இலங்கையின் தமிழர்கள் பற்றிய, அவர்கள் பேசுகின்ற மொழி பற்றிய நன்மதிப்பை அண்டை அயல் நாடுகளில் ஏற்படுத்தித் தந்தது என்பது வரை மகிழ்ச்சியாயிருக்கிறது.

சந்தோசம்.

எமக்கெல்லாம் அதன் தமிழ்ச்சேவை ஒலிபரப்புக்களை கேட்கின்ற வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனாலும் அதன் வர்த்தக சேவை ஒலிபரப்பு எம்மைக் கடந்து தான் தமிழகம் போகும். தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகமானதே வர்த்தக சேவை ஒலிபரப்பிலிருந்து தான்.

யாழ்ப்பாணத்திலிருந்த கடைசி காலம் வரை சினிமா பாடல்களுக்கு வர்த்தக சேவையைத் தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. (அத்தோடு இரவு 8.45 க்கு திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் தூத்துக்குடி வானொலியில் எண்ணி 3 பாடல்கள் போடுவார்கள். அதனையும் நம்பியிருந்தோம்)

நன்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம்.

ஆனால் அதன் செய்தியறிக்கை பற்றி பேசுவதானால்,

மன்னிக்கவும்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் மக்களை மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான பின்வாங்கல்களுக்கும் உட்படுத்திய பெருமை அதன் செய்தியறிக்கையைத் தான் சாரும்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த வானொலி பல பிரதேசங்களை (பல தடவைகள்) விடுவித்திருக்கிறது.

ஒவ்வொரு சண்டைக் களத்திலும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைய பல நூற்றுக்கணக்கான புலிகளை அந்த வானொலி கொன்று குவித்திருக்கிறது.

யுத்தங்களில் அகப்பட்டு செத்துப்போகின்ற அப்பாவி மக்கள் அத்தனை பேரையும் அந்த வானொலி பயங்கர வாதிகள் ஆக்கியிருக்கிறது.

திட்டமிடப்பட்ட அதன் உளவியல் தாக்குதல் ஆரம்பத்தில் ஏகத்துக்கும் மன உளைச்சலைத் தந்தது. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என சஞ்சலப்பட வைத்தது.

அதன் அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பொய்ப் பிரசாரம் கோபம் கொள்ள வைத்தது.

இறுதியில் அவற்றிற்கெல்லாம் நாம் இயைவாக்கம் அடைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி நேரம் நமக்கெல்லாம் Comedy Time ஆகிப்போனது. அதன் செய்திகள் நம்மை வாய் விட்டு சிரிக்க வைத்தன.

1995 ஜுலையில் இராணுவம் எனது சொந்த ஊரான வட்டுக்கோட்டை உட்பட யாழ்ப்பாணத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை முன்னேறிப் பாய்தல் என்ற இராணுவ நடவடிக்கை மூலம் தன் கட்டுப்பாட்டினில் கொண்டு வந்திருந்தது.

அடுத்த 5 வது நாள் புலிகள் புலிப் பாய்ச்சல் என்ற எதிர் நடவடிக்கை மூலம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றினார்கள்.

இருப்பினும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை வானொலியின் செய்தியில் எனது ஊரும் இன்னும் பிற ஊர்களும் இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டின் கீழேயே இருந்தன. இராணுவத்தினர் எமக்கு மறுவாழ்வு??? அளிக்கும் செயற்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனராம். மக்கள் அவர்களோடு அன்னியோன்னியமாக உறவு கொண்டார்களாம். புலிகளின் அராஜகங்கள் பற்றி மக்கள் கதை கதையாய்ச் சொன்னார்களாம்.

எங்களுக்கு சிரிப்பு வராதா பின்னே?

எங்கு குண்டு வீசினாலும் எங்கு ஷெல் விழுந்தாலும் எந்தக் குழந்தை செத்துப்போனாலும் அன்றையை மாலைச் செய்தியில் புலிகளின் ஆகக்குறைந்தது ஒரு முக்கியஸ்தர் கொல்லப்பட்டார் என்ற செய்தி கண்டிப்பாக வரும்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பற்றிய ஒரு சுவையான கதை இருக்கிறது.

பூலோகத்தில் பொய் களவு சூது வாது எல்லாம் நிறைந்து விட்டன. பூலோக பிரதி நிதி ஒருவர் இறைவனிடம் செல்கின்றார்.

இறைவா நமது தேசத்தில் பொய்யும் புரட்டும் புரண்டோடுகிறது. நீ கண்டும் காணாதும் போல இருக்கிறாயே என்று அவர் இறைவனிடத்தில் நொந்து கொண்டார்.

பக்தா, கவலை அறு. அங்கு நடக்கும் எல்லாவற்றையும் நான் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன் என்று இறைவன் சொல்ல எப்படி இறைவா என்கிறார் பக்தர்.

வா என்று அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கின்றார் இறைவன். அங்கே ஒரு சுவர் முழுக்க சிவப்பு விளக்குகள்.

பக்தருக்கு எதுவும் புரியவில்லை. ஆச்சரியத்தடன் அவர் இறைவனைப் பார்க்கின்றார். இறைவன் விளக்கம் கொடுக்க தொடங்கினார்.

பூலோகத்தில் யார் பொய் சொன்னாலும், அவர்கள் சொல்லும் பொய்யின் அளவுக்கேற்ப இங்கிருக்கின்ற சிவப்பு விளக்குகள் எரியும். அதன் படி நான் அறிந்து கொள்வேன் என்கிறார் இறைவன்.

திடீரென்று அங்கிருந்த அத்தனை சிவப்பு விளக்குகளும் எரியத் தொடங்கின. பக்தருக்கு குழப்பம்.

இறைவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு அமைதியாக சொன்னாராம். வேறொன்றுமில்லை. இலங்கை என்கிற நாட்டில் அவர்களுடைய அரச வானொலியில் இப்போது மாலைச் செய்தி ஆரம்பித்திருக்கிறது. செய்தி முடியும் வரை அத்தனை சிவப்பு விளக்குகளும் எரிந்து கொண்டுதானிருக்கும்.
October 15, 2004

By

Read More

பிரிவுகள்


By

Read More

× Close