அது அடுத்தவன் நெருப்பு!

காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.
நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.
ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.
சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.
நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு பேசினான்.
தனக்கான கல்லறை யார் மனதிலும் வந்து போகாதென்பது அவனுக்குத் தெரியும்.
ஒரு நாளில்
தயாரானான்
புறப்பட்டுப்..
போனான்.. திரும்பவில்லை

+ + +

தடைகள் தகர்த்தெறியப்பட்டன என இவன் தலையங்கம் எழுதினான்.
அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்தான்.
முக்கிய திருப்பங்களை குறித்தான்.
இறந்த நிகழ் மற்றும் எதிர்காலங்களில் இருந்து தரவுகள் சேர்த்தான்.
எழுத்தெங்கும் தன் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வுத்திறன் வியாப்பித்திருக்க விரும்பினான்.
முடித்து அனுப்பி வந்து சேரும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். –21/07/2002

முதல்ப் பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
மிக நல்ல ஆய்வு. மிகத் திறமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இரண்டாவது பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
உங்கள் ஆய்வு புதிய தகவல்களைத் தந்தது.. உங்களுக்குள் இத்தனை திறமைகளா.. பாராட்டுக்கள்

இவனுக்கு மனது குளிர்ந்தது. இப்போது நன்றிப் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்தான்.
பூச்சியத்துக்கு கீழான குளிரில் உடலும் குளிர்ந்தது. விறகெடுத்து மூட்டி வரும் நெருப்பில் கதகதப்பை உணர்ந்தான்.

அந்த விறகுகள் இவனுடையது இல்லை. – 05/04/2007

By

Read More

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை போக மிகுதியாக உள்ள ஒற்றை முன் சுவரோடு, ஏதோ இருந்திட்டு போகிறேன் என்பது போல காட்சியளிக்கிறது.

95 இன் ஒரு காலத்தில், ஒக்ரோபர் இடப்பெயர்வுக்கு சில காலமே முன்பாக, கோட்டையை அண்டிய பகுதிகளில் பதுங்கு குழிகள் வெட்டுவதற்காக, பொடிப்பயல்களாக இருந்த நாமும் போயிருந்தோம். போயிருந்தது மட்டும் தான், மற்றும் படி பராக்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அதிலும் மதியம் புரியாணி தரப்படும் எனச் சொன்னதனால் மதியம் வரை காலங் கடத்த வேண்டிய புறச் சூழ்நிலை வேறு. (கிடைத்தது பாணும் பருப்பும் தான்:()

அப்போது தான் விரிவாக வீரசிங்கம் மண்டபம், றீகல் தியேட்டர், யாழ் நூல்நிலையம் என அச் சூழலில் அமைந்த பகுதிகளை சுற்ற முடிந்தது.

றீகல் தியேட்டரின் முன் சுவரில், 90 இல் (என நினைக்கிறேன்) ஓடிய இறுதித் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அது ஒரு ஆங்கிலப் படம். அது தவிர அது ஒரு வயது வந்தோருக்கான திரைப்படம் என்பது கூடுதல் செய்தி.

எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.

பிற்காலங்களின் அறிதலில் இத் திரையரங்கில் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களே திரையிடப்பட்டன எனவும் அக்கால இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து கூட இரவுக் காட்சிகளுக்கு வந்து சென்றதாயும் கேள்விப் பட்டேன்.

யாராவது இருக்கிறீங்களா.. :))

(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)

By

Read More

சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.



By

Read More

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்

ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.

ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.

செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.

ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.

நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.

எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.

ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.

அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை. இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.

நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள். ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.

நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.

ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?

அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.

அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா…

ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.

ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களுடைய ஞாபகம்தான் ஆனந்தன் அண்ணா.

By

Read More

ஒட்டுக் கேட்கலாம் வாங்க..

இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்….. ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.)

ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக இருப்பதனாலும் வலைப்பதிவில் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உருப்படியான வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதனாலும் அதற்கேற்ப வெட்டிக் கொத்தி தொகுக்கும் போது சில வேளைகளில் தொடர்ச்சித் தன்மை இல்லாது போகலாம். ஒவ்வொரு தடவையும் பயனுள்ள வகையில் ஏதாவது பேச வேண்டும் என நினைப்பது உண்டு.. என்ன செய்ய.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்….



By

Read More

× Close