ஆறா வடு – பொ.கருணாகரமூர்த்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி.

(பதிவான சில குறிப்புகள்போல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது சரியல்ல. நாவல்கள் நம் அறிவைப் பெருக்குவதற்காகப் படிக்கப்படுவனவும் அல்ல. இது ஒரு அனுபவப்பகிர்வு. ஆசிரியனின் அனுபவத்தினதும் ஆவேசங்களினதும் கனவுகளினதும் ஒரு கலவை. போர்நடக்கும் ஒரு நாட்டில் நான்கு ஆயுதப்படைகளின் மத்தியில் வாழநேர்ந்த, ஆயுதத்தைத் தூக்க நேர்ந்த ஒரு இளைஞன் தான் அனுபவித்ததை, பார்த்த போரிடும் உலகத்தின் நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றான்.

// இனியில்லை என்ற அளவுக்கு எலும்பும்தோலுமாய் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்தான் (பக் 105.) //

// தூரவாகப்போய் நின்றுகொண்டார்கள் (பக் 15.) //

என்பதுபோன்ற பேச்சுமொழியிலான வரிகளைப்படிக்கையில் தாயகத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு போராளி நண்பன் எனக்கு எழுதியிருக்கக்கூடிய இயல்பான கடிதங்கள்போலவும் அவனே அருகிலிருந்து பேசுவதுபோலவும் விபரிப்புகள் என் நெஞ்சுக்கு அத்தனை நெருக்கமாக வந்துவிழுகின்றன. இங்கே ஆசிரியன் நாவலின் மொழிக்கோ, பாத்திரவார்ப்புகளுக்கோ, புனைவுத்திக்கோ அதிகம் வினைக்கெட்டதாகத் தெரியவில்லை. இன்னும் இயல்பான அங்கதம் தோய்ந்த நடையில் கதையாடிச்செல்வதுவும் வாசிப்பின் சுவையை அதிகரிக்கிறது.

இயைபுவாழ்வை வாழ்ந்திருந்த சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு பல்வேறுமுனைத்திறனுடைய போராட்ட சக்திகளால் உள்ளிழுக்கப்பட்டார்கள், பிழியப்பட்டார்கள், அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதுவும், வாழ்வின் அநித்தியம், அவதி, அவலங்கள் என்பனவும் சிக்கின்றி இப்புதினத்தில் வார்த்தை வயப்படுகின்றன.

‘அண்ணைக்கு எல்லாம் தெரியும்’ என்று இருந்தவர்களைவிடவும் ‘அண்ணைக்கு ஒன்றுந்தெரியாது, பக்கச்சாவி இல்லாத வண்டியைத்தான் விரைந்து ஓட்டுகிறார்’ என்பதைத் தெரிந்திருந்தவர்களும் கையாலாகதவர்களாக, விதையடிக்கப்பட்டவர்களாக இருக்கவே பணிக்கப்பட்டனர்.

‘அவர்கள் கேட்டார்களில்லை.’ – முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான பேட்டியொன்றில் – கா.சிவத்தம்பி.

– சந்திரிகாவுடனான சமாதனம் முறிந்தபோது

‘களநிலமை அப்பிடீடா தம்பி முறிச்சேயாக வேணும்’ – புதுவை இரத்தினதுரை.

‘எமக்கு மாற்று வழிகள் இல்லை ’ – பாலகுமார்.

சந்திரிகாவுடன் நெருக்கமான, அவரின் கருத்தியல்களை அணுகக்கூடிய மாற்றுக்கருத்துக்களையும் பரிசீலனை செய்யவைக்கக்கூடிய நீலன் திருச்செல்வத்தைப் பயன்படுத்தி எமக்குச் சாதகமாக் எதையாவது பண்ணுவோமா ? ‘வேண்டாம் ஒரு பயலும். போட்டுத்தள்ளு அந்த மசிராண்டியையும்’.

தினவுமிகவெடுத்து அரசியல் அல்லாத காரணத்தைச் சாக்குவைத்து சந்திரிகாவுடனான சமாதானத்தைப்புலிகள் முறித்துகொண்டமையும், அதையுண்டான மக்களின் சினமும் நேரு அய்யாவின் வாய்மூலத்தால் பதிவுசெய்யப்படுகின்றது.

இன்னும் நாவலில் அங்கங்கே சில இடங்களில் பாய்ச்சல்களும் இடம்பெற்றுள்ளமையை ஒப்பத்தான் வேண்டும். ஒரு இளம்படைப்பாளனின் படைப்பில் இத்தனை நீர்மட்டம் பிடிக்கத்தான்வேணுமோ என ஒருகணம் தோன்றினாலும் இப்பாய்ச்சல்கள் என்னைச் சற்று உறுத்துகின்றன. ஒரு போராளி இளைஞனின் கதையாடல் என்கிறவகையில் சந்திரிகாவுடனான சமாதானத்துக்கும்- ரணிலுடனான சமாதானத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான்
1. யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டார்கள். (இதைப்பற்றி டி.சே.தமிழனும் குறிப்பிடுகிறார்)

2. முல்லைத்தீவில் வல்லிபுனம் செஞ்சோலை பாசறையில் முதலுதவிப் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட்ட 62 பேர்மீது விமானங்கள் குண்டுவீசிக்கொன்ற கொடூரநிகழ்வு.

3. நவாலி சென். பீற்றர் தேவாலயத்தின் அகதிகள் மீதான குண்டுவீசி 147 பேரைக்கொன்றதும் 360 பேரைப்படுகாயப்படுத்தியதுமான நிகழ்வு (இது ஓரிடத்தில் மிக லேசாகச்சுட்டப்டப்படுகிறது).

4. மணாலாறு தாக்குதலில் 185 பெண்போராளிகளின் இழப்பு.

5. ஆனையிறவுப்படைமுகாம் மீதான முதலாவது தாக்குதலில் 800 போராளிகள்வரையில் மடிய நேர்ந்தமை போன்ற பேரழிவுகள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருப்பதைச்சொல்லலாம்.

இன்னும் நாவலின் இறுதிப்பகுதியில் சகபோராளி ஒருவர் இயக்கத்திலிருந்து விடுத்துக்கொண்டுபோய் தன்காதலியைத் திருமணம் செய்துகொண்டு சாதாரண இயல்புவாழ்வுக்குத் திரும்ப விழையும்போது இயக்கம் அவருக்கு சிரமதான தண்டனை வழங்குகிறது. இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களைக்கொண்டு கொத்தடிமைகள் போல வேலைவாங்கப்பட்டு யாழ் கோட்டை உடைக்கப்பட்டதை யாம் அறிவோம்.

இவனும் தான் பலகாலம் இயக்கத்தில் பணியாற்றியதால் தனக்கும் திருமணஞ் செய்தலோ, இயக்கத்திலிருந்துவிடுபடுதலோ அத்தனை சிரமமாக இருக்காது என்றும் நினைக்கிறான். ஆனால் இத்தாலியின் திசையில் கடைசியாக வள்ளம் ஏறும்வரையில் பொலீஸில் பிடிபட்டுச்சிலகாலம் சிறைக்காவலில் இருப்பதெல்லாம் நடக்கிறது. இயக்கத்தைவிட்டு அவர்கள் அனுமதியுடந்தான் வெளியேறினானா, அல்லது தானாக வெளியேறுகிறானா என்கிற விபரணம் தரப்படாத அந்த இடமும் சிறு பாய்ச்சல்தான்.

சில நாவலாசிரியர்கள் நாவலை வெளியிட முன்னர் தயங்காமல் மென்போக்குடைய இலக்கியர்களிலிருந்து கறாரான விமர்சகர்கள் வரையில் வாசிப்புக்குத் தம் பிரதியைத் தருவதுண்டு. ஜெயமோகன் தான் அப்படிச்செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கட்டாயம் எல்லாரும் அப்படித்தான் பண்ணவேண்டுமென்று நான் சொல்லுவதாக இதற்கு அர்த்தமில்லை. ஆனால் அப்படியொரு முன்வாசிப்புக்கு இப்பிரதியும் உட்பட்டிருந்தால் இச்சிறு குறைகளும் பாய்ச்சல்களும் தவிர்க்கப்பட்டு இன்னும் செப்பனிடப்படப் பட்டிருந்திருக்கும்.

9000 கடல் மைல்களைக்கடந்து செல்லவேண்டிய ஒரு வள்ளத்துக்கு குறைந்தபட்ஷம் 2000 லிட்டர் டீசலாவது தேவைப்பட்டிருக்கும். நம்பகமான தொலையாடல் கருவிகள், அவசரகால/அபாய அறிவிப்புக்கருவிகள், மற்றும் 60 மனிதர்களுக்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கான உணவு போன்ற முன் தயாரிப்புகள் எல்லாம் இருந்திருக்கவேண்டும்.

நான் அறிந்த வரையில் சர்வதேசப்பதிவில் இல்லாத எந்த மீன்பிடிவகையிலான படகும் இத்தனை மனிதர்களுடன் சூயெஸ்கால்வாயைக் கடந்து பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தும் அதனைச் சும்மா வேதாரணியப் பக்கமாகப்போய்த் திரும்புவதற்கான ஒரு சிறுபடகைப்போலச் சித்தரித்திருப்பதும் சரியல்ல.

சிறந்த ஒப்புநோக்குமையால் பிரதியில் இரண்டொரு எழுத்துப்பிழைகளை மட்டுமே காணமுடிந்தது. இத்தனை கவனம் எடுத்து நூலை ஆக்கியிருக்கும் தமிழினிக்கு இன்னும் அழுத்தமான உயர்ந்த தாள்களில் நூலைப்பதித்திருக்கவும் முடியும். சயந்தனிடம் ஏதாவது காரணம் இருக்குந்தான், ஆனாலும் ‘ஆறாவடு’ என்கிற இத்தலைப்பு இந்நாவலோடு எந்தவகையில் பொருந்திவருகிறது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.

எரித்திரிய போராளிக்கு, ஈழப்போராளியின் செயற்கைக்கால் கிடைப்பதான தரிசனத்தில் அழகியலின் உயர்வோ, பிறழ்வோ, சறுக்கலோ எப்படியும் முடிப்பதற்கான ஆசிரியனின் உரிமையை மதிக்கவும் , புரிந்துகொள்ளவும் முடிகிறது.

கதையாடலை வாசகனின் நெஞ்சோடு அணுகிச் சொல்லத்தெரிந்து வைத்திருக்கும் இவ்விளையவனின் வருகை தமிழுக்கு நல்வரவு. சயந்தனுக்கு இன்னுமொரு சபாஷ் !

1 மே. 2012 பெர்லின்.

By

Read More

மகாப் பிரபுக்கள்

கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார்.

கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு அப்பால் விநாசித்தம்பியின் வீட்டுக் கிணறு இருந்தது.

ஐயாவிற்குப்பிறகு கனகுராசா கக்கூசுக்கு மேலுமொரு பெருமையைச் சேர்த்தார். ஊருக்கு மின்சாரம் வந்தபோது முதன்முதலாய் லைற் ஒளிர்ந்த கக்கூசும் அதுதான். அன்றைக்கு கக்கூசுக்குப் போன கனகுராசா “அன்னம்மா லைற்றைப் போடு” என்று கத்தினார். இருண்ட குகையில் தீபம் ஏற்றியதுபோல வெளிச்சம் அங்கு பரவியது. கனகுராசா இரு கைகளையும் மேலே குவித்து “சிவபெருமானே, செகசோதியாக இவள் எரிகிறாள்” என்று பரவசம் மேலிடக் கூவினார். அதற்குப் பிறகு, அவர் கக்கூசுக்குப் போவதற்கு (அதாவது வருவதற்கு) இரண்டு விடயங்கள் நிபந்தனைகள் ஆயின.
1. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சற்றுச் சூடான நீர் குடிக்க வேண்டும்.
2.பகலோ இரவோ காமாட்சி விளக்கு தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

கனகுராசாவின் ஐயா முன்னர் அரைச்சுவரில்தான் கக்கூசைக் கட்டினார். மேலே கூரையில்லை. எழுந்து நின்றால் நீதிமன்ற குற்றவாளிக் கூட்டுக்குள் நிற்பதைப் போலத் தோன்றும். கனகுராசரின் மகன் குமாரலிங்கம் வளர்ந்து பெரியவனாகி, அவனை ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பும் வரை அது அப்படியேதான் இருந்தது.

குமாரலிங்கத்திற்கு ஒரு பழக்கமிருந்தது. கக்கூசின் உள்ளே நுழைந்து ஓலையால் அடைத்த தட்டியினால் வாசலை அடைப்பான். அரைச்சுவர் அவனது இடுப்பளவில் முடியும். சுற்றும் முற்றும் கம்பீரமாகப் பார்ப்பான். பிறகு “கனம் கோட்டார் அவர்களே, நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றவாறு உட்காருவான். எப்போதாவது வயிற்றில் ஏடாகூடமாகி “போய்க்கொண்டே” இருந்த நாட்களில் கூட இந்தப் பழக்கத்தை அவன் கை விட்டானில்லை. வேகமாக வயிற்றைத் தடவியபடி “ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இந்த சட்டத்தைப் பேசுவோர். செய்தார்களா.. வாழவிட்டார்களா என் கல்யாணியை..”

கனகுராசர் முதலில் ஓலைத் தட்டிக்குப் பதிலாக கக்கூசுக்கு அரைக்கதவு ஒன்றினைப் போட்டார். தபாற்கந்தோர்களில் உள்ளதைப் போலிருந்தது அது. தகரக் கதவு. பல இடங்களில், துருவேறி கை வைத்தால் சொரிந்து விடும் என்பது போல அது இருந்தது. ஏற்பு ஆக்காமலிருக்க கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.

வாளியை மற்றக் கைக்கு மாற்றியபடி கனகுராசர் முறைத்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தெரிந்தன. வாளிக்குள் இருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக நிலத்தில் சிந்தி புழுதி மணலில் வட்டப்புள்ளிகளைப் போட்டன

“இங்கே ஒரு கிழவன் அடக்கிக் கொண்டு இத்தனை நேரமாக நிற்பதாவது தெரிகிறதா” என்று அவர் கத்தினார். பிறகு சற்றுக் குரலை அடக்கி “நான் உள்ளே போய்விட்டு வர எப்பிடியும் அரை மணித்தியாலம் ஆகும். அப்பொழுது கக்கூஸைப்பற்றி நன்றாக விவரிக்கலாம், எனக்கு இப்பொழுது வயித்தைக் கலக்குது. மூத்திரம் வேறு முட்டுது, ஆத்திரத்தைக் கிளப்பாமல் முதலில் என் பாத்திரத்தை வார்ப்புச் செய்” என்றார்.

பதிலுக்குக் காத்திராமல் நடந்தார். எழுபது வயதாகிறது. உடலில் சுருக்கங்கள் தோன்றியிருந்தாலும் நடையில் தளர்வில்லை. குறுகுறுவென்று வேகமான நடை. மத்தியான வேளைகளில் வாசிகசாலைக்குப் போவதாயினும், பின்னேரப் பொழுதில் கள்ளுக்குப் போவதாயினும் நடந்தே போய் வருவார். தவறணையில் அளவு கணக்கின்றிக் குடித்த நாட்களில் மட்டும் வேலிகளையும் மதிச்சுவர்களையும் தடவியபடி வீட்டுக்கு வந்து சேர்வார்.

அப்படியொருநாள், பின்னேர வெயில் எறித்துக்கொண்டிருந்தது. முடக்க முடக்கக் குடித்துவிட்டு வந்தவர் பாதையோர வேலிக்குள் தடுமாறிச் சரிந்தார். அரையில் கிடந்த வேட்டியும் அவிழ்ந்தது. கண்களுக்குள் வெள்ளையும் சிவப்பும் பச்சையுமாய் எல்லா வண்ணங்களிலும் புள்ளிகள் மின்னின. விழுந்து கிடந்ததை மூளை கிரகித்தது.

மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு இயக்க இளைஞர்கள் அவரைத் துாக்கி நிமிர்த்தினார்கள். கண்களைப் புழுந்திப் புழுந்தி இளைஞர்களைப் பார்த்தார் கனகுராசர். திரும்பவும் விழுந்து படுத்தார்.

கனகுராசரின் கக்கத்துக்குள் கை வைத்து மீண்டும் அவரைத் துாக்கி நிறுத்திய போது அவர் கீச்சிட்ட குரலில் சொன்னார். “விடுங்கோடா என்னை, எனக்கு பங்கர் வெட்டிற தெம்பில்லை. மண்வெட்டியைத் துாக்கவே முடியாது.”

“எணை, உங்கடை வீடெங்கயணை..”

“ஏன், எல்லாரையும் அள்ளிக் கொண்டு போப்போறியளே.. வீட்டில ஆருமில்லை. நான் தனிக்கட்டை”

போராளிகளுக்குச் சிரிப்படக்க முடியவில்லை. அருகிலாக சைக்கிளில் போனவரிடம் கனகுராசாவின் வீடு எங்கு இருக்கிறதென விசாரித்தார்கள், அவரைக் குண்டுக் கட்டாகத் துாக்கி கால்களை விரித்து மோட்டர் சைக்கிளில் இருத்தினார்கள். இரண்டு இளைஞர்களுக்கும் நடுவிலாக கனகுராசர் ஒரு பூனைக்குட்டியைப் போல இருந்தார். பின்னாலிருந்தவன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். வழி முழுக்கத் திமிறியபடி வந்தார். “இறக்குங்கோடா என்னை, மயிராண்டியளே..”

வீட்டின் வாசலில் அவரை இறக்கினார்கள். “வீட்டில ஆருமில்லயே..”

மனிசி ஓடிவந்தா, கனகுராசர் கொஞ்சம் தெம்பாகியிருந்தார். தலையைக் குனிந்தபடி உள்ளே போனார்.

கக்கூசிற்குள் உள்ளிருந்து கனகுராசர் பெருங்குரலெடுத்துச் சிரித்தார். “ஹாஹா ஹாஹா ஹா” கதவிடுக்குகளினால் சுருட்டுப் புகை வெளியேறியது. “பிடிக்காது, இப்படியெல்லாம் நடந்தது என்றால் எவனுக்கும் பிடிக்காது. நம்பமாட்டாங்கள். கனகுராசரின் கைலியை அவிழ்த்தெறிந்து விட்டு அவரின் ஆண்குறியில் ஏறி மிதித்தார்கள் என்றால் மனது நிறைகிறவர்களுக்கு இதெல்லாம் வெறும் மாயத் தந்திரமாய்த் தோன்றும்” என்று சத்தமிட்டவர், தனக்குள் “சீஸன் தெரியாதவன்” என்று முணு முணுத்தார்.

கக்கூசுக்குள்ளிருந்து இப்படிச் சத்தமாகக் கதைப்பது கனகுராசருக்கு பழகிவிட்டிருந்தது. எதையோ மறந்து திடீரென நினைவு வந்தவராக உள்ளிருந்து அவர் கத்துவார்.

“அந்த அரைப்பைக் காய்ச்சு,”

“எண்ணெயைப் பதமாச் சுட்டு கிணத்தடிக்கு கொண்டுவா”

“சுருட்டணைஞ்சு போச்சு. நெருப்பெடுத்து வாறியே”

இதனாலேயே குமாரலிங்கம், இவர் கக்கூசுக்கு லைற் போட்ட அடுத்தநாள், வெளிச்சுவரில் “ஒளி, ஒலி ஏற்பாடு கனகுராசு” என்று எழுதியிருந்தான். உள்ளே “தயவு செய்து அமைதி பேணவும்” என்றும் அவனால் பள்ளிக்கூட சோக் பீஸினால் எழுதப்பட்டிருந்தது. அவன் இருக்குமட்டும் பெரிதாகத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு “தயவு செய்து அமைதி பேணவும்” என்பதை வாஞ்சை மிகுந்து விரல்களால் கனகுராசர் தடவுவார். குமாரலிங்கம் அவருக்கு ஒரேயொரு பையன். அடைத்துக் கொள்வதைப் போலிருக்கும். மனதுதான். எப்போதாவதுதான் கக்கூசு அடைத்துக் கொள்ளும்.

கக்கூசுக்கு முழுச்சுவர் கட்டி கூரைபோடுகிற நிலை வந்தபோதும் அவர் குமாரலிங்கத்தின் கை பட்ட எழுத்துக்களை அழியாது பாதுகாத்தார். மேசன் வேலைக்கு வந்த பெடியன், “ஓமோம், தஞ்சாவூர் கோவிலில் ராசராசன் கல்வெட்டு” என்று நக்கலடித்தபோதும் “உனக்கொண்டும் தெரியாது. நான் சொல்வதைச் செய்” என்று அவனைத் திட்டினார்.

உண்மையில் கனகுராசர் கக்கூசை இரண்டு தடவைகள் புனரைமைத்தார். முதற்தடவை சீமெந்து வரத்து இருக்கவில்லை. வடக்கிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் பதிலாக, கல்லும், சுண்ணாம்பும், கள்ளிச்சாறும், சர்க்கரையும் கலந்து கல்லறுத்து அடுக்கலாம் என்று ராமசாமி மேசன் சொன்னார். கனகு ராசருக்கு அதில் பெரிதாக நம்பிக்கையிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் அப்படித்தான் கட்டியிருந்ததாகவும், சண்டை நேரம் அதை ஆட்லறியாலேயே உடைக்க முடியாமல் பெடியள் திணறியதாகவும் ஊருக்குள் ஒரு கதையிருந்தது. சுவரில் ஓட்டையைப் போட்ட ஆட்லறிகள் ஒவ்வொன்றும் முனை மழுங்கி கீழே அகழியில் விழுந்து “புஸ்..” என்ற இரைச்சலோடு ஆறி அடங்கினவாம்.

நிறைவெறியில், கணேசுவின் வீட்டுக்குள் புகுந்து அவனின் மனைவியின் கையைப் பிடித்து இழுத்த பொன்னம்பலம் மேலும் ஒரு கதை சொன்னான். காவல்துறை அவனை இழுத்துச் சென்று கேஸைப் போட்டு ஆறு மாதம் உள்ளே தீட்டியது. அவர்களின் நீதிமன்றில் ஓர் இளம் பெண்ணே நீதிபதியாயிருந்தார். முப்பது வயதுகளிருக்கும். பொன்னம்பலம் அவரைப் பார்த்து “பிள்ளை, என்ரை மனிசியும் பூப்போட்ட சட்டைதான் போட்டிருக்கிறவ. அதுதான் குழம்பிவிட்டேன். பெரிசு படுத்தாதேயும்” என்ற பிறகு நீதிபதி ஆறுமாத கடூழியத் தண்டனையை அவனுக்கு வழங்கினார்.

தண்டனை முடிந்து வந்த பொன்னம்பலம் கனகுராசரிடம் கோட்டைச் சுவர் ஒவ்வொன்றும் கருங்கல்லைப் போல இருந்தன என்றான். ஒரு முழம் உடைக்க ஒரு நாட் சென்றதென்று கண்களை அகல விரித்துச் சொன்னான். அவனது உடல் வற்றிப் போயிருந்தது. “பூழலி மக்கள்” என்று திட்டினான். பிறகு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “நான் ஒல்லாந்தரைச் சொன்னேன்” என்றான்.

இதற்குப் பிறகே கனகு ராசர் கக்கூசையும் ஒல்லாந்தர் பொறிமுறையில் கட்ட இணங்கினார். மேசன் ராமசாமி எங்கிருந்தோ சிப்பிகளைச் சுட்ட சுண்ணாம்புச் சாக்குகளை கொண்டு வந்து இறக்கினார். கடற்கரை வெளியில் நின்ற நாகதாளி கள்ளிச் செடிகளை அடியோடு வெட்டிவந்தார்கள். சர்க்கரைக்குத்தான் தட்டுபாடாக இருந்தது. அந்தக் காலத்தில் தேனீரில் சீனிக்குப் பதில் சர்க்கரையைத்தான் நக்கிக் குடித்தார்கள். சங்கக்கடையில் வாங்கியது போக ஒன்றிரண்டு கடைகளில் மொத்தம் ஏழு கிலோ சர்க்கரைதான் கிடைத்தது. சர்க்கரைப் பையைப் பிரித்து சுண்ணாம்பில் கொட்டிய போது கனகு ராசரினதும் அன்னம்மாவினதும் வயிறுகள் ஒரு சேர எரிந்தன.

ராமசாமி மேசன் பதமாக சர்க்கரையும் சுண்ணாம்பையும் கல்லையும் மண்ணையும் கள்ளிச் செடிச் சாற்றையும் தண்ணீர் விட்டு கலந்தார். கற்கள் அரிந்தார். நான்கு நாட்களின் பிறகு கற்கள் காய்ந்திருந்தன. அதிலொன்றைக் கைகளில் ஏந்திய ராமசாமி மேசன், “யாழ்ப்பாணம் கோட்டைக்கும் உன்ரை கக்கூசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான், அதுக்கை ஆமி இருந்தவன். இதுக்கை நீ இருக்கப் போறாய்” என்றார். “ஒவ்வொரு கல்லும் வைரம் மாதிரி வந்திருக்கு..”

கனகு ராசாவிற்கு புளுகம் தாங்க வில்லை. பின்னேரத்திற்கிடையில் ராமசாமி மேசன் முழுச சுவற்றினை எழுப்பி முடித்திருந்தார். இரண்டொரு நாளின் பிறகு மேலே சீற் போடலாம் என்றார்.

அன்றைக்கு இரவு நல்ல மழை பெய்தது. கனவில் கக்கூசிற்கு குடிபூரல் நடாத்துவதைப் போன்றதொரு விநோதமான கனவை கனகுராசர் கண்டார். அத்திவாரத்திற்கு யானைமிதி மண்ணைச் சேர்க்கவில்லை என்று குடிபூரலுக்கு வந்த யாரோ குறைப்பட்டுக் கொண்டார்கள். நிறைய மொய் சேர்ந்தது. விநாசித்தம்பி ஆயிரம் ரூபாய் போட்டது கனகுராசருக்கு ஆச்சரியமாயிருந்தது. “உலகம் அழியப்போகுது..”

காலையில் கக்கூசின் அரைவாசி முழுதும் அழிந்திருந்தது. அதன் கரையெங்கும் கற்கள் சொரிந்து விழுந்து பாதி நீரில் கரைந்தும் மிகுதி கரையாதும் இருந்தன. சுண்ணாம்புக் கூழ் நிலமெங்கும் வெள்ளையாய் ஓடியது. கரைந்தொழுகிய கற்களுக்குள் சிறு சிறு சர்க்கரைக் கட்டிகள் முழிப்பாய்த் தெரிந்தன. அன்னம்மா தலையில் கைவைத்து உட்கார்ந்தாள்.

“அருமந்த சர்க்கரை, அவ்வளத்தையும் வைரவருக்குப் பொங்கிப் படைச்சிருக்கலாம்.”

கனகுராசர் அடுத்த நாட்களில் ராமசாமி மேசனைத் தேடித்திருந்தார். ராமசாமி கூலிக்காசும் வாங்க வராமல் எங்கோ மறைந்தார்.

அதற்குப் பிறகு, நீண்ட காலத்தின் பிறகு இரண்டாவது தடவையாக ஒரிஜினல் சீமெந்தில் கனகு ராசர் கக்கூஸைக் கட்டி முடித்தார்.

0 0 0

குமாரலிங்கம் வரப்போகிறான். குழந்தை குட்டிகளோடு வரப்போகிறான். கனகு ராசர் பொங்கிப் பிரவாகித்தார். அன்னம்மா உள்ள நாட்டுப் பணியாரங்களைச் செய்து முடித்தார். கனகுராசர் குமாரலிங்கத்தையும் பேரக்குழந்தைகளைப் பற்றியுமே அதிகம் கதைத்தார். அன்னம்மாவிற்கு அது என்னவோ போலிருந்தது. ஒருநாள் கேட்டு விட்டாள்.

“என்ன இருந்தாலும் எங்கடை மகனை நம்பி வந்த பெட்டை, நீங்கள் அதோடை நல்ல வாரப்பாடு இல்லை.”

“நீ, ஆரைச் சொல்லுறாய்” என்று அன்னம்மாவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் கனகுராசர்.

“மருமகளைத்தான்.. மகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யிறியள், அவளுக்கு என்ன பிடிக்கும் என்று ஒரு வார்த்தை என்னட்டைக் கேட்டீங்களே.. ”

கனகு ராசர் அமைதியாக இருந்தார். வெறுமையான பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. முகட்டைப் பார்த்து வெறித்தார். “ம்.. எனக்கும் கவலைதான் அன்னம்மா.. என்ரை மனசு தவிக்கிற தவிப்பு ஆருக்கு விளங்கும்.. ம்.. ”

அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிறார்”

அன்னம்மா எதுவும் புரியாமல் விழித்தாள். மருமகளின் பெயர் கவிதா தானே.. இவர் எதையோ மறைக்கிறார். மகன் வரட்டும் அவனையே கேட்டு விடுகிறேன்..என்று நினைத்துக் கொண்டாள்.

கனகுராசர் அதே கக்கூசிற்குள் பழைய மாபிள் குழியைக் கொத்திக் கிளறி விட்டு புதிதாக ஒரு கொமேட் கட்டினார். ராமசாமி மேசன் தான் வேலை செய்தார். பழைய கோபமெல்லாம் மறைந்து இப்பொழுது அவர் நல்ல வாரப்பாடு. வேலை முடித்து தண்ணீர் இணைப்பையெல்லாம் சரிபார்த்து ஒருதடவை அழுத்தினார். “ஸ்…” என்ற சத்தத்தோடு அருவிமாதிரி தண்ணீர் கொட்டியது. “சும்மா வழுக்கிக்கொண்டு போகும்” என்றார் ராமசாமி.

0 0 0

குமாரலிங்கம் வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. பேரப்பிள்ளைகளுக்கு திறந்த முற்றமும் பின்கோடியும் புதுமையாக இருந்தன. கண்டபடிக்கு ஓடித்திரிந்து விளையாடினார்கள். அவர்களின் குழப்படியில் வீடு இரண்டாகியது. அன்னம்மா அவர்களை துாக்கி வைத்துக் கொஞ்சினாள். மருமகள் தான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

ஒருநாள், அது நடந்தது. குமாரலிங்கம் வெளிக்குப் போய் வந்தான். கனகு ராசர் அவனைப் பெருமை பொங்க பார்த்தார். “எப்பிடி” என்னுமாற்போல இருந்தது அந்தப் பார்வை. “ஒரு மாதிரி இந்தக் கக்கூஸை முழுசாக் கட்டி முடிச்சிட்டன்”

குமாரலிங்கம் தகப்பனை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தான். “இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லயோ.. பழைய நிலப்பிரபுக் கூறுகளை இன்னமும் கொண்டலைகிறீர்களே.. ”

“உங்களுக்கென்று காணி, உங்களுக்கு என்று வீடு, உங்களுக்கென்று கக்கூசு, எல்லாமே நிலச்சுவாந்தர்களது மனநிலை. உங்கடை மகன் என்று சொல்லவே வெட்கமாயிருக்கு..” என்று குமாரலிங்கம் சொல்லி முடித்தபோது கனகு ராசர் நெஞ்சைப் பொத்திக் கொண்டு சரிந்தார்.

அவரை கட்டிலில் வளர்த்தியிருந்தார்கள். குமாரலிங்கம் அவரைப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். ஒருவார்த்தை பேசினான் இல்லை. கனகுராசர் அவனை அப்பாவியாப் பார்த்தார். கண்களில் நீர் கோர்த்திருந்தது. “ஒரு கக்கூசு கட்டியது குற்றமாய்யா..” என்ற சிறுபிள்ளைப் பார்வை அதிலிருந்தது. அவர் சற்று நேரத்தின் பின் மகனைப் பார்த்து “கொஞ்சம் திரும்பு” என்றார். குமாரலிங்கம் விழிகளில் கேள்விகளை ஏந்தியிருந்தான். கனகுராசர் மீண்டும் திரும்பிப்பார் என்பதாக கைகளால் சைகை செய்தார். திரும்பினான்.

தகப்பனைப் போலவே வட்டமுகம். இரண்டு கண்களுக்குச் சற்றுக் கீழே கூரான மூக்கும் மேலே அடர்த்தியான புருவங்களும் இருந்தன. தலைமுடி மேற்தலையில் முழுதுமாகக் கொட்டியிருந்தது. ஓரங்களில் படித்து வாரைியிருந்தான். ஓர் அறிவாளியின் தோற்றம் அவனிடமிருந்தது. இடது கண்ணின் சற்று கீழாக பெரியதொரு மச்சம். சிறுபிள்ளையாக இருந்த போது சிறு புள்ளியாக இருந்தது. வளர்ந்து பரவியிருந்தது. கொஞ்சம் தொப்பை போட்டிருந்தான். பியர் இன்றிக் கழியாத நாட்களின் விளைவு.

கனகுராசர் மகனைத் தொட்டுத் திருப்பினார். அவரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் குழறின. “நீ வேறு இளந்தாரிப் பெடியன். உன்னைச் சரியாக விவரிக்காவிட்டால் உன்னை அவனாகக் கற்பனை செய்துவிடுவார்கள். அது பாவம். பிள்ளைப் பூச்சி” வார்த்தைகள் தேய்ந்தன. அவர் கைகளை நெஞ்சில் குவித்தார். “அன்னம்மா என்னை மன்னிச்சுக் கொள்ளு.. உன்னை நான் இடை நடுவில விட்டுட்டு போறன்.. மருமோள், உன்னை நான் வெளியயும் வரவிடல்லை. மன்னிச்சுக் கொள்ளு.. மகன்.. நீயும் என்னை மன்னிக்க வேணும். தமிழ்நாட்டு வாசகர்களும் என்னை மன்னிக்க வேணும். உங்களுக்கு நிறைய விசயங்கள் விளங்கியிருக்காது.குறிப்பா சர்க்கரைக்கும் சீனிக்கும் என்ன வித்தியாசமென்று.. ஏனெனில் உங்களுக்கு ஏகே 47க்கும் பிஸ்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதென்று கேள்விப்பட்டுள்ளேன். ..”

கனகுராசரின் தொண்டைக் குழியின் உருண்டை மேலும் கீழுமாக இறங்கி ஏறியது. அன்னம்மா வாயில் தண்ணீர் பருக்கினார். கனகுராசரின் கண்களில் மேகங்கள் மிதப்பதாகத் தோன்றியது. அதனிடையே அரைச் சுவர் கக்கூசு.. குமாரலிங்கம் ஒரு சிறுவனாக உள்ளே ஏறினான். நிலச்சுவாந்தர்கள் எனத் தொடங்கி கைகளை வீசி என்னமோ பேசினான். கனகுராசர் பெருமையாய் உணர்ந்தார். காலடியில் அன்னம்மா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பேரக்குழந்தைகளின் விளையாட்டுக் குரல் காதுகளில் சிறு ஒலியாய்த் தேய்ந்தது. மூச்சுக்கள் சீரற்றவையாயின. கண்களில் பனித்திரையொன்று படர்ந்தது. அதனுாடு குமாரலிங்கம் தெரிந்தான். அச்சு அசல் சிறுவயது கனகுராசர். இதழோரம் புன்னகை வழிந்தது. ஒன்றிரண்டு தடவைகள் விக்கினார். மீண்டும் நீர் பருக்கினார்கள். அன்னம்மா பேரக்குழந்தைகளை காலடியில் நிறுத்தி “தேவாரம் பாடுங்கோ” என்றார். அவர்கள் ஆளையாள் பார்த்து முழுசினார்கள்.

கனகுராசருக்கு நெஞ்சடைப்பதாய் உணர்ந்தார். மூச்சுக்கள் முட்டி மோதின. உடலின் பாரம் குறைவதைப் போலத் தோன்றிற்று. மேகங்களில் மிதப்பதைப் போல.. கண்கள் இருளடைந்தன. தீடீரென்று ஆவேசம் கொண்டவரைப்போல அவர் எழுந்தார். “நாசமாப் போறவனே, கெதியில சாகடித்துத் தொலையேண்டா..” என்று கத்தினார்.

“இல்லை.. முன்னைப்பின்ன செத்துப் பழக்கமில்லை. அந்த அனுபவமுமில்லை. வாழ்க்கையில் செத்தேயிராதவன் சாவினைப்பற்றிச் சொல்வது இலக்கிய நேர்மையற்ற மொள்ளமாரித்தனமல்லவா..”

“ஓ…” என்று கூவியவாறு சரிந்தார் கனகுராசா.

இருண்மையைப் பசையாய்க் குழைத்துப் பூசிய நீளும் பெருங் குகையொன்றில் முன்னே விரிந்த இருள் வெளியில் சிறகடித்தபடியிருந்தது உயிர்ப் பறவையொன்று. காலங்களை விழுங்கியிருந்த வெளியின் ஆதியில் அசைவற்ற பறவையின் உடற் கூடொன்று குளிர்ந்த காற்றில் மிதந்தபடியிருந்தது. வழிமுழுதும் பறவைகள், வௌவால்களாய், அந்தம், யாருமறியாத உயிரின் ரகசியங்களை பேரொளியில் வீசியெறிந்தது. வெளியில் வெம்மைக் காற்று, பெரும் ஊழிக்காற்று..

கனகுராசர் இரு கைகளையும் “நிறுத்து நிறுத்து” என்பதைப்போல திணறி விசுக்கினார். காதுகள் அடைத்து மூச்சுத் திணறியது.

கடல் திரண்டு மேலெழுந்தது. மேலே.. இன்னும் மேலே.. இருள் நீரின் திவாலைகள் சூரியனின் தீயின் நாக்குகளில் தெறித்தன. நாவடங்கியது. பரவியிருந்த வெளிச்சத் திரளை கருகிய புகை கொஞ்சம் கொஞ்சமாய் மூடிப்படர்ந்தது. இருளானது பிரபஞ்சம், விரியும் பெருங் கருங்குகையின் சுவர்களில் மோதிவிடாதபடி ஒரு பறவை, அதன் சீரான சிறகடிப்பையன்றி நிசப்தம்….

கனகுராசரால் தாள முடியவில்லை. அவரது நெஞ்சு வெடித்ததை கடைசியாக அவர் உணர்ந்தார். கடைசி வார்த்தைகளை மூளை கிரகிக்க முன்னதாக உயிர்ப்பறவை மேலெழுந்தது. கனகுராசரின் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்தபடியிருந்தது.
(நிராகரிக்கப்பட்ட கதையொன்று)

By

Read More

புரட்சீ

April-24-2008
From Web Archive

கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திரள்களை புகையாக்கித் திரட்டி, மூச்சுக் குழல்கள் ஊடாக வலிந்து திணித்தது போன்றதொரு நெஞ்செரிவை, ஆற்ற முடியாமல், பீரிட்டுக் கிளம்பும் அரோகரா ஒலிகளும், சிறு கோபுரங்களாய் விழி வீச்சின் எல்லைவரை குவிக்கப்பட்டு, கார்ப்பெட் தாரிட்ட வீதியில் பட்டுச் சிதறிப்போவதற்குரிய வீச்சில் எறிபடும் தேங்காய்களும் இடைஞ்சல் செய்தன.

வெட்கத்தின் தொடக்கப்புள்ளி, சிதறடிக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகள், தனித்தொன்றாய்ப் போய்விட்ட என் உறவுகளை நினைவுறுத்திய அடுத்த கணத்தில் ஆரம்பித்தது. “இதெல்லாத்தையும் பார்க்கிற வெள்ளைக்காரன் எங்களைப் பற்றி என்ன நினைப்பான் ´´ ஆனால் இற்றை வரை விரவிக் கிடக்கும் வெட்கம் இக்கேள்வியின் மேற்பட்டதேயன்றி இக்கேள்வியல்ல. வெள்ளைக்காரத் துரை குறித்த உயர்ச்சி மதிப்பீடு என் மனதடியில் ஒளிந்து கொண்டிருந்தமை மீதான வெட்கம் அது. இன்னும் சில வெ – துரை குறித்த ஆண்டகை உருவகங்கள் எனக்குள் பதுங்கியிருக்குமோ என்ற அச்சம் வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது. வெள்ளைக் காரனின் மன நிலைச் சமன்பாட்டுத் தளத்தில் பொருத்தி அளவிடுவதற்கு அவனுக்கு கொம்பெதுவும் முளைத்துளதா? தேசங்களைக் களவாடச் சென்ற திருடர்கள் என்றும் தீவாந்திரத் தனிமைச் சிறைகளில் கைதிகளின் ஒவ்வொரு உயிர் அணுவையும் வலிப்படுத்திய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் அறிந்தவற்றை நினைவிருத்திக் கொண்டேன். இருந்தும் மனதின் ஆழ் மடிப்புக்களில் மறைபட்டுக் கிடந்து எப்போதேனும் வெளி நீட்டி, வெட்கத்தை நுரைக்கச் செய்து என் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை அரிக்கத் தொடங்குகின்றன இதுபோல மேலும் சில நிகழ்வுகள்.

நான் அமைதியுற விரும்பினேன். எதனையும் வெளிச்சொல்லவில்லையென்பதே குறைந்த பட்ச ஆறுதலைத் தந்தது. வயதான வெள்ளைத் தம்பதியர் வீடியோவில் சுற்றிச் சுற்றி படமாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்நிகழ்வை அனுபவிக்கிறார்கள் போல்ப்பட்டது. காவடியாட்டத்தை எடுக்கச் சொல்லி கணவனிடம் அந்தப் பெண் கை காட்டினாள். காவடியாட்டங்களை ஆவல் ததும்ப அருகில் சென்று பார்த்த பழைய காலங்கள் எனக்கும் உண்டு. இப்போதெல்லாம் என்னை நீங்கித் தூரம் சென்று விட்ட கடவுளர் அப்போது என் அருகிலிருந்தனர். காலையில் பூப்பறித்துச் சாத்தும் போதே “மாதகலில் இருந்து ஆமி மூவ் பண்ணினால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில நிற்கலாம் பிள்ளையாரே ´´ என்ற முணுமுணுப்புக்களின் பின்னால் உப நோக்கம் ஒன்றிருந்தது. அது சுழிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து என் வீட்டுக்கு வரும் அவள். அது குறித்து பிள்ளையாருக்கு ஒரு போதும் அறியத்தந்ததில்லை. அவர் என்னைக் கவனமாக கிரகித்துக்கொள்வார் போலும். அதற்கடுத்த நாட்களில் “மேலாலும் கீழாழும்´´ என் வேண்டுகை பலிக்கத்தொடங்கிய பொழுதுகளிலும் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி பிள்ளையாரே´´ என அவரிடத்தில்த்தான் தஞ்சம் புகுவேன். வல்லூறுகளை ஞாபகப்படுத்தும் இயந்திரங்களின் எச்சங்களை தலைக்கு மேல் கண்டவுடன் முணுமுணுப்புக்களைக் கதறல்களாக்கியிருக்கிறேன். காற்றில் சடசடக்கும் விசிறிகளோடு வீட்டைச் சுற்றிச் சன்னங்களைத் தூவும் வானூர்திகள் என்னைத் தென்னை மரங்களுக்குப் பின்னேயிருந்தும், சுவர் மறைப்புக்களில் பதுங்கியிருந்தும் பிள்ளையாரை அழைக்கச் செய்திருக்கின்றன.பின்னேரங்களில் பொடியளின் வாகனங்கள் உறுமிச்சென்ற பிறகு பிள்ளையார் எனது ஓலங்களை ஏற்றுக்கொள்வதாக நம்பினேன். அப்போது அவர் என் அருகிலிருந்தார். பின் வந்த ஒரு போர் நாளில் சற்றேனும் எதிர்பார்க்காநிலையில் அவர் என்னை ஏமாற்றினார். சுழிபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்தவளோடு நானும் கூடப்பெயர்ந்த கணத்தில் பிள்ளையார் என்னை விட்டு கொஞ்சத் தூரம் போனதை நான் உணர்ந்தேன். என் பிரியத்துக்குரியவர்கள் சிதைந்த போதும் அவர்களின் தசைத் துணுக்குகளை கூட்டி அள்ளிச் சுடுவதற்கு கொடுத்த போதும் அவர் இன்னுமின்னும் தூரம் போனார். நாளை விழித்தெழும் உறுதி கிடைத்த ஓரிடத்திற்குப் பெயர்ந்த பிறகும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைப்பட்ட காலங்களிலும் அவர் ஒரு சிறு புள்ளியாய் எங்கோ தெரியும் ஒருவராய் ஆனார். நான் நன்றி மறந்தவனானேன்.

காவடிக்காரர் களைத்தோய்ந்திருந்தார். நான் வேறேதும் சுவாரசியங்களைத் தேடத் தொடங்கினேன். இங்கு வந்திருந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ? அவளை மட்டும் அனுப்பியிருக்கலாமோ என்ற யோசனை முதற்தடவையாக எழுந்தது. இந்த இரண்டு வருடங்களில் அவளுக்கு இவையெதுவும் அலுத்து விடவில்லை. இடது கை நீட்டி பவ்வியமற்று திருநீறு பெறும் பொழுதுகளில் முறைக்கும் ஐயர்களின் பார்வைகள் அவளது ஆர்வக் கோளாறைச் சிதைத்துவிடவில்லை. அவளளவில் இது ஒரு இனிய பொழுது. அதை அனுபவிப்பது குறித்து மகிழ்வுறுகிறாள். மறுவளத்தில் அவளோடு சேர்ச் செல்லும் சமயங்களில் நான் மகிழ்வுறுகின்றேனா என்பதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவரும் அப்பம் வாங்கும் போது நான் தனித்துவிடப்பட்டவனாய் உணர்ந்திருக்கிறேன். என்னைப்போலன்றி இன்னமும் யேசு அவளுக்கு இரக்கமாய் இருப்பதனால் இணைவுற்ற பின் மதங்களைக் கடத்தல் என்பது சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒரு புரட்சியொன்றிற்கான வாய்ப்பினை நான் இழந்து விட்டேனா ?

ஆரம்பங்களில் சிலர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். “சாதி சமயங்கள் எல்லாத்தையும் மீறிக் கலந்து கல்யாணம் செய்திருக்கிறீர். பெரிய புரட்சிக்காரன்தான் நீர் ´´ அவர்களுக்கு என் சிரிப்புக்களை பதிலாக்கியிருந்தேன். சிரிப்புக்களை ஆமோதிப்பிற்கும் மறுதலிப்பிற்கும் பயன்படுத்த என்னால் இயலும். ஆனால் போகிற போக்கில் பிடித்திருந்தவளோடு இணைந்து பயணிப்பதன் பின்னால் புரட்சியொன்று ஒளிந்திருக்கும் என நான் நம்பவில்லை. தவிரவும் எனதும் அவளதும் வீட்டாரின் ஒருசில விருப்புக்களும் நிகழ்ந்தேறின என்பது புரட்சியின் மிச்சசொச்ச எச்சங்களையும் புரட்டிப் புதைத்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் புரட்சிகளின் போது வீட்டாரின் தலையீடுகள் இருப்பதென்பது புரட்சிகளில் சகஜம் எனவும் அதனால் புரட்சிகளுக்கு பங்கமேதும் வந்துவிடாதென்றும் இணைய அரட்டையில் சொன்ன நண்பன் கூடவே ஒற்றைக் கண் மூடிச் சிரிக்கும் ஸ்மைலி ஒன்றினையும் அனுப்பியிருந்தான்.

ஆரம்பித்த இடத்திற்கு போய்விடலாம் என நினைத்தேன். கடவுளர் வீதியுலா வருவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. அதற்குள் சிக்காமல் சென்றுவிட வேண்டுமென்ற விருப்பை அவளுக்குச் சொல்லி விடலாம். என்னைக் கடந்த நடுத்தர வயது தாண்டிய பெண்ணொருத்தி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன். அவள் தன்னை வருத்தும் ஏதோ ஒன்றிற்காக கடவுளிடம் வேண்டியிருக்க வேண்டும். பொருளாதார விசயத்திலோ குடும்ப உறவுகள் தொடர்பாயோ அல்லது பெற்ற பிள்ளைகள் குறித்தோ அவளுக்குத் தீராத வலியிருக்கக் கூடும் என்பதாய் ஊகித்துக்கொள்ளல் எனக்குத் தேவையற்று இருந்தது. “இங்கே வெளிநாடுகளில் பெண் பிள்ளைகள் வளர்ந்து வெளிச்சென்று வரும் ஒவ்வொரு நிமிசமும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது “ என்றவரை அண்மையில் சந்தித்தேன். குடும்பத்தின் கெளரவத்தோடு கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த கலாச்சாரம் குறித்த தகிப்புக்களை அவர் மட்டுமன்றி பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். “வெளியே இயல்பாக இயைபாக்கமடையும் ஒரு கலாசாரமும் வீட்டில் உன் கலாசாரம் என திணிக்கப்படும் கலாசாரமும் பிள்ளையை இரட்டைத் தன்மையில் வாழ்வதற்கான ஊக்குவிப்பையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என நம்பினேன். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்வதாகவில்லை. ´´உனக்கும் பெண்பிள்ளை பிறந்தால்தான் தெரியும் . ´´ என்றவரிடம் சொல்வதற்கு பதில்களேதும் என்னிடத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரிடம் கேட்காமல் விட்ட கேள்வி ஒன்று துருத்திக்கொண்டு நிற்கிறது. எப்போதாவது காண்கையில் பேருந்துகளிலும் பிற இடங்களிலும் தன் வெள்ளைத் தோழியருக்கு முத்தங்களைப் பரிசளித்துக்கொண்டிருக்கும் அவரது இளைய மகன், வெளிச்செல்லும் வேளைகளிலும் அவர் அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளாரா ?

தேங்காய்கள் சிதறும் தீவிரம் அதிகரித்தது. பக்தர்கள் போட்டிக்கு உடைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பட பட வெனச் சிதறி விழுந்த தேங்காய்ச் சொட்டுகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. ஊர் பெயர்ந்து ஓடிய நாட்களில் அரியாலையில், எழுதுமட்டுவாளில் அரிசி மாவிற்குள் இளநீர் விட்டு தேங்காய்த் திருவலைத் தூவி பசியாறியிருக்கிறேன். இன்னமும் அங்கே பசியாற தேங்காய்கள் தேவைப்படுகின்றன. “என்னை வடிவா வீடியோ எடடா ´´ என்றவர் வியர்வையிலும் இளநீர்ச் சிதறலிலும் தோய்ந்திருந்தார். ஒவ்வொரு தேங்காயாய் அவர் உடைக்கும் வேகம் நீண்ட அனுபவம் உள்ளவர் எனச் சொல்லிற்று. “சுத்திச் சுத்தி எடடா ´´ எனச் சொல்லிச் சொல்லி அவர் இயங்கும் விதம் விநோதமாக இருந்தது. கமராவைத் தாங்கியிருந்த பதின்மகங்களை அடைந்தவன் அவரது மகனாயிருக்க வேண்டும். கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கி கொண்டிருந்தான். “ கடையையும் சேர்த்து எடு. எங்கடை கடைக்கு முன்னாலை நான் உடைக்கிறது கிளியரா வரோணும். பிறகு நீ வந்து உடை. நான் வீடியோ எடுக்கிறன் ´´ நான் நகரத் தொடங்கினேன். இந்த வீடியோவை இவர் பின் என்ன செய்வார் ? தன் கடை சார்பாக இத்தனை தேங்காய் உடைத்தேன் என வருகிறவர்களிடம் பெருமை பேசுவாரா? ஊருக்கு அனுப்புவாரா . தமது ஊரைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று சமயம் வளர்க்கிறார் என அங்கு புளகாங்கிதம் அடைவார்கள்.

நான் சினமுறத் தொடங்கினேன். குப்பை வண்டிகளில் சேர்த்துச் சேர்த்துக்கொண்டிருந்த போதும் மீள மீள நிறையும் தேங்காய்ச் சிதறல்கள் என் சினத்திற்குக் காரணமாயிருக்க வேண்டும். “யாராவது இதற்கெதிராய்ப் போராட முன்வரவேண்டும். போராடாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்ச விழிப்புணர்வையாவது கொண்டு வர ஏதாவது செய்ய வேண்டும். நடைமுறைத் தர்க்கங்களுடன் சொன்னால் பலராலும் புரிந்துகொள்ளப்படும் என நம்பினேன்.

கையில் இரண்டு மூன்று நோட்டிசுகளுடன் அவள் வந்தாள். இன்னொரு வீதியின் வளைவில் வைத்து இரண்டோ மூன்று பேர் கொடுத்ததாய்ச் சொன்னவற்றை வாங்கிப்படித்தபோது நிம்மதிப் பெருஉணர்வொன்று ஆட்கொண்டதை அறிந்தேன். இந்த மக்களுக்கு நிறையச் செய்திகளை நோட்டிஸ் சொல்லியது. இது ஒரு பொறி. அவர்களிடத்தில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். விழிப்புணர்வூட்டும் அவாகளது தன்முனைப்பான செயலுக்குப் பாராட்டுக்களைப் பகிர்ந்தேன். அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு நோட்டீசை எனக்குத் தருவது போல படமெடுக்க விரும்பினார்கள். போஸ் கொடுக்கும் மற்றைய வேளைகளில் படரும் புன்னகை வர மறுத்தது. ஆனாலும் நோட்டீசைப் பிடித்தபடி நின்றேன். எடுத்த படத்தைப் பார்த்தவர்களில் இருவரின் முகத்தில் திருப்தியின்மை தெரிந்தது. அவர்கள் மீளவும் முன்னரைப் போன்றதொரு படத்தை எடுக்க விரும்புவதாய்ச்சொன்னார்கள். புரட்சியின் பரவிற்கும் செய்திக்கும் இவை அவசியம் என மேலும் சொன்னார்கள். நான் நேரமில்லை எனச் சொல்லித் திரும்பி நடந்தேன். அது குறித்து அவர்கள் கவலையுற்றதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக திருப்தியுறும் வகையில் ஒரு படத்தை அவர்கள் எடுப்பார்கள் சுத்தி சுத்தி எடடா என்ற தேங்காய் உடைப்பவனைப் போலவே –

By

Read More

ஆறா வடு – த.அரவிந்தன்

ஆறா வடு – படித்தேன். நாவல் அழுத்தமாக வந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் அமுதன் பாத்திரத்தை நீங்கள் என்றே கருதி படித்து முடித்தேன். தீபம் உரையாடலைப் பார்த்தபோதுதான் நீங்கள் இல்லை என்று தெரிந்தது. முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாக இந்த நாவல் அமையாதது சிறப்பு. புலிகள் மீதான, இந்திய ராணுவம் மீதான அரசியல் பார்வையையும் அவ்வாறே பதிவு செய்திருக்கிறீர்கள்.

நிவாரணமிட முடியாத வலிகளாகளோடே 21 அத்தியாயங்களும் இருக்கின்றன.இந்த நாவலில் இரண்டு பதிவுகளை முக்கியமாகப் பார்க்கிறேன். ஒன்று: சாமியின் துணியை எடுத்து சமைந்த பெண்ணும் பயன்படுத்து நிகழ்வு. இரண்டும்: வள்ளத்தில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து பயணிக்கும் இத்தாலி பயணம். (சிங்களவர்கள் அதிகம் இருந்தால் நம் கதி என்ன? என்று ஒரு தமிழர் கேட்பதையும் கருத்தில் கொண்டுதான்)

முதலில் கடவுளும் மனிதனும் சமமாகும் கட்டம். இரண்டாவது மனிதனும் மனிதனுமே தானே கட்டயெழுப்பிக் கொண்ட எல்லா நிலைகளையும் கடந்து ஒருங்கிணையும் கட்டம். இதன் மூலம் எல்லா வேறுபாடுகளைச் சூழல்கள் மாற்றியமைத்துவிடும் என்றும் அந்த இயக்கம் இயற்கையிடம் மட்டுமே உள்ளது என்கிற புரிதல் வருகிறது.

நாவலில் 21 அத்தியாயத்தில் இத்ரிஸ் கிழவுனுக்கு செயற்கைக்கால் கிடைப்பது மட்டும் முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாகத் துருத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அந்த யுக்தியைப் பலர் பாராட்டுவும் கூடும்.

By

Read More

ஆறா வடு – கரு.ஆறுமுகத்தமிழன்

ஆறாவடு (புனைவு), சயந்தன், தமிழினி வெளியீடு ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு முன்னால் நடனமாடிக் கெக்கலி காட்டுகிற சாவை முறியடிப்பதற்கு வாழ்வையே விலையாகக் கொடுக்கும் கதை ஆறாவடு.
தொடர்ந்து போருக்கு மத்தியில் வாழும் புலி ஒருவன், சண்டையில் கால் இழந்ததால் அரசியல் பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விடப்பட்ட போர் இடைவெளியில் அவனுக்கு நேர்கிற காதல்… அதைத் தொடர்ந்து என்ன விலை கொடுத்தாவது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற அவனுடைய விருப்பம்…

துப்பாக்கி முனையில் ஈபிஆர்எல்எஃப் அழைத்தபோது அவர்களோடு நின்றவன், காலச்சக்கரம் சுற்றி வந்தபோது புலியாக உடன்படுகிறான்! ஒவ்வொரு கட்டத்திலும் அவன் பெறுகிற கருத்தேற்றங்கள், அவற்றுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தன் இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிற அவனது முயற்சி…! தான் முடங்கிய பொறிக்குள்ளிருந்து வெளியேற முயல்வதும் பிழை விடுவதும் மீண்டும் முயல்வதும்…! வாழவேண்டும் என்பதுதான் முகாமையானது! எல்லாவற்றையும்விட வாழ்வதைத்தான் அவன் அதிகம் விரும்பியிருக்கிறான்! நியாயம்தான்! தன்னுடைய விருப்பங்களுக்கெல்லாம் அடியாதாரமாக மின்னிக்கிடக்கிற வாழ்வாசை அவனை உந்துகிறது!

அவன் தப்பிச் செல்வதற்கு வரவேண்டிய காசெல்லாம் சிக்கலில்லாமல் வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, சாவிலிருந்து விலகிச் செல்வதற்கு அவன் வைக்கவேண்டிய பணயம் ஒன்று இருக்கிறது-அது அவனது வாழ்வு! கடந்துபோனால் உன் வாழ்வு உனக்கு; அகப்பட்டுக்கொண்டால்…! நிச்சயமின்மையிலிருந்து வெளியேறிப் புகல்தேட நினைக்கிற ஒருவன் தேடிய புகலிடமும் நிச்சயமின்மைதான்! வாழ்விலும் சாவிலுமான நிச்சயமின்மைகளின் இடைவெளிகளை நயமாக இட்டுநிரப்புகிறது ஆறாவடு! இந்த நல்ல புனைவை ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்!

By

Read More

× Close