ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள்.

சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தோம் என்பதை நவி சொல்லித்தான் தெரிந்தோம். ஐரோப்பா ஒன்றாகிவிடும்போலத்தான் தெரிகிறது.

பிரான்ஸ் ஆகட்டும் ஜெர்மன் ஆகட்டும் தமிழை வைத்தே வழிகேட்ட தமிழை வைத்தே சாப்பாட்டுக்கடை எங்கென்று விசாரிக்கிற எனக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. ஐரோப்பாவில் ஆங்கிலத்தை வைத்து நாக்கு கூட வழிக்கமுடியாதென்பதை இன்னுமொருக்கா ஸ்பெயின் தலையில் குட்டிச் சொன்னது. இவ்வாறான நாடுகளுக்கு போகமுதல் அடிப்படை வார்த்தைகளையாவது பயிற்சி எடுத்துச் செல்லுகிற சில புரொபசனல் டூரிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். எனக்கெல்லாம் அந்த நல்ல பழக்கமில்லை. மொழிகள் பிறக்க முந்தைய மனிதன் என்ன செய்தான்..? இருக்கவே இருக்கிறது Body Language. (நாங்கள் ஜெர்மனில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி அதையெல்லாம் மற்றக்காதால் விட்டுவிட்டு நம் சைகையை மட்டும் புரிந்துகொண்டு அவர்கள் ஸ்பானிஸ் மொழியிலேயே உடல் மொழியோடு பேசினார்கள். ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். அவர்களும் வழமைபோல உடல் அசைவை புரிந்து கொண்டு…. )

சின்ன வயசில் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதென்றால் – நன்றாக வெளிக்கிடுத்தி விடுவார்கள். எங்கேயோ பரனுக்குள் கிடக்கும் சப்பாத்தெல்லாம் எடுத்து எண்ணை போட்டு பொலிஸ் செய்து அணிந்து போவோம். முதல் விமானப்பயணத்தின் போது கோட் சூட் போட்ட கொமடி இன்னும் மறக்கவில்லை. பிறகுதான் வெளியிடங்களில் அடிபட பயணங்களுக்கென பிரத்தியேக உடையெதுவும் இல்லையென்றும் casual ஆகப்போகலாம் என்றும் பிடிபட்டது. என்றாலும் ஒரு கட்டைக்காற்சட்டையோடும் செருப்போடும் (வெக்கை கூடினால் சேர்ட்டை கழட்டிவிட்டு இருந்தும் ) இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தது புதிது..

spainஸ்பானிய மக்களுக்கு நாங்கள் புதியவர்களாக இருந்தோம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தங்கள் நாட்டையும் மதித்து வருகிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ மகிழ்ச்சியை கட்டிப்பிடித்துக் கொஞ்சிப் பகிர்ந்து கொள்கிறார்கள். (இப்பதானே வாறம்.. கொஞ்சம் பொறுங்கோ… ) இந்தியாவைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (சிலகாலங்களுக்கு முதல் ஒரு பயணத்தில் சுவிஸ் காரரொருவர் நீங்கள் இந்தியாவோ என்று கேட்டார். சிறிலங்கா என்றோம். பதிலுக்கு எல்லாம் ஒன்றுதானே என்றார் அவர். இப்ப வெர்ஜினியா அப்ப நீங்கள் ஜெர்மனியோ என்று கேட்க அவர் எழும்பிப் போய் வேறொரு சீற்றில் இருந்து விட்டார்)

எனக்குக் கடல் பிடிக்கும். உருட்டிப்பிரட்டுகிற அலைகள் அற்ற சன் செபஸ்ரியன் கடல் (BAY) திரும்பச் சின்ன வயசுக்குக் கொண்டுபோய் விட்டது. அந்தச் சின்ன வயசுகளில் நாங்கள் ஆ என்று வாய் பிளந்திருக்க யாரேனும் சொல்வார்கள். வெளிநாடுகளிலயாம் உடுப்புப்போடாமல் கடல்கரைகளில குளிப்பினமாம். ம்.. அவர்கள் சொன்னது உண்மைதான்.

குறைந்த யூரோக்களில் சமையல் குளியல் வசதிகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அரிசி கொண்டுவந்தார்கள். அங்கே பக்கத்திலேயே கணவாய் மீன் நண்டு இறால் என கிடைக்க.. பிறகென்ன.. சோறும் கறியும்தான். (இதை விடமாட்டமெல்லோ)

ஸ்பெயினின் அத்திலாந்திக்கடலோரம் பயணம் செய்தால் போர்த்துக்கல் வருகிறது. மத்தியதரைக்கடலைத்தாண்டினால் ஆபிரிக்கா வருகிறது. உலகம் டுக்குட்டியானது. இதெல்லாம் போய்வந்த பிறகு மப்பை எடுத்துப்பார்த்தால் தான் எனக்குத் தெரிகிறது. எப்படித்தான் அறுநூறு எழுநூறு வருசங்களுக்கு முதல் தேடிப்பிடிச்சு இவங்கள் இலங்கைக்கு வந்தாங்களோ..

வருகிற வழியில் பிரான்சில் லூர்த் கோவிலுக்கும் போய்த்திரும்பினோம். மொத்தமாக 3400 கிலோமீற்றர் பயணம். இரண்டுநாள் நாரிப்பிடிப்பு..

By

Read More

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

By

Read More

சிவத்தக் கன்னம் மட்டும் தான் சிவக்குமா

swissgirlசத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார்.

சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர்
“இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்கு பிறகு, ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.

மீளவும் எனது தாய்மொழி என்ன என்று கேட்டார். தமிழ் என்றேன். தானும்தான் என்றார். தசாவதாரம் படத்தில் நாயுடு கமல் யாரும் தெலுங்கர்களைச் சந்திக்கும் போதொலிக்கும் பின்னணி இசை எனக்குள் ஒலிக்கத் தொடங்க, ஆர்வ மிகுதியால் “அப்ப தமிழிலேயே கதைக்கலாம்” என வாயெல்லாம் பல்லாகச் சொன்னேன்.

“ஊப்ஸ்.. எனக்கு கொஞ்சம் விளங்கும். பேச முடியாது. சின்ன வயசிலேயே லண்டனுக்கு பெற்றோரோடு சென்று bla bla bla bla… ” அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். எனக்கொரு ஏமாற்றமும் இல்லை. அதுவுமல்லாது எனக்கும் இங்கிலிசு தெரியும் என எப்படியாம் காட்டுவது : )

அவர்தான் “தான் டன்சூர்” (அல்லது அதே மாதிரியான ஒரு ஒலி) என்றார். முதலில் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். சட்டென்று பொறிதட்ட “தஞ்சாவூர் ? ” என்றேன். “யா யூ கொட் இட்” என்றார்.

இருவார காலமாகத்தான் இங்கு அவர் தங்கியிருக்கிறார். வேலையில் இடமாற்றம். பயணத்தில் “இங்கே சுவிசில் கள்ளர்கள், தீயவர்கள், இன வெறி காட்டுபவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டோர் அதிகம் தங்கும் இடங்கள், என பிரிப்புக்கள் உண்டா” என அவர் கேட்டார். லண்டனில் உண்டாம். அவுஸ்ரேலியாவிலும் திருடர்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கையிடப்பட்ட பகுதிகளைப் பார்த்திருக்கிறேன். நடு இரவொன்றில் திருடர்கள் திரத்த, நானும் மச்சானும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய கதையொன்றும் உளது.

0 0 0

சுவிற்சர்லாந்தில் நிற வேறுபாடு காட்டும் மக்கள், அதனூடான புறக்கணிப்புகள் எதனையும் ஆழமாக அலசும் நோக்கம் இங்கில்லை எனக்கு. ஆனால் சில பல சந்தர்ப்பங்களில், அவர்களில், அவர்களின் வார்த்தைகளில் அவை வெளித்தெரியத்தான் செய்கின்றன. பஸ்சில் கறுப்பருக்கு முன்னால் அமர முடியாத, அமரும் இடத்தில் கட்டுள்ள, சில பழசுகள் இன்னும் இருக்கிறார்கள்.

அண்மையில் தேர்தல் கட்சியொன்று சுவிஸ் முழுவதும் ஒட்டியிருந்த போஸ்டர்கள் பரவலாக சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. நாகரீகம், மனிதாபிமானம், மட்டை, மண்ணாங்கட்டி என்ற இவர்களின் பீற்றுதல்களில் பெரும் ஏளனத்தை எனக்குள் உருவாக்கின அவை. சில வெள்ளையாடுகள், சுவிஸ் என்ற தேசத்திலிருந்து கறுப்பு ஆடு ஒன்றை உதைத்துத் தள்ளுவது போல அமைந்திருந்தது ஒரு சுவரொட்டி. அடுத்ததில் கொட்டிக் கிடக்கும் சுவிஸ் பாஸ்போட்களை, கறுப்பு, வெளுப்பு, பழுப்பு, சொக்லேட் என பல கைகள் பொறுக்கியெடுக்கின்றன. அதை நிறுத்துக என்ற மாதிரியானது அடுத்த சுவரொட்டி.

தன் தேசிய இனத்தின் வேலை வாய்ப்பு உட்பட பல வசதிகள் மற்றோரால் பறிக்கப்படுவதை, பங்கிடப்படுடடவதை அனுமதிக்க முடியாது என்ற கோணங்களில் இதற்கான நேர் வினைகளும் ஆற்றப்பட்டன. அந்த ஆய்வுகளை விட்டு விடலாம்.

0 0 0

நானும் நண்பரும் காரினை பார்க் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான நுழைவாயிலில் நமக்கு முன்னால் இன்னொரு கார். உள்ளே ஒரு வயதான பெண்மணி. அறுபதுகளைத் தொடும் வயது அவருக்கு இருக்கலாம். ஒன்றிரண்டு நிமிடங்களாக அவர் காரினை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. நமக்கு வெட்டிப் பிடுங்கும் அவசரம் எதுவும் இல்லைத்தான். ஆனாலும் இள வயதல்லவா ? அந்தரித்த வயது!

சரியோ தவறோ வாகனத்தின் Horn ஐ அடித்து விடுகிறார் நண்பர். அடுத்து வந்த நிமிடங்கள் ஜாலியானவை. முன்னால் காரிலிருந்து இறங்கி குடு குடுவென நடந்து வந்தார் அந்த மூதாட்டி. பெரும் போர் ஒன்று மூளப்போகிறதென நாங்களும் தயாரானோம். அதிலும் ஜெர்மன் மொழியில் சண்டையிடுவதானால் எனக்குத் தயார்ப்படுத்தச் சில நிமிடங்களாவது வேண்டும்.

அருகில் வந்தார் மூதாட்டி. கண்ணாடியைத் திறந்து விட்டு “என்னணை” என்பது போலப் பார்த்தோம். “உதெல்லாத்தையும் கொண்டு போய் சிரிலங்காவில வைச்சுக்கொள்” என்று முதலாவது குண்டைப் போட்டார். “என்ன ஏது ஏன்.. எதுக்கு” என்று திக்குமுக்காடிப் போய்த் தெளிவதற்குள் அடுத்த குண்டு. “நானும் கொழும்பெல்லாம் போய் வந்த ஆள்த்தான். அங்கை ட்ரபிக்கில ஒரு மணித்தியாலம், ரண்டு மணித்தியாலம் எண்டெல்லாம் நிக்கும் போது, உன்னாலை பொத்திக் கொண்டு நிற்க முடிந்தது தானே. இப்ப இதில ஒரு ஒரு நிமிடம் நிற்க முடியாதோ உன்னால… ”

கிழிஞ்சுது. நானும் நண்பரும் திருப்பித் தாக்கிற எண்ணமெல்லாத்தையும் கைவிட்டு விட்டு சமாதானமாகப் போகலாம் என்று நல்லெண்ணத்தைக் காட்டினோம். “சரியணை. ஆச்சி. நாங்கள் சும்மா பம்பலுக்கு. மன்னிச்சுக் கொள்ளணை. போனை போனை….” என்றோம். அதற்கிடையில் பின்னாலும் சில வாகனங்கள் சேர்ந்து விட அவர் சென்று காரை எடுத்து வழி விட்டார். இறங்கிய பிறகும் அவர் சத்தமிட்டுக் கொண்டுதான் இருந்தார்.

நாங்கள் உட்சென்று விட்டோம். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்குமோ ? மீளவும் வெளியே வந்து கார் அருகில் செல்ல எங்கிருந்துதான் வந்தாவோ தெரியவில்லை. நினைச்சு நினைச்சு அழும் குழந்தையைப் போல ! ஒரு ஒற்றைச் சத்தத்தை தாங்க முடியாதவராய்..

எங்கள் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டுக் காரர்கள் மீது திரும்பியது. எல்லா வெளிநாட்டுக் காரர்களும் திருடர்கள், காட்டுமிராண்டிகள் என்ற ரீதியில் அவர் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எல்லா வெளிநாட்டுக் காரர்களையும் வெளியே வீச வேண்டும் என்று அந்த வார்த்தையை அவர் உதித்த போதுதான், அந்தச் சிக்கல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்தது. அந்தப் பக்கத்தால் சென்று கொண்டிருந்த யாரோ ஒருவருக்கு (அனுமானத்தினடிப்படையில் யூகோஸ்லாவிய நாட்டுக்காரர்) அந்த வார்த்தைகள் உறைப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். (நமக்கு மீன் குழம்பு, நண்டுக்கறி, இறைச்சிக்கறி இவை தவிர்ந்த வேறெதுவும் உறைப்பினைத் தருவதில்லையென்பதை சொல்லியா தெரிய வேண்டும். )

திடீரென பிரச்சனை இன்னொரு பரிணாமத்தை எடுத்து அந்த யூகோஸ்லாவிய நாட்டுக் காரருக்கும், அந்த மூதாட்டிக்குமிடையிலான பிரச்சனையாக உரு மாறியது. “எப்படி எங்களை வெளியே வீசச் சொல்லுவாய்” என அவரும் “ஓம் நீங்கள் எல்லாம் திருடர்கள்” என மூதாட்டியும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்கள். சண்டையின் மூலகர்த்தாக்களான நானும், நண்பரும் புலிகளையும் இந்திய இராணுவத்தையும் மோத விட்டு ஒதுங்கிய சிறிலங்கா இராணுவம் போல இடத்தை விட்டு நைஸாக வெளியேறினோம்.

அந்தப் பெண்மணியின் மனதிற்குள் ஒரு சிங்கத்தைப் போல படுத்திருந்த வெளிநாட்டவருக்கு எதிரான உணர்வை நாங்கள் சீண்டி விட்டோம் என்பதைத் தவிர வேறு என்னத்தைச் சொல்வது?

0 0 0

இது வெர்ஜினியாவிற்கு நடந்த சம்பவம். அவரோடு கூடப் பணிபுரியும் ஒரு இளவயது வெள்ளையினப் பெண் சிரித்துச் சிரித்தே கேட்டிருக்கிறார். “இஞ்சை.. நாங்கள் வெள்ளையென்ற படியால எங்களுக்கு கோபம் வந்தால் முகமெல்லாம் சிவக்கும். அதை வைச்சு நாங்கள் கோபமாயிருக்கிறம் எண்டு கண்டு பிடிக்கலாம். ஆனா இப்ப நீங்கள் கோபமாயிருக்கிறீங்கள் எண்டால்.. எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அதாவது கறுத்த முகத்தில கோபத்தில சிவப்பது தெரியாது என்றது அவாவிட கவலை)

பதிலுக்கு வெர்ஜினி சொன்னது இதுதான்.

“உண்மைதான். உனக்கு கோபம் வந்தால் உனது கன்னம் சிவக்கும். எனக்கு கோபம் வந்தாலும் உனது கன்னம்தான் சிவக்கும். ”

“அது எப்பிடி” என்று ஆச்சரியத்தில் இரண்டு மூன்று நாட்களாக வெர்ஜினியாவை விசாரித்துத் திரிந்தாவாம் அவ.

By

Read More

தனியே தன்னந்தனியே :)

வெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது – என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.


Photobucket - Video and Image Hosting

By

Read More

× Close