பரதேசி நாய்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ்.

சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் சொல்லும் ஒரு மரபிருக்கிறது. grüezi என்கிற அந்த வார்த்தையை நம்மாட்கள் க்றூட்சி என்றும் கிறைச்சி என்றும் விட்டால் இறைச்சி என்றும் பயன்படுத்துவோம். இங்கே கிராமங்கள் வெறிச்சோடிப்போயிருக்கும் எப்போதும். வீதியில் சக மனிதரை எப்போதாவதுதான் காணமுடியும். ஆகவே அப்போது வணக்கம் வைப்பது இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது. ஆனால் நமது நாட்டில் சூழலில்.. வீட்டிலிருந்து புறப்பட்டால் வணக்கம் சொல்லியே வாயுளைந்து விடும்.

சோமாலியர் சொன்னார் – ஆனால் தமிழர்கள் அப்பிடியல்ல. அவர்கள் சிரிக்கிறார்கள், நெருங்கிப் பேசுகிறார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்-

வெளியே ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது.

0 0 0

RACISMஇரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சீற் இருந்தபோதும் அடுத்த இறக்கங்களில் இறங்குவதற்காக வாயிலில் நின்றுகொண்டே பயணித்தேன். குளிரான நாள் அன்று. தலை காதுகளை இறுக்கி மூடி மப்ளர் அணிந்திருந்தேன். ஒரு நிறுத்தமொன்றில் இரண்டு மூன்று தமிழர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை கண்ணுக்கு நேராகவே பார்த்தார். பார்த்தபடியே சொன்னார். “பரதேசி நாய் – சீற் இருக்கத்தக்கவா நிண்டு கொண்டு வருகுது”. நானும் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டேன். முன்னைப்பின்னை அவரோடு எங்காவது சண்டைபிடிச்சிருக்கிறனா என்றெல்லாம் யோசித்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எனக்கொரு போன் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். பேசிவிட்டு வைத்துவிட்டேன். இப்போதும் அந்தத் தமிழர் என்னை நேராகப் பார்த்தார். திரும்பவும் திட்டப்போகிறாரோ என்று யோசித்தேன். என்னைப் பார்ப்பதுவும் பிறகு விழிகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக அவர் கொஞ்சநோரம் விளையாட்டுக் காட்டினார். திடீரென்று ” அண்ணை என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றவர் மேலும் தொடர்ந்தார். “நான் நீங்கள் ஒரு கறுப்பர் என்று நினைச்சுத் திட்டிப்போட்டன்”

அவர் மேலும் ஒன்றிரண்டு தடவைகள் sorry சொல்லிக்கொண்டே வந்தார்.

எனக்கு சிரிப்பாக இருந்தது. நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடும் ஒரு இனம்

By

Read More

வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.

புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..

அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்

இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.

இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.

வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம்! சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.

நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். சிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.

0 0 0

ஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.

0 0 0

vijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் ! விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் ! சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார்! என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

0 0 0

Facebook குறிப்புக்கள்

வேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ! இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.

* * *

தயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..

இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.

* * *

கனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..

இதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.

* * *

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

* * *

எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.
* * *

கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.

“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”

By

Read More

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்

0 0 0

சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம்.

சட்டெனச் சந்தித்து விலகும் விழிகளின் மொழிகளில் ஒருபோதும் அச்சத்தையும் நாணத்தையும் மொழிபெயர்த்ததில்லை நான். ஆகக் குறைந்தது அவளது விழிகளில்.. முத்தங்களில் பரீச்சயம் அற்ற அந்தப் பதின்ம வயதுகளில் சட் சட் என உடலில் மின்சார அதிர்வுகளை நாட்தவறாது பார்வைகளால் மட்டுமே பரிசளித்துக் கொண்டிருந்தாள் அவள். எதிர்ப் பாலரிடம் தோன்றும் எந்த அதிர்வுகளும் உடல் இச்சையின் பிம்பங்கள் என்பதை அப்போதெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கவில்லை. “உனக்கு என்னை விடச்சிறந்த எவராவது கிடைக்கலாம். ஆனால் எனக்கு உன்னைத்தவிர இனியொருத்தி இல்லை” என ஒன்றிரண்டு வருடத்தில் நாலைந்து தடவைகளுக்கு மேல் சொல்கிற விளையாட்டின் முதல் படி அது.

பார்த்தால் சொல்லுடா என்பேன் நான். பக்கத்திலிருந்தவன் ஒருபோதும் என்னை ஏமாற்றியது கிடையாது.

பாக்கிறாளடா பாக்கிறாள் என்று அவன் காதுகளிடையே அலறும் பொழுதுகளில் சடாரெனத் திரும்பி அவள் விழிகளை களவு செய்து மொழி பெயர்க்க முயல்வதுண்டு. பென்சில் சீவும் சிறுவட்ட கட்டர் (cutter) ஒன்றின் பின்னிருக்கும் கண்ணாடியூடாக ஒருதடவை அவள் என்னை அவதானித்ததறிந்து மிதந்தேன்.

eyeநிறையப் பேசியும் எழுதியும் புரிந்து கொள்ள முடியாத இந்நாட்களைப் போல் அல்லாது அவளது விழிகளில் இருந்து விளங்கிக் கொண்டது அதிகம். ஏன் தாமதம் என்றதிலிருந்து இனி எப்போ சந்திக்கலாம் என்பது வரை அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றிற்கான பதில்கள் என் கண்களில் இருந்ததா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். பின்னாளில் பேசத் தொடங்கிய பிறகும் அவளது வார்த்தைகளை விடவும் பார்வைகளை அதிகம் விரும்பினேன்.

நீண்ட பெருங்காலத்தின் பின் அவளைச் சந்தித்து மதியம் தாண்டியவொரு பொழுதில் வாசலில் பிரிந்த போது அவள் பார்வையை மொழி பெயர்க்க முயன்றேன். எனக்கே எனக்கான எந்தச் செய்தியும் அதில் இல்லை. ஆனாலும் அதனை பத்திரப் படுத்திக் கொண்டேன்.

0 0 0

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இப்போதும் காதலில் (ok.. காமத்தில் நட்பில் அன்பில் . சோமி கவனிக்க – ) இந்தப் பார்வைக் குறிப்புக்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. நகர் சார் சூழலில் அதற்கான தேவையற்றுப் போய்விட்டது போலத்தான் தெரிகிறது. மொபைல் போன் உண்டு எஸ் எம் எஸ் இருக்கிறது ஈமெயில் உண்டு என்னத்த கண்ணால பேசுறது என்பது உண்மைதான். ஆனாலும் அது போல வருமா என்பது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் இல்லையா..?

0 0 0

இன்றைக்கு யோசித்துப் பார்த்ததில் காதல் தொடர்பில் நான் நிறையப் பேருக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது. நேற்றும் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் தெலைபேசி வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கலாமா என்றார்.

பாடசாலை நாட்களில் சேயோனுக்கு அவனை விட அதிகம் காலம் எடுத்து யோசித்துச் சொல்லியிருக்கிறேன். அவன் ரூட் விட்ட அதே பெண்ணை விரும்பிய இன்னுமொருவன் என்னிடம் ஆலோசனை கேட்ட போது அவனுக்கும் சொல்லியிருக்கிறேன். என்னமோ தெரியலைடா மற்ற பெண்களைப் பார்க்கும் போது உருவாவதை விட இவளை பார்க்கும் போது மட்டும் என்ன என புரிய முடியாத அவஸ்தை மிகு உணர்வு தோன்றுவதாக சேயோன் என்னிம் சொன்னதை அவன் மறந்திருக்கலாம். என்னால் முடியவில்லை.

காலம் இதைவிடக் கொடுமையான வேளைகளையெல்லாம் என்மேல் கவிழ்த்திருக்கிறது. காலையில் வாசலில் காத்திருந்து யாருக்காக நான் பின்தொடர்ந்தேனோ அவளையே காதலிப்பதாய் ஒருவன் இடியிறக்கி என்னையே கேட்டுச் சொல்லச் சொன்னான். ங்கொய்யால.. அவ்வளவு பெரிய தியாகியாக எல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.

மிகக் கடுமையாக ஸ்கெட்ச் போட்டு ஆலோசித்து திட்டங்களை வரைந்தது என்றால் அது சோமிதரன் விடயத்தில் தான். எத்தனை தூக்கம் தொலைத்த இரவுகள் ! நண்ப, நன்றி மறவாதிரும்

கோபிராஜ் விசயம் ரொம்பவும் வித்தியாசமானது. கேளடா கேளடா கேட்டுச் சொல்லடா என்றவருக்கு நான் தயக்கத்தையே பதிலாக்கினேன். அவளோடு பேச பயமாய் இருக்கென்றேன். அவர் சொல்கிறார். பயப்பிடாதே.. எனக்காக பேசு. பயம் வரும் பொழுதுகளில் நான் சொல்வதை மனதில் நினைத்துக் கொள். பயம் தெளிந்து துணிவு பிறக்கும். அவருக்காக அவளோடு பேசும் பொழுது எனக்குப் பயம் வந்தால் அவர் மனதில் நினைக்கச் சொன்ன மந்திரத்தைச் சொல்லவா.. ? அது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். அடிங்கொய்யால.. $%&%$§/&%$

வரும் யூன் மாதத்திற்கிடையில் எனக்காக கேட்டுச் சொல்லடா என்ற நண்பர்கள் மார்ச் ஏப்ரல்களில் ” வேண்டாம்.. வேறை ஒண்டு ஓகேயாச்சு” என்ற கதைகள்..

எண்ணிப் பார்த்தால் (இது இரண்டு அர்த்தத்திலும் வரும்) நான் ஆலோசனை கொடுத்த எல்லோருக்கும் காதல் காதில் சங்கூதித்தான் சென்றது. அது என் தவறு அன்று. விடா முயற்சியும் தொழில் பக்தியும் அவர்களுக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வது? சேயோனுக்கு அந்தப் பெண்ணின் பெயரே மறந்து விட்டது. சோமிதரனின் பெயரும் மறக்கப் பட்டிருக்கும். ஆனாலும் எல்லோரும் இப்போது இயல்பாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியுடன் என்றும் சொல்ல முடியும். எல்லோரும் புறக்கணிக்கப் பட்ட பொழுதுகளில் அழுதவர்கள் புலம்பியவர்கள் வாழ்வு முடிந்ததென வரிகள் எழுதியவர்கள்.

இதுவே இயல்பும் யதார்த்தமும். எதிர்ப்பால் ஈர்ப்பின் படபடப்பை அதிர்வை இன்னும் என்னென்னவோ ஆன எல்லாத்தையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். அதன் புறக்கணிப்பையும் சஞ்சலத்தையும் கண்ணீரையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். மீளவும் இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வோம் இடம்பெயருங்கள். எப்போதாவது அதை நினைத்து கதையும் கவிதையும் எழுதுவோம் எழுதுங்கள். ஆனால் ஒரு விடயம். இலக்குகள் மாறுபடலாம். ஆனால் இலட்சியம் ஒன்றுதான். அதை நினைவில் நிறுத்துவோம். நிறுத்துங்கள்

இதற்கு மேலும் காதலைப் பற்றி எழுதினால் நடக்கிற கதையே வேறு என காதிற்குள் எச்சரிக்கை விடப்படுவதால் சில திருத்தங்களுடன் நிறுத்திக் கொள்கிறேன். காதல் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும்.
-மீள்பதிவு 18.09.2008

By

Read More

கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

karunaஅவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா என்று இறைஞ்சுவதோடு வாலையும் ஆட்டிக் காட்டுகிறோம் என்பதைக் குறித்த வலியே அது.

அன்றைய நாளில் கானாபிரபாவிடம் இதுபற்றிக் கேட்டிருந்தேன். அவர் ஐயோ சத்தியமா அந்த அமைப்பில நானில்லை என கற்பூரமடிக்காத குறையாக சொல்லியிருந்தார். அடுத்தநாளோ அதற்கடுத்தநாளோ பதிலுக்கு நான் சத்தியம் செய்யவேண்டியிருந்தது. சுவிசில் இருந்து சென்ற அந்த கடிதத்தில் இம்முறை ஈழத்தாய் என விளிக்கப்பட்டிருந்தது. அவவுக்கு அது பிடித்துக் கொண்டதாலேயோ என்னவோ அக்கடிதம் ஒரு பரப்புரைக் கூட்டத்திலும் வாசிக்கப்பட்டது.

அக்கடிதங்களை எழுதியவர்கள் மீது கோபம் எதுவும் வரவில்லை. தொடர்ச்சியான ஏமாற்றங்களால் எந்தக் கொப்பிலாவது பற்றிக்கொள்ளலாமா என்றிருந்த மனநிலையது. அதையும் தவிர தார்மீக ரீதியாக எனக்கு அந்த உரிமையும் கிடையாது. ஏனெனில் கலைஞரை உலகத்தமிழினத்தின் காவலரே என விளித்து கடிதம் எழுதிய லூசுப் பயல் நான்.

0 0 0

ஏழுமாதங்களாகி விட்டது. அப்போது கலைஞர் கவிழ்ப்பதற்கான (கவிழ்த்தார்தான்) ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். இரண்டுவார காலக்கெடு. பதவி விலகல் கடிதங்கள் என அமர்க்களமோ அமர்க்களம். தனிப்பட எனக்கு கலைஞர் ஏதோ செய்யத்தான் போகிறார் என சபலம் கூட ஏற்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

புலம்பெயர்ந்த நாடொன்றிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்தார். அந்த நாட்டின் ஏதோ ஒரு தமிழ் சம்மேளத்தின் சார்பாய் அவர் பேசினார். கலைஞருக்கு உடனடியாக ஒரு நன்றிக் கடிதம் தேவை. வரும் திங்களுக்கு முதல் தேவை என்றார். முதலில் ஜோக் அடிக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் விடுவதாயில்லை.

கொஞ்சம் பொறடாப்பா இரண்டு வாரம் முடியட்டும். பிறகு எழுதுவோம் என்றேன். இல்லையடா இப்பவே எழுதுவதுதான் அவருக்கு இன்னும் இன்னும் ஈடுபாட்டைக் கொடுக்குமென்ற கண்டுபிடிப்புகளை அவன் சொன்னான். உண்மையாகவே தமிழகத்தில் தோன்றிய அன்றைய நிலை வன்னியில் மக்களுக்கு ஓர் மன ஆறுதலைக் கொடுத்திருந்ததை நான் அறிவேன். முல்லைத்தீவில் கலைஞருக்கு ஆதரவான கூட்டங்கள் கூட நடந்தன.

ஆனாலும் இன்னதெனச் சொல்லவியலாத தயக்கமொன்றிருந்தது எனக்கு. நண்பரோ மணித்தியாலங்களை காலக்கெடுக்களாக்கி அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். ஏதோ ஒரு நாட்டின் தமிழ் சம்மேளனம் கடிதம் எழுத என்னை அழைக்கிறது என்ற கெத்தும் எழுதித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் சேர்ந்துவிட நான் அதற்குச் சம்மதித்தேன். எனது தனிப்பட்ட கருத்துகள் ஈடுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு – நான் எப்போதும் வருந்தக்கூடியவாறு முதல் வரியை எழுதினேன். உலகத் தமிழினத்தின் தலைவர் கலைஞர் ஐயா அவர்களே…

0 0 0

அந்தக் கடிதம் ஊடகங்களின் வெளியானது. தலைமைச் செயலகத்திற்கும் அது பக்ஸ்ஸில் அனுப்பப்பட்டது. அப்போது தேர்தல் நேரம் இல்லையாகையால் யாரும் அக்கடிதத்தினை மக்கள் மத்தியில் படித்துக் காட்டவில்லை.

ஈழத்தமிழர் சம்மேளனங்களும் இலேசுப்பட்டவையல்ல. அவர்கள் இரு திருத்தங்களைக் கோரியிருந்தார்கள். முதலாவது முதல் வரியிலேயே ஆரம்பித்தது. உலகத்தமிழின காவலர் என்பதை நீக்கவும். காரணம், இதைப்படிக்கிற உங்களுக்கே புரிகிற அதே காரணம்தான். என்னளவிலும் அதற்கு தயாராய்த்தான் இருந்தேன். உலகத்தமிழின காவலர் பின்னர் எம் உணர்வுகளில் ஒன்றித்துக் கலந்துவிட்ட தாய் தமிழகத்தின் தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே என்றானார்.

அடுத்த திருத்தத்தினை நான் முழுமையாக மறுத்துவிட்டேன். அது தனியே போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்வை பெற்றுத்தருக என்று மட்டுமே எழுதாமல் தமிழீழத்தினையும் பெற்றுத்தருக என்றெழுதுக என்பதாகும். முன்னைய திருத்தம் எவர் குறித்துச் சொல்லப்பட்டதோ அவரை பின்னைய திருத்தம் மிகக் கேவலப்படுத்தும் என நான் நம்பினேன். இந்தத் திமிராலே தானே இந்தநிலையென உங்களிடம் இப்போது பதில்கள் தயாராயிருக்கும். பரவாயில்லை.

இருந்தபோதும் புதிய வரிகளைச் சேர்க்கச் சொன்னார் நண்பர். இப்போது வாசித்துப்பார்த்தால் கண்ணாடிக்கு முன் நின்று நடுவிரலைத் தூக்கிக் காட்டவைக்கின்றன அந்த வரிகள்.

கைவந்து தாங்கும் நீளக் கடல் கடந்து கருணையுள்ளத்தோடு நீளும் உங்கள் குரல் இன்னும் இன்னும் வானளவு விரிந்து – இந்திய அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் உங்களது இராஜதந்திரமும் (அடங்கொப்புரானே…) இணைந்து – இலங்கையில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வலுவுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா – தனது முன்னைய வெளியுறவுக் கொள்கைகளை மீள் பரிசீலனை செய்து – ஈழத் தமிழர் இப்போது எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களான உணவு உறைவிடம் மருந்து அத்தியாவசியப் பொருட்தடை ஆகியவற்றை விரைந்து நீக்கி இயல்பு வாழ்வினைத் தருவதோடு தொடர்ந்தும் கவனம் செலுத்தி சிங்கள மேலாதிக்கத்துடனான தமிழரின் வரலாற்று இனமுரணை சரியான முறையில் எடுத்துரைத்து எப்போதும் தமிழர் பக்கமிருக்கும் அரசியல் நியாயத்தன்மையை விரித்துரைத்து ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசியம் மரபு வழித் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை இந்தியாவும் உலகமும் அங்கீகரிப்பதற்கான சரியான திசையில் இந்திய மத்திய அரசை வழிநடத்தும் வண்ணம் அதற்கான வேண்டுகோளை ஈழத் தமிழ் இனத்தின் சார்பில் முன்வைக்கின்றோம்.

மேலும் சில

தமிழகத் தலைவரே இதுவரை காலமும் நீறு பூத்த நெருப்பாக தமிழக உறவுகளின் மனங்களில் ஆழப்படிந்திருந்த தமிழீழ ஆதரவு அலை இன்று நீங்கள் திறந்து விட்ட வாசல் வழியாக ஆர்ப்பரித்து எழுந்து அலை அலையாக தமிழகமெங்கும் பொங்கிப் பிரவாகிப்பது கண்டு பூரித்துப் போய் நிற்கிறோம். நாம் தனித்தவர்கள் அல்ல என்னும் எண்ணமே எமக்குள் இறுமாப்புற்று எழுச்சியுற வைக்கிறது.

பெரியார் அண்ணா காலம் முதல் எப்போதெல்லாம் ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள கொடுங்கோல் அரசு வன்முறைகளை நிகழ்த்தி அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி ஓட ஓட விரட்டி அவலம் சூழ்ந்த வாழ்வை அவர்களுக்கு திணிக்கின்றதோ அப்போதெல்லாம் உலகமே மெளனித்து கைவிட்ட கையறு நிலைகளில் கடல் கடந்து வரும் உங்கள் நேசமிகு ஆதரவுக்குரல்களே எமக்கான மனோவலிமையையும் தடைகளைத் தாண்டும் வேகத்தையும் அளித்து வருகின்றன.

அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்தும்விட்டன.

எனது ஈரக்குலை நடுங்குவது எதற்கென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எப்போதாவது அதிகாரத்திற்கு வந்தால், இந்தக் கடிதம் எழுதியதற்காக அதிமுக தொண்டர்கள் என்னைப் பிராண்டு பிராண்டென்று பிராண்டுவார்களா என்பதுதான். ஏனெனில் ஜெயும் இலங்கை ஏதிலிகளுக்கு சோறு போட்டிருக்கிறார்.

0 0 0

கலைஞரை மட்டும் அதிகம் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள்தான். ஏன் என ஆராய்பவர்கள் மகிந்த ராஜபச்சேயைவிட கருணாவை அதிகமாக ஏன் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள் என யோசித்தால் விடையேதும் கிடைக்கக்கூடும்.

கலைஞர் மீதான எனது கோபம் அவர் போரை நிறுத்தவில்லையென்பதற்காக அல்ல. தமிழீழத்தை பெற்றுத்தரவில்லையென்றல்ல. அது அவரது பொய்ப்பித்தலாட்டங்கள் தொடர்பானது. ஈழத்தை முன்னிறுத்திய பொய்கள் மட்டுமேயிற்கானது. 2 மணிநேர உண்ணாவிரத முடிவில் இலங்கையில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டதென்றும் அங்கே அமைதி மலர்ந்தென்றும் தமது ஊடகங்களில் பீற்றிய அந்த ஒற்றைப் பொய்க்கு மட்டுமே இப்போது மட்டுமல்ல எப்போதும் திட்டலாம்.

மற்றும்படி இது குறித்து யாரிடமும் முறையிடுவதற்கில்லை. ஏனெனில் கலைஞர் இப்படிச் செய்தாரே என வினவினால் அவர்கள் எல்லோரிடமும் உள்ள பதில்.. ஏன்.. ஜெயலலிதாவும்தானே அப்படிச் செய்தார்..? என்றமாதிரியான டீச்சர் ராமு எனக்கு கிள்ளினான் என்றால் ஏன் சோமுவும்தானே கிள்ளினான் என்பதையொத்த பதில்கள் தான்.

By

Read More

சின்ராசு மாமா என்கின்ற துரோகி

சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக்கு என அதை வித்துப்போட்டு கடனை அடைப்பார். வட்டி கட்ட மனிசியின்ரை சங்கிலி காப்பையும் விற்பார். ஆனா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல அவர் வலைகளோடை காத்திருந்தார். “பொறு பொறு பிரேமதாசா எல்லாம் சரிப்பண்ணுவான்” “என்ன இருந்தாலும் சந்திரிக்கா ஒரு பொம்பிளை. அவள் எங்கடை கஸ்ரங்களைத் தீர்ப்பாள்” “ரணில் செய்வான்போலதான் கிடக்கு” என அவர் காலாகாலத்துக்கும் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் “உவங்கள் பூழல்மக்கள் ஒன்றும் புடுங்கமாட்டாங்கள். எங்கடை சொந்தக் கடலம்மா என்ற காலம் வராட்டி நாங்கள் உப்பிடியே கரையில கிடக்கவேண்டியதுதான். அவனவன் வந்து அள்ளிக்கொண்டு போகட்டும்” என்றார். கடலுக்கை இயக்கம் நேவியை அடிக்கிற நேரமெல்லாம் அவர் பேப்பரை ரண்டுமூன்று தடவை படிப்பார். சிலநேரம் சத்தம் போட்டும் படிப்பார்.

சின்ராசு மாமா கடலை ஒருபோதும் கடல் என்றது கிடையாது. கடலம்மா அல்லது அம்மா அல்லது சீதேவி இப்படித்தான் சொல்லுவார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. ஆனா வீட்டுக்கை எப்பவும் ஒரு கடல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். “உந்த வலையளை வேறை எங்கயாவது கொண்டுபோய் பொத்தலாம் தானே” என்றால் அவர் சிரிப்பார். “எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே ? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு எண்டபடியால இந்த வாசம் எப்பவும் இருக்கும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”

என்னை முதலில் கடலுக்குள் கொண்டுபோனவர் சின்ராசு மாமா. ஆழமொண்டும் இல்லை. கரை தெரிகிற தூரம்தான். கட்டுமரத்தில் களங்கண்ணி வலிக்க அவர் கூட்டிக்கொண்டு போனார். அது உலாஞ்சி உலாஞ்சிக்கொண்டு போனது. கடலுக்குள் இரண்டு பேர் குதித்து ஒவ்வொன்றாக வலைத்தடியைப்பிடுங்கி தடிகள் வலைகள் என்றெல்லாத்தையும் சுத்தி மரத்தில் ஏற்றினார்கள். வெள்ளி நிறத்தில் மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. மரத்தில என்னைவிட்டு அவர்கள் கடலுக்கை இறங்கின நேரம் நான் கத்தத்தொடங்கியிருந்தேன். “நான் போப்போறன்.. கூட்டிக்கொண்டே விடுங்கோ..”
சின்ராசு மாமா கெக்கட்டம் போட்டுச் சிரிச்சார். “உன்ரை வயசில உசரப்போய் ஐஞ்சு நாள் கிடந்திட்டுவந்தனாங்கள். தெரியுமே.. ” பிறகு டக்கெண்டு அமைதியானார். “இப்ப.. இந்தா கரையைத்தடவிக்கொண்டு இருக்கிறம். இருந்துபார் ஒரு காலம் வருமடா..”

எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம். ஒருதரம் இதைச்சொல்லி “கடல் சனியன்” என்றபோது சின்ராசு மாமா ஓங்கியொரு குட்டு விட்டார். கடல் பரவாயில்லையென்று நான் நினைச்சன். “கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்” என்றார் அவர். நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு 97 இல் வலைப்பாடு கிராமத்தில் இந்தியாக்கு வெளிக்கிட்ட நூற்றுஐம்பது பேரை கடலம்மா விழுங்கித்தள்ளியபோது நான் கரையில் நின்றேன். “சின்ராசு மாமா ஏன் பொய் சொன்னார்” என யோசித்துக்கொண்டு.

அப்ப அவர் அனலை தீவில வாடிபோட்டுத்தொழில் செய்த நேரம். என்னையும் அனலைதீவுக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நான் கேட்டேன். சின்ராசுமாமா என்னை கல்லுண்டாய் வெளியால கூட்டிக்கொண்டுபோனார். பொம்மை வெளி நாவாந்துறை கடல்களோரம் வந்து ரவுணுக்குள் ஏறி சுற்றிக்காட்டினார். “எட அனலைதீவு நல்லாத்தான் டெவலப் ஆகியிருக்கு. பிறகென்ன.. ” என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அனலைதீவுக்கு றோட்டு இருக்கா என்றது ஒரு டவுட் ஆகத்தான் இருந்தது. “மடையா காரைதீவுக்கே றோட்டிருக்கேக்கை அனலைதீவுக்கு இருக்காதா என்றார் அவர். அவர் சொன்னாச்சரி.

பிறகு எல்லாம் மாறியது. நேவியின்ரை கப்பல் கடலின்ரை அடியில அவ்வப்போது தெரியத்தொடங்கியது. இரவுகளில் கடலுக்கை வெடிச்சத்தங்கள் கேட்டன. எல்லா மீன்பிடி வள்ளங்களும் கரையில கவிண்டு கிடந்தன. நேவியை உச்சிப்போட்டு சிலர் போயிட்டு வந்தார்கள். அப்பிடிப்போன பரன் அண்ணா ஒருநாள் வராமலேயே போனார். ரண்டு மூண்டு நாள் கரையில சோறு தண்ணி இல்லாமல் அவரின்ரை மனிசி காத்திருந்தா பிள்ளைத்தாச்சி வயிற்றோடு..

சின்ராசுமாமா தன்ரை மூன்று வள்ளங்களையும் கொண்டு கிளாலிக்கு வெளிக்கிட்டார். “இனித் தொழில் சரிவராது. கிளாலி ஓட்டம் செய்வமெண்டு போறன்” என்றார் அவர். ஆனையிறவிலும் பூநகரியிலும் ஆமி இருக்க யாழ் குடாநாட்டுச் சனங்கள் கிளாலிக் கடலால வன்னிக்கும் வவுனியாக்கும் கொழும்புக்கும் போய்க்கொண்டிருந்தினம். அதுக்கையும் நேவிக்காரன் வந்து இடையில சனத்தை மறிச்சு வெட்டியும் சுட்டும் தன்ரை விளையாட்டைக்காட்டிக் கொண்டுதான் இருந்தான். சின்ராசு மாமாவின் மூன்று வள்ளங்களும் கிளாலிக் கடலில் இரவுகளில் ஓடின. ஒரு வள்ளத்தோடு மிச்ச இரண்டு வள்ளத்தையும் கயிற்றால் இணைத்து அவரே ஓட்டியாவும் இருந்தார். அந்தநேரம் அவரின்ரை பொக்கற்றுக்கை சிகரெட்டுகள் எட்டிப்பார்த்தன.

திடீரென்று ஒருநாள் சின்ராசு மாமா ஓடிவந்தார். “அவன் அங்கை கிளாலியெல்லாம் வந்து பிடிச்சிட்டான். வள்ளங்கள் கரையில நிக்குது. ” என்று பதைபதைத்தார். மூன்றோ நாலு நாளில் ஒபரேசன் யாழ்தேவியை புலிகள் முறியடித்து இராணுவத்தினரை விரட்டியடித்தனர் என்ற செய்தி வந்தபோது “கிளாலியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வள்ளங்களை இங்காலை கொண்டுவரும்” எனப் போனார். போனவர் 3 வள்ளங்களினதும் எரிந்த எலும்புக்கூடுகளைத்தான் கண்டார்.

அன்றிலிருந்து சின்ராசுமாமா ஒடுங்கிப்போனார். கரைவலை களங்கண்ணியென்று போறதையும் நிப்பாட்டினார். வருத்தங்களும் வந்து ஆளும் நல்லா கொட்டுண்டு போனார். “என்ரை சாம்பலை இந்தக்கடலுக்கை கொட்டுங்கோடா” என்றெல்லாம் புசத்தினார்.

பிறகு யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சு கடலுக்கை நேவிட்டை காட்ட ஸ்பெசல் ஐடென்ரி காட் எல்லாம் கொடுத்து இத்தனை மணிக்குப்போய் இத்தனை மணிக்கு வா என்று நேரத்தைக் கட்டுப்படுத்தி தீடீரென்று போகாதையென்று நிறுத்தி கடலில வந்து மீனைப்பறித்து என எல்லாவற்றையும் நடாத்திக்காட்டியது. பிள்ளைகளுக்காகவும் கடனுக்காகவும் இதெல்லாத்தையும் கடப்பதாய் அவர் சொன்னார்.

0 0 0

சின்ராசுமாமா கதைத்தார். “இப்ப நான் சிகரெட்டெல்லோ பிடிக்கிறன்” என்றார் அவர். இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்லை கடல் தடையெல்லாம் விலத்தி மீன்கள் கொழும்புக்கு போகுதாம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவரது கடலம்மா திரும்பவும் தன் மடியைச் சுரக்கத்தொடங்கியிருப்பாள்.
ஆனால்…
ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?

சின்ராசு மாமா இந்தக் கேள்விகளை எல்லாப்பக்கமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். உப்புச்சப்பில்லாமல் “சந்தோசம் ” என்றேன்.

“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?

இந்தக்கதையின் கடைசிப்பந்திக்கு முன்பதாக இதை எழுதிய சயந்தனுக்கு ஒரு டவுட் வந்தது. இந்தக்கதையை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என அவர் யோசித்தார். அவருக்குத் தெரிய அவரின்ரை எந்த நண்பரோ.. அல்லது நண்பரின் மகளோ எந்தப் பத்திரிகையிலும் வேலை செய்யவில்லை. இந்தக்கதையை யாரும் ஒரு பொருட்டாகத்தன்னும் மதிப்பினம் என்று சயந்தனுக்குத் தோன்றவில்லை. அவர் தனக்குத் தெரிந்த ஒரு பேப்பருக்கும் தெரியாத ரண்டு இணையத்தளத்துக்கும் இந்தக்கதையை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

எழுத்தாளர் சயந்தன் மூன்று ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு கடிதம் எழுதினார். அன்புள்ள ஆசிரியருக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கதையையும் மற்றும் தனி இணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிற இதன் முடிவும் உங்களது பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் தயவுசெய்து பிரசுரிக்கவும் என்று கடிதங்களை எழுதினார். பத்திரிகைக்கு ஏற்றதாக இருந்தால் என்றதை தனியே அடிக்கோடிட்டார் சயந்தன்.

ஆசிரியர் : ஒருபேப்பர்.
கதையின் முடிவு :

சின்ராசு மாமா சொன்னார். “தம்பி நான் பச்சைத் தமிழனடா.. உவை மயிராண்டியள் பெர்மிசன் தந்து.. நான் போய் கடலில இறங்கவோ.. ?உப்பிடியாப்பட்ட ஈனத்தொழில் எனக்கு வேண்டாமடா.. பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனையேன்” என்று சொன்ன மூன்றாவதோ நாலாவதோ வாரத்தில் சின்ராசு மாமா பட்டினியால் செத்துப்போனார்.

ஆசிரியர் தமிழரங்கம்
கதையின் முடிவு :

சின்ராசு மாமா ஓடிப்போய் குசினிக்கை ஒரு உலக்கையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினார். ஓடமுதல் அவர் சொன்னார். மீனவத் தோழர்களே.. நாம் நம்மைத்திரட்டி கூட்டுப்புரட்சியை ஏற்படுத்தி – அதனூடாக நமது கடலை நமக்காகப்பெறுவோம். நமது எதிரி ஆமிக்காரன் மட்டுமல்ல.. சம்மாட்டியாரும்தான்.” முதலில் எல்லோரும் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். சம்மட்டியார் ஊரைவிட்டு ஓடிப்போயிருந்தார். பிறகு எல்லோரும் ராணுவ முகாமுக்கு ஓடினார்கள்.

ஆசிரியர் சத்தியக்கடதாசி
கதையின் முடிவு

சின்ராசு மாமா சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்லுறன் கேளுங்கோ . வெள்ளாளர் மீன்பிடிக்க கடலுக்கை போவதில்லை என்ற காரணத்தால தான் ஓம்.. அந்த ஒரு காரணத்தினால தான்.. இதுவரை காலமும் புலிகள் நாங்கள் சுதந்திரமா மீன்பிடிக்க ஒரு வழியைச் செய்து தரேல்ல. இப்ப ராணுவம் அதைச் செய்திருக்கு. அந்த ஒரு காரணத்திற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். எங்கே எல்லோரும் பாடுங்கள்.. நமோ நமோ தாயே.. நம் சிறிலங்கா.. நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி

By

Read More

× Close