பெயரற்றது – சிறுகதை

“ஐயாத்துரை, இப்ப என்னத்துக்கு ஒப்பாரி வைக்கிறாய், இப்ப என்ன நடந்து போட்டுது.. ” அப்பம்மா அவரை சமாதானப்படுத்தினாள்.

சாந்தாக்காவிற்கு சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் மகள் பிறந்திருந்தாள். முன்றாம் நாள் அவரையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டிவந்தார்கள். இவன் பொழுது போகாத சமயங்களில் அவவின் மூத்தபிள்ளையோடு விளையாடினான். இரண்டு கைகளிலும் துாக்கி பறப்பது போல் சுழற்றியபோது அவள் கிலுகிலுவெனச் சிரித்தாள். ஒருநாள் பிறந்த குழந்தையை வருடியபடியிருந்த சாந்தாக்கா விரக்தியான சிரிப்பொன்றினுாடே “என்ரை மகள் பிறக்கும்போதே அகதி” என்று சொன்னதை தாங்க முடியாமல் இருந்தது.

சித்தப்பாவும் இரண்டு இளைஞர்களும் வந்திருந்தார்கள். வெளியே ஒழுங்கையில் பஜிரோ நின்றது. நிசான் என்பதை நேசன் என எழுத்துக்கூட்டி இவனுக்குக் காட்டிய அதே பஜிரோ. ஒருநாளைக்கு அதிலேறி ரியுஷன் வரையாவது போக வேண்டுமென்றொரு ஆசை இவனுக்கு இருந்தது. இவனின் விருப்பத்தை சித்தப்பா ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. அவர் தலையைக் குனிந்திருந்தார். நீண்ட அமைதிக்குப் பிறகு “வன்னிக்குப் போறது நல்லம்..” என்றார்.

“நீ ஒரு சொல்லுத்தன்னும் முதலே சொல்லியிருந்தா கொஞ்சம் ஆயத்தங்களோடை வந்திருப்பமெல்லே, இஞ்சை பார், ஒண்டுக்கும் உருப்படியான உடுதுணி இல்லை.” அப்பம்மா அவரைக் கடிந்து கொண்டாள்.

“எனக்கும் அண்டைக்கு இரவுதான் தெரியும்..”

கொஞ்ச நேரத்தில் அவர் புறப்பட்டார். “அண்ணி, சனங்கள் எங்களைத் திட்டுறது உண்மைதான். நியாயமும்தான். சொல்லுறனெண்டு குறை நினைக்காதைங்கோ, பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வன்னிப்பக்கம் போங்கோ, இந்த இடமும் நிரந்தரமில்லை.”

இவன் கேற் வரை நடந்தான். சித்தப்பா நின்று திரும்பி ரவியண்ணை வீட்டையும் சனங்களையும் ஒருதடவை பார்த்தார். “ரவியண்ணை மாதிரியான ஆட்களை எங்கடை போராட்டம்தான் உருவாக்கியது. சனங்களுக்கு வீடுகளைக் கொடுத்து வளவுகளைக் கொடுத்து எந்த வேற்றுமையும் பாராமல் நாங்கள் ஒரு இனமென்ற ரீதியில ஒன்றுபட இந்தப் போராட்டம்தான் உதவியிருக்கு.. ”
இவனுக்கு அது உண்மையாயிருந்தது. ரவியண்ணை வீட்டிலன்றி வேறெங்கும் பனம்பாத்திகளைக் காணவில்லை. வெறும் வளவுகள் மிளகாய்ச் செடிகளால் நிறைந்திருக்கவில்லை. இருந்தாலும் “இந்த இனத்தின்ரை ஒற்றுமையை உலகுக்குக் காட்ட எத்தினை தடவை வேண்டுமானாலும் இடம் பெயரலாம்” என்று சித்தப்பா சொன்னதைத்தான் சரியென்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.

நான்காம் நாளும் விடிந்தது. காலையிலேயே பாணுக்கு வரிசையில் நிற்கப்போய், இவனது முறை வருவதற்கு ஒன்றிரண்டு பேரே முன்னால் நிற்கிற நிலையில் கிபிர் விமானம் தலைக்குமேலே சுற்றத்தொடங்கியிருந்தது. பேரிரைச்சலைக் கோடாக இழுத்தது போல சத்தம் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக மாறி மாறி காதைப் பிளக்க வைத்தது. வேலியின் அருகாகப் பதுங்கியவாறு வீட்டிற்கு ஓடிவந்திருந்தான். எல்லோரும் மரத்தைச் சுற்றிக் கீழே விழுந்து குப்புறப்படுத்திருந்தார்கள். எங்கோ துாரத்தில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. அப்பொழுது பக்கத்திலிருந்தவனுக்கு பத்து வயதும் நிரம்பியிருக்காது. அவன் “அண்ணன், ரொக்கட் அடிக்கிறான்” என்றான்.
கிபிர் சத்தங்கள் ஓய்ந்தபிறகு இவனுக்கு திரும்பவும் பாணுக்குப் போகத் தோன்றவில்லை. விறாந்தையில் படுத்திருந்தான். சற்று நேரத்தில் ஐயாத்துரை மாஸ்டர், ஷொப்பிங் பைகளில் ரோஸ்பாண்களை நிறைத்தபடி வந்தார். அவரது முகத்தில் “காம்ப் அடித்த” பெருமிதக் களை தெரிவதாக இவனுக்குத் தோன்றியது. மாமி கத்தத் தொடங்கினார்.

“கிபிர் அறம்புறமாச் சுத்தியடிக்கிறான். பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவமெண்டில்லை. நிண்டு பாண் வாங்கிக் கொண்டு வாறியள், என்ன மனிசனப்பா நீங்கள்.”

“எடி போடி விசரி, ஒவ்வொரு நாளும்தான் அவன் குண்டு போடுறான். அதுக்காக மனிசர் பட்டினி கிடக்க முடியுமே. நீ சம்பல் இடி, ரோஸ் பாணுக்குச் சோக்கா இருக்கும்..”
ஐயாத்துரை மாஸ்டர் இந்த நான்கைந்து நாட்களிலேயே தன் வாத்தியார் புத்தியைப் பயன்படுத்தி தனக்குக் கீழே அணி ஒன்றை உருவாக்கியிருந்தார். “எல்லாரும் வாருங்கோ பிள்ளையள் விறகு பொறுக்கியருவம், கிளம்புங்கோடி பாணுக்குப் போவம்..” என்று ஒரு கொமாண்டரைப் போல ஆகியிருந்தார். எரிச்சலாக இருந்தாலும் அணியில் இருக்கிற தமிழினிக்காகவும் கிருஷாந்திக்காகவும் இவன் தன்னையும் அதில் இணைத்துக் கொண்டான்.

ஒருநாள் “தம்பி டோய், இந்தா நீயும் தீபனும் இந்த ரண்டு பெடியங்களோடை போய், கோயில் தாண்டி வாற காணிக்குள்ளை தென்னம் பாளையள் கிடக்கும். பொறுக்கி வாருங்கோ” என்று இவனைப் பிரித்து அனுப்பிய போது இவன் மனதிற்குள் கறுவினான். “ரண்டு பெட்டையளையும் சேர்த்து அனுப்பினால் குறைஞ்சே போயிடுவியள்..” அன்றைக்கே அணியிலிருந்து விலகுவதென முடிவு செய்தான். நல்ல வேளையாக காலை கிபிர் வந்து அதனைச் செய்தது.

ஆனாலும், கோயிலடிக்குப் போக மனம் அவாவியது. அங்கே இயக்கமுகாமொன்றிருந்தது. சென்ற முறை விறகு பொறுக்கப்போனபோது கண்டிருந்தான். சீற்றுக்களால் கூரை வேயப்பட்ட நீண்ட கொட்டகையைச் சுற்றி தகரங்களால் அடைத்திருந்தார்கள். புதிதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் வேலை முடிந்துவிடவில்லை. வெளியே மரங்களுக்கிடையில் இழுத்துக்கட்டிய கயிற்றினில் சாரங்களும் சேட்டுக்களும் காய்ந்து கொண்டிருந்தன. முகாமைக் கடந்து சென்ற போது தீபன் “காயக்காரரை கொண்டு வந்து விட்டிருக்குப் போல” என்றான்.

அவர்களில் பலர் ஊன்றுகோல்களுடன் திரிந்தனர். உள்ளே சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஒன்றிரண்டுபேர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்ததை இவன் கண்டான். பலமான சிரிப்புச் சத்தங்களும் கேட்டன. விறகுகளோடு திரும்பிய போது முகாம் வாசலில் நின்றவரின் இடது கண் வெறுமனே சதைத் துண்டமாக ரத்தச் சிவப்பில் இருந்தது. அவர் பு்ன்னகைத்தார். “தம்பியாட்கள் எந்த இடம்..”

நெற்றியின் கீழாக ஒரு செந்நிறக் குழியைப் போலிருந்த அவர் முகத்தை ஏறிட்டுப்பார்ப்பது இவனுக்கு அந்தரமாயிருந்தது. தலையைக் குனிந்தபடி சொன்னான். தனது சேட்டுப் பொக்கற்றுக்குள்ளிருந்த கருநிறக் கண்ணாடியொன்றை அணிந்து கொண்டவர், “முன்னேறிப்பாய்ச்சல் சண்டைநேரம் அந்த ஏரியாக்களிலதான் நிண்டனான். உள்ளை வாங்கோ”

இவன் “ஓம்” என்று உள்ளே போனான். இருபது இருபத்தைந்து இளைஞர்கள். ஒவ்வொருவரும் உடலில் ஏதோ ஒன்றை இழந்திருந்தார்கள். அந்த வலி முகத்தில் தெரியவில்லை. மனதின் அடி ஆழத்தில் இருக்குமோ என்னவோ, பம்பலும் பகிடியுமாக இருந்தார்கள். இரண்டு கால்களுமற்று சக்கர நாற்காலியை கைகளால் உந்தி வந்தவர், “தம்பியவை, இவன் கூப்பிட்டான் என்று உள்ளை வந்தீங்களா.. இண்டைக்கு உங்களை அறு அறு என்று அறுத்து காதிலை ரத்தம் பாக்காமல் விடமாட்டான் இவன்” என்று சிரித்தார்.

யாரோ உள்ளே, “டேய் என்ரை பென்ரரை எடுத்துப் போட்டவன் ஆராயிருந்தாலும் மரியாதையா தந்திடுங்கோ, இல்லாட்டி இண்டைக்கு இரவுக்குள்ளை என்ரை கடி சொறி அவங்களுக்குப் பரவும்” என்று கத்த, சிரிப்பொலி நிறைந்திருந்தது.

இரவு இவனுக்கு நித்திரை வரவில்லை. தீபனோ, ஐயாத்துரை மாஸ்டரின் குறட்டை ஒலியோ காரணமாயிருக்கவில்லை. நினைவு முழுவதும் அந்தப் போராளிகள் ஆக்கிரமித்து நின்றார்கள். அவர்கள் சித்தப்பா சொன்னதுபோல இனத்தின் விடுதலைக்கு மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் விடுதலைக்கும் தங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் உடலை கொடுத்திருக்கிறார்கள். பலர் உயிரையே கொடுத்திருக்கிறார்கள். இப்படியிருக்க தீபன் காலைப்போடுகிறான், மாஸ்டர் குறட்டை விடுகிறார் என்றெல்லாம் சிந்திப்பது சுயநலம் என்றவாறாக யோசனைகள் ஓடின.

0 0 0

தீபன்தான் அந்தக்கிணற்றை அடையாளம் காட்டினான். முகாமைத்தாண்டி சற்று அப்பால் சென்றால் கோயிலுக்கு அருகாக கப்பியில் தண்ணீர் அள்ளக்கூடிய சிறிய கிணறு. கயிறு முடிச்சிடப்பட்ட வாளியொன்றும் இருந்தது. தண்ணீர் தெளிவாயிருந்தது. ரவியண்ணை வீட்டின் கிணற்றில் தண்ணீர் ஒரு மாதிரியான செம்மஞ்சள் நிறத்தில் எப்பொழுதும் தரைதட்டியபடி இருந்தது. இரவு ஊற்றில் கொஞ்சம் நிறைந்திருக்கிற நீரும் காலையில் சமையலுக்கும் வேறு தேவைகளுக்கும் எடுக்கிற போது தீர்ந்து விடுகிறது.

இவன் தன் உடம்பில் புதுமாதிரியான நாற்றம் கிளம்புவதாக உணர்ந்தான். வியர்வையும், புழுதியும் சமவிகிதத்தில் கலந்தமாதிரி இருந்தது. குளித்தால் நன்றாயிருக்கும். தனியே முகத்தையும் கால்களையும் மட்டும் கழுவி இன்றோடு ஆறாவது நாள். “பின்னேரம் குளிப்பம்” என்றான் தீபன். துவாயை கழுத்தில் சுற்றிக்கொண்டு கிணற்றடிக்குப் போனபோது அங்கே ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்தவரை எங்கேயோ கண்டதாய்த் தோன்றியது. சற்று யோசித்தபோது சிக்கினார். அன்றைக்கு பாணுக்கு வரிசையில் இவனுக்கு முன்னால் நின்றவர். கிபிரின் இரைச்சல் காதைக்கிழிக்கத் தொடங்கியபோது வரிசை குலைந்து ஓடத்தொடங்கியது. அப்போது வேலியோரமாக ஓடியவர் அங்கிருந்த பெரிய கல்லொன்றைக் காவி வந்து இவனுக்கு முன்பாக நிலத்தில் போட்டார். பிறகு இவனைப்பார்த்து மூச்சு வாங்க “தம்பி, வடிவாப்பாரும்.. இது என்ரை இடம். சரியே.. உமக்கு முன்னாலை.. நான் திரும்ப வரேக்கை பிறகு இடைக்குள்ளை புகுந்ததென்று சொல்லப்படாது..” என்று விட்டு ஓடியிருந்தார். மீள நினைத்தபோது உதடுகளோரம் சிரிப்புப் படர்ந்தது.

சோப்புப் போட்டுக் குளித்தால் நன்றாயிருக்கும். கொண்டுவரவில்லை. அருகில் எங்காவது புற்றுமண் இருக்கிறதா எனத் தேடினான். சித்தப்பா புற்றுமணலை உடலில் தேய்த்துக் குளிப்பார். சவர்க்காரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவியபோது செவ்வரத்தம் பூச்சாற்றை உடலில் தேய்த்துக் குளிக்கலாம் என்று எங்கோ சொன்னதைக் கேட்டு பூவை அரைத்து வடிகட்டி சாற்றினைப் பிழிந்து உடலில் தேய்த்து ஒரு முறை குளித்துப்பார்த்தான். உடல் முழுவதும் வழு வழுவென்று ஆகியது. எத்தனை முறை தண்ணீரை ஊற்றினாலும் போகவில்லை. அப்படியே அடிவளவுக்கு ஓடிப்போய் புற்றுமண்ணை உடைத்து அள்ளிப் பூசியபோதுதான் நொளுநொளுப்பு வெட்டிப்போனது. நல்லவேளையாக பனம்பழச்சாற்றைப் பரிட்சித்துப்பார்க்கவில்லை. அது உடுப்புக்களுக்குத்தான் நல்லதென்றார்கள். உதயன் பேப்பரிலும் வந்திருந்தது. ஆனால் கிணற்றடிவளவு வாத்தியார் தன் வேட்டியை பனம்பழச்சாற்றில் தேய்த்துத் தோய்த்துக் காயவிட்டபோது நல்லையாவின் மாடு வேட்டியை ஒன்றிரண்டு தடவைகள் முகர்ந்தும் நக்கியும் பார்த்துவிட்டு வேட்டியை சப்பி இழுத்துக் கொண்டு ஓடியது.

தீபன் ஒண்டுக்கிருக்கப்போனான். வரிசையில் கல்லுவைத்தவர் சோப்புப் போடத்தொடங்கிய, இவன் முதல் வாளித்தண்ணீரை எடுத்து கைகளில் ஏந்திய நேரம் திடுப்பென குரல் ஒலித்தது.

“ஆரைக் கேட்டுக் குளிக்கிறியள் இங்கை..” சற்று வயதானவர் வெண்மையான வேட்டியுடுத்து வெறும்மேலுடன் முன்னால் நின்றார். மார்பில் வெண் பஞ்சினைப்போல ரோமங்கள் குழைந்திருந்தன. வீபூதியை மூன்று கோடுகளாக நெற்றியில் பூசியிருந்தார். “என்ன நடக்குது இங்கை..”
தீபன் ஒண்டுக்கிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு ஓடிவந்தான். சோப்புப் போட்டவர் முகத்துச் சோப்பு நுரையை வழித்தபடி பார்த்தார். இவன் தண்ணீரை உடலில் ஊற்றுவதா இல்லையா என்னுமாப்போன்றொரு நிலையில் நின்றிருந்தான்.

“இடம்பெயர்ந்து வந்திருக்கிறம். குளிச்சு நாலைஞ்சு நாளாகுது. அதுதான்.. ஏனய்யா ஏதும் பிரச்சனையோ.. ” என்று இழுத்தார் சோப்பிட்டிருந்தவர்.