ஆறா வடு! பேஸ்புக் கருத்துக்கள்

ஆறா வடு நாவல் குறித்து பேஸ்புக் தளங்களில் பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு

ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என நான் நம்புகிறேன் சயந்தனை – ஆறாவடு படித்தனன் மூலம் – . பெருநாவல் ஒன்று எழுதி அவர் அதை நிரூபிக்கக்கூடும்.

தமிழினி வெளியீடு என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சயந்தனின் ஆறாவடு நாவலை வாங்கினேன் , அங்கதமும் , மெலிதான விமர்சனமும் கொண்டு ஈழப்போர் , ஈழவாழ்க்கை , அகதியாவதற்கான போராட்டம் இவற்றுடன் விரிகிறது ஆறாவடு , செயற்கையான அரசியல் பிரச்சாரமோ , வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமோ இல்லாமல் இலக்கியப் படைப்பாக வந்திருக்கிறது ஷோபாவின் கொரில்லா படிக்கும்போது என்ன உணர்ந்தேனோ அதுவே ஆறாவடுவிலும் , என்ன – புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவரின் பார்வையில் இருக்கிறது .ஆனால் உண்மைக்கு பல முகங்கள்தானே ?

முழுநாவலிலும் ஓடும் மெல்லிய அங்கதம் துயரத்திலும் கூடவே வருகிறது , கடைசிப்பகுதி திசை திரும்பி இதுவரை இருந்த யாதார்த்த நாவலாக இல்லாமல் குறியீட்டுத்தளத்தில் நுழைகிறதே என எண்ணினேன் , இல்லை , அது இன்னும் உச்சத்துக்கு கொண்டுபோகிறது நாவலை .

-அரங்கசாமி கே.வி

 

ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மனிதர்கள் காலின்றி தவிப்பது , நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் வாழும் சனங்களின் போராட்டமான வாழ்வில் தப்பிக்க இருக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் அரசியலையும் அம்பலப் படுத்தும் புதினம். வீரச் சாவுகளின் அல்லது விபத்துகளில் மரணம் என்பதற்கான வேறுபாடுகள் என்ன என்பதை கேட்கிறது. மக்களிடம் இருந்து விடுதலை இயக்கங்கள் அந்நியப்படும் தருணத்தையும் அழகாகச் சொல்கிறது.

-இளங்கோ கல்லாணை

 

சயந்தனின் ‘ஆறாவடு’ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் நாவலின் சிறப்புகள். முற்றுமுழுவதுமாக அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட பிரதியாக இருப்பது சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் சயந்தனின் கதைசொல்லும் ஆற்றல் ஆறாவடுவை மிக முக்கியமான இலக்கியப் பிரதியாக்குகிறது

நாவலில் இலங்கை – இந்திய இராணுவங்கள், அரசுகள் புலிகள், ஈபிஆர்எல்எவ், பிரபாகரன், வரதராஜப்பெருமாள் என்று எல்லோருமே தைரியமாக விமர்சிக்கப்படுகிறார்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அதிலும் முக்கியமாக நாவலின் முதன்மைப் பாத்திரமான விடுதலைப்புலி அமுதன் தன்னைத்தானே செய்துகொள்ளும் சுயகிண்டல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையே. இவற்றை சயந்தனின் காட்டமான விமர்சனங்களாக கொள்ளலாம். ஓர் எதிர் அரசியலை நாவல் முன்வைக்காமலிருப்பது என்னளவில் சற்று ஏமாற்றம். கண்டிப்பாக அவ்வாறான எதிர் அரசியல் இருக்கவேண்டும் என இலக்கிய நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனால் என்னளவில் நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவே. அதைத் தாண்டியும் ஆறாவடு இலக்கியமாக முக்கியமான பிரதியே. குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

-ஷோபா சக்தி

 

இப்ப தான் ‘ஆறாவடு ‘ படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகப் படிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது.எதார்த்தமும் உண்மைகளும் துயரங்களும் மனச்சாட்சியுமாக புத்தகம் முழுவதும் நம் கதைகள்.அநாவசியமாக எச்சொல்லும் இல்லை. தொடர்பற்று எச்சம்பவமுமில்லை.அத்துடன் எழுத்துப்பிழை எதுவும் இடையூறு செய்ய இதிலில்லை.பாராட்டுகள் சயந்தன்.

-தர்மினி

 

ஈழத்தமிழர்கள் குறித்து வந்திருக்கும் பதிவுகளில் சயந்தனின் ‘ஆறாவடு’ நாவல் முக்கியமானதாய் இருக்கும் என நினைக்கிறேன்…நெருக்கடியான வாழ்க்கை, இலங்கை அரசியல் சூழல், புலம்பெயர்தலின் துயரம் எல்லாம் சேர்ந்து கனக்கச் செய்யும் நாவல்..

-பிரியா தம்பி

 

சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள், மாற்று (?) இயக்கங்கள் எல்லோரையும் விமர்சித்திருந்தார். முன்னரெனில், ‘ஆறா வடு’வை வேறு கண்களால் வாசித்திருப்பேன் என்று நினைத்தேன். நாவலின் கட்டமைப்பும் நகர்த்திச் சென்றவிதமும் ‘நாயக’னின் பிம்பம் இல்லாத பிரதான பாத்திரமும் எல்லாப் புனிதங்களையும் கோபமெழாதபடிக்கு நோகாமல் கிண்டலடித்த மொழியும் நாவலின் சிறப்புகள். சின்னப்பெடியன்-மகா கிண்டல்காரன்-முகநூல் நடுநிலையாளன் என்றெல்லாம் நினைத்திருந்த நினைப்பை, ‘அருமையான படைப்பாளி’என்று இனி மாற்றிக்கொள்ளவே வேண்டும்

-கவிஞர் தமிழ்நதி

 

மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”.

“நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்
மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன்

-லேகா இராமசுப்ரமணியன்

 

அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல, இரு வேறு அரசியலையும் பற்றியன. ஆனால் Cat’s Table க்குக் கிடைக்கிற பவிசும் கவனமும் ஆறா வடுவுக்கு இப்போது கிடைக்காது.யாராவது அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வரை/Just finished reading a brilliant novel in Tamil by Sayanthan-Aaraa vadu ( Unhealed wounds). It would be a wise literary exercise to compare this novel with Ondaatje’s Cat’s Table. Both talk about Ships but what a difference in depth, politics and sensitivity!!!!!

-கவிஞர் சேரன்

 

சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.

அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

-டிசே தமிழன்

 

தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்தவை இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பணயம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் “நேரு ஐயா” என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம். நாவலின் இறுதிப்பாகங்கள் தொடக்கத்தைவிடக் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்’ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் “ஆறா வடு” முக்கியமான ஒரு நாவல்.

-நடராஜா முரளிதரன்

 

“ஆறா வடு” வாசிப்பதற்கு முந்தி நான் சயந்தனை வாசித்ததில்லை. “ஆறா வடு” வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு வேறு எதையும் வாசிக்க முடியாமல் இருந்தேன்.

ஹிந்துகள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியுள்ளவர்கள் என்று எனக்கேனோ சிறு வயது முதலே ஓர் எண்ணம் வடுக்கொண்டுவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமைக்கான ஒரு பொதுக் காரணி (common factor) இல்லையென்று படுகிறது. இந்தியாவில் இஸ்லாமிய, கிருஸ்துவ மேலாதிக்கமும் இலங்கையில் பௌத்தக் கையோங்கலும் அது காரணமாகத்தான் நேர்ந்தது/நேர்கிறது என்னும் நினைப்பிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.

“ஆறா வடு” நாவலை வாசித்து வருகையில் இது எனக்கு மேலும் உறுதிப்பட்டது. சாதி, பெண்ணடிமைத்தனம், குழுப் பிரிவினை யுத்தம் என இப்படி ஹிந்துகள் எங்கிருந்தாலும் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள்.

//எளிய பறைச்சாதி நீ.. அகதி நாய்.. ஈனப் பிறப்பு// என்றெல்லாம் பேசிய கோவிற் கிழார், இயக்கத்தாரால் செருப்புத்தண்ணி குடிப்பிக்கப்பட்ட பிறகும், என்ன சொல்லுகிறார்? //”நான் இனி இந்தக் கோயிலுக்கு, சாகும் வரை வரமாட்டன். இந்தக் காளி கோயில் இனி இந்தக் கதிரவேலனுக்குச் சொந்தமில்லை..”// அதாவது, இனத்தாரை அரவணைக்க வேண்டும் என்கிற புத்தி வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிற கைகழுவல்தான் நடக்கிறது.

பிறகும் எளியவர்கள் ஓரொருவரும் போராடுகிறார்கள். நம்பி ஒப்புக்கொடுத்து ஏமாறுகிறார்கள்.

சிங்களர்களைப் பற்றி அவதூறு பேசாமலே சிங்களர்களுக்கும் சேர்த்து இனப்போர் அழிவுகளைப் பேசுகிறது இந் நாவல். //பண்டார இராணுவத்தில் இணைந்தான். மகாவம்சம் நீள்வதைப் பற்றி அவன் யோசித்திருக்கவில்லை. சம்பளத் தொகை மேலும் அதிகரிக்குமா என்பதாகவே அவன் நினைப்பு இருந்தது. அதிகாரிகள் ஒருபக்கத்தாலும் புலிகள் மறுபக்கத்தாலும் அவனை வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் கொடும் வதையாகக் கனவுகள் இருந்தன…. முதலாவது வாரம் ஓர் இரவில் அலறி எழுந்ததும் மூளையைப் போட்டுக் கசக்கினான். இரண்டாவது வாரம் இடைத்தரகர் மூலம் ஏஜன்ஸியை சந்திக்கக் கூடியதாகவிருந்தது. மூன்றாவது வாரம் முடிவதற்கு முன்பாக இத்தாலிக்கு வள்ளமேறினான்.//

தமிழினத்துக்கு மட்டுமல்ல உலகளவும் போராளிகளுக்கு நேரும் நிலையாமை இது என்று இந் நாவலில் கட்டைக்கால் வழியாக செயந்தன் உணர்த்தி இருப்பது இலக்கிய உச்சம்.

வாசித்தோம், சரி, …?

எரி நடுவில் விறைத்தெழும் பிணமாக உணர்கிறோம்.

-ராஜசுந்தரராஜன்

(ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு கா…ரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே கொண்டிருந்தேன். முன்னால் உள்ள அத்தியாயங்களை தனித்தனி நல்ல சிறுகதைகளாக பார்க்க முடியும். பல நல்ல சிறுகதைகளை ஒரு நாரில் தொடுத்த கதம்பச்சரம் போல தோன்றியது. போகப்போக அவசரப்பட்டிருக்கிறார் என்றே நானும் எண்ணினேன். என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். நான் உசாவியதில் 2009இல் தொடங்கி பின் போட்டுவைத்து 2011 தொடர்ந்து முடித்ததாக சொன்னார். அவருக்குள் எற்பட்ட மாற்றங்களே மேலே நான் உணர்ந்த மாற்றங்களுக்கு காரணம். தொடகிய காலத்திலிருந்து தொடர்சியாக எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். கசகரணம் ஆறாவடு இரண்டுமே தொடற்சியான துன்பம் என்ற ஒரு பொருள் தருகின்ற சொற்கள். அண்மைக்காலத்தில் வெளிவந்த இரண்டு ஈழநாவல்லளுக்கு ஒரே பொருள் படும் தலைப்பு அமைந்ததே சிறப்புத்தான்.

-கவிஞர் திருமாவளவன்

//கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித் தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக் கிட்டத்தில் பார்த்தார்//

//எனக்கும் இயக்கத்தில் கோபம் கோபமாய் வந்தது. பிறகு நான்தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது. பிறகு சனங்களில் கோபம் வந்தது//

//பின்னால் நின்ற சனங்களுக்கு இந்திய இராணுவமா பிரபாகரனா என்பதெல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு ஓர் ஒழுங்கில் வாழ்க என்றும் ஒழிக என்றும் கத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் சிலவேளைகளில் பிரபாகரன் வாழவும் இந்தியா ஒழியவும் வேண்டியேற்பட்டது.//

//படிப்பதற்காய் போர் செய்வோம் என்று பிரச்சாரங்களில் சொன்னார்கள். முடிவில் பத்துப் பன்னிரண்டு பேரென்று ஒரேயடியாக கிளம்பி இயக்கத்துக்குப் போனார்கள். வீட்டுக்குப் போய் பள்ளிக்கூட யூனிபோர்மை கழட்டிவைத்துவிட்டு இயக்கத்துக்குப் போகும்படி பள்ளி அதிபர்கள் அழாக் குறையாக ப்ரேயர்களில் அறிவித்தார்கள்.//

//உங்களுக்கு ஆயிரம் வேலையள் இருக்கும். ஆமியைச் சுடுறது மட்டுமல்லாமல் சும்மா நிண்டவன் வந்தவன் போனவனை எல்லாம் சுடவேண்டியிருக்கும்…//

//எளிய பறைச் சாதி நீ. என்னைத் தள்ளிவிடுறியோ அகதி நாயே… இனிச் சரிவராது. ஈனப் பிறப்புகளுக்கு ஒண்டு சொல்லிறன்… இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளை எல்லா எளிய நாய்களும் வெளியாலை போயிடணும். ஒண்டும் இங்கை தங்கேலாது…// கோயிற்காரன்.

ஆறாவடு நாவலில் நான் அலைக்கழிக்கபட்ட இடங்கள் இப்படிப் பல. புதியதோர் உலகம், கொரில்லா… என ஈழப் போராட்ட இயக்கங்களுக்குள் பயணிக்க வைக்கும் நாவல்கள் வரிசையில் இப்போ சயந்தனின் ஆறாவடு வந்திருக்கிறது. பேசப்படவேண்டிய நாவலாக இதுவும் தன் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கதைசொல்லி தன்னை ஒரு சுயவிசாரணை செய்யும் புள்ளிகளை ஆங்காங்கே வரைந்து செல்கிறார். எந்தத் துதிபாடலுமின்றி, ஆர்ப்பாட்டமுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. முரண்களை அருகருகே வைத்து வாசகனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும் போக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

யாழ் மேலாதிக்கத்தின் சாதிய வெறி உறுமும் இடங்களையும், பெண்கள் மீதான ஆண்வக்கிர வீணிகள் ஒழுகும் இடங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. “முன்னாள் செருப்புக் கள்ளனும் இந்நாள் தேசத்துரோகியும்” என்ற வார்த்தைகளுக்கிடையில் இயக்கத் தண்டனைகள், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட இயக்கங்களின் நிர்ப்பந்தங்கள், பழிவாங்கல், தற்காப்பு… என்றெல்லாம் வெளிகளை காட்டிச் செல்வதன்மூலம், “துரோகி” போன்ற ஒற்றைச் சொல்லாடலை தகர்த்துச் செல்கிறது நாவல்.

இந்திய இராணுவ காலம், ரணில் உடனான சமாதான காலம் என்பவற்றினூடாக வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். மொழி பெயர்ப்பாளராக இருந்த நேரு மாஸ்டர் மூலம் இயக்கம் மீதான விமர்சனங்கள் முளைத்த இடங்கள் எளிய பதில்களால் எதிர்கொள்ளப்படுவதை நயமாகச் சொல்கிறார் கதைசொல்லி. மேலிடத்திலிருந்து ஊற்றப்படும் நியாயப்படுத்தல்களை கைமண்டையில் ஏந்தி தாகமும் தீர்த்து, சிந்தவும் விடும் பதில்கள் அவை.

“பெட்டைச் சேட்டை” விடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையின் சுவாரசியத்தின் பின்னால் உள்ள கொடுமை, தனது பிள்ளையின் பிறந்தநாளன்று பிள்ளையை முதுகில் சவாரி ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தவனை கொன்ற “துரோகி ஒழிப்பு” கொடுமை, இந்திய இராணுவத்தோடு சேர்ந்தபின் அல்லது சேர்க்கப்பட்டபின் அந்த இயக்ககரார்களின் அட்டகாசம், பின் இந்திய இராணுவத்தால் கைவிடப்பட்ட அவர்களின்மீது பாய்ந்த “துரோகி ஒழிப்பு”… என்றெல்லாம் நாவல் அழைத்துச் செல்கிறது.

சிங்கள தமிழ் அகதிகளாக இத்தாலிய கடற்பயணத்தின் போதான மனிதாபிமான உறவுமுறைகள் கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. கடற் பயணத்தை அதன் ஈரத்தோடும் இருட்குவியலோடும் அலைக்கழிப்போடும் அந்தப் படகு மனிதர்களின் மனவெளிகளாக வரைந்து செல்கிறது.

இயக்கத்துக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அல்லது அதன் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட பெற்றோர்களின் துயரங்களை நாவலில் காணவில்லை. புலிகளால் துயருற்ற முஸ்லிம்களின் குரலையும் காணவில்லை. நாவலில் எல்லாவற்றையும் உள்ளடக்குதல் சாத்தியமா என்ற கேள்வி முக்கியமானது என்றபோதும், போராட்ட யுத்த அரசியல் பரப்புக்குள் கதைசொல்லி நிற்கும்போது மேற்கூறிய விடுபடல்கள் புறக்கணிக்க முடியாதது.

கதைசொல்லி தன்னை மிதப்பாகக் காட்டும் எந்த உத்தியையும் பாவிக்கவில்லை. மாறாக தன்னையும் சம்பவங்களையும் வாசகனின் விசாரணைக்கு திறந்துவிடுகிறார். முரண்களை அருகருகே வைத்துச் செல்வதன்மூலம் வாசகனிடம் பிரதியை விட்டுச் செல்கிறார். இலக்கிய உலகில் இதுவரை அறியப்படாமல் இருந்த சயந்தனின் முதல் நாவல் அவரை நல்லதோர் படைப்பாளியாக அடையாளம் காட்டியுள்ளது.

-Ravindran Pa

முன்முடிவுகளோடு புனையப்படாத நாவல் – ஆறா வடு வாசகர் கடிதம் :)

திரு. சயந்தன் அவர்களுக்கு

வணக்கம்.

ஆறா வடு – படித்தேன். நாவல் அழுத்தமாக வந்திருக்கிறது.
இந்த நாவலில் வரும் அமுதன் பாத்திரத்தை நீங்கள் என்றே கருதி படித்து முடித்தேன். தீபம் உரையாடலைப் பார்த்தபோதுதான் நீங்கள் இல்லை என்று தெரிந்தது. முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாக இந்த நாவல் அமையாதது சிறப்பு. புலிகள் மீதான, இந்திய ராணுவம் மீதான அரசியல் பார்வையையும் அவ்வாறே பதிவு செய்திருக்கிறீர்கள்.

நிவாரணமிட முடியாத வலிகளாகளோடே 21 அத்தியாயங்களும் இருக்கின்றன.இந்த நாவலில் இரண்டு பதிவுகளை முக்கியமாகப் பார்க்கிறேன்.
ஒன்று: சாமியின் துணியை எடுத்து சமைந்த பெண்ணும் பயன்படுத்து நிகழ்வு.
இரண்டும்: வள்ளத்தில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து பயணிக்கும் இத்தாலி பயணம். (சிங்களவர்கள் அதிகம் இருந்தால் நம் கதி என்ன? என்று ஒரு தமிழர் கேட்பதையும் கருத்தில் கொண்டுதான்)

முதலில் கடவுளும் மனிதனும் சமமாகும் கட்டம். இரண்டாவது மனிதனும் மனிதனுமே தானே கட்டயெழுப்பிக் கொண்ட எல்லா நிலைகளையும் கடந்து ஒருங்கிணையும் கட்டம். இதன் மூலம் எல்லா வேறுபாடுகளைச் சூழல்கள் மாற்றியமைத்துவிடும் என்றும் அந்த இயக்கம் இயற்கையிடம் மட்டுமே உள்ளது என்கிற புரிதல் வருகிறது.

நாவலில் 21 அத்தியாயத்தில் இத்ரிஸ் கிழவுனுக்கு செயற்கைக்கால் கிடைப்பது மட்டும் முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாகத் துருத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அந்த யுக்தியைப் பலர் பாராட்டுவும் கூடும்.

நன்றி

த.அரவிந்தன்

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார்.

போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவினை இலக்கு வைத்து இலங்கையிலிருந்து புறப்பட்டபோது சுவிஸில் அவருக்கு விமான நிலைய மாறும் வழியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருந்தபோது என்னவோ இசகு பிசகாகி பொலீஸாரிடம் சிக்கிக் கொண்டுவிட கனடா போகும் கனவை அப்போதைக்கு வெளியே நிறைந்திருந்த பனியில் புதைத்து விட்டு விமான நிலையத்தில் வைத்து சுவிஸில் தஞ்சம் கோரினார் நண்பர். அப்பொழுது அவருக்கு பத்தில வியாழன் நடந்து கொண்டிருந்ததாம். அது எப்பொழுதும் பதிய விட்டுக் கிளப்பும் என்பதால் – இப்பொழுது சுவிஸ் முகாமில் பதிய விட்டு பின்னர் கனடாவிற்கு கிளப்பும் என்று அவர் நம்பியிருந்தார்.

நண்பரது கனவுகள் முழுவதும் கனடாவினால் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் கனடாவோடு ஒப்பிட்டே அவர் பேசினார். இங்கே குளிர், மைனஸ் பத்துக்களில் போனால், இதென்ன குளிர் அங்கே மைனஸ் நாற்பது வரை போகுமாம் என்பார். குளிர்காலப் பயணங்களில் காரில் தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தால், இப்படியெல்லாம் கனடாவில் குடித்துவிட முடியாது. தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும் என்பார். ஒருநாள் – தெரியுமோ கனடாவில் வின்ரரில் வெளியில் ஒண்டுக்குப் போவதென்றால் முறித்து முறித்துத்தான் எறியவேண்டியிருக்கும் என்றார். கனடாக்காரர் யாராவதுதான் இதன் சாத்தியத்தை விளக்க வேண்டும்.

சுவிஸில் அவரது வழக்கு விசாரிக்கப்படாமலேயே காலம் இழுவுண்டது. சுவிஸில் விசா அற்றவர்கள் வேலையொன்றை நினைத்தும் பார்க்க முடியாது. தஞ்சக் கோரிக்கை முடிவிற்கு முன்னாலான தற்காலிக தங்குமிட அனுமதி வைத்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு வேலை வழங்குனரின் அனுமதி மட்டுமின்றி பொலிஸாரினதும் அனுமதி தேவைப்பட்டது. பொலிஸார் அவ்வாறான அனுமதியினை முன்னரைப் போல இப்பொழுது வழங்குவதில்லை. அவருக்கான தங்குமிட வசதி, மற்றும் மருத்துவக் காப்புறுதிகளை அரசு வழங்கியிருந்தது. அதைத் தவிர்த்து வாராவாரம் எழுபது பிராங்குகள் அவருக்கு கொடுக்கப்பட்டன. சுவிற்சர்லாந்தின் தனிநபர் வருமானத்தோடு ஒப்பிடுகையில் அது பத்து வீதத்திற்கும் மிகக் குறைவான தொகையாயிருந்தது.

நண்பர் விட்ட இடத்திலிருந்து கனடாவினைத் துரத்திப் பிடிக்கத் தொடங்கினார். மள மளவென்று அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடாவிலிருந்தும் யாரோ கவனித்தார்கள். இங்கிருந்து போலந்து – பின்னர் அங்கு போடிங் “உடைத்துக்கொண்டு” கனடாவிற்கு விமானம் ஏறுவது என்பதே திட்டமாயிருந்தது. வெற்றிகரமாக சூரிச் விமானநிலையத்தை விட்டும் மேலே பறந்தார் நண்பர். இருபத்து மூன்று கிலோக்களையுடைய ஒரு பயணப்பொதியும் ஏழு கிலோ அளவில் இன்னொரு கைப் பொதியும் அவரிடமிருந்தன. அதைவிட ஆதவன் என்கிற தமன்னாவின் படம் போட்ட சுவிஸ் இதழ் ஒன்றும் அவர் வசம் இருந்தது. பயணத்தில் படிப்பதற்காக..

போலந்தில் போடிங் உடைப்பதற்கு முன்னதாகவே அவர் மூக்குடை பட வேண்டிய சிற்றுவேஷனுக்குள் நுழையவேண்டியதாய் ஆனது. சுவிஸ் பொலிஸாவது பரவாயில்லை ரகம் என்றார் நண்பர். போலந்து பொலிஸாரில் ஒருவன் அவரது செவிட்டைப் பொத்தி அறைந்த போது வெள்ளைக் காரங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற பிம்பமே விழுந்து உடைந்து சிதறியதாம். நண்பருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவர் எல்லாவற்றையும் ஒப்புவித்தார். அவரைத்துாக்கி போலந்தில் ஒரு சிறைக் கூடத்தில் மூன்று மாதங்களுக்குப் போட்டார்கள். அப்பொழுது ஏழரைச் சனியன் முற்கூறு வேறு அவருக்கு நடந்து கொண்டிருந்ததாம்.

நண்பருக்கு சிறை புதிது. அவரது தஞ்சக் கோரிக்கை கேஸில் ஐந்தாறு மாதங்கள் வெலிக்கடை மகசீன் சிறைக் ‘கதை‘கள் வந்தாலும் அனுபவத்தில் இதுவே முதற்தடவை. சிறையில் அவரது செல்லில் இன்னும் மூவர் தங்கியிருந்தார்கள். தனித் தனிப் படுக்கைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த நண்பர் தன் மீது பெரும் போர்வையைப் போல படியும் மனச்சோர்வை அகற்ற ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் ஆதவன் இதழில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தைக் கத்தரித்து தனது தலைமாட்டில் ஒட்டிக் கொண்டார். தலைவரைப் பார்க்கின்ற போதெல்லாம் தனக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார் நண்பர்.

இந்த இடத்தில் நான் இன்னுமொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அட, அவரும் தற்பொழுது கனடாவில்தான் இருக்கிறார். அண்மையில் திருமணம் முடித்தவர் ஆதலால் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். அவர் கொழும்பில் என்னோடு படித்த காலத்தில் ஒரு பெண்ணை விழுந்தெழும்பிக் காதலித்தார். ஒருபின்னேரப் பொழுதில் தன் காதலையெல்லாம் கடைந்து திரட்டி வாழ்த்து அட்டையில் எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தார். அடுத்தநாள் காலை மற்றொரு பெண்ணொருத்தி வாழ்த்து அட்டையொன்றை அவரது கையில் திணித்தாள். “தங்கச்சி.. நான் உம்மோடு அப்படி நினைத்துப் பழகவில்லை” என்ற சொற்களை தயாராக வைத்துக் கொண்டு அட்டையைப் பிரித்துப் பார்த்தவருக்கு கரன்ட் கட்டாகி, உலகமே இருண்டு போனது. அது முன்னையநாள் அவர் தன் காதலிப்பெண்ணுக்கு கொடுத்த அதே அட்டை. அவள் அதை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தாள்.

நண்பர் தளரவில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகரும் போது சிம்மி நகரமாட்டாளா என்றார் அவர். சிம்மி என்பது அவளுக்கு அவர் வைத்த செல்லப்பெயர். இப்படியிருக்க நண்பர் கனடாவிற்கு கிளம்பிவிட்டார். அங்கிருந்தும் அம்மிக்கு அடிக்கலாம் என்று அவர் ஐடியாப் பண்ணியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவரது சிம்மியிடம் அவருக்காக நான் பேச வேண்டுமாம். (நண்பரது நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்) அடிப்படையில் அப்படியெல்லாம் பேசுகிற நபராக நான் இல்லை என்பதை அவருக்கு சொல்லியபடியிருந்தேன். எனக்குப் பயமாக இருக்கிறதென்றும் சிம்மி முன்னால் நின்றால் முழங்கால்கள் சிரட்டைகள் ஒன்றோடு ஒன்று தட்டி உதறல் எடுக்கிறது என்றும் நான் அவருக்கு எடுத்து விளக்கினேன்.

அப்பொழுதுதான் அவர் அந்த உளவியல் பாடத்தை எனக்கு நடாத்தினார். அவர் சொன்னார். “மனதைத் தளரவிடாதே.. அப்படி அவளுக்கு முன்னால் நின்று கதைக்கிற சமயங்களில் உனக்கு நடுக்கமாகவும் பயமாகவும் இருந்தால், மனதுக்குள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிப்பார். புதிய உற்சாகமும் துணிவும் பிறக்கும். பிறகு அவளோடு தயக்கமின்றி எனக்காகப் பேசமுடியும்.”

எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இந்த ரெக்னிக் என்னை ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடப்பண்ணியிருந்தது. “எடே.. இதைக் கேட்டால் அந்த மனுசன் இன்றைக்கே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போடும்” என்றேன்.

“தலைவரைப் பற்றி அப்படிக் கதைக்காதே என்று நண்பர் என்னைக் கண்டித்தார். ஏனெனில் அவர் அப்பொழுது ஒரு செயற்பாட்டாளராக பரிணமித்திருந்தார்.

கனடா நண்பர் கைக்கொண்டதைப் போன்றதான ஒரு உளவியல் உத்தியைத்தான் போலந்துச் சிறை நண்பரும் முயற்சித்திருக்க வேண்டும். அப்படி மன உற்சாகத்தை பீறிட்டு வரவழைத்துக் கொண்ட நண்பர் பொழுதைப் போக்க ஆதவன் இதழே கதியென்றிருந்தார். தொன்னுாற்றெட்டுப் பக்கங்களின் சமாச்சாரங்களையும் ஒப்புவிக்கிற நிலைக்கு அவர் வந்திருந்தார். இப்படி அவர் இதழைப் பிரித்து வைத்துப் படிக்கிற நேரங்களில் அட்டையில் சிரித்தபடியிருந்த தமன்னாவை விழுங்கி விடுவதைப் போல அறையிலிருந்த ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவன் பார்த்தபடியிருந்திருக்கிறான்.

அப்படியொருநாள் அவன் ரொய்லெட் போனபோது, ஆதவனை இதழை அவன் வாங்கிப் போனானாம். போனவனை நீண்ட நேரமாகக் காணவில்லை. இது தின வழமையாகத் தொடங்கியது. முதலில் நண்பருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அப்படியொருநாள் பிடிபட்டபோது அவன் இதழின் அட்டையைத் தண்ணீரால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். நண்பர் முகத்தைச் சுழித்து நுனி விரலால் காதுகளில் பிடித்து முயலைத் துாக்குவது போல அதை வாங்கிக் காய வைத்திருக்கிறார். காய்ந்த பிறகு தமன்னா இப்பொழுது கொஞ்சம் மொட மொடப்பாய் முறுகியிருந்தா.

அடுத்தநாளும் அவன் தமன்னாவைக் கேட்டிருக்கிறான். நண்பர் தரமுடியாது என்றார். இன்னும் இரண்டொருதடவை அவன் கேட்டபொழுது இவர் ஒரேயடியாகத் தரமுடியாது என்று கையை விரித்தபோது அவன் கையை நீட்டியிருக்கிறான். அருந்தப்பில் மூக்குத் தப்ப தாடையில் அவனது உருண்ட கை மொளிகள் பதிந்தன. அழுது கொண்டே தமன்னாவைத் தாரை வார்த்தார் நண்பர். இம்முறை அவன் சரிவரக் கழுவிச் சுத்தம் செய்திருக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். தமன்னாவும் இனித் தாங்க முடியாதென்றோ என்னவோ உதட்டோரமாகக் கிழிந்து போயிருந்தா. நண்பருக்கும் தாங்க முடியாது போய்விட்டது. இதழில் இருந்து அப்படியே தமன்னாவைக் கிழித்தெடுத்து இந்தா பிடி என் அன்புப் பரிசு என்று கொடுத்து விட்டாராம். அவன் அதில் நெகிழ்ந்து மேலும் இதுமாதிரியான புத்தகங்கள் உள்ளனவா என்று கேட்டானாம்.

என்ன மனிசரப்பா என்று இந்தக் கதையை முடித்தார் நண்பர்.

தலைவரைப் பார்க்கின்ற போது உங்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பலாம். அவனுக்குத் தமன்னாவைப் பார்க்கின்ற போது ஏதேனும் பீறிட்டுக் கிளம்பக் கூடாதா என்று நான் கேட்டேன்.

அதுக்கில்லையடாப்பா.. அவன் அப்பிடி அசிங்கப் படுத்திட்டுக் கொண்டு வந்து தந்த தமன்னாவை நான் இரவில தடவிக் கொண்டு படுத்ததை நினைக்கத்தான் வாந்தி வாந்தியா வருகுது என்று நண்பர் சொன்னதுதான் இந்தப் பதிவின் ஹைலைட்..

நண்பர் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் கனடாவுக்குப் பாய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த முறை அவர் புறப்படும்போது ஸ்ரேயா, ஸ்ருதி, திரிஷா, அசின் படங்கள் போட்ட ஆதவன் இதழ்களையும் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

0 0 0

ஆதவன் இதழில் நடிகைகளின் படத்தை வெளியிட்டபோது சில நண்பர்கள், ஏனிப்பிடி இதனால் யாருக்கு என்ன பிரியோசனம் என்று கேட்டிருந்தார்கள். அப்பொழுது என்னிடம் பதில்கள் இருக்க வில்லை. இனிக் கேட்கட்டும்….

சம்பந்தப்பட்ட அந்த ஆதவன் இதழ் இதுதான்

பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர