ஆறா வடு நாவல் குறித்து பேஸ்புக் தளங்களில் பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு
ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என நான் நம்புகிறேன் சயந்தனை – ஆறாவடு படித்தனன் மூலம் – . பெருநாவல் ஒன்று எழுதி அவர் அதை நிரூபிக்கக்கூடும்.
தமிழினி வெளியீடு என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சயந்தனின் ஆறாவடு நாவலை வாங்கினேன் , அங்கதமும் , மெலிதான விமர்சனமும் கொண்டு ஈழப்போர் , ஈழவாழ்க்கை , அகதியாவதற்கான போராட்டம் இவற்றுடன் விரிகிறது ஆறாவடு , செயற்கையான அரசியல் பிரச்சாரமோ , வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமோ இல்லாமல் இலக்கியப் படைப்பாக வந்திருக்கிறது ஷோபாவின் கொரில்லா படிக்கும்போது என்ன உணர்ந்தேனோ அதுவே ஆறாவடுவிலும் , என்ன – புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவரின் பார்வையில் இருக்கிறது .ஆனால் உண்மைக்கு பல முகங்கள்தானே ?
முழுநாவலிலும் ஓடும் மெல்லிய அங்கதம் துயரத்திலும் கூடவே வருகிறது , கடைசிப்பகுதி திசை திரும்பி இதுவரை இருந்த யாதார்த்த நாவலாக இல்லாமல் குறியீட்டுத்தளத்தில் நுழைகிறதே என எண்ணினேன் , இல்லை , அது இன்னும் உச்சத்துக்கு கொண்டுபோகிறது நாவலை .
-அரங்கசாமி கே.வி
ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் மனிதர்கள் காலின்றி தவிப்பது , நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் வாழும் சனங்களின் போராட்டமான வாழ்வில் தப்பிக்க இருக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் அரசியலையும் அம்பலப் படுத்தும் புதினம். வீரச் சாவுகளின் அல்லது விபத்துகளில் மரணம் என்பதற்கான வேறுபாடுகள் என்ன என்பதை கேட்கிறது. மக்களிடம் இருந்து விடுதலை இயக்கங்கள் அந்நியப்படும் தருணத்தையும் அழகாகச் சொல்கிறது.
-இளங்கோ கல்லாணை
சயந்தனின் ‘ஆறாவடு’ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் நாவலின் சிறப்புகள். முற்றுமுழுவதுமாக அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட பிரதியாக இருப்பது சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் சயந்தனின் கதைசொல்லும் ஆற்றல் ஆறாவடுவை மிக முக்கியமான இலக்கியப் பிரதியாக்குகிறது
நாவலில் இலங்கை – இந்திய இராணுவங்கள், அரசுகள் புலிகள், ஈபிஆர்எல்எவ், பிரபாகரன், வரதராஜப்பெருமாள் என்று எல்லோருமே தைரியமாக விமர்சிக்கப்படுகிறார்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அதிலும் முக்கியமாக நாவலின் முதன்மைப் பாத்திரமான விடுதலைப்புலி அமுதன் தன்னைத்தானே செய்துகொள்ளும் சுயகிண்டல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையே. இவற்றை சயந்தனின் காட்டமான விமர்சனங்களாக கொள்ளலாம். ஓர் எதிர் அரசியலை நாவல் முன்வைக்காமலிருப்பது என்னளவில் சற்று ஏமாற்றம். கண்டிப்பாக அவ்வாறான எதிர் அரசியல் இருக்கவேண்டும் என இலக்கிய நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனால் என்னளவில் நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவே. அதைத் தாண்டியும் ஆறாவடு இலக்கியமாக முக்கியமான பிரதியே. குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.
தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்
-ஷோபா சக்தி
இப்ப தான் ‘ஆறாவடு ‘ படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகப் படிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது.எதார்த்தமும் உண்மைகளும் துயரங்களும் மனச்சாட்சியுமாக புத்தகம் முழுவதும் நம் கதைகள்.அநாவசியமாக எச்சொல்லும் இல்லை. தொடர்பற்று எச்சம்பவமுமில்லை.அத்துடன் எழுத்துப்பிழை எதுவும் இடையூறு செய்ய இதிலில்லை.பாராட்டுகள் சயந்தன்.
-தர்மினி
ஈழத்தமிழர்கள் குறித்து வந்திருக்கும் பதிவுகளில் சயந்தனின் ‘ஆறாவடு’ நாவல் முக்கியமானதாய் இருக்கும் என நினைக்கிறேன்…நெருக்கடியான வாழ்க்கை, இலங்கை அரசியல் சூழல், புலம்பெயர்தலின் துயரம் எல்லாம் சேர்ந்து கனக்கச் செய்யும் நாவல்..
-பிரியா தம்பி
சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள், மாற்று (?) இயக்கங்கள் எல்லோரையும் விமர்சித்திருந்தார். முன்னரெனில், ‘ஆறா வடு’வை வேறு கண்களால் வாசித்திருப்பேன் என்று நினைத்தேன். நாவலின் கட்டமைப்பும் நகர்த்திச் சென்றவிதமும் ‘நாயக’னின் பிம்பம் இல்லாத பிரதான பாத்திரமும் எல்லாப் புனிதங்களையும் கோபமெழாதபடிக்கு நோகாமல் கிண்டலடித்த மொழியும் நாவலின் சிறப்புகள். சின்னப்பெடியன்-மகா கிண்டல்காரன்-முகநூல் நடுநிலையாளன் என்றெல்லாம் நினைத்திருந்த நினைப்பை, ‘அருமையான படைப்பாளி’என்று இனி மாற்றிக்கொள்ளவே வேண்டும்
-கவிஞர் தமிழ்நதி
மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”.
“நிழலை விலக்க முடியாதபோது
தோற்றுப் போன போர் வீரன்
பாதுகாப்பில்லாத வெளியில்
தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான்
மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச் செய்தன
திறந்திருந்த கதவுகளும் அபாயமாகவே தோன்றின …” – கருணாகரன்
-லேகா இராமசுப்ரமணியன்
அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல, இரு வேறு அரசியலையும் பற்றியன. ஆனால் Cat’s Table க்குக் கிடைக்கிற பவிசும் கவனமும் ஆறா வடுவுக்கு இப்போது கிடைக்காது.யாராவது அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வரை/Just finished reading a brilliant novel in Tamil by Sayanthan-Aaraa vadu ( Unhealed wounds). It would be a wise literary exercise to compare this novel with Ondaatje’s Cat’s Table. Both talk about Ships but what a difference in depth, politics and sensitivity!!!!!
-கவிஞர் சேரன்
சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.
அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.
-டிசே தமிழன்
தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்தவை இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பணயம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் “நேரு ஐயா” என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம். நாவலின் இறுதிப்பாகங்கள் தொடக்கத்தைவிடக் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்’ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் “ஆறா வடு” முக்கியமான ஒரு நாவல்.
-நடராஜா முரளிதரன்
“ஆறா வடு” வாசிப்பதற்கு முந்தி நான் சயந்தனை வாசித்ததில்லை. “ஆறா வடு” வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு வேறு எதையும் வாசிக்க முடியாமல் இருந்தேன்.
ஹிந்துகள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியுள்ளவர்கள் என்று எனக்கேனோ சிறு வயது முதலே ஓர் எண்ணம் வடுக்கொண்டுவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமைக்கான ஒரு பொதுக் காரணி (common factor) இல்லையென்று படுகிறது. இந்தியாவில் இஸ்லாமிய, கிருஸ்துவ மேலாதிக்கமும் இலங்கையில் பௌத்தக் கையோங்கலும் அது காரணமாகத்தான் நேர்ந்தது/நேர்கிறது என்னும் நினைப்பிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.
“ஆறா வடு” நாவலை வாசித்து வருகையில் இது எனக்கு மேலும் உறுதிப்பட்டது. சாதி, பெண்ணடிமைத்தனம், குழுப் பிரிவினை யுத்தம் என இப்படி ஹிந்துகள் எங்கிருந்தாலும் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள்.
//எளிய பறைச்சாதி நீ.. அகதி நாய்.. ஈனப் பிறப்பு// என்றெல்லாம் பேசிய கோவிற் கிழார், இயக்கத்தாரால் செருப்புத்தண்ணி குடிப்பிக்கப்பட்ட பிறகும், என்ன சொல்லுகிறார்? //”நான் இனி இந்தக் கோயிலுக்கு, சாகும் வரை வரமாட்டன். இந்தக் காளி கோயில் இனி இந்தக் கதிரவேலனுக்குச் சொந்தமில்லை..”// அதாவது, இனத்தாரை அரவணைக்க வேண்டும் என்கிற புத்தி வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிற கைகழுவல்தான் நடக்கிறது.
பிறகும் எளியவர்கள் ஓரொருவரும் போராடுகிறார்கள். நம்பி ஒப்புக்கொடுத்து ஏமாறுகிறார்கள்.
சிங்களர்களைப் பற்றி அவதூறு பேசாமலே சிங்களர்களுக்கும் சேர்த்து இனப்போர் அழிவுகளைப் பேசுகிறது இந் நாவல். //பண்டார இராணுவத்தில் இணைந்தான். மகாவம்சம் நீள்வதைப் பற்றி அவன் யோசித்திருக்கவில்லை. சம்பளத் தொகை மேலும் அதிகரிக்குமா என்பதாகவே அவன் நினைப்பு இருந்தது. அதிகாரிகள் ஒருபக்கத்தாலும் புலிகள் மறுபக்கத்தாலும் அவனை வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் கொடும் வதையாகக் கனவுகள் இருந்தன…. முதலாவது வாரம் ஓர் இரவில் அலறி எழுந்ததும் மூளையைப் போட்டுக் கசக்கினான். இரண்டாவது வாரம் இடைத்தரகர் மூலம் ஏஜன்ஸியை சந்திக்கக் கூடியதாகவிருந்தது. மூன்றாவது வாரம் முடிவதற்கு முன்பாக இத்தாலிக்கு வள்ளமேறினான்.//
தமிழினத்துக்கு மட்டுமல்ல உலகளவும் போராளிகளுக்கு நேரும் நிலையாமை இது என்று இந் நாவலில் கட்டைக்கால் வழியாக செயந்தன் உணர்த்தி இருப்பது இலக்கிய உச்சம்.
வாசித்தோம், சரி, …?
எரி நடுவில் விறைத்தெழும் பிணமாக உணர்கிறோம்.
-ராஜசுந்தரராஜன்
(ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு கா…ரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே கொண்டிருந்தேன். முன்னால் உள்ள அத்தியாயங்களை தனித்தனி நல்ல சிறுகதைகளாக பார்க்க முடியும். பல நல்ல சிறுகதைகளை ஒரு நாரில் தொடுத்த கதம்பச்சரம் போல தோன்றியது. போகப்போக அவசரப்பட்டிருக்கிறார் என்றே நானும் எண்ணினேன். என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். நான் உசாவியதில் 2009இல் தொடங்கி பின் போட்டுவைத்து 2011 தொடர்ந்து முடித்ததாக சொன்னார். அவருக்குள் எற்பட்ட மாற்றங்களே மேலே நான் உணர்ந்த மாற்றங்களுக்கு காரணம். தொடகிய காலத்திலிருந்து தொடர்சியாக எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். கசகரணம் ஆறாவடு இரண்டுமே தொடற்சியான துன்பம் என்ற ஒரு பொருள் தருகின்ற சொற்கள். அண்மைக்காலத்தில் வெளிவந்த இரண்டு ஈழநாவல்லளுக்கு ஒரே பொருள் படும் தலைப்பு அமைந்ததே சிறப்புத்தான்.
-கவிஞர் திருமாவளவன்
//கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித் தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக் கிட்டத்தில் பார்த்தார்//
//எனக்கும் இயக்கத்தில் கோபம் கோபமாய் வந்தது. பிறகு நான்தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது. பிறகு சனங்களில் கோபம் வந்தது//
//பின்னால் நின்ற சனங்களுக்கு இந்திய இராணுவமா பிரபாகரனா என்பதெல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு ஓர் ஒழுங்கில் வாழ்க என்றும் ஒழிக என்றும் கத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் சிலவேளைகளில் பிரபாகரன் வாழவும் இந்தியா ஒழியவும் வேண்டியேற்பட்டது.//
//படிப்பதற்காய் போர் செய்வோம் என்று பிரச்சாரங்களில் சொன்னார்கள். முடிவில் பத்துப் பன்னிரண்டு பேரென்று ஒரேயடியாக கிளம்பி இயக்கத்துக்குப் போனார்கள். வீட்டுக்குப் போய் பள்ளிக்கூட யூனிபோர்மை கழட்டிவைத்துவிட்டு இயக்கத்துக்குப் போகும்படி பள்ளி அதிபர்கள் அழாக் குறையாக ப்ரேயர்களில் அறிவித்தார்கள்.//
//உங்களுக்கு ஆயிரம் வேலையள் இருக்கும். ஆமியைச் சுடுறது மட்டுமல்லாமல் சும்மா நிண்டவன் வந்தவன் போனவனை எல்லாம் சுடவேண்டியிருக்கும்…//
//எளிய பறைச் சாதி நீ. என்னைத் தள்ளிவிடுறியோ அகதி நாயே… இனிச் சரிவராது. ஈனப் பிறப்புகளுக்கு ஒண்டு சொல்லிறன்… இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளை எல்லா எளிய நாய்களும் வெளியாலை போயிடணும். ஒண்டும் இங்கை தங்கேலாது…// கோயிற்காரன்.
ஆறாவடு நாவலில் நான் அலைக்கழிக்கபட்ட இடங்கள் இப்படிப் பல. புதியதோர் உலகம், கொரில்லா… என ஈழப் போராட்ட இயக்கங்களுக்குள் பயணிக்க வைக்கும் நாவல்கள் வரிசையில் இப்போ சயந்தனின் ஆறாவடு வந்திருக்கிறது. பேசப்படவேண்டிய நாவலாக இதுவும் தன் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கதைசொல்லி தன்னை ஒரு சுயவிசாரணை செய்யும் புள்ளிகளை ஆங்காங்கே வரைந்து செல்கிறார். எந்தத் துதிபாடலுமின்றி, ஆர்ப்பாட்டமுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. முரண்களை அருகருகே வைத்து வாசகனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும் போக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.
யாழ் மேலாதிக்கத்தின் சாதிய வெறி உறுமும் இடங்களையும், பெண்கள் மீதான ஆண்வக்கிர வீணிகள் ஒழுகும் இடங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. “முன்னாள் செருப்புக் கள்ளனும் இந்நாள் தேசத்துரோகியும்” என்ற வார்த்தைகளுக்கிடையில் இயக்கத் தண்டனைகள், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட இயக்கங்களின் நிர்ப்பந்தங்கள், பழிவாங்கல், தற்காப்பு… என்றெல்லாம் வெளிகளை காட்டிச் செல்வதன்மூலம், “துரோகி” போன்ற ஒற்றைச் சொல்லாடலை தகர்த்துச் செல்கிறது நாவல்.
இந்திய இராணுவ காலம், ரணில் உடனான சமாதான காலம் என்பவற்றினூடாக வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். மொழி பெயர்ப்பாளராக இருந்த நேரு மாஸ்டர் மூலம் இயக்கம் மீதான விமர்சனங்கள் முளைத்த இடங்கள் எளிய பதில்களால் எதிர்கொள்ளப்படுவதை நயமாகச் சொல்கிறார் கதைசொல்லி. மேலிடத்திலிருந்து ஊற்றப்படும் நியாயப்படுத்தல்களை கைமண்டையில் ஏந்தி தாகமும் தீர்த்து, சிந்தவும் விடும் பதில்கள் அவை.
“பெட்டைச் சேட்டை” விடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையின் சுவாரசியத்தின் பின்னால் உள்ள கொடுமை, தனது பிள்ளையின் பிறந்தநாளன்று பிள்ளையை முதுகில் சவாரி ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தவனை கொன்ற “துரோகி ஒழிப்பு” கொடுமை, இந்திய இராணுவத்தோடு சேர்ந்தபின் அல்லது சேர்க்கப்பட்டபின் அந்த இயக்ககரார்களின் அட்டகாசம், பின் இந்திய இராணுவத்தால் கைவிடப்பட்ட அவர்களின்மீது பாய்ந்த “துரோகி ஒழிப்பு”… என்றெல்லாம் நாவல் அழைத்துச் செல்கிறது.
சிங்கள தமிழ் அகதிகளாக இத்தாலிய கடற்பயணத்தின் போதான மனிதாபிமான உறவுமுறைகள் கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. கடற் பயணத்தை அதன் ஈரத்தோடும் இருட்குவியலோடும் அலைக்கழிப்போடும் அந்தப் படகு மனிதர்களின் மனவெளிகளாக வரைந்து செல்கிறது.
இயக்கத்துக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அல்லது அதன் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட பெற்றோர்களின் துயரங்களை நாவலில் காணவில்லை. புலிகளால் துயருற்ற முஸ்லிம்களின் குரலையும் காணவில்லை. நாவலில் எல்லாவற்றையும் உள்ளடக்குதல் சாத்தியமா என்ற கேள்வி முக்கியமானது என்றபோதும், போராட்ட யுத்த அரசியல் பரப்புக்குள் கதைசொல்லி நிற்கும்போது மேற்கூறிய விடுபடல்கள் புறக்கணிக்க முடியாதது.
கதைசொல்லி தன்னை மிதப்பாகக் காட்டும் எந்த உத்தியையும் பாவிக்கவில்லை. மாறாக தன்னையும் சம்பவங்களையும் வாசகனின் விசாரணைக்கு திறந்துவிடுகிறார். முரண்களை அருகருகே வைத்துச் செல்வதன்மூலம் வாசகனிடம் பிரதியை விட்டுச் செல்கிறார். இலக்கிய உலகில் இதுவரை அறியப்படாமல் இருந்த சயந்தனின் முதல் நாவல் அவரை நல்லதோர் படைப்பாளியாக அடையாளம் காட்டியுள்ளது.
-Ravindran Pa

இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..