திருத்தியெழுதப்பட்ட கதைகள்

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது

கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் நடந்து அவர் கண் இழந்திருந்தார்.

இப்பொழுது சமாதானம் மெலிதாக அரும்பியிருந்தது. ரணில் பதவியேற்றிருந்தார். ஆகவே ஓர் அரசியல் “ஆய்” வாளனான எனக்கும் நிறைய வேலை இருந்தது. சமாதானம் நிலைக்குமா, சர்வதேசம் ஏமாற்றுமா, தலைவர் பிரபாகரன் ஏமாறுவாரா என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கி ஒரு வாய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன்.

இதழின் டம்மியை புரூப் பார்ப்பதற்காக பிரதீபாவிடம் கொடுத்திருந்தேன். அவர் ஓகே செய்தபிறகு இதழ் அச்சுக்குப் போனது.

எனது கட்டுரையில் ரணில் அரசமைத்ததன் பின்னணியில் என்றவாறாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அது டம்மி இதழில் – ரணில் அர
சமைத்ததன் பின்னணியில் என்றவாறாக அர முதலாவது வரியில் முடிந்தும் அடுத்தவரியில் சமைத்ததன் என்றும் ஆரம்பித்தது. பிரதீபாவிற்கு இங்கே தான் டவுட் ஆரம்பமாகியது.

“சமைத்ததன்” பின்னணியில் என்பது சரியாக டைப் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கருதினார். ஆனால் “அர” என்று டைப் செய்யப்பட்டிருப்பதில் என்னவோ தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் நம்பினார்.

சமைத்ததன் பின்னணியையும் அர வையும் போட்டுக்குழப்பி கடைசியில் கண்கள் பிரகாசிக்க அவர் ஒரு முடிவினை எடுத்தபோது “அர” என்பது என்னவாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

அச்சாகிய இதழில் எனது கட்டுரையில் இடையில் இப்படியொரு வசனம் சம்பந்தமே இல்லாமல் வந்தது.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில், புலிகள் சமாதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

நல்லவேளையாக, டம்மி இதழில் சமாதானத்தின், சமா எங்காவது விடுபட்டிருந்தால் பிரதீபா திருத்தியபிறகு கட்டுரை வரிகள் இப்படியிருந்திருக்கலாம்.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில் புலிகள் அன்னதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

0 0 0

இதுபற்றி முன்னர் எங்காவது குறிப்பிட்டேனோ தெரியவில்லை. பாடசாலையின் மதிலுக்கு அந்தப்பக்கம் அமைந்திருந்த பெண்கள் கல்லுாரி அது. Partner School என்றார்கள். மனது அப்பிடி ஒருபோதும் கருதியதில்லை. தமிழில் சகோதர பாடசாலை என்றார்கள். அப்படி வேண்டுமானால் இருக்கக் கூடும்.

அவர்களது உயர்தர வகுப்புக்காரர்கள் விஞ்ஞான இதழொன்றை வெளியிட்டார்கள். இதழின் புரூப் யார் பார்த்தார்களோ தெரியவில்லை. இதழில் எய்ட்ஸ் பற்றி ஒரு கட்டுரையொன்று வந்திருந்தது. எயிட்ஸ் தொற்று ஏற்படாத காரணிகள் என்றொரு லிஸ்ட் அதிலிருந்தது. அதில் ஒன்றாக

தாய் குழந்தைக்கு கொடுக்கும் பாலினால் – என்று இருந்திருக்க வேண்டும்.

புரூப் பார்ப்பதற்கு முந்தைய டம்மியில் – தாய் ..ந்தைக்கு கொடுக்கும் பாலினால் என்று இருந்திருக்குமென நினைக்கிறேன்.  திருத்தியவர் .. ந்தைக்கு என முடியும் சொல் என்னவாக இருக்குமென மூளையைப் போட்டுக் குழப்பியிருக்கலாம். இறுதியில் அவருக்கு பொறி தட்டியபோது பொருத்தமான சொல்லாக தந்தைக்கு என்பதே தோன்றியிருந்தது.

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார்.

போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவினை இலக்கு வைத்து இலங்கையிலிருந்து புறப்பட்டபோது சுவிஸில் அவருக்கு விமான நிலைய மாறும் வழியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருந்தபோது என்னவோ இசகு பிசகாகி பொலீஸாரிடம் சிக்கிக் கொண்டுவிட கனடா போகும் கனவை அப்போதைக்கு வெளியே நிறைந்திருந்த பனியில் புதைத்து விட்டு விமான நிலையத்தில் வைத்து சுவிஸில் தஞ்சம் கோரினார் நண்பர். அப்பொழுது அவருக்கு பத்தில வியாழன் நடந்து கொண்டிருந்ததாம். அது எப்பொழுதும் பதிய விட்டுக் கிளப்பும் என்பதால் – இப்பொழுது சுவிஸ் முகாமில் பதிய விட்டு பின்னர் கனடாவிற்கு கிளப்பும் என்று அவர் நம்பியிருந்தார்.

நண்பரது கனவுகள் முழுவதும் கனடாவினால் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் கனடாவோடு ஒப்பிட்டே அவர் பேசினார். இங்கே குளிர், மைனஸ் பத்துக்களில் போனால், இதென்ன குளிர் அங்கே மைனஸ் நாற்பது வரை போகுமாம் என்பார். குளிர்காலப் பயணங்களில் காரில் தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தால், இப்படியெல்லாம் கனடாவில் குடித்துவிட முடியாது. தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும் என்பார். ஒருநாள் – தெரியுமோ கனடாவில் வின்ரரில் வெளியில் ஒண்டுக்குப் போவதென்றால் முறித்து முறித்துத்தான் எறியவேண்டியிருக்கும் என்றார். கனடாக்காரர் யாராவதுதான் இதன் சாத்தியத்தை விளக்க வேண்டும்.

சுவிஸில் அவரது வழக்கு விசாரிக்கப்படாமலேயே காலம் இழுவுண்டது. சுவிஸில் விசா அற்றவர்கள் வேலையொன்றை நினைத்தும் பார்க்க முடியாது. தஞ்சக் கோரிக்கை முடிவிற்கு முன்னாலான தற்காலிக தங்குமிட அனுமதி வைத்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு வேலை வழங்குனரின் அனுமதி மட்டுமின்றி பொலிஸாரினதும் அனுமதி தேவைப்பட்டது. பொலிஸார் அவ்வாறான அனுமதியினை முன்னரைப் போல இப்பொழுது வழங்குவதில்லை. அவருக்கான தங்குமிட வசதி, மற்றும் மருத்துவக் காப்புறுதிகளை அரசு வழங்கியிருந்தது. அதைத் தவிர்த்து வாராவாரம் எழுபது பிராங்குகள் அவருக்கு கொடுக்கப்பட்டன. சுவிற்சர்லாந்தின் தனிநபர் வருமானத்தோடு ஒப்பிடுகையில் அது பத்து வீதத்திற்கும் மிகக் குறைவான தொகையாயிருந்தது.

நண்பர் விட்ட இடத்திலிருந்து கனடாவினைத் துரத்திப் பிடிக்கத் தொடங்கினார். மள மளவென்று அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடாவிலிருந்தும் யாரோ கவனித்தார்கள். இங்கிருந்து போலந்து – பின்னர் அங்கு போடிங் “உடைத்துக்கொண்டு” கனடாவிற்கு விமானம் ஏறுவது என்பதே திட்டமாயிருந்தது. வெற்றிகரமாக சூரிச் விமானநிலையத்தை விட்டும் மேலே பறந்தார் நண்பர். இருபத்து மூன்று கிலோக்களையுடைய ஒரு பயணப்பொதியும் ஏழு கிலோ அளவில் இன்னொரு கைப் பொதியும் அவரிடமிருந்தன. அதைவிட ஆதவன் என்கிற தமன்னாவின் படம் போட்ட சுவிஸ் இதழ் ஒன்றும் அவர் வசம் இருந்தது. பயணத்தில் படிப்பதற்காக..

போலந்தில் போடிங் உடைப்பதற்கு முன்னதாகவே அவர் மூக்குடை பட வேண்டிய சிற்றுவேஷனுக்குள் நுழையவேண்டியதாய் ஆனது. சுவிஸ் பொலிஸாவது பரவாயில்லை ரகம் என்றார் நண்பர். போலந்து பொலிஸாரில் ஒருவன் அவரது செவிட்டைப் பொத்தி அறைந்த போது வெள்ளைக் காரங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற பிம்பமே விழுந்து உடைந்து சிதறியதாம். நண்பருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவர் எல்லாவற்றையும் ஒப்புவித்தார். அவரைத்துாக்கி போலந்தில் ஒரு சிறைக் கூடத்தில் மூன்று மாதங்களுக்குப் போட்டார்கள். அப்பொழுது ஏழரைச் சனியன் முற்கூறு வேறு அவருக்கு நடந்து கொண்டிருந்ததாம்.

நண்பருக்கு சிறை புதிது. அவரது தஞ்சக் கோரிக்கை கேஸில் ஐந்தாறு மாதங்கள் வெலிக்கடை மகசீன் சிறைக் ‘கதை‘கள் வந்தாலும் அனுபவத்தில் இதுவே முதற்தடவை. சிறையில் அவரது செல்லில் இன்னும் மூவர் தங்கியிருந்தார்கள். தனித் தனிப் படுக்கைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த நண்பர் தன் மீது பெரும் போர்வையைப் போல படியும் மனச்சோர்வை அகற்ற ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் ஆதவன் இதழில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தைக் கத்தரித்து தனது தலைமாட்டில் ஒட்டிக் கொண்டார். தலைவரைப் பார்க்கின்ற போதெல்லாம் தனக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார் நண்பர்.

இந்த இடத்தில் நான் இன்னுமொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அட, அவரும் தற்பொழுது கனடாவில்தான் இருக்கிறார். அண்மையில் திருமணம் முடித்தவர் ஆதலால் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். அவர் கொழும்பில் என்னோடு படித்த காலத்தில் ஒரு பெண்ணை விழுந்தெழும்பிக் காதலித்தார். ஒருபின்னேரப் பொழுதில் தன் காதலையெல்லாம் கடைந்து திரட்டி வாழ்த்து அட்டையில் எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தார். அடுத்தநாள் காலை மற்றொரு பெண்ணொருத்தி வாழ்த்து அட்டையொன்றை அவரது கையில் திணித்தாள். “தங்கச்சி.. நான் உம்மோடு அப்படி நினைத்துப் பழகவில்லை” என்ற சொற்களை தயாராக வைத்துக் கொண்டு அட்டையைப் பிரித்துப் பார்த்தவருக்கு கரன்ட் கட்டாகி, உலகமே இருண்டு போனது. அது முன்னையநாள் அவர் தன் காதலிப்பெண்ணுக்கு கொடுத்த அதே அட்டை. அவள் அதை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தாள்.

நண்பர் தளரவில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகரும் போது சிம்மி நகரமாட்டாளா என்றார் அவர். சிம்மி என்பது அவளுக்கு அவர் வைத்த செல்லப்பெயர். இப்படியிருக்க நண்பர் கனடாவிற்கு கிளம்பிவிட்டார். அங்கிருந்தும் அம்மிக்கு அடிக்கலாம் என்று அவர் ஐடியாப் பண்ணியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவரது சிம்மியிடம் அவருக்காக நான் பேச வேண்டுமாம். (நண்பரது நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்) அடிப்படையில் அப்படியெல்லாம் பேசுகிற நபராக நான் இல்லை என்பதை அவருக்கு சொல்லியபடியிருந்தேன். எனக்குப் பயமாக இருக்கிறதென்றும் சிம்மி முன்னால் நின்றால் முழங்கால்கள் சிரட்டைகள் ஒன்றோடு ஒன்று தட்டி உதறல் எடுக்கிறது என்றும் நான் அவருக்கு எடுத்து விளக்கினேன்.

அப்பொழுதுதான் அவர் அந்த உளவியல் பாடத்தை எனக்கு நடாத்தினார். அவர் சொன்னார். “மனதைத் தளரவிடாதே.. அப்படி அவளுக்கு முன்னால் நின்று கதைக்கிற சமயங்களில் உனக்கு நடுக்கமாகவும் பயமாகவும் இருந்தால், மனதுக்குள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிப்பார். புதிய உற்சாகமும் துணிவும் பிறக்கும். பிறகு அவளோடு தயக்கமின்றி எனக்காகப் பேசமுடியும்.”

எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இந்த ரெக்னிக் என்னை ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடப்பண்ணியிருந்தது. “எடே.. இதைக் கேட்டால் அந்த மனுசன் இன்றைக்கே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போடும்” என்றேன்.

“தலைவரைப் பற்றி அப்படிக் கதைக்காதே என்று நண்பர் என்னைக் கண்டித்தார். ஏனெனில் அவர் அப்பொழுது ஒரு செயற்பாட்டாளராக பரிணமித்திருந்தார்.

கனடா நண்பர் கைக்கொண்டதைப் போன்றதான ஒரு உளவியல் உத்தியைத்தான் போலந்துச் சிறை நண்பரும் முயற்சித்திருக்க வேண்டும். அப்படி மன உற்சாகத்தை பீறிட்டு வரவழைத்துக் கொண்ட நண்பர் பொழுதைப் போக்க ஆதவன் இதழே கதியென்றிருந்தார். தொன்னுாற்றெட்டுப் பக்கங்களின் சமாச்சாரங்களையும் ஒப்புவிக்கிற நிலைக்கு அவர் வந்திருந்தார். இப்படி அவர் இதழைப் பிரித்து வைத்துப் படிக்கிற நேரங்களில் அட்டையில் சிரித்தபடியிருந்த தமன்னாவை விழுங்கி விடுவதைப் போல அறையிலிருந்த ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவன் பார்த்தபடியிருந்திருக்கிறான்.

அப்படியொருநாள் அவன் ரொய்லெட் போனபோது, ஆதவனை இதழை அவன் வாங்கிப் போனானாம். போனவனை நீண்ட நேரமாகக் காணவில்லை. இது தின வழமையாகத் தொடங்கியது. முதலில் நண்பருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அப்படியொருநாள் பிடிபட்டபோது அவன் இதழின் அட்டையைத் தண்ணீரால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். நண்பர் முகத்தைச் சுழித்து நுனி விரலால் காதுகளில் பிடித்து முயலைத் துாக்குவது போல அதை வாங்கிக் காய வைத்திருக்கிறார். காய்ந்த பிறகு தமன்னா இப்பொழுது கொஞ்சம் மொட மொடப்பாய் முறுகியிருந்தா.

அடுத்தநாளும் அவன் தமன்னாவைக் கேட்டிருக்கிறான். நண்பர் தரமுடியாது என்றார். இன்னும் இரண்டொருதடவை அவன் கேட்டபொழுது இவர் ஒரேயடியாகத் தரமுடியாது என்று கையை விரித்தபோது அவன் கையை நீட்டியிருக்கிறான். அருந்தப்பில் மூக்குத் தப்ப தாடையில் அவனது உருண்ட கை மொளிகள் பதிந்தன. அழுது கொண்டே தமன்னாவைத் தாரை வார்த்தார் நண்பர். இம்முறை அவன் சரிவரக் கழுவிச் சுத்தம் செய்திருக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். தமன்னாவும் இனித் தாங்க முடியாதென்றோ என்னவோ உதட்டோரமாகக் கிழிந்து போயிருந்தா. நண்பருக்கும் தாங்க முடியாது போய்விட்டது. இதழில் இருந்து அப்படியே தமன்னாவைக் கிழித்தெடுத்து இந்தா பிடி என் அன்புப் பரிசு என்று கொடுத்து விட்டாராம். அவன் அதில் நெகிழ்ந்து மேலும் இதுமாதிரியான புத்தகங்கள் உள்ளனவா என்று கேட்டானாம்.

என்ன மனிசரப்பா என்று இந்தக் கதையை முடித்தார் நண்பர்.

தலைவரைப் பார்க்கின்ற போது உங்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பலாம். அவனுக்குத் தமன்னாவைப் பார்க்கின்ற போது ஏதேனும் பீறிட்டுக் கிளம்பக் கூடாதா என்று நான் கேட்டேன்.

அதுக்கில்லையடாப்பா.. அவன் அப்பிடி அசிங்கப் படுத்திட்டுக் கொண்டு வந்து தந்த தமன்னாவை நான் இரவில தடவிக் கொண்டு படுத்ததை நினைக்கத்தான் வாந்தி வாந்தியா வருகுது என்று நண்பர் சொன்னதுதான் இந்தப் பதிவின் ஹைலைட்..

நண்பர் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் கனடாவுக்குப் பாய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த முறை அவர் புறப்படும்போது ஸ்ரேயா, ஸ்ருதி, திரிஷா, அசின் படங்கள் போட்ட ஆதவன் இதழ்களையும் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

0 0 0

ஆதவன் இதழில் நடிகைகளின் படத்தை வெளியிட்டபோது சில நண்பர்கள், ஏனிப்பிடி இதனால் யாருக்கு என்ன பிரியோசனம் என்று கேட்டிருந்தார்கள். அப்பொழுது என்னிடம் பதில்கள் இருக்க வில்லை. இனிக் கேட்கட்டும்….

சம்பந்தப்பட்ட அந்த ஆதவன் இதழ் இதுதான்

ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள்.

சிறுவன் கால்களில் விழப் “பஞ்சிப்படும்” வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் “வணங்கி ஆசிபெறும்” படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக முக்கியமாக வணங்க வேண்டிய நபர் சிங்களவராகவும் இருந்துவிட – மேசைச் செய்தியாளர்கள் திரைக்கதை கதை வசனம் என புனைந்து தள்ளி விட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை காலில் விழுந்து வணங்குவது ஒரு பண்பாடாக அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் தந்தையரைவணங்குவது கூட பரவலாக நம்மிடம் வழக்கத்தில் இல்லை. சிங்கள சமூகத்தில் “நல்லநாள் பெரியநாட்களில்” ஒரு இயல்பு வழமையாக பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கும் முறைமை உள்ளது. குறிப்பாக சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு தொடர்பாக, கல்விப்புத்தகப் பாடங்களில் அவ்வாறு தாய் தந்தையரை விழுந்து வணங்கும் படங்களை சிறுவயதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அந்தச் சூழல்கள் என்னோடு ஒட்டாமல் தள்ளியே நின்றன. இன்னும் கோயில்களில் “சுற்றமும் முற்றமும் பார்த்துநிற்க” நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் சிறு வயதுகளில் வெட்கமாகவும் உணர்ந்திருக்கிறேன்.

அப்படியொரு முற்றிலும் புதிய முறைமையில், நாலுபேர் பார்த்துநிற்க விழுந்து வணங்குகின்ற வெட்கத்தில் சிறுவன் “பம்ம” அவனை வெற்றி வீரனாக பேஸ்புக்கிலும் இணையச் செய்தித்தளங்களிலும், விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

நாங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்குகின்ற சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன். சாமத்திய வீட்டிலும் திருமணச் சடங்கிலும் அப்படியொரு சம்பிரதாயம் இருக்கிறது. அது கூட வீடியோ எடுப்பவர் “ஓகே.. ரெடி .. இப்ப விழுங்கோ” என்ற பிறகுதான்..

0 0 0

இதுவும் காலில் விழுகிற சமாச்சாரம்தான். இங்கேயொரு கோயிலில் நடந்தது. பூசைகள் முடிந்து ஐயர் வீபூதி கொண்டுவருகிற நேரம், அன்றைக்குப் புதிதாகக் கோயிலுக்கு வந்திருந்த வடஇந்தியக் குடும்பமொன்று கணவன், மனைவி, இருபிள்ளைகள் என ஐயரின் காலடியில் “குடும்பத்தோடு விழுந்து கிடந்து” வணங்கினார்கள். ஐயரும் ஒருகணம் அந்தரித்துத்தான் போய்விட்டார். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. குனிந்து தொட்டுத் துாக்குவதா அல்லது தொட்டு ஆசீர்வதிப்பதா அல்லது இவர் “சிவனே” என்று நிற்க அவர்களாக எழும்புவார்களா என ஒரு “மண்ணும்” அவருக்குத் தோன்றவில்லையோ என நான் நினைத்தேன்.

பிறகு அவர்கள் எழுந்து கொஞ்சம் குனிந்து வாய்பொத்தி நிற்க அவர்களது நெற்றியில் ஐயர் விபூதியைப் பூசினார். அப்பொழுது அவர்களைப் பார்க்க ஜெயலலிதாவிற்கு முன்னால் நிற்பவர்களைப் போலிருந்தது.

இதற்கிடையில் அப்பால் நின்ற சில “தமிழ்த்தாய்” மார் ஐயர் வரும்போது விழுந்து வணங்குவதற்காக தமது பிள்ளைகளையும் “ரெடி”ப்படுத்தினார்கள். ஐயர் வந்து நின்றார். இரண்டு சிறுவர்களின் “கழுத்தைப் பிடித்து” ஒரு தாய் தள்ளினார். அவர்கள் திமிறிக்கொண்டு நின்றார்கள். பிறகு பிடியிலிருந்து நழுவி தாய்க்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நெளிந்தார்கள். அவ்வளவு நேரமும் “அவங்கள் விழுவாங்கள்” என்று மரம்போல் நின்ற ஐயருக்கு “இது வேலைக்காவாது” என்று விளங்கியிருக்க வேண்டும். நகர்ந்து போய்விட்டார்.

அந்தச் சிறுவர்களைச் சந்திக்க வேண்டும். சிலநேரங்களில் அவர்களும் ஏதாவது வீர நிலத்தின் விழுதுகளாக இருக்கலாம். ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.

பரதேசி நாய்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ்.

சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் சொல்லும் ஒரு மரபிருக்கிறது. grüezi என்கிற அந்த வார்த்தையை நம்மாட்கள் க்றூட்சி என்றும் கிறைச்சி என்றும் விட்டால் இறைச்சி என்றும் பயன்படுத்துவோம். இங்கே கிராமங்கள் வெறிச்சோடிப்போயிருக்கும் எப்போதும். வீதியில் சக மனிதரை எப்போதாவதுதான் காணமுடியும். ஆகவே அப்போது வணக்கம் வைப்பது இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது. ஆனால் நமது நாட்டில் சூழலில்.. வீட்டிலிருந்து புறப்பட்டால் வணக்கம் சொல்லியே வாயுளைந்து விடும்.

சோமாலியர் சொன்னார் – ஆனால் தமிழர்கள் அப்பிடியல்ல. அவர்கள் சிரிக்கிறார்கள், நெருங்கிப் பேசுகிறார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்-

வெளியே ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது.

0 0 0

RACISMஇரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சீற் இருந்தபோதும் அடுத்த இறக்கங்களில் இறங்குவதற்காக வாயிலில் நின்றுகொண்டே பயணித்தேன். குளிரான நாள் அன்று. தலை காதுகளை இறுக்கி மூடி மப்ளர் அணிந்திருந்தேன். ஒரு நிறுத்தமொன்றில் இரண்டு மூன்று தமிழர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை கண்ணுக்கு நேராகவே பார்த்தார். பார்த்தபடியே சொன்னார். “பரதேசி நாய் – சீற் இருக்கத்தக்கவா நிண்டு கொண்டு வருகுது”. நானும் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டேன். முன்னைப்பின்னை அவரோடு எங்காவது சண்டைபிடிச்சிருக்கிறனா என்றெல்லாம் யோசித்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எனக்கொரு போன் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். பேசிவிட்டு வைத்துவிட்டேன். இப்போதும் அந்தத் தமிழர் என்னை நேராகப் பார்த்தார். திரும்பவும் திட்டப்போகிறாரோ என்று யோசித்தேன். என்னைப் பார்ப்பதுவும் பிறகு விழிகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக அவர் கொஞ்சநோரம் விளையாட்டுக் காட்டினார். திடீரென்று ” அண்ணை என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றவர் மேலும் தொடர்ந்தார். “நான் நீங்கள் ஒரு கறுப்பர் என்று நினைச்சுத் திட்டிப்போட்டன்”

அவர் மேலும் ஒன்றிரண்டு தடவைகள் sorry சொல்லிக்கொண்டே வந்தார்.

எனக்கு சிரிப்பாக இருந்தது. நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடும் ஒரு இனம்